மாயமான 900 ஆண்டு பழமை வாய்ந்த மன்னர் சிலை : கண்டுபிடித்து தர புகார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2022 08:08
உளுநதூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே மாயமான 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் சிலைகளை கண்டுபிடித்து தரக்கோரி வரலாற்று ஆய்வாளர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அருள்செல்வத்திடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமைவாய்ந்த சிவாலயமான சொர்ணகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மன்னர் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படி தானமாக அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இராஜேந்திர சோழசேதிராயர் மற்றும் விக்கிரம சோழசேதிராயர். இவர்கள் கி.பி., 12ம் நூற்றாண்டில் இப்பகுதி ஆட்சி செய்த குறுநில மன்னர்களாவார்கள். இந்த மன்னர்களின் திருவுருவ சிலைகள் நெய்வனை கோவிலுக்கு எதிரே இருந்ததாக வரலாற்று நூல்களில் படித்து இருக்கிறேன்.
இந்தநிலையில் கடந்த ஜூலை 30ம் தேதி நெய்வனை சொர்ணகடேஸ்வரர் கோவிலுக்கு நான் சென்றேன். ஆய்விற்க்காக மன்னர்களின் சிலைகளை தேடினேன். கண்ணில் அகப்படவில்லை. இது குறித்து விசாரித்த போது இங்கிருந்து இரண்டு சிலைகளையும் 20 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என தெரிவித்தார்கள். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி புதுச்சேரியில் இருக்கும் பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் சென்று அங்கு அவரது ஆவண பாதுகாப்பில் இருந்த நெய்வனை சிற்பங்களின் புகைப்பட நகல்களை பெற்றேன். இந்தப் புகைப்படம் 1967 செப்டம்பர் 10ம் தேதி எடுக்கப்பட்டதாகும்.
நெய்வனை கோவில் வளாகத்தில் சிற்பங்கள் இருந்ததற்கான ஒரே ஆதாரம் இந்த புகைப்படங்கள் மட்டுமே. 900 ஆண்டுகள் பழமையானவை, முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களாகும். இந்த சிலைகள் எப்போது, யாரால், எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன தெரியவில்லை. இச்சிலைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுதுள்ளது. எனவே மாயமான சிலைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.