பதிவு செய்த நாள்
16
ஆக
2012
10:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில், மரகத நடராஜர் சன்னதி, பக்தர்கள் தரிசனம் செய்ய, தினமும் பாதுகாப்புடன் திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில், மரகதத்தாலான ஆளுயர நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனகாப்பில் இருப்பது வழக்கம். ஆண்டுதோறும், மார்கழி திருவாதிரை ஆருத்ரா நட்சத்திர தினத்தில், மரகத நடராஜர் சிலையில் சந்தனகாப்பு களையப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அன்று, ஒரு நாள் மட்டுமே, மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்க முடியும். பின் ஆண்டு முழுவதும், பாதுகாப்பு கருதி மரகத நடராஜர் சன்னதி பூட்டப்பட்டு, வெளியிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலன் உத்தரவின்பேரில், நேற்றுமுன்தினம் முதல், மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு, ஆறு கால பூஜை நேரங்களில், மரகத நடராஜருக்கு தீபாராதனை மட்டும் நடைபெறும். பக்தர்கள் சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரின் முழு உருவ சிலையை, தினமும் பார்த்து தரிசிக்கும் வகையில் திறந்து வைக்க, ராமநாதபுரம் சமஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.