பதிவு செய்த நாள்
16
ஆக
2012
10:08
மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே சமணர் படுகைகள், குடவறை கோயில்கள் நிறைந்த யானைமலை, அப்பகுதியினரின் போராட்டத்தால் தப்பியது. மூன்று கி.மீ., நீளம், 90 மீட்டர் உயரம் கொண்ட யானைமலையை, அப்பகுதியினர் தெய்வமாக வழிபடுகின்றனர். மலையை போற்றும் வகையில், இப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு "மலைச்சாமி என, பெயர் சூட்டப்படுகிறது. யானை மலையில் சமணர்படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், மகாவீர், ஜெயின் சிற்பங்கள் உள்ளன. தற்போது இவை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மலையில் தீபம் ஏற்றும் வகையில், 10 அடி நீள கல் தூண் உள்ளது. நரசிங்கத்தில், இம்மலையை குடைந்து அமைக்கப்பட்ட யோக நரசிம்மர் குடவறை கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகில் மலையில், லாடமுனி கோயிலில் கலைநயம் மிக்க சிற்பங்கள் உள்ளன. இவற்றில் உள்ள வண்ணங்கள், இன்றும் கூட மறையாமல் காணப்படுகின்றன; மூலிகைகளை கொண்டு இவை தீட்டப்பட்டவை. இந்த மலையை சுற்றி, கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், யானைமலையில் சிற்பநகரம் அமைக்க, தஞ்சை பெருந்தச்சர் அவயம் யோசனை தெரிவித்தது. அப்போதைய தி.மு.க., அரசு, இத்திட்டம் குறித்து ஆராய, ஒரு குழுவை நியமித்தது. ஆனால் சிற்பக்கலை நகரம் என்ற பெயரில் மலையை தகர்க்கவும், குவாரி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஒத்தக்கடை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிற்பக்கலை நகரத்தை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்குகள் தாக்கலாகின. தொடர் போராட்டங்களால், சிற்பக்கலை நகருக்கான உத்தரவை, தி.மு.க., அரசு திரும்ப பெற்றது. கடந்தஆண்டு இறுதியில், சிற்பநகர் அமைக்க, குழு அமைக்கக் கோரி, பெருந்தச்சர் அவய நிறுவனர் அரசு மீண்டும் மனு செய்தார். இம்மனு ஐகோர்ட் கிளையில் நிலுவையில் உள்ளது.