பதிவு செய்த நாள்
18
ஆக
2022
04:08
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இன்றும், சிறுமுகையில் நாளையும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் எட்டாவது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி குழந்தைகள் தின விழா, விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தின விழா, 75வது சுதந்திர தின விழா என முப்பெரும் விழா இன்று (19ம் தேதி) நடைபெறுகிறது. நகரில் பாக்குகார வீதி, மாகாளியம்மன் கோவிலில் இருந்து மாலை, 3:00 மணிக்கு, கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் ஊர்வலம் தூங்குகிறது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலம் சென்று, ஈ.எம்.எஸ்., மண்டபத்தை அடைகிறது. அங்கு கலை நிகழ்ச்சிகளும், பஜனை பாடல்களும், பகவத் கீதை சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகின்றன. விழாவில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், மாநில மாவட்ட நிர்வாகிகள் பரிசுகள் வழங்க உள்ளனர். எனவே இந்த விழாவில் ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர், ராதை அலங்காரம் செய்து, விழாவில் பங்கேற்க வேண்டும் என, விழா ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட செய்தி தொடர்பாளருமான அசோக்குமார் அறிவித்துள்ளார்.