பதிவு செய்த நாள்
18
ஆக
2012
10:08
திருத்தணி : ஆடி கிருத்திகை திருவிழாவில், உண்டியல் மூலம், 2.05 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள் ளது. இது கடந்த ஆண்டை விட, 21 லட்ச ரூபாய் அதிகம். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்தனர். உண்டியல் காணிக்கையில், பலர், தங்கள் நேர்த்திக் கடனாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை அளித்தனர். மலைக் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி மண்டபத்தில், கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் கவிதா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 1.31 கோடி ரூபாய் ரொக்கம், 484 கிராம் தங்கம், 7.50 கிலோ வெள்ளியும் இருந்தது. விரைவு தரிசன டிக்கெட் மூலம், 74 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன்படி மொத்தம், 2.05 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21 லட்ச ரூபாய் அதிகம்.