பதிவு செய்த நாள்
20
ஆக
2012
10:08
காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்திக்காக, விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில், பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பாரம்பரியமாக விநாயகர் சிலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலை தயாரிப்பு குறித்து, முத்தியால்பேட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன், 42, கூறும்போது, ""மூன்று அடி உயரத்திலிருந்து 10 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம். பசு, குதிரை, சிங்கம், யானை, தாமரை, போன்றவற்றின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் விநாயகர், நின்ற கோலத்தில் காட்சி தரும் விநாயகர், பஞ்சமுக விநாயகர், சிவலிங்கத்தை தழுவியபடி காட்சி தரும் விநாயகர், சிவன், பார்வதி ஆகியோரை மடியில் வைத்திருக்கும் விநாயகர், சித்தி, புத்தி விநாயகர், எனப் பல்வேறு வடிவில் விநாயகர் சிலைகளை உருவாக்குகிறோம், என்றார்.மூன்று அடி சிலை 500 ரூபாய்க்கும், 10 அடி உயர சிலை 5,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிழங்கு மாவு, காகிதக்கூழ் விலை ஏறிவிட்டதால், சிலை விலையை, கடந்த ஆண்டை விட நூறு ரூபாய் அதிகப்படுத்தி உள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.