பதிவு செய்த நாள்
20
ஆக
2012
11:08
கொச்சி: அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, கொச்சி விமான நிலையத்திலிருந்து சபரிமலைக்கு, "ஹெலி டாக்சி சேவை துவக்கப்பட்டுள்ளது. இதில், பயணம் செய்ய, ஐந்து பேருக்கு 1.5 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.சபரிமலை வரும் பக்தர்கள், விரைவாக சபரிமலை சென்று திரும்ப வசதியாக, கொச்சியிலிருந்து, "ஹெலி டாக்சி சேவை துவக்கப்பட்டுள்ளது. கொச்சி, நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து, புறப்படும், "ஹெலி டாக்சி சபரிமலையிலிருந்து, 38 கி.மீ., தொலைவில், பெருநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தை சென்றடையும்.அங்கிருந்து பம்பைக்கு, பக்தர்கள் காரில் அழைத்துச் செல்லப்படுவர். அங்கு இருமுடி கட்டுதல், மலைக்கு நடந்தோ அல்லது "டோலி மூலமோ செல்வதற்கும், வழிகாட்டி உதவி, தங்குவதற்கான வசதி என, அனைத்தையும், "ஹெலி டாக்சி சேவையை நடத்தும் நிறுவனமே செய்து தரும். அய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும் நாட்களில் மட்டுமே, "ஹெலி டாக்சி சேவை இருக்கும். இந்த, "ஹெலி டாக்சி சேவையை, டில்லியைச் சேர்ந்த, "சிப்சான் ஏவியேஷன் நிறுவனம் துவக்கியுள்ளது.இந்த ஹெலிகாப்டரில், ஐந்து பேர் பயணிக்க முடியும். மணிக்கு, 230 கி.மீ., வேகத்தில் பறந்து செல்லும். ஐந்து பேர் பயணிக்க, 1.5 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு மாதங்களுக்கு கட்டணத்தில், 20 சதவீத சலுகை அளிக்கப்படும்.