பதிவு செய்த நாள்
22
செப்
2022
07:09
மேட்டுப்பாளையம்: குறிஞ்சி நகரில், புதிதாக கட்டிய குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர் குறிஞ்சீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூரில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு புதிதாக குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர், குறிஞ்சீசுவரர் (சிவன்) கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, 20ம் தேதி துவங்கியது. முந்து தமிழால் முதற்கால வேள்வி பூஜையும், பேரொளி வழிபாடும் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், மூல மூர்த்திகளுக்கு காப்பும் அணிவிக்கப்பட்டது. பின்பு இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. பின்னர், யாக வேள்வி சாலையில் இருந்து, கோவிலைச் சுற்றி, தீர்த்த குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் சிலை முன்பு வைத்தனர். பின்னர் மூலவர் சிலை மீது, புனித தீர்த்தத்தை ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். அருளாளர்களின் அருளுரையும், பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடும், திருமுறை விண்ணப்பம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக வேள்விப் பணிகளை பவானியை சேர்ந்த சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையினர் செய்தனர். தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு, சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் தியாகராசன் ஆகியோர், சுவாமி மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர், வார்டு உறுப்பினர், திருஞானசம்பந்தர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையினர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.