பதிவு செய்த நாள்
23
செப்
2022
07:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணியதில், 22 லட்சத்து, 27 ஆயிரத்து, 964 ரூபாய் இருந்தது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும். கடைசியாக ஜூன் மாதம் உண்டியல் எண்ணியதில், 21 லட்சம் ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். நேற்று அரங்கநாதர் கோவில் யாக சாலை மண்டபத்தில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், மேட்டுப்பாளையம் ஹிந்து சமய அறநிலைத்துறை இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள், பொதுமக்கள், சேவா சங்க அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர். கோவிலில் இருந்த, 11 உண்டியல்கள் உள்ள பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணியதில், 22 லட்சத்து, 27 ஆயிரத்து, 964 ரூபாய் இருந்தது. இதில், 163 கிராம் தங்கம், 98 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. மீண்டும் அனைத்து உண்டியல்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.