மயிலாடுதுறை: சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் இவ்வாண்டு மஹாளய பட்சத்தை முன்னிட்டு பதினைந்து நாட்கள் சதுர்வேத பாராயணம் கடந்த 11.09.2022 ஞாயிறு துவங்கி பதினைந்து நாட்களாக நடைபெற்றது.
இதன் பூர்த்திவிழா 25.09.2022 ஞாயிறன்று மகாளயபட்ச அமாவாசை நாளில் சிறப்புற நிகழ்ந்தது. இவ்விழாவைத்துவக்கிவைத்து குருகுல நிறுவனர் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் பேசியதாவது; “இது போன்ற தர்மங்களை செய்தால் மனிதவாழ்க்கையில் நல்லது நடப்பது தொடரும். தொடர்ச்சி என்பது இங்கு சந்ததியைக்குறிக்கும். தர்மத்தை அடிப்படையாகக்கொண்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்முன்னோர்கள் கடைபிடித்து வருவதை நாமும் கடைபிடித்தால் நமது வம்சத்தினர் நன்றாக இருப்பார்கள். தர்மத்தை செய்வதற்கு வழிதெரியவேண்டும் அல்லவா! அந்த வழியைக்கூறும் நூல்தான் மனுஸ்மிருதி அல்லது மனுதர்மம் எனப்படுகிறது. நல்லதை யார்சொன்னாலும் ஏற்கனும். நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக டாக்டர் கொடுக்கும் மாத்திரையை சாப்பிடாமல் விடுவதில்லை. உடலுக்கு ஏற்படும் நோயைத் தீர்க்க மருத்துவ நூல்கள் இருப்பது போல உயிருக்கு ஏற்படும் பிறவிப்பிணி என திருவள்ளுவர் கூறும் நோய் தீர மருந்து கூறும் நூல்தான் மனுசாஸ்திரம். அது இருப்பதால்தானே இன்று மகாளயபட்ச நாளில் உலகம்முழுதும் முன்னோர்களை வழிபடும் தர்மத்தை அறிந்து செய்யமுடிகிறது. சில விஷயங்கள் ஆரம்பகால வாழ்வியலுக்கு ஏற்றதாத கூறப்பட்டிருக்கிறது.
தரையில் நடப்பவர்களுக்குதான் மேடுபள்ளங்கள் என்ற இடர்பாடுகள். விமானத்தில் செல்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படாது. அதுபோலத்தான் மனுதர்மம் கூறும் ஜாதிகள் என்ற விஷயமும். மற்றபடி தவறான எந்தப்புரிதல்களும் கூடாது. அருள் என்பதை மாதா பிதா குரு தெய்வம் ஆகிய நால்வரிடமிருந்தும் பெறவேண்டும். இந்த மகாளய வழிபாடு அந்தவகையான அருளைத்தரும் ஆற்றலுடையது. நம் நாடு உயர்ந்த நிலையை அடைய ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலகட்டத்தை உணர்ந்து நமது எண்ணம் பேச்சு செயல் எல்லாம் இருக்கவேண்டும் “ என்று பேசினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அருண்பிரியா மலுத்துவமனை தலைமை டாக்டர் இரா. செல்வம் தலைமை வகித்தார். தொழிலதிபர் சூ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். வரகூர், திருப்பதி சித்ரகூடம் முதலிய பகுதிகளிலிருந்து வருகை தந்து வேதபாராயணம் நிகழ்த்திய பண்டிதர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முதல்வர் ஶ்ரீகண்டசிவாசாரியார் ஆசிரியர்கள் செந்தில்குருக்கள் நடராஜகுருக்கள் ஶ்ரீராம் சாஸ்திரிகள் செய்திருந்தனர். நிர்வாக ஒருங்கினைப்பாளர் செந்தில்குமார் நன்றியுரையாற்றினார்.