பதிவு செய்த நாள்
28
செப்
2022
07:09
பெரிய பதவிகள் அடைய... சந்திரகாந்தா வழிபாடு!: உலகம் அனைத்தும் சக்தி மயம் என்ற தத்துவத்தை விளக்க வந்ததே, நவராத்திரி விழாவின் சிறப்பு. இதைச் சிறப்பிக்கவே இமயம் முதல் குமரி வரை, அன்னை கொலு வீற்றிருக்கும் காட்சி, நவராத்திரி யில் வீடுதோறும் காணப்படுகிறது.மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை, மாஹேந்தரி சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கீரிடம் தரித்து, வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலம் செய்பவளும் இவள் தான்.
அலங்காரம்: இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவாள்.தேவியானவள் உலகில் உள்ள உருவம் அனைத்திலும் உலவுகிறாள் என்பதை அறிந்து, எல்லா உருவங்களிலும் அவளைப் பூஜிப்பதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் பூஜையை தவற விட்டவர்களும், இந்த மூன்றாம் நாளில் கொலு வைத்து, தங்கள் விரதத்தை துவங்குகின்றனர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்கள் பாடி, சிறப்பு பூஜைகளை செய்து, பெண்களுக்கு தாம்பூலம் வழங்கி, இவ்விரதத்தை கொண்டாடுவது வழக்கம்.
பாடல்
என்குறை தீர நின்று ஏத்துகிறேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே!!
மூலமந்திரம்: ஓம்-ஹரீம்-இம்-வம்-இந்திராணியை - நம:
காயத்ரி: ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை
தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
வழிபாடு முறை:
நைவேத்தியம்: எமிச்சை சாதம்,வெண் பாயசம்
மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி
பூஜை நேரம் : காலை 9:00 - 10:30, மாலை 6:00 - 7:30 வரை
முத்து வைத்து மலர் வகை கோலம் போட வேண்டும்.
மொச்சை சுண்டல், சர்க்கரைப் பொங்கல் வினியோகிக்க வேண்டும்.
தாம்பூலங்கள்: 9 முதல் 11 வகை தரப்பட வேண்டும்.
ராகம்: ஆனந்த பைரவி
குணம்: சவும்யம்
சிறப்பு: இந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள். இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை வீரத்தின் தெய்வம், சிவபிரியை, இச்சா சக்தி.
பலன்: உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட மூன்றாம் நாள் விரதம் இருத்தல் நலம். சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் திசை புத்தி நடப்பவர்கள். சுபிட்ஷ வாழ்வுக்கான விரதம்
சகல உலகங்களையும் படைத்து, அவற்றையெல்லாம் இயக்கி காத்து வருகின்ற சக்தியை வழிபடும் விரதமே, நவராத்திரி விரதம். ஆறுவகையான ருதுக்களில் வசந்த ருது, சரத் ருது என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு ருதுக்களும் எமனுடைய இரண்டு கோரைப்பற்களுக்கு சமம் என, புராண நுால்கள் கூறுகின்றன. இந்தக் காலகட்டத்தில் மனிதர்களுக்கு அதிக துன்பத்தை விளைவிக்க கூடியவை! இவற்றில் இருந்து விடுபட, சுபிட்ஷ வாழ்வை வேண்டி, நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதம் ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் நவராத்திரி என்றும், சில இடங்களில் பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், தச ராத்திரி என்றும் தசரா என்றும் அழைக்கின்றனர். தேவி பூஜை, வாணி விழா, ஆயுத பூஜை, மஹா நவமி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது.