பதிவு செய்த நாள்
23
ஆக
2012
10:08
மதுரை: மதுரை மாவட்டத்தில் மெகா டூரிஸம் திட்டத்தில், பணிகள் நிறைவுற்ற பூங்காக்கள், தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த, முந்தைய தி.மு.க., ஆட்சியில் சுற்றுலாத் துறை சார்பில் 12.55 கோடி ரூபாய் மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. தெப்பக்குளம் அழகுபடுத்துதல், திருப்பரங்குன்றம் பூங்கா, மீனாட்சி அம்மன் கோயில் பூங்கா, மேலவாசல் பூங்கா, திருமலை நாயக்கர் மகால் பூங்காக்களில் பணிகள் நடந்தன. தெப்பக்குளம் அழகுபடுத்துதல், திருப்பரங்குன்றம் பூங்காவை நவீனப்படுத்தும் பணிகள் தாமதமாகின. இதனால் பணிகள் முடிந்த நிலையில் இருந்த மற்ற பூங்காக்களையும், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியாத நிலை இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு தொகுப்பு திட்டத்தின் கீழ் அறிக்கப்படும், திட்டங்களும் ஒரே நேரத்தில் திறப்பது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த பூங்காக்களையும், அனைத்து இடங்களிலும் பணிகள் முடிந்த பிறகு திறக்க அரசு முடிவு செய்திருந்தது. பணிகள் நிறைவடையாத பூங்காக்களில் பணிகள் பூர்த்தியடைய இன்னும் பல மாதங்கள் ஆகும், என்ற நிலையில், பயன்பாட்டிற்கு தயாராக உள்ள பூங்காக்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்து, தயாராக உள்ள மேலவாசல் பூங்கா, மீனாட்சி அம்மன் கோவில் பூங்கா, திருமலை நாயக்கர் மகால் பூங்காக்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மேலவாசல், மீனாட்சி அம்மன் கோயில் பூங்காக்களில் திறந்த வெளியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க விடுமுறை நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் திட்டம் விரைவில் செயல்பட உள்ளது.