பதிவு செய்த நாள்
23
ஆக
2012
11:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பள்ளி கழிவறை கட்ட பள்ளம் தோண்டிய போது, சுவாமி, அம்பாள் சிலை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பாளையூரில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தாட்கோ மூலம் கழிவறை கட்டுவதற்காக நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மூன்று அடி ஆழத்தில், ஒரே பீடத்தில் அமைந்துள்ள சிவன், பார்வதி சிலைகள், உடைந்த திருவாட்சி, விளக்கு, தாம்பூலத் தட்டு, 2 அடி உயரத்தில் குத்து விளக்கு உள்ளிட்ட பூஜை செய்யும் பொருட்கள் கிடைத்தன. இதனை அறிந்த ஏராளமான மக்கள் கூட்டமாக வந்து சுவாமி, அம்பாளை தரிசித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடாஜலபதி, வி.ஏ.ஒ., பாலசுப்ரமணியன் கொடுத்த தகவலின் பேரில் குத்தாலம் தாசில்தார் ராமநாதன், மண்டல துணை தாசில்தார் சண்முகம் ஆகியோர் சிலைகளை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பாளையூரில் 1968ல் இந்த பள்ளிக்கான கட்டடம் கட்ட பள்ளம் தோண்டிய போது அம்பாள் சிலை கிடைத்துள்ளது. அதனால் இந்த இடத்தில் கோவில் ஏதேனும் இருந்திருக்கலாம் எனவும், அது காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது பாளையூரில் கிடைத்துள்ள சிலை உள்ளிட்ட பொருட்கள் ஐம்பொன்னால் ஆனவையா அல்லது செம்புச் சிலையா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.