பதிவு செய்த நாள்
25
ஆக
2012
11:08
திருப்பூர்: போக்குவரத்து வசதிக்காக வெட்டப்பட இருந்த, 75 வயதான பழமையான மரம், நல்ல மனங்களின் முயற்சியால், தொடர்ந்து உயிர் வாழ வழி செய்யப்பட்டது. "நிப்ட்-டீ கல்லூரியில் நடப்பட்ட அம்மரத்தை, பொது மக்கள் பக்தியுடன் தரிசித்தனர்.திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, டி.எம்.எப்., மருத்துவமனை அருகே வேம்பும், அரச மரமும் இணைந்திருந்த மரம், சுரங்கப் பாலம் அமைக்கும் பணிக்காக, வெட்டி அகற்றப்பட இருந்தது. 75 ஆண்டுகள் பழமையான அம்மரத்தை வெட்டி அகற்றாமல், வேறிடத்தில் நட்டு, வளர்க்க வேண்டுமென, "நிப்ட்-டீ கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் திட்டமிட்டார். இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனை மற்றும் அரசுத் துறைகளின் அனுமதி பெற்று, இம்மரம் நேற்று முன்தினம் பெயர்த்தெடுக்கப்பட்டது. காலை, 10.00 மணிக்கு மரத்தை வேரோடு பெயர்த்தெடுக்கும் பணி துவங்கியது. மூன்று மணி நேரத்துக்கு பின், பகல், 1.00 மணிக்கு நிலத்திலிருந்து வேரோடு மரம் பிரிக்கப்பட்டது. 30 அடி உயரம், 16 அடி அகலம், 18 முதல், 20 டன் எடையுடைய அம்மரம் ஏற்றப்பட்ட டிரக்கர் லாரி, பகல் 3.30 மணியளவில், "நிப்ட்-டீ கல்லூரிக்கு புறப்பட்டது. சில நூறு மீட்டர் கடந்தபோது, சாலையின் குறுக்கே தாழ்வாக இருந்த மின் கம்பிகள், மரத்தில் உரசின; உயரமாக இருந்த சிறு கிளைகள் வெட்டப்பட்டன. அங்கிருந்து இரண்டு மணி நேரத்துக்கு பின், லாரி நகர்ந்தது.இம்மரம் வரும் தகவலறிந்து, வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் கூடி நின்று வரவேற்றனர். கற்பூர ஆரத்தி, தேங்காய், பழம், பட்டாசுகள் என, பல வகையிலும் மக்கள் வரவேற்றனர்.
சாலை முழுவதும் கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் சென்றதால், ஊத்துக்குளி சாலை முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. மின் ஒயர் மரத்தில் உரசியதால், வழி நெடுகிலும், பகுதி வாரியாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.எட்டரை மணி நேர பயணத்துக்குப் பின், நள்ளிரவு, 12.00 மணிக்கு, கல்லூரிக்குள் லாரி நுழைந்தது. அந்த நேரத்திலும், அங்கு ஆவலுடன் கூடி நின்ற பொதுமக்கள், கைதட்டி, ஆரவாரம் செய்து வரவேற்றனர். மரம் ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தாய் மண், குழியில் கொட்டப்பட்டது. மரத்தை நடுவதற்காக, "அவாஹனம் பூஜை நடந்தது.லாரியில் இருந்த மரம், கிரேன்களின் உதவியுடன் தூக்கப்பட்டது. மரத்தின் அடிவேரில் சாணம் மற்றும் மருந்துகள் கலந்த தண்ணீர் ஊற்றி, குழிக்குள் இறக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3.30 மணிக்கு குழிக்குள் மரம் நிறுத்தப்பட்டது. நேராக நிமிர வைத்து, சுற்றிலும் மண் நிரப்பும் பணி, அதிகாலை, 4.00 மணிக்கு நிறைவடைந்தது. கரகோஷம் எழுப்பி, அங்கிருந்தோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மரம் நடப்பட்ட பின், சிறப்பு பூஜை நடந்தது. மரத்தைப் பார்க்க, மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.