பதிவு செய்த நாள்
28
ஆக
2012
10:08
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில் தெப்பத்தை சுற்றி, ஆக்கிரமிப்பு மற்றும் திறந்தவெளி பாராக இருப்பதால், பக்தர்கள் அவதிபடுகின்றனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட, மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது.நூற்றாண்டு புகழ் வாய்ந்த கோயிலையொட்டி,தெப்பக்குளம் உள்ளது. இதில் குளித்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். தற்போது இக்குளத்தை சுற்றி, ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. தெப்பத்தை சுற்றி வர முடியாத அளவிற்கு ஆடு, மாடுகளை கட்டி, இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், மரங்கள் சூழ்ந்து இருப்பதால், இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராக செயல்படுகிறது. தெப்பத்தின் ஓரங்களில்,மது பாட்டில்கள், தண்ணீர்பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பெண்கள் இந்த பகுதிக்கு வர அஞ்சுகின்றனர். மேலும், தெப்பத்தில் கழிவு நீர் தேங்கி துர் நாற்றம்வீசுகிறது. இப் பகுதியினர் வேறு, குப்பைகளை கொட்டுகின்றனர். இதன் மீது இந்து சமய துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, தெப்பத்தை சுற்றிய ஆக்கிரமிப்புகளை அகற்றி, தெப்பத்தில் கழிவு நீர் வராத வகையில் பராமரிக்க வேண்டும். அப்பகுதி கல்யாணசுந்தரம், ""புகழ் வாய்ந்த தெப்பம் சுகாதார கேடாக உள்ளது. தெப்பத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பதால், பக்தர்கள் பாதிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, தெப்பத்தை சுற்றி சிமெண்ட் கல் பதிக்க வேண்டும், என்றார்.நகராட்சி தலைவர் சிவபிரகாசம், தெப்பத்திற்கு மழைநீர் வரும் வகையில், ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கழிவு நீர் ஒரு வழயதகவும்,தெப்பத்தில் மழைநீர் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஓடையில் ஒரு ஷட்டரும் அமைக்கப்பட உள்ளது. அதன் பின் மழைநீர் மட்டும் தெப்பத்தில் வந்து சேரும்,என்றார்.கோயில் அதிகாரி,""தெப்பத்தை சுற்றிய ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கையில் உள்ளது. பக்தர்கள் நடப்பதற்கு வசதியாக பாதை சுத்தப்படுத்தப்படும்,என்றார்.