பதிவு செய்த நாள்
28
ஆக
2012
10:08
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பவித்ரோச்ஸவ திருவிழா வெகு சிறப்பாக நேற்று துவங்கியது. விழாவில் பிரசித்திப்பெற்ற "பூச்சாண்டி ஸேவை இன்று (28ம் தேதி) நடக்கிறது. பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஒன்பது நாட்கள் பவித்ரோச்ஸவம் எனப்படும் நூலிழை திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். நடப்பாண்டு பவித்ரோச்ஸவம் நேற்று காலை ஒன்பது மணிக்கு யாகசாலை பூஜையோடு துவங்கியது. யாகசாலையில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு சிறப்பு திருவாராதனம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது.யாகசாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸேவை சாதித்த நம்பெருமாள், இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பூச்சாண்டிசேவை: பவித்ரோச்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று (28ம் தேதி), மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், உபயநாச்சியார் மீது பவித்திரங்களால் (நூலிழை) அலங்காரம் செய்விக்கப்படும்.வித்தியாசமான முறையில் செய்யப்படும் இந்த நூல் அலங்காரத்தை பார்த்து குழந்தைகள் பயப்படுவர் என்பதால் இந்த ஸேவையை "பூச்சாண்டி ஸேவை என்று விளையாட்டாக அழைக்கும் வழக்கம் இருக்கிறது. நூலிழைகளால் அலங்காரம் செய்வதுக்கு கூடுதல் நேரமாகும் என்பதால் இன்று மதியம் வரை மூலவர் சன்னதியில் ஸேவை இருக்காது. மதியம் இரண்டு மணிக்கு மேல் அலங்காரத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை ஆறு மணியுடன் மூலஸ்தான ஸேவை நிறைவு பெறுகிறது. இரவு எட்டு மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு, பவித்ரோச்ஸவ மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு 9.30 மணி வரை மண்டபத்தில் ஸேவை சாதிக்கிறார்.இரவு 10 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானத்தை சென்றடைகிறார். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் சேஷசாயி, இணை கமிஷனர் கல்யாணி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.