பதிவு செய்த நாள்
24
நவ
2022
10:11
கோவை: கோவில்களில் இறைபணி மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, ஐந்தாண்டில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டதற்கு கோவையில் உள்ள ஆதினங்கள் கண்டனத்தையும், கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
கோவில்களில், ஐந்தாண்டுகள் அர்ச்சகர் பயிற்சி என்பதை ஓராண்டு மட்டும் பயிற்சி பெற்றால் போதும் என்று விதிமுறைகளில் ஹிந்து சமய அறநிலையத்துறை மாற்றம் கொண்டுவந்துள்ளது. இது போன்ற அரசின் நடவடிக்கைகளால், கோவில்களின் பண்பாடு, மரபு சிதைந்து போகும்; பூஜைகளின் முக்கியத்துவம் அழிந்துபோகும் என்று ஆதீனங்களும், மடாதிபதிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை சிரவை ஆதீனம், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமி: தமிழ் வேதங்கள் திருமுறைகள் கற்று தேர்ந்தவர்களுக்கு முறையாக ஐந்தாண்டு காலம் பயிற்சி அளித்தால் மட்டுமே அவர்களால் திறம்பட அர்ச்சனை மற்றும் குடமுழுக்கு நடைமுறைப்படுத்த முடியும். ஓராண்டு பயிற்சியால் ஆன்மிக பணிகளில் தொய்வு ஏற்படும். அதனால் அரசு ஏற்கனவே இருந்த ஐந்தாண்டு நடைமுறையை தொடர வேண்டும். அப்போது தான் பயிற்சி பெறுபவர்கள், தங்களை ஆன்மிக பணிகளில் அர்ப்பணித்துக்கொள்ளமுடியும். சமயநெறிகளை வலுப்படுத்த முடியும். உயர் மட்ட குழு உறுப்பினர்களோடு, அரசு கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டும்.
கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி பீடம் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமி: அன்றாட பூஜை நடைமுறைகளை கற்றுக்கொள்வதற்கான பயிற்சிக்கே ஓராண்டாகிவிடும். யாகம், ஹோமம், கும்பாபிஷேகம், குடமுழுக்கு ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுகளுக்கு பயிற்சி நீடிப்பதே நியாயம். முத்திரை, கலசம், கும்பம், அக்னி, தீர்த்தம் ஆகியவற்றில் இறைவனை ஆவாஹனம் செய்து எழுந்தருளச்செய்வது சாதாரண விஷயம் கிடையாது. பல ஆயிரம் மந்திரங்களை சரியாக உச்சரித்து உச்சாடனம் செய்து இறைவனை எழுந்தருளி கோபுரத்திலும், கருவறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தனி ஞானம் வேண்டும். அதற்கான பயிற்சி என்பது ஐந்தாண்டு மேற்கொள்ள வேண்டும். அதை ஓராண்டாக குறைப்பது தவறு. ஆகம விதிகளிலும், தர்ம மற்றும் வேதசாஸ்திரங்களிலும் ஹிந்துசமய அறநிலையத்துறை தலையிடுவது தவறு. ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும்.
கோவை பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள்: ஆகம விதிகளிலும், வேதபாராயண நடைமுறைகளிலும் அரசும், ஹிந்து அறநிலையத்துறையும் தலையிடுவது தவறு. தமிழில் குடமுழுக்கு நடத்த ஓராண்டு பயிற்சியளிக்கலாம் என்பது முற்றிலும் தவறு. ஆதீனங்கள், வேதவிற்பன்னர்கள், ஆகமவிதிகளை கற்றுத்தேர்ந்த மடாதிபதிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
கோவை ஒண்டிபுதுார் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்: ஐந்தாண்டு அர்ச்சகர் பயிற்சி என்பதை ஓராண்டாக குறைத்திருப்பது தவறு. கோவிலில் நடைபெறும் அடிப்படை பூஜைகளிலேயே மாற்றங்கள் ஏற்படும். அதன் முக்கியத்துவம் குறையும். உற்சவங்கள் திருவிழாக்கள் நடத்துவதில் பல்வேறு சிக்கல் ஏற்படும். இதனால் திருக்கோவிலின் மரபு, கலாசாரம், பாரம்பரியம் சிதைந்து போகும். அன்றாட பூஜைகளிலும், குடமுழுக்கு போன்ற விஷயங்களில் ஆட்சியாளர்கள் தங்களது விருப்பம் போல் மாற்றம் செய்வது தவறு. வழக்கமாக பின்பற்றப்படும் ஆகம விதிகளில் எந்த மாற்றங்களும் எப்போதும் செய்யக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.