பதிவு செய்த நாள்
01
செப்
2012
11:09
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, பூமிக்குள் புதைந்திருந்த, வெள்ளி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூரில், செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில், கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், புதையல் உள்ளதாகவும், பவுர்ணமி நாளில் தோண்டி பார்த்தால், புதையல் கிடைக்கும் என்றும், சில நாட்களுக்கு முன், கங்காரவரத்தை சேர்ந்த, சுமதி என்பவர், குறி சொன்னார். நேற்று காலை, சந்தூர் மற்றும் கங்காவரம் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள், கோவில் அருகில் உள்ள நிலத்தை தோண்டினர். அப்போது, ஒரு இடத்தில், இரண்டு அடி ஆழம் தோண்டிய போது, வெள்ளியாலான சிறிய அம்மன் சிலையும், பூஜை பொருட்களும், ஐந்து தலை நாகப் பாம்பு போன்ற சிலையும் இருந்தது. பொதுமக்கள், சிலையை எடுத்து, பெரிய தட்டில் வைத்து கோவில் வளாகத்தில் வைத்தனர். இது குறித்து தகவல் பரவியதால், கோவில் வளாகத்தில், பொதுமக்கள் திரண்டனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொல்லியியல் துறைக்குத் தகவல் தெரிவித்த ஆர்.டி.ஓ., சிலையை அவர்களிடம் ஒப்படைத்தார்.