பதிவு செய்த நாள்
05
செப்
2012
10:09
நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற, அஸ்வதி பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ளது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். கேரளாவில் இருந்து இங்கு வரும் பெண்கள், தலையில் இருமுடி கட்டுடன் வந்து வழிபடுவதால், இது, "பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.இங்கு, ஆவணி மாதம், அஸ்வதி நாளில் நடைபெறும் விழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு, ஒரே நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம், ஐஸ்வரியமும், நன்மையும் பெருகும் என்பது நம்பிக்கை.நேற்று நடைபெற்ற இப்பொங்கல் விழாவை, வனத்துறை அமைச்சர் பச்சைமால் மனைவி, செல்வ அழகி துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.