பதிவு செய்த நாள்
05
செப்
2012
10:09
கீழக்கரை: மதுரையிலிருந்து உத்தரகோசமங்கை வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ், கடந்த 10 நாளாக நிறுத்தப்பட்டதால், பக்தர்கள், இரண்டு பஸ்கள் மாறி வரவேண்டி உள்ளது. உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தென் மாவட்ட பக்தர்களுக்காக, மதுரையில் இருந்து இந்த கோயிலுக்கு, நேரடி பஸ் இயக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட பஸ், சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்ட பக்தர்கள், ராமநாதபுரம் சென்று, அங்கிருந்து மற்றொரு பஸ்சில் உத்தரகோசமங்கைக்கு வந்து செல்கின்றனர். கூடுதல் செலவு, நேர விரையம், மன உளைச்சல் ஏற்படுகிறது. அமைச்சர் சுந்தரராஜ் கூறியதாவது: இது சம்பந்தமாக யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. மீண்டும் பஸ் விட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.