பதிவு செய்த நாள்
08
செப்
2012
11:09
காரைக்குடி: காரைக்குடி மகர்நோன்பு திடல் மூன்றாவது தெருவில், மறத்தி படப்பு வீட்டில், நடந்து வரும் வில்லிபாரத சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: கிருஷ்ணபரமாத்மா, தூது போவதற்கு முன்பு தரும புத்திரனிடம் ஆலோசனை கேட்கிறார். அதற்கு தருமன், சமாதானமாக ராஜ்ஜியத்தை கேள். ஐந்து ஊரைக் கேள். இல்லையென்றால், கடைசியில் யுத்தத்தை கேள் என்றார். பீமன், அர்ச்சுனன், நகுலன் யுத்தத்தையே விரும்பினார்கள். சகாதேவனை தனியாக அழைத்து, தூது போகிறேன் உனது யோசனை என்ன என்று கிருஷ்ணர் கேட்கிறார். கர்ணனனுக்கு பட்டாபிஷேகம் செய், அர்ச்சுனன் தலையை எடுத்துவிடு, திரவுபதி கூந்தலை எடு, உன் காலை பிடித்து நான் கட்டிப்போடுவேனேயானால், மகாபாரத யுத்தம் வராது என்று சகாதேவன் கூறினார். உடனே கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்தார். தமது பக்தியினால், இதயத்தில் இருக்கும் கிருஷ்ணனை சகாதேவன் கட்டினார். வெளியில் இருக்கும் கிருஷ்ணன் கைதானார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கிருஷ்ணர் கேட்டார். மகாபாரத யுத்தத்தில், எங்கள் ஐவரை காப்பாற்றுகிறேன், என்று சத்தியம் செய், என சகாதேவன் கேட்டார். கிருஷ்ணரும், சகாதேவனிடத்தில், நாம் இருவரும் இங்கே பேசிக்கொண்டதை, வெளியே யாரிடமும் சொல்லாதே என்று வரம் பெற்றார். திரவுபதியிடம் யோசனை கேட்டார். தூது சென்று சமாதானம் பெற்றால், நான் கூந்தலை அள்ளி முடிய இயலுமா. பிரகலாதனை காத்தவனே, யானையை காத்தவனே, என்னை காப்பதற்கு இவ்வளவு தாமதம் செய்கிறாய். அதற்கு கிருஷ்ணன், நான் தூது போவது, தருமன் நல்லவன் என்பதை எடுத்துக்காட்ட, என்று சொல்லி, அஸ்தினாபுரத்தை நோக்கி நடந்தே போனார். உலகத்தையே நடத்துபவன்,பக்தனுக்காக நடந்தான். இதன்மூலம் பக்தனுக்காக எதையும் செய்பவன் இறைவன். அவனை நம் பக்தியினால் மட்டும்தான் கட்ட முடியும், என்றார்.