சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2023 10:03
சோழவந்தான்: சோழவந்தானில் 1000 ஆண்டுகள் பழமை மிகுந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழாவின் கொடியேற்றம் அர்ச்சகர் ஸ்ரீபதி தலைமையில் நடந்தது.
இவ்விழா பதினோரு நாள் திருவிழாவாக நடைபெறும். இந்நிகழ்வில் நேற்று முதல்நாள் விழாவாக அர்ச்சகர் ஸ்ரீபதி தலைமையில் யாக பூஜை செய்து கொடி கம்பத்திற்கு 11 வகையான திரவ அபிஷேகம் செய்தனர். இதையடுத்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து விழாவிற்கான கொடியேற்றினர். இந்நிகழ்வில் செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கயற்கண்ணி, கணக்கர் முரளி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இரவு சுவாமி சமேதராய் அன்னவாகனத்தில் வீதியுலா பவனி நடைபெறும். இதையடுத்து தினந்தோறும் சுவாமி சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், ஷேச வாகனம், கருட வாகனம், உள்ளிட்ட அனைத்து வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மார்.28., 7ம் நாள் விழாவில் சுவாமியின் திருக்கல்யாணம் நடைபெறும். இரவு மின் அலங்கார புறப்பாடும் நடைபெறும். இதையடுத்து மார்.30., 9ம் நாள் விழாவில் ஸ்ரீராம ஜெனனம் நிகழ்ச்சியும் தீர்த்தவாரியும் நடைபெறும். இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கயற்கண்ணி, கணக்கர் முரளி ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்தனர்.