Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரைக்காஞ்சி நூல் அறிமுகம்! மதுரைக்காஞ்சி பகுதி-2
முதல் பக்கம் » மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2012
01:09

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப   5

விய னாண்மீ னெறி யொழுகப்
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்  10

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த  

நோ யிகந்து நோக்கு விளங்க
மே தக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு   15

கண்டு தண்டாக் கட்கின் பத்து
உண்டு தண்டா மிகுவளத் தான்
உயர் பூரிம விழுத் தெருவிற்
பொய் யறியா வாய்மொழி யாற்
புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு   20

நல் லூழி அடிப் படரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக  
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை  25

யொலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந் தாட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் டலை அணங் கடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி   30
 
சினத் தீயிற் பெயர்பு பொங்கத்
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப் பாக
ஆ டுற்ற ஊன் சோறு   35

நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யொதுங்கிப் பிற் பெயராப்
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின  40

தொல்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந  
விழுச் சூழிய விளங்கோ டைய
கடுஞ் சினத்த கமழ்கடா அத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய   45

வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களனு ழக்கவும்
மா வெடுத்த மலிகுரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும  50

வாம் பரிய கடுந்திண் டேர்
காற் றென்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்  
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்  55

பொரு தவரைச் செரு வென்றும்
இலங் கருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இக லாற்றல்
உயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின்
நிலந் தந்த பே ருதவிப்   60

பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல்  
மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும்
நரை யுருமின் ஏற னையை
அருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந் தோங்கிய நிரைப் புதவின்  65

நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயி லருப்பந்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல்   70

குண குட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறுத் தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை  

வானி யைந்த இரு முந்நீர்ப்   75

பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை யெடுத்து
இன் னிசைய முரச முழங்கப   80

பொன் மலிந்த விழுப் பண்டம்
நா டார நன் கிழிதரும்
ஆடி யற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங் கிருக்கைத்  85

தெண் கடற் குண் டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!  
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பு மிசை யேற்றத   90

தோடு வழங்கும் அக லாம்பியிற்
கய னகைய வய னிறைக்கு
மென் றொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி
இரும்புள் ஒப்பும் இசையே என்றும்  95

மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற்
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப  
ஒருசார், விழவுநின்ற விய லாங்கண்
முழவுத் தோள் முரட் பொருநர்க்கு
உரு கெழு பெருஞ் சிறப்பின்   100

இரு பெயர்ப் பேரா யமொடு
இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்
நலஞ் சான்ற கலஞ் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே!   105

கல் காயுங் கடுவேனி லொடு
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை  110

புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்  115

நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலி யோவாக் கலி யாணர்
முது வெள்ளிலை மீக் கூறும்
வியன் மேவல் விழுச் செல்வத்து  120

இரு வகையான் இசை சான்ற
சிறு குடிப் பெருந் தொழுவர்
குடி கெழீஇய நானிலவ ரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்
கா லென்னக் கடிது ராஅய்   125

நாடு கெட எரி பரப்பி
ஆலங் கானத் தஞ்சுவர விறுத்து
அரசு பட அமரு ழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறலுயர் புகழ் வேந்த   130

நட்டவர் குடி யுயர்க் குவை
செற்றவர் அரசு பெயர்க் குவை
பேரு லகத்து மேஎந் தோன்றிச்
சீரு டைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்  135

இலங்கு வளை இருஞ் சேரிக்
கட் கொண்டிக் குடிப் பாக்கத்து
நற் கொற்கை யோர்நசைப் பொருந  
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற்  140

கோழூ உன்குறைக் கொழு வல்சிப்
புலவு விற் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி யிருப்பில்
தென் பரதவர் போ ரேறே  
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு  145

உரிய வெல்லாம் ஓம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து  150

மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்  
உறு செறுநர் புலம் புக்கவர்
கடி காவி னிலை தொலைச்சி
இழி பறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய   155

நா டெனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மாசேப்ப
ஊரி ருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப  160

அவை யிருந்த பெரும் பொதியிற்
கவை யடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர் பாட
அணங்கு வழங்கு மகலாங் கண்
நிலத் தாற்றுங் குழூஉப் புதவின்  165

அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக  170

கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல்
பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப்  175

பாழா யினநின் பகைவர் தேஎம்  
எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்
மாஅத் தாள் உயர் மருப்பிற்
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் றானையொட  180

முரு குறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்
பெய லுறழக் கணை சிதறிப்
பல புரவி நீ றுகைப்ப
வளை நரல வயி ரார்ப்பப்   185

பீ டழியக் கடந் தட்டவர்
நா டழியக் எயில் வெளவிச்
சுற்ற மொடு தூ வறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி  190

அரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின்  195

தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்  
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்  200

பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே  205

அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை  
தவாப் பெருக்கத் தறா யாணர   210

அழித் தானாக் கொழுந் திற்றி
இழித் தானாப் பல சொன்றி
உண் டானாக் கூர் நறவில்
தின் றானா இன வைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப்  215

பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ  220

மறங் கலங்கத் தலைச் சென்று
வாளுழந் ததன் தாள் வாழ்த்தி
நா ளீண்டிய நல் லகவர்க்குத்
தே ரோடு மா சிதறிச்
சூ டுற்ற சுடர்ப் பூவின்   225

பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார  230

பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த்  235

திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே  
அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றி
இரவு மெல்லையும் விளிவிட னறியாது
அவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக்  240

கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது
குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி  245

நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறு மாய்க்குங் கதிர்க் கழனி
ஒளி றிலஞ்சி அடை நிவந்த
முட் டாள சுடர்த் தாமரை
கட் கமழு நறு நெய்தல்   250

வள் ளிதழ் அவிழ் நீலம்
மெல் லிலை யரி யாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்
கம்புட் சேவல் இன்றுயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து   255

கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பி னெந்திரங் கட்பி னோதை  
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப  260

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கவிகொள் சும்மை யொலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப்  265

புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்
அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச  270

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி  275

மடக்கட் பிணையொடு மறுகுவன உகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து  280

சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்தல் உறழக் காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப
முல்லை சான்ற புறவணிந் தொருசார்  285

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
இஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித்  290

தினைவிளை சாரற் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியுங் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல்   295

கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ்
ஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும்
இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து.  300
 
அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்
இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயந்தொட் டன்ன
கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து  305

அருவி யான்ற அணியில் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை
இலைவேய் குரம்பை உழையதட் பள்ள  310

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்  
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்  315

அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல  320

விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு  325

ஐம்பால் திணையுங் கவினி யமைவர  
முழ வீமிழும் அக லாங்கண்
விழவு நின்ற வியன் மறுகில்
துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
இன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப  330

பாடல் சான்ற நன்னாட்டு நடுவண்  
கலை தாய உயர் சிமையத்து
மயி லகவு மலி பொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவின்  335

இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறுந்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்
அவிரறல் வையைத் துறைதுறை தோறும  340

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்  
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழந் தனருங்  345

கொழும்பல் புதிய குடியிழந் தனரும்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று  350

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு  355

வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்  
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப  360

மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச்  365

சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையொடு .
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப  370

புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப்  
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்  375

வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து  380

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்
அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும்  385

செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத் தாதி போகிய  390

கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்
வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்  
தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர்  395

பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்  400

நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர்
இருதலை வந்த பகைமுனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்  405

மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர  
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை  410

செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத்  415

தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்
மயிலிய லோரும் மடமொழி யோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்  420

புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக  
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்  425

கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங் காடி நனந்தலைக் கம்பல  430

வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்
கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக்  435

கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி
மொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
அணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
காலியக் கன்ன கதழ்பரி கடைஇக  440

காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்  
நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்
தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை  445

அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்
திண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்
தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப  450

நிரைநிலை மாடத் தரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய  
நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக  455

மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்
அந்தி விழவிற் றூரியங் கறங்கத்  460

திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்  465

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்  
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி.  470

உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்  
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்  475

பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க   480

ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து  485

நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற  
அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச்
செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து  490

ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து  
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல  495

நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்  
அறநெறி பிழையா தாற்றி னொழுகி  500

குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்
பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு  505

சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்  
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும்  510

கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயு மாக்களும்   515

எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச்  520

சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக்  
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
தண்கட னாடன் ஒண்பூங் கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ  525

விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி  530

மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர  535

வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லென் இமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம  540

இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே
அல்லங் காடி அழிதரு கம்பலை  
ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து  545

சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்
காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த  550

தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர்  555

நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள
ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்
தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்த  560

வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்திப்  565

பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்த  570

சேயரு நணியரு நலனயந்து வந்த
இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து  575

பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
மணம்புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி  580

நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்ப ணின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப்  585

பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென்றளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி
மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயரக்  
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்  590

மாயோன் மேய ஓண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்  595

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக்  
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து  600

பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்  
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி  605

நுண்ணீ ராகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப ஒருசார் 610

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும்  615

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப்  620

பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி இறாஅல் புரையு மெல்லடை
அயிருருப் புற்ற ஆடமை விசயங்  625

கவவொடு பிடித்த வகையமை மோதகந்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க
விழவி னாடும் வயிரியர் மடியப்
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப்  630

பானாட் கொண்ட கங்கு லிடையது
பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்  635

தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்  640

நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த  645

நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற அரைநா ளமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற்  650

கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்
அச்ச மறியா தேம மாகிய மற்றை
யாமம் பகலுறக் கழிப்பிப்  
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாதுண் தும்பி போது முரன்றாங்  655

கோத லந்தணர் வேதம் பாடச்
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப்  660

பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய  665

ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல  670

வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப்  675

பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த  680

பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப  685

இரவுத்தலைப் பெயரு மேம வைகறை  
மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி
இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறிக்  690

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும்  695

கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்  
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ  700

ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற் சுடர்பொழிந்
தேறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதி
ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து  705

மயிலோ ரன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத்  710

தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்  
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து
திண்கா ழார நீவிக் கதிர்விடு   715

மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்  720

சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகியன் றன்ன உருவினை யாகி  
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து  725

ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த  
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்
மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின்  730

நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத் தொழிய  735

விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து  740

வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற்  745

பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோருந் தம்மென  
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென  750

இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்  
களந் தோறும் கள் ளரிப்ப
மரந் தோறு மை வீழ்ப்ப
நிண வூன்சுட் டுருக் கமைய   755

நெய் கனிந்து வறை யார்ப்பக்
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற்
பரந்து தோன்றா விய னகராற்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய   760

தொல் லாணை நல் லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி  765

அரிய தந்து குடி யகற்றிப்
பெரிய கற் றிசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப்  770

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த  775

மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறகும் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்  780

மகிழ்ந்தினி துறைமதி பெரும்
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.  

1-ஓங்குதிரை என்பது தொடங்கி, 23-உயர்ந்தோர் மருக, என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் நல்லிசைப் புலவராகிய மாங்குடி மருதனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையாகிய காஞ்சி யறிவுறுக்க புகுவார், அவ் வேந்தர் பெருமானை விளிக்கு முகத்தான், அவன் முன்னோரின் செங்கோன்மைச் சிறப்பினைப் பாராட்டிக் கூறுகின்றார்.

பாண்டிமன்னர் குடிச்சிறப்பு

1-4 : ஓங்குதிரை ................. ஞாலத்து

பொருள் : ஓங்கு திரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாக - உயர்ந்தெழும் அலைகளையுடையதும் அகன்ற நீர்ப்பரப்பை உடையதும் முழக்கத்தையுடையதுமாகிய கடல் எல்லையாக அமையுமாறு, தேன் தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியல் ஞாலத்து - தேனிறால் தூங்காநின்ற உயர்ந்த உச்சியை யுடைய மலைகள் தோன்றியுள்ள அகலத்தையுடைய உலகத்தின் கண்ணே;

கருத்துரை : உயர்ந்தெழும் அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும், ஒலியையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு தேனிறால் தூங்கும் உச்சிகளையுடைய மலைகள் தோன்றியுள்ள அகலத்தையுடைய இப்பேருலகத்தில் என்பதாம்.

அகலவுரை : கடல் எல்லையாகுமாறு விரிந்த ஞாலம் என்க. மறக்கள வேள்வியே செய்வதன்கண் முனைந்து மானிடப் பிறப்பின் பெறு பேறாகிய வீட்டினை எய்துதற்கு முயலாதிருந்த நெடுஞ்செழியனுக்கு, இவ்வுலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நிலைபேறுடையனவல்ல; ஆதலின், மானிட வாழ்க்கையின் செலவு வீடுபேற்றினை எய்துவதாக அமைதல் வேண்டும் என அறிவுறுத்தப் புகுந்த நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனார், அம்மெய்யுணர்ச்சி பிறத்தற்கேதுவான நிலையாமையே கூறும் காஞ்சி கூறுவார், இந்நூற் றொடக்கத்தே ஒன்றனைத் தேர்ந்து அமைத்திருத்தல் அறிந்து மகிழற்பாலதாம்; அச்சொற்றொடர் ஓங்கு திரை என்பதாம். என்னை? கடலின்கண் அலை நிலைபேறின்றித் தோன்றித்தோன்றி அழிதல் யாரும் நன்கறிந்த வுண்மையே அன்றோ? அவ்வாறே இவ்வுலகமும் அதன்கட் பொருளும் மாறிமாறித் தோன்றுதலும் அழிதலும் உடைய என்னும் நிலையாமை கூறும் கருத்துடையது இப்பனுவலாம். ஆகலின் நிலையுதலற்ற அலையினையே தொடக்கத்தே பெய்துரைத்தார்.

இனி, ஓங்கியெழுந்த திரை அழிதல் எத்துணை உண்மையோ அத்துணை, உண்மையேயாம் இவ்வுலகில் மானிடர்க்கமைந்துள்ள யாக்கை, இளமை, செல்வமுதலிய அனைத்தும் அழிதல் என்னுங் குறிப்பிற்கும் அச்சொல் இடந்தருகின்றது. இந்நிலையாமை யுணர்ந்தன்றிப் பற்றுவிடாதாகலின், அதனைக் கூறத்தொடங்கி, அம்மன்னர்பிரான் செவிக்கொள்ளும்வகை தேர்ந்து, வேம்பும் கடுவும் போன்று கைப்பன கழறாது, அவன் விரும்பி ஏற்றுக்கொள்ளுமாற்றான், அவனது சிறப்பினையே விரிப்பார் போன்று தொடங்குகின்றார் என்க.

ஓங்குதிரை வியன்பரப்பின் ஓலிமுந்நீர் என்னுந்துணையும் அமைந்த ஒரு சிறிய சொற்றொடரான், மாபெருங் கடலொன்றன் ஓவியத்தினை அதன் எல்லாச் சிறப்பும் எஞ்சாது பொருந்த ஓதுவார் உளத்தே கண்கூடாகத் தோற்றுவித்தல் அறிக. என்னை, கடல் கண்டோம் என்பார் யாவரே முழுதுறக் கண்டார், எனக் கம்பர் வியந்தாங்கு அது கட்பொறிக் கடங்காத பரப்புடைய தாதலை, வியன் பரப்பென்னும் தொடரானும், அஃதிடையறாது முழங்கிக் கிடத்தலை ஒலிமுந்நீர் என்னும் தொடரானும், பேரலைகள் எழுந்து வீசாநிற்கும் காட்சியை ஓங்கு திரை என்னும் தொடரானும், அக்கடல்தான் இறைவனைப்போன்று, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழிலும் வல்லதாம் என்பதும், ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்னும் மூன்று நீரானும் நிறைந்ததென்பதும், முந்நீர் என்னும் பெயரானே தோன்றக் கூறலானும் என்க.

ஓங்குதிரை - பேரலை, வியன் பரப்பென்றது மிக விரிந்த நீர்ப்பரப்பினையுடைய என்றவாறு; வியலென் கிளவி அகலப் பொருட்டே (உரி-66) என்பர் தொல்காப்பியனார். ஒலிமுந்நீர் : வினைத்தொகை. முந்நீர் - மூன்று நீர்மையை உடையது என்றும், மூன்று வகையான நீரையுடையது என்றும் இரட்டுற மொழிந்து கொள்க. அவை மேலே கூறினாம். வரம்பு - எல்லை; தேன்: ஆகுபெயர் - தேனிறால் என்னும் பொருட்டு. சிமையம் - மலையுச்சி; குவடு. மலைநாறிய என்றது மலைகள் தோன்றியுள்ள என்றவாறு. பல ஊழிகள் இவ்வுலகம் நீர்ப் பரப்பாகவே இருந்ததென்றும், பின்னர் மலைகள் தோன்றலாயின என்றும், அதன் பின்னர் நிலந் தோன்றிற் றென்றும் கூறுப. பாண்டிய மன்னரின் குடிப் பழைமை கூறுவார்; மலைநாறிய வியன் ஞாலத்து என்றார். எனவே கல்தோன்றி மண்தோன்றாக் காலந் தொடங்கி ஆண்டோர் மருக என்றவாறு. தோன்றும் பொருளை மீண்டும் அழியும் பொருளாதலின் நிலையாமை கூறப் புக்க புலவர் முன்னர் உலகத்தின் தோற்றம் கூறுவாராயினர். கடல் எல்லையாக அமைந்த இஞ்ஞாலத்தின் கண்ணே, இன்னின்ன இன்னின்னவாறு நிகழும்படி பாண்டியர் செங்கோன்மை செலுத்தலாயினர் என இனி மேலே கூறுகின்றார்.

பாண்டியர் செங்கோன்மைச் சிறப்பு

5-23 : வலமாதிரத்தான் .................... மருக

பொருள் : வலம் மாதிரத்தான் வளி கொட்ப - வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழலாநிற்ப, வியல் நாள்மீன் நெறி ஒழுக - அகலத்தையுடைய நாள்மீன்கள் தாம் நடக்கும் நெறியின்கண்ணே நடவாநிற்ப, பகற் செய்யும் செஞ்ஞாயிறும் - பகற் பொழுதை உண்டாக்கும் சிவந்த கதிரவனும், இரவுச் செய்யும் வெண் திங்களும் - இராப்பொழுதின்கண் ஒளி செய்யும் வெண்மையான திங்களும், மைதீர்ந்து கிளர்ந்து விளங்க - குற்றமற்றுத் தோன்றி விளங்காநிற்ப, மழை தொழில் உதவ - முகில் தானே பெய்தற்றொழிலை வேண்டுங்காலத்தே செய்துதவ, மாதிரங் கொழுக்க - திசைகள் எல்லாம் தழைப்ப, தொடுப்பின் வித்தியது ஆயிரம் விளைய, ஒரே விதைப்பின்கண் விதைத்த விதை ஆயிரமாக விளைய, நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த - விளைநிலங்களும் மரங்களும் பல்லுயிர்க்கும் பயன் கொடுத்தலை மேற்கொண்டு தழையாநிற்ப, நோய் இகந்து நோக்கு விளங்க - மக்கட்குப் பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்க, மிகப் பொலிந்த ஓங்கு நிலை வயக்களிறு மேதக - மிகவும் பொலிவு பெற்ற உலகத்தைத் தாங்குமாறு உயர்ந்த நிலையை உடைய வலிமிக்க திசை யானைகள் தம் பொறை நீங்கி வருத்தமற்று மேம்பாடு தக, கண்டு தண்டாக் கட்கின்பத்து - நோக்கி அமையாத கட்பொறியின் இனிமையினையும், உண்டு தண்டா மிகு வளத்தான் - உண்டு அமையாத உணவு மிகுகின்ற செல்வத்தோடே, உயர் பூரிமம் விழுத் தெருவில் - உயர்ந்த சிறகுகளையுமுடைய சீரிய தெருவிலிருக்கும், பொய் அறியா வாய்மொழியாற் புகழ் நிறைந்த நல்ல அமைச்சரோடே, நல் ஊழி அடிப் படர - நன்றாகிய ஊழிக் காலமெல்லாம் தமக்கு அடிபட்டு நடவாநிற்ப, பல்வெள்ளம் மீக்கூற - பல வெள்ளம் என்னும் எண்ணைப்பெற்ற காலமெல்லாம் தமது செங்கோன்மையைப் புகழ்ந்து சொல்லும் படி, உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக - உலகத்தை ஆட்சி செய்த உயர்ச்சி பெற்றோர் குடியிற் றோன்றியவனே!

கருத்துரை : காற்று வலமாகச் சுழலவும், அகன்ற நாள் மீன்கள் நன்னெறிக்கட் செல்லவும், பகற்பொழுதினை உண்டாக்கும் ஞாயிற்று மண்டிலமும், இரவின்கண் ஒளிசெய்யும் திங்கள் மண்டிலமும் தீதிலவாய்த் தோன்றி விளங்கவும், முகில்கள் வேண்டுங்கால் வேண்டியாங்குப் பெய்யாநிற்பவும், திசைகளெல்லாம் தழைப்பவும் ஒரு விதைப்பின்கண் வித்திய விதை ஆயிரமாக விளையவும், விளைநிலங்களும், மரமும், பல்லுயிர்க்கும் பயன் கொடுத்தலை மேற்கொண்டு தழைப்பவும், மக்கட்குப் பசியும் பிணியும் நீங்கி அழகு விளங்கவும், திசை யானைகள் சுமை நீங்கப்பெற்று வருத்தந்தீர்ந்து மகிழாநிற்பவும், கண்டு கண்டமையாத காட்சியின்பம் மிகவும், உண்டு உண்டொழியாத பெருஞ் செல்வத்தோடே, வழுக்கியும் தம் வாயிற் பொய் கூறாராய், மெய்ம் மொழியே பேசுதலாற் புகழ் நிறைந்த நல்ல அமைச்சரோடே, ஊழிக் காலமெல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க, இவ்வுலகத்தையாண்ட உயர்ந்த செங்கோல் மன்னர் மரபிற் றோன்றியவனே! என்பதாம்.

அகலவுரை : உலகத்தே எல்லா வகையானும் நன்மையே மிக்கு, மக்கள் பசியும் பிணியும் அற்று, வசியும் வளனும் சுரந்து இன்புற்று வாழ்தற்கு அவர்தம் அறநெறிச் செலவாகிய நல்லொழுக்கமே காரணமாவதென்றும், இங்ஙனம் மக்கள் நன்னெறி ஒழுகாதவராய்த் தீநெறிக்கண் செல்லுவாரெனின் அத்தீயொழுக்கம், மழை மறுத்து உலகத்தே பசியும் பிணியும் உண்டாதற்குக் காரணமாம் என்றும், மக்கள் ஒழுக்கத்தே நிலைத்தற்குக் காரணமாய் அமைவது வேந்தர் ஒழுக்கமாகிய செங்கோன்மையாம் என்றும், எனவே, அரசரே உலகின்கண் நிகழும் இன்பதுன்பங்கட்குக் காரணமாவார் என்றும் நம் பண்டைநாட் சான்றோர் அனைவரும் கருதி வந்தனர் என்றற்குச் சான்று, நம் செந்தமிழ்ப் பனுவல்களில் யாண்டும் காணலாம். இதனால் நிலம் நீர் தீ வளி வெளி என்னும் உயிரில்லா ஐம்பெரும் பூதமும் மக்களின் அறமறங்களுக்கேற்ப நிரலே நன்மை யுண்டாகு மாற்றானும் தீமை யுண்டாகு மாற்றானும் இயங்குகின்றன என்பதும், அச்சான்றோரின் சீரிய கொள்கையாகத் திகழ்ந்தது என்பது உணரப்படும். இக்கொள்கையிற் பற்றின்றி நெகிழ விட்டிருக்கின்ற இக்காலத்து மக்கட் கூட்டத்தையும் அதனால் அப் பசிப்பிணி முதலியவற்றிற்கு அவர் ஆளாதலையும் உலகத்தே வற்கடம் உண்டாய் வருத்துதலையும் எண்ணச் சான்றோர் உளம் வருந்துவர் என்பது திண்ணம். முன் கூறியபடி நம் சான்றோர் எண்ணியிருந்தனர் என்றற்கு, எண்ணிறந்த சான்றுகள் கிடைப்பனவாயினும், விரிவஞ்சி ஒரு சில சான்றுகளே கீழே தருகின்றோம்; அவை :

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (குறள் - 558)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.  (குறள் - 559)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.  (குறள் - 560)

என்றற் றொடக்கத்துத் தமிழ் மறையும்,

கோன்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்.  (மணிமே - 7: 8-9)

என்னும் மணிமேகலையும்,

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா வின்பத் தவருடை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்  (சிலப் - மதுரை-23. கட்டுரை)

என்னும் சிலம்பும்,

கோள்நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி
நீணிலம் மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடின் என்றான். (சிந்தா - 255)

என்னும் சிந்தாமணியும்,

வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்
உள்ளமும் ஒருவழி யோட நின்றவன்
தள்ளரும் பெரும்புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்வள் ளுறையயில் மன்னர் மன்னனே.  (கம்ப.பாலகா-அரசிய : 6)

என்றும்,

கூற்ற மில்லையோர் குற்றமில் லாமையாற்
சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்
ஆற்றல் நல்லற மல்லதில் லாமையால்
ஏற்ற மல்ல திழிதக வில்லையே. (கம்ப-நாட: 39)

என்றும் வரும் இராமாவதாரமும் இன்னோரன்ன பிறவுமாம். மாதிரம் - விசும்பு; திசையெனினுமாம். காற்று வலப்பக்கம் சுற்றி வீசின் உலகின் நன்மை உண்டாம் என்பது நம்பிக்கை. இதனை,

வளிவலங் கொட்கும் மாதிரம் வளம்படும்.  (12 : அந்தணர்த் - 91)

என்னும் மணிமேகலையினும் உணர்க. கொட்ப - சுழல. வியன் நாள்மீன் என்றது, விரிந்த கூட்டத்தை யுடைய நாள்மீன்கள் என்றவாறு; அவை, அச்சுவனி முதலியன. அவை நெறியொழுகலாவது: உலகத்தே வசியும் வளனும் உண்டாகுமாறு நடத்தல், பகற்செய்யும் செஞ்ஞாயிறு - தனது வருகையாற் பகற்பொழுதை உண்டாக்கும் சிவந்த ஞாயிற்றுமண்டிலம் இரவுச் செய்யும் வெண்டிங்கள் என்றதற்கு, இராப்பொழுதை உண்டாக்கும் வெள்ளிய மதி என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்; இராப்பொழுதை உண்டாக்குவது திங்கள் அன்மையால் அத்தொடர்க்கு இரவின்கண் ஒளி செய்யும் திங்கள் என யாம் உரை கூறினாம். இரவுச் செய்யும் என்பதனை ஏழாவதன் உருபு பெய்து விரித்துக்கொள்க. ஞாயிறும் திங்களும் மைதீர்ந்து விளங்க என்றது, இக் கோள்கள் உலகின்கண் நன்மையுண்டாதற்கு ஏதுவாய் நடந்து விளங்க என்றவாறு. கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும் என்பவாகலின்; தலைமை பற்றி ஞாயிறும் திங்களும் என்றாரேனும் எடுத்த மொழியின் இனம் செப்பு மாற்றான் செவ்வாய் புதன் முதலிய ஏனைக் கோள்களும் மைதீர்ந்து கிளர்ந்து விளங்க என்பதும் கொள்க. மழை தொழில் உதவ என்றதற்கு மழை வேண்டுங்காலத்தே பெய்து உலகத்தின்கண் உழவு முதலிய தொழில்கட்கு உதவாநிற்ப என இரட்டுறவும் மொழிந்து கொள்க.

மழை உழவர் முதலியோர் வேண்டுங்காலத்தே மிகாதும் குறை யாதும் பொழிந்து கூழ் முதலியவற்றின் பெருக்கத்திற்கு உதவியாக என்பார், மழை தொழிலுதவ என்றார். உலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு மழையே ஏதுவாகலின் தொழில் உதவ எனப் பொதுவிற் கூறினார். மாதிரம் - திசை; மலையுமாம். கொழுக்க என்றது, வளத்தான் மிக்குச் செழிப்புற என்றவாறு. தொடுப்பு - விதைப்பு. ஆயிரமாக என்றது, ஒன்று ஆயிரம் பங்காகப் பெருகி என்றவாறு. ஆயிரம் மிகுதிக்கு ஓர் எண் காட்டியபடியாம்; நன்கு விளைய என்பது கருத்து.

வேலியாயிரம் விளையுட்டாக,  (பொரு. 246-7)

என்றும்,

வான மின்னு வசிவுபொழிய வானா
திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய (மலைபடு. 7-8)

என்றும் பிறரும் கூறுதல் காண்க. நிலன், மரன், என்பவற்றில் மகரத்திற்கு னகரம் போலி. எதிர்பு : செய்பு என்னும் எச்சம்; எதிர்ந்து என்றவாறு. எனவே நிலமும் மரங்களும் உயிர்கட்கு நிறைந்த பயன் அளித்தல் வேண்டும் என்னும் குறிக்கோளுடையவாய்ப் பயன் அளிப்பனபோல அளிக்க என்க. நந்துதல்-தழைத்தல். நோய் - பசி பிணி முதலியன. இகந்து - அகன்று. நோக்கு - அழகு, நோக்கப் படுபொருளாதலான் அழகினை நோக்கென்றார். மேதக என்பதனை வயக்களிறு என்பதன் பின்னாகக் கூட்டுக. உலகினைத் திசை யானைகள் சுமப்பனவாம்; அவற்றின் சுமையைப் பாண்டிய மன்னர்கள் தாம் ஏற்றுக் கொண்டமையால், அவை சுமத்தற்றொழில் ஒழிந்து பொலிவுடையனவாய் மேம்பாடுற்றன என்பார், மிகப் பொலிந்த ஓங்குநிலை வயக்களிறு மேதக என்றார். திசைகள் தோறும் ஒவ்வொன்றாய் நிலைத்து நின்று சுமத்தலான், ஓங்கு நிலைக் களிறு என்றார். உலகந்தாங்கும் ஆற்றலுடையன என்பார், வயக்களிறு என்றார். வய-வலிமை.

வய வலியாகும்  (தொல். உரி-68)

என்பர் தொல்காப்பியனார். இங்ஙனம் திசையானைகளால் உலகம் சுமக்கப்படுதலை.

விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான்
இரும்பிய லனந்தனும் இசைந்த யானையும்
பெரும்பெயர்க் கிரிகளும் பெயரத் தாங்கிய
அரும்பொறை யினிச்சிறி தாற்ற வாற்றலேன்  (கம்ப-2 : மந்திர - 16)

என்னும் இராமாவதாரத்தானும்,

........................ கூறொன்றத்
தாங்கிப் பொறையாற்றாத் தத்தம் பிடர்நின்றும்
வாங்கிப் பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய
கொற்றப் புயமிரண்டாற் கோமான் அகளங்கன்
முற்றப் பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாம்திறந்து பாய்.  (விக்கிரம - உலா)

என்பதனானும் உணர்க. சுருளும் படியுமாகப் பண்ணின விடத்துப் பண்ணி நிற்கும்யானை என்றுரைப்பாருமுளர் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். கண்டு தண்டாக்கட்கின்பம் என்றது பாண்டியர் ஆட்சிக்கண் இவ்வாறெல்லாம் உலகம் வளம்படுதலான், ஆண்டுள்ள காட்சிகளைக் காணுந்தோறும் காணுந்தோறும் இன்பமே உடைத்தாதலான் மனனுணர்வுடையோர் கண்டது போதும் என அமையாது மேலும்மேலும் காண்டலை விரும்புதற்குக் காரணமான இன்பம் என்றவாறு. உண்டு தண்டாமிகுவளம் என்றது உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் வயிறார உண்டும் மிக்குக் கிடக்கும் செல்வம் என்றவாறு. அவை நெல் கனி முதலியனவாம். பூரிமம்-சிறகு. அஃதாவது தெருவின் இருமருங்கினும் நிரல்பட அமைத்துள்ள வீட்டொழுங்கு.

பூரிமம் என்பதனைச் சாந்திட்ட தொட்டி என்பாருமுளர் என நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். பொய் அறியா என்றது, வழுக்கியும் தம் வாயாற் பொய் பேசுதலை அறியார் என்றவாறு. தள்ளியும் வாயிற் பொய்கூறார் வடுவறு காட்சியார் என்று பிறருங் கூறுதல் காண்க. இனித் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற  (குறள் - 300)

என்றும்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு  (குறள் 299)

என்றும் வாய்மையின் சிறப்பையும் அது சான்றோர்க்கு இன்றியமையாமையும் விதந்தோதி,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.  (குறள் - 297)

என்றும்,

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்  (குறள் - 264)

என்றும் பொய்யாமை வாய்மை இரண்டனையும், விலக்குமுகத்தானும் விதிமுகத்தானும் கூறியிருத்தலறிக. அத்துணைச் சிறந்த அறமாகலின் இஃதொன்றனையே விதந்துகூறிப் பாண்டியமன்னர்களின் உழையிருந்த அமைச்சர் சிறப்பினைத் தெரித்தோதினார். ஓரிடத்துப் பொய் கூறுவாரும் மற்றோரிடத்தே வாய்மை பேசுதல் உண்டாகலின், வாய்மொழியாற் புகழ்நிறைந்த என்றொழியாது, பொய்யறியா எனல் வேண்டிற்று.

இங்ஙனம் தள்ளியும் பொய்கூறாது வாய்மை பேசுதற்குக் காரணம் ஆவது வடுவறு காட்சியே ஆகலின், அத்தகைய மெய்க்காட்சி யாளரையே அமைச்சராகக் கொண்டு உலகமாண்ட உயர்ந்தோர் மருக என்றவாறு. நல்லூழி அடிப்படர என்றது. கல்தோன்றி மண் தோன்றாக் காலந் தொடங்கி இதுகாறும் நிகழ்ந்த காலமெல்லாம் மாறாதே தம் மரபினர் வழி அடிப்பட்டு நடக்க என்றவாறு. இனி நல்லூழி கலியல்லா முன்னைய ஊழிகளினும் எனினுமாம். பல்வெள்ளம் மீக்கூற என்றது, இங்ஙனம் நிகழ்ந்த புகழை இனி எதிர்காலத்தேயும் பலவெள்ளம் ஆகிய ஊழிகள் உலகம் விதந்தெடுத்துப் புகழாநிற்ப, என்றவாறு. பல்வெள்ள ஊழி என்றது உலகம் உள்ளதுணையும் நிலவும் புகழ் என்றற்கு எண் காட்டியவாறு. உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக! என்றது விளி. முந்நீர் வரம்பாக மலைநாறிய ஞாலத்துக் கொட்பச் சுழல ஒழுக விளங்க உதவ விளைய நந்த விளங்க மேதக நல்மாந்தரொடு உலகம் ஆண்ட என வினை முடிவு செய்க. கொட்ப முதலிய செயவெனெச்சங்கட்கு ஆண்ட என்னும் எச்சம் ஏதுவாதல் அறிக.

இத்தகைய உயர்ந்தோராகிய உன் முன்னோரும் இவ்வுலகத்தே நிலையுதலின்றி மாண்டொழிந்தாரல்லது அவருள் ஒருவரேனும் நிலைத்திலர்; அவர்கள் வழிவந்த நீதானும் அவர்செய்தவற்றையே செய்தலிற் பயனில்லை என்றும், நிலைபேறுடைய வீடு எய்தும்நெறி முயல்க என்றும் செவியறிவுறுத்து மாற்றான் இதன்கண்ணும் காஞ்சித் திணைப் பொருளாகிய நிலையாமையே கூறும் நுணக்கம் நுண்ணிதின் உணர்ந்து மகிழற்பாற்று. இங்ஙனமே, அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வியே செய்துழன்றசேரன் செங்குட்டுவனுக்குக் காஞ்சி கூறப்புக்க நான்மறையாளன் மாடலனும்,

வேந்துவினை முடித்த வேந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிநின் ஊங்கணோர் மருங்கில்
கடற்கடம் பெறிந்த காவல னாயினும்
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும்
வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்
மிகப்பெருந் தானையோ டிருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி
இருகட னீரும் ஆடினோன் ஆயினும்
சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்!  (சிலப்-நடுகல் : 134-50)

என (வெளிப்படையான்) ஓதினன். நல்லிசைப் புலவர் தலைவராய் விளங்கிய மாங்குடி மருதனார் மற்றொரு நல்லிசைப் புலவனாகிய மன்னனுக்குக் கூறுதலானே காஞ்சி என்னும் பெயரானே இதன் கண்ணும் குறிப்பாக நிலையாமையே கூறப்பட்டதறிந்து அம் மன்னனும் நுண்ணிதின் மகிழும் பொருட்டு நுணக்கமாக அறிய வல்லுநர்க்குமட்டும் காஞ்சித் திணைப்பொருள் குறிப்பாற் புலப்படுமாறு கூறிப் போந்தனர். இங்ஙனமே இந்நூலில் யாண்டும் குறிப்பாக நிலையாமை யுணர்த்துவதனை ஆண்டாண்டுக் காட்டுதும். இனி, 24 - பிணக்கோட்ட சொல் களிறு என்பது தொடங்கி, 42-பொருந என்னுந் துணையும் நெடுஞ்செழியனின் முன்னோர் தெறற் சிறப்புக் கூறுமாற்றால் மீண்டும் விளிக்கின்றார்.

பாண்டிய மன்னரின் தெறற்சிறப்பு

24-35 : பிணக்கோட்ட ................. ஊன்சோறு

பொருள் : பிணக்கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம், வாய்ப்பெய்த பேய் மகளிர் - பிணங்களைக் கோத்த கொம்புகளை யுடையனவாய்ப் பட்ட யானையினுடைய திரளின் நிணத்தைத் தின்ற பேய் மகளிருடைய, இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்பிணை யூபம் எழுந்து ஆட - இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச் செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து நின்று ஆடுகையாலே, அஞ்சு வந்த போர்க்களத்தான் - அஞ்சுதலுண்டான போர்க்களத்தின் கண்ணே, ஆண் தலை அணங்கு அடுப்பின் - மறவர் தலையாகிய நோக்கினாரை வருத்தும் அடுப்பினிடத்தே, வய வேந்தர் ஒண் குருதி சினத் தீயில் பெயர்பு பொங்க - வலி மிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை வெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்காநிற்ப, தெறல் அரும் கடுந்துப்பின் விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின் தொடித் தோள் கைதுடுப்பாக ஆடுற்ற ஊன் சோறு - பகைவரால் வெல்லுதற் கரிய கடிய வலியினையும் வெற்றி விளங்கிய சீரிய கொடுந்தொழிலினையுமுடைய மறவர்களின் மறவளையணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊனாலாய சோற்றினை,

கருத்துரை : பிணங்களைக் கோத்த கொம்பை உடையனவாய் இறந்துபட்ட யானைத் திரளின் நிணத்தைத் தின்று ஆடும் பேய்மகளின் துணங்கைச் சீர்க்குப் பொருந்துமாறு, குறைத்தலைப் பிணங்கள் எழுந்து ஆடுதலானே, அஞ்சுதல் உண்டான போர்க்களத்திடத்தே ஆண்மக்களின் தலையானியற்றிய அடுப்பின்கண்ணே, மறவருடைய சினத்தீ எரிந்து மன்னருடைய குருதியாகிய உலைநீர் பொங்குதலானே, மறவளை யணிந்த வெல்லற் கரிய மறவருடைய வலிமிக்க கைகளைத் துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊனாலாய சோற்றினை என்பதாம்.

அகலவுரை : கோட்ட : பலவறி சொல். தாம் குத்திக் கொன்ற மறவர்களுடைய பிணங்கள் தங்கொம்பிலேயே தூங்கக்கோத்த மறக்களிறென்பார் பிணக் கோட்ட களிறு என்றார். காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா, வேலாள் முகத்த களிறு (குறள் - 500) எனத் தேவருங் கூறுதல் காண்க. குழும்பு - திரள். நிணம் - ஊன். துணங்கை : ஒருவகைக் கூத்து; அதாவது : முடக்கிய இருகை பழுப்புடை ஒற்றித், துடக்கிய நடையது துணங்கை யாகும் என்பர்; இதனைச் சிங்கிக் கூத்தென்றுங் கூறுப. நிணம் உண்ட களிப்பால் பேய்மகள் ஆடிய துணங்கை என்க; இங்ஙனம் பேய்கள் நிணனுண்டு களித்துத் துணங்கையாடலை,

உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை யலைக்கும் காதிற் பிணர்மோட்
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க,  (முருகாற்று : 47-56)

எனவரும் திருமுருகாற்றுப்படையானும் உணர்க. இணைஒலி - தாள முதலியவற்றோடு பொருந்திய ஒலி என்க. ஒலியிமிழ் : பண்புத்தொகை. பேயாடும் துணங்கைக் கூத்தின் இசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப யூபம் எழுந்து ஆடும் போர்க்களம் என்க. யூபம் - குறைத்தலைப் பிணம். குறைத்தலைப்பிணம் ஒன்றனோடொன்று நெருங்க நின்றாடு மென்பார் பிணையூபமெழுந்தாட என்றார். பிணைதல் - நெருங்குதல்.

பேயும் குறைத்தலைப் பிணமும் ஆடுதல், கண்டார்க்குப் பெரிதும் அச்சம் பயக்குமாகலின் அஞ்சு வந்த போர்க்களம் என்றார். அஞ்சு - அஞ்சுதல். ஆண் : ஈண்டுப் போர்மறவர். போர்மறவரின் தலைகளை அடுப்பாகக் கோலி என்க. அணங்குதல் வருத்துதல்; அச்சுறுத்தலுமாம். அரக்கர் முடிகளை அடுப்பு வகிர்வன, (திருவகுப்பு : பொருகளத்.) என்றும், முடித்தலை ஒப்ப அடுப்பென வைத்து (þ - செருக்கள) என்றும் பிறரும் கூறுதல் அறிக. மன்னர் குருதியை உலைநீராக வாக்கி வெகுளியாகிய தீமூட்டி என்க. அஞ்சாது எதிர் நின்று மாய்ந்தோர் குருதியாகலின், ஒண்குருதி என்றார். ஒண்குருதி - ஒளியுடைய குருதி. இனி உயிர்கொடுத்துப் புகழ்பெறுவார் குருதியாகலின் புகழின் பொருட்டுச் சிந்திய குருதி ஒண்குருதி எனப்பட்ட தெனினுமாம். இதுகாறும் பிறபகைவரால் வெல்லப்படாத பகைப்படை என்பது தோன்ற பிணக் கோட்ட களிறு என்றும், வயவேந்தர் ஒண்குருதி என்றும் பகைவர் பெருமையைச் சிறப்பித்தோதினார். தெறலரும் கடுந்துப்பின் விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின் என்னுந் துணையும் தொடித் தோட்கைக்கு அடையாக்கியதூஉம் அக் கருத்தான் என்க. அடுதலுற்ற, என்பது ஆடுற்ற என நின்றது. அடுதல் - சமைத்தல். துடுப்பு - அகப்பை; அவர் கரவகப்பை யவைகொடு புகட்டி யடுவன என்றார் பிறரும்.

36-42 : நெறியறிந்த ................ பொருந

பொருள் : நெறி அறிந்த கடி வாலுவன் - இடும் முறைமையினை அறிந்த பேய் மடையன், அடியொதுங்கிப் பிற்பெயராப் படையோர்க்கு முருகு அயர - இட்ட அடியை வாங்கிப் பின் போகாத வீரர்க்கு வேள்வி செய்யும்படி, அமர்கடக்கு வியன் தானை - போரினை வெல்லும் அகலத்தையுடைய படையினையுடைய, தென்னவன் பெயரிய - தென்னவன் என்னும் சிறப்புப் பெயரினையுடைய, துன்னரும் துப்பின் - பகைவராற் கிட்டுதற் கரிய, தொல் முது கடவுட் பின்னர் மேய - பழைமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய, வரைத் தாழ் அருவி - பக்கமலையிலே வீழ்கின்ற அருவியினையுடைய, பொருப்பிற் பொருந - மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே!

கருத்துரை : இடும் முறைமையினை அறிந்த பேய்மடையன் அடிபிறக்கிடாத மறவர்க்கு வேள்வி செய்யும்படியாகப் போரினை வெல்லும் பெரிய படையையுடைய தென்னவன் என்னும் சிறப்புப் பெயர்க்குரிய பழைமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றலும் பொதிய மலைத் தலைவனுமாகிய வீரவேந்தே! என்பதாம்.

அகலவுரை : தானையை உடையோனும், தென்னவன் என்னும் சிறப்புப் பெயருடையோனும் துப்பினை யுடையோனும், கடவுட் பின்னர் மேயவனும், பொருப்பினையுடையானும் ஆகிய பொருந! என்க.

நெறியறிந்த என்றது ஊன்சோறு வழங்குங்கால் வரிசை யறிந்து வழங்கும் நெறியினை அறிந்த என்றவாறு. வரிசை யறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே (புறம்-121) என்றார் பிறரும். கடி -பேய்; வாலுவன் - அடிசில் சமைப்போன்; மடையன், பேய்களுள் மடையன் என்றவாறு. அடியொதுங்கிப் பிற்பெயராப் படை என்றதும், பேய்களுள் மறப்பேய்களை என்க. முருகயர - வேள்வி செய்ய; என்றது சோறு வழங்க என்றபடி. பேய்ப்படை காளியின் படையாகிய கூளிப்படை என்க. முருகு : அழகென்னும் பொருட்டாகலின், அழகிய செயலாகிய ஈகையின் மேனின்றது. வாலுவன் முருகயர அமர்கடக்கும் என ஏதுவாக்குக. தென்னவன் என்றது, பாண்டியர்க்குரிய சிறப்புப் பெயராகலின் அப் பெயர்பெற்றவன் என்பார் தென்னவன் பெயரிய என்றார். பெயரிய பொருந எனக் கூட்டுக. தொன்முது கடவுட் பின்னர் மேய என்றதற்குப் பழைமை முதிர்ந்த கடவுளாகிய சிவனுக்குப் பின்னர் அவனுக்குச் சமம் என்ன வந்த அகத்தியனார் உறையும் எனப்பொருள் கூறிப் பொருப்பிற்கு அடையாக்கினுமாம். அகத்தியன் மேய பொருப்பிற்குத் தலைவன் என்றவாறு.

இனி இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் பின்வருமாறு பொருள் கூறினர். அது, தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் தொல்முது கடவுள் பின்னர் மேய பொருந - இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின வலியினையுடைய பழைமை முதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே என்பதாம். இங்ஙனம் பொருள் கூறி மேலும் இதுபற்றி அவர் கூறுவதாவது : திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும் என்றதனால் இராவணன் தென்றிசை யாண்டமைபற்றித் தென்னவன் என்றார்; இப்பெயர் பாண்டியற்கும் கூற்றுவற்கும் ஏற்றுநின்றாற் போல. அகத்தியன் தென்றிசை யுயர்ந்த நொய்மைபோக இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான் என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல் பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க. இதனால் அகத்தியனுடன் தலைச் சங்கத்துப் பாண்டியனிருந்து தமிழாராய்ந்த சிறப்புக் கூறினார்.

கூற்றுவனை உதைத்த கடவுள் என்று இறைவனுக்காக்கி அவன் பின்னர் என்றது அகத்தியனை என்று பொருள் கூறின், இறைவனுக்குத் தம்பி என்றல் சாலாமையானும், அப்பொருள் தருங்காலத்து முன்னவன் பின்னவன் முன்னோன் பின்னோ னென்றல்லது நில்லாமையானும் அது

முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள  (நாலடி : 92)

எனப் பிறாண்டும் முன்னர் பின்னர் என்பன இடமுணர்த்தியே நிற்கும் என்றுணர்க என்பதாம்.

இறைவன் ஒரு காலத்தே பாண்டிய மன்னன் மகளாகிய அங்கயற் கண்ணியை மணந்து பாண்டியர்க்குரிய அரசு கட்டிலின் அமர்ந்து தென்னாட்டினை ஆட்சி செய்தனர் என்ப. இதனைத் தென்னாடுடைய சிவனே ! போற்றி என்னும் மணிவாசகத்தானும் திருவிளையாடற் புராணம் முதலியவற்றானும் உணர்க. இவ்வரலாற்றினை உட்கொண்டே தொன்முது கடவுட் பின்னர் மேய என்றார் நல்லிசைப்புலவர் மாங்குடி மருதனார் என்க. இத்தொடரினும் பிணக்கோட்ட களிறு முதலிய தொடர்களான் யாக்கை நிலையாமை முதலியன குறிப்பாற் போந்தமை உணர்க. 43-விழுச்சூழிய என்பது தொடங்கி, 61-உம்பல் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண் பாண்டியன் நெடுஞ்செழியனின் போர் ஆற்றலும், யானை குதிரை தேர் மறவர் என்னும் நால்வகைப் படைகள் போர் உழக்கும் திறமும் கூறப்படும்.

யானைப்படையின் சிறப்பு

43-48 : விழுச்சூழிய ...................... களனுழக்கவும்

பொருள் : விழுச் சூழிய - சீரிய முகபடாத்தையுடைய வாய், விளங்கு ஓடைய - விளங்குகின்ற பட்டத்தையுடையவாய், கடுஞ்சினத்த - கடிய வெகுளியையுடையவாய், கமழ் கடா அத்து அளறுபட்ட நறுஞ்சென்னிய - கமழுகின்ற மதத்தாலே சேறுண்டான நறிய தலையினை உடையவாய், வரைமருளும் உயர் தோன்றல - மலையென்று கண்டார் மருளும் உயர்ந்த தோற்றத்தினை யுடையவாய், வினை நவின்ற பேர் யானை - போர்த் தொழிலிலே பயின்ற பெரிய யானை, சினஞ்சிறந்து களனுழக்கவும் - வெகுளி மிக்குப் போர்க்களத்தே பகைப்படை மறவரைக் கொன்று திரியாநிற்பவும்.

கருத்துரை : போர்ப்பயிற்சி நன்குடைய யானைகள் சிறந்த முகபடாத்தையும் விளங்குகின்ற பட்டத்தையும் அணியப் பெற்றனவாய், மணங்கமழும் மதச்சேறு உண்டான தலையினவாய்க் கண்டோர் மலை யென்று மருளும் உயர்ந்த உருவமுடையனவாய், சினம் மிகுந்து போரின்கட் பகைமறவரைக் கொன்றுகொன்று செருக்கித் திரியா நிற்பவும், என்பதாம்.

அகலவுரை : விழு - விழுமம்; சீர்மை; அல்லது சிறப்பு என்னும் பொருட்டு

விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்  (உரி-55.)

என்பர் தொல்காப்பியனார். சூழிய, ஓடைய, சினத்த, தோன்றல என்பன வினையெச்சமுற்றுக்கள். அவை உழக்கவும் என்பது கொண்டு முடியும்; வினை நவின்ற பேர்யானை என்னும் தொடர்க்கண் உள்ள நவின்ற என்னும் பெயரெச்சத்தோடு முடிக்க என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். சினம் சிறந்தென்றது, பகைப்படையின் ஆரவாரத்தானே தூண்டப்பட்ட வெகுளி பொங்கி என்றவாறு. கமழ் கடாம் - நாறுகின்ற மதம்; யானை மதம் மணமகள் கூந்தல் போல் மணங்கமழும் என்பர் திருத்தக்கதேவர்.

புணர்மருப் பியானையின் புயல்கொண் மும்மதம்
மணமகள் கதுப்பென நாறும்  (சிந்தா-1621.)
குதிபாய் கடம் மதகோடி யுலகேழு மணநாற  (தக்க-3)

என்றும்,

மாவதத்தினை யிழைத்திடும் பூட்கையின் மதநீர்
காவதத்தினுங் கமழ்தரு கலிங்கநாடு  (கந்த.மார்க்கண்டேயப்-114)

என்றும் பிறரும் கூறுதல் காண்க.

வினை - ஈண்டுப் போர்த்தொழில். நவிலுதல் - நன்கு பயிற்சி செய்தல். பேர்யானை என்றது எழுமுழம் உயர்ந்து ஏழுறுப்பும் நிலத்திற்றோய்ந்த சிறந்த யானை என்றவாறு. என்னை, திருந்தி ஏழுறுப்பும் திண்ணிலம் தோய்வ (சிந்தா-2154) என்பவாகலின், களம்: களன் என மகரத்திற்கு னகரம் போலியாயிற்று. களம்-போர்க்களம். உழக்குதல் ஐந்துறுப்பானும் பகைவரைக் கோறல். என்னை?

அரும்பனைத் தடக்கை யபரகாத்திரம் வாய்
வால் எயிறு ஐந்தினுங் கொல்வ  (சிந்தா-2154)

என்பவாகலின்,

குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படைகளின் சிறப்பு

49-54 : மாவெடுத்த ........................ வீறுமுற்றவும்

பொருள் : மா எடுத்த மலி குரூஉத் துகள் அகல்வானத்து வெயில் கரப்பவும்-குதிரைப்படை பகைவர்மேற் செல்லுதலான் உண்டான மிக்க நிறத்தையுடையவாகிய தூளி விரிந்த வானத்தின்கண் வெயிலை மறையாநிற்பவும், வாம்பரிய கடுந்திண்டேர் காற்றென்னக் கடிது கொட்பவும்-தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்ப்படை காற்றுச் சுற்றி யடித்தாற் போன்று விரைந்து சுழலாநிற்பவும், வாள் மிகு மறமைந்தர் தோள் முறையான் வீறு முற்றவும் - வாட்போரான் மிகுகின்ற மறத்தையுடைய மறவர்கள் தம் தோளானே முறையாகச் செய்யும் வெற்றி முற்றுப் பெறவும்;

கருத்துரை : பகைவர்மேற் பாயும் புரவிகளின் குளம்பு கிண்ட எழுந்த நிறமிக்க தூளி விண்ணிடத்தே வெயில் மறைப்பவும், தாவுகின்ற குதிரைகளையுடையனவும் விரைந்து செல்லும் இயல்புடையனவுமாகிய திண்ணிய தேர்கள் சூறைவளிபோல் விரைந்து சுழலவும், வாட்போரின் மிகுந்த வன்மையுடைய காலாட்படை மறவர் தம் தோளாலே இயற்றும் முறைபிறழாப் போரினைச் செய்து வெற்றியை முற்றச் செய்யவும், என்பதாம்.

அகலவுரை : விழுச்சூழிய (43) என்னும் அடி தொடங்கி வீறு முற்றவும் (54) என்பதிறுதியாகவுள்ள பன்னிரண்டடிகளிலே, காண்போர் தலைநடுக்கங் கொள்ளத்தகுந்த ஒரு பெரிய போர்க்களத்தையும், அப் போர்க்களத்தே களனுழக்கும் யானை முதலிய நால்வகைப் படையின் போர்த்தொழிலையும் வியத்தகு முறையில் நம் அகக்கண் முன்னரே படைத்துவிட்ட தெய்வப்புலமையின் அருமையை என்னென்று புகழவல்லோம். இக் காட்சியை மனனுணர்வாற் கண்டு களித்தலன்றி எடுத்துக் கூற எம்மனோர்க் கியலாதாம். இப்பன்னிரண்டடிகளாகிய வஞ்சியடிகளின் இடையிடையே தெற்றுப்பட்டு நடக்கும் தூங்கலோசைதான் இப் போர்நிகழ்ச்சி கூறுதற்கு எத்துணை வாய்ப்புடையதாக வுள்ளதென்பதனை இவ்வடிகளை மீண்டும் மீண்டும் ஓதி யுணர்க. பகைப் படையின் ஆரவாரங் கேட்டலும் வினைநவின்ற பேர் யானை தம் கண்களிலே சினநெருப்புச் சிதற அப்படையினூடே மலையியங்குமாறு போன்று மண்டிக்கால்களான் இடறியும், கையாற்றாக்கியும் மறவருடலைக் கொம்பின்கட் கோத்தும் செய்யும் அச்சந்தரும் போர்ச் செயலையும், விரைந்து செல்லும் குதிரைகளான் எழுந்த துகள் வெயிலை மறைத்தலானே அப்போர்க்களம் இருண்டுகிடத்தலையும், இதனிடையே திண்டேர்கள் ஆங்காங்கே சூறைவளிபோற் சுழலுதலையும், மறவர்கள் தம் தோளாலே வாள் வீசிப் பகைவரைக் கொன்று குவித்து வெற்றி வெற்றி வெற்றி என மறமுழக்கம் செய்தலையும் காண்மின்! காதாலே கேண்மின். இத்தகைய புலமையையன்றோ நல்லிசைப்புலமை எனத் தொல்காப்பியர் போற்றிப் புகழ்வாராயினர்.

மா-குதிரை. மலிதல் - மிகுதல். குரூஉ - நிறம்.
குருவும் கெழுவும் நிறனா கும்மே (உரி-5)

என்பது தொல்காப்பியம். அகல்வானம் : வினைத்தொகை. கரத்தல் - மறைத்தல். வாம்பரி - வாவும் பரி; வாவும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுப் பெயரெச்சம்.

செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை யுகரம்
அவ்வழி அறிதல் என்மனார் புலவர்  (தொல்-சொல்-வினை : 41)

என்னும் விதியான் ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டு வாம் என நின்றது; தாவுகின்ற என்னும் பொருட்டு. கடுந்திண்டேர் என்றதன்கண் கடி என்னும் உரிச்சொல் விரைவு குறித்து நின்றது. கொட்பவும் - சுழலவும். வாள் மிகு மறவர் என்றது வாட்போரின்கண் மிக்குப் புகழ்பெற்ற மறவர் என்றவாறு. வாட்போர்செய்யும் மறவர்க்குரிய மற நெறியிற் றவறாமே நின்றுபோர் செய்து வென்றார் என்பார் வெற்றியை வீறு என்றார். வீறு வேறொன்றற்கில்லாத சிறப்பு. அஃதாவது விருந்தாயினை எறி நீ யென விரைமார்பகம் கொடுத்தல் (சீவக : 2265) முதலிய அருஞ்செயல்கள் என்க.

நெடுஞ்செழியனின் போர்வேட்கையும், நிலந்தருதிருவிற் பாண்டியன் சிறப்பும்.

55-61 : இருபெரு வேந்தரொடு ................ உம்பல்

பொருள் : இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது அவரைச் செரு வென்றும் - சேரன் சோழனாகிய இரண்டு பெரிய முடியுடை வேந்தர்களுடனே குறுநில மன்னர் பலரும் இளைக்கும்படி பொருது அவரைப் போரின்கண் வென்றும் அமையாமல், இலங்கருவிய வரை நீந்திச் சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் - விளங்காநின்ற அருவிகளையுடைய மலையின்கண் அரசர்களையும் அமர் கடந்து பகைவர் காடுகளைப் பாலையாம்படி பிளவு படுத்திய மாறுபாட்டையுடைய போர் வலிமையுடையோனும், உயர்ந்தோங்கிய விழுச் சிறப்பின் நிலந்தந்த பேருதவி. மிகச் சிறப்பினையுடையதாக இவ்வுலகத்தைத் திருத்திக் கொடுத்த பெரிய உதவியினையும் உடைய, பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல் - பொன்னாற் செய்த மாலையை அணிந்த மார்பினையுடைய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழான் நீண்டவனுடைய வழியில் தோன்றியவனும் ஆகிய யானைபோல்வானே!

கருத்துரை : தமிழ் மன்னராகிய சேர சோழரோடே, குறுநில மன்னர் பலரையும் இளைக்கும்படி பொருது வென்றும் அமையாதே மேலும் குறிஞ்சிநில மன்னர் பலரையும் அமர் செய்து வென்று பாழ்படுத்தியபேராற்றல் உடையவனும், தனது செங்கோன்மையானே உலகில் அறத்தினை நிறுத்திச் சீர்திருத்தம் செய்த உதவியையுடைய பொன்மாலை மார்பினனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று உலகம் புகழ நின்ற பாண்டியன் மரபில் தோன்றியவனுமாகிய யானை போல்வானே என்பதாம்.

அகலவுரை : தமிழ்நாட்டு முடியுடை வேந்தர் மூவருள் நின்னை யொழிந்தார் இருவர் ஆகிய சேனும் சோழனும் என்பார், இரு பெருவேந்தர் என்றார். பெருவேந்தர் - தாம் ஒருவனுக்குத் திறை செலுத்துதலின்றிப் பிறர்பாற்றிறை கொள்ளும் முடியுடை வேந்தர். இத்தகைய மன்னரைச் சக்கரவர்த்தி என்ப வடவர். பாண்டியன் நெடுஞ்செழியன் இங்ஙனம் ஏனை இரண்டு மன்னரோடே குறுநில மன்னர் பலரையும் அமர் செய்து வென்றான் என்பதனை,

கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத் தகன்றலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் லியானைப் பொலம்பூண் எழினி
நாரரி நறவின் எருமை யூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன்என்
றெழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்
முரைசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக்  (அகம் - 36)
கொன்று,

எனவரும் அகப்பாட்டானும்,

இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்மென விரும்பி
முயங்கின னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த அரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர்எம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரம் கவைஇய மார்பே  (புறம் - 19)

எனவரும் புறப்பாட்டானும் உணர்க. இங்ஙனம் எழுவரையும் வென்றும் அமையாதவனாய் வடவர் நாட்டினும் சென்று ஆண்டுள்ள குறிஞ்சிநில மன்னரையும் வென்றோய் என்பார் இலங்கருவிய வரைநீந்தி என்றார். வரை, ஈண்டு வரைநாட்டு மன்னர்க்கு ஆகுபெயர். சுரம் போழ்ந்து என்றது, அவர் நாட்டினைப் பாழாக்கி என்றவாறு. போரின்கண் பகைநாட்டினைப் பாழ்படுத்தும் வழக்கத்தை,

நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ  (புறம்-38)

என்பதனானும் அறிக. இகலாற்றல் - போர்செய்யும் வலி. இகல் ஆற்றலுடைய உம்பல் என்க. உயர்ந்தோங்கிய விழுச் சிறப்பினையுடையதாய் உலகினைச் சீர்திருத்தித் தந்த உதவியைச் செய்தவன் என்க. அவன் நிலந்தரு திருவிற்பாண்டியன் ஆவான். அப்பாண்டியன், இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என அடியார்க்கு நல்லார் கூறிய உரையானே சங்கம் நிறீஇத் தொல்காப்பிய முதலிய அறிவியல் நூல்கள் புலப்படுத்துமாற்றான் தமிழ் நிலத்தினைச் சீர்திருத்திய வரலாற்றை உணர்க. உலகின்கண் உண்மைச் சீர்திருத்தமாவது அறிவு வளரச் செய்தலே ஆகலின், நிலந்தந்த திருவில் என்றார்; என்றது தமிழ் நிலத்தைச் சான்றோர் விரும்பும் அறிவு நிலமாக்கித் தந்த என்றவாறு. இனித் தென்றிசைக்கண் தன்னாட்டில் கடல் கொண்டழிந்த நிலத்திற்கு ஈடாக வடக்கிலுள்ள ஏனைய அரசர் நாட்டினைக் கைப்பற்றித் தங்குடிகட்குப் பேருதவி செய்த பாண்டியன் எனினுமாம். நல்லிசைப் புலவராதலான் தொல்காப்பிய முதலிய நூல் புலப்படுத்திய செயலை உதவி என நன்றியறிதல் தோன்ற எடுத்தோதினார்.

இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர், நிலம் தந்த பேருதவி என்னும் தொடர்க்கு நாட்டிலிருக்கின்ற அரசர் நிலங்களையெல்லாம் கொண்ட பெரிய உதவியையும் எனப் பொருள் கூறி மலையும் காடும் அரணாக இருந்த அரசரை அழித்த வலியாலே நாட்டிலிருக்கின்ற அரசர் தத்தம் நாடுகளை விட்டாரென்றதாம் என விளக்கமும் கூறினார். மேலும் பொலந்தார் மார்பின் நெடியோன் என்பான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், என்று கூறியுள்ளார். இத் தொடரானும் உன் பகைவராகிய இரு பெரு வேந்தரும் வேளிரும் தம் யாக்கை செல்வ முதலியன கெட்டு நிலையுதலின்றி அழிந்தமை காண்க எனக் குறிப்பானே நிலையாமை கூறப்பட்டமை யுணர்க. பிறாண்டும் இங்ஙனமே கொள்க. 62- மரந்தின்னூஉ; என்பது தொடங்கி, 74-கோனாகுவை என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், அச்செழியனின் தெறற் சிறப்பும், அவன் ஆட்சிக்கண் அமைந்த நாட்டின் எல்லையும் கூறப்படும்.

செழியனின் திக்குவெற்றி

62-69 : மரந்தின்னூஉ .................... விழுச்சிறப்பின்

பொருள் : மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை - மரங்களைச் சுட்டு மலைகளை நீறாக்கும் பெருமையினையுடைய உருமேற்றை ஒப்பாய், அருங்குழு மிளைக் குண்டு கிடங்கின் - பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காட்டினையும் ஆழ்ந்த கிடங்கினையும், உயர்ந்து ஓங்கிய நிரைப்புதவின் - உயர்ந்து வளர்ந்த கோபுரங்களிடத்தே நிரல்பட்ட வாயில்களையும், நெடுமதில் நிரை ஞாயில் - நெடிய மதிலினையும் நிரல்பட்ட சூட்டினையும், அயில் அம்பு உமிழ் அருப்பம் - வேலினையும் அம்பினையும் வீசும் அரண்களையும், தண்டாது தலைச் சென்று கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் - அமைந்திராதே அவ் விடங்களிலே சென்று கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடே;

கருத்துரை : மரங்களைச் சுட்டு மலைகளை நீறாக்கும் இடியேற்றை ஒப்பாய்! பகைவர் எய்துதற்கரிய காவற் காட்டினையும், ஆழ்ந்த அகழியினையும், உயர்ந்த கோபுரவாயில்களையும், நெடிய மதிலையும், நிரல்பட்ட ஞாயில்களையும், வேல் முதலியவற்றை உமிழும் அரண்களையும் உடைய வடநாட்டரசர்பால் படிந்திராதே சென்று, அவையிற்றைக் கைக்கொண்டு போந்த தலைமையோடே என்பதாம்.

அகலவுரை : தின்னூஉ : செய்யூ என்னும் எச்சம் அளபெடுத்தது. தின்னுதற் றொழில் ஈண்டுச் சுட்டழித்தற் றொழிலின் மேனின்றது; இது பாண்டியன் தன் பகைவரை அழித்தற் றொழிற்கு உவமை என்க. மலையை நீறாக்குதல் பகைவருடைய மதில் முதலியவற்றைத் துகள்பட அழிக்குந் தொழிற்கு உவமை. இங்ஙனம் போரின்கண் உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களை விரைந்தழித்தற்கு இடியேற்றையும் அதன் இருவேறு அழித்தற் றொழிலையும் உவமையாக்கிய அருமை உணர்க. அரசர்கள் பகையழித்தற்கு மடிதல் அறமன்மையான் தண்டாது என்றார்; தண்டாது - மடிந்திராது. தலை - இடம். தலைச்சென்று என்றது, தானே வலிந்து மேற் சென்றென்றுமாம். கொண்டு-அப் பகையரசரின் அரண் நாடு முதலியவற்றைக் கைக்கொண்டென்க. உயர்ந்தோங்கிய விழுச்சிறப்பு என்றது மேலும் மேலும் உயர்ந்து வளர்ந்த மாபெருஞ் சிறப்பு என்றவாறு. அஃது உலகெலாம் பொது நீக்கித் தன்னொருகுடைக் கீழ்க் கொண்டாளும் சிறப்பு. இச் சிறப்பினைச் சாமிராச்சியம் என்பர் வடநூலோர். இதனால் செழியன் வடவரை வென்று உலகமுழுதும் கைக்கொண்டமை கூறினார். இதனைத் திக்குவிசயம் என்பர் வடவர்.

செழியன் ஆட்சிக்கண் அமைந்த நாட்டின் எல்லைகள்

70-74 : தென்குமரி ...................... கோனாகுவை

பொருள் : தென்குமரி வடபெருங்கல் குண குட கடல் எல்லை ஆ தென்றிசைக்கண் உள்ள குமரியும் வடதிசைக்கண் உள்ள பெரிய இமயமும் கீழ்த்திசையினும் மேற்றிசையினும் கிடக்கும் இருபெருங் கடல்களும் நிரலே அவ்வத்திசையின் எல்லையாக அமையும்படி, தொன்று மொழிந்து தொழில் கேட்ப - இவ்வெல்லையகத்துள்ள வேந்தரெல்லாம் தம் பழைமையைச் சொல்லி ஏவல் கேட்கும்படி, வெற்றமொடு வெறுத்தொழுகிய-வெற்றியோடே செறிந்து நடந்த, கொற்றவர் தம் கோன் ஆகுவை - அம் மன்னர்கட்கு மன்னனாக விளங்கா நின்றனை;

கருத்துரை : அங்ஙனம் திசைகளை வென்றடிப்படுத்திய தலைமையோடே தெனாது உருகெழு குமரியும், வடாது நெடுவரையும், குணாது கரைபொரு தொடுகடலும், குடாது தொன்றுமுதிர் பவுவமும் எல்லையாக அமையும்படி நாவலந்தீவு முழுவதையும் அதன் கண்ணுள்ள அரசரெல்லாம் வழிமொழிந்து ஒழுக ஒரு குடைக் கீழ்க் கொண்டாளும் மன்னர் மன்னனாகத் திகழா நின்றனை என்பதாம்.

அகலவுரை : தமிழ் நாட்டின் வடவெல்லை வேங்கடமே யாயினும் செந்தமிழ் நாட்டு மூவேந்தருள்ளே ஒவ்வொரு காலத்தே சிறந்து விளங்கிய ஒவ்வோர் அரசர் வடவிமயங்காறும் வென்றடிப் படுத்தி விளங்கிய வரலாற்றினைச் சிலப்பதிகாரம் புறநானூறு பத்துப்பாட்டு முதலிய பண்டைத் தமிழ் நூல்களான் நன்கறியலாம்.

திங்கண்மாலை வெண்குடையான் சென்னிசெங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,  (சிலப் - 7:2)

இது சோழர் வடவிமயம் வரை ஆட்சி செய்தது.

குமரியொடு வடவிமயத்து ஒரு மொழிவைத்
துலகாண்ட சேரலாதற்கு.  (சிலப் - 29: 1)

இது சேரன் அங்ஙனம் ஆண்டது.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்  (புறம் - 6)

இது பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்கண் அமைந்த எல்லை. எனவே இப்பேருலகிலுள்ள எல்லா நாடுகளினும் தமிழ்நாடு அறிவாற்றலின் உயர்ந்தோங்கித் திகழ்ந்த காலம் அஃதாமென உணரற்பாற்று. கடலாக என்னும் சொல் ஈறுகெட்டுக் கடலா என நின்றது. அதன்கண் உள்ள ஆக்கச் சொல்லை எல்லை என்பதன் பின்னாக மாறிக் குமரி முதலிய நான்கனோடும் தனித்தனி இயைத்துக் கொள்க. வெற்றம் - வெற்றி. வெறுத்தொழுகிய - செறிந்து நடந்த, கொற்றவர் - வென்றடிப்படுத்தப்பட்ட வேந்தர். தத்தம் பழைமையான தொடர்புகளையும் உறவு முறையையும் எடுத்துக்கூறிக் கேண்மை கொண்டு அரசரெல்லாம் தான் ஏவிய வழி ஒழுக என்பார்,

தொன்று மொழிந்து தொழில் கேட்ப.

என்றார். தொன்று மொழிதல், எந்தையும் நுந்தையும் இன்னவாறு தொடர்புடையர்; வழி வழி யாம் நின் நிழல் வாழ்வோம். என்றின்னோ ரன்ன கூறுதல். வெற்றியிற் சிறந்த மன்னரையும் வென்றாய் என்பார் கொற்றவர்தம் கோன் என்றார். 75- வானியைந்த என்பது தொடங்கி 88- கொற்றவ என்னுந் துணையும் ஒரு தொடர் : இதன்கண் செழியன் சிறந்த துறைமுகப்பட்டினம் ஒன்றனைக் கைக்கொண்ட வெற்றி கூறப்படும்.

நெல்லூர் கொண்டமை

75-88 : வானியைந்த ................ கொற்றவ

பொருள் : வான் இயைந்த இருமுந்நீர் பேஎம் நிலைஇய இரும்பௌவத்து - வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்று தலையுடைய பெரிதாகிய மூன்று நீர்மையையுடைய அச்சம் நிலை பெற்ற கரிய கடலிடத்தே, கொடும்புணரி விலங்கு போழ - வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு, கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடி மிசை இதை எடுத்து - கரிய காற்றாலே ஓடித்துறையைச் சேரும் பொருட்டு நெடிய கொடியை உச்சியில் உடையவாய்ப் பாய்விரிக்கப்பட்டு, இன்னிசைய முரசம் முழங்க - இனிய ஓசையை உடைய முரசம் முழங்கா நிற்ப, பொன்மலிந்த விழுப்பண்டம் நாடு ஆர - பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளார் நுகரும்படி ஏற்றிக்கொணர்ந்து, நன்கு இழிதரும் - நன்றாக இறக்குதலைச் செய்யும், ஆடு இயற் பெரு நாவாய் - அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள், மழை முற்றிய மலைபுரைய துறை முற்றிய துளங்கு இருக்கை - முகிலாற் சூழப்பட்ட மலைபோலக் கடலாற் சூழப்பட்டு அசையாநின்ற இருப்பினையும், தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ - தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும் உடைய நெல்லூரைக் கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையோனே.

கருத்துரை : விசும்பினோடே கலந்து ஒன்றுபட்டுத் தோன்றுதலை யுடைய பெரியதாய மூன்று நீர்மையை உடைய கரிய கடலிடத்தே எழுந்திரைகளைக் குறுக்கே பிளந்தோடுமாறு நெடிய கொடிய உயர்த்தப்பட்டனவாய் பாய்விரிக்கப்பட்டு இனிய முரசமுழங்கப் பொன் மிகுதற்குக் காரணமான சிறந்த பண்டங்களை ஏற்றிக் கொணர்ந்து, நன்றாக இறக்குதலைச் செய்யும் முகில் சூழ்ந்த மலைபோற் றோன்றும் பெரிய மரக்கலங்கள் நிற்கும் துறைமுகத்தோடே ஆழ்ந்த கடலாகிய அகழியினையும் உடைய நெல்லூரை வென்று கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடைய வேந்தே! என்பதாம்.

அகலவுரை : வானமும் கடலும் காண்பார் கண்கட்குக் கலந்து ஒன்றுபட்டுத் தோன்றுதலான் வானியைந்த இருமுந்நீர் என்றார்.

மூலைக் கடலினை அவ்வான வளையம்
முத்த மிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்

எனச் சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளது நினைவு கூரற்பாலது. ஆசிரியர் நச்சினார்க்கினியர் வான் என்பதனை மேகத்திற்கு ஆகுபெயரெனக் கொண்டு மேகம் படிந்த கடலென உரை விரித்தனர். முந்நீர்-மூன்று நீர்மையுடைய; அல்லது மூவகை நீரான் நிறைந்த என்க. இதற்கு விளக்கம் முன்பு கூறப்பட்டமை காண்க. (2-ஆம் வரி) பேஎம் நிலைய - அச்சந்தருந் தன்மையுடைய

பேநாம் உரும்என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள  (தொல்-உரி-76)

என்றோதுவர் தொல்காப்பியனார்.

இரும் பவுவம் - கரிய கடல். புணரி - நீர் புணர்ந்தது என்னும் பொருட்டாய்க் கடலுக்குப் பெயராகி, ஈண்டு அதன்கண் எழும் அலைக்கு ஆகுபெயராயிற்று. கொடும் புணரி என்றதன்கண் கொடுமை வளைவென்னும் பொருட்டு. எனவே, வளைந்த அலை என்றவாறு. கடிய காற்றாற் செலுத்தப் பட்டோடும் மரக்கலம் அவ்வலைகளைப் பிளந்து கொண்டோடலான் கொடும் புணரி விலங்கு போழ என்றார். விலங்கு - குறுக்கு; போழ இதை எடுத்து, என இயைத்துக் கொள்க. இதை - மரக்கலத்தில் விரிக்கப்படும் பாய். கடுங்கால்-பெருங்காற்று. காலொடு என்பதன்கண் ஒடு உருபு கருவிப் பொருட்டு. மரக்கலத்தின் மிசைக் கொடியுயர்த்துதல் மரபு. மரக்கலம் இயங்குங்கால் அதன்கண் முரசம் முழங்குதலுண் டென்பதனை,

ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன்
றீடுபடச் செய்திளையோ ரேத்தவிமிழ் முந்நீர்க்
கோடுபறை யார்ப்பக் கொழுந் தாட்பவழங் கொல்லா
ஓடுகளி றொப்பவினி தோடியதை யன்றே.  (சிந்.501)

எனவரும் சிந்தாமணிச் செய்யுளானும் அறிக.

பொன் மலிந்த விழுப்பண்டம் - என்ற தொடர்க்கு விலையாகக் கொடுக்கும் பொன்னுக்கு மிகமலிவாகக் கிடைக்கும் சிறந்த பண்டம் எனப் பொருள் கூறலும் பொருந்தும். இப்பொருட்குப் பொன்னுக்கு மலிந்த விழுப்பண்டம் என நான்கனுருபு விரித்திடுக. நாடார என்றது நாட்டிலுள்ள மக்கள் எண்மையிற் பெற்று நன்கு துய்க்குமாறு என்றவாறு. நன்கிழிதரும் என்றவிடத்தே நன்கென்றது. வேண்டியார் வேண்டியாங்கு கொள்ளும்படி நன்றாக இறக்கப்படும் என்றவாறு. நன்மை மிகுதிமேற்று. இழிதரல் - சரக்கினை இறக்குதல்.

மரக்கலங்கள் நீர்மேனிற்றலான் அசைந்த வண்ணமே நிற்பன; இதனை ஆடியற் பெருநாவாய் என்னுந் தொடராற் குறித்தார். பெருநாவாய் என்றது கப்பல் என்றவாறு. துறைமுகத்தே அலையெறியவும் கடல்சூழ நிற்கும் கப்பல்கள் முகில் சூழ்ந்த மலைகளைப் போன்றன என்க. துறை : கடலுக்கு ஆகுபெயர். துறையிடத்தே கடலும் மரக்கலங்களும் அசைந்தபடியே இருத்தலால் துளங்கிருக்கை என்றார்; துளங்குதல் - அசைதல். இருக்கை - கப்பல்கள் நிற்குமிடம். அப்பட்டினத்திற்கு ஒரு மருங்கு கடலே அகழ் அரணாம் என்பார், தெண்கடற் குண்டகழி என்றார். நெல்லூர் இடையே இன்சாரியை பெற்றது. இதனைச் சாலியூர் என்றும், இதனால், தனக்கு நடவாததோர் ஊர்கொண்டான் என்றார், என்றும் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இஃது ஆராய்ந்து காண்டற்பாலதாம். அவ்வூரினை முற்றி வென்றே கொண்டான் என்பது தோன்ற உயர்கொற்றவ என்றார். கொற்றம் - வெற்றி.

இனி, வானியைந்த இருமுந்நீர் என்பது தொடங்கி ஆடியற் பெருநாவாய் என்னுந்துணையும் போந்த ஒன்பது அடிகள் பேரலைகளைப் பிளந்து கொண்டு விரைந்தோடிவரும் வங்கங்களையும், கரைகள் தோன்றாது சூழ வானத்தோடியைந்து கொடும்புணரி வீசிமுழங்கும் மாபெருங் கடலையும், முரசம் முழங்குதலையும், அக் கப்பலின் அகத்தே அயல் நாட்டின்கண் உள்ள சீரிய சரக்குகள் நிறைந்து கிடத்தலையும், பெரிய பெரிய பாய்கள் விரிக்கப்பட்டிருத்தலையும், எத்துணை அழகாகப் புலப்படுத்துகின்றன காண்மின். இங்ஙனமே, மழைமுற்றிய என்பது தொடங்கித் துளங்கிருக்கை என்பது முடிய உள்ள இரண்டே அடிகளில் முகிழ்சூழ நின்ற மலைகள் போன்று தோன்றும் மாபெரு மரக்கலங்கள் ஆடியசைந்து நிற்கும் ஒரு சிறந்த துறைமுகம் தோன்றுதல் காண்க. 89 - நீர்த்தெவ்வும், என்பது தொடங்கி 105 - குட்டுவர்வெல்கோவே என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் விழவுநிகழும் முதூர்களிலிருந்து இரவலர்க்குச் செழியன் பரிசில் வழங்கும் சிறப்புக் கூறப்படும்.

செழியன் நாட்டின்கண்ணுள்ள ஊர்களினியல்பு

89-98 : நீர்த்தெவ்வும் ...................... வியலாங்கண்

பொருள் : நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் - நீரினைமுகந்திறைக்கின்ற நிரல்பட நின்று தொழில் செய்வோர், பாடு சிலம்பும் - இசை பாடுதலானே ஒலிக்கும் இசையும், ஏற்றத்தோடு வழங்கும் அகல் ஆம்பியில் - ஏற்றத்துடனே இயங்கும் அகன்ற பன்றிப்பத்தரின் ஓசையும், கயன் அகைய வயல் நிறைக்கும் - குளம் அற்றற்றுக் குறையுமாறு நீரைவிட்டுவிட்டு முகந்து விளைவயலை அந்நீரானே நிறைக்கின்ற, மென் தொடை வன்கிழார் - மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப் பொறியின் ஓசையும், அதரி கொள்பவர் - கடாவிடுகின்றவர் ஓசையும், பகடுபூண் தெண்மணி - எருதுகள் பூண்ட தெளிந்த மணியின் ஓசையும், இரும்புள் ஓப்பும் இசையே - பயிர்களில் விழும் பெரிய பறவைகளைக் கடிந்தோட்டும் ஓசையும், என்றும் மணிப்பூ முண்டகத்து மணல் மலிகானல் பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப - எந்த நாளும் நீலமணி போலும் பூக்களையுடையவாகிய கழிமுள்ளிகளை யுடைய மணற்குன்றுகள் மிக்க கடற்கரையிலிருக்கும் பரதவருடைய மகளிர் ஆடும் குரவைக் கூத்தின் ஓசையோடே கூடி ஆரவாரியாநிற்ப, ஒருசார் விழவு நின்ற வியலுள் ஆங்கண் - ஒரு பக்கத்தே விழாக்கொணடாடுதலாற் பிறந்த ஓசைகள் மாறாமல் நின்ற அகன்ற உள்ளிடத்தையுடைய ஊர்களிடத்தே இருந்து;

கருத்துரை : நீரினை இடாவான் முகந்து இறைக்கின்ற நிரல்பட நின்று தொழில் செய்வார் பாடுகின்ற பாட்டின் ஓசையும், ஏற்றத்தோடே இயங்கும் பன்றிப்பத்தரின் ஓசையும், குளத்தின்கண் நீர் அற்றற்றுக் குறையுமாறு நீரை முகந்து விளைவயலை நிறைக்கும் மெல்லிய கட்டுகளையுடைய பூட்டைப் பொறியான் எழும் ஓசையும், கடாவிடுவோர் ஓசையும் எருதுகள் பூண்ட மணியோசையும், புள்ளோப்பும் ஓசையும், நாடோறும் மணிபோலும் பூக்களையுடைய கழிமுள்ளிகள் நிறைந்த மணற் குன்றுகள் மிக்க கடற்கரையில் வாழும் நெய்தனில மகளிர் ஆடும் குரவைக்கூத்தின் ஓசையோடே கூடி ஆரவாரியாநிற்ப, ஒரு பக்கத்தே திருவிழாக் கொண்டாடுதலான் எழுந்த ஓசைகள் மாறாமனின்ற அகன்ற ஊர்களிடத்தே வீற்றிருந்து என்பதாம்.

அகலவுரை : தெவ்வுதல் - முகந்திறைத்தல். தொழுவர் - தொழிலாளர், நீரிறைப்போர் வரிசை யாகநின்றிறைத்தலான் நிரைத் தொழுவர் என்றார். பாடு சிலம்பும் இசை பாடுதலானே ஒலிக்கும் இன்னோசை என்க. ஏற்ற மரத்தோடே இணைக்கப் பட்டியங்கும் பன்றிப் பத்தர் என்பார், ஏற்றத்தோடு வழங்கும் ஆம்பி என்றார். ஆம்பி - பன்றிப் பத்தர் என்னும் ஒருவகை நீரிறை கருவி.

ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏத்தமும்  (சிலப்-10: 110)

என்றார் இளங்கோவடிகளும். இவ்வடிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார் மதுரைக் காஞ்சியின் இவ்வடிகளையே உரையில் எடுத்துக்காட்டியுள்ளார். கயன்- குளம். அகைய - அற்றற்று நீர்வடிய. என்னை, தொல்காப்பியத்தினும் அறுத்தறுத்துப் பயிலும் ஓசையினையுடைய செய்யுளை அகைப்பு வண்ணம் என்றோதுபவாகலின். பூட்டைப் பொறி இடையிடையே விட்டு விட்டு நீர்முகத்தலான் கயம் அற்றற்று வடியலாயிற்று என்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இப்பொருள் காணாது அகைய என்பதனை வயல் என்பதன் பின்னாகக் கூட்டி வயல் தழைக்கும்படி என்று பொருள் கூறினர்.

மென்றொடை வன்கிழார் என்ற அடிக்கண் முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. அதரி கொள்ளுதல் - கடாவிடுதல்,

கோட்மாப் பூட்டி வாட்கோ லாக
ஆளழி வாங்கி அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம்  (சிலப்-26: 232-4)

என்றார் பிறரும். பகடு - எருது. தெண்மணி - தெளிந்த ஓசையையுடைய மணி. இரும்புள் - பெரிய பறவை. கழிமுள்ளிப் பூவிற்கு நீலமணி, நிறவுவமை. முண்டகம் - கழிமுள்ளி. குரவை - ஒருவகைக் கூத்து; குரவையாவது எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் கூத்து என்றும், வரிக்கூத்தின் ஒருறுப்பென்றும், விநோதக் கூத்து ஆறனுள் ஒன்று என்றும் கூறுப. இதனை,

ஆங்கு,
தொழுவிடை யேறுகுறித்து வளர்த்தார்
எழுவர் இளங்கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்றுபடு முறையானிறுத்தி
இடைமுது மகளிர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைவிளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே  (சிலப். 17 : 12)

எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.

நெடுஞ்செழியனின் கொடைச்சிறப்பு

99-105 : முழவுத்தோள் ............... கோவே

பொருள் : முழவுத்தோள் முரண் பொருநர்க்கு - முழவு போலும் தோளினையுடைய கல்வியானே மாறுபடுதலையுடைய தடாரிப் பொருநர்க்கு, உருகெழு பெருஞ் சிறப்பின் இரு பெயர்ப் பேராயமொடு - அச்சம் பொருந்திய பெரிய தலைமையை உடைய கன்றும் பிடியும் என்னும் இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடனே, இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் - விளங்குகின்ற கொம்பினையுடைய களிற்றியானைகளைக் கொடுத்தும், பொலந்தாமரைப் பூச் சூட்டியும் - பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டியும், நலம் சான்ற கலம் சிதறும் - நன்மையமைந்த பேரணிகலன்களை எல்லார்க்கும் கொடுக்கும், பல் குட்டுவர் வெல்கோவே - பலவாகிய குட்ட நாட்டுள்ளாரை வென்ற வேந்தனே!

கருத்துரை : மத்தளம் போன்ற தோளினை உடையராய்க் கல்வியான் மாறுபட்ட தடாரிப் பொருநர்க்கு அச்சந்தரும் பெரிய தலைமையினையுடைய கன்றும் பிடியுமாகிய இரு பெயரையுடைய திரளோடே விளங்கும் மருப்பினையுடைய களிற்றியானைகளைக் கொடுத்தும், பொற்றாமரைக் பூவினைச் சூட்டியும் நன்மை யமைந்த அணிகலன்களை எல்லார்க்கும் மிக்கு வழங்குபவனும், குட்ட நாட்டினரை வென்றவனுமாகிய வேந்தனே! என்பதாம்.

அகலவுரை : பொருநர், தடாரி முதலிய இசைக் கருவிகளை முழக்கிப் பாடுவோர் இவர் ஏர்க்களம் பாடுநரும், போர்க்களம் பாடுநரும், பரணி பாடுநரும் எனப் பலராவர். அவருள் ஈண்டுக் கூறப்பட்ட பொருநர் வைகறைப் போதின்கண் தடாரி கொட்டிப் பாடும் பொருநர் என்க. இதனை,

கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி
இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின்  (பொருந. 70-3)

என்னும் பொருநராற்றுப் படையானும் உணர்க. உரு - அச்சம். உருஉட் காகும் புரைவுயர் வாகும் (தொல். உரி-4) என்பர் தொல்காப்பியனார். இரு பெயர் - கன்றும் பிடியும் என வழங்கும் இரண்டு பெயர். உருகெழு பெருஞ்சிறப்பின் என்ற அடைமொழிகளான் ஆயம் என்றது யானைத்திரள் எனப்பட்டது. இதற்கு ஆடும் மாடுமாகிய திரள் எனக் கூறுவாருமுளர் என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.

பொலம் தாமரைப்பூ - பொன்னாற் செய்த தாமரைப்பூ. பொருநர் முதலியோர்க்குப் பொற்றாமரை மலர் வழங்கும் வழக்கமுண்மையை,

மறம்பாடிய பாடினியும்மே
யேருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய இழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே
எனவாங்கு,
ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே  (புறம் - 11)

என்றும்,

எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி  (பொருந. 159-60)

என்றும் பிறர் கூறுமாற்றானும் அறிக.

நலம் சான்ற கலம் என்றது உயரிய மணியானும், பொன்னானும் இயற்றப்பட்ட பேரணிகலன் என்றவாறு. சிதறுதல் - மிக்கு வழங்குதலைக் குறிக்கும். பல் குட்டுவர் - பலராகிய குட்டுவர் என்றது பல்குட்டுவர் எனத் தொக்கு நின்றது, பல் சான்றீர் என்புழிப் போன்று. வியலாங்கண் பொருநர்க்கு ஆயமொடு களிறு கொடுத்தும், சூட்டியும், சிதறும் கோவே! குட்டுவரை வென்ற கோவே எனத் தனித்தனி இயைத்துக் கொள்க. 106 - கல்காயும் என்பது தொடங்கி, 130 -புகழ்வேந்தே என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண்: தலையாலங்கானத்துச் செருவென்ற செய்தி கூறப்படும்.

முதுவெள்ளிலை என்னும் குறுநிலமன்னர் இருக்கை

106-119 : கல்காயும் ...................... முதுவெள்ளிலை

பொருள் : கல்காயும் கடு வேனிலொடு - மலைகள் காய்தற்குக் காரணமான கடிய முதுவேனிலாலே, இரு வானம் பெயல் ஒளிப்பினும் - பெரிய மேகம் மழையைத் தன்னிடத்தே மறைத்துக் கொள்ளினும், வரும் வைகல் மீன் பிறழினும் - மாறிவரும் இயல்புடைய நாளிலே வெள்ளி தென்றிசையிலே எழினும், வெள்ளம் மாறாது விளையுள் பெருக - யாறுகள் வெள்ளம் மாறாதே வந்து விளைதல் பெருகுகையாலே, நெல்லின் ஓதை அரிநர் கம்பலை புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே - வயலில் முற்றிய நெற்கதிர் காற்றான் அசைக்கப்படுதலின் எழுகின்ற ஓசையும் அதனை அறுப்பாருடைய ஓசையும் பறவைகள் கத்துகையாலே எழுந்த ஓசையும், என்றும் - நாள்தோறும், சலம் புகன்று சுறவுக் கலித்த புலவு நீர் வியன்பௌவத்து - தம்முள் மாறுபாட்டை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற புலால் நாற்றத்தையுடையதாகிய நீரையுடைய அகற்சியையுடைய கடலிடத்தே எழுந்து, நிலவுக் கானல் முழவுத் தாழைக் குளிர்ப் பொதும்பர் நளித்தூவல் - நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழாப் போலும் காயையுடைய தாழையை வேலியாகவுடைய குளிர்ந்த இளமரக் காவின்கண்ணே வந்து செறிதலையுடைய துவலையின் ஓசையும், நிரை திமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை - நிரைத்த மீன் படகாலே வேட்டையாடுவார் வந்து கரையைச் சேரும் ஆரவாரமும், இருங்கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு - பெரிய கழியிடத்தே உப்புப் பாத்தியில் வெள்ளிய உப்பை விற்கும் அளவர் ஒலியொடே, ஒலியோவாக் கலியாணர் - முழங்குதல் ஒழியாத முழக்கத்தோடே புதுறவருவாயினையுடைய, முதுவெள்ளிலை - முதுவெள்ளிலை என்னும் ஊரின்கண் வாழும்;

கருத்துரை : மலைகளையும் வெதுப்பும் கடிய முதுவேனிற் பருவத் தானே மழை வறந்தபோதும், வெள்ளி விண்மீன் தென்றிசைக்கண் எழுந்தாலும் அவற்றாலும் நீர் வறத்தலின்றி யாறுகளிலே நீர்ப்பெருக்கு எழுந்து வந்து பாய்தலானே நன்கு செழித்தோங்கிய நெற்கதிர்கள் காற்றசைத்தலான் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்பிய ஓசையும், அவையிற்றை அறுப்பார்தம் ஆரவாரமும் பறவைகள் கத்துதலானே தோன்றும் இசையும், கடலெறிந்த நீர்த் திவலைகள் மணற் குன்றுகளையுடைய கரையிடத்தே தாழை வேலியையுடைய இளமரக்காவின் கண் வந்து செறிதலால் எழுந்த ஓசையும், நிரல் படத் திமில் இயக்கிக் கரை சேரும் மீன் பிடிப்போர் ஆரவாரமும், உப்பு விளையும் அளத்தின்கண் உப்பு விற்போரின் ஓசையும் ஆகிய இன்னோரன்ன ஆரவாரம் அறாத புது வருவாயினையுடைய முது வெள்ளிலை என்னும் ஊரில் வாழ்கின்ற, (பெருந்தொழுவர் என - 122 - ஆம் அடிக்கட் சென்று முடியும்) என்பதாம்.

அகலவுரை : கல்காயும் கடுவேனில் என்றது - மலைகளும் வெப்பத்தானே உருகுதற்குக் காரணமான கொடிய முதுவேனிற் காலம் என்றவாறு. ஒன்பது கோள்களுள் ஒன்றாகிய வெள்ளிக்கோள் தென்றிசையில் எழுதல் மழைமறுத்து வற்கடம் உண்டாதற்கு அறிகுறி என்ப; இதனை,

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
.....              ......          ......              ......
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை  (சிலப். 10 : 102 - 108)

எனவரும் சிலப்பதிகாரத்தானும்,

வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம் வாடிய பயனில் காலை  (புறம் - 388)

என்றும்,

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே  (புறம்-117)

என்றும் வரும் புறப் பாட்டுக்களானும்,

வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப  (பதிற் - 24)

என்னும் பதிற்றுப் பத்தானும்,

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி  (பட்டினப். 1-6)

எனவரும் பட்டினப்பாலையானும் அறிக.

முதுவேனிற் பருவமாதல் வெள்ளிமீன் பிறழ்தலாதல் இரண்டில் ஒன்றே யாற்றின்கண் நீர் வறத்தற்கு அமைவதாக இரண்டும் நிகழ்ந்துழியும் அந்நாட்டின் யாறுகள் நீர்ப் பெருக்கெடுத்தோடும் எனச் சிறப்பித்தலின் உம்மைகள் சிறப்பின்கண் வந்தன. இது கோள்நிலை திரிந்தவிடத்தும் கோனிலை திரியானாதலின் மழைபெய்து வெள்ளம் மாறாது வந்ததென நெடுஞ்செழியனின் செங்கோன்மையைச் சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நிற்றல் காண்க. வரும் வைகல் என்றது, மாறி மாறி வரும் இயல்புடைய வைகல் என்றவாறு.

வைகலும் வைகல் வரக்கண்டும்  (நாலடி - 39)

என்றார் பிறரும். இதனை மீனுக்கேற்றித் தான் தோன்றுதற்குரிய நாளிலே தோன்றும் வெள்ளி என்றார், ஆசிரியர் நச்சினார்க்கினியர். விளையுள் - விளைவு. உள் : தொழிற்பெயர் விகுதி; செய்யுள் என்புழிப்போல. அரிநர் - நெல் அறுப்போர். கம்பலை - ஒலி. சலம் -மாறுபாடு. சுறவு - சுறாமீன். கலித்தல்-செருக்கித் திரிதல். நிலவுக் கானல் என்றது. நிலாப்போன்ற மணற் பரப்பையுடைய கடற்கரை என்றவாறு.

நில வடைந்த இருள்போல
வலையுணங்கு மணன்முன்றில்  (பட்டின - 82-3)

என்றும்,

நிலவுக் குவித்தன்ன மோட்டுமணல்
அடைகரை (நற்.159: 4)

நிலவுத்தவழ் மணற்கோடு  (நற். 169 : 5)

என்றும்,

நிலாவி னிலங்கு மணன்மலி மறுகில்  (அகம். 200 : 1)

என்றும் சான்றோர் பிறரும் கூறுதல் காண்க. குளிர்ப் பொதும்பர் - குளிர்ந்த இளமரக்கா. நளித்தூவல் - செறிந்த நீர்த்துளி. நிரல் நிரலாக வருதலின், நிரைத்திமில் என்றார். திமில் - படகு. திமில் வேட்டுவர் என்றது நெய்தனிலத்துப் பரதவரை. இருங்கழிச் செறு - பெரிய கழியிடத்துள்ள உப்பு விளைகின்ற பாத்தி. ஒலியோவா - முழக்கமறாத. யாணர் - புது வருவாய். புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்.உரி : 81) என்பர் தொல்காப்பியனார். முதுவெள்ளிலை - ஒரு கடற்கரைப் பட்டினம். இதனைக் குறுநில மன்னர் இருப் பென்பர் நச்சினார்க்கினியர். இதனைத் தனியாக முடித்து ஊரும் நானிலவரும் எனவும் இயைப்பர்.

119-124 : மீக்கூறும் ....................... தொழில்கேட்ப

பொருள் : மீக்கூறும் வியன்மேவல் விழுச் செல்வத்து இரு வகையான் இசை சான்ற-சான்றோராற் புகழப்படுகின்ற அகலம் பொருந்திய சீரிய செல்வமாகிய உழவு வாணிகமென்னும் இரண்டு கூற்றானும் புகழ் நிறைந்த சிறிய குடிமக்களும் பெரிய வணிகரும், குடிகெழீ இய நானிலவரொடு - குடிகள் மிக்கு நான்கு நிலங்களினும் வாழ்வாரோடே, தொன்று மொழிந்து தொழில் கேட்ப - பழைமைகூறி நின்று ஏவலைக் கேட்கும்படி;

கருத்துரை : சான்றோராற் புகழப்படுகின்ற விரிவுடைய சிறந்த செல்வமாகிய உழவு வாணிகம் என்னும் இரண்டு கூற்றானும் புகழ் நிறைந்த உழவரும், வாணிகரும், ஏனைய நால்வகை நிலங்களினும் வாழ்கின்ற மக்களோடே தம் பழைமை கூறி நின்று ஏவல் கேட்குமாறு என்பதாம்.

அகலவுரை : முதுவெள்ளிலை என்னும் ஊரின்கண் வாழ்வோர் நானிலத்தும் வாழ்வாரோடே ஏவல் கேட்குமாறென்றியைத்துக் கொள்க. உழவுத்தொழிலும் வாணிகமும் சான்றோராற் புகழப்படுதலை,

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை  (குறள் - 1031)

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து  (குறள் - 1032)

என்றும்,

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்  (குறள் - 120)

என்றும்,

புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர்  (பட்டின : 203-204)

என்றும்,

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉமிகை கொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கை  (பட்டின.209-12)

என்றும், சான்றோர் பிறரும் கூறுமாற்றான் அறிக. சிறுகுடி என்றது உழவரையும், பெருந்தொழுவர் என்றது வணிகரையும் குறித்தன. நானிலவர் என்றது இந் நெய்தலொழிந்த ஏனைய நானிலத்தும் வாழ்வோரை.

நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போர்

125-130 : காலென்ன ...................... வேந்தே

பொருள் : கால் என்னக் கடிது உராஅய் - காற்றென்னும்படட விரைந்து சென்று, நாடுகெட எரிபரப்பி - பகைவர் நாடுகெடும்படி நெருப்பைப் பரப்பி, ஆலங்கானத்து அஞ்சுவர விறுத்து - தலையாலங்கானம் என்கிற ஊரின்கண்ணே பகைவர்க்கு அச்சந் தோன்றும்படி வதிந்து, அரசுபட அமர் உழக்கி - முடிமன்னர் இருவரும் குறுநில மன்னர் ஐவரும் படும்படி போர்செய்து, முரசு கொண்டு களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே - அவர் முரசைக் கைக்கொண்டு களவேள்வி வேட்ட கொல்லுகின்ற ஆற்றன்மிக்க புகழையுடைய வேந்தனே!

கருத்துரை : காற்று விரைந்து செல்லுமாறு போலே விரைந்து சென்று, பகைவர் நாடு கெடும்படி நெருப்பைப் பரப்பித் தலையாலங்கானத்துப் படைவிட்டிருந்து, ஏழு மன்னர் படும்படி கொன்று, ஏனைப் பகைவர்க்கு அச்சந் தோற்றுவித்து அவர் முரசத்தைக் கைக்கொண்டு மறக்கள வேள்வி வேட்ட பேராற்றல் வாய்ந்த புகழ்மிக்க வேந்தனே! என்பதாம்.

அகலவுரை : சிறுகுடிப் பெருந்தொழுவர் தொழில் கேட்பக் கடிதுராஅய்ப் பரப்பி இறுத்து உழக்கிக்கொண்டு வேட்ட வேந்தே என வினை முடிவு செய்க. முன்னர்,

இருபெரு வேந்தரொடு வேளிர் சாய  (55)

எனக் கூறிப் போந்தமையான் ஈண்டு வாளா அரசுபட அமருழக்கி என்றொழிந்தார். அவ்வரசர் சேரன் செம்பியன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் எழுவர் ஆவர். இதனை,

இருபெரு வேந்தரொடு வேளிர் சாய  (55)

என்னும் அடிக்குக் காட்டிய எடுத்துக் காட்டான் அறிக. காற்றென்னக் கடிதுராய் என்றது வஞ்சித்திணைக்கண் இயங்குபடை யரவம் என்னும் துறை கூறியவாறு. என்னை? இயங்குகின்ற படையெழுச்சியின் ஆரவாரம் கூறுதலே இயங்குபடை அரவம் என்னுந் துறையாமாகலின். பெருங்காற்று வீசுங்கால் பேராரவாரம் உண்டாதல் போலச் செழியன் படை பேராரவாரத்தோடே சென்றதென்பார் காற்றென்னக் கடிதுராஅய் என உவமை எடுத்தோதினாராகலான் : நாடுகெட எரிபரப்பி என்றது அத்திணைக்கண் எரிபரந்தெடுத்தல் என்னுந் துறை (தொல்-புறத் : 8) பண்டைநாளில் போர்மேற் செல்லும் மன்னர்கள் பகைவர் நாட்டில் தீக் கொளுவிப் பாழ்படுத்தும் வழக்க முண்மையைத் தொல்காப்பியர் வகுத்தோதிய இத்துறையானும்,

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமறம் விறகாகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்படவிட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பில் தானை  (புறம் - 16)

என்றும்,

எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்  (புறம் - 7)

என்றும்

ஊரெரி கவர உருத்தெழுந் துரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப  (பதிற். 71:9-90)

என்றும்,

அயிலன்ன கண்புதைத்து அஞ்சி அலறி
மயிலன்னார் மன்றம் படரக் - குயிலகவ
வாடிரிய வண்டிமிரும் செம்ம லடையார்நாட்
டோடெரியுள் வைகின ஊர்  (புறப்-வெண்-49)

என்றும் வரும் சான்றுகளானும் அறிக. இந்நூலாசிரியரே,

இழிபறியாப் பெருந்தண்பணை
குரூஉக்கொடிய எரிமேய
நாடெனும்பேர் காடாக  (மதுரை - 154,6)

எனப் பிறாண்டும் ஓதுவர்.

இனி, முரசு கொண் டென்றது பகைவர்தம் வீரமுரசைக் கைக்கொண்டு என்றவாறு. இங்ஙனம் முரசினைக் கைப்பற்றுதலைத் தம் வெற்றிக்கு அறிகுறியாக மன்னர் கருதினர் என்பதனை இம் மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியனே,

உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயின்  (புறம் - 72)

எனக்கூறிய வஞ்சினக் காஞ்சியானும் உணர்க.

இனி, இங்ஙனம் வஞ்சினம் கூறியவாறே தலையாலங்கானத்து இருபெரு வேந்தரொடு வேளிர்சாய அமருழக்கி முரசமொடு ஒருங்ககப்படுத்துச் சூண் முற்றிய செழியன் வெற்றியையே ஈண்டு மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப்புலவர் பாடிப் பரவுகின்றனர் என்க. அவ் வஞ்சினத்தே,
                                                 பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியன்எம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாகுக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை  (புறம் : 72)

என்று அம் மன்னர் பெருமான் ஓதியவாறே இயற்றிச் சூண்மொழியையும் நிறைவேற்றினான். எனவே, நல்லிசைப்புலவர் தலைவராகிய மாங்குடி மருதனார் அம் மன்னன் வஞ்சினத்தே கண்டவாறு அவனது நிலவரையைப் பாடுதல் தம் கடமையாகக் கொண்டு பாடியது இம் மதுரைக் காஞ்சி என்க. களம் வேட்ட என்றது மறக்கள வேள்வி செய்த என்றவாறு. களம்வேட்டல் என்பது வாகைத்திணைக்கண் ஒரு துறையாம்.

அடுதிறல் அணங்கார
விடுதிறலான் களம் வேட்டன்று  (பு-வெ: 160)

என, இதற்குப் புறப்பொருள் வெண்பாமாலை யாசிரியர் இலக்கணம் வகுத்தனர். தொல்காப்பியத்துள் வாகைத்திணைக்குத் துறை கூறும் சூத்திரத்தில்,

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகைப் பட்ட அரசர் பக்கமும்

என வருவனவற்றில் இக் களவேள்வியை ஐவகைப்பட்ட அரசர் பக்கமும் என்றதன்கண் அடக்கக்கூடும். ஆனால் ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கு மநுதர்மத்தை ஆதாரமாகக் கொண்டு வேறு உரை கூறியுள்ளார். இனி இம் மறக்கள வேள்வியை,

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய  (புறம்-26)

என்றும்,

புலவுக் களம் பொலிய வேட்டோய்  (புறம் - 372)

என்றும்,

அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை  (சிலப்-நடுகல்: 131-2)

என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. 131 - அடுதிறல் என்பது தொடங்கி 138-பொருந என்னும் துணையும் ஒரு தொடர். இதன்கண் செழியனின் அளியுடைமையும், தெறற்சிறப்பும், கொற்கைத் தலைமையும் கூறப்படும்.

கொற்கைப் பட்டினம்

131-138 : நட்டவர் ...................... நசைப்பொருந

பொருள் : நட்டவர் குடி உயர்க்குவை - நின்னுடனே நட்புக் கொண்டவருடைய குடியை உயர்த்தலைச் செய்வை, செற்றவர் அரசு பெயர்க்குவை - நீ செறப்பட்டவர் அரசுரிமையை வாங்கிக் கோடலைச் செய்வை, பேருலகத்து மேஎந்தோன்றிச் சீருடைய விழுச்சிறப்பின் - பெரிய நன்மக்களிடத்தே மேலாய்த் தோன்றுகையாலே புகழையுடைய விழுமிய தலைமையினையும், விளைந்து முதிர்ந்த விழுமுத்தின் - சூல் ஏற்றி ஒளி முதிர்ந்த சீரிய முத்தினையும், இலங்கு வளை இருஞ்சேரி - விளங்குகின்ற சங்கினையுமுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும், கள் கொண்டி குடிப்பாக்கத்து - கள்ளாகிய உணவினையுடைய இழிந்த குடிகளை யுடைய சீறூர்களையுமுடைய, நற்கொற்கையோர் நசைப் பொருந - நன்றாகிய கொற்கை யென்னும் ஊரிலுள்ளோர் விரும்பா நின்ற வீரவேந்தே!

கருத்துரை : நின் நண்பருடைய குடியைப் பெரிதும் உயர்த்துவாய்; நின் சினத்திற்கு ஆளாகியோருடைய அரசுரிமையை மாற்றுவாய்; சான்றோர்களாற் புகழப்படும் சிறந்த தலைமையினையும், நன்கு முற்றி ஒளிரும் சீரிய முத்தினையும், சங்குகளையுடைய சங்குகுளிப்பார் இருக்கையினையும், கள்ளுண்போர் உறையும் சிறிய ஊர்களையும் உடைய நன்மை மிக்க கொற்கை நகரத்தில் வாழ்வோர் பெரிதும் விரும்பும் வீர மன்னனே! என்பதாம்.

அகலவுரை : பாண்டிநாட்டின் சிறந்த பொருளாக எண்ணப்படுவது முத்தாகும். அம் முத்து கொற்கைப்பட்டினத்தை அடுத்த கடலிற் குளிக்கப்படுதலான், கொற்கை முத்தென்ப. கொற்கை பாண்டிய மன்னர்களின் சிறந்த நகரங்களுள் ஒன்றாகலின் அத் தலைமையினை விதந்தெடுத்தோதினார்.

நட்டவர் குடியுயர்க்குவை என்றது, செழியனின் அளிச்சிறப்போதிற்று. செற்றவர் அரசு பெயர்க்குவை என்பது அவன் தெறற் சிறப்போதியவாறு.

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட,
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப  (பெரும்பாண். 423-4)

என்றும்,

இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழ்நர்க்
கரசுமுழுது கொடுப்பினும் அமையா நோக்கமொடு
.............. வீயாது சுரக்கும் அவன் நாண்மகிழ் இருக்கையும்  (மலைபடு. 73-9)

என்றும்,

செற்றோரை வழிதபுத்தனன்,
நட்டோரை உயர்புகூறினன்  (புறம் - 239)

என்றும், பிறரும் கூறுதல் காண்க. இனி, பேருலகத்து மேஎந் தோன்றிச் சீர் உடைய விழுச்சிறப்பின் விளைந்து முதிர்ந்த விழுமுத்தென முத்துக்கே அடையாக்கினும் அமையும். என்னை?

பல்லரண் கடந்த பசும்பூண் பாண்டியன்
மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்றுறை
ஊதை யீட்டிய உயர்மண லடைகரை
ஓத வெண்டிரை உதைத்த முத்தம்  (தொல்.களவு. 11. ந. உரை மேற்கோள்)

என்றும்,

பொறையன் செழியன் பூந்தார் வளவன்
கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
பாவை முத்தம் ஆயிதழ்க் குவளை  (யா.வி. 95.மேற்)

என்றும் உலகத்தே பலவிடத்தும் தோன்றும் முத்தினும் காட்டில் சான்றோர் விதந்தெடுத்துப் புகழும் முத்து கொற்கை முத்தாகலின் என்க. வளை யிருஞ் சேரி என்றது சங்கறுப்போர் குடியிருப்பினை. கொண்டி-கொள்ளப்படுதல் என்னும் பொருட்டாய் உணவிற்காயிற்று; கொள்ளையுமாம். பாக்கம்-பக்கத்தே உள்ள சிறிய ஊர். நசைப் பொருந என்றது குடிகளால் விரும்பப்படும் செங்கோன்மையையுடைய வீரனே எனச் செழியன் செங்கோன்மையைச் சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நின்றது.

குறுநில மன்னரை வென்று தனக்குப் படையாக அடிப்படுத்தினமை.

139-144 : செற்றதெவ்வர் .............. போரேறே

பொருள் : செற்ற தெவ்வர் கலங்கத் தலைச் சென்று - தம்மால் செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடத்தே சென்று, அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின் - அவர்க்கு அச்சந் தோன்றத் தங்கும் வருத்தத்தையுடையதாகிய வலியினையும், கோழ் ஊன் குறைக் கொழு வல்சி - கொழுத்த இறைச்சியுடைய கொழுத்திருக்கின்ற சோற்றினையும், புலவு வில் பொலிகூவை- புலானாற்றத்தையுடைய வில்லையும் பொலிவுடைய கூவைக் கிழங்கையும் ஒன்றுமொழி ஒலியிருப்பில் - வஞ்சினங் கூறுதலையும் ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையும் உடையராகிய, தென் பரதவர் போரேறே - தென்றிசைக்கண் வாழும் பரதவரைப் போர்செய்தடக்குதலில் அரிமாப் போன்றவனே!

கருத்துரை : தம்மால் செறப்பட்ட பகைவர் மனங்கலங்கும்படி அவர்பாற் சென்று தங்கும் வருத்தமிக்க வலியினையுடையாரும், கொழுவிய இறைச்சியுடைய கொழுப்புடைய சோற்றினை உண்பாரும், புலால் கமழும் விற்படை யுடையாரும், கூவைக்கிழங் குண்பாரும், அடிக்கவி சூளுறவு மொழிவாரும், ஆரவாரத்தையுடைய சேரிகளையுடையாரும், தென்றிசைக்கட் குறுநில மன்னரும் ஆகிய பரதவர் என்ற யானைகளை அச்சுறுத்தி அடிப்படுத்துதலில் அரிமாப் போன்றவனே! என்பதாம்.

அகலவுரை : தமக்கு அஞ்சும் பகைவர் பாற்சென்று தங்கி அவரை மேலும் அச்சுறுத்தும் தீமையோர் என்பார், செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று என்றார், அங்ஙனம் அறநெறிப்படாத வலியுடையார் என்பார், அணங்குடைத் துப் பென்றார்; அணங்கு - வருத்தம். துப்பு - வலி. கொழுத்த இறைச்சி கலந்தமையாற் கொழுப்புண்டாக்கும் சோறு என்பார், கோழ் ஊன் குறைக் கொழுவல்சி என்றார். கோழ்-கொழுப்பு. ஊன்குறை -இறைச்சித் துண்டு. கொழுவல்சி என்றுது, கொழுப்புண்டாக்கும் சோறு. தொடுத்த அம்பினையே மீண்டும் தொடுத்தலால் வில் புலவு நாறும் வில்லாயிற்று. கூவை - ஒருவகைக் கிழங்கு. கூவை - திரளுமாம். இடையறாது வஞ்சினங் கூறுதல் அவர் இயற்கை என்பார், ஒன்று மொழி பரதவர் என்றார். ஒன்றைச் செய்யேனாயின் இன்னன் ஆகுவல் என்னும் பொருள்படக் கூறலின், வஞ்சினம் ஒன்று மொழிதலாயிற்று. ஒன்று மொழிக் கோசர் (குறுந்-73:4) என்றார் பிறரும். தென்பரதவர் என்பார் தென்னாட்டின்கண் இருந்து குறும்பு செய்துவந்த குறுநில மன்னர்களாகிய பரதவர் என்றும், இவர்களைச் சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் வென்று அடிப்படுத்தினர் என்றும் கூறுப; இதனைத் தென்பரதவர் மிடல் சாய வடவடுகர் வாளோட்டிய (378) என்று தொடங்கும் புறப்பாட்டானும் அறிக. செழியனை ஏறென்றமையான் தென்பரதவர் என்ற யானைகளை என்பதும் கொள்க.

போர்த்தொழிலில் நெடுஞ்செழியன் கொண்டுள்ள ஊக்கம்

145-151 : அரியவெல்லாம் ...................... குருசில்

பொருள் : அரிய எல்லாம் எளிதினிற் கொண்டு - பிறர்க்கு அரிய நுகர்பொருள்கள் எல்லாம் எளிதாக நின்னூரிடத்தே யிருந்து மனத்தாற் கைக்கொண்டு, உரிய வெல்லாம் ஓம்பாது வீசி - அங்ஙனம் கைக்கொண்டமையான் நினக்கு உரியவாகிய பொருள்களை எல்லாம் நினக்கென்று பாதுகாவாது ஊரிடத்தேயிருந்து பிறர்க்கு நல்கி, நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து - மிக விரும்பி ஊரின்கண்ணே உறையக் கடவேம் என்று கருதாதே பகைவர் மேற் சேறலை மேற்கொண்டு போதலை ஒருப்பட்டு, பனிவார் சிமையக் கானம் போகி - பனி ஒழுகா நின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து, அகம் நாடு புக்கு அவர் அருப்பம் வெளவி - அவர் உள்நாடுகளிலே புகுந்து அப்பகைவருடைய அரண்களைக் கைக்கொண்டு அதனானும் அமையாமல், யாண்டுபல கழிய வேண்டுபுலத்து இறுத்து - பலயாண்டுகளும் கழியுமாறு நீ அழித்த நாடுகளில் கொள்ளவேண்டும் நிலங்களிலே தங்கி, மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில் - அந்நிலங்கள் பண்டையின் மேலாதற்கு அடிப்பட விருந்த வெல்லும் போரினையுடைய தலைவனே.

கருத்துரை : ஏனையோர் நுகர்தற்கரிய அரும்பொருளை எல்லாம் எண்மையாக நின்னூரிடத்தே இருந்து நெஞ்சாலே கைக்கொண்டு, அங்ஙனம் கைக்கொண்டமையான் நினக்கு உரிமையுடையவாகிய அப்பொருளைத் தனக்கெனப் பாதுகாவாது பிறர்க்கு வழங்கி, ஊரின் கண் இருந்து இன்பம் நுகர்வேம் என விரும்பாது பகைமேற் சேறலை மேற்கொண்டு போய், பனிமிக்க மலையுடைய காடுகளையும் கடந்து பகைவர் நாட்டின் உள்ளே புகுந்து அவர் அரண்களைக் கைக்கொண்டு அவ்வளவின் அமையாது அந்நாடுகளில் நீ வேண்டிய நாடுகள் பண்டையினும் மேம்படவேண்டிப் பலயாண்டுகள் கழிய இருந்து வெல்லும் போரினையுடைய தலைவனே! என்பதாம்.

அகலவுரை : அரிய எல்லாம் எளிதினிற் கொண்டு என்றது பகைவர் நாட்டின்கண் உள்ள பிறர்க்கரிய பொருளை எல்லாம் அவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னரே கொண்டான் போன்று மனத்தாற் கருதி என்றவாறு. அங்ஙனம் கருதுமாற்றான் தனக்குரியவாய அப்பொருளைத் தனக்கு வேண்டும் எனப் பாதுகாவாது வேண்டியோர்க்குக் கொடுத்தான் என்பார், உரிய எல்லாம் ஓம்பாது வீசி என்றார். இங்ஙனம் கொள்ளு முன்னரே தனதாகக் கருதுதற்குக் காரணம் ஐயமற்ற மறப்பெருமையே ஆகலின், இதனைக் கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம் என்னுமொரு துறையாக உழிஞைத் திணைக்கண் ஓதினர் ஆசிரியர் தொல்காப்பியனார். இத்துறைக்கு எடுத்துக் காட்டு கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டின்கண்  (203)

                           ஒன்னார்
ஆரெயில் அவர்கட் டாகவும் நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்

என்பது. இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்ததும் அத்துறை யென்ப. இதனால் அரியவெல்லாம் எளிதினிற் கொண்டு உரிய வெல்லாம் ஓம்பாது வீசி என்பன கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் என்னும் போர்த்துறையாதலறிக. நனி புகன்று - மிகவும் விரும்பி. உறைதும் என்னாது என்றது, ஊரின்கண் இருந்து இன்பம் நுகர்வேம் என்று கருதாமல் என்றவாறு என்னை?

குடிஎன்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்  (குறள் - 601)

என்றற் றொடக்கத்துத் குறள்களான் சிறப்பாக மன்னர் மடிந்திருத்தல் ஆகாதென வள்ளுவனார் வகுத்தமையான், ஈண்டுச் செழியனின் மடியின்மை கூறுவார் மாங்குடி மருதனார் நனிபுகன்று உறைதும் என்னா தென்றார். மடிந்திருப்போர் பெரும்பாலும் இன்ப நுகர்ச்சியையே தலைக் கீடாகக் கொண்டிருப்பர் ஆகலின், அஃது ஆள்வினையுடைமைக்கு மாறாம் ஆகலின், செழியனின் இன்பம் விழையாது வினையே விழையும் ஆள்வினையுடைமையை நனிபுகன்று உறைதும் என்னாது எனத் தெரித்தோதினார்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றுந் தூண்  (குறள் - 615)

என வள்ளுவனாரும் ஓதுதல் காண்க. ஏற்றெழுந்து என்றது, மண்ணசையாற் பகைமேற் சேறலின் வஞ்சியின் பாற்படும். என்னை? அவ்வஞ்சித்திணைதான்,

எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே  (தொல்-புறத்; 7)

என்பவாகலான்.

பனிவார் சிமையம் கானம் போகி என்றது செழியனின் இடுக்கணழியாமையைக் குறிப்பாற் கூறியதென்க.

அவர் நாடு என்றது தொல்லெயிற் கிவர்தல்  (தொல்-புற-12)

என்னும் துறை கூறிற்று. அவர்-அப் பகைவர். அருப்பம்-அரண். வெளவி-கைக்கொண்டு, அவர் விருப்பம் வெளவி என்றது குடுமி கொண்ட மண்ணு மங்கலம் என்னும் துறை கூறியவாறு. தான் கைக்கொண்ட நாடு பண்டையினும் சிறத்தல் வேண்டி அந்நாட்டிலேயே தங்கி மேம்பாடு செய்தென்க. மேம்பட மரீஇய என்றது மேம்படுதற் பொருட்டு ஆங்குத் தங்கி என்றவாறு. 152 - உறுசெறுநர் என்பது தொடங்கி, 176- நின் பகைவர் தேஎம் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண் : நெடுஞ்செழியன் தன் பகைவர் நாடு பாழ்படுத்தியமை விரித்தோதப்படுகின்றது.

152-163 : உறுசெறுநர் .................... பெயர்பாட

பொருள் : உறு செறுநர் புலம் புக்கு -தொன்றுதொட்டு வந்த பகைவர் நிலத்தே புகுந்து, அவர் கடிகாவின் நிலை தொலைச்சி - அவர் காவலையுடைய பொழில்கள் நிற்கின்ற நிலையைக் கெடுத்து, இழிபு அறியாப் பெருந்தண்பணை குரூஉக் கொடிய எரிமேய - வளப்பங் குன்றுதலை ஒருகாலத்துமறியாத பெரிய மருதநிலங்களை நிறத்தையுடைய ஒழுங்கினையுடைய நெருப்புண்ணச்செய்து, நாடு எனும் பேர் காடு ஆக - நாடென்னும் பெயர்போய்க் காடென்னும் பெயரைப் பெற, ஆசேந்த வழி மாசேப்ப - பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலிமுதலியன தங்க, ஊர் இருந்தவழி பாழாக - ஊராயிருந்த இடங்கள் எல்லாம் பாழாய்க் கிடக்க, இலங்குவளை மடமங்கையர் துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப - விளங்குகின்ற வளையினையும் மடப்பத்தினையும் உடைய மகளிர் துணங்கைக் கூத்தினையும் அழகினையுடைய தாள அறுதியை உடைய குரவைக் கூத்தினையும் மறப்ப, அவையிருந்த பெரும் பொதியில் கவையடிக் கடுநோக்கத்துப் பேய் மகளிர் பெயர்பு ஆட-சான்றோர் இருந்த பெரிய அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடிய பார்வைகளையும் உடைய பேயாகிய மகளிர் உலாவி ஆடா நிற்ப;

கருத்துரை : தொன்று தொட்டு வந்த பகைவர் நிலத்தே புகுந்து அவர் காவலுடைய பொழில்களை வெட்டி அழித்து, ஒரு காலத்தும் வளம் குன்றுதலறியாத பெரிய மருத நிலங்களை, நிறமுடைய நெருப்புண்ணச் செய்து, நாடெல்லாம் காடாகவும், பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்கவும், ஊரிருந்த இடமெல்லாம் பாழாய்க் கிடப்பவும் வளையலணிந்த மடமகளிர் துணங்கைக் கூத்தையும், குரவைக் கூத்தையும் மறப்பவும் சான்றோரிருந்த அம்பலங்களிலே கவையடியினையும் கடிய பார்வையினையு முடைய பேய் மகளிர் ஆடாநிற்பவும் என்பதாம்.

அகலவுரை : தலைமுறை தலைமுறையாகப் பகைமைகொண்டுள்ளார் என்பார், உறுசெறுநர் என்றார். உறு-மிகுதி. என்னை? உறுதவ நனியென வரூஉம் மூன்றும் - மிகுதி செய்யும் பொருள (தொல்-உரி:3) என்பவாகலின். செறுநர் - பகைவர். புலம்-நிலம். அவர் - அப்பகைவர். கடிநா - காவலமைந்த இளமரக்கா. நிலை தொலைச்சி என்றது வெட்டி அழித் தென்றவாறு. இங்ஙனம் போர்மேற் சென்ற படைஞர் பகைவருடைய பொழில்களை அழித்தல் பண்டைக்கால மரபு: இதனைப்

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்பு முதல்தடிந்த ............... பொறைய!  (சிலப். 27: 124-6)

என்றும்,

வடிநல் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரந் துளங்கிய காவும்  (புறம். 23: 7-9)

என்றும்,

நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை  (புறம். 36: 7-9)

என்றும்,

பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய  (பதிற்று - 11 : 12-3)

என்றும்,

வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்ப
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே  (பதிற்-12: 1-3)

என்றும் பிறரும் கூறுமாற்றான் உணர்க. இழிபறியா என்றது - வற்கடமுறுதலை அறியாத என்றவாறு. தண்பணை-மருதநிலம். குரூஉக் கொடிய எரி - செந்நிறமுடைய ஒழுகுங்பட்ட நெருப்பு. குருவும் கெழுவும் நிறனா கும்மே (உரி-5) என்பது தொல்காப்பியம். நிறம் ஈண்டுச் செந்நிறம் என்க. நாடு செயற்கையான் ஆவது, காடு இயற்கையிற் றோன்றுவது ஆகலின், நாடு நாடாக இருக்கும்படி ஆண்டுத் தொழில் செய்வார் எல்லாம் ஓடிவிட்டமையான் மீண்டும் காடுகள் தோன்றலாயின என்பார், நாடெனும் பேர் காடாக என்றார். நாடு காடாய வழி ஆண்டு முன்பு பசுத்திரள்கள் தங்கிய இடமெல்லாம் புலி முதலிய காட்டு விலங்குகள் தங்குவனவாயின என்க. துணங்கை-ஒருவகைக் கூத்து. தழூஉ. குரவைக் கூத்திற்கு ஆகுபெயர். இவற்றின் இலக்கணம் முன்னர்க் கூறினாம்; (மதுரைக்-26ஆம் அடி, 97-ஆம் அடிகளின் அகலவுரையிற் காண்க) அவை - சான்றோர் இருந்த மன்றம். பொதுஇல் - பொதியில் என நின்றது. கவையடி - பிளவுபட்ட அடி. கவையடிப் பேய்மகள் நிணனுண்டு சிரித்த தோற்றம் போல (சிறு பாணாற்று. 97-8) என்றார் பிறரும்.

164-176 : அணங்கு ................ பகைவர்தேஎம்

பொருள் : அணங்கு வழங்கும் அகலாங்கண் - இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்தே, நிலத்து ஆற்றும் குழூஉப்புதவின் - நிலத்தின்கண்ணே நின்று தொழில் செய்கின்ற நிலையோடு கூடின கதவின் அருகிலிருந்து, அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ-மனக்கவற்சியை உடைய பெண்டிர் வருந்திக் கூப்பிட, கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர - வளவிய ஊர்களிடத்தனவாகிய குடிகளெல்லாம் பசியால்வருந்திப் புறநாட்டிலிருக்கும் வளவிய சுற்றத்தார் தமக்குப் பாதுகாவலாகச் சென்று சேர, நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராலொடு முரல-பெரிய மாளிகைகளிலே வெந்து வீழ்ந்த கரிந்த குதிரிடங்களிலே சூட்டினையுடைய கூகைச் சேவல் பேட்டுடனே இருந்து கதற, கழுநீர் பொலிந்த கண் அகல் பொய்கை களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர - செங்கழு நீர் மிக்க இடமகன்ற பொய்கைகளிடத்தே யானை நின்றால் மறையும் வாட்கோரையுடனே சண்பங்கோரையும் நெருங்கி வளர, நல்ஏர் நடந்த நசைசால் விளைவயல் பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள - நன்றாகிய எருதுகள் உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயலிடத்தே பல மயிரினையுடைய பெண்பன்றியோடே ஆண்பன்றி ஓடித்திரிய, வாழாமையின் வழிதவக் கெட்டுப் பாழாயின நின் பகைவர் தேஎம்-நின் ஏவல் கேட்டு அடங்கி வாழாமையாலே வாழும் வழிமிகக் கெட்டுப் பாழாய் விட்டன உன்னுடைய பகைவர் நாடுகள் என்பதாம்.

கருத்துரை : தெய்வங்கள் உலாவாநின்ற ஊரிடத்தே அரந்தைப் பெண்டிர் கதவருகே இருந்து அழ, குடிமக்கள் பசியால் வருந்திப் புற நாட்டிலுள்ள தங்கேளிர்பாற் சென்று சேர, மாளிகைகளிலே கரிந்த குதிரிலிருந்து கூகை குழற, பொய்கையிலே கோரை முதலியன அடர, விளைவயல்களிலே பன்றிகள் உகள, நின்மொழி கேட்டு அடங்கி வாழாமையான் நின்பகைவர் நாடு வாழத் தகுதியில்லாமற் கெட்டுப் பாழாகி விட்டன என்பதாம்.

அகலவுரை : அணங்கு-தெய்வம்; ஈண்டு இல்லுறை தெய்வத்தின் மேற்று. அகலாங்கண் என்றது அகன்ற ஊரிடத்தே என்றவாறு. அகலாங்கண் வியலாங்கண், அகலுளாங்கண் வியலுளாங்கண் என்ற சொற்கள் பேரூர் என்னும் பொருளவாய்ப் பண்டை இலங்கியங்களிற் பெரிதும் வழங்கப்படுகின்றன. நிலத்து ஆற்றும் குழூஉப்புதவின் என்றது, நிலத்தின் கண்ணே நின்று சுழலுதலுடையதும் நிலையோடே கூடியதுமாகிய கதவு என்றவாற. இத் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், நிலத்திலுள்ளாரை எல்லாம் போக்கும் வாசல் காப்பாரை யுடைய வாசலின் கண்ணேயிருந்து எனப் பொருள் கூறி, மேலும் குழூஉ, ஆகுபெயர் என்றும், இனிக் குடுமி தேய்ந்து போதலின், மண்ணைக் கொழித்து வரும் என்பாரும் உளர் என்றும் கூறியுள்ளார். ஆற்றுதல் ஈண்டு இயங்குந் தொழிலைச் செய்தல். குழூஉ-கூடுகின்ற. புதவு-கதவு. அரந்தைப் பெண்டிர் பாழ்மனையின் கதவருகே இருந்து அழுதனர் என்றவாறு. அரந்தை-மனக்கவலை. இது, கணவன் முதலியோரை இழந்தமையானும் பொருளிழந்தமையானும் உண்டாயது. இனைந்தனர் - வருந்தி: முற்றெச்சம்.

பண்டு வளமுடையவாயிருந்த குடி என்பார், கொழும் பதிய குடிதேம்பி என்றார். பதிய - ஊரிடத்துள்ளனவாகிய. தேம்பி-பசிமுதலியவற்றால் வருந்தி. செழுங்கேளிர் - செல்வச் செழிப்புடைய சுற்றத்தார். அந்நாடு முற்றும் பாழ்பட்டமையாற் புறநாட்டிலுள்ள என உரை கூறப்பட்டது. நிழல் சேர்தல் - அவராற் போற்றப்பட்டிருத்தல். செழுங்கேளிர் என்றதற்கு நெருங்கிய உறவினர் எனலும் ஆம்; என்னை? செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல் என்புழி அஃதப் பொருட்டாதலான். நெடுநகர் - பேரில்லங்கள். பள்ளி - இடம். நெருப்பாலழிக்கப்பட்டமை தோன்றக் கரிகுதிர் என்றார். கரி குதிர் : வினைத்தொகை. குடுமிக் கூகை - உச்சியில் சூட்டினையுடைய கூகைச் சேவல். குரால் - கோட்டானுமாம். கோட்டான் கூகையின் இனத்துள் ஒன்று. சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும். புலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணி-6: 75) எனச் சாத்தனார் கூகை குரால் என்பவற்றை வேறுபடுத்தோதுதல் காண்க. மக்கள் வழங்கிய காலத்தே கழுநீர் மலர்ந்து விளங்கிய பொய்கைகள் வாட்கோரையும் சம்பங்கோரையும் மண்டியழிய என்பார், கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர என்றார். செருந்தி - வாட்கோரை; நெட்டிக் கோரையுமாம். அமலுதல்-நெருங்குதல். ஊர்தருதல் - மேனோக்கி வளர்தலைக் குறித்து நின்றதென்க. ஊர்தர என்றதற்கு மேலும் கிளைத்துப் படர எனினுமாம். அக் கோரைகளின் அடர்வும் உயரமும் கூறுவார், களிறுமாய் என்றார் - யானையையும் மறைக்கும் என்றவாறு.

பயந்த விளைநிலம் உள்ளும் உழவன்  (நாலடி - 356)

என்பவாகலின், நசைசால் விளைவயல் என்றார். வாழாமையின் வழிதவக் கெட்டென்றது-நினக்கடங்கி வாழாமையாலே வாழும் வழி மிகக் கெட்டென்றவாறு.

இது, நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனார் செல்வம் நிலையாமை யாக்கை நிலையாமை முதலிய நிலையாமைகளைச் செழியன் பகைவர் மேலிட்டுக் குறிப்பான் எடுத்துக் கூறியவாறாதல் அறிக. என்னை? அவ்வாற்றானும் நிலையாமை அறிவுறுத்தலே அவர் கருத்தாகலான் என்க. இங்ஙனமே,

மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்
செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரிற்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே  (சிலப்-நடுதற் : 151-4)

என மாடல மறையோன் சேரன் செங்குட்டுவனுக்குக் காஞ்சி யுணர்த்தியமை காண்க. இனி 152-உறுசெறுநர் என்பது தொடங்கி 174- பாழாயின என்னுந் துணையும் தொடர்ந்த இத் தொடரின்கண், பெரும்போர் நிகழ்தற் கிடமான ஒரு நாட்டின் நிலையினை ஆசிரியர் மாங்குடி மருதனார் நேரே நம்மை அழைத்துக் கொடுபோய்க் காட்டினாற் போன்று பொருள் புலப்படச் செய்யுள் செய்த அருமை நினைந்து நினைந்து மகிழற்பாற்று. உலகோம்புதற் றொழிலுடைய அரசராலேயே நாடு இங்ஙனம் அழிகின்ற கொடுமைதான் என்னே! என்னே! நெடுஞ்செழிய ! நினக்கு அறமும் புகழுமே யாயினும் இவ்வழிவினையும் சிறிதே எண்ணுக! இத்தகைய செயல்கள் வீடு பேற்றிற்கு அடாதன; அதனால் இத்துடனே இச் செயலை விடுக! இனியேனும், பற்றறுத்து வீடுபெறுதற் குரிய மேலாய நெறியிலே செல்வாய்! என, ஆசிரியர் இத்தொடரானும் குறிப்பாக அறிவுறுக்கின்ற அருமை உணர்வுடையோர் அறிந்து மகிழற்பாற்று. 177-எழாஅத்தோள் என்பது தொடங்கி, 196 - நின்தெவ்வர் ஆக்கம் என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் இம் மாபெரும் நாவலம் பொழில் முழுதும் வென்றடிப்படுத்த நெடுஞ்செழியனின் வலம் படு கொற்றத்தைப் புலவர் பெருமான் நெஞ்சார வாழ்த்துகின்றார்.

முதுபொழின் மண்டில முற்றிய வலம்படு கொற்றம்

177-196 : எழாஅத்தோள் ...................... ஆக்கம்

பொருள் : எழாஅத் தோள் - முதுகிட்டார் மேற்செல்லாத மறத்தோளையுடைய மறவரோடே, இமிழ் முழக்கின் மாஅத்தாள் உயர் மருப்பில் கடுஞ்சினத்த களிறு பரப்பி - முழங்குகின்ற ஓசையையும் பெருமையுடைய கால்களையும் உயர்ந்த கொம்பினையும் உடைய கடிய வெகுளியை உடையனவாகிய யானைகளையும் எங்கும் பரப்புகையாலே, விரிகடல் வியன்றானையொடு - விரிகின்ற கடல் போலும் அகற்சியையுடைய படையோடே, முருகு உறழப் பகைத்தலைச் சென்று - முருகன் பகைவர் மேற் செல்லுமாறு போலத் தடையறப் பகைவரிடத்தே சென்று, அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ - விரிந்த விசும்பெங்கும் பரவுமாறு படையெழுச்சியாலாய ஆரவாரம் முழுங்கா நிற்ப, பெயல் உறழக் கணை சிதறி - மழையோடே மாறுபடும்படி அம்புகளைத் தூவி, பல புரவி நீறு உகைப்ப-பல குதிரைகள் ஓடுகின்ற விசையால் துகள்களை எழுப்ப, வளை நரல வயிர் ஆர்ப்ப - சங்கம் முழங்கக் கொம்புகள் ஒலிப்ப, பீடு அழியக் கடந்து அட்டு - பெருமை கெடும்படி வென்று கொன்று, அவர் நாடு அழிய எயில் வெளவி - அப்பகைவருடைய நாடுகள் அழியும்படி அவர் தம் அரண்களைக் கைக்கொண்டு, சுற்றமொடு தூ அறுத்தலின் - அவர்கட்கு உதவி செய்யும் சுற்றத்தாரோடே கூட அவர்கள் வலியைப் போக்குதலாலே, செற்ற தெவ்வர் நின் வழிநடப்ப - நின்னாற் சிறிது செறப்பட்ட பகைவர் நின் ஏவல் கேட்டு நடவாநிற்ப, வியல் கண் முது பொழில் மண்டில முற்றி - அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின்கண் உளவாகிய நாடுகளை நின்னவாக வளைத்துக்கொண்டு, அரசியல் பிழையாது அறநெறிகாட்டி-தான் நூல்கள் கூறிய செங்கோன்மையிற் பிறழாது நின்று உலகின்கண் அரசியலறம் இஃது என ஏனையோர்க்குக் காட்டி, பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது - நின் குலத்திற் பெரியோர் நடந்த அடிப்பாட்டின் வழியைத் தப்பாமல் ஒழுகிய, வலம்படு நின் கொற்றம் - வலிமை பெற்ற நின்னுடைய வெற்றி, குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்-மேற்றிசைக்கண் தோன்றிய நின் குலத்திற்குப் பழைதாகிய எல்லாரும் தொழும் பிறை நாடோறும் சிறக்குமாறு போல, வழி வழிச் சிறக்க - நின் பின்னுள்ளோரின் வழிமுறை வழிமுறையாகச் சிறந்தோங்குவதாக, குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியில் - கீழ்த்திசைக்கண் தோன்றிய நிறைந்த இருட்பக்கத்துத் திங்கள் நாடோறும் தேயுமாறு போல, தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்-தேய்ந்து கெடுவனவாக நின் பகைவருடைய ஆக்கம்;

கருத்துரை : எழாத் தோளுடைய மறவரோடே பிளிறுகின்ற பெரிய கால்களையுடைய ஏந்திய கொம்பினையுமுடைய வெகுளி மிக்க யானைகளையும் பரப்புதலாலே, விரிகடல் எனத் தோன்றும் அகன்ற படையோடே, பகைமேற் செல்லும் முருகனைப் போன்று பகைமேற் சென்று, படையெழுச்சியின் முழக்கம் விண்ணையளாவ மழைபோன்று அம்புகளைச் சிதறி, குதிரைகள் ஓடுதலாலே துகள் எழவும், சங்கம் முழங்கவும், கொம்பொலிப்பவும், பகைவர் பெருமை கெடும்படி வென்று கொன்று அவர் நாடுகள் பாழாக அரண்களைக் கைக்கொண்டு, அவர்க்கு உதவி செய்த சுற்றத்தோடே அவர் வலியைப் போக்குதலாலே நின்னால் சிறிது செறப்பட்ட பகைவர் நின் ஏவல் கேட்டு நடவாநிற்ப, அகலிதாய பழைய நாவலம் பொழிலின்கண் உள்ள எல்லா நாடுகளையும் நின்னவாக வளைத்துக்கொண்டு நூல்களில் கூறிய அரசியல் நெறி பிறழாது நின்று செங்கோன்மை செலுத்துமாற்றால், அவ்வறம் இற்றென உலகிற் குணர்த்தி வலிமை பெற்ற நின் வெற்றி மேற்றிசையிற் றோன்றிய நின்குலத்திற்குப் பழைதாகிய எல்லாரும் தொழும் பிறை நாடோறும் வளர்ந்து சிறக்குமாறுபோல வழிவழி வளர்ந்துசிறப்பதாக; கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் இருள் பக்கத்துத் திங்கள் நாடோறும் தேயுமாறு போல நின் பகைவர் ஆக்கம் நாடோறும் தேய்ந்தொழிவதாக என்பதாம்.

அகலவுரை : எயில் வெளவி மண்டிலமுற்றி அறநெறி காட்டிப் பிழையாது வலம்படு நின் கொற்றம் என்க. நின் வலம்படு கொற்றம் என்பதனை -வலம்படு நின் கொற்றம் என மாறுக. எழாத்தோள் : ஆகுபெயர். முதுகிட்டார் பாற்செல்லாத தோளையுடைய மறவர் என்றவாறு. இனி மக்கள்தோள் போன்று புடையுயர்ந்து தோன்றாமையின் யானையின் கையினை எழாத்தோள் என்றார் எனினுமாம். இதனை விரிதானைக்கேற்றுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இமிழ் முழக்கென்றது, யானையின் பிளிற்றொலியை. உயர் மருப்பு - முன்புறம் உயர்ந்து தோன்றும் மருப்பென்க. தலைகள் ஏந்தின கொம்பென்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். யானை குதிரை தேர் காலாள் என்னும் நால்வகைப் படையினுள், முதலும் இறுதியுமாகிய களிறும் காலாளும் கூறினாரேனும் எடுத்த மொழியின் இனம் செப்புமாற்றான், களிறு முதலிய நால்வகைப் படைகளையும் பரப்பி என்க. பரப்பி என்னும் எச்சத்தைப் பரப்புதலால் எனத் திரித்து விரிகடல் போன்ற தானை என்பதற்கு ஏதுவாக்குக.

முருகு-தெய்வத்தன்மை; அதனையுடைய முருகனுக்கு ஆகுபெயர். உறழ: உவம உருபு. அகல் விசும்பின் ஆர்ப்பிமிழ என்றது படையியங் கரவம் என்னும் துறை கூறியவாறு. பெயல்-மழை. மழை போன்றது கணைகளை மிக்குச் சொரிந்தென்றவாறு. பாயமாரியிற் பகழிசிந்தினார் (சிந்தாமணி - 421) என்றும், நாற்றிசை மருங்கினும் கார்த்துளி கடுப்பக் கடுங்கணை சிதறி, (சிந்தா-451) என்றும், காலமாரியின் அம்பு தைப்பினும், (புறம்-287) என்றும் பிறரும் கூறுதல் காண்க. நீறு-துகள். உகைப்ப-எழுப்ப. நரல - முழங்க. பீடு-ஈண்டுப் பகைவரின் பெருமை என்க. கடந்தட்டு என்றது நூழிலாட்டு என்னும் துறை. வியன்கண் முதுபொழில் என்றது, அகன்ற இடமுடைய பழையதாகிய நாவலந்தீவினை. மண்டிலம்-நாடு; சோழ மண்டலம் பாண்டி மண்டலம் என்புழிப்போல. மண்டலம் மண்டிலம் என மருவிற்றென்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். மண்டிலம் என்பது வட்டம் என்னும் பொருட்டாகலின் நாட்டிற்கு ஆகுபெயர் எனினுமாம். அரசியல் என்றது வள்ளுவனார் முதலிய ஆன்றோர் வகுத்த அரசர்க்குரிய அறத்தினை. தனது ஒழுக்கத்தானே அவ்வறம் பிறர்க்குத் தோன்ற உணர்த்தி என்பார், அறநெறி காட்டி என்றார். இனி, அறநெறியை மக்கட்குணர்த்தி அதன்கட் செலுத்தி எனினுமாம். என்னை? நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறம்-312) என்றும், சேய் ஒக்கும் முன்னின்றொரு செல்கதி உய்க்கும் நீரால், (கம்ப-4. அரசிய:4) என்றும் கூறுபவாகலான். பெரியோர் என்றது, நிலந்தரு திருவிற் பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதலியோரை என்க. முன்றிணை முதல்வர் போல நின்று (பதிற்றுப்-85:5) என்றும், தொல்லோர் சென்ற நெறிய போலவும் (புறம்.58:25) என்றும் பிறரும் கூறுதல் காண்க. குடமுதல்-மேற்றிசைக்கண். முதல் : ஏழாவதன் உருபு. தொன்று - பழைது. பாண்டியரைத் திங்கள் மரபினர் என்பவாகலின் நின்குலமுதல் என்பார் தொன்று என்றார். இதனை,

செருமாண் தென்னர் குலமுத லாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றி  (சிலப்-4: 22-3)

என்றும்,

செந்நிலத் தன்றுதிண் டேர்மறித்துப்
பேர்ந்தான் றனது குலமுத லாய பிறைக்கொழுந்தே  (பாண்டிக்கோவை)

என்றும் பிறரும் கூறுதலறிக. பிறையினை உலகிலுள்ள எல்லா மதத்தினரும் எல்லா நாட்டினரும் தொழுதல் இயல்பாகலின், தொழுபிறை என்றார்.

தொழுதுகாண் பிறையிற் றோன்றி  (குறுந்-178:5)

என்றும்,
                        ........ பலர்தொழச்
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே  (குறுந்-307: 1-3)

என்றும்,

ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை  (அகம் - 239)

என்றும்,

பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே  (புறம்-1: 9-10)

என்றும் வருதல் காண்க. பிறை ஒளிப் பக்கத்துத் திங்கள். இருட் பக்கத்துத் திங்களை மதி என்ப. குடமுதற் றோன்றும் பிறை என்றும், குணமுதற் றோன்றிய மதி என்றும் ஓதினமை காண்க. பிறை நாடோறும் வளர்தல் போன்று, நின் கொற்றம் வழிமுறை தோறும் வளர்ந்து திகழ்க என்பதாம்.

ஆநாள் நிறைமதி அலர்தரு பக்கம்போ
னாளின் நாளின் நீர்நிலம் பரப்பி
வெண்மதி நிறையுவா போல
நாட்குறை படுதல் காணுநர் யாரே  (பரி-11)

என்றும்,

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே
தானே சிறியார் தொடர்பு  (நாலடி-125)

என்றும்,

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு  (குறள் - 725)

என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து  (குறள் - 112)

என, அறம் பாடிற்றாதலின், செழியனின் நடுநிலைமையைக் குறிப்பாற் புகழ்வாராய் வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம் என வாழ்த்துவாராயினர். செங்கோன்மை பிறழா மன்னர்க்குப் பகைவராவோர் கொடுங்கோன் மன்னரே யாதலின் அவர் கெடுக என்றதும் உலகிற் கொடுங்கோன்மை நீங்கிநன்மையே சிறக்க எனவாழ்த்திய படியேயாம். இவ்வாறு வாழ்த்திய புலவர் இனி,

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே  (தொல்-புறத்- 23)

என்னும் காஞ்சி கூறப் புகுவார், நெடுஞ் செழியனை முன்னிலைப்படுத்து மாற்றான் அவ்வேந்தனது பொய்யாமை முதலிய பண்புகளைப் பாராட்டுவாராய்த் தோற்றுவாய் செய்கின்றார். 197-உயர்நிலை யுலகம் என்பது முதல் 209 - நல்லிசை என்பது வரை ஒரு தொடர்.

நெடுஞ்செழியனின் சான்றாண்மை

197-209 : உயர்நிலையுலகம் ................ நல்லிசை

பொருள் : உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே - ஒரு பொய்யாலே உயர்ந்த தேவருலகத்தை அவர் நுகரும் அமிழ்தத்தோடே பெறுவையாயினும் அவற்றைத் தருகின்ற பொய் நின்னைக் கைவிட்டு நீங்க மெய்யுடனே நட்புச் செய்தலையுடையை, முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே - முழங்குகின்ற கடலாகிய எல்லையையுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்துள்ளாருடனே உயர்ந்த வானுலகத்துத் தேவரும் பகைவராய் வரினும் பகைவர்க்கு அஞ்சித் தாழ்ந்து ஒழுகுதலைச் செய்யாய், தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழி நமக்கு எழுக என்னாய் - தென்றிசை நிலத்தின் மலைகள் எல்லாம் நிறையும்படி வாணன் என்னும் சூரன் வைத்த சீரிய பொருட்டிரள்களினைப் பெறுவையாயினும் பிறர் கூறும் பழி நமக்கு வருவதாக என்று கருதாய், விழுநிதி ஈதல் உள்ள மொடு இசை வேட்குவையே - சீரிதாகிய பொருள்களை வழங்கும் நெஞ்சுடனே அதன்ஊதியமாகிய புகழை விரும்புவாய், அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ - அத்தன்மையுடைய சான்றாண்மை பொருந்திய நின்னோடே முன்னிலையா வைத்துக் கூறுதற்கு யாதுளது? இல்லையாயினும், கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல் - இவையிற்றிற் கெல்லாம் மேலாயிருப்ப தொன்றனை யான் நினக்குக் கூறுவன் கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே, கேட்டிசின் வாழி - அதனைக் கேட்பாய் நீ நெடிது வாழ்க, கெடுக நின் அவலம் - அக் கேள்வியானே நின் மயக்கம் ஒழிக, கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல்லிசை-ஒரு காலமும் கெடாதே நிலைபெறுவதாக நின்னுடைய சேட்புலமெல்லாம் சென்று விளங்கும் நல்ல புகழ்;

கருத்துரை : ஒரு பொய் கூறுதல் வாயிலாய்த் தேவருலகத்தையும் அவர் நுகரும் அமிழ்தவுண்டியையும் எளிதே பெறக் கிடப்பினும் அப்பொய் நின்னை விட்டு நீங்கும்படி மெய்யுடனே நட்புக் கொள்வாய். கடலினை எல்லையாகவுடைய இப்பேருலகத்தே வாழ்வாருடனே வானுலகத்தே வாழ்வாரும் ஒருங்குகூடி நின்னைப் பகைத்து வரினும் அப் பெரும்பகைக்கும் அஞ்சாமல் அவரை எதிர்வதன்றிப் பணிந்தொழுகாய்; தென்றிசைக்கண்ணுள்ள மலைகள்தோறும் நிறைய வாணன் வைத்த சிறந்த பொருள் முழுதும் பெறக்கிடப்பினும் அது பழியொடு புணருமெனின், அதனைப் பெற நெஞ்சானும் நினையாய், ஈதலிசைபட வாழ்தலால் வரும் புகழைப் பெரிதும் விரும்புவாய்; அத்தகைய மேன்மையுடைய நினக்குக் கூறற்பாலது இல்லை எனினும், இவையிற்றிற் கெல்லாம் மேலாய தொன்றனை யான் உனக்குக் கூறத் துணிந்தேன்; அதனைக் கேட்பாயாக; அதனால் நின் மயக்கம் ஒழிவதாக; உலகெலாம் பரவித் திகழும் நின் உயர்ந்த புகழ் உலகமொடு நின்று நிலை பெறுவதாக! என்பதாம்.

அகலவுரை : உயர்நிலையுலகம் - தேவருலகம். தேவருலகத்து நுகர் பொருள்களில் நரை திரை மூப்புச் சாக்காடுகளை விலக்கும் பெருமையுடைத்தாய்ச் சிறத்தலின் அமிழ்தொடு பெறினும் என்றார். தலைமை பற்றி அமிழ்தொடு என்றாரேனும் ஆண்டுள்ள அமிழ்துள்ளிட்ட எல்லாநுகர் பொருள்களோடும் பெறினும் என்பது கருத்தாகக் கொள்க. சேண்-ஈண்டு அறுதியாக என்னும் பொருட்டு. வாய்-வாய்மை: அஃதாவது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். இதனை,

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.  (குறள் - 291)

என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களான் அறிக.

ஏணி-எல்லை.

நளியிரு முந்நீர் ஏணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கை  (புறம்-35)

என்றார் பிறரும். உலகிலுள்ளோர் அனைவரும் என்பார் உலகினை மலர்தலை உலகம் என்றார். மக்களிற் றேவர் உயர்பிறப்புடையோராகலின் விழுமியோர் என்றார். விழுமம் - சீர்மையும் சிறப்புமாம்.

உற்ற விடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ  (மூதுரை-6)

என்பது ஈண்டு நினைவு கூரற்பாற்று. இதனால் அவனது மறச்சிறப்புக் கூறப்பட்டது.

விண்டு - மலை. வாணன் - ஒரு சூரன்.

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு  (குறள்-231)

என்னுந் திருக்குறளான் இம்மையின் வாழ்தற்பயன் ஈதலும் அதனாலுண்டாம் புகழுமே யாதல் அறிக. அப்பயன் பெரிதும் உண்டாக வாழ்கின்றனை என்பார், ஈதலுள்ளமொடு இசைவேட்குவையே என்றார். அன்னாய் - அத்தன்மையுடையாய்.

இவ்வடிகளோடே,

உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே  (182)

என்னும் புறப்பாட்டு நினைவுகூரற் பாலது. இத்தகைய சான்றாண்மையுடைய நினக்கு இவ்வுலகியலறம் பற்றி நின்னை முன்னிலையாக்கிக் கூறற்பாலது யாதொன்றும் இல்லையென்பார் அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ என்றார். இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முன்னிலை நின்னொடு எவனோ என மாற்றி ஐம்பொறிகளுக்கும் நுகரப்படுவனவாய் முன்னிற்கப் படுவனவாகிய இந் நுகர்பொருள்கட்கு நின்னோடு என்ன உறவுண்டு என வலிந்து பொருள்கூறி, நின் என்றது சீவான்மாவை, என்றும், முன்னிலை ஆகுபெயர் என்றும் கூறினர். இனிச் செழியன் அறநெறி நிற்பினும் பற்றுள்ளத்தோடே நிற்கின்றான் ஆகலின் அப் பற்றறுதிக்குக் காரணமாகிய நிலையாமை உணர்ச்சி தோற்றுவிப்பார். அப்பற்றுடைமைக்கு முதலாகிய மயக்கம் ஒழிக வென்பார், கெடுகநின் அவலம் என்றார். அவலம் : ஆகுபெயர். மயக்கம் என்னும் பொருட்டு.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடு நோய்  (குறள் - 360)

எனத் தேவரும் கூறுதல் காண்க. காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனுள்ளும் மயக்கத்தின் காரியம் காமமும், காமத்தின் காரியம் வெகுளியுமாம். எனவே ஏனையிரண்டிற்கும் காரணமாகிய மயக்கங் கெடின் காரியங்கள் கெடுதல் திண்ணமாகலின் அஃதொன்றினையே விதந்து கூறினார். எனவே நினது காம வெகுளி மயக்கங் கெட்டுப் பிறவி நோய் ஒழிவதாக என வாழ்த்தினாராயிற்று. இதனை ஆணவமலம் என்றும் அவிச்சை என்றும் கூறுப. ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவலம் என்றதற்கு மாயை என்று பொருள் கூறினர். பிறப்பறுத்துயர்தற்கு மாயை துணைக்காரணமாகலான் அவ்வுரை பொருந்தாதென்க. கொன் - பெருமை. என்னை?

அச்சம் பயமிலி காலம் பெருமைஎன்
றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே  (தொல்-சொல்-இடை:6)

என்பவாகலின். பெருமை - ஈண்டு மெய்ப்பொருள் உணரும் உணர்ச்சியின் மேற்று. பொய்யெல்லாம் சிறுமையாகலின் மெய்யினைப் பெருமை என்றார். மெய் ஒன்றே யாகலின் கொன்னொன் றென்றார். கேட்டிசின்-கேட்கக் கடவை. இதற்கு அதனைத் தொல்லாணை நல்லாசிரியரிடத்தே கேட்பாயாக என்றும், கிளக்குவல் என்றதற்கு கூறுவன் அது என்னாற் காட்டுதற்கரிய தென்றும் என்றது, கந்தழியினை என்றும் வேண்டாது கூறினர் நச்சினார்க்கினியர். இனி 210-தவாப் பெருக்கத்து என்பது தொடங்கி, 237 ஆண்டு கழிந்தோரே என்னுந் துணையும் இந்நூலின் உட்கிடைப் பொருளாகிய காஞ்சித்திணைப் பொருள் கூறுகின்றார் என்க.

காஞ்சித்திணைப் பொருள்

210-219 : தவா ...................... தரீஇ

பொருள் : தவாப் பெருக்கத்து அறா யாணர் - கெடாத பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயும், அழித்து ஆனா கொழுந்திற்றி - அழிக்கப்பட்டும் அமையாத கொழுவிய தசையும், இழித்து ஆனாப் பல சொன்றி - உண்டமையாத பலவாகிய சோறும், உண்டு ஆனாக் கூர்நறவில் - பருகியமையாத மிக்க கள்ளும், தின்று ஆனா இனம் வைகல் மேலும் தின்றமையாத இன்னோரன்ன உண்டி வகைகளும் தங்குதலுடையவாய்; நிலன் எடுக்கல்லா ஒண்பல் வெறுக்கை - நிலம் சுமக்கமாட்டாத ஒள்ளிய பலவாகிய பொருட்டிரள்களையும் உடைய, பயன் அறவு அறியா நகர் - எக்காலமும் பயன் கெடுதல் அறியாத அரண்மனைகளிடத்தே இருந்து, நரம்பின் முரலும் நயம்வரும் முரற்சி விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்ப - யாழ் நரம்பு போன்று பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய விறல்பட ஆடும் மகளிர் தம்முடைய பூண் அணியாத கையிலே குறிய தொடிகளையிட, பாணர் உவப்பக் களிறுபல தரீஇ - பாணர்கள் மகிழும்படி யானைகள் பலவற்றையும் கொடுத்து;

கருத்துரை : கெடாத பெருக்கத்தையுடைய புதுவருவாயும் அழிக்கப்பட்டும் அமையாத கொழுவியதசையும் உண்டமையாத சோறும், பருகியும் அமையாத மிக்க கள்ளும் தின்றுதின்று அமையாத தின்பண்ட வகைகளும் உள்ளனவாய் நிலம் பொறுக்கவியலாத பொருட் குவியலையும் உடைய எக்காலமும் இன்பந் தருதலிலே கெடாத அழகிய அரண்மனைகளிடத்தே இருந்து யாழிசைத்தாற் போன்று பாடும் ஆடல் மகளிர் தம் வறுங்கையிலே குறுந்தொடி அணியாநிற்பப் பாணர்கட்கு யானைகள் பலவற்றையும் வழங்கி என்பதாம்.

அகலவுரை : புதிய வருவாயும் நாடோறும் மிக்குவரும் என்பார் தவாப் பெருக்கத்து அறா யாணர் என்றார்; யாணர் - புதுவருவாய். அழித்தல் இழித்தல் உண்டல் தின்றல் என்பன-உண்ணல் என்னும் ஒரு பொருளே குறித்து நின்றன. இழித்து என்பது - உண்டு கெடுத்தும் என்னும் பொருட்டு. திற்றி - தசை, கூர் நறவு - மிகுதியான கள். சொன்றி - சோறு. தின்று ஆனா இனம் என்றது, இன்னோரன்ன தின்றமையாத உணவு வகைகள் என்றவாறு. இனம்-வகை. எனவே உண்டு உண்டு அமையாத திற்றியும் சொன்றியும் நறவும் இனமும் வைகுதலுடைய நகர் என்றவாறு. இவ்வடிகட்கு அழிக்கப்பட்டு விருப்பமையாத கொழுவிய தசையைத் தின்று விருப்பமையாத பல வகைப்பட்ட சோற்றைத் தீதென்று கூறிக் களிப்பமையாத கள்ளையுண்டு அவ்விரண்டிலும் விருப்பமையாத பாணர் என்க என்று அதற்கேற்பக் கொண்டு கூட்டினர் நச்சினார்க்கினியர். வைகல் என்றதற்கு நாடோறும் என்பர். நரம்பு-யாழ் நரம்பு; யாழ் நரம்பின் இசை போன்று பாடும் விறலியர் என்க. நரம்பொடு வீணை நாவின்நவின்றதோ என்று நைந்தார். (658) என்னும் சீவக சிந்தாமணி அடியை எடுத்துக் காட்டினார் நச்சினார்க்கினியர். பாணர் - பாட்டுப்பாடும் ஒரு வகுப்பினர். களிறுபல தரீஇ என்றது கொடையின் மிகுதி கூறிற்று.

220-237 : கலந்தோர் .................. கழிந்தோரே

பொருள் : கலந்தோர் உவப்ப எயில்பல கடைஇ - தம்முடன் நட்புக்கொண்டோர் மனமகிழும்படி அழித்த அரண்களிற் கொண்ட பலபொருள்களையும் அவர்க்குச் செலுத்திக் கொடுத்து, மறம் கலங்கத் தலைச் சென்று - பகைவர் மறம் நிலைகுலையும்படி அவர்களிடத்தே சென்று, வாள் உழந்ததன் தாள் வாழ்த்தி - வாட்போரிலே அவர்கள் வருந்தி வென்றதற்குக் காரணமான அவர்கள் முயற்சியை வாழ்த்தி, நாள்ஈண்டிய நல் அகவர்க்குத் தேரோடு மா சிதறி - விடியற்காலத்தே வந்த நல்ல பொருநர்க்குத் தேருடனே குதிரைகளையும் கொடுத்து, சூடுற்ற சுடர்ப்பூவின் பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றமாக - சூடுதலுற்ற விளக்கத்தையுடைய வஞ்சியினையும் பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தினையுமுடைய சீரிய படைத்தலைவரைத் தமக்குச் சுற்றமாகக் கொண்டு, கள்ளின் இரும்பைக் கலம் செலஉண்டு - கள்ளினையுடையவாகிய பெரிய பச்சைக் குப்பிகள் வற்றும்படியாகக் கள்ளினையுண்டு, பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப - தம்மை வழிபட்டோருடைய நாடுகள் தம் ஏவல் கேட்டு நடவாநிற்ப, பணியார் தேஎம் பணித்துத் திறைகொண்மார் - தம்மை வழிபடாதோருடைய நாடுகளைத் தம் ஏவல் கேட்கும்படி செய்து அவர்கள்பால் திறை கொள்ளற்பொருட்டு, பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை - உயரப் பறக்கவல்ல பருந்துகளும் பறக்கலாற்றாத உயர்ச்சியையுடைய அரண்களையுடைய பாசறைக் கண்ணே, படுகண் முரசம் காலை இயம்ப - ஒலிக்கின்ற கண்ணையுடைய பள்ளியெழுச்சி முரசம் நாட்காலத்தே ஒலிப்ப இருந்து, வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த - பகைவர் படைக்குக் கேடுண்டாகும்படி வென்று பின்னும் அழிக்க வேண்டிய நிலங்களிலே சென்று தங்கின, பணைகெழு பெருந்திறல் பல்வெல் மன்னர் - வெற்றி முரசு பொருந்தின பெரிய வலியினையும் பல வேற்படையினையுமுடைய அரசர்கள், கரை பொருது இரங்கும் கனையிரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே - கரையைப் பொருது முழங்கும் செறிதலையுடைய கரிய கடலினது திரை குவிக்கின்ற மணலினும் பலராவார் அவர் யாரெனின், உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே - புகழ் எங்கும் பரக்கும் படி அகன்ற இடத்தையுடைய உலகங்களைத் தம் ஏவல்களை நடத்தி மக்கட்குரிய மனன் உணர்வின்மையால் பிறப்பற முயலாது பயனின்றி மாண்டொழிந்தோர்;

கருத்துரை : தம்மோடு நட்புக் கொண்டோர் மகிழுமாறு பகைவர் அரண்களிலே கொண்ட பல பொருள்களையும் தாமே வலியப் போக்கிக் கொடுத்து, பகைவர் மறங்கெடும்படி அவரிடத்தே சென்று, வாட்போரிலே உழந்து வென்றோருடைய முயற்சியை வாழ்த்தி, விடியற்காலத்தே வந்த பொருநர்க்குத் தேரும் குதிரையும் வழங்கி, வஞ்சிப் பூவினைச் சூடிய பூசிப்புலர்ந்த சந்தனத்தையுடைய சீரிய படைத்தலைவரைத் தமக்குச் சுற்றமாகக் கொண்டு தம்மை வழிபட்டாருடைய நாடுகள் தம் ஏவல்வழி நடப்ப வழிபடாதாருடைய நாடுகளை ஏவல் கேட்கச் செய்து அவர்கள்பால் திறைகோடற் பொருட்டுப் பருந்தும் பறத்தலாற்றாத உயர்ச்சியுடைய அரண்கள் அமைந்த பாசறைக்கண் பள்ளியெழுச்சி முரசம் முழங்க இருந்து பகைவர் படைகெட வென்று மேலும் அழிக்க வேண்டுமென்ற நிலங்களிலே சென்று தங்கிய வெற்றி முரசு பொருந்தின பெரிய வலியினையும் பல வேற்படையினையுமுடைய அரசர்கள் கரையை மோதுகின்ற கடலின் திரை குவிக்கும் மணலினும் பலர்; அவர் யாரெனின் தம் புகழ் பரவும்படி அகன்ற இடமுடைய உலகங்களை ஆண்டு மக்கட்குரிய மனன் உணர்வில்லாமையாற் பிறப்பற முயலாது பயனின்றி மாண்டொழிந்தோர் என்பதாம்.

அகலவுரை : கலந்தோர் - தம் உணர்ச்சியினா லொன்றுபட்ட நண்பர். அவர் கேளாதேயும் தாமே பல்வேறு பொருள்களையும் வலிய உய்த்து வழங்குவார் என்பார் கடைஇ என்றார். கடைஇ-செலுத்தி, எயிற்பல, எயிலின்கட் கொண்ட பல பொருள். மறம் கலங்குதலாவது-அச்சந்தோன்றுதல். தலை-இடம். வாள் உழத்தல் - வாளினாலே போரியற்றல். வாளுழந்ததன் தாள் என்றது வாளினால் போர்செய்தற்குக் காரணமான ஊக்கத்தை. இதனை, நச்சினார்க்கினியர் வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி எனக் கண்ணழித்து, வாட்போரிலே வருந்தினபடியாலே அவ்வருத்தத்தினாற் பின்பும் அதன்கட் பிறக்கின்ற முயற்சியை வாழ்த்தி, எனப் பொருள் கூறினார். மேலும் உழந்தென்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. உழந்த+தன் எனப் பெயரெச்சமாயின் தன்னென்னும் ஒருமை மேல் வருகின்ற மன்னர் என்னும் பன்மைக் காகாமை உணர்க என்றும் ஓதினர்.

நாள் - நாட்காலம்; விடியற்காலம். விடியற் காலத்தே அரண்மனை வாயிலில் வந்து பாடுவோர் பொருநர். அவர் அம்மன்னரின் குலத்தோரையெல்லாம் அழைத்துப் புகழ்வரென்பது பற்றி அகவர் என்றார். அகவுதல்-அழைத்தல்.

விடியற் காலத்தே பொருநர் வந்து பாடுதலை,
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின்  (பொருந. 72-3)

என்றும்,

வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை
அள்ளகட் டன்ன வரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்  (புற-வெண், 206)

என்றும் வருவனவற்றால் அறிக. இனிப் பொருநர் முதலிய பரிசிலர்க்குத் தேர் முதலியவற்றை மன்னர்கள் வழங்கும் வழக்கத்தை,

வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்து கொண்டு
யாம் அவணின்றும் வருதும்  (பெரும்பாண். 27-8)

என்றும்,

களிறும் தேரும் வயிரியர் கண்ணுளர்க்
கோம்பாது வீசி  (பதிற்றுப்.20: 15-7)

என்றும்,

நீயே வளியி னியன்மிகுந் தேருங் களிறும்
தளியிற் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூ வலை  (கலி. 50 : 15-7)

என்றும்,

தேரோடு ஒளிறு மருப்பேந்திய செம்மற் களிறின்று
பெயரல பரிசிலர் கடும்பே  (புறம்-205)

என்றும்,

இரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர்
வேண்டினுங் கடவ  (புறம்-313)

என்றும் வரும் பிற சான்றோர் கூற்றானும் உணர்க.

இனி, இதற்கு நச்சினார்க்கினியர் கூறுவதாவது ;

தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூத ரேத்திய துயிலெடை நிலையும்  (தொல்.புறத் : 36)

என்னும் விதியால் சூதர் இருசுடர் தொடங்கி இன்றுகாறும் வருகின்ற தம் குலத்துள்ளோர் புகழை அரசர் கேட்டற்கு விரும்புவரென்று கருதி விடியற்காலத்தே பாசறைக்கண் வந்து துயிலெடை பாடுவர் என்பது ஈண்டுக் கூறிற்றாம் என்பதாம். எஞ்சாமண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித்தமையான் ஈண்டு வஞ்சித்திணையே கூறப்படுதலின் ஈண்டுச் சூடுற்ற சுடர்ப்பூ வஞ்சிப்பூ என்க. விழுமிய பெரியோர் என்றது படைத்தலைவரை, பை என்றதற்குப் பச்சைக்குப்பி என்பர் நச்சினார்க்கினியர். கள் நிறைந்த பெரிய பச்சைக்குப்பி என்பார், கள்ளிரும் பை என்றார். இக் குப்பிகள் பெரியவாதலின் அவை வற்றும்படி மிகுதியாக உண்டென்பார் செல உண்டு என்றார். பணிந்தோர்-தம் ஏவலில் நிற்போர்; பணியார் அங்ஙனம் நில்லாத பகைவர். பறவைகளில் மிக்க உயர்ந்தே பறக்கும் இயல்புடைய பருந்தானும் பறத்தற்கு இயலாதென அவ்வரணின் உயர்வு கூறினார். இனி வானத்தே அவ்வரண் மேலாகப் பறக்கும் பருந்துகளையும் அதன்கண் அமைத்த பொறிகள் கொல்லுமாகலின் பருந்தும் பறத்தலில்லாத அரண் என அவ்வரணின் பொறிச் சிறப் போதிய வாறுமாம். இங்ஙனமே,

சினத்தயில் கொலைவாள் சிலைமழுத் தண்டு
சக்கரம் தோமரம் உலக்கை
கனத்திடை உருமின் வெருவருங் கவண்கல்
என்றிவை கணிப்பில கொதுகின்
இனத்தையும் உவணத் திறையையும் இயங்கும்
காலையும் இதமல நினைவார்
மனத்தையும் எறியும் பொறியுள என்றால்
மற்றினி உணர்த்துவ தெவனோ  (கம்ப.நகரம் : 12)

எனக் கம்பநாடார் கூறுதலும் காண்க. பார்வல் - அரசர் தம் பகைவர் சேய்மைக்கண் வருதலைப் பார்த்திருத்தற்குரிய உயர்ச்சியை உடைய அரண் : ஆகுபெயர். படுகண் முரசம் - ஒலி உண்டாகும் கண்ணையுடைய முரசம். காலை இயம்ப என்றமையால் முரசம் பள்ளியெழுச்சி முரசம் என்க. தழங்குகுரன் முரசம் காலை இயம்ப (ஐங், 448 : 1) என்றும், நாண் முரசிரங்கும் இடனுடை வரைப்பில், (புறம் 161 : 29) என்றும், காலை முரசக் கனைகுரல் ஓதையும் (சிலப். 13 : 140) என்றும், பிற சான்றோருங் கூறுதல் காண்க. வெடிபட என்றது ஓசையுண்டாக என்றுமாம். வேண்டுபுலம் - தாம் அழிக்க வேண்டும் என்று கருதிய நாடு. இறுத்தல் - படையோடே தங்குதல். பணை-வெற்றிமுரசு. மணலினும் பலர் என்றது, எண்ணிறந்தோர் என்றவாறு. பிறவிப்பயனைப் பெறாது அவமே செய்து வீண்போயினர் என்பார், ஆண்டு கழிந்தோர் என்றார். மக்கட்பிறப்பினை எய்தினோர் அதனால் பெறற்பாலதாகிய வீடுபேற்றினை எய்திய வழியன்றி அப் பிறப்பான் உறுபயன் வேறின்றாகவும் நிலையாத இப் பொய்ப் பொருளை மெய்யாகக் கருதிப் பெரிதும் முயன்று அழிந்தனர் என்று இரங்கியவாறு. எனவே இவையிற்றின் தன்மை இத்தகையதாகலின் நின்றுழி நில்லாது கானல்நீர் எனத் தோன்றிக் கனவென மாயும் இப் பொருள்களிடத்தே பற்றுவைத்து முயலுதல் அவம் செய்தலேயாம். இத்தகைய அவலம் நினக்குக் கெடுவதாக என்பது குறிப்பு.

இது மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை அன்றிப் பிறவியற முயலாமையில் கழிந்தமை கூறிற்று, என்பர் நச்சினார்க்கினியர். இத்தொடரே இந்நூலின்கண் காஞ்சி கூறியதென்க. இதனால் இப்பனுவல் மதுரைக் காஞ்சி என்னும் பெயர்த்தாயிற்றென்க. இனி 210-முதல் 237 வரையிலுள்ள நிலையாமை கூறிய இத்தொடரை: தரீஇக் கடைஇ சிதறி பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்பப் பணியார் தேஎம் பணித்துத் திறைகொள்ளும் பொருட்டுப் பெரியோர் சுற்றமாகக் கொண்டு பாசறையிலே முரசியம்ப இருந்து கடந்து இறுத்த மன்னர் மணலினும் பலர். அவர் யாரெனின் பிறப்பற முறலாது உலகம் ஆண்டு அவமே கழிந்தோர் என இயைத்துக் கொள்க. இனி இவ்வாற்றான் நிலையாமை கூறிய நல்லிசைப்புலவர் நிலையாமை யுணர்ந்தவன் செல்வம் யாக்கை முதலியவற்றிற் பற்றுச் செய்யாது இவற்றின் மெய்ம்மை யுணர்ந்து பற்றறுதி எய்தும் நெறியானே முயல்வனன்றோ அஃதெவ்வாறு முயலுதல் வேண்டும் என்பதை இனிக் கூறப்புக்கவர், உடலும் கருவிகளும் உலகமும் நுகர்ச்சியும் என நான்கு வகைத்தாகிய மாயையினூடே தனக்கென வரைந்த வாழ்நாள் அளவும் ஊடாடி வாழ்தற்கு அந்நால்வகையின் ஒன்றாகிய உலகம் முன்னை ஊழானே செழியற் கமைந்தவற்றைப் பாராட்டிப் புகழ்கின்றார். உலகந்தானும் மருதம் முதலியனவாக ஐவகைப்படும் ஆகலின் முதலில் செழியன் ஆட்சிக்கண் அமைந்த மருதநிலத்தின் இயல்பினை எடுத்தோதுகின்றார் என்க. 238-அதனால் என்பது முதல், 270-ஒருசார் என்பது வரை ஒரு தொடர்.

மருத நிலச் சிறப்பு

மழையோ! மழை!! மழை!!!

மழை வளம்

238-244 : அதனால் .................... சிறத்தலின்

பொருள் : அதனால் -அங்ஙனம் இருந்தவாற்றால், குணகடல் கொண்டு குடகடல் வரைமுதல் முற்றி - கீழ்த்திசைக் கடலிடத்தே நீரை முகந்துகொண்டு மேற்றிசைக் கடற்கரையிடத்தே உள்ள மலையிடத்தை வளைத்துக்கொண்டு, இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது - இரவும் பகலும் ஆகிய இரண்டு பொழுதுகளும் முடிவெய்தும் காலை இது மாலையிதுவென அறியவியலாதபடி,  அவலும் மிசையும் நீர்திரள்பு ஈண்டி - பள்ளமும் மேடுமாகிய பலநிலத்துண்டாகிய நீரினாலே திரண்டு சேரக் குவிந்து, கவலையம் குழும்பின அருவி ஒலிப்ப - கவலைக் கிழங்கு கல்லின அழகிய குழியிலே வீழ்ந்து அருவிகள் ஒலிப்ப, கழைவளர் சாரல் களிற்றினம் நடுங்க - மூங்கில் வளர்ந்த மலைப்பக்கங்களிலே நின்று யானைத்திரள்கள் நடுங்கா நிற்ப, ஏறொடு வான் ஞெமிர்ந்து - இடிகளோடே முகில்கள் யாண்டும் பரவி, சிதரற் பெரும் பெயல் சிறத்தலின் - சிதறுதலையுடைய பெருமழை மிகுதலானே;

கருத்துரை : முகில்கள் கீழ்த்திசைக் கடலின்கண் நீரை முகந்து கொண்டு சென்று மேலைக்கடலினருகேயுள்ள மலைகளை வளைத்துக் கொண்டு, இரவிது, பகலிது என்று அறியாதபடி, இருள்செய்து மேடு பள்ளம் எங்கும் நீர் திரண்டு பெருக, அருவி ஒலிக்க, யானைகள் நடுங்க, இடித்துப் பெரிய மழையைப் பொழிதலாலே என்பதாம்.

அகலவுரை : அங்ஙனம் இருந்தவாற்றால் இவ்வாறு வாழ்ந்து மகிழ்ந்தினிதுறை என (782) இந் நூலிறுதியிற் சென்று முடியும்; இடையில் வருவனவெல்லாம் இடைப்பிற வரலாம். அதனால் என்பதற்குப் பயனின்மையாலே என ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறினர். அங்ஙனம் ஆண்டு கழிதல் பயனின்மையாலே என்பது அவர் கருத்தாகக் கொள்க.

இனி, மழையின்றி மாநிலத்தார்க் கில்லை என்றும், வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்தம் என்றுணராற் பாற் றென்றும் (குறள் -11) சான்றோராற் புகழப்படுவதும், கடவுளதாணையான் உலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற் கேதுவாகியதும் ஆகிய வான்சிறப்பே முதலில் கூறுவான் தொடங்கி அவ் வான்சிறப்பிற்கும் ஏதுவாய்நிற்கும் செழியன் செங்கோன்மையைக் குறிப்பாகச் சிறப்பிப்பார், அவன் ஆட்சிக்கண் மழைவளம் சிறந்த தன்மையினை விதந்தோதுகின்றார். 238- குணகடல் என்பது தொடங்கி 244-சிறத்தலின் என்னுந் துணையும் கிடந்த ஓரேழ் அடிகளிலே வியத்தகு முறையில் மிகப்பெரிய மழை ஒன்றைப்படைத்து விடுகின்ற மாங்குடி மருதனார் நல்லிசைப்புலமையின் சிறப்பை உணர்க. மழையோ! மழை!! மழை!!! என்று வியந்து மும்முறையும் கூவவே தோன்றுகின்றது. கீழ்கடல் தடித்தெழுந்த முகிற்றிரள்கள் மேலைமலைத் தொடரை முற்றுகையிட்டுவிட்டன. ஒரே இருள்! இருள்! இருள்! விடியற்காலத்தையும் மாலைப்போதினையும் யாரே ஆண்டறிய வல்லுநர்! எங்கெங்கும் இடிமுழக்கம் கேட்கப்படுகின்றது. மூங்கிற் புதரின் ஓரத்திலே யானைகள் திரள் திரளாய் நின்று நடுங்குகின்றன. யானைகளுக்கு நீர் என்றால் மிகவும் விருப்பம்; அவைகளே இவ்வாறு நடுங்குமெனில் ஏனை உயிர்களின் நிலை என்னாம்! நான்கு திசையினின்றும் நீர்மிக்குத் திரண்டு வெள்ளம் ஓடி வருகிறது. யாண்டும் வெள்ளம்! எங்கும் அருவியின் ஓசை! எத்துணைச் சிறந்த பெருமழை! இத்தனை அகக்காட்சியும் அந்த ஏழு அடிகளினாலேயே காட்டிய மருதனாரின் புலமை எத்துணைச் சிறந்தது கண்டீர்!

குணகடல் குடகடல் என்றவற்றில் முரண் தோன்றிச் செய்யுள் இன்பம் மிகுதலுணர்க. குடகடல் என்பதனோடு வரைமுதல் என்பதனைக் கூட்டுக. எல்லை-பகற்காலம், விளிவு இடன்-முடியுமிடங்கள்; என்றது, இரவுமுடியும் விடியலும், பகல் முடியும் மாலையும் என்றவாறு. அவல்-பள்ளம். மிசை-மேடு. அவலா கொன்றோ மிசையா கொன்றோ (புறம் - 185) என்றார் பிறரும். திரள்பு - திரண்டு; செய்பெனச்சம். ஈண்டுதல்-ஈண்டுப் பெருகுதல். கவலையம் குழும்பு - கவலைக் கிழங் ககழப்பட்ட குழி. கழை-மூங்கில். சாரல்-மலைப்பக்கம். சிதரல் - சிதறுதல் சிறத்தல்-மிகுதல்.

நீர்வளமும் நிலவளமும்

244 - 253 : தாங்காது ..................... பொய்கை

பொருள் : தாங்காது குணகடற்கு இவரும் குரூஉப் புனல் உந்தி நிவந்து செல் நீத்தம் - யாறுகள் தாங்காமல் கீழ்த்திசைக் கடலுக்குப் போகின்ற நிறத்தையுடைய நீராகிய முனைந்து ஓங்கி ஒழுகுகின்ற வெள்ளம், குளம் கொளச் சாற்றி - குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப, களிறு மாய்க்கும் கதிர்க் கழனி - யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி விளைந்த கதிரையுடைய கழனியிலும், ஒளிறு இலஞ்சி - விளங்கும் மடுக்களிலும், அடைநிவந்த முள் தாள சுடர்த்தாமரை - இலைக்கு மேலே ஓங்கிய முள்ளையுடைய தாள்களையுடையவாகிய ஒளியினையுடைய தாமரைப் பூவினையும், வள் இதழ் அவிழ் நீலம் - பெருமையை உடைய இதழ் விரிந்த நீலப்பூவினையும், மெல் இலை அரி ஆம்பலொடு-மெல்லிய இலையினையும் வண்டுகளையும் உடைய ஆம்பற்பூவோடே, வண்டு இறை கொண்ட கமழ் பூம் பொய்கை - வண்டுகள் தங்குதல் கொண்ட மணநாறும் பிற பூக்களையும் உடைய பொய்கைகளிலும்;

கருத்துரை : யாறுகள் தாங்காமல் கீழ்த்திசைக் கடலை நோக்கிப் போதலையுடைய நிறமமைந்த நீராகிய விரைந்து பெருகி ஒழுகும் வெள்ளம், குளங்கல் கொள்ளும்படி நிறைப்ப, யானைகளையும் மறைக்கும்படி ஓங்கிய கதிர்களையுடைய கழனிகளிடத்தும், விளங்கும் மடுக்களிடத்தும், இலைக்குமேல் ஓங்கி நிற்கும் தாமரைப் பூவினையும், தேன்மணக்கும் நறிய நெய்தற் பூவினையும் பெரிய இதழையுடைய நீலப்பூவினையும், வண்டுகள் தங்கும் மணமிக்க பிற பூக்களையுமுடைய பொய்கைகளிடத்தும் என்பதாம்.

அகலவுரை : நீர் மிக்ககாலத்தே யாற்றின் கரைகளை உடைத்தலான் தாங்காது என்றார், நீர்மிகிற் சிறையு மில்லை (புறம்-51) என்றார் பிறரும். இவர்தருதல்-ஓடுதல். குணகடற்கு- குணகடலை அடையும் பொருட்டென்க. யாண்டுத் தோன்றிற்று ஒன்று ஆண்டே ஒடுங்குதல் இயல்பாகலின் குணகடலின் முகந்து கொள்ளப்பட்ட நீர் குணகடற்கே இவர்ந்ததென்ற நயமுணர்க. உந்துதல் - முன்னுள்ளவற்றைத் தள்ளுதல், முன் உள்ள பெருக்கைப் பின்வரும் பெருக்கு உகைத் தோடலின் உந்தி என்றார். நிவந்த என்றது மேலும் மேலும் பெருகி என்றவாறு. குணகடற்கு இவர்தரும் நீத்தம், உந்தி நிவந்து செல்நீத்தம் எனத் தனித்தனி முடிவுசெய்க. புதியநீர் நிலத்தின் நிறத்தை ஏற்று நிறமுடைத்தாய் வருதலின் குரூஉப்புனல் என்றார். குரு - நிறம்; அளபெடை சாற்றி - நிறைத்து. சால்பு என்னும் பண்படியாகப் பிறந்த வினையெச்சம். செழித்தோங்கும் நிலநலங் கூறுவார் களிறு மாய்க்கும் கழனி என்றார். நிற்கின்ற யானையையும் மறைக்கும்படி ஓங்கி வளர்ந்த கதிரையுடைய கழனி என்றவாறு.

மீன்கணி னளவும் வெற்றிடங்கள் இன்மையால்
தேன்கணம் கரும்பியல் காடும் செந்நெலின்
வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமும்
ஊன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே  (சிந்தா-54)

எனத் திருத்தக்கதேவரும்,

களிறு மாய்க்கும் செந்நெல் அங்குலை  (நைட-சுயம்-138)

என அதிவீரராமபாண்டியனாரும் ஓதுவர். இவ்வாசிரியரே களிறுமாய் செருந்தி, (172) என முன்னும் ஓதியிருத்தல் காண்க. மாய்த்தல் - மறைத்தல் என்னும் பொருட்டு. ஒளிறுதல்-விளங்குதல். இலஞ்சி-மடு. நீர்ப்பூவான் விளங்குதலின் ஒளிறிலஞ்சி என்றார். பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி, (மலைபடு-228) என்றார் பிறரும். பொய்கைகளிற் றாமரையிலைகள் நீர்ப்பரப்பின் மிசைக் கிடப்பனவாக, மலர்கள் அவற்றின் மேலுயர்ந்து நின்று அழகாய்த் தோன்றுதலின், அடைநிவந்த முட்டாள சுடர்த்தாமரை என்றார். அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை (பரிபா-13:50) என்றும் முட்டாட் டாமரை (முருகு-73) என்றும் முள்ளரைத் தாமரை (சிறுபாண்-183) என்றும் பிறரும் ஓதுப. அரி-வண்டு; மெல்லிலை அரி ஆம்பல் என்றதற்கு, மெல்லிய இலையின்கண் வரிகளையுடைய ஆம்பற்பூ எனினுமாம். அரி-மென்மையுமாம். இறை கொள்ளுதல்-தங்குதல்.

மருதநிலத்திலுண்டாகும் ஓசைகள்

254-262 : கம்புட் சேவல் .................. பறையின்குரல்

பொருள் : கம்புள் சேவல் இன் துயில் இரிய வள்ளை நீக்கி வயமீன் முகந்து - கம்புட்கோழி இனிய உறக்கம் கெடும்படி வள்ளைக்கொடிகளைத் தள்ளி, வலியை உடைய மீன்களை முகந்துகொண்டு, கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் - விலைகூறி விற்ற கொடிய முடிகளையுடைய வலையான் மீன்பிடிப்பார், வேழப் பழனத்து நூழிலாட்டு ஓதை - கொறுக்கைச்சியை யுடைய மருதநிலத்து மீனைக் கொன்றுகுவித்தலாற் பிறந்த ஓசையும், கரும்பின் யந்திரம் ஓதை கட்பின் ஓதை - கரும்பிற்கு இட்ட ஆலைகளிடத்து ஓசையும் களை பறிப்பிடத்து ஓசையும், அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே- மூத்தலாற் சேற்றிலே வலியற்றுத் தங்கிய எருதுற்ற வருத்தத்தைக் கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும், ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்கை வினைஞர் அரிபறை - தழைத்த பகன்றையினையுடைய நெல்லுமுற்றிய கழனியில் அந்நெல்லை வலிய கையினாலே அறுப்பாருடைய அரித்தெழுகின்ற பறை ஓசையும்;

கருத்துரை : சம்பங்கோழி உறக்கம் கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு விலைகூறி விற்ற கொடிய முடிகளையுடைய வலையாலே மீன் பிடிப்பார் கொறுக்கைச்சியை உடைய மருதநிலத்தே மீனைக்கொன்று குவித்தலாற் பிறந்த ஓசையும், கரும்பாலையின் ஓசையும், களைபறிப்போர் ஓசையும், மூத்தலால் வலியற்றுச் சேற்றிலே விழுந்துவிட்ட எருதினைத் தூக்கிக் கரை சேர்க்கும் கள்ளுண்ட களமர் ஆரவாரமும் பகன்றை தழைத்த நென் முற்றிய கழனிகளிலே அந் நெல்லை அறுப்பார் முழக்கும் பறை ஓசையும் என்பதாம்.

அகலவுரை : கம்புட்சேவல் - ஒரு நீர்ப்பறவை; இதனைச் சம்பங்கோழி என்பர். பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியும் (சிலப் 10 : 113-4) என்றார் இளங்கோவடிகளாரும். கம்புட் கோழி - சம்பங்கோழி என்பர் அடியார்க்கு நல்லார். வள்ளை-வள்ளைக் கொடி. இது நீர்மேற் படர்தலான் வள்ளைநீக்கி என்றார். வயமீன் - வலிய மீன் : பெரிய மீன் என்றபடி. அவை வாளைமீன் வரான்மீன் முதலியன. முகந்து - என்னும் சொல் மீனின் மிகுதியை உணர்த்தி நின்றது. கொள்ளை சாற்றிய - விலைகூறி விற்ற. இனமீன் முகந்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் ........... கொள்ளை சாற்றி (அகம். 30: 2-10) என்றார் பிறரும்.

கொடுமுடி என்றது வலையின்கண் உள்ள முடிச்சுக்களை. வலைஞர் என்றது, வலைவீசி மீன்பிடிக்கும் களமர்களை என்க. வேழம் - கொறுக்கைச்சி. இதனைக் கொறுக்காந்தட்டை என இக் காலத்தே வழங்குப - இது மருதநிலத்தின்கண் வளரு மொருவகைப் புல் ஆதலின் வேழப்பழனம் என்றார். நூழிலாட்டு என்னுஞ் சொற்குக் கொன்று குவித்தல் என்பது பாடல்சான்ற புலனெறி வழக்கிற் பொருளாம். என்னை? பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் எனத் தொல்காப்பியனாரும் ஓதினர் ஆகலின் என்க. ஆசிரியர் இளங்கோ வடிகளாரும்,

கடும்படை மாக்களைக் கொன்றுகளங் குவித்து.................
நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன் (சிலப். 26: 212 218)

என்றோதுதல் காண்க. ஓதை என்பதனை நூழிலாட்டு எந்திரம் என்பவற்றோடும் இயைத்துக்கொள்க. ஓதை-ஓசை. அள்ளல்-சேறு. முதிர்ந்தமையாற் கரைசேரமாட்டாது சேற்றில் விழுந்த பகட்டினைக் கள்ளுண்ட களமர் ஆரவாரத்தோடு கரைசேர்க்கின்றனர் என்க. அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலும். அளறுபோகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை, (பதிற்று. 27-12-4) என்றார் பிறரும். எந்திரம் - ஆலை. கட்பு - களைஎடுப்பு. பகடுறு விழுமம் - என்றது பகடு எய்தும் வருத்தத்தை என்க. கள் ஆர் - கள்ளை உண்ட. அகடாரார் என்றார் வள்ளுவனாரும். வன்கை - வலிய கை. இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைக்கும் கையாகலின் வன்கை வினைஞர் என்றார். பறை-ஓசைக்கு ஆகுபெயர். நெல்லரிவார் அக்கழனியில் வாழும் பறவை முதலியன ஓடி யுய்தற்பொருட்டுப் பறை முழக்குதல் வழக்கம். இதனை வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇ கண்மடற் கொண்ட தீந்தேன் இரிய (புறம். 348) என்றும், வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை ............. படுபுள்ளோப்பும் (அகம். 204; 10-11) என்றும், வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை (அகம். 40; 13-4) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க.

திருப்பரங்குன்றம்

262-270 : இன்குரல் .................... ஒருசார்

பொருள் : இன்குரல் தளி மழை பொழியும் தண்பரங்குன்றில் கலிகொள் சும்மை - இனிய ஓசையினையுடைய துளிகளை யுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றில் விழாக் கொண்டாடும் ஆரவாரமும், ஒலிகொள் ஆயம் ததைந்த கோதை தாரொடு பொலியப் புணர்ந்து உடன் ஆடும் இசையே- புதுநீர் விழாவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண்ட மகளிர்திரள் தம்மிடத்து நெருங்கின கோதை தம் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெறக் கூடுமாறு அவர்களுடனே நீராடும் ஆரவாரமும் ஆகிய, அனைத்தும் அகல்இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப-அவ்வோசை முழுதும் ஏனைப் பூதங்கள் விரிதற்குக் காரணமாகிய பெருமையுடைய வானத்துச் சென்று முழங்கி ஆண்டு வாழ்வோர்க்கு இனிதாக ஒலியாநிற்க, குருகு நரல மனைமரத்தான் மீன்சீவும் பாண் சேரியொடு - குருகென்னும் பறவைகள் கூப்பிடும்படி மனையிடத்து மரங்கள் தோறும் மீனைத் திருத்தும் பாணர் குடியிருப்பில் பாடலானும் ஆடலானும் எழுந்த ஓசையோடே, மருதம் சான்ற தண்பணை சுற்றி ஒருசார் - ஊடலாகிய உரிப்பொருளமைந்த மருதநிலத்தாலே சூழப்பட்ட ஒரு பகுதியும்;

கருத்துரை : இனிய ஓசையோடே துளிக்கும் முகில் பொழியா நின்ற குளிர்ந்த திருப்பரங்குன்றில் திருவிழாக் கொண்டாடும் ஆரவாரமும், புதுநீர் விழாவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண்ட மகளிர் குழாம் தம் கோதை தங் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெறக் கூட நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும் அகன்ற வானத்தே சென்று ஆண்டுள்ளார்க்கு இனிதாக இசையாநிற்பக் குருகுகள் கூப்பிடத் தம் மனைக்கண் நிற்கும் மரங்கடோறும் மீன்திருத்தும் பாணர் குடியிருப்பிற் பாடலானும் ஆடலானும் எழுந்த ஓசையோடே கூடிய மருத நிலம் தழுவிய ஒரு பகுதியும்;

அகலவுரை : கழனியினும் பொய்கையினும் சேவல் துயில் இரிய வள்ளை நீக்கி மீன் முகந்து சாற்றிய வலைஞர் நூழிலாட்டும், எந்திரத்தின் ஓசையும், கட்பின் ஓசையும், விழுமம் பெயர்க்கும் களமர் ஆர்ப்பும், பறையின் ஓசையும், ஆயம் ஆடும் இசையும் ஆகிய அனைத்தும் சேரியின் ஒலியொடு இசைப்ப மருதம் சான்ற தண்பணை சுற்றப்பட்ட ஒருபகுதியும் எனக் கூட்டுக.

மழை பொழியும் ஓசை கேட்டற்கு இனிதாயிருத்தலின் இன்குரற்றளி என்றார். தளி-துளி, பொழியும் என்றதற்குத் தங்கும் எனப் பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். எப்பொழுதும் மழைபொழிதலுண்மையாற் குளிர்ந்திருக்கும் திருப்பரங்குன்றென்க. பொழியும் என்றது, தண்பரங்குன்று என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றதென்க. மருதநிலம் சூழ இடையே நிற்றலின் மருதநிலத்து ஆரவாரம் விழாவார வாரத்தோடே கலந்ததென்க. திருப்பரங்குன்றிற்கு மருதம் அண்மையிலிருத்தலை,

மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று  (முருகு - 71-77)

என ஆசிரியர் நக்கீரனாரும் ஓதுதல் காண்க. சும்மை - ஈண்டு இசைப் பொருண்மையை உணர்த்திற்று. ஆயம்-மகளிர் கூட்டம். தார் - மார்பில் அணியும் மாலை. மகளிர் தம் கோதை தங்கணவர் மார்பின் மாலையோடே பொருந்தி அழகுறுமாறு சேரக்கூடி ஆடினர் என்க. மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் (பட்டினப். 109.10) என்றும், மகளிர் கோதை மைந்தர் புனையவும், மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரி. 20: 20-1) என்றும் பிறரும் கூறுதல் காண்க. வானத்து இனிது இசைப்ப என்ற குறிப்பால் ஆண்டு வாழ்வோர்க்கு என உரையிற் கூறப்பட்டது. குருகு - ஒருவகைப் பறவை. நரலல் - ஒலித்தல். பாணர் மீன் பிடிக்கும் தொழிலும் உடையராகலின் மீன்சீவும் பாண்சேரி என்றார். பாண்சேரி - பாணர் குடியிருப்பு. இஃது ஆண்டெழும் ஆரவாரத்திற்கு ஆகுபெயர் என்க. மருதம் சான்ற - மருத ஒழுக்கம் அமைந்த - அஃது ஊடலும் ஊடனிமித்தமுமாம். 271 - சிறுதினை என்பது முதல் 285-புறவணிந்து ஒருசார் என்னும் துணையும் ஒருதொடர். இதன்கண் முல்லைசான்ற முல்லைவளம் கூறப்படும்.

முல்லைநில வளம்

271-285 : சிறுதினை ................ ஒருசார்

பொருள் : சிறு தினை கொய்யக் கவ்வை கறுப்பக் கருங்கால் வரகின் இருங்குரல் புலர-சிறிய தினைக்கதிர்கள் கொய்யப் படவும் எள்ளிளங்காய்கள் முற்றிக் கருமை எய்தவும் கரிய தாளினையுடைய வரகினது கரிதாகிய கதிர் முற்றி ஈரம் புலரவும், ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர - ஆழ்ந்த குழியிலே திருவினையுடைய மணிகள் கிடந்து விளங்கவும், எழுந்த கடற்றின் நன்பொன் கொழிப்ப - வளர்ந்த காட்டிடத்தே மாற்றற்ற பொன் மேலே பிறழும்படி, பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி மடக்கண் பிணையொடு மறுகுவன வுகள - பெரிய அழகைப் பெற்ற சிறிய தலையினையுடைய நௌவியமான் மடப்பத்தையுடைய கண்ணினையுடையவாகிய பிணையோடே கழல்வனவாய்த் துள்ளாநிற்பவும், சுடர்ப் பூங்கொன்றை தாஅய நீழல் - ஒளியினையுடையவாகிய பூக்களையுடைய கொன்றை பரந்த நிழலிடத்தே, பாஅயன்ன பாறை அணிந்து - பரப்பினாலொத்த பாறை அழகு பெற்று, நீலத்தன்ன பைம்பயிர் மிசைதொறும் - நீலமணியை ஒத்த பசிய பயிர்களினிடந்தோறும், சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை வெள்ளியன்ன ஒள் வீ உதிர்ந்து தாஅய் - முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடனே முல்லையினுடைய வெள்ளியின் நிறத்தை ஒத்த ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து பரவவும், மணி மருள் நெய்தல் உறழக் காமர் துணிநீர் மெல்லவல் தொய்யிலொடு மலர - நீலமணி என்று மருளும் நெய்தல் மாறுபடும்படி விருப்பத்தையுடைய தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்திலே தொய்யிற் கொடியோடே மலராநிற்பவும், வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் - இவையிற்றால் இழைத்தல் வல்ல வேன் மகன் இழைத்த வெறிக் கூத்தையுடைய களத்தை ஒத்ததாக முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்து ஒரு பகுதியும்;

கருத்துரை : சிறியதினைக் கதிர்கள் கொய்யப்படவும், எள்ளிளங்காய்கள் முற்றிக் கருநிறங்கொள்ளவும், கரிய தாளினையுடைய வரகின் கருங்கதிர்கள் முற்றிப் புலரவும், ஆழ்ந்த குழிகளிடத்தே மணிகள் மிளிரவும், வளர்ந்த காட்டிடத்தே பொன்மேலே பிறழுமாறு நவ்வி மான்கள் பிணைகளோடே சுழன்று துள்ளவும், ஒளிமிக்க பூக்களையுடைய கொன்றை படர்ந்த நீழலின்கண் பரப்பிவைத்தாற் போன்ற பாறை அழகுபெற்று நீலமணிபோலும் நிறமுடைய பயிரின்மேல் முசுண்டையும் முல்லையும் வெள்ளிபோல் விளங்கும் மலர்களை உதிர்த்தலால் அவை பரவாநிற்பவும், நீலமணிபோன்ற நெய்தல் தொய்யிற்கொடியோடே மாறுபட்டுத், தெளிந்த நீரையுடைய பள்ளங்களிலே மலரவும், இவையிற்றால் வல்லவனாகிய வேன்மகன் இழைத்த நெறியாடு களம்போல விளங்கித் தோன்றும் முல்லை ஒழுக்கமமைந்த முல்லையம்புறவு சூழ்ந்து ஒருபக்கம் என்பதாம்.

அகலவுரை : சிறுதினை கொய்யும் செவ்வியை எய்தினமையால் முல்லை நிலமாக்கள் அதனைக் கொய்யாநிற்ப என்க. கவ்வை - எள்ளிளங்காய். கௌவை போகிய கருங்காய்....... ஈரெண், (105-6) என்றார் மலை படுகடாத்தினும். எள்ளிளங்காய் பசுமைதீர்ந்து முற்றுங்காற் கருநிற மடைதலான் கவ்வை கறுப்ப என்றார். கறுப்ப - கருநிறங்கொள்ள; முதிர என்றவாறு. கருங்கால் - வரகு - கரிய தாளையுடைய வரகு. இருங்குரல் - கரிய கதிர்; பெரிய கதிருமாம். புலர -ஈரம் வற்றி நன்கு முதிர என்றவாறு. குழும்பு - குழி. இச்சொல் கூட்டம் என்னும் பொருளில் முன்னர் வழங்கப்பட்டமை அறிக. (மதுரைக். கா-24) திருமணி : பண்புத்தொகை. திருவாகிய மணி என்க. அழகிய மணியுமாம். எழுந்த கடறு - வளர்ந்த காடு. நன்பொன் - மாற்றற்ற பொன். கொழித்தல்-மேலே வரச்செய்தல். பிணை எனப் பின் வருதலால் நௌவி ஆண்மான் என்க. நௌவிமான் - மான் வகையில் ஒன்றுமாம். பிணை - பெண்மான். மான்கள் பிணையோடு துள்ளிக் குதித்தலால் அவையிற்றின் குளம்புகளாற் கிண்டப்பட்டுப் பொன் மேலெழுந்த தென்க. பொன் போன்று மிளிரும் பூக்களையுடைமையின் சுடர்ப்பூங்கொன்றை என்றார். பாயன்ன பாறை-பரப்பி வைத்தாற் போன்று அழகாக விளங்கும் பாறை. படுத்துவைத்தன்ன பாறை என்றார் மலைபடுகடாத்தினும். அணிந்து - அழகுற்று. நீலமணி போன்று விளங்கும் பசிய பயிர்களின் மேல் முசுண்டை மலரும் வெள்ளி போன்று மிளிரும் முல்லை மலரும் உதிர்ந்து அழகுற்று விளங்க, அயலிற் பள்ளத்தில் நெய்தல் தொய்யிற்கொடியோடே மலர்ந்து விளங்க அவ்விடம் வெறியாடற் கிழைத்த களனென விளங்கும் என்க. வெள்ளி - வெள்ளியென்னும் விண்மீன். வெண்பொன் எனினுமாம். சுரிமுகிழ்-முறுக்குடைய அரும்பு. நெய்தல் தொய்யிலொடு உறழ மலர என்க துணிநீர் - தெளிந்த நீர். மெல்லவல் - நெகிழ்ச்சி யுடைய பள்ளம். வல்லோன் - களனிழைப்பதில் வல்லவனாகிய வேன்மகன். தைஇய - இழைத்த. வெறிக்களம் - வெறியாடுகின்ற இடம். முல்லைசான்ற - முல்லை ஒழுக்கம் அமைந்த; அஃதாவது, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் பொருந்திய என்க. புறவு - காடு.

தினைகொய்யக் கவ்வை கறுப்பக் குரல் புலர, மணி கிளர நௌவி பிணையோடுகள. நிழல் அணிந்து பயிர் மிசை வீ உதிர்ந்து தாய், நெய்தல் தொய்யிலொடு உறழ மலர, களங்கடுப்ப முல்லை சான்ற புறவு சூழ்ந்தென்க. 286-நறுங்காழ் என்பது தொடங்கி, 301- ஒருசார் என்னுந் துணையும் குறிஞ்சிவளங் கூறிய ஒருதொடர்.

குறிஞ்சி வளம்

(மலைநிலத்தின் விளைபொருள்கள்)

286-290 : நறுங்காழ் ................ ஈண்டி

பொருள் : நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை - நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டு நிலத்தே விதைத்த குறிய கதிர்களையுடைய தோரை நெல்லும், நெடுங்கால் ஐயவி - நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும், ஐவனம் வெள் நெல்லொடு அரில் கொள்பு நீடி - ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே பிணக்கங் கொண்டு வளரப்பட்டு, இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் - இஞ்சியும் மஞ்சளும் பசுத்த மிளகுக்கொடியும் ஒழிந்தனவுமாகிய, பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி - பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கற்றரையிடத்தே குவிக்கப்பட்டு;

கருத்துரை : நறிய அகில் சந்தன முதலிய மரங்களை அழித்துத் திருத்திய மேட்டுநிலத்தே விதைத்த குறிய கதிர்களையுடைய தோரை நெல்லும், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும் ஐவனமென்னும் வெண்ணெல்லோடே பிணங்கி வளரப்பட்டு இஞ்சியும் மஞ்சளும் பசிய மிளகுக் கொடியும் பிறவுமாகிய பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கற்றரையிடத்தே குவிக்கப்பட்டு என்பதாம்.

அகலவுரை : மணமுடைய அகக்காழுடைய அகிலையும் சந்தனத்தையும் ஆகுபெயரான் நறுங்காழ் என்றார். கொன்று - வெட்டிக் களைந்து; காடுகொன்று நாடாக்கி (பட்டினப் 283) என்றார் பிறரும். கோடு-மேட்டு நிலம். தோரை - தோரை நெல்; மூங்கில் நெல். ஐவன வெண்ணெல் அரில் கொள்பு என்ற தொடர்க்கு, ஐவனநெல்லும் வெண்ணெல்லும் தம்முட் பிணங்கி என வேறுவேறு நெல்லாகக் கொண்டுரைத்தற்கு ஒற்றில்லாமையால் ஐவனமாகிய வெண்ணெல் எனப் பொருள் கூறப்பட்டது. பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் என்ற மலைபடு கடாத்தின் அடிகட்கு ஐவனநெல்லும் வெண்ணெல்லும் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை வகுத்தனர்; (மலைபடு. 114-5)

அரில் கொள்ளுதல்-ஒன்றோடொன்று பிணங்குதல். கொள்பு : செய்பு என்னும் எச்சம். ஐயவி - வெண் சிறுகடுகு. கறி -மிளகுக் கொடி, பிறவும் ஆகிய பல்வேறு தாரம் என்க. தாரம் - பண்டம். மலைப் பஃறாரமும் கடற் பஃறாரமும் (சிலப்-6 : 153) என்றார் பிறரும். கல்லகம் - கற்றரை.

குறிஞ்சிநிலத்தின்கண் எழும் பல்வேறு ஓசைகள்

291-301 : தினைவிளை .................... ஒருசார்

பொருள் : தினைவிளை சாரல் கிளிகடி பூசல் - இவையிற்றோடே தினையும் விளையப்படுகின்ற மலைப்பக்கத்தில் படியும் கிளியை ஓட்டும் ஆரவாரமும், மணிப்பூ அவரை குரூஉத்தளிர் மேயும் ஆமா கடியும் கானவர் பூசல் - பன்மணி போலும் பூவினையுடைய அவரையினது நிறமிக்க தளிரைத் தின்னும் ஆமாவை ஓட்டுகின்ற கானவருடைய ஆரவாரமும், சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் வீழ்முகக் கேழல் அட்ட பூசல் - மலைமிசை யுறையும் குறவன் கல்லப்பட்ட மூடின வாயையுடைய பொய்க்குழியிலே விழுந்த பக்குவத்தினையுடைய ஆண்பன்றியைக் கொன்றதனாலுண்டான ஆரவாரமும், கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் நறும்பூக் கொய்யும் பூசல்-கரிய தாளினையுடைய வேங்கையிடத்துப் பெரிய கவடுகளில் தோன்றிய கொம்புகளிற் பூத்த நறிய பூவைப் பறிக்கும் மகளிர் புலி புலி என்று கூறும் ஆரவாரமும், இருங்கேழ் ஏறு அடு வயப்புலிப் பூசலொடு அனைத்தும் - கரிய நிறத்தையுடைய பன்றியைக் கொல்லுகின்ற வலியினையுடைய புலியினது ஆரவாரத்தோடே கூடி எல்லா ஆரவாரமும், இலங்கு வெள்ளருவியொடு சிலம்பகத்து இரட்ட - விளங்குகின்ற வெள்ளிய அருவி முழக்கத்தோடே மலையிடத்தே எதிரொலி செய்யாநிற்ப, கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து - கரிய காலையுடைய குறிஞ்சியினது பெயரையுடைய புணர்ச்சியாகிய உரிப்பொருள் அமைந்த பக்கமலைகளாற் சூழப்பட்ட, அருங்கடி மாமலை தழீஇ ஒரு சார் - பெறுதற் கரிய சிறப்பினையுடைய பெரிய மலை தழுவப்பட்டு ஒரு பக்கம்;

கருத்துரை : இவையிற்றோடே தினையும் விளையப்படுகின்ற மலைப் பக்கத்தே படியும் கிளியைக் கடியும் ஓசையும், மணிபோலும் பூக்களையுடைய அவரையினது நிறமிக்க தளிரைத் தின்னும் ஆமாவை ஓட்டும் கானவருடைய ஓசையும், மலைமிசை உறையுங் குறவன் கல்லிய குழியில் வீழ்ந்த ஆண் பன்றியைக் கொன்றதனாலுண்டான ஆரவாரமும், கரிய காலையுடைய வேங்கையின் பூக்களைக் கொய்யும் மகளிர் புலிபுலி என்று கூவும் ஆரவாரமும், கரிய பன்றியைக் கொல்லுகின்ற வலிய புலியின் ஆரவாரத்தோடே கூடி எல்லா ஆரவாரமும் அருவி முழக்கோடே மலையிடத்தே எதிரொலி செய்யாநிற்ப, குறிஞ்சி யென்னும் உரிப்பொருள் அமைந்த பக்கமலைகளையுடைய பெறுதற்கரிய சிறப்பமைந்த பெரிய மலைகள் தழுவப்பட்டு ஒரு பக்கம் என்பதாம்.

அகலவுரை : தினை முதிர்ந்துழி அதன் கதிர்களைக் கவரும் கிளி முதலிய பறவைகளைக் குறமகளிர் தட்டை குளிர் முதலிய கருவிகளைப் புடைத்தும் கவண் எறிந்தும் ஆயோ எனக் கூவியும் ஓட்டுதல் வழக்கம். இதனை,

துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள் ளோப்பி
எற்பட வருதியர் எனநீ விடுத்தலில்
...................................................
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளிகடி மரபின ஊழூழ் வாங்கி  (குறிஞ்சி - 37:44)

என்றும்,

குறமகள்.............
தட்டையின் ஐவனச் சிறுகிளி கடியும் நாடன்  (ஐங். 285 : 1-3)

என்றும்,

ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்  (மலைபடு, 328-329)

என்றும் வருவனவற்றாலும் அறிக. அவரை மலர் மணிபோன்றிருத்தலின் மணிப்பூ என்றார். சிவப்பு நீலம் வெள்ளை முதலிய பன்னிற மலர்களையும் உடைமையின் பன்மணி என உரை கூறப்பட்டது. இலையினும் தளிர் நிறத்தான் அழகுடைத்தாகலின் குரூஉத்தளிர் என்றார். குரு - நிறம். ஆமா - காட்டுப் பசு. சேணோன் - உயரத்திருப்போன் என்னும் பொருட்டாகலின் மலை மிசைவாழும் குறவன் எனப்பட்டது. சேணோன் - என்பதற்கு இழி குலத்தான் என்று பொருள் கூறுவாருமுளர் என நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். பயம்பு - பள்ளம். வேங்கைமரத்தின் அடிப்பகுதி கரிய நிறமுடையதாகலான் கருங்கால் வேங்கை என்றார். வேங்கை மலர் கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவுதல், அங்ஙனம் கூவினால் அம்மரம் மலரும் என்றும் வளைந்து கொடுக்கும் என்றும் கொண்ட எண்ணத்தாலாம். இதனை,

தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை
மலைமா ரிடூஉம் ஏமப் பூசல்  (மலைபடு-305-6)

என்றும்,

மான்ற வேங்கை மலர்பதம் நோக்கி
ஏறா திட்ட ஏமப் பூசல்  (குறுந்- 241-4-5)

என்றும்,

ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற  (அகம்-48, 6-7)

என்றும்,

கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய மகளிர்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்  (அகம்-52: 2-3)

என்றும், பிறர் கூறுமாற்றானும் உணர்க. இருங்கேழ் ஏறு - கருநிறமுடைய ஆண்பன்றி; கரிய ஆனேறு எனினுமாம். சிலம்பு-மலை. இரட்ட - எதிரொலிசெய்ய. கருங்காற் குறிஞ்சி சான்ற என்றதற்குக் கரிய காலையுடைய குறிஞ்சியின் பெயரையுடைய ஒழுக்கம் அமைந்த என்க. அது புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாம். வெற்பு - ஈண்டுப் பக்கமலை என்க. மாமலை-பெரிய மலை. காழ் கொன்று வித்திய தோரையும் ஐயவியும் ஐவன வெண்ணெல்லும் நீடிப் பிறவும் தாரமொடு ஈண்டி விளை சாரலில் கிளிகடி பூசல். ஆமாக் கடியும் பூசல், பூக்கொய்யும் பூசல், கேழலட்ட பூசல், ஏறடு வயப்புலிப் பூசலோடு அனைத்தும் அருவியொடு சிலம்பகத் திரட்ட, குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து மாமலை தழுவி ஒருசார் என்றித் தொடரை இயைத்துக் கொள்க. 302 - இருவெதிர்ப் பைந்தூறு என்பது தொடங்கி, 314 - ஒரு சார் என்னும் துணையும் பாலைநிலத்தின் பண்புரைத்த ஒருதொடர்.

பாலைநிலத்தின் பண்பு

302-314 : இருவெதிர் ..................... ஒருசார்

பொருள் : இரு வெதிர்ப் பைந்தூறு கூர் எரி நைப்ப - பெரிய மூங்கிலினது பசிய புதரினை அதனிடத்தே தோன்றிய மிக்க நெருப்புச் சுட்டழித்தலானே, நிழத்த யானை மேய்புலம் படர-ஓய்ந்த யானைகள் தமக்கு மேயலாம் இடங்களிலே செல்லா நிற்பவும், கழித்த இயவர் இயம் தொட்டன்ன - மகிழ்ந்த இசைக் கருவியாளர் தம் இசைக் கருவிகளை முழக்கினாற் போன்ற, கண் விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து-மூங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் முழக்க முண்டாகும்படி தட்டை அழகு அழிகையினாலே, அருவி ஆன்ற அணியின் மாமலை - அருவிகள் இல்லையான அழகில்லாத பெரிய மலையிடத்தே உள்ள, வை கண்டன்ன புல்முளி அங்காட்டு - வைக்கோலைக் கண்டாலொத்த ஊகம்புல் உலர்ந்த அழகிய காட்டின்கண்; கமம் சூழ் கோடை விடரகம் முகந்து காலுறு கடலின் ஒலிக்கும் - நிறைவினையுடைய சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்து கொள்கையினாலே காற்று மிகுந்த கடல்போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய, இலைவேய் குரம்பை உழை அதட்பள்ளி உவலைக் கண்ணி வன் சொல் இளைஞர் - குழையாலே வேய்ந்த குடிலிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும் தழைவிரவின கண்ணியினையும் கடிய சொல்லினையும் உடைய இளையோர், சிலையுடைக் கையர் கவலை காப்ப - வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே ஆறலை கள்வர் வாராமற் காவா நிற்ப, நிழல் உருவிழந்த வேனில் குன்றத்து - நிழல் தன்வடிவை இழத்தற்குக் காரணமான முதுவேனிற் காலத்தையுடைய மலையிடத்து, பாலை சான்ற சுரம் சேர்ந்தொருசார் - பிரிவாகிய உரிப் பொருளமைந்த அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம்;

கருத்துரை : பெரிய மூங்கில்தூற்றிலே தோன்றிய நெருப்பு அத்தூற்றினைச் சுட்டழித்தலான் ஓய்ந்த யானைகள் தமக்கு மேய்ச்சல் கிடைக்கும் நிலங்கட்குப் போகும்படி வாச்சியங்களை முழக்கினாற் போன்ற ஓசையோடே அம் மூங்கிற் காடுகள் கணுக்கள் விட்டுப்போய் உடைந்து தட்டைகள் அழகழிதலானும், அருவிகள் இல்லாமையானும் அழகிழந்த மலையிடத்தே வைக்கோலைப் போன்று ஊகம் புல் உலர்ந்து தோன்றும் காட்டில் உள்ள முழைஞ்சுகள் நிறைவினையுடைய சூறாவளியை முகந்து கோடலால், காற்று மிக்க கடல் போன்று ஒலிப்பதும், தழையால் வேயப்பட்ட குடிலிலிருக்கும் மான்தோற் படுக்கையினையும் கண்ணியினையும் வன்சொல்லினையும் உடைய இளைஞர்களால் கவலைகளில் ஆறலை கள்வர் வாராமற் காக்கப்படுவதும், நிழல் இன்றி உலர்ந்த முதுவேனிற் பருவத்தை யுடையதும் ஆகிய மலைச்சார்பினுள்ள அருநிலம் சேரப்பட்டு ஒருசார் என்பதாம்.

அகலவுரை : இரு வெதிர் - பெரிய மூங்கில், பைந்தூறு - பசிய புதர். கூர் எரி - மிக்க நெருப்பு. சால வுறுதவ நனிர்கூர் கழிமிகல் என்பது நன்னூற் சூத்திரம் (உரி, 15). நைத்தல்-நண்டுச் சுட்டழித்தல் என்க. பரந்துபடு கூரெரி கானம் நைப்ப (நற். 177.1.2) என்றும், கோடெரி நைப்பவும் (பொருநரா - 234) என்றும் பிறரும் கூறுதல் காண்க. மூங்கிலிற் றீயுண்டாகி அதனையே அழித்து விடும் என்பதனை,

வான்றொடர் மூங்டல் தந்த வயங்குவெந் தீயி தென்னத்
தான்றொடர் குலத்தை யெல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள்  (கரன்வதை - 66)

எனக் கம்பநாடர் கூறுமாற்றான் அறிக. முளிகழை இழைந்த காடுபடு தீயின் (248) என்றார் மலைபடுகடாத்தினும். நிழத்தல்-ஓய்தல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (உரி.32) என்பர் தொல்காப்பியனார். காடு இங்ஙனம் தீயாற் கரிந்தமையால் மேய்ச்சலற்று ஓய்ந்த யானைகள் என்க. மேய் புலம் - மேயல் உள்ள வேறு நிலம். மூங்கிற்காடு தீப்பட்டு வேங்கால் கணுக்கள் விடுதலானும் தட்டைகள் உடைதலானும் பல்வேறு இசைக் கருவிகளை முழக்கினாற் போன்று ஓசையெழுமாகலின் இயவர் இயந்தொட் டன்ன என உவமை எடுத்தோதினார். கலித்த - மகிழ்ந்த. இயவர் - இசைக் கருவியாளர். விடுபு : செய்பெனெச்சம். உடையூஉ: செய்யூ என்னெச்சம் அளபெடுத்தது. அருவி ஆன்ற - அருவி இல்லையாய் அமைந்துவிட்ட என்க. இனி ஆன்ற என்னும் சொல் நிறைந்த என்னும் பொருட்டாகவும் வருதலின், அருவி ஆன்ற அணியில் மாமலை என்ற தொடர்க்கு அருவிகள் நிறைந்த அழகு இல்லையாய்ப் போன பெரிய மலை எனப் பொருள் கூறினும் அமையும். ஆன்ற என்பதற்கு இல்லையான என்றே ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் உரைத்தார். மலைகட்கு அழகாவது மரம் தழைத்தலும் அருவி பாய்தலும் முதலியனவே ஆகலின் அவையின்மையின் அணியில் மாமலை என்றார். விடர் -மலை முழைஞ்சு. கோடை - மேல்காற்று. முதுவேனிற் பருவக்காற்றுமாம்.

என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன்  (சிலப். 14: 121-24)

என்றார் ஆசிரியர் இளங்கோவடிகளாரும். கமம் -நிறைவு. கமம் நிறைந் தியலும் (உரி-57) என்பது தொல்காப்பியம். சூழ்வளி - சூறாவளி; வை -வைக்கோல்; இஃது உலந்த ஊகம். புல்லிற்கு உவமை. முளிதல்-உலர்தல். உழையதட்டுள்ளி - மான்தோலாகிய படுக்கை.

ஈத்திலை வேய்ந்த வெய்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி  (98-9)

என்றார் பெரும்பாணினும். வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழை (அகம் 58: 4) என்றும், சிரூர் மரையதளிற் றங்கு கங்குற் சிறு துயிலே (திருச்சிற் - 398) என்றும் பிறர் கூறுதல் காண்க. உவலைக் கண்ணி -தளிர் விரவிப் புனைந்த மாலை; இதனைப் படலை மாலை என்றும் கூறுப. கவலை - பல வழிகளும் கூடுமிடம். மரம் முதலியன இன்மையான் நிழலற்றுப்போன என்பார் நிழலுரு விழந்த என்றார். பாலைக்கு நிலமின்மையான் வேனிற்பருவம் நீடி முல்லையும் குறிஞ்சியுமே பாலையாக மாறும் என்பவாகலின் இப் பாலை குறிஞ்சி திரிந்த பாலை என்பார் குன்றத்துப் பாலை என்றார். இதனை,

வேனலம் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவம் கொள்ளும்  (சிலப்.11: 62-66)

என இளங்கோவடிகளார் கூறுமாற்றானும் உணர்க. தூறு எரிநைப்ப யானை மேய்புலம் படரத் தட்டை கவின் அழிந்து அணியில் மலையிடத்துக் காட்டில் கோடையை விடர் முகந்து ஒலிக்கும் சும்மையுடைய குன்றத்துப் பாலை என்க. 315-முழங்கு கடல் என்பது தொடங்கி 326-அமைவர என்னுந் துணையும் ஒரு தொடர்.

நெய்தல்நில வளம்

315-326 : முழங்குகடல் .................... அமைவர

பொருள் : முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் - ஒலிக்கும் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும், அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை-வாளரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளையல்களும், பரதர் தந்த பல்வேறு கூலம்- செட்டிகள் கொண்டு வருதலால் மிகப் பலவாய் வேறுபட்ட பண்டங்களும், இருங்கழிச் செறுவில் தீம்புளி வெள்ளுப்பு - கரிய கழியிடத்துப் பாத்தியில் விற்கும் தித்திப்புக் கூட்டிப் பொறித்த புளியோடே ஆண்டு விளையும் வெள்ளிய உப்பும், பரந்து ஓங்கு வரைப்பின் - மணற்குன்று பரந்துயரும் கானலிடத்தே, வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - வலிய கையினையுடைய திமிலர் கொழுவிய மீன்களை அறுத்த துடியின் கண் போலுருண்ட துணிகளும் ஏற்றப்பட்ட, விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் - சீரிய மரக்கலங்களும் அவையிற்றைக் கடலிலே இயக்கும் மீகாமர்களும், நனந்தலைத் தேஎத்து நல் கலன் உய்ம்மார் புணர்ந்து உடன்கொணர்ந்த புரவியொடு அனைத்தும் - அகன்ற இடத்தையுடைய யவனம் முதலிய நாட்டினின்றும் இவ்விடத்துண்டாகிய பேரணிகளை ஆண்டுச் செலுத்தற்குப் பலரும் கூடித் தம்மோடு கொண்டு வந்த குதிரைகளோடே முழுவதும், வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப - நாடோறும் முறைமையே முறைமையே மிகுகையினாலே, நெய்தல் சான்ற வளம்பல பயின்று - இரங்கலாகிய உரிப்பொருள் அமைந்த நெய்தனிலத்தே அமைந்த இன்னோரன்ன வளம் பலவும் நெருங்கப்பட்டு, ஆங்கு ஐம்பால் திணையும் கவினி அமைவர - அம் மண்டலத்தின் கண்ணே இங்ஙனம் ஐந்து கூற்றினையுமுடைய நிலங்களும் அழகுபெற்றுப் பொருந்துதல் தோன்ற;

கருத்துரை : முழங்குகின்ற கடலாலே தரப்பட்ட விளங்கும் ஒளியுடைய முத்துக்களும், வாளரம் போழ்ந்த இடம் நேரிய வளையலும், செட்டிமக்கள் கொண்டுவந்த பல்வேறு பண்டங்களும், கழியிடத்துப் பாத்திகளிலே விற்கும் தீம்புளியும், ஆண்டுப்படும் வெள்ளிய உப்பும், மணற்குன்று பரந்தோங்கிய கானலிடத்தே வலிய கையையுடைய திமிலர் கொழுத்த மீன்களை யறுத்த துடிக்கண் போன்ற உணங்கற்றுணிகளும், இவையிற்றை ஏற்றிய மரக்கலங்களும், யவனம் முதலிய நாட்டினின்றும் மரக்கல மீகாமர் பலரும் கூடி இவ்விடத்துண்டாகிய பேரணிகலன்களைப் பண்டமாற்றாகத் தத்தம் நாட்டிற்குக் கொண்டு போம் பொருட்டுச் சேரக் கொண்டு வந்த குதிரைகளோடே இன்னோரன்ன அனைத்தும் நாளுக்கு நாள் மிக்குப் பெருகி வருதலானே நெய்தனிலத்துச் செல்வம் பலவும் செறிந்து இரங்கல் என்னும் உரிப்பொருள் அமைந்த கடல் சார்ந்து ஒருசார் என ஈண்டுக் கூறிய ஐவகை நிலங்களும் அம்மண்டபத்தே அழகு பெற்றுப் பொருந்துதல் அமையா நிற்ப என்பதாம்.

அகலவுரை : 238- குணகடல் என்றது தொடங்கி 325-அமைவர என்னுந் துணையும் தொடர்ந்த அடிகளில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தமிழ் நிலத்தே அமைந்த ஐந்து நிலப்பகுதிகளின் பண்பும் வளமும் அழகுறக் கூறிக் கற்போருளத்தே ஒரு சிறந்த நாட்டினைத் தோற்றுவித்தார் நல்லிசைப் புலவர். உலகத்தை முதல், கரு, உரி என மூன்றாக வகுப்பார் செந்தமிழ் நல்லிசைப் புலவர். அவையிற்றுள் முதலில் கருவும் கருவின் உரியும் ஒன்றற்கொன்று முறையே சிறந்தன என்றும் ஓதுப. இதனை,

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொல்.அகத்-3)

எனத் தொல்காப்பியர் ஓதுமாற்றானும் அறிக. நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனாரும், இம்மூன்றனுள்ளும் சிறந்த உரிப்பொருள் நிகழாவழி ஏனைய இருந்தும் இருந்தில என்னுங் கருத்தானே அவ்வந் நிலங்களைக் கூறி முடிக்குமிடத்தே அவ்வவ்வொழுக்கங்களையும் நன்கு நிகழ்வனவாக ஓதி வருதல் அறிக.

மருதம்

இனி, குணகடல் கொண்டு குடகடல் முற்றி விளிவிடன் அறியாது பெரும் பெயல் சிறத்தலில் தாங்காது புனல் நிவந்து செல்நீத்தம் சாற்ற, கழனியிலும் பொய்கையிலும் மீன் முகந்து வலைஞர் நூழிலாட்டும் ஓதையும் எந்திர முதலியவற்றின் ஓதையும் புணர்ந்து வானத்து இசைப்பப் பாண் சேரியோடு மருதஞ்சான்ற தண்பணை சுற்றி ஒருசார்.

முல்லை

தினை கொய்யக் கறுப்பப் புலரக் கிளரக் கொழிப்ப உகளப் பாறை அணிந்து பயிர்மிசைதொறும் வீ உதிர்ந்து தாஅய் மலரக் கடுப்ப முல்லைசான்ற புறவணிந்து ஒருசார்.

குறிஞ்சி

காழ் கொன்று வித்திய தோரை, ஐயவி, ஐவனநெல், நீடி, இஞ்சியும் பிறவும் ஈண்டி, கிளிகடி பூசல், ஆமா கடியும் பூசல், பூக்கொய்யும் பூசல், புலிப்பூசல், அனைத்தும், அருவியொடு இரட்டக் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து தழீஇ ஒருசார்.

பாலை

தூறு எரி நைப்ப யானை படரக் கவினழிந்து அணியில் மாமலையிடத்தே புல்முளி காட்டில் கோடையை விடர் முகந்து ஒலிப்ப, இளைஞர் கவலை காப்ப உரு இழந்த வேனிற் குன்றத்துப் பாலை என்ற சுரம் சேர்ந்து ஒருசார்.

நெய்தல்

முத்தம்,வளை, கூலம், தீம்புளி, உப்பு, துணியல் இவையிற்றை ஏற்றிய நாவாய் ஓச்சுநர், தேஎத்துக் கலனுய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த குதிரையோடே அனைத்தும் வழிவழிச் சிறப்ப நெய்தல் சான்ற வளம் பல பயின்று (ஒருசார்) இங்ஙனம் ஐம்பாற்றிணையும் கவினி அமைவர, என இவற்றை அணுகக்கொண்டு காண்க. இனித் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தலைநகரத்தின் சிறப்போதுவான் றொடங்கி, முதற்கண் வையை யாறும் அதன் கரையகத்துள்ள பாண்சேரியும் கூறுகின்றார். உலகிற்கு மழையை முதற்கூறிய புலவர் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் என்பவாகலின் முதலில் ஆறு கூறுகின்றனர் என்க. 127-முடிவு இமிழும் என்பது முதல் 342- இருக்கையும் என்பது முடிய ஒருதொடர்.

வையைப் பேரியாறும், பாண்சேரியும்

327-337 : முழவு இமிழும் ................. அடைகரைதோறும்

பொருள் : முழவு இமிழும் அகல் ஆங்கண் - முழவு முழங்கா நின்ற அகன்ற ஊரிடத்தே, விழவு நின்ற வியன் மறுகின் - திருநாள் நிலைபெற்ற அகன்ற தெருவினையும், துணங்கை அந்தழூஉவின் - துணங்கைக் கூத்தினையும் அழகினையுடைய குரவைக் கூத்தினையும் உடைய, மணங்கமழ் சேரி - மணம் நாறுகின்ற பரத்தையர் சேரியினையும், இன் கலி யாணர்க் குழூஉப் பல பயின்று - இனிய செருக்கினை யுடைத்தாகிய புதுவருவாயினை யுடைய பல்வேறு குடித்திரளினையும் உடைய, ஆங்கு - அந்நாட்டின் கண்ணும், பாடல் சான்ற நல் நாட்டு நடுவண் - புலவர் பாடுதல் முற்றுப் பெற்ற நல்ல நாட்டிற்கு நடுவணதாய், கலைதாய உயர் சிமையத்து மயில் அகவும் மலி பொங்கர் - முசுக்கலைகள் தாவாநின்ற உயர்ந்த மலையுச்சியிடத்து மயில்கள் ஆரவாரிக்கும் பொழிலிடத்தும், மந்தி ஆட மாவிசும்பு உகந்து முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் - மந்திகள் ஊசலாடும்படி பெரிய வானிடத்தே உயர்ந்து ஆரவாரிக்கின்ற பெருங்காற்று மோதிய மரம் நெருங்கின காவினிடத்தேயும், இயங்குபுனல் கொழித்த வெண்தலைக் குவவு மணல் - வீழ்ந்து இயங்காநின்ற நீர் கொழித்துக் கொணர்ந் தொதுக்கிய வெள்ளிய தலையினை உடைத்தாகிய திரட்சியை உடைய மணலினாலாகிய, கான்பொழில் தழீஇய அடைகரை தோறும் - காவோடே பொழில் சூழ்ந்த நீரடையும் கரைகள் தோறும்.

கருத்துரை : முழவு முழங்காநின்ற அகன்ற ஊரிடத்தே திருநாள் நிலைபெற்ற அகன்ற தெருவினையும், துணங்கையும் குரவையும் ஆடப்படுகின்ற மணங் கமழும் சேரியினையும், புதுவருவாயினையுடைய பல் வேறுகுடித்திரளையும் உடைய அந்நாட்டின் கண்ணும் புலவராற் பாடப் பெற்ற மிகச் சிறந்த நாட்டின் நடுவண் உள்ளதாய், முசுக்கலை தாவிய உயர்ந்த குடமலை உச்சியின்கண் மயிலகவும் பொழிலிடத்தும், மந்திகள் ஊசலாடும்படி பெருங்காற்று மோதிய மரங்கள் செறிந்த காட்டிடத்தும் வீழ்ந்து இயங்காநின்ற நீர் கொழித்துக் கொணர்ந்து ஒதுக்கிய, வெண்மணல் திரளானியன்றனவும் காவும் பொழிலும் சூழ்ந்தனவுமாகிய நீரடையும் கரைகள்தோறும், என்பதாம். (கரைகள்தோறும் இருந்த பெரும்பாணிருக்கையும் என்று 342 ஆம் அடிக்கட் சென்று முடி வெய்தும்.)

அகலவுரை : நாள்தோறும் ஆடல்பாடல் நிகழ்தலுண்மையின் ஊர்கள் தோறும் முழவின் முழக்கம், அறாஅ தென்பார் முழவு இமிழ் அகலாங்கண் என்றார். இமிழ்தல் : ஒலித்தல். அகலாங்கண் - அகன்ற இடமுடைய ஊர். தெருவுகளில் இடையறாது திருவிழா நிகழும் என்பார் விழவு நின்ற வியல் மறுகு, என்றார். மறுகு-தெரு. துணங்கை ஒருவகைக்கூத்து. தழூஉ - குரவைக்கூத்து. துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப (160) என்று முன்னரும் வந்தமையறிக. இவற்றின் இலக்கணத்தை அவ்வடியின் அகலவுரையிற் காண்க. மணங்கமழ் சேரி என்றது பரத்தையர் சேரியினை. பரத்தையர் எப்பொழுதும் தம்மை மலர் முதலிய மணப் பொருள்களால் ஒப்பனை செய்து கோடலின் ஆண்டு இடையறாது மணங்கமழும் என்க.

இன் கலி யாணர் - இனிய செருக்கிற்குக் காரணமான புதுவருவாய். குழூஉப்பல - கூட்டங் கூட்டமாகவுள்ள பல்வேறு குடிகள். முழவறாத ஊர்மக்களிடத்தே விழவறாத மறுகினையும், கூத்தினையும் சேரியினையும் உடைய குழூஉப் பல பயின்ற அந் நாட்டின்கண்ணும் நல்நாட்டின் நடுவண் உள்ளதாய் என்க. முத்தமிழ் நாட்டினுள் பாண்டி நாடே சங்கம் கண்டு தமிழையும் நல்லிசைப் புலவர்களையும் நன்குவளர்த்த நாடாகலின் செய்ந்நன்றிப் பேணும் நல்லிசைப் புலவரெல்லாம் அந்நாட்டினை நெஞ்சாரவாழ்த்திப் பாடின சிறப்பையுடைய நாடென்பார், பாடல் சான்ற நல்நாடு என்றார். இனித் தமிழ்ச் சங்கத்தே பண்டைப் பழம் பனுவல் அனைத்தும் அரங்கேறலின் பாடல் சான்ற நல்நாடென்றார் எனினுமாம்.

நடுவணதாய் (331) புகழெய்திய மதுரை என 699 ஆம் அடிக்கட் சென்றியையும். இதற்கிடையில் வருகின்றன வெல்லாம் மதுரையின் சிறப்புக்களேயாம். அச் சிறப்புக்கள் ஒவ்வொன்றும் இங்ஙனமே நின்று மதுரையென்னும் ஒரே முடிபைத் தனித்தனி கொண்டுமுடியும் என்க. கலைதாய உயர்சிமையம் (332) என்பது முதல் அடைகரை தோறும் (337) என்னுந் துணையும் அடைகரைக்கு அடைமொழியாக வந்தன. இவையிற்றைப் பல்வேறு வகையாற் பிரித்துக்கூட்டி ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார். அவர் கூறும் பொருள் வருமாறு :

கலைதாய மலிபொங்கர் மந்திஆட மரம்பயில்கா மாவிசும்பு உகந்து முழங்கு கால் பொருத மரம் மயில் அகவும் காவின் உயர் சிமையத்து இயங்கு புனல்கொழித்த வெண்டலைக் குவவு மணல் கான் பொழில் தழீஇய அடைகரை தோறும் என்பது அவர் கொண்டு கூட்டியது. முசுக் கலைகள் தாவின மிக்க கொம்புகளிலே அவற்றின் மந்திகள் விளையாடும்படி மரம்நெருங்கின சோலையிலே பெரிய ஆகாயத்தே செல்ல உயர்கையினாலே முழங்குகின்ற பெருங்காற்றடித்த மரம் மயில் ஆரவாரிக்கும் காவோடே உயர்ந்த மலைஉச்சியினின்றும் வீழ்ந்தோடுகின்ற நீர் கொழித்து ஏறட்ட வெள்ளிய தலையினையுடையதாகிய திரட்சியை உடையமணற்குன்றிடத்து மணத்தையுடைய பொழில் என்பது அவர் கூறிய பொருள். இங்ஙனம் கொண்டு கூட்டாமலே சொற்கிடந்தவாறே பொருள் இனிது முடிதலை உரையிற் காண்க. கான்பொழில், கானும் பொழிலும் என்க. கான் - மரச்சோலை. பொழில்-பூம்பொழில்.

338-342 : தாது சூழ் .................. இருக்கையும்

பொருள் : தாதுசூழ் கோங்கின் பூ மலர் தாஅய்க் கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல் அவிர் அறல் வையை - தாதுக்கள் சூழ்ந்த கோங்கினுடைய பூவும் ஏனை மலர்களும் பரந்து மாலை ஒழுகினாற்போல ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய விளங்குகின்ற அறலையுடைய வையையிடத்து, துறை துறை தோறும் பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி - துறைகள் தோறும் துறைகள் தோறும் பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழப்பட்டு, அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் - நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரிய பாண்சாதியின் குடியிருப்பினையும்;

கருத்துரை : பூந்தாதுக்கள் சூழ்ந்த கோங்கம் பூவும், பிற பூக்களும் பரந்து மாலை ஒழுகினாற் போன்று ஓடும் பெரு நீர் நன்றாகி வருதலையுடைய விளங்கும் அறலையுடைய வையைப் பேரியாற்றின் துறைகள் தோறும் துறைகள் தோறும், பலவாற் வேறுபட்ட பூக்களையுடைய பூந்தோட்டங்கள் சூழப்பட்டு நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்குடியிருப்பினையும் என்பதாம்.

அகலவுரை : தாது - பூந்துகள். கோங்கு - ஒரு மரம். பூமலர் : உம்மைத் தொகை. தாஅய்-பரந்து. இருமருங்கினுமுள்ள பூந்தோட்டங்களின் மலர்கள் யாற்றின் நீர்மேற் பரவி நீரை மறைத்துக்கொண்டு நீரோடு இயங்குதல் ஒரு பெரிய மலர்மாலை இயங்குதல் போன்று தோன்றும் என்க.

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக வோங்கலும்
பாடலந் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரின் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
....................................................
அருவி முல்லை அணிநகை காட்டி
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா வவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டு முயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை யென்ற பொய்யாக் குலக்கொடி
...............................................
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென  (சிலப். 13: 151-74)

என்னும் இளங்கோவடிகளார் கண்ட வையை யாறு மாங்குடி மருதனார் கண்ட வையைப் பேரியாற்றின் விரிந்த விளக்கமாக அமைந்திருத்தல் ஒப்பு நோக்கி மகிழற்பாலது. ஆசிரியர் இளங்கோவடிகளார் வையைப் பேரியாற்றினைப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி என்று போற்றியபொழுது அவர் திருஉள்ளத்தே ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதனா ராகிய நல்லிசைப் புலவரும் அவர்பாடிய இப்பகுதியும் நின்றிருத்தல் வேண்டும். அவிர் அறல் - விளங்கும் கருமணல். துறைதுறைதோறும் என்ற அடுக்கு எல்லாத் துறைகளிடத்தும் என்பது குறித்து நின்றது. அழுந்து படுதல் - தலைமுறை தலைமுறையாக இருந்து வாழ்தல், பெரும்பாண்-பெரும்பாணர்; குழலர் பாணர் முதலிய பெரிய இசைகாரர் என்பர் அடியார்க்கு நல்லார்; (சிலப். 5: 27-உரை) இருக்கை குடியிருக்குமிடம். இனி, (343) நிலனும் என்பது தொடங்கி (356) வழக்குடை வாயில் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண், மதுரை மாநகரத்து அகழி முதலிய அரண்களும் தலைவாயிலும் கூறப்படும்.

மணிநீர்க் கிடங்கு

343-351 : நிலனும் ...................... கிடங்கின்

பொருள் : நிலனும் வளனும் கண்டு அமைகல்லா - நிலத்தையும் அதன்கண் உள்ள பயிர்களையும் கண்ட காட்சி முடிவு போகாத, விலங்கு பெருந் திருவின் மான விறல்வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் - விளங்கும் பெரிய செல்வத்தினையுடைய மான விறல்வேள் என்னும் குறுநில மன்னனுடைய அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும், கொழும்பல் பதிய குடி இழந்தனரும் - செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவரும், தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த - பழையதாய செற்றங் கொண்டு தங்கும் வலி தம்மைக் கொண்டு வருகையினாலே எதிராய் வந்த, அண்ணல் யானை அடுபோர் வேந்தர் - தலைமை யினையுடைய யானையினையும் பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலையுமுடைய வேந்தரை, இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழிய - இனிய ஓசையினையுடைய முரசம் உழிஞைப் போர்க்கு இடையே கிடக்கும்படி, பன் மாறு ஓட்டி - அவர் உளத்தே பலவாய்க் கிடந்த மாறுபாட்டினை அகற்றி, பெயர் புறம் பெற்று மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் - அவரை ஓடச் செய்கையாலே அவருடைய முதுகைக் கண்டு மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,

கருத்துரை : நிலவளன் பயிர்வளன் முதலியவற்றைக் கண்டகாட்சி முடிவு போகாத விளங்கும் பெரிய செல்வத்தினையுடைய மான விறல் வேள் என்னும் குறுநில மன்னனுடைய அழும்பில் என்னும் ஊரை ஒத்த வளமுடைய நாட்டினை இழந்தவரும், செல்வமிக்கஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவருமாய்ப் பழையதாய செற்றங்கொண்டு தங்கும் வலியினது தூண்டுதலானே எதிராய் வந்த யானைகளையும், போர் வன்மையையுமுடைய வேந்தரை அவர் கொணர்ந்தபோர் முரசம் இடைநிலத்தே கிடப்ப, அவருடைய இகல் அகற்றி அவரை ஓடச்செய்தலான் அவர்தம் புறக்கொடை கண்டதும், மிகமிக ஆழ்ந்ததும் நீலமணி போலும் நிறமுடைய நீரான் நிறைந்ததுமான அகழியையும் என்பதாம்.

அகலவுரை : நிலம் -மருத முதலியன. வளன் என்றது அவையிற்றில் உண்டாகும் பயிர்களை. அவை மிகுதியாகச் செழித்தோங்கிக் கிடத்தலான்காட்சி முடிவு போகாதாயிற்று. கண்டுதண்டாக் கட்கின்பத்து உண்டு தண்டா மிகுவளத்தான் (16-17) என இவ்வாசிரியர் முன்னரும் ஓதியதுணர்க. அழும்பில் என்பது வேளிருடைய ஊர் என்று தெரிகிறது. மான விறல் வேள் என்பான் அக்காலத்தே (புலவர் காலத்தே) உடனிருந்தான் போலும். அவன் ஊராகிய அழும்பில் பெரிதும் வளம்பொருந்திய தென்பதை, பெரும்பூட் சென்னி அழும்பில் அன்ன அறாஅயாணர் என்னும் அகப்பாட்டானும் அறியலாம். புதுக்கோட்டைப் பகுதியில் இப்பொழுது அம்புக்கோயில் என வழங்கப்படும் ஊரே அழும்பில் என்னும் ஊர் என்ப. ஆங்குள்ள கல்வெட்டு இராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் நாட்டு அழும்பில் என அவ்வூரைக் குறிப்பிடுகின்றது என்ப. இவ்வூர்.

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாளிரை பெறூஉம்
பெறாஅ வுறையரா வராலின் மயங்கி
மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரும்
அழும்பில்.  (புறம் - 283)

எனப் புறப்பாட்டினும் மிகுவளம்பொருந்தியதாகக் கூறப்படுதல் அறிக. சிலப்பதிகாரத்தும், அழும்பில் வேள் அழும்பில் வேளொடு (சிலப். 25-177 : 28: 205) எனக் கூறப்பட்டுள்ளமை காண்க. ஒரு நாட்டினை முழுதுங் கைக்கொள்ளுதலும், ஒரு நாட்டின் ஒரு சில பகுதிகளையே கைக்கொள்ளுதலும் உண்மையின் நாடிழந்தனரும்; குடியிழந்தனரும் என வேறு வேறுரைத்தார். கொழும் பல்பதி - செல்வத்தாற் கொழுத்த பலவாகிய ஊர்கள். தொன்று-பழையது. கறுத்த - சினந்த. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (உரி-74) என்பர் தொல்காப்பியர். கறுத்து உறைதல் - பழம்பகை கொண்டு உறைதல் நெடுஞ்செழியன் கைப்பற்றிக் கொண்டமையால் நாடுகுடி முதலியவற்றை இழந்து செற்றங்கொண்டிருந்த அரசர் புதிய வலியை எய்தி அது செலுத்தலாலே போர் செய்யவந்து அகழிக்கே ஆற்றாது தோற்றோடினர் என்பதாம். அகழியைக் கடக்க வலியிலராய் ஆண்டுள்ள காவற்படைக்கு ஆற்றாதுமுரசு முதலியவற்றைப் போகட்டு ஓடினர் என்க. இவ்வெற்றியைக் கிடங்கின் மேலிட்டுரைத்தவாறு. இகல் கொண்டுவந்தவர் அதனை விட்டு அச்சங்கொண்டு ஓடுதலின் பல்மாறு ஓட்டி என்றார். இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழிய என்றது அவர் நிலைகுலைந்து விரைந்தோடினர் என்பதனை உணர்த்தும், இங்ஙனம் முரசெறிந்து ஓடுதலை.

முரசம் பொறுக்குநர் இன்மையின்
இருந்து விளிந்தனவே  (புறம்-63:7-8)

எனவும்,

இரங்கிசை முரச மொழியப் பரந்தவர்
ஓடுபுறங் கண்ட ஞான்றே  (அகம் - 116 : 17-8)

எனவும் பிறர் கூறுதலானும் அறிக. இதற்கு நச்சினார்க்கினியர் உழிஞைப் போர் செய்ய வந்த அரசர் குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எய்தாது இடையே மீளும்படி காத்த கிடங்கு எனக் குறிப்புரை வரைந்துள்ளார். மண் உற ஆழ்ந்த என்றது மிகவும் ஆழ்ந்த என்றவாறு. ஆழ்ந்த நீர்நிலை தெளிந்து நீல நிறமாகத் தோன்றுதல் இயல்பாகலின் மணிநீர்க் கிடங்கு என்றார். மணிநீர் நிறைந்தன்று, (பரி. 12:33) என்றும், மணிமரு டீநீர், (அகம். 368-10) என்றும், மணிதெளித் தன்ன அணிநிறத் தெண்ணீர் (பெருங்-3-4 : 39) என்றும் பிறரும் ஓதுதல் காண்க.

வையை அன்ன வழக்குடை வாயில்

352-356 : விண்ணுற் .................. வாயில்

பொருள் : விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை - தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பல கற்படைகளையுடைய மதிலினையும், தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை-பழையதாகிய வலி நிலைபெற்ற தெய்வத்தை உடைத்தாகிய நெடிய நிலையினையும், நெய்படக் கரிந்த திண் போர்க் கதவின் - நெய் பலகாலும் இடுதலாற் கருகின திண்ணியவாய்ப்பொருத்தப்பட்ட கதவினையும், மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு - முகில் உலாவும் மலைபோல ஓங்கின மாடத்தோடே, வையை அன்ன வழக்குடை வாயில்-வையை யாறு இடைவிடாது ஓடுமாறு போன்று மாந்தரும் மாவும் இடையறாமல் வழங்குதலையுடைய வாயில்;

கருத்துரை : வான் உற ஓங்கிய பல கற்படைகளையுடைய மதிலையும், பழையதாகிய வலி நிலைபெற்ற தெய்வத்தையுடைய நெடிய நிலையினையும்; நெய்யொழுகிக் கருதிய திண்ணிய கதவினையும், முகில் உலாவும் மலை போன்றுயர்ந்த மாடங்களையும் உடைய, வையை யாறு போன்று இடையறாது மக்களும் மாவும் வழங்கா நின்ற வாயிலையும் உடைத்தாய், என்பதாம்.

அகலவுரை : விண்ணுற ஓங்கிய என்றதற்கு வானிடத்தே மிக உயர்ந்த எனத் தமிழ் நெறிக்கேற்ப இயற்கைநவிற்சியாகக் கொள்ளினும் அமையும். மதில் பற்பல படைகளான் உயர்த்தப்படுதலின் பல்படை என்றார். உயர்வுக்கேற்ற அகலமும் உடைத்தாதல் கூறாமலே அமையும் என்க. பலகற்படை எனவே திண்மையுங் கொள்க; என்னை?

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். (குறள்-743)

என்றோதுபவாகலான். தொல்வலி நிலைஇய என்றதொடரை அணங்கிற் கேற்றி வலி மிக்க மறத்தெய்வமாகிய கொற்றவையின் உருச் செதுக்கப்பட்ட நெடுநிலை எனினுமாம். அக்கொற்றவைப் படிமத்திற்கு நெய்யணிதலானும் விளக்கிடுதலானும் நெய்யொழுகிக் கரிந்த கதவென்க. திண்போர்க் கதவு என்றது திண்ணிதாக வாய் பொருத்தப்பட்ட கதவு என்றவாறு. போர் அமை புணர்ப்பின் (84) என்றார், நெடுநல்வாடையினும். போர்க்கதவு என்றதற்குச் செருவினையுடைய கதவு, என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இடையறவின்றி மாவும் மாக்களும் வழங்கும் வாயிலுக்கு இடையறவின்றி நீர்வழங்கும் வையைப்பேரியாறு உவமை. இனி, அந்நகரத்தின் தெருக்களில் உண்டாகும் பற்பல நிகழ்ச்சிகளும் கூறுகின்றார்.

நாளங்காடியும், அல்லங்காடியும், பன்மொழி பேசும் மாந்தர்தம் பேரொலியும்

357-365 : வகைபெற எழுந்து ................. நியமத்து

பொருள் : வகைபெற எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல் புழை நல்இல்-கூறுபாடாகிய பெயர்களைத் தாம் பெறும்படி உயர்ந்து வானத்தே சென்று தென்றற் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நன்றாகிய இல்லங்களையும், யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவின்-பேரியாறுகள் கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருக்களிலே, பல்வேறு குழாத்து இசை எழுந்து ஒலிப்ப - நாளங்காடியிற் பண்டங்களைக் கொள்ளும் பல சாதியாகிய மொழி வேறுபாட்டையுடைய மாக்களின் திரளிடத்தே ஓசை மிக்கு முழங்காநிற்ப, மா கால் எடுத்த முந்நீர் போல முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவல - பெருமையை உடைய காற்றெடுத்த கடல் ஒலிபோல முழங்கும் ஓசையையுடைய நன்றாகிய முரசத்தைச் சாற்றினராய் விழவினை நாட்டிலுள்ளார்க்குக் கூறாநிற்ப, கயம் குடைந்தன்ன இயந்தொட்டு இமிழ்இசை மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை - குளத்தைக் கையாற் குடைந்து விளையாடும் தன்மையவாக இசைக் கருவிகளை முழக்குதலான் எழுந்த இசையினைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரத்தினையும் உடைய, ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்து - ஓவியத்தைக் கண்டால் ஒத்த காட்சியினையுடைய இரண்டாகிய பெரிய அங்காடித் தெருவின்கண்;

கருத்துரை : தம்முட் பல கூறுபாடுடைய பெயரினவாய் வானுறவோங்கிய தென்றற்காற் றொலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும், யாறு கிடந்தாற் போன்ற தெருக்களிலே பண்டங் கொள்ள வந்த பல்வேறு மொழிகளையும் பேசும் மாந்தர் கூட்டத்தின் ஆரவாரத்தினையும், காற்றெடுத்த கடல் போன்ற முழங்கும் முரசங்களை முழக்கி மக்கட்குத் திருவிழாவை அறிவிக்கும் ஒலியினையும், குளத்தை விளையாட்டின் பொருட்டுக் கையால் குடைவது போன்று இசைக்கருவிகள் பலவும் முழங்கக் கேட்டுக் களித்து ஆடுவாருடைய ஆரவாரத்தினையும் உடைய இருவேறு வகைப்பட்ட அங்காடித் தெருவின்கண் என்பதாம்.

அகலவுரை : இல்லங்கள் தம்முள் மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை முதலிய பல்வேறு பெயர்களைப் பெறுதலின் வகை பெற என்றார். வானம் மூழ்கி என்றது மிக உயர்ந்து என்றவாறு. இதற்குத் தேவருலகிலே சென்று என மிகையுயர்வு நவிற்சியாகப் பொருளுரைத்தார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

பல்புழை-பலவாகிய காலதர்; சாளரம், பலகணி எனவும் வழங்குப. நல் இல் என்றது ஆண்டு வாழ்வார்க்கு இன்பமே தரும் தன்மையுடைய இல் என்றவாறு.

யாறு கிடந்தன்ன தெரு என்றார் இருமருங்கினும் உள்ள இல்லங்கள் கரைகள் போன்றும் இடையிற் கிடக்கும் தெரு யாறு போன்றும் தோன்றுதலான். யாறெனக் கிடந்த தெரு (மலைபடு - 481) என்றும், யாறுகண் டன்ன அகன்கனை வீதியுள் (பெருங் 2.7:7) என்றும். நீத்தியாற் றன்ன நெடுங்கண் வீதி (பெருங் 5. 7. 23) என்று பிறரும் கூறுதல் காண்க. யவனம் முதலிய பலதேயத்து வணிக மாக்களும் ஒருங்குதிரண்டு பல்வேறு மொழிகளினும் பேசுதலான் பல்வேறு குழாத்திசை எழுந்தொலிப்ப என்றார். மா கால் - பெருங்காற்று நன்பணை - நல்ல முரசம். அறைவனர் - முழக்கினராய். நுவல - கூற. குளத்தின்கண் நீரைக் கையாற் குடையின் துடும் துடும் என ஒலிக்குமன்றே, அங்ஙனம் ஒலிக்கும் இயம் என்க. குடைதொறும் தெரியிமிழ் கொண்டநும் இயம்போல் இன்னிசை (295-6) என்றார் மலைபடுகடாத்தினும். கலி -செருக்கு. சும்மை - ஆரவாரம். ஓவு - ஓவியம். ஓவியத்தின் வரைந்து வைத்தாற் போன்று பல்வேறு பண்டங்களையும் உடையதாய் விளங்கும் நியமம் என்க. நியமம் - அங்காடி. அது நாளங்காடி அல்லங்காடி என இருவகைப்படுதலின் இருபெரு நியமம் என்றார்.

அங்காடித் தெருவில் ஆடும் கொடிகள்

366-374 : சாறயர்ந்து ................. அருவியி னுடங்க

பொருள் : சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி - திருக்கோயில்களுக்கு விழா நிகழ்த்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும், வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள நாள்தோ றெடுத்த நலம் பெறு புனைகொடி - வேறுபட்ட பல பெயர்களையுடையவாகிய அழித்தற்கரிய அரண்களைத் தண்டத் தலைவர் அரசனேவலாற் சென்று கைக்கொள்ளக் கைக்கொள்ள அவர்கள் அவ் வெற்றி குறித்து நாடோறும் உயர்த்திய நன்மையுடைய வெற்றிக் கொடியும், நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானை யொடு புலவுப்படக் கொன்று மிடைதோல் ஓட்டிப் புகழ் செய்து எடுத்த விறல்சால் நல்கொடி - கடல் ஒலித்தாற் போன்ற நிலை பெறுதலையுடைய வேற்படையோடே சென்று பகைவரைப் பலானாற்றமுண்டாகக் கொன்று பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்துத் தமக்குப் புகழை யுண்டாக்கி எடுத்த நன்றாகிய வெற்றிக் கொடியும், கள்ளின் களி நவில் கொடிகள் - கள்ளினது களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடியும், நன்பல பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇ - இங்ஙனம் நன்றாகிய பலவற்றினாலே பலவாய் வேறுபட்ட திரட்சியையுடைய கொடிகளோடே பெருங்கொடிகளும் நிலைபெற்று, பெருவரை மருங்கின் அருவியி னுடங்க - பெரிய மலையிடத்து அருவி அசையுமாறு போல அசையாநிற்ப;

கருத்துரை : கோயில்களுக்கு விழா நிகழ்த்தி உயர்த்திய அழகிய கொடிகளும், தண்டத் தலைவர் அரசன் ஏவலாற் சென்று பல பெயர்களையுடைய அழித்தற்கரிய அரண்களைக் கைக்கொள்ளுந்தோறும் அவ்வெற்றி குறித்துயர்த்திய நல்ல வெற்றிக் கொடிகளும், கடல் ஒலித்தாற் போன்று வேற்படையோடே சென்று பகைவரைப் புலானாறக் கொன்று குவித்து அவர் யானைப்படையின் அணியையும் குலைத்தமைக்கு அறிகுறியாக உயர்த்திய வெற்றிக் கொடியும், கள் விற்கும் கடையைக் குறிக்கும் கொடிகளும் மேலும் நல்லன பலவற்றையும் தனித்தனி குறித்தலாற் பலவாய் வேறுபட்ட கொடிக் குழாங்களும் இவையிற்றோடு மீனக் கொடியும் நிலைபெற்றுப் பெரிய மலையிடத்தே அருவிகள் அசையுமாறு அசையா நிற்ப என்பதாம்.

அகலவுரை : சாறு அயர்தல்-விழா நிகழ்த்துதல். திருக்கோயிலுக்கு விழாத் தொடங்குங்கால் கொடியேற்றும் வழக்கம் இன்றும் உளது. சமயங்கடோறும் கொடிகள் வேறுபட்டிருத்தலான் பலகொடி என்றார். இனி ஒரே சமயத்துள்ளும் ஏற்றைக் கொடி சேவற்கொடி எனக் கொடிகள் வேறுபடுதலும் காண்க. உருவப் பல்கொடி என்றதற்கு ஏறு சேவல் உவணம் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்ட பல கொடிகள் என்றலுமாம்.

நாடுகடோறும் வேறு வேறு பெயருடன் விளங்கும் அரண் என்பார் வேறு பல்பெயர ஆர் எயில் என்றார். எனவே செழியனின் தண்டத் தலைவர் அவனதேவலால் நாள்தோறும் பகைவர் நாட்டிற் சென்று அவர் அரண்களை முற்றிக் கைக்கொள்வர் என்பதும், ஒரு அரணைக் கைப்பற்றியவுடன் அவ் வெற்றி குறித்து மதுரையில் ஒரு கொடி உயர்த்துதல் வழக்கம் என்பதும் உணர்க. கொளக் கொள என்னும் அடுக்கு அப் படைத் தலைவர் ஓரரணைக் கைப்பற்றிய பின்னர் மற்றோர் அரண்முற்றுதல்லால் மடிந்திரார் என்பதனைக் குறிப்பான் உணர்த்தும். இங்ஙனம் வலிந்து போர்மேற் சென்று அரண் முற்றுதலும் கோடலும், உழிஞைத் திணை என்ப. இதனை,

முழுமுத லரணம் முற்றலுங் கோடலும்
அனைநெறி மரபிற் றாகு மென்ப  (தொல்-புற. 10)

என்னும் தொல்காப்பியத்தானும் உணர்க. இனி, நீர் ஒலித்தன்ன ............... நன்கொடி என்றது தும்பைப் போர் கூறியவாறு. இது உழிஞைப் போர்போல வலிந்த போர்மேற் செல்லாது, வலியுடைமை காரணமாகத் தம்மேல் போர்க்கு வந்த அரசனை எதிர்த்து வெல்லுதலாம். இதனை,

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப  (தொல்-புற-15.)

என்பதனான் அறிக.

நீர்-கடல். நிலவு வேற்றானை என்றது, போரின்கண் ஊறஞ்சி ஓடாமல் நிலைத்து நின்று போர்செய்யும் வேற்படைஞர் என்றவாறு. மிடைதோல்-அணிவகுக்கப்பட்ட யானை. வெற்றிக் கொடியாதலின் புகழ்செய்து எடுத்த கொடி என்றார். இங்ஙனம் போர்களில் வென்ற பொழுதெல்லாம் கொடியுயர்த்துதலைச் சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் நாட்கொடி நுடங்கும், (217) என்ற தொடர்க்கு அடியார்க்கு நல்லார் நாடோறும் வென்று வென்றெடுத்த கொடி தானுடங்கும் என உரை கூறுமாற்றானும் செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி (முருகு-67) மலைநீர் வென்றெழு கொடியிற் றோன்றும் (மலைபடு-589) எனப் பிறரும் கூறுதலானும் உணர்க. கள் விற்கும் கடைக்கு அறிகுறியாகக் கட்டிய கொடி தன்னைக் கண்ட களிமாக்கட்குக் கள்ளின் களிப்பை நினைவூட்டித் தன்பால் ஈர்த்தலின், கள்ளின் நளிநவில் கொடி என்றார். களி நவிலலாவது, கள்ளின் களிப்புத்தன்மையின் சிறப்பை எடுத்தோதுதல். நன்பல என்றது, இக் கள்போன்ற தீமைதரும் பொருள்களைக் குறியாமல் கல்வி,கொடை,தவம் முதலிய நன்மைகள் பலவற்றையும் குறிக்கும் என்றவாறு. இங்ஙனம் கல்வி முதலியவற்றைக் குறிக்கும் கொடிகள் உண்டென்பதனை,

பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும்  (பட்டின-169-71)

என்னும் பட்டினப் பாலையானும் உணர்க. பதாகை - பெருங்கொடி. அஃதாவது பாண்டிய மன்னர்க்குரித்தாகிய மீன்கொடி என்க. இனி, 375-பனைமீன் என்பது தொடங்கி, 406 - கொழுநிழல் இருத்தர, என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் தெருக்களிலே யானை முதலிய நால்வகைப் படைகள் வழங்குமாறும், அவையிற்றின் ஆரவாரமும், ஆண்டுள்ள மாந்தர் அவையிற்றிற்கு அஞ்சுதலும் பல்வேறு பண்டம் பகர்வோர் செய்தியும் பிறவும் கூறப்படும்.

 
மேலும் மதுரைக்காஞ்சி »
temple news
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. ... மேலும்
 

மதுரைக்காஞ்சி பகுதி-2 செப்டம்பர் 27,2012

வெறிகொண்ட களிற்றியானை 375-383 : பனைமீன் ................. யானையும் பொருள் : பனை மீன் வழங்கும் வளைமேய் பரப்பின் - பனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar