Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரைக்காஞ்சி பகுதி-1
முதல் பக்கம் » மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
02:09

வெறிகொண்ட களிற்றியானை

375-383 : பனைமீன் ................. யானையும்

பொருள் : பனை மீன் வழங்கும் வளைமேய் பரப்பின் - பனை என்னும் சாதிமீன் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தே, வீங்குபிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ கூம்பு முதல் முருங்க ஏற்றி - இறுகும் பிணிப்பினையுடைய வலியினையுடைய பாய் கட்டின கயிற்றை அறுத்துப் பாயையும் பீறிப் பாய் மரம் அடியிலே முறியும்படி மோதி, காய்ந்துடன் கடுங்காற்று எடுப்ப - வெகுண்டு ஒருசேரக் கடிய காற்று எடுக்கையினாலே, கல் பொருது உரைஇ நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல - நங்குரக்கல் கயிற்றுடனே நின்று பொருது உலாவி நெடிய சுழியிலே அகப்பட்டுச் சுழலாநின்ற மரக்கலத்தை ஒக்க, இருதலைப் பணிலம் ஆர்ப்பச் சினஞ் சிறந்து - முன்னும் பின்னும் சங்குகள் ஒலியா நிற்ப வெகுளி மிக்கு, கோலோர்க் கொன்று மேலோர் வீசி - பரிக்கோற்காரரைக் கொன்று பாகரை வீசிப் போகட்டு, மென் பிணி வன்றொடர் பேணாது காழ் சாய்த்து - மெல்லிய பிணிப்பினையுடைய வலிய நீர்வாரி என்னும் காலிற் கட்டுஞ் சங்கிலியை நமக்குக் காவல் என்று பேணாதே அது கட்டின தறியை முறித்து, கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் - கம்பத்தைக் கைவிட்டுச் சுழலும் யானையும்;

கருத்துரை : பனைமீன் வழங்குவதும் சங்குகள் மேய்வதுமாகிய பரப்பையுடைய கடலிடத்தே இறுகும் பிணிப்பினையுடைய வலிய பாய்கட்டின கயிற்றை அறுத்துப் பாயையும் மீறிப் பாய்மரத்தை அடியில் முறிய மோதி வெகுண்டு பெருங்காற்று எடுத்தலாலே நங்குரக் கல் கயிற்றுடனே நின்று உலாவி நெடிய சுழியிலே பட்ட மரக்கலத்தைப் போன்று, முன்னும் பின்னும் சங்குகள் முழங்கச் சினம் மிகுந்து, பரிக்கோற்காரரைக் கொன்று, பாகரை வீசிப் போகட்டுக் காற் சங்கிலியைப் பேணாதே தறியை முறித்துக் கம்பத்தைக் கைவிட்டுச் சுழலும் கடாஅத்தையுடைய யானையும் என்பதாம்.

அகலவுரை : பனைமீன் - கடலில் வாழும் பெரிய மீன் வகையில் ஒன்று; இதனை யானைமீன் எனப் பிங்கலங் கூறும் (2620). வளை - சங்கு. பரப்பு - கடலுக்கு ஆகுபெயர். வீங்கு பிணி-இறுகிய பிணிப்பு. நோன்கயிறு - வலிய கயிறு. அரீஇ - அரிந்து; அறுத்து. என்னும் பொருட்டு. இதை-பாய். புடையூ - செய்யூஎன் னெச்சம். கூம்பு - பாய்மரம். முதல்-அடிப்பகுதி. முருங்குதல்-முறிதல். எற்றி மோதி. கடுங்காற்று- சூறைப் பெருங்காற்று. கல்-நங்குரக் கல். நெடுஞ்சுழி-சூறைக்காற்றால் கடலிடத்துஉண்டான நீர்ச்சுழி. யானை வெறிகொண்டு திரியுங்கால் அதன் வருகையை அறிவிக்கும்பொருட்டு முன்னும் பின்னும் சங்கு முழங்குதல் வழக்கம். யானை பின்புறம் திரும்புங்கால் அறிவித்தற்குப் பின்னும் சங்கு வேண்டிற்று. கோலோர் - யானைகளை அடக்குதல் வல்ல பரிக்கோற்காரர்; குத்துகோற்காரர் என்றும் கூறுப. குத்துக்கோல் வரைத்தன்றி யானை களி வரைத்தாயினாற் போல எனப் பேராசிரியரும் கூறுதல் காண்க.

மேலோர்-பாகர். வீசி என்றது கையாற் றூரத்தே விழ எறிந்து என்றபடி. வன்றொடர் - வலிய யானை கட்டும் சங்கிலி; இதனை நீர் வாரி என்பர் நச்சினார்க்கினியர். காழ்-கழி. ஈண்டு யானைகட்டுந்தறி என்க.

உழிதருதல்-சுழலுதல். மரக்கலத்தை இவ்வாறு செய்யும் பெருங்காற்று யானையை இவ்வாறு சுழல விடுத்த கடாத்திற்கு உவமை என்க; இனி,

நீயான் நடுங்க நடுவுநின் றோங்கிய
கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து
கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்
கிதைசிதைந் தார்ப்பத் திரைபொரு முந்நீர்
இயங்குதிசை யறியா தியாங்கணும் ஓடி
மயங்குகால் எடுத்த வங்கம் போலக்
காழோர் கையற மேலோ ரின்றிப்
பாகின் பிளவையிற் பணைமுகந் துடைத்துக்
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்தாங்
கொருபாற் படாது ஒருவழித் தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்
கால வேகம் களிமயக் குற்றென  (மணி-4: 30-44)

என்று தண்டமிழ் ஆசான் சாத்தன் உரைத்த மணிமேகலைப் பகுதியோடு நல்லிசைப் புலவர் மாங்குடி மருதனார் ஈண்டுக் கூறிய கடாஅயானையின் களிமயக்கினையும் ஒப்பிட்டுக் கண்டு மகிழ்க.

தேரும், குதிரையும், காலாண் மறவரும்.

384-394 : அங்கண்மால் .............. பெயர்தலின்

பொருள் : அங்கண் மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து - அழகிய ஞாயிறாகிய கண்ணையுடைய பெரிய வானம் மறையும்படி காற்றைப் பிளந்து, ஒண் கதிர் ஞாயிறு ஊறு அளவாத் திரிதரும் செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன - ஒள்ளிய கதிரையுடைய அஞ்ஞாயிற்றைத் தாம் சேர்தலை நெஞ்சாலே கருதிக்கொண்டு பறக்கும் சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த, குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து - வெண்ணிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே செலவு மிக்கு, கால் எனக் கடுக்கும் கவின்பெறு தேரும் - காற்றென விரைந்தோடும் அழகினை உடைய தேரும், கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் - கையிலே மத்திகையைக் கொண்ட வலவன் ஐந்துவகைச் செலவினையும் பதினெண்வகைச் சாரியையும் பயிற்றுதலாலே, அடிபடு மண்டிலத்து ஆதி போகிய - குரங்கள் அழுந்தின வட்டமான இடத்தினும் ஆதி யென்னும் செலவில் ஓடிய, கொடிபடு சுவல இடுமயிர்ப் புரவியும்-ஒழுங்குபட்ட பிடரியினையுடையனவாக இடுமயிரையும் உடைய குதிரைகளும், வேழத் தன்ன வெருவரு செலவில் கள் ஆர் களமர் இருஞ் செரு மயக்கமும்- யானை போன்ற அச்சம் வருதற்குக் காரணமான போக்கினை யுடைய கள்ளை உண்ணும் மறவர் தம்மிற் பெரிய போரைச் செய்யும் கலக்கமும், அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் - தடுத்தற்கரியனவுமாய் அவை தாமும் சிறிதின்றி மிகவுள்ளனவுமாய்ப் பலகாலும் வந்து வந்து மீளுகையினாலே;

கருத்துரை : அழகிய ஞாயிறாகியகண்ணையுடைய பெரிய வானம் மறையும்படி காற்றைப் பிளந்துகொண்டு அஞ் ஞாயிற்று மண்டிலத்தை எய்தவேண்டும் என எண்ணி விரைந்து பறக்கும் அன்னச்சேவலை ஒத்த வெண்ணிற மயிரையுடைய குதிரைகள் ஈர்த்தோடுதலானே விரைந்தோடும் அழகிய தேர்களும், குதிரைவலவன் மத்திகை கொண்டு பயிற்றியபடி வட்டமான இடத்தில் ஆதியென்னும் செலவில் ஓடின ஒழுங்குபட்ட பிடரிமயிரோடே இடுமயிரையுடையனவாகிய குதிரைகளும், யானைபோன்று கண்டோர் அஞ்சும் போக்கினையுடைய கள்ளுண்ட மறவர் மயக்கமும் ஆகிய தடுத்தற் கரியனவும் எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் பலகாலும் வருதலும் போதலும் உடைமையாலே, என்பதாம்.

அகலவுரை : ஞாயிற்றை வான்கண் என்று கூறுபவாகலின், அழகிய ஞாயிறாகிய கண்ணையுடைய பெரிய வானம் என்பார் அங்கண் மால்விசும்பென்றார். வான் கண் விழியா வைகறை யாமம் என்றார் சிலப்பதிகாரத்தும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அழகிய இடங்களைத் தன்னிடத்தே உடைய பெரிய ஆகாயம் என இத்தொடர்க்குப் பொருள் கூறி, தேவருலகம் முதலியவற்றைத் தன்னிடத்தே யுடைமையின் அங்கண்மால் விசும் பென்றார், என விளக்கமும் கூறியுள்ளார். வெண்ணிறக் குதிரைகள் விண்ணிற் பறப்பன போன்று தோன்றுதலான் ஞாயிற்று மண்டிலத்தை எய்தக் கருதி விசும்பு மறையக் காற்றைப் பிளந்து கொண்டு பறக்கும் அன்னச் சேவல்கட்கு உவமிக்கப்படும் பொருளாயின. இங்ஙனமே, நிரைபறை யன்னத் தன்ன விரைபரிப் புல்லுளைக் கலிமா (அகம்-234) வயங்குசிறை யன்னத்து நிரைபறை கடுப்ப நால்குடன் பூண்ட கானவில் புரவி (அகம்-334) எனப் பிறரும் கூறுதல் காண்க.

ஊறு - உறுதல்; எய்துதல். உறு என்னும் முதனிலை நீண்டது. அளவா-கருதா; செய்யா என்னும் உடன்பாட்டு வினையெச்சம் அளந்து என்னும் பொருட்டு. ஈண்டு அளத்தல் கருத்தான் எண்ணித் துணிதல் என்க. உராலின்-ஓடுதலால். பரி-செல்கை. கடுக்கும்-விரைந்தோடும். கடி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம். விரைவு என்னும் பொருளும் கடி என்றற்கு உண்மையான் விரையும் என்னும் பொருட்டாய் நின்ற தென்க. கவின்-அழகு.

கால்-காற்று, காற்றுப் போன்று விரைந்தோடும் தேர் என்க.

காலுறழ் கடுந்திண்டேர்  (கலி-33)

காலியல் நெடுந்தேர்  (கலி-50)

எனப்பிறரும் கூறுதல் காண்க. கோல்-மத்திகை. கோலன் என்றதற்கு வாசிவாரியன் என்றும் இடுமயிர் என்றதற்கு இட்டவாசங்கள் என்றும் எழுதுவர் நச்சினார்க்கினியர். இடுமயிர் என்பது இன்றும் வழக்கிலுளது. இடுமயிர் என்றது கவரி மயிரை. கவரி மயிரால் குதிரைகள் ஒப்பனை செய்யப்படும். இதனை, ஓங்கல் மதிலுள் ஒருதனிமா-ஞாங்கர். மயிர் அணியப் பொங்கி மழைபோன்று மாற்றா - உயிர்உணிய ஓடி வரும் (புறப்-வெண்:90) என்றும், முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகம்-156) எனவும் வருவனவற்றால் அறிக. ஆதி-குதிரை ஓட்டங்களில் ஒருவகை ஓட்டம்; அஃதாவது நேராக ஓடல் என்ப. களமர் - போர் வீரர் களத்தே சேறலின் களமர் என்றார் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். அரியவும் பெரியவும் என்றற்கு இங்ஙனம் கூறாது அரியவும் பெரியவுமாகிய பண்ணியம் என 394 ஆம் அடிக்கண் உள்ள இத்தொடரை 405 ஆம் அடிக்கண் உள்ள பண்ணியம் என்றதனோடு கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

பல்வேறு பண்ணியம் பகர்வோர் செய்தி

395-406 : தீம்புழல் வல்சி ............... நிழல் இருத்தர

பொருள் : தீம் புழல் வல்சி - இனிய பண்ணிகாரங்களாகிய உணவினையும், கழற் கால் மழவர் பூந்தலை முழவின் நோன்றலை கடுப்ப - வீரக் கழலணிந்த காலினையுடைய மழவர் முன்கொட்டும் பூவான் ஒப்பனை செய்யப்பட்ட இடத்தையுடைய வீர மத்தளத்தினது வலிய கண்ணைப் போன்று உருண்ட, பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் - கூடைகளிலே இட்டுவைத்த மிகவும் நாறுகின்ற நறிய பூவினை யுடையாரும், பலவகை விரித்த எதிர் பூங்கோதையர் - பலவகையாக விரித்து வைத்த ஒன்றற் கொன்று மாறுபட்ட பூமாலை யுடையாரும், பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தார்-இடிக்க வல்லார் பலரும் திரண்டு இடித்த பூந்தாதுக்கள்போலும் பரக்கும் சுண்ணத்தையுடையாரும், தகைசெய் தீஞ்சேற்று இன்னீர்ப் பசுங்காய் நீடுகொடி இலையினர் - உடலுக்கு அழகைக் கொடுக்கும் இனிய களிக்கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடனே வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினை உடையாரும், கோடு சுடு நூற்றினர்-சங்கு சுடுதலால் உண்டான சுண்ணாம்பையுடையாரும், இருதலை வந்த பகைமுனை கடுப்ப இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து ஏங்குவனர் இருந்து-இரண்டு பக்கத்தானும் படைவந்த பகைப் புலத்தை ஒக்கத் தம்முடைய இனிய உயிருக்கு அஞ்சி ஏங்குவாராயிருந்து இன்னாததாகப் பெருமூச்செறிந்து, அவை நீங்கிய பின்றை - அந்நாற்படையும் சென்ற பின்னர், பல்வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர் - பலவாய் வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிகின்ற விற்பாரும், மலைபுரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர- மலையை ஒக்கும் மாடங்களிடத்துக் குளிர்ந்த நிழலிலே இருத்தலைச் செய்ய;

கருத்துரை : இனிய பண்ணிகாரமாகிய உணவினையும், வீரமத்தளத்தினது கண்போன்று உருண்ட பூந்தட்டிலே பெய்யப்பட்ட பூவினையுடையாரும், பலவகையாக விரித்து வைத்த மாறுபட்ட பூமாலைகளையுடையாரும், இடிக்க வல்லார் பலரும் கூடி இடித்த பூந்தாது போன்று பரக்கும் சுண்ணத்தையுடையாரும், உடலுக்கு அழகைத் தரும் களிக்கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடனே வெற்றிலையினையுடையயாரும், சங்குசுட்ட சுண்ணாம்பினையுடையாரும், இருபக்கத்தும் போர்ப்படைகள் வந்த பகைப்புலத்தை ஒக்கத் தம் முயிர்க்கு அஞ்சி ஏங்குவாராயிருந்து இன்னதாக நெடுமூச் செறிந்து அப்படைகள் போன பின்பு பலவேறு பண்டங்களையும் விற்போருமாகிய அவர்கள் மலைபோன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலிலே இருத்தலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : தீம்புழல் -இனிதாய் உட்கூடாயிருக்கும் ஒரு பண்ணிகாரம், இருப்பைப்பூ எனினும் பொருந்தும். என்னை?

இருப்பை .................. இழுதி னன்னதீம்புழல் (அகம். 9:3)

என்றும்,

தீம்புழல் உணீஇய கருங்கோட் டிருப்பை,
யூரும் பெருங்கை எண்கு  (அகம். 171. 13-5)

என்றும் ஓதுதல் காண்க. வல்சி - உணவு. கழல்-மறவர்கள் காலிற் கட்டும் ஓர் அணி; இதனை வீரக்கழல் என்ப. மழவர் - சில வீரர், உருவக் குதிரை மழவ ரோட்டிய என்றார் பிறரும். பூந்தலை முழவு - வீரமத்தளம், அவை முரசு நிசாளம் துடுமை திமிலை என்பனவாம். இவற்றிற்கு மறவர்கள் பூ முதலிய சூட்டி வணங்குதல் மரபாகலின் பூந்தலை முழவு என்றார். இதனை,

மாசற விசித்த வார்புறு வள்பின்,
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை,
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்  (50)

என்னும் புறப்பட்டான் அறிக. வீரமுரசின் கண்ணைமேனோக்கியிருப்ப அமைத்து அக்கண்ணிறைய மலர்களைக் குவித்துவைத்தாற் போன்று கூடை நிறையமலரைக் குவித்து வைத்தனர் என்பதாம். இதற்கு இங்ஙனம் கூறாது, பூந்தலைக் கழற் கால் மழவர் முழவின் நோன்றலை கடுப்ப எனக் கொண்டுகூட்டி, பொற் பூக்களையுடைய தலையினையும் வீரக்கழல் அணிந்த காலினையுமுடைய மழவர் முன் கொட்டும் வீரமத்தளத்தினது வலிய கண்ணை ஒக்க உருண்டை எனக் கடுப்ப என்னும் உவம உருபிற்கு உருண்ட என ஒருசொல் வருவித்துரைத்தார் நச்சினார்க்கினியர். பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப் பெய்த பூவினர் எனச் சொல் வேண்டாமலே இனிதின் முடிதல் காண்க.

சுண்ணம் - நவமணிகளும் பொன்னும் சந்தனமும் கருப்பூரம் முதலியனவும் புழுகிலும் பனிநீரிலும் நனைய வைத்து இடிக்கப்படுவதாம். இங்ஙனம் இடிக்கவேண்டுதலின் பலர் தொகுபு இடித்த என்றார். அச்சுண்ணத்தின் நுண்மையை விளக்குவார், தாதுகு சுண்ணம் என்றார். தாதுகு சுண்ணம் - தாதுபோன்று பரந்த சுண்ணம் என்க. தகை செய்-அழகைச் செய்கின்ற. தீஞ்சேறு - கருங்காலி சீவிக் காய்ச்சின இனிய களி. பைங்கருங் காலிச் செங்களி அளைஇ நண்பகற் கமைந்த அந்துவர்க் காயும் (பெருங் 3-14: 81-2) என்றும், அங்கருங் காலி சீவி ஊறவைத் தமைக்கப்பட்ட செங்களிவிராய காயும் (சீவக-2473) என்றும் பிறரும் கூறுதல் காண்க. இன்னீர் என்றது இளம்பாக்கினுள் அன்னத்தை; இனிய நீர்மையுடைய பசுங்காய் எனினுமாம்.

நீடுகொடியிலை - வெற்றிலை. கோடு -சங்கு. நூறு-சுண்ணாம்பு. நால்வகைப் படையும் வழங்கும் தெருவின்கண் வழங்குமிவர்கள் இருவேறு படைகளும் நெருங்கிய பகைமுனைக்கட் பட்டாரைப் போன்று உயிர்க்கு அஞ்சி வெய்துயிர்த்தனர் என்க. அவை - அந்நால்வகைப் படை. படைவழங்கும்போது அஞ்சி ஒதுங்கி நின்று அவை போயின பின்னர்ப் பண்டம் விற்றுத்திரிவோர். மாடங்களின் நிழலிலே வெயிலுக்கு ஒதுங்கி இருந்தனர் என்க. யானையும், தேரும், புரவியும், களமர் மயக்கமும் வருவன பெயர்தலில், பூவினரும், கோதையரும், சுண்ணத்தினரும், இலையினரும், நூற்றினரும், பண்ணியம் தழீஇத்திரி விலைஞரும் அஞ்சி இருந்து, அவைநீங்கிய பின்றை நிழலில் இருத்தர என இயைத்துக் கொள்க. இனி, 407-இருங்கடல் என்பது தொடங்கி 423 - மறுக என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் : நரைமுது மகளிர் பண்ணியம் விற்றலும் எழிலுடைய இளமகளிர் செயலும் கூறப்படும்.

பண்ணியம் விற்கும் தொன்முது பெண்டிரும், மயிலிய லோரும் மடமொழி யோரும்,

407-423 : இருங்கடல் ........................ மறுக

பொருள் : இருங்கடல் வான்கோடு புரைய - கரிய கடலில் வெள்ளிய சங்கைப்போல, வாருற்றுப் பின்னிட்ட வால் பெரும்நரைக் கூந்தலர் - கோதிப் பின்னே முடிந்து போகட்ட பெரிய வெள்ளிய நரையினையுடைய கூந்தலையுடையராகிய, நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் - நன்றாகிய வனப்பினையுடைய பழமை மூத்த பெண்டிர், செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை செல்சுடர்ப் பசுவெயில் தோன்றி அன்ன செய்யர்-சிவந்த நீர்மையினை யுடைய கிளிச்சிறை என்னும் பொன்னாற் செய்த பாவை வீழ்கின்ற கதிர்களானாய பசிய வெய்யிலிடத்தே தோன்றினாற் போன்ற சிவந்த நிறத்தினையுடையராய், செயிர்த்த நோக்கினர் - ஆடவரை வருத்திய பார்வையையுடையராய், மடக்கண் ஐயகலுழும் மாமையர் - மடப்பத்தையுடைய கண்ணோடே வியப்பினையுடையவாய் நோக்கினார் கலங்குதற்குக் காரணமான மாமை நிறத்தினையுடையராய், வை யெயிற்று வார்ந்த வாயர் - கூரிய எயிற்றினது வரிசையாலே நேரிதாய வாயினையுடையராய், வணங்கு இறைப் பணைத்தோள்-வளைந்த சந்தினையுடைய மூங்கில் போலும் தோளினையும், சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை - நெகிழ்ந்து வீழ்ந்து விடுவதுபோன்ற விளக்க முற்றிய கை வந்தியினையும், தொய்யில் பொறித்த சுணங்கெதிர் இளமுலை - தொய்யிலால் வல்லியாக எழுதப்பட்ட சுணங்கு தோற்றிய இளைய மூலையினையும், மை உக்கன்ன மொய் இருங்கூந்தல் - மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய மயிரினையும் உடைய, மயில் இயலோரும் மடமொழியோரும் - மயிலின் தன்மையை உடையோரும் மடப்பத்தையுடைய மொழியினை உடையோரும், கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து - தம்மைக் கோலஞ் செய்து மெத்தென நடந்து கையைத் தட்டி, கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப - காம நுகர்ச்சியினையன்றி வேறொன்றையும் கல்லாத இளைஞருடனே மகிழ்ந்தனராய்ப் புணரும்படி, புடையமை பொலிந்த வகையமை செப்பில் - புடைபடுதல் அமைந்த அழகிய பல வகைப்பட்ட செப்பிடத்தில், காமர் உருவில் தாம் வேண்டு பண்ணியம்-விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வார் தாம் விரும்பும் நுகர் பொருள்களை, கமழ் நறும் பூவொடு மனை மனை மறுக - மிகவும் மணங்கமழ்கின்ற நறிய மலர்களோடே ஏந்தி மனைகள்தோறும் உலாவி நிற்ப;

கருத்துரை : கரிய கடலின்கட் டோன்றிய சங்கு போன்று கோதிப்பின்புறத்தே முடியிட்டுப் போகட்ட நரைத்த கூந்தலையுடையவரும் நல்ல அழகினையுடையவருமாகிய முதுமகளிர்கள், சிவந்த நிறமுடைய கிளிச்சிறை யென்னும் பொன்னாலியற்றிய பாவை பசுவெயிற் பட்ட பொழுது தோன்றுமாறு போலத் தோன்றும் சிவந்த நிறத்தினையுடையாரும், ஆடவர்க்கு வருத்தந் தோற்றும் பார்வையினையுடைய கண்ணுடையோரும், வியப்பு நல்கும் மாமை நிறமுடையோரும், நேரிதாய கூரிய எயிற்றொழுங்கையுடைய வாயினையுடையோரும், வளைந்த மூங்கிலை ஒத்த தோளினையும் நெகிழும் கைவந்தியினையுமுடையாரும், தொய்யில் எழுதப்பட்ட சுணங்கு பிதிர்ந்த இளமுலையினையுடையாரும், மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரியகூந்தலையுடையாரும், மயில் போன்ற சாயலையுடையாரும், மடப்பமுடைய மொழியினையுடையாரும் ஆகிய மகளிர், தம்மைக் கோலஞ் செய்து கொண்டு மெத்தென நடந்து தங்காதற் கொழுநரைக் கைதட்டி அழைத்துக் காமநுகர்தலையன்றி வேறொன்றையும் கல்லாத அவ்விளைஞரோடே மகிழ்ந்து புணரும்படி, புடைபடுதலமைந்த அழகிய பல்வேறு வகையான செப்புகளில் அவர் விரும்புவனவும், கண்டார் விழையும் வடிவமைந்தனவுமாகிய தின்பண்டங்களை மண மிக்க மலர்களோடே ஏந்திக் கொண்டு, மனைகள் தோறும் உலாவாநிற்ப என்பதாம்.

அகலவுரை : தொன்முது பெண்டிர், மயிலிய லோரும் மடமொழி யோரும் மாந்தரொடு திளைக்குமாறு செப்பில் பண்ணியம் மலரோடு ஏந்தி மனைதோறும் உலாவ என, அணுகக் கண்டு கொள்க. காதலிருவர் மன நெகிழ்ந்த புணர்ச்சிக் காலத்தே விரும்பித்தின்னும் பண்டமும், சூடும் மலர்களும் இவை என அறிந்து அவையிற்றைத் தொன்முது பெண்டிர் மனைதொறும் சென்று விற்றலின், இதனை ஏதுவாக்கிக் கூறினார்.

செந்நீர் (410) என்பது தொடங்கி (419) கையெறிந்து என்னுந் துணையும் அந்நகரத்துச் செல்வமிக்க மனையில் வாழும் இளமகளிரின் இயல்பு கூறியதாம். வான்கோடு-வெண்மை நிறமுடைய சங்கு. இது தொன்முது பெண்டிர் முடியிட்டுப் போகட்ட கூந்தலுக்கு நிறத்திற்கும் வடிவிற்கும் உவமை என்க. சீரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர் (126-7) என்றார், திருமுருகாற்றுப்படையினும். பின்னிட்ட - பின்புறத்தே முடிந்து போகட்ட. தொன்முது : மீமிசைச் சொல். அவர்கள் அகவையான் முதிர்ந்த விடத்தும் அழகுடையராகவே விளங்கினர் என்பார், நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் என்றார். ஆசிரியர் நச்சினார்க்கினியர் நன்னர் நலத்தர் என்ற தொடரைப் பிரித்து மயிலியலோர்க்கு இயைப்பாராயினர். செந்நீர்ப் பசும்பொன் என்றது, சிவந்த தன்மை யுடைய கிளிச்சிறை என்னும் பொன் என்றவாறு. பொன் சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என நால்வகைப்படும்; அவையிற்றுள், கிளிச்சிறை செந்நீர்மையான் உயர்ந்ததாகலின் செந்நீர்ப் பசும்பொன் என்றார். இதனை, நூறுபத் தடுக்கிய வீறுயர் பசும்பொன் (அரங்கேற்று காதையில் 164-5) எனவரும் தொடர்க்கு, வீறுயர் பசும்பொன் - மாற்றான் உயர்ச்சி பெற்ற பசிய பொன்: ஆவது கிளிச்சிறை என அடியார்க்கு நல்லார் உரை கூறுமாற்றானும் உணர்க. கிளிச்சிறையாற் செய்த பொற்பாவைமேல் அந்தி வெயிற்பட்டால் எத்துணை அழகியதாய்த் தோன்றும் அத்துணை அழகிய நிறமுடையார் மதுரை நகரத்து மயிலியலோர் என்று வரும் உவமை அழகினை உணர்ந்து மகிழ்க.

பசுவெயில்-கதிரவன் மறைதற்குச் சிறிது முன்னர் உலகிற்படரும் பச்சை வெயில். இதனைக் காடுகிழாள் வெயில் என்ப, (சிலப். 4: 5-8-உரை) என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். இக்காலத்தே இதனை மஞ்சள் வெயில் என்று வழங்குப. பாவை விரிகதிர் இளவெயிற் றோன்றி யன்னநின் (நற்-192:8-10) என்று, தாவினன் பொன் றைஇய பாவை விண்டவழ் இளவெயில் கொண்டு நின்றன்ன மிகுகவின் (அகம் 121 : 1-3) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க, செயிர்த்த நோக்கு - வருத்திய பார்வை. ஐய கலுழும் மாமை - என்றதற்கு வியப்பிற்றாய் வழிந்தொழுகுவது போன்ற கருநிறம் எனினுமாம். கருநிறம் - மாமை எனப்படும். கலுழ்தல்-ஒழுகுதலுமாம். வை-கூர்மை. வார்தல் - நேரிதாதல். கைவந்தி-ஒரு மகளிரணி; ஆடையுமாம். தோள்வந்தி - என இக்காலத்தே (தோவந்தி) மகளிர் மேலாடையை வழங்குதலுண்டு. தொய்யில்-எழுதும் குழம்பு. சுணங்கு-தேமல், கைஇ-கைசெய்து; ஒப்பனை செய்து. கையெறிந்து - கையைத் தட்டி அழைத்து கல்லா மாந்தர் என்றது, காமநுகர்தலன்றி மெய்ந்நூல்களை ஓதாத செல்வர் மக்களை. உலகமாந்தர் பெரும்பான்மையோரும் அன்னராதலின், கல்லா மாந்தர் என்றார். பண்ணியம் - பண்ணிகாரம், தின்பண்டம். மனைமனை என்னும் அடுக்கு மனைகள் தோறும் என்னும் பொருட்டு. மறுக-உலாவ.

இனி 424-மழை என்பது தொடங்கி 488-தோன்ற என்னுந் துணையும் ஒருதொடர்; இதன்கண் திருவிழாவும், மக்கள் இறைவழிபாடு செய்தலும் பவுத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, அமண் பள்ளி முதலியனவும் கூறப்படும்.

நாளங்காடியின் பேராரவாரம்

424-430 : மழை ..................... கம்பலை

பொருள் : மழை கொளக் குறையாது புனல் புக மிகாது கரை பொருது இரங்கும் முந்நீர் போல- முகில் முகக்க முகக்கக் குறைவுபடாமல் யாறுகள் பாய்தலினானும் மிகுதலைச் செய்யாமல் கரையை மோதி ஒலிக்கும் கடல் போல, கொளக் கொளக் குறையாது தரத்தர மிகாது -பலரும் வந்து கொள்ளக் கொள்ளக் குறையாமல் பலரும் மேன் மேலும் கொண்டுவரக் கொண்டுவர மிகாமல் நிறையுற்ற, கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி - தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீரைத் தன்னிடத்தே கொண்ட ஏழாநாள் அந்தியில், ஆடு துவன்று விழவின் -வேறோர் இடத்தில் இல்லாத வெற்றி நெருங்கும் திருவிழா நாளின்கண், நாடார்த்தன்றே - அவ்விழாவிற்குத் திரண்ட நாட்டிலுள்ள மக்கள் ஆரவாரித்தாற்போன்று, மாடம் பிறங்கிய மலிபுகழ்க்கூடல் - மாடத்தாலே விளக்கமுற்ற மிக்க புகழையுடைய நான்மாடக் கூடலின்கண், நாளங்காடி நனந்தலைக் கம்பலை - நாளங்காடியையுடைய அகன்ற இடத்தே எழுந்த பெரிய ஆரவாரமும்;

கருத்துரை : முகில்கொள்ளுதலால் குறையாமலும், யாறு புகுதலால் மிகாமலும் கரையை மோதி முழங்கும் கடல் போல, பலரும் வந்து கொள்ளுதலால் குறையாமலும், பலரும் கொண்டு வருதலான் மிகாமலும், எப்பொழுதும் பண்டங்களானும் ஆரவாரத்தானும் தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்த நீராட்டத்தை உடைய ஏழாநாள் அந்திப் பொழுதில் திரண்ட நாட்டிலுள்ள மக்கள் ஆரவாரித்த ஆரவாரம் போன்ற நான்மாடக் கூடலின்கண் நாளங்காடியில் எழுந்த பேராரவாரமும் என்பதாம்.

அகலவுரை : மதுரைமாநகரத்து நாளங்காடி பண்டங்கள் மக்கள் கொள்ளக் கொள்ளக் குறையாமலும் வணிகர்கள் மேலும் மேலும் கொண்டுவரக் கொண்டுவர நிறைவுறாமலும் இருத்தற்கு, முகில் கொள்ளுதலால் குறையாதும் யாறுகள் புகுதலால் மிகாதும் கிடக்கும் கடல் உவமை என்க.

கழுநீர்-கழுவும் நீர்; தீவினைப் போக்குந் தன்மையுடைய தீர்த்தம் என்றவாறு. திருவிழாவிற்குக் கால்கொண்ட ஏழாம் நாள் அந்தியில் தீர்த்தமாடுதன் மரபாகலின் எழுநாளந்தி என்றார். ஆடு-வெற்றி. துவன்று - நிறைவு; துவன்று நிறை வாகும் (உரி-34) என்பர் தொல்காப்பியனார். நாடு - நாட்டிலுள்ள மக்கட்கு ஆகுபெயர். ஆர்த்தன்று-ஆர்த்தது போன்றது. ஆர்த்தற்றே எனற்பாலது ஆர்த்தன்றே என மெலிந்து நின்றது. ஆர்த்த ஆரவாரம் போன்றது நனந்தலைக் கம்பலை என்க. கம்பலை - பேராரவாரம். நான்மடக்கூடல் என்பது மதுரைக்குக் காரணப்பெயர். என்னை? நான்கு மாடம் கூடலின் நான்மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றது என்பவாகலான். அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்பனவாம். இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்றும் கூறுப. மலிபுகழ் - மிக்க புகழ் நாளங்காடி-பகற்காலத்துக்கடை. நனந்தலை-அகன்ற இடம்.

விழவும், வழிபாடும்

பெருநிதிக் கிழவரின் பெற்றிமை

431-442 : வெயிற்கதிர் .............. காண்மார்

பொருள் : வெயில் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன - வெயிலையுடைய சுடர்கள் ஒளி மழுங்கிய செலவு மிக்க ஞாயிற்றையுடைய செக்கர் வானத்தை ஒக்க, சிவந்து நுணங்கு உருவில் கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம் - சிவந்து நுண்ணிதாகும் வடிவாலே கண்களை வெறியோடப் பண்ணிச் சிந்தி விழுமாறு போன்ற ஒள்ளிய பூத்தொழிலையுடைய ஆடைகளை, பொன்புனை வாளொடு பொலியக்கட்டி-பொன்னிட்ட உடைவாளோடே அழகு பெறக் கட்டி, திண் தேர்ப் பிரம்பில் புரளுந் தானை-திண்ணிய தேரின்கட் பிரம்பினிடத்தே புரளுகின்ற முன்றானையினையும், கச்சந்தின்ற கழல் தயங்கு திருந்து அடி - கோத்துக் கட்டிய கச்சுக் கிடந்து தேய்த்த தழும்பிருந்த வீரக்கழலசையும் பிறக்கிடாத அடியினையும், மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல் - உலகத்துள்ளார் வலிகளைக் கடந்து புகழ்ச்சியால் எங்குந் திரியும் ஒன்றாகிய பெரிய வேப்ப மாலையினையும், மணி தொடர்ந்தன்ன ஒண்பூங்கோதை-மாணிக்கம் ஒழுகினாலொத்த ஒள்ளிய செங்கழுநீர் மாலையினையும், அணிகிளர் மார்பின் ஆரமொடு அளைஇ - அழகு விளங்கும் மார்பிற் கிடக்கின்ற முத்துமாலையோடே கலந்து அணிந்து, காலியக்கு அன்ன கதழ் பரி கடைஇ-காற்றினுடைய செலவினை யொத்த விரைந்த தேர்க்குதிரைகளைச் செலுத்தி, காலோர் காப்பக் காலெனக் கழியும் - காலாட்கள் சூழ்ந்து காப்பக் காற்றென்னும் படி கடிதிற் செல்லும், வான வண்கை வளங் கெழு செல்வர் - முகில் போன்று வரையாமற் கொடுக்கும் வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்தின செல்வர், நாண்மகிழ் இருக்கை காண்மார் - நாட்காலத்தே மகிழ்ந்திருக்கின்ற இருப்பின்கண் இருந்து விழாக் காண்பாராக.

கருத்துரை : வெயிலின் கதிர் ஒளி மழுங்கிய ஞாயிற்றையுடைய செக்கர் வானம் போன்று சிவந்த நுண்ணிய வடிவாலே காண்பார் கண்களை வெறியோடச் செய்து சிந்தி விழுமாறு போன்ற ஒள்ளிய பூத்தொழில்களையுடைய ஆடைகளைப் பொன்னிட்ட உடைவாளோடே பொலிவுறக் கட்டித் திண்ணிய தேர்த்தட்டின்கட் பிரம்பிடத்தே ஆடையின் முன்றானை கிடந்து புரளா நிற்ப; உலகினுள்ளார் வலிகளைக் கடந்து புகழ்ச்சியால் எங்கும் திரிதரும் ஒப்பற்ற வேப்ப மாலையினையும், செங்கழுநீர் மாலையினையும் முத்து மாலையோடே கலந்து அணிந்து, காற்றென்னக் கடிது செல்லும் தேர்ப் புரவிகளைச் செலுத்தி விரையும் முகில் போன்ற வண்மையை யுடைய வளப்பம் மிக்க செல்வர் நாட்காலத் திருக்கையின்கண் இருந்து காணாநிற்ப என்பதாம்.

அகலவுரை : வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிறு என்றது அந்திமாலைப் பொழுதில் மறையும் நிலையிலிருக்கும் ஞாயிற்றை. ஞாயிற்றையுடைய செக்கர் வானம் என்க. இஃது ஆடையின் நிறத்திற்கு உவமை. நுணங்குதல்-நுண்ணிதாதல். உரு : ஈண்டு வடிவின் மேற்று; நிறம் எனினுமாம். கண்பொருபு : கண்ணொளி கதுவா வண்ணம் தன்னொளியாற் றடைசெய்து என்றபடி. 262ம் - சிந்து மாறுபோல, பூங்கலிங்கம்-பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை. பொன் புனை வாள் என்றது பொன்னாற் பிடி முதலியவற்றில் அழகு செய்யப்பட்ட உடைவாள் என்றவாறு. இனிக் கரும்பொன்னாற் செய்த உடைவாள் எனினுமாம். ஆடையின்மேல் உடைவாள் கட்டுதல் மரபு. திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானை என்ற தொடரை, பிரம்பின் திண்டேர் என மாறி விளிம்பிலே வைத்த பிரம்பினையுடைய திண்ணிய தேர் என்றும், தானையை ஒலியல் என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். கச்சம்-கச்சு. தின்னுதல்-தழும்புண்டாகத் தேய்த்தல். கழல்-வீரக்கழல். திருந்தடி - போரிற் பிறக்கிடாத அடி. கழலுரீஇய திருந்தடி (புறம், 7-2) என்றும், இயலணிப் பொலிந்த ஈகை வான்கழல் துயல் வருந்தோறும் திருந்தடிக் கலாவ (குறிஞ்சி. 126-7) என்றும் பிறரும் கூறுதல் காண்க. கால்-காற்று. காற்கடுப் பன்ன கடுஞ்செலல் இவுளி (அகம். 224:5) என்றும், வளிநடந்தன்ன வாச்செலல் இவுளியொடு (197-1-புறம்) என்றும் பிறரும் குதிரையின் செலவிற்குக் காற்றின் இயக்கினை உவமித்தல் காண்க.

கதழ்பரி-விரைந்த செலவு. கதழ்வும் துனையும் விரைவின் பொருள (உரி-17) என்பர் தொல்காப்பியனார் . கடைஇ-செலுத்தி. காலோர் - காலாட்கள். வானம் : ஆகுபெயர்; முகில் என்னும் பொருட்டு. நாண்மகிழ் இருக்கை - நாட்காலத்தே கள்ளுண்டு மகிழ்ந்து வண்மை செய்து வீற்றிருக்கும் இருப்பு. இதனை நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின் (புறம். 123: 1-2) என்றும், தூத்துளி பொழிந்த பொய்யா வானின், வீயாது சுரக்கும் அவன் நாண்மகிழ் இருக்கையும் (மலைபடு. 75-6) என்றும் வருவனவற்றால் அறிக. காண்மார்-காண்பாராக.

பெருநிதிக் கிழவரின் பெண்டிர் செயல்

443-452 : பூணொடு .................. மறைய

பொருள் : பூணொடு தெள்ளரிப் பொற்சிலம்பு ஒலிப்ப - ஏனைய அணிகலன்களோடே தெள்ளிய உள்ளின் மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி வந்த, ஒள் அழல் தாஅற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை - ஒள்ளிய நெருப்பிலே இட்டுக் குற்றம் இல்லாதே விளங்கிய அழகிய பொன்னாற் செய்த விளங்கும் அணிகலன்களையுடைய, அணங்கு வீழ்வு அன்ன-தெய்வ மகளிர் வானுலகத்தினின்றும் மண்ணுலகத்தே இழிந்தாலொத்த, பூந்தொடி மகளிர் - பூத்தொழில் செய்த வளையலினையுடைய அச் செல்வருடைய மகளிருடைய, மணங்கமழ் நாற்றம் தெருவுடன் கமழ-புழுகு முதலியன நாறுகின்ற நாற்றம் தெருவுகளெல்லாம் மணங்கமழாநிற்ப, ஒண் குழை திகழும் ஒளி கெழு திருமுகம் - ஒள்ளிய மகரக் குழை விளங்கும் ஒளிபொருந்திய அழகினையுடைய முகம், திண்காழ் ஏற்ற வியல் இரு விலோதம் தெண்கடல் திரையின் அசைவளி புடைப்ப - திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத் தெளிந்த கடற்றிரை போல எழுந்து விழும்படி வீசுங்காற்று மோதுகையினாலே, நிரை நிலை மாடத்து அரமியந் தோறும் ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலாமுற்றங்கள் தோறும், மழை மாய் மதியிற் றோன்றுபு மறைய-முகிலிலே மறையுந் திங்களைப் போன்று ஒருகால் தோன்றி ஒருகால் மறையாநிற்ப;

கருத்துரை : மகளிருடைய மணங்கமழ் நாற்றம் தெருவுடன் கமழ அவர்கள் முகம் தோன்றுபு மறைய என்க. ஏனை அணிகலன்களோடே சிலம்பு ஒலிக்கும்படி வந்த அழகிய பொன்னாற் செய்த விளங்கும் அணிகலன்களை யுடையவரும் விண்ணுலகினின்றும் மண்ணுலகத்திலே இழிந்த தெய்வ மகளிர் போன்றவரும் பூத்தொழில் செய்த வளையணிந்தவருமாகிய அச்செல்வருடைய பெண்டிர் அணிந்துள்ள புழுகு முதலிய மணப் பொருள்களின் மணம் தெருவெல்லாங் கமழவும், அவர்கள் திருமுகங்கள், ஒழுங்குபட்ட மாடத்தே நிலாமுற்றத்தின்கண் கடற்றிரை போன்று எழுந்து விழும்படி பெரிய கொடிகளைக் காற்று மோதுகையாலே முகிலால் மறைக்கப்படும் திங்கள் மண்டிலம் போன்று ஒரு காற்றோன்றி ஒருகால் மறையாநிற்பவும் என்பதாம்.

அகலவுரை : தெள்ளரி-தெள்ளிய சிலம்பினுள்ளிடும் மணி; என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே.. யாமுடைச் சிலம்பு முத்துடையரியே (சிலப். 20: 67-69) என வருதல் காண்க. ஆராய்ந்திடப்பட்ட அரி என்பார், தெள்ளரி என்றார். ஒள் அழல் - ஒளியுடைய தீ. நன்கு புடமிட்டுத் தூய்தாக்கிய சிறிதும் குற்றமில்லாத அழகிய பொன் என்பார், ஒள்ளழற் றாவற விளங்கிய ஆய்பொன் னென்றார். அவிர்தல் - விளங்குதல். இழை: ஈண்டு அணிகலன். மணிகள் வைத்து இழைக்கப்படுவது என்னும் பொருட்டு. அணங்கு-வானவர் மகளிர். வீழ்வு - இழிதல். அவர்கள் இருத்தற்குரிய மேல் உலகினின்றும் கீழதாகிய மண்ணுலகிற்கு இழிந்தாற் போன்ற என்றபடி. பூந்தொடி - பூவேலை செய்யப்பட்ட வளையல். காழ்-கழி; கொடியேற்றப்பட்ட கோல். விலோதம்-கொடி. தெருவுடன்-தெருவெங்கும்; கடலிடத்தே திரையெழுந்து மறியுமாறு கொடியை அசைத்தலால் அக்கொடிகளில் மறைந்தும் வெளிப்பட்டும் மாதர் முகம் தோன்றின என்க. அரமியம் - நிலா முற்றம். செல்வர் நாண்மகிழ் இருக்கையிலிருந்து விழாவைக் காண அவர் பெண்டிர் அரமியத்தேறி நின்று விழாக் கண்டனர் என்பது கருத்து. மாய்தல்-ஈண்டு மறைதல் என்னும் பொருட்டு; களிறுமாய்க்கும் கதிர்க் கழனி என்புழிப் போல (347). வரிசையாய் நிற்கும் மாடம் என்பார், நிரைநிலை மாடம் என்றார். நிரை-வரிசை. தோன்றுபு - தோன்றி : செய்பு என்வாய்பாட்டு வினையெச்சம். இனி இம் மகளிரை நாயனார் கோயிலிற் சேவிக்கும் மகளிர் என்றும், செல்வர் மாசற விளங்கிய யாக்கையராய்க் கமழ என்றும் 447 ஆம் அடியோ டியைத்து உரையெழுதுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். விலோதம் அவ்வரமியத்தே விழாக் குறித்துயர்த்தப்பட்ட தென்னாதே நாயன்மார் எழுந்தருளுங்கால் கொடியெடுத்தல் இயல்பென்னும் குறிப்பால், அவ்விலோதம் வேறென்று கூறியுள்ளார்.

மழுவாள் நெடியோன் கோயில் விழா

453-460 : நீரும் .............. கறங்க

பொருள் : நீரும் நிலனும் தீயும் வளியும் மாகவிசும்போடு ஐந்து உடன் இயற்றிய - நீரும் நிலனும் நெருப்பும் காற்றும் திசைகளையுடைய வெளியுமாகிய ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த, மழுவாள் நெடியோன் தலைவனாக - மழுவாகிய வாளையுடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு, மாசு அற விளங்கிய யாக்கையர்-அகத்தும் புறத்தும் அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையராய், சூழ்சுடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு - தெய்வத்தன்மையால் சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத பூக்களையும் இதழ் குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு, மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார்-விலக்குதற்கரிய முறைமையினையுடைய உயர்ந்த பலிகளைக் கொடுத்தற்கு, அந்தி விழவில் தூரியம் கறங்க - அந்திப் பொழுதின் நிகழும் விழாவில் இசைக் கருவிகள் முழங்க;

கருத்துரை : நீரும் நிலனும் தீயும் காற்றும் விசும்புமாகிய ஐம்பெரும் பூதமும் கலந்த உலகினைப் படைத்தருளிய மழுவாகிய வாளையுடைய பிறவா யாக்கைப் பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு அகம் புறமிரண்டானும் தூயராய்த் தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியினையுடைய வாடாத பூக்களையும், இமையாத கண்ணினையும் அவியாகிய உணவினையும் உடைய, மாயோன், முருகன் முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுத்தற்பொருட்டு அந்திக்காலத்து எடுத்த விழாவின் பொருட்டு இசைக்கருவிகள் முழங்காநிற்ப என்பதாம்.

அகலவுரை : தோற்றமுறை பற்றி எண்ணுமிடத்து விசும்பும் காற்றும் நெருப்பும் நீரும் மண்ணும் என்றும், ஒடுக்கமுறை பற்றி எண்ணுமிடத்து நிலன் நீர் தீ காற்று விசும்பென்றும் எண்ணுதல் மரபு. ஈண்டு ஒடுக்கமுறைபற்றி எண்ணுவார் செய்யுளாதலான் நிலனும் நீரும் என்னாது நீரும் நிலனும் என முறைபிறழ வைத்தார். இப் பூதங்கள் தோன்றுமிடத்து வான்முதலாக நிரலே தோன்றுமென்றல் சைவசமயத்தினர் கொள்கையாம்; இதனை,

சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர் மண்தொடக்கியே ஒன்றுக்கொன்றங்
கேற்றமா மோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும்
ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவ மாகும்  (சித்தியார். சுபக்-155)

என்னும் அளவை நூலான் அறிக. ஐந்துவகைப் பொறிகட்கும் புலனாம் சிறப்புப்பற்றி இவ்வைந்து பூதங்களையுமே விதந்து கூறினரேனும், முப்பத்தாறு தத்துவங்களுள் ஒழிந்தவற்றையும் கொள்க. தத்துவக்கூட்டமாகிய இவ்வுலகத்தை உயிர்களின் மலமகற்றி அவையிற்றிற்கு அழிவில்லாத பேரின்ப வீடளித்தற் பொருட்டு முழு முதலாகிய பிறவாயாக்கைப் பெரியோன் படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் நிகழ்த்துகின்றான் என்பது சைவசமயிகளின் கொள்கையாகலின், ஐந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் என்றார். இதனை,

காரிய கார ணங்கள் முதல்துணை நிமித்தங் கண்டாம்
பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநி மித்தம்
தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம்  (சித்தி-சுப-38)

என்றற் றொடக்கத்து ஆன்றோர் மொழிகளான் உணர்க. முழுமுதலாகிய இறைவன் ஐந்தொழிலுமியற்றுதல் உயிர்களின் மலமகற்றும் பொருட்டேயாகலான், அவன் ஏந்திய துடி முதலியவற்றில் மலமொழிதற்கு அறிகுறியாக ஏந்திய மழுவொன்றனையே விதந்தெடுத்து மழுவாள் நெடியோன் என்றார். மழு-நெருப்பு; அது மலத்தினைச் சுட்டொழித்துப் பிறவியின் வேரினை அரிதலான் வாள் என்றார். மழுவை வாளாக வுடையான் என்றபடி. இதனை,

தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு  (உண்மைவிளக்கம்-35)

என்பதனான் அறிக. நெடியோன் என்றது, அளவைகளான் அளக்கப்படாதவாறு நீண்டவன் என்றவாறு. என்னை?

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரன்  (சித்தி-சுப-292)

என்றும்,

சிவனை அவன் திருவடிஞா னத்தாற் சேரச்
செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம்
அவனை அணு காவென்றும் ஆத லானும்  (சித்தி-சுப-295)

என்றும்,

கண்டிடுங்கண் தமைக்காணா கரணம் காணா
கரணங்கள் தமைக்காணா உயிருங் காணா
உண்டியமர் உயிர்தானும் தன்னைக் காணா
துயிர்க்குயிராம் ஒருவனையும் காணா தாகும் 

என்றும் ஓதுபவாகலான்.  (þ-296)

மாசு-உடலின் புறத்தேயும் அகத்தேயும் படிந்துள்ள அழுக்குகள். புறத்தே நீராடலானும் அகத்தே வாய்மை பேணலானும் இருவழியும் அழுக்கற்ற யாக்கையினர் என்றார். என்னை?

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்  (குறள்-298)

என்றோதுபவாகலான், இத் தூய்மை சரியை முதலிய நான்கு படியினும் ஒழுகுவார்க்கு இன்றியமையாமையின் அதனை விதந்தோதினர். இனி, அகமாசு அற்றதனால் அதன் சத்துவம் மெய்ப்பட்டுத் தோன்றும் உடலினையுடையார் எனினுமாம். என்னை?

கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்  (பெரிய-திருநா-167)

என்னுமாற்றால் அகத்தே மாசற்றவழிப் புறத்தே விளங்கித் தோன்றும் மெய்ப்பாடுண்மை அறிக. தேவர்கட்கு மலர்வாடுதலும் கண்ணிமைத்தலும் இன்மையானும், அவர்கள் தீயிலிடப்படும் அவியின் மணத்தையே நுகர்ந்து கொள்வர். என்பதனானும் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற வுணவிற் பெரியோர் என்றார். இங்ஙனமாதலை,

வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்
றன்னவை பிறவும் ஆங்க ணிகழ
நின்றவை களையும் கருவி என்ப  (களவியல்-4)

எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க.

வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற வுணவி னோரும்  (புறம்-62:16-7)

என்றார் பிறரும்.

உரு-அச்சம்-அசுரர் முதலியோர்க்கு அச்சமுண்டாக்கும் பெரியோர் என்க. நூல்களான் இன்னின்னவாறு பலிசெய்தல் வேண்டும் என விதித்தமுறை பிறழாதபடி கொடுத்தல் வேண்டுமாதலின் மாற்றரும் பலி என்றார். பலி - கடவுட்கிடும் பூசைப்பொருள். தூரியம்-இசைக் கருவி. கறங்குதல்-முழங்குதல். இதனால் மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப் புலவரும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் சைவசமயிகள் என்று எண்ணற்கிடமுளது என்பாருமுளர். இனி மதுரை மாநகரத்துள்ள ஏனைய சமயநிலையங்களைக் கூறுவான் தொடங்குகின்றார்.

பவுத்தப் பள்ளி

461-467 : திண்கதிர் ................. பள்ளியும்

பொருள் : திண் கதிர் மதாணி ஒண் குறு மாக்களை -திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலன்களையுடைய ஒள்ளிய சிறு பிள்ளைகளை, ஓம்பினர் தழீஇ - கூட்டத்தே பிரிந்துவிடாமே பாதுகாப்பாராய்த் தம் கைகளான் அனைத்து, தாம் புணர்ந்து முயங்கி - அவர்பால் உண்டாய விருப்பத்தாலே அவர்களை மேலும் நன்கு அணைத்துத் தழுவி, தாதணி தாமரைப் போது பிடித்தாங்கு - தாது சேர்ந்த தாமரைப்பூ தாமரை முகிலைப் பிடித்தாற் போன்று அம்மக்கள் கையினைத் தம் கையாற் பற்றி, தாமும் அவரும் ஓராங்கு விளங்க - தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழ்தலானே, காமர் கவினிய பேரிளம் பெண்டிர் - விருப்பம் மருவிய அழகுபெற்ற பெரிய இளமையினையுடைய மகளிர், பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்ச - பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய்ப் புகையினையுடையராய்ப் புகழ்ந்து வாழ்த்த, சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும் - சிறப்பெய்தி அவர்களாற் பாதுகாக்கப்படும் பவுத்தப் பள்ளியும்;

கருத்துரை : திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலன்களையுடைய சிறு பிள்ளைகள் கூட்டத்தினுள் தம்மைப் பிரிந்து போகாதபடி தம் கைகளான் அணைத்துப் பாதுகாப்பாராய் மேலும் அவர்பால் உள்ள விருப்பத்தானே அவர்களைத் தம்முடலோடே பொருந்த அணைத்துத் தழீஇ, அவர்களுடைய சிறிய கைகளைத் தம் கையால் தாமரை மொட்டினைப் பற்றிய தாமரை மலர் போன்று தோன்றப் பற்றி, அவரும் தாமும் சேரத்திகழ்தலானே அழகுற்று விளங்கும் பேரிளம் பெண்டிர், பூசைக்கு வேண்டும் மலர், புகை முதலியவற்றோடே புத்தர் பெருமானை வழிபாடு செய்து வாயாற் புகழ்ந்து பாடிப் பாதுகாத்தலானே சிறந்து திகழும் பவுத்தப் பள்ளியும் என்பதாம்.

அகலவுரை : மதாணி - பதக்கமுமாம். சிறுபிள்ளைகள் தாயரைப் பிரிந்துழிக் கூட்டத்தினுள் பெரிதும் அலமருதலும், தாயர் அவரைக் காணாமல் அலமருதலும் இயல்பாகலின் அங்ஙனம் பிரியாதபடி பாதுகாத்தற் பொருட்டென்பார், ஓம்பினர் தழீஇ என்றார். அங்ஙனம் தழீஇய பின்னரும் அவரை இறுகப் புல்லி முத்த மிடுதல் தாயன்பின் இயல்பாகலின் மீண்டும் தாம் புணர்ந்துமுயங்கி என்றார்; என்னை? மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்பவாகலின், தாமரைப் போது பிடித்தாங்கு என்றதனைத் தாமரை, போதினைப் பிடித்தாங்கு என எழுவாய்த் தொடர் ஆக்குக. அலர்ந்த தாமரை என்பது தோன்றத் தாதணி தாமரை என்றும், மொட்டு என்பது தோன்றப் போது என்றுங் கூறினர். ஈண்டுத் தாதணி தாமரை தாயர் கைக்கும், போது குறுமக்கள் குவிந்த கைக்கும் உவமை. இதற்கு இங்ஙனம் கூறாது, ஆசிரியர் நச்சினார்க்கினியர், திண் கதிர் மதாணி காமர் கவினிய பேரிளம் பெண்டிர் தாம் முயங்கிப் புணர்ந்து ஓம்பினர்த் தழீஇ, தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு ஓண்குறு மாக்களைத் தழீஇத் தாமும் அவரும் ஓராங்கு விளங்க, எனக் கொண்டு கூட்டிப் பெண்டிர், தாம் புணர்ந்து முயங்கிப் பாதுகாக்கும் கணவரைக் கூட்டிக்கொண்டு தாமரை மலரைப் பிடித்தாற் போலச் சிறு பிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே வளங்க என்றார். ஈண்டுச் சீலமென்றது புத்த சமயத்தில் இல்லறத்தார்க்கோதிய ஒழுக்கத்தை அவை : கொல்லாமை, திருடாமை, பிறர்மனைநயவாமை, பொய் கூறாமை, கள்ளுண்ணாமை என்னும் ஐந்துமாம். இவை பஞ்சசீலம் எனக் கூறப்படும். பழிச்சுதல்-புத்தரின் சிறப்புக்களை ஓதிப் புகழ்தல். அது வருமாறு :

வாடாப் போதி மரகதப் பாசடை
மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கும்
அருளின் தீந்தேன் நிறைந்து நனிஞெகிழ்ந்து
மலரின் மெல்லி தென்ப வதனைக்
காமர் செல்வி மாரன் மகளிர்
நெடுமா மழைக்கண் விலங்கி நிமிர்ந்தெடுத்த
வாளும் போழ்ந்தில வாயின
யாதோ மற்றது மெல்லிய வாறே   (தொல்.புறம்- அறுவகைப்பட்ட என்னும் சூத்.மேற்)

என்றற் றொடக்கத்துப் புத்தர் பெருமானின் சிறப்புக்களைப் புகழ்ந்து வாழ்த்துதல் என்க. இத்தகைய இல்லறத்தாராற் போற்றப்படுதலான், புறங்காக்கும் கடவுள் பள்ளி என்றார். பவுத்தர் புத்தனை வழிபடுமிடத்தைப் பள்ளி என்றல் மரபு. இதனால், பண்டைநாள் செந்தமிழ் நாட்டில் புத்தசமயம், பரவியிருந்தமை உணரற்பாற்று. மக்கள் சமயம் பற்றி ஒருவரோடொருவர் இகல் கொள்ளாதிருந்தமையும் அறியற் பாற்று.

அந்தணர் பள்ளி

468-474 : சிறந்த வேதம் ..................... பள்ளியும்

பொருள் : சிறந்த வேதம் விளங்கப் பாடி - அதர்வவேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட வேதங்களை அவையிற்றின் பொருள் தமக்கு விளங்குமாறு ஓதி, விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து - அவை கூறிய சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்கள் வேறாகாதபடி மேற்கொண்டு, நிலம் அமர் வையத்து நால்வகையான நிலங்கள் அமர்ந்த உலகத்தே, ஒரு தாம் ஆகி - ஒன்றாகிய இறை தாங்களேயாய், உயர்நிலை உலகம் இவணின்றும் எய்தும் - உயர்ந்த நிலையினையுடைய வீட்டுலகத்தை இவ்வுலகிலே நின்றே சேரும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின் - அறத்தின் வழி ஒரு காலமுந் தப்பாது பல்லுயிர்களிடத்தும் பரந்து பட்டுச் செல்லும் அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய, பெரியோர் மேஎய் இனிதின் உறையும் - மெய்யுணர்வுடையோர் பொருந்தி எப்பொழுதும் இன்புற்று வதியும், குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் -மலையை உள் வெளியாக வாங்கி இருப்பிடமாக்கினாற் போன்ற அந்தணர்கள் இருப்பிடமும்;

கருத்துரை : சிறந்த வேதங்களைப் பொருள் விளங்க ஓதி, ஓதியதற்குத்தக ஒழுகி, நிலவுலகத்தினராயிருந்தும் இறைப்பொருளோடு தாம் வேறாகாத அத்துவித நிலையினை உணர்ந்தவராய், இவ்வுலகிலேயே வீட்டின்பம் கைவரப் பெற்றவராய் அறநெறியிற்றவறாதவராய், எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டொழுகுபவராய், விளங்கும் பெரியோர் இனிதே உறையும் மலையைக் குடைந்தாலொத்த இருக்கைகளும் என்பதாம்.

அகலவுரை : இது வேத வழிப்பட்ட மேலோர் இருக்கை கூறிற்று. அதர்வ வேதம் ஒழுக்கங் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுசூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாது, (தொல்-புறத்-20. நச்-உரை) என்பவாகலான் இருக்கும், யசுரும், சாமமுமாகிய வேதங்களை என்பார், சிறந்த வேதம் என்றார். இனி, இவையிற்றை ஓதுவார் பலரும் தமக்கு அவையிற்றின் பொருள் விளக்கமின்றியே ஓதுதல் உண்மையின், அங்ஙனமின்றிப் பொருளை நன்கு உணர்ந்தே ஓதியோர் என்பார், விளங்கப் பாடி என்றார். வேதந்தானும், எழுதப்படாமல் ஆசிரியர் ஓதுவித்தலை உடனோதியே பயிலப்படுதலான் ஓதி என்னாதே பாடி என்றார். வேதங்களினும் அற்பச் சுருதி வாக்கியம் என்பது தொழிலொழுக்கம் கூறுவது; பிரபலச் சுருதி வாக்கியம், உயிரியல் அறிவு கூறுவதென்ப. ஆகலின் கருமவொழுக்கத்தை விட்டு, ஞானவொழுக்கத்தே நிலைபெற்ற அந்தணர் என்பார், விழுச்சீர் ஒழுக்கமொடு புணர்ந்து என்றார். ஈண்டு ஒழுக்கம் என்றது ஞான வொழுக்கத்தை; அஃதாவது யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிடல் என்க.

யானென தென்னும் செருக் கற்றாலன்றி இறைவனுடனாய் நின்று கோடலும், அதுபற்றி வினை நுகர்ச்சியும் ஆர்ச்சிப்பும் இல்லாதாதலும், அதுபற்றிக் குற்ற மறுதலுமாகிய இவை முறையே நிகழ்தல் செல்லாமையால், அச்செருக்கறுதியைப் பயக்கும் ஒழுக்கத்தை விழுச்சீர் எய்திய ஒழுக்க மென்றார். இனி, வேதங்களை நன்கு ஓதிய வழியும், ஓதியாங்கு ஒழுகாதார்க்கு ஓதலான் வரும் துன்பமே யன்றி நன்மை சிறிதும் இன்மையான், இவ்வந்தணர் நன்கு கசடற வோதி அதற்குத் தக நிற்றலுடையார் என்பார், ஒழுக்கமொடு புணர்ந்து என்றார்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக  (குறள் - 391)

என்றும்,

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்  (குறள் - 134)

என்றும் பெரியாரும் பணித்தல் காண்க. ஒருதாம் ஆகி என்றது அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நின்று, என்றவாறு. அஃதாவது, உயிர் கட்டற்ற நிலையில் அவ்விறைப் பொருள் இவ்வுயிரேயாய்த் தான் என வேறு காணப்படாது நின்ற முறைமையால், வீட்டு நிலையில் உயிர் அவ்விறைவனோடு உடனாய் நின்று அறியினும் தானென வேறு காணப்படுமாறின்றி அவனோடு ஒற்றுமைப்பட்டு அவனே தானாய் நின்று என்றவாறு. இவ்வாறு நிற்க வல்லார்க்கு மலமற்று மேலும் பிறத்தற்கு ஏதுவின்மையான், இம்மையினின்றே வீடெய்தல் இயல்பாகலின், உயர்நிலை உலகம் இவணின்று எய்தும் என்றார். உயர்நிலை யுலகம் - வீட்டுலகம். உயர்ந்த நிலைமையுடைய தேவருலகம் என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். மேலும், பெரியோர் மேஎய் என்றதற்குச் சீவன்முத்தராயிருப்பாரிடத்தே சில காலம் பொருந்தி நின்று என்றும், ஒருதாம் ஆகி என்றதற்கு ஒன்றாகிய பிரமம் தாங்களேயாய் என்றும், ஒழுக்கமொடு புணர்ந்து - என்றதற்கு யாகங்கள் முதலிய தொழிலோடே சிலகாலம் பொருந்தி நின்று என்றும் கூறுவர்.

அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற் பெரியோர் என்றது, அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் எனத் தேவர் ஓதியவாறு அந்தணர் இயல்பு தெரித்தோதியவாறு. அன்பு - ஈண்டு அருள் என்னும் பொருட்டு. அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை ஆகலான், அவர் இவ்வுலகத்தே இம்மையிலேயே வீட்டின்பம் கைவரப் பெற்று உறைவார் என்பார். இனிதின் உறையும் பள்ளி என்றார். இது முன்னர் நிலையாமையைக் குறிப்பான் உணர்த்திய புலவர் பெருமான் மேலும், அந்தணர் மேலிட்டு நிலைபேறுடைய வீட்டின்பம் எய்தும் நெறியையும் குறிப்பான் உணர்த்தியவாறென்க.

அந்தணர் - வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார், என்பர் நச்சினார்க்கினியர். இனி, 475-வண்டுபட என்பது தொடங்கி, 488 - தோன்ற என்னுந் துணையும் அமண்பள்ளி கூறுகின்றார்.

அமண்பள்ளி

475-488 : வண்டு .................... தோன்ற

பொருள் : வண்டுபடப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் பூவும் புகையும் சாவகர் பழிச்ச - வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேனிருந்த தோற்றத்தையுடைய பூக்களையும் புகையினையும் ஏந்தி விரதங் கொண்டோர் வாழ்த்தாநிற்ப, சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்று இவண் தோன்றிய வொழுக்கமொடு நன்கு உணர்ந்து - சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே மிக வுணர்ந்து மேலும், வானும் நிலனும் தாம் முழுது உணரும் - தேவருலகையும் அதன் செய்கைகளையும் எல்லா நிலங்களின் செய்கைகளையும் நன்றாக உணருகின்றவரும், சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்று அடங்கு அறிஞர் - தமக்கு அமைந்த விரதங்களையும் அவ்விரதங்கட்கு இளையாத மெய்யினையும் கல்விகளெல்லாம் நிறைந்து களிப்பு அடங்கின அறிவினையும் உடையார், செறிந்தனர் நோன்மார் - நெருங்கினராய் இருந்து நோற்றற்கு, கல் பொளிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி - கல்லைப் பொளிந்தாற் போன்ற ஒடுங்கிய வாயையுடைய குண்டிகையைப் பல வடங்களையுடைய நூலுறியிலே தூக்கி, நல்குவர - பிறர்க்கு அருளுதலையுடைய, கயங்கண்டன்ன - குளிர்ச்சியாற் குளத்தைக் கண்டாலொத்த, வயங்கு உடை நகரத்து - விளங்குதலுடைய கோயிலிடத்து, செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து - செம்பாற் செய்தாலொத்த செவ்விய சுவர்களை ஓவியம் எழுதி, நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி, இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும் - வியப்பமைந்த நறிய பூக்களையுடைய அமண்பள்ளியும், குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற - மலைகள் பலவும் திரண்டு பொலிவன போலத் தோன்றாநிற்ப;

கருத்துரை : வண்டுகள் படியுமாறு பருவம் முதிர்ந்த தேன் இருந்த அழகிய பூக்களோடே, புகையினையும் பலியாக ஏந்திச் சாவக நோன்பிகள் அருகனை வாழ்த்தாநிற்ப, சென்ற காலத்தையும், எதிர்காலத்தையும் நிகழ்கால நிகழ்ச்சியோடே உணர்ந்து வான் முதலிய உலகங்களின் இயல்பினையும் உணர்ந்து கொண்டவரும், தமக்கமைந்த விரதங்களையும், அவ்விரதங்கட்கு இளையாத மெய்யினையும், கல்வியெல்லாம் நிறைந்த அறிவினையும் உடையோரும் ஆகிய சான்றோர் நெருங்கி நோண்பாற்றுதற்கு வேண்டிய கல்லைப் பொளிந்தாற் போன்ற ஒடுங்கிய வாயையுடைய குண்டிகைகளைப் பல வடங்களையுடைய நூலுறியிலே இட்டு வழங்கும் இடமாகிய குளத்தைக் கண்டாலொத்த குளிர்ச்சியை உடைய அருகக் கடவுளின் திருக்கோயிலிடத்தே அமைந்த செம்பாற் செய்தாலொத்த சுவர்களிலே ஓவியம் தீட்டப் பெற்றுக் கண்பார்வைக்கும் எட்டாது மேனிலமுயர்ந்து ஓங்கி வியப்பூட்டுகின்ற நறிய பூஞ்சோலைகளையுடைய அமணர் பள்ளியும் மலைகள் பல சேர நின்றார் போன்று தோன்றா நிற்ப என்பதாம்.

அகலவுரை : கடவுட் பள்ளியும், அந்தணர் பள்ளியும், நறும்பூஞ் சேக்கையும் குன்று பல குழீஇப் பொலிவன போன்று தோன்ற என இயைத்துக் கொள்க.

பழுநிய-முதிர்ந்த. புகை-அகில் முதலியவற்றையிட்டுப் புகைக்கும் நறிய மணப்புகை. சாவகர் - சமணரில் விரதங்காக்கும் இல்லறத்தார். சாவக நோன்பிகள் அடிகளாதலின் (சிலப்-15:18) என்றார் இளங்கோவடிகளாரும். கொல்லாமை இரவுண்ணாமை முதலியன அவ்விரதங்களாம்.

இறந்த பிறப்பிற்றாம் செய்த வினையை அறிந்து கோடலும், இனிப் பிறந்தெய்தும் வினையின் பயனை அறிந்து கோடலும், பிறந்த பிறப்பின் கண் நிகழ்கால ஒழுக்கம் காரணமாகக்கொண்டு செய்ய வல்லுநர் என்பார், சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவட் டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து என்றார். இதனை,

இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணாயோ நீ  (சிலப். 11. 156-7)

என்னும் கவுந்தியடிகளார் மொழியானும் உணர்க. வானும் நிலனும்தாம் முழுதுணரும் என்றது. தேவகதி, மக்கட்கதி, விலங்கு கதி, நரக கதிகளை நன்கு ஓதி உணர்ந்த என்றவாறு. சான்ற கொள்கை - தந்நிலைக்கேற்ற விரதம்: இனி, சான்ற கொள்கையாவது,

ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமம் அல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரை காணினும் காணா என்கண்
அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென்
பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது
அருக ரறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதென்
கலைமிசை உச்சி தானணி பெறாஅ
திறுதியி லின்பத் திறைமொழிக் கல்லது
மறுதர வோதியென் மனம்புடை பெயரா  (சிலப்-நாடு-164-207)

என்னும் சிறந்த கொள்கைகளைக் கடைப்பிடித்தல் எனினுமாம்.

ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி ஐந்தின் மென்வகை தெரியும் சிந்தை விளக்கு நின்றெரியவிட்டுப், பொய் கொலை களவு காமம் அவாவிருள் புகாது போற்றும் தற்றௌல் வாழ்க்கை, ஆற்றலுடையார்க்கே கடைபோதலின் சாயா யாக்கை என்றார்; ஆவது, அருக பரமன் அருளிய பரமாகமத்திற் கண்டவிரதங்கட்கு இளையாத மெய் என்றவாறு. கல்வியான் நிறைந்து அறிவின்கட் களிப்பின்றி அடங்கிய மெய்யுணர் பெரியோர் என்பார் ஆன்றடங்கு அறிஞர் என்றார். ஆன்றவிந் தடங்கிய சான்றோர் (புறம்-191) என்றார் பிறரும். நோன்மார் - நோற்கும் பொருட்டு. இட்டுவாய் - ஒடுங்கிய வாய். பல்புரிச் சிமிலி - பல புரிகளையுடைய நூலுறி. நல்குவர - வழங்குதல் உண்டாக. நோற்றற்குரிய சிமிலி முதலியவற்றைப் பள்ளியிலே வழங்குதல் உண்டாக என்க. நல்குவர என்றதற்குச் செறிந்தனர் நோன்மார் பிறர்க்குச் சொல்லுதல் உண்டாக எனினுமாம். நல்குவரப் புனைந்து ஓங்கிய சேக்கை என இயைத்துக் கொள்க. சேக்கை - சேக்குமிடம்; உறைவிடம். இனி 424-மழை என்பது தொடங்கி 488 - தோன்ற என்னுந் துணையும் விரிந்து கிடந்த இத்தொடர்ப் பொருளை, முந்நீர் போல, எழுநாளந்தியில் நாடு ஆர்த்த ஆரவாரம் போன்றது நனந்தலைக்கண் பேராரவாரம், கலிங்கம் வாளொடு கட்டி அளைஇக் கடைஇக் கழியும் செல்வர், நாண் மகிழ் இருக்கையிலிருந்து காண, பூந்தொடி மகளிர் முகம் தோன்றுபு மறைய இயற்றிய நெடியோன் தலைவனாகப் பெரியோர்க்குப் பலிகொடுமார் தூரியங் கறங்க. பெண்டிர் பழிச்சிப் புறங்காக்கும் பள்ளியும் அந்தணர் பள்ளியும் அமண் பூஞ்சேக்கையும், குன்றுகுழீஇ யன்ன தோன்ற, என அணுகக் கொண்டு காண்க.

அறங்கூ றவையத்தார் தெரு

489-492 : அச்சமும் .................... அறங்கூ றவையமும்

பொருள் : அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி - நடுவாகக் கூறுவாரோ கூறாரோ என்று அஞ்சிவந்த அச்சத்தையும் அவர்க்குத் தோல்வியால் நெஞ்சிற் றோன்றும் வருத்தத்தையும் அவர் தம் நெஞ்சு கருதின பொருள்கள் மேற் றோன்றும் பற்றுள்ளத்தினையும் போக்கி, செற்றமும் உவகையும் செய்யாது காத்து - ஒரு கூற்றில் செற்றம் செய்யாமல் ஒரு கூற்றில் உவகை செய்யாமல் தம் நெஞ்சினைப் பாதுகாத்து, ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகி - துலாக்கோலை ஒத்த நடுவு நிலைமையை உடைத்தாய், சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும் - இக் குணங்களாற் சிறந்த விரதங்களையுடைய அறநூலைச் சொல்லும், அவையமிருக்கும் தெருவிடத்தும்;

கருத்துரை : வழக்கிடுவோர் உள்ளத்தே இவர் நடுக் கூறுவர் கொல், கூறார்கொல்! என்னும் ஐயத்தான் எழுந்த அச்சத்தையும், தோற்றுழி அவர்க்குளதாம் வருத்தத்தையும், அவர் தோற்குமாறு தொடர்தற்குக் காரணமான பற்றுள்ளத்தையும் போக்குபவராய், வழக்குத் தொடர்ந்தோருள் ஒருவர்பால் செற்றமும், ஒருவர்பால் உவகையும் செய்யாமல், தாம் தம்முடைய நெஞ்சினைப் பாதுகாத்துத் துலாக்கோல் போன்ற நடுநிலையுடையராய், அறத்தையே மேற்கொண்டு, அதனை வழக்கிட்டோர்க்கு விளங்கக் கூறும் சான்றோர்கள் கூடியிருக்கும் தெருவினிடத்தும் என்பதாம்.

அகலவுரை : அறங் கூறுவோர், வழக்கிடுவோர் அஞ்சவேண்டாத நிலையில் உயரிய குணஞ் செயல்களானே புகழ்வாய்ந்தவராய் விளங்குமாற்றானே அவர் உளத்தே அச்சம் போக்குவர் என்றபடி.

அவலம் நீக்கி என்றது, வழக்கிடுவோர் இருவருள் ஒருவர் வென்றால் ஏனையோர் தோற்றல் இயல்பாகலின், தோற்றவர் உளத்தே வருத்தந் தோன்றுங்கால் அவர்பால் அருள்கூர்ந்து அவர்க்கு அறங்காட்டித்தேற்றி என்றவாறு. ஆர்வம் நீக்கி என்றது, ஒரு பொருளைத் தனித்தனியே எனதென தென்றிருக்கும் பற்றுள்ளம் காரணமாகத் தம்முள் மாறுபடுவோர் இருவருள் ஒருவரே அப்பொருட்குரியவராதலும் மற்றொருவர் அறியாமையான் அதனைத் தனது என்று பற்றுள்ளம் உடையராதலும் இயல்பன்றே! அங்ஙனம் அறத்திற்கு முரணாகப் பற்றுள்ளம் கொண்டார் தோற்றுழி, அவர் வருந்தாமே அவர் செய்த பற்றுத் தவறுடைத்தாதலை அவர் மனங்கொளக் காட்டி, அப் பற்றொழித்து அவர் இன்புறுமாறு செய்து என்றபடி. அறங்கூறுவோர் நடுநிலை பிறழ்தற்குக் காரணமாவது ஒரு கூற்றில் வெறுப்பும், ஒரு கூற்றில் விழைவும் கோடலாம் ஆகலின், வழக்கிடுவோர் இருவருள், தமர், பகைவர் என்னும் வேறுபாடின்றி எல்லோரையும் சமமாகக் கொள்ளற்குரிய பெரியோர் என்பார், செற்றமும் உவகையும் செய்யாது காத்து என்றார்.

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்  (குறள் - 111)

எனத் தேவரும் கூறுதல் காண்க.

காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணந் தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றா கெடும்  (அறநெறிச்-22)

என்றார் பிறரும்.

ஞெமன் கோல் - துலாக்கோல். முன்னே தான் சமமாக நின்று, பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாக்கோல் போன்று முன்னே செற்றமும் உவகையும் செய்யாது தன்னை நடுநிலைக்கண் நிறுத்திப் பின்னர்ப் பகை நொதுமல் நட்பென்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பவுரைக்கும் செப்பமுடைய அவையம் என்பார், ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகி என்றார். இத்தொடரோடு,

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோக் கணி   (குறள் - 118)

என்னும் திருக்குறளை ஒப்புக் காண்க.

கேடும் பெருக்கம் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி  (குறள் - 115)

என்னும் மேலான கொள்கையை எப்போதும் கடைப்பிடித்தொழுகுவார் அவை என்பார், சிறந்த கொள்கை அறங்கூ றவையம் என்றார். சமயங்கட்குப் பின்னாக. மாந்தர் வாழ்க்கைக்கு அறங்கூ றவையம் சிறந்ததாகலின் சமய நிலையங்களை அடுத்து ஏனையவற்றின் முன்னாக இதனைக் கூறினர் என்க. பண்டைநாள் தமிழ் மன்னர்கள் இத்தகைய சிறந்த அறங்கூறவையங்களை நிறுவி அவற்றால் அறங்கெடாது போற்றிய செய்தியை இதனானும் மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறங்கெட வறியாதாங்கு, (நற்-400 : 7-8) என்றும், அறங்கெழு நல்லவை, (அகம்-93:5) என்றும், உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்று, (புறம் 39:8-9) என்றும், அறம் நிலைபெற்ற அருள்கொள் அவையத்து (பெருங் -1-34-25) என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க.

காவிதி மாக்களாகிய அமைச்சர் தெரு

493-499 : நறுஞ்சாந்து .................. காவிதிமாக்களும்

பொருள் : நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து -நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய், ஆவுதி மண்ணி - யாகங்களைச் செய்து, அவிர் துகின் முடித்து - விளங்குகின்ற மயிர்க்கட்டுக் கட்டி, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல-பெரிய சுவர்க்கத்தே ஏறப்போம் சான்றோர்களைப் போன்று, நன்றுந் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி - நன்மை தீமைகளைத் தம் அறிவாலே கண்டு மேலும் ஆராய்ந்து தெளிந்து தம் மனம் தீதின்பாற் செல்லாதவாறு அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து - இல்வாழ்க்கைப் பண்பும் பயனுமாயமைந்த அன்பு நெறியினும் அறச் செயலினும் ஒழுகுதல் ஒழியாதபடி எக்காலமும் குறிக்கொண்டு பாதுகாத்து, பழி ஒரீஇ உயர்ந்து சான்றோராற் பழித்தொதுக்கப்பட்ட தீவினையினின்றும் விலகி அதனானே உயர்ச்சி எய்தி, பாய் புகழ் நிறைந்த செம்மைசான்ற காவிதி மாக்களும் - வறியோர்க்கு வழங்குதலான் உலகெலாம் பரவுகின்ற புகழானே நிறைவுற்ற தலைமையமைந்த காவிதிப் பட்டம் பெற்ற வேளாளராகிய அமைச்சர்கள் வாழும் தெருவினிடத்தும்;

கருத்துரை : நறிய சந்தனத்தைப் பூசி நிறம் விளங்கும் மார்பினையுடையராய் வேள்விகள் பலசெய்து விளங்குகின்ற மயிர்க்கட்டுக் கட்டி, பெரிய சுவர்க்கத்தே ஏறப்போகும் சான்றோர் போல நன்மை தீமைகளை அறிவாலே ஆராய்ந்து தெளிந்து தம் நெஞ்சத்தைத் தீதின்பாற் செல்லாது அடக்கி இல்லறத்திற்குரிய அன்பும் அறமும் நீங்காது இயற்றிப் பழிப்பன விலக்கி ஈகையாற் பரவிய புகழான் நிறைந்தவரும் காவிதிப்பட்டம் பெற்றவரும் வேளாளரும் ஆகிய அமைச்சர் வாழும் தெருவிடத்தும் என்பதாம்.

அகலவுரை : ஈண்டுக் கூறப்படும் காவிதிமாக்கள் பாண்டிநாட்டு மன்னராற் சிறப்புக் குறித்து வழங்கப்படும் காவிதிப்பட்டம் பெற்றவரும், முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரியவரும் பெருநிதிக் கிழாரும் ஆகிய வேளாளர் என்க. இப்பட்டம் பெற்றமைக்கு அறிகுறியாகக் காவிதிப்பூ என்னும் பொற்பூ வழங்குதன் மரபு. இப்பட்டத்திற்குப் பெண்டிரும் உரியர் என்பதனை எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய மயிலியன் மாதர் (23: 144-5) எனவரும் பெருங்கதையான் அறியலாம்.

இவர் அமைச்சியல் பூண்டொழுகும் உரிமையும் உடையார் என்பதனாற் காவிதி மாக்கள் என்றதற்குக் காவிதிப்பட்டம் கட்டின அமைச்சர் என்று நச்சினார்க்கினியர் ஓதினர். அதற்கேற்பவே, முன்னரும், நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி-என்றதற்கு, அரசனிடத்துள்ள நன்மையும் தீமையும் நெஞ்சத்தாலே கண்டு அத்தீங்குகளை யாராய்ந்து அவற்றிலே ஒழுகாமல் அடக்கி என்றவாறு வலிந்து பொருள் விரிப்பாராயினர். ஆவுதி-வேள்வி. வேள்வி செய்வோர்க்குச் சந்தனம் பூசுதல் மரபாகலின் நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து என்றார். அவிர் துகின் முடித்தலாவது விளங்குகின்ற தலைப்பாகையணிதல். இத் தலைப் பாகையும் காவிதிப்பட்டம் பெற்றமைக்கு அறிகுறி என்க.

மேலுலகம் எய்தும் குறிக்கோளுடைய பெரியோர் நன்றுந் தீதும் கண்டு ஆய்ந்து அடக்குமாறு போல நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கிய காவிதிமாக்கள் என வினை உவமமாக்குக. சான்றோர் ஓதிய மெய்ந்நூல்களை ஓதி நன்மை தீமைகளை ஆராய்ந்து தெளிந்து தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் அறிவுடையோர் என்க. இவர் இல்லற நெறிக்கண் வழுவாது நின்று ஒழுகுவோர் என்பார் அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த காவிதி மாக்கள் என்றார். என்னை?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது  (குறள்-45)

என்றும்,

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்று மில்  (குறள் - 44)

என்றும்,

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்  (குறள் - 46)

என்றும்,

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு (குறள்-231)

என்றும் தமிழ்த் திருமறை முழங்குதலான் என்க. செம்மை-ஈண்டுத் தலைமைத்தன்மை மேற்று. ஆவுதி-பெரியோர்க்கு யாகமும் காவிதி மாக்கட்கு விருந்தோம்பலும் என்க. யாகம் செய்து விசும்பு வழங்கும் பெரியோர் போல விருந்தோம்பி விசும்பு வழங்கும் காவிதி மாக்களும் என்றவாறு.

வணிகர் தெரு

500-506 : அறநெறி .............. பகர்தரும்

பொருள் : அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி - நூலோர் தமக்கோதிய நெறியிற் றவறாது இல்லற நெறியிலே நடந்து, குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன - அண்ணிய பல திரட்சியையுடைய மலைகளைக் கண்டாலொத்த, பருந்து இருந்து உகக்கும் பன் மாண் நல்இல் - பருந்துகள் இளைப்பாறி இருந்து பின்னர் உயரப் பறக்கும் பல தொழிலான் மாட்சிமைப்பட்ட நல்ல இல்லில், பல்வேறு பண்டமொடு ஊன் மலிந்து கவினி - பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று, மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் - மலையிடத்தனவும் நிலத்திடத்தனவும் நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய, பல்வேறு திருமணி முத்தமொடு பொன் கொண்டு - பலவாய் வேறுபட்ட அழகினையுடைய மணிகளையும் முத்துக்களையும் பொன்னையும் வாங்கிக்கொண்டு, சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் - சிறந்த அயல்நாட்டுப் பண்டங்களை விற்கும் வணிகர் வாழும் தெருவிடத்தும்;

கருத்துரை : நூலோர் தமக்கு ஓதிய நன்னெறியிற் பிறழாதவராய், இல்லறத்தி னிற்பாராய், மலைகளின் திரட்சியைக் கண்டாற் போன்ற பருந்துகள் இளைப்பாறி இருந்து பின்னர்ப் பறத்தற்குக் காரணமான தொழின் மாண்புடைய இல்லத்தின்கண் இருந்து, பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே உணவுப் பொருள்களும் மிக்கு அழகுபெற்று, மலையிடத்தும் நிலத்திடத்தும் நீரிடத்தும் பிற இடங்களினும் தோன்றுதலை யுடையனவும், பலவாய் வேறுபட்ட அழகுடையனவுமாகிய மணிமுத்து பொன் முதலியவற்றைப் பண்டமாற்றாகப் பெற்று அயல் நாட்டினின்றும் கொணர்ந்த பண்டங்களை விற்கும் வணிகர் உறையும் தெருவிடத்தும்,

அகலவுரை : வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்  (குறள் - 120)

என்றும்,

வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும்பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூ உமிகைகொளாது கொடுப்பதூ உங்குறை கொடாது
பல்பண்டம் பகர்ந்து

என்றும் வருவன வணிகர்க்குச் சிறந்துரிமையுடைய அறமென்க. தம் வணிக நெறியினும் இல்லற நெறியினும் பிறழாதென்பார், அறநெறி பிழையாது ஆற்றின்ஒழுகி, என்றார். ஆறு - இல்லறத்திற்கோதிய நெறி. என்னை? அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என இல்லறம் துறவறம் இரண்டனுள்ளும் இல்லறத்தையே சிறப்பித்தோதலான் அச்சிறப்புக் கருதி ஆறு என்றார் என்க. வணிகர் இல்லறநெறியிற் றலைசிறந்து நிற்றலை, வருநிதி பிறர்க் கார்த்தும் மாசாத்து வானென்பான் (சிலப். 1: 33) என்றும்,

ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே
காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறும்
காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்
தாமரையும் சங்கும்போற் றந்து  (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-குடிமரபு)

என்றும் வருவனவற்றால் அறிக. உயரப் பறக்கும் இயல்புடைய பருந்துகள் ஆண்டே தங்கி இளைப்பாறுதற்குத் தக, உயர்ந்தனவாகிய இல்லென்பார் பருந்து இருந்து உகக்கும் இல்லென்றார்; பல்வேறு சிற்பத் தொழிலும் நிறைந்த இல்லென்பார் பன்மாண் இல்லென்றார். உகத்தல் - ஏறப்பறத்தல். மணிகள் - மலையிடத்தும் நிலத்திடத்தும் கடலிடத்தும் பிறவிடத்தும் பிறத்தலுண்மையின் மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் என்றார். இத் தொடரைப் பண்ணியம் என்பதனோடியைப்பர் நச்சினார்க்கினியர். சிறந்த தேஎத்துப் பண்ணியம் என்றது, இன்னபண்ணியம் இன்ன நாட்டிற்றோன்றியது சிறப்புடைத்து என்னும் சிறப்புடைய அயல்நாட்டுப் பண்டம் என்றவாறு. அவை,

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குடகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்  (பட்டின. 187-91)

என்றாற் போல்வன. பண்ணியம் - பண்டங்கள். பகர்நர் - விற்போர்; என்றது வணிகர் என்றவாறு. ஊண் மலிந்து கவினி பொன்கொண்டு பண்ணியம் பகர்நரும் என்க.

நாற்பெருங் குழுவினர் உறையும் தெரு

507-510 : மழை .................. குழுவும்

பொருள் : மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள் - மழைபெய்தல் இடையறாமையாலே தவறாத விளைவினையுடையதாகிய, பழையன் மோகூர் அவையகம் விளங்க -பழையன் என்னும் குறுநில மன்னனுடைய மோகூரிடத்து அரசவை திகழுமாறு, நான்மொழிக்கோசர் என்பார் வீற்றிருந்தாற் போன்று வீற்றிருக்கும், தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் - தாம் தமது ஒழுக்கத்தாலே மேலாய் விளங்கிய நால்வகைப்பட்ட பெரிய குழுவினர் வாழும் தெருவினிடத்தும்;

கருத்துரை : இடையறாது மழைபெய்தலாலே தவறாத விளைவினையுடைய பழையன் என்னும் குறுநில மன்னனின் மோகூரின்கண் அரசவையிடத்தே நான்மொழிக்கோசர் என்பார் சிறந்து விளங்குமாறு போல விளங்குவோரும் தம் ஒழுக்கத்தாலே மேன்மையுற்றோரும் ஆகிய நால்வகைப்பட்ட கூட்டத்தினர் வாழும் தெருவினிடத்தும் என்பதாம்.

அகலவுரை : மழை ஒழுங்கு அறாமையான் என ஏதுவாக்குக. பிழையா விளையுள் - தவறாத விளைவு. தவறாத விளையுளையுடைய மோகூர், பழையன் மோகூர் எனத் தனித்தனி கூட்டுக. பழையன் - கொங்கு மண்டலத்துள்ள மோகூரின்கண் இருந்த ஒரு குறுநில மன்னன் என்றும், இவன் சேரமன்னரைப் பகைத்துப் பாண்டியமன்னருடன் நட்புக் கொண்டிருந்தான் என்றும், இவன் காவன் மரம் வேம்பு எனத் தெரிவதாலும் இவனை மாறன் எனக் கூறுதலாலும் இவன் பாண்டிய மன்னரின் மரபினனாதல் வேண்டும் என்றும் எண்ண இடமுளது. இதனை,

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த வேந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்  (சிலப். 27-124-6)

என்றும்,

பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி  (பதிற் : 5-பதிகம்)

என்றும்,
                                   மோகூர்ப்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த  (அகம்; 251-10-13)

என்றும், பிறர் கூறுமாற்றானும் அறிக.

இனி, இம் மன்னன் அவையகத்தே சிறந்து விளங்கிய கோசர் என்பார் ஈண்டு நாற்பெருங் குழுவினர்க்கு உவமை கூறப்படுதலின் பழையன் அவையகத்தே இவர் நாற்பெருங் குழுவினராக விளங்கினர் போலும். இவர்கள் மிகச் சிறந்து விளங்கினர் என்பது இவரை உவமையாக எடுத்துக் கூறலான் உணரப்படும். இவர்கள் பாண்டிய மன்னர்க்கு அடங்கி யொழுகும் நட்பினர் என்பதை,

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவனாக
கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்ப  (771-4)

என இந்நூலிற் பின்னர்க் கூறப்படுதலானும், அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு (கண்ணகிக்கு) விழவொடு சாந்தி செய்ய மழைத் தொழில் என்றும் மாறாதாயிற்று (சிலப்) என ஆசிரியர் இளங்கோவடிகளார் உரைபெறு கட்டுரையிற் கூறலானும் உணரலாம். (சிலப்) அரும்பதவுரையாசிரியர் இக்கோசரைக் குறும்பு செய்யும் சில வீரர் என ஓதுவர். அடியார்க் நல்லார் கொங்கு மண்டிலத்து இளங்கோவாகிய கோசர் என்பகுபர்லிளங் கோசர் என்னும் குறிப்பானும் நான்மொழிக்கோசர் என்பதனானும் இவர் நால்வேறு மொழிகளையும் பேசி வந்தனர் என்று எண்ணக்கூடும். ஆசிரியர் நச்சினார்க்கினியர், நாற்கோசர் மொழி தோன்றியன்ன என மாறி நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியாலே விளங்கினாற் போன்ற என்றார். அரசொடுபட்ட ஐம்பெருங் குழுவில் அமைச்சர் குழுவினைப் பிரித்து (499) முன்னர்க் கூறினர் ஆதலின் ஈண்டு ஏனை நாற்பெருங் குழுவும் கூறுவாராயினர். ஐம்பெருங் குழுவினராவார்: அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதர் ஒற்ற ரிவரென மொழிப, ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் (5:157) எனச்சிலப்பதிகாரத்தும் வருதல்காண்க. அறங்கூறவையம் காவிதி மாக்கள் வணிகர் நாற்பெருங்குழு என்னும் நான்கும் அவர்கள் உறையும் தெருக்களைக் குறித்த ஆகுபெயர் ஆகக்கொள்க.

பல்வேறுவகைத் தொழில்செய்வாரும் பிற வணிகரும்

511-522 : கோடு .................. நிற்றர

பொருள் : கோடு போழ் கடைநரும் -சங்கினை அறுத்து வளையல் முதலியனவாகக் கடைவாரும், திருமணி குயினரும் - அழகிய மணிகளைத் துளையிடுவாரும், சூடு உறு நன்பொன் சுடர் இழை புனைநரும் - சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளங்கும் பணிகளாகப் பண்ணும் தட்டார்களும், பொன் உரை காண்மரும் - பொன்னை உரைத்த உரையை அறுதியிடும் பொன்வாணிகரும், கலிங்கம் பகர்நரும் - புடைவைகளை விற்பாரும், செம்பு நிறை கொண்மரும் - செம்பு நிறுக்கப்பட்டதனை வாங்கிக் கொள்வாரும், வம்பு நிறை முடிநரும் - நச்சுக்களைத் தம் தொழின் முற்றுப்பட முடிவாரும், பூவும் புகையும் ஆயும் மாக்களும் - பூக்களையும் சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பாரும், எவ் வகைச் செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள்வினைஞரும் - பலவகைப் பட்ட தொழில்களையும் ஓவியத்தொழிலாளரும், பிறரும் கூடி - ஈண்டுக் கூறப்படாத பிறரும் கூடி, தெண்டிரை அவிர் அறல் கடுப்ப ஒண்பல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து - தெளிந்த திரையில் விளங்குகின்ற அறலையொப்ப ஒள்ளிய பலவாகிய சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து, சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ - சிறியோரும் பெரியோருமாகிய நெய்தற் றொழிலைச் செய்வாரும் திரண்டு, நால்வேறு தெருவினும் கால்உற் நிற்றர - நான்காய் வேறுபட்ட தெருவுகள்தோறும் ஒருவர் காலோடு ஒருவர் கால் நெருங்க நிற்றலைச் செய்ய;

கருத்துரை : சங்குகளை அறுத்து வளையல் முதலியனவாகக் கடைவாரும், மணிகளைத்துளையிடுவாரும், பொன்னை உரையிட்டு அறுதியிடும் பொன்வாணிகரும், புடைவை விற்பாரும், செம்பினை நிறுத்து வாங்குவாரும், கச்சுக்களை முடிவாரும், பூக்களையும் சாந்தையும் ஆராய்ந்து விற்பாரும், ஓவியம் எழுதுவாரும், இன்னோரன்ன பிறரும் கடலின் கண் விளங்கும் அறலைப் போன்று மடிப் புடைவைகளை விரித்துச் சிறியோரும் பெரியோருமாகிய நெய்தற்றொழில் செய்வாரும் திரண்டு நான்கு வேறுபட்ட தெருவுகள்தோறும் ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு நிற்றலைச் செய்ய என்பதாம். (நிற்றலைச் செய்தலால் எழுந்த ஓசையும் என்க.)

அகலவுரை : கோடு-சங்கு. போழ்-துண்டு. சங்கினை அறுத்த போழ் என்க. கடைநர் - கடையும் தொழிலைச் செய்வோர். திருவணி - செல்வமாகியமணியுமாம். குயினர் -துளையிடுவோர். குயிலுதல்-துளையிடுதல். பொன்னை உருக்கிப்பணி செய்தலின் சூடுறு நன்பொன் என்றார். இனிச் சுட்டதனால் நன்றாகிய பொன் எனினுமாம். சுடச் சுடரும் பொன் என்றார் வள்ளுவனார். சுடர் இழை - விளங்கும் அணிகலன். இழைநனைநர் என்றது தட்டாரை. பொன்னைக்கட்டளையின் இழைத்து அதன் உயர்பிழிவு கண்டு வாங்கும் பொன்வாணிகரைப் பொன் உரைகாண்மர் என்றார். பொலந்தெரி மாக்கள் (சிலப்-14: 203) என்பர் இளங்கோவடிகளார். அதற்குப் பொற்பேதத்தைப் பகுத்தறியும் பொன்வாணிகர் எனப் பொருள் விரிப்பர் அடியார்க்கு நல்லார்.

கலிங்கம் - ஆடை. பகர்நர் -விற்போர். வம்பு-கச்சு, புகை-புகையுறுப்பு. அவையாவன : நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போ டாறு (சிலப் 5: 14) என இவை. பூ - விடுபூ தொடைப்பூ கட்டுப்பூ வென்னும் மூவகைப் பூவும் என்க. எடுத்த மொழியின் இனம் செப்புமாற்றால் விரையும் கொள்க. என்னை? பூவும் புகையும் மேவிய விரையும் (சிலப் 5: 14) என்றோதுபவாகலான் அவை கோட்டந் துருக்கம் தகரம் அகில் ஆரம் என்னும் ஐந்துமரம் என்க.

கூரிய அறிவுடையார்க் கன்றி ஓவியத் தொழில் இயற்ற வாராமையின் நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞர் என்றார். நுழைந்த நோக்காவது, பொருளின் இயல்புகளை நுணுகிக் காணும் நோக்கு. நோக்கினார் கண்ணுள் தம் தொழிலை நிறுத்தலின் கண்ணுள் வினைஞர் என்றார் என்பர் நச்சினார்க்கினியர். கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும் (சிலப். 5: 30) என்றும் எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய, கண்கவர் ஓவியம் (மணி-3: 126-31) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. அவிர் அறல் - புடைவையின் மடிப்பிற்கு உவமை. கம்மியர் - தொழிலாளர். காலுற - காலோடு கால் பொருந்த. நிற்றர - நிற்க. தர: பகுதிப் பொருளது.

523-526 : கொடும்பறை ............... கடுப்பப் பலவுடன்

பொருள் : கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும் - கண்கள் வளைந்த பறையினையுடைய கூத்தருடைய சுற்றம் சேர வாழ்த்தும், தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை பெருநாள் இருக்கை - குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய ஒள்ளிய பனந்தாரையுடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பிலே, விழுமியோர் குழீஇ விழைவுகொள் கம்பலை கடுப்ப - எல்லாக் கலைகளையும் உணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்பத் தருக்கங்களைக்கூறி விரும்புதல் கொண்ட ஆரவாரத்தை ஒப்ப, பலவுடன் - பல ஆரவாரத்தோடே;

கருத்துரை : வளைந்த கண்களையுடைய பறையினையுடைய கூத்தருடைய சுற்றம் ஒரு சேர வாழ்த்தாநின்ற குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனவாகிய பனந்தார் சூடும் சேரமன்னனுடைய நாளோலக்க இருக்கையிற் கலையினை முழுதும் உணர்ந்த சீரியோர் கூடித் தருக்கஞ் செய்யுங்கால் எழும் ஆரவாரத்தை ஒப்ப நால்வேறு தெருவினும் ஆரவாரம் உண்டாக என்பதாம்.

அகலவுரை : கோடியர் - கூத்தர். பாடல்பற்றிய பயனுடையெழால் கோடியர் தலைவ (பொருநரா 56-7) என்றார் பிறரும். கூத்தரைப் பரிசில் வழங்கிப் பெரிதும் பேணுதலுடைமையால் அவர்கள் சுற்றம் ஒரு சேர வாழ்த்திற்றென்க. கடும்பு - சுற்றம். குடகடற் கரைசார்ந்த நாடாகலின், சேரநாட்டை தண்கடல் நாடு என்றார். ஒண்பூ - அடையாளப் பூவாகிய பனம்பூ. இது பொன்னாற் செய்யப்படுதலின், ஒண்பூ என்றார். கோதை - சேர மன்னன். கோதை என்பது சேர மன்னர்க்குரிய பெயர்களுள் ஒன்று: இதனை, மாவள்ளீகைக்கோதையும் (புறம்-172) என்றும் சேரமான் கோதை என்றும், சேரமான் குட்டுவன் கோதை என்றும் வருவனவற்றாலறிக.

சேரன் அவைக்களத்தே பல சமயத்தோரும் கூடிச் சொற்போர் புரிவர் போலும்; இதனை,

நறைகமழ் கூந்த னங்கை நீயும்
முறைமையின் இந்த மூதூர் (சேரன் தலைநகர்) அகத்தே
அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு  (மணி-வஞ்சி-62-4)

எனவரும் மணிமேகலையானும் உணரலாம்.

கனியும் காயும் இனியன பிறவும்

527-535 : சேறும் .................. நுகர

பொருள் : சேறும் நாற்றமும் வேறு படக் கவினிய - சாற்றானும் மணத்தானும் ஒன்றற் கொன்று வேறுபட அழகுற்ற, பலவின் சுளையும் தேமாங்கனியும் - பலாப்பழத்தினது இனிய சுளைகளையும் இனிய மாவின் பழங்களையும், பல்வேறு உருவிற்காயும் பழனும்-இன்னோரன்ன பலவாய் வேறுபட்ட காய்களையும் பழங்களையும், கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி - மழை பருவத்தே பெய்து வளர்க்கையாலே கொடிகள் விட்டு அழகு பெற்று, மென்பிணி அவிழ்ந்த குறுமுறியடகும் - மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய இலைக்கறிகளையும், அமிர்து இயன்றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் - அமிழ்தம் கற்கண்டாக வளர்ந்தா லொத்த இனிய சாற்றையுடைய கற்கண்டுத் தேற்றையும், புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும் - பலரும் இனிதெனப் புகழுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும், கீழ் செலவீழ்ந்த கிழங்கொடு பிறவும் - நிலத்தின் கீழ்ப் போகுமாறு வளர்ந்த கிழங்குகளுடனே பிறஉண்டிகளையும், இன்சோறு தருநர் பல்வயின் நுகர - இனிய பாற்சோறு அக்கார வடிசில் முதலியவற்றையும் கொடுக்கப் பெற்றோர் பலவிடங்களினும் உண்ணாநிற்ப;

கருத்துரை : சாற்றானும் மணத்தானும் ஒன்றற்கொன்று மாறுபட்ட அழகிய பலாப்பழத்தின் சுளைகளையும், இனிய தேமாவின் கனிகளையும், வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும் கனிகளையும், மழை பருவத்தே பெய்து வளர்த்தமையால் கொடிவிட்டு அழகுற்ற மெல்லிய சுருள் விரியப் பெற்ற இலைக்கறிகளையும், அமிர்தம் கற்கண்டானாற் போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத் தேற்றினையும், புகழ் உண்டாகச் சமைத்த பெரிய இறைச்சி கலந்த சோற்றினையும், நிலத்தின்கீழ் வீழ்ந்த கிழங்கோடே இன்னோரன்ன பிறவற்றையும், இனிய பாற்சோறு அக்கார வடிசில் முதலியவற்றையும் தரப்பெற்றோர் ஆங்காங்கே பலவிடங்களிலும் உண்ணாநிற்ப என்பதாம்.

அகலவுரை : சாறும் நாற்றமும் பலவின் சுளையும் வேறுபடக் கவினிய தேமாங்கனியும் என்றும், சாறு நாற்றமும் வேறுபடக் கவினிய, பலவின் சுளையும் தேமாங்கனியும் என்றும் இருவேறு பாடங்களும் உள என்று, நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். இவ்விரண்டனுள், சேறும் நாற்றமும் பலவின் சுளையும், வேறுபடக் கவினிய தேமாங்கனியும் என்னும் பாடத்தையே அவர்கொண்டு, சேறும் நாற்றமும் தேமாங்கனியும் என்ற தொடர்க்குத் தேனும் நாற்றமும் உடையவாகிய பலாப் பழத்தின் சுளையும் என்று பொருள் கூறி மேலும் சேறென்றார், சுளையில் இருக்கின்ற தேனை என விளக்கமும் கூறினர். இவ்விருவேறு பாடங்களினும் மற்றைப் பாடமே பொருட் பொருத்தமுற அமைந்திருத்தல் காண்க. காயும் பழனும் என்றது, பாகற்காய் வாழைக்காய் வழுதுணங்காய் முதலிய காய்களையும், வாழைப்பழம் முந்திரிகைப்பழம் நாரத்தம்பழம் முதலிய பழங்களையும் என்றவாறு. அடகு-இலைக்கறி. தீஞ்சேற்றுக்கடிகை என்றது, இனிய பாகு முற்றிய கற்கண்டினை; இதற்கு அமிழ்தம் உவமை. அமிழ்தமே கற்கண்டானாற்போன்ற கற்கண்டென்க. உண்டார் பலரும் அதன் இனிமையைப் பலவிடங்களினும் எடுத்தோதிப் புகழும்படி சமைக்கப்பட்ட ஊன்சோறென்பார், புகழ்படப் பண்ணிய பேரூன்சோறு என்றார். பண்ணுதல்-சமைத்தல். கீழ்நோக்கி வளர்தலுண்மையின் கீழ்செல வீழ்ந்த கிழங்கு என்றார். இன்சோறு - பாற்சோறும் அக்காரச்சோறும் என்க. தருநர் - தரப்பட்டோர்; தருநர் என்றது ஈண்டுச் செயப்பாட்டு வினைமேனின்றது. பல்வயின் நுகர இன்சோறு பிறவும் தருநர் எனக் கொண்டு கூட்டி பலவிடங்களினும் அநுபவிக்க இனிய பாற்சோறு முதலியவற்றையும் கொண்டு வந்து இடுவாரிடத்து எழுந்த ஓசையும் என்று கூறுவர், ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

அல்லங்காடியின் ஆரவாரம்

536-544 : வாலிதை ................. கம்பலை

பொருள் : வாலிதை எடுத்த வளிதரு வங்கம் - நன்றாகிய பாய் விரித்த காற்றுக் கொண்டு வருகின்ற மரக்கலங்களிற் கொணர்ந்த, பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து - பலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து, ஒல்லென் இமிழ் இசை மானக் கல்லென - ஒல்லென முழங்குகின்ற ஓசையை ஒக்கக் கல்லென்னும் முழக்கத்தோடே, நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுக-அகன்ற இடத்தையுடைய பிறநாட்டு வாணிகர் ஈண்டுச் செய்த பேரணிகலங்களை விலைக்குக் கொண்டு உலாவாநிற்றலாலே, பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை ஓதம் - பெரிய கடல் சூழ்ந்த இடத்தினின்றும் புலால் நாறும் திரையையுடைய ஓதம், இருங்கழி யருவிப் பாயப் பெரிதெழுந்து - கரிய கழியிற் புகார்முகத்தே யேறிப் பரக்கின்ற அளவிலே மிக்கொழுந்து, உருகெழு பானாள் வருவன பெயர்தலில்-அச்சம் பொருந்திய நடுவியாமத்தே வருவனவாய் மீளுதலாலே, பல்வேறு புள்ளின் இசையெழுந்தற்றே - ஆண்டு வாழும் பல சாதியாய் வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்த தன்மைத்து, அல்லங்காடி அழிதரு கம்பலை - அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம்;

கருத்துரை : நல்ல பாய்களை விரித்த காற்றுக்கொண்டு வருகின்ற மரக்கலங்களிற் கொணர்ந்த பல்வேறு பண்டங்கள் இறங்குகின்ற பட்டினத்தின்கண் ஒல்லென முழங்கும் ஓசையை ஒப்ப அகன்ற இடத்தையுடைய அயல்நாட்டு வாணிகர் ஈண்டுச் செய்த அணிகலன்களை விலைக்குக் கொண்டுபோதல் காரணமாக உலாவுதலால் எழுந்த ஆரவாரமும் இயைந்து பெரிய கடலிடத்தே பெருகும் ஓதம் கழிகளிடத்தே நள்ளிரவிலே பெருகிப் பாய்ந்து மீளுங்கால் ஆண்டு வாழும் பல்வேறு பறவைகளும் குழீஇ எடுத்த ஓசையை யொப்ப எழுந்த அல்லங்காடியின் ஆரவாரமும் என்பதாம்.

அகலவுரை : பல்வேறு பண்டமும் வங்கங்களில் வந்திறங்கும் பட்டினத்தின்கண் உண்டாகும் ஓசையை ஒப்ப, அயல்நாட்டினின்றும் வந்த வணிகர் அணிகலன்களை விலை பேசி வாங்குவதற்கண் உண்டாகும் ஓசையோடே மேலும் கலன் கொள்ளும் பொருட்டு உலாவ என்க.

வாலிதை-வெள்ளிய பாயும் ஆம். அக்காலத்தே மரக்கலங்கள் காற்றான் இயங்கிற்றாதலான் வளிதரு வங்கம் என்றார். துறைமுகப் பட்டினத்து அயல்நாட்டு வணிகர் மிக்கு முழங்கினாற்போன்று ஈண்டு மிக்கு ஆரவாரித்தனர் என்றவாறு. இனி அவர் பல நாட்டினின்றும் வந்து பலவேறு மொழிகளைப் பேசுதலான் பலவேறு வகைப்பட்ட பறவைகள் ஒருங்குகூடி ஆரவாரித்தலை உவமை கூறினார்.

இட்டவெண் ணிலப்படா வகையி னீண்டிய
முட்டிலா மூவறு பாடை மாக்களாற்
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய
மட்டிலா வளநகர் வண்ணம் இன்னதே, (சீவக-93)

என்றும்,

களனவி லன்னமே முதல கண்ணகன்
றளமலர்ப் புள்ளொடு தயங்கி இன்னதோர்
கிளவியென் றறிவரும் கிளர்ச்சித் தாதலான்
வளநகர்க் கூலமே போலும் மாண்பது  (கம்ப-பம்பை-7)

என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. நனந்தலை வினைஞர் என்றது அகன்ற இடமுடைய யவனம் முதலிய அயல் நாட்டினின்றும் வந்து வணிகத்தொழில் செய்வோர் என்றவாறு.

மதுரையிடத்தே இயற்றப்படுகின்ற அணிகலன்களை விலைபேசி வாங்கிக்கொண்டு மேலும் அணிகலன் வாங்கும்பொருட்டுத் திரியா நிற்ப என்பார் கலங்கொண்டு மறுக என்றார். கடற்கு அணுகவுள்ள கழிகளில் நீர்ப்பறவைகள் இரவிற் றங்கி யிருப்பனவாக, நள்ளிரவில் கடல்பெருகி அக்கழிகளில் பாயுங்கால் அப்பறவைகள் எழுந்து ஆரவாரிக்கும் அன்றே, அவ்வாரவாரம் போன்றது அல்லங்காடியிடத்து ஆரவாரம் என்றபடி. நள்ளிரவிற் கடல்பெருகிக் கழிகளிற் பாய்ந்து மீளுதல் இயல்பு. ஓதம் என்றது கடற்பெருக்கை. அழி - மிகுதல். திருக்குறளின் கண்,

அற்றார் அழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.  (226)

என்னும் குறட்பாவில் அழிபசி - மிக்கபசி எனப் பரிமேலழகர் உரை கூறுமாற்றானும் அஃதிப் பொருட்டாதலறிக. இனி 489 - அச்சமும் தொடங்கி 544 - அல்லங்காடி அழிதரு கம்பலை என்னுந் துணையும் தொடாந்தவற்றை; அறங்கூ றவையமும், காவிதிமாக்களும், பண்ணியம் பகர்நரும் நாற்பெருங்குழுவும் வாழும் நால்வேறு தெருவினும், கலிங்கம் பகர்நரும், கடைநரும், குயினரும், புனைநரும், காண்மரும், பகர்நரும் கொண்மரும், பகர்நரும், முடிநரும், மாக்களும், கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி, கம்மியரும் குழீஇ நிற்றர, கோதை இருக்கையில் விழுமியோர் குழீஇக்கொள் கம்பலை கடுப்பப் பல கம்பலையோடு சுளையும் கனியும் பிறவும் தரப்பட்டோர் மிசையப் பட்டினத்து இசை மானக் கல்லென வினைஞர் கொண்டு மறுக ஓதம் வருவன பெயர்தலின் புள்ளின் இசை எழுந்தாற் போன்றது அல்லங்காடிக் கம்பலை எனச் சொற் கிடந்தவாறே முடித்திடுக. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் 536-44 வாலிதை என்பது தொடங்கி, கம்பலை என்னும் துணையும் உள்ள அடிகளைப் பிரித்து நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுக, வாலிதை எடுத்த வளிதரு வங்கம் பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம் இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து உருகெழு பானாள் வருவன பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து ஒல்லென் இமிழிசை மானப் பெயர்தலின் பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்று, எனக் கொண்டு கூட்டி அதற்கியையப் பொருள் கூறுவர்.

இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் 467-கடவுட் பள்ளி என்பது தொடங்கி 544-இதுகாறும் கூறிய பொருள் இயைபும் முடிவும் கூறுதல் வருமாறு : கடவுட் பள்ளியிடத்தும், அந்தணர் பள்ளியிடத்தும், சேக்கையிடத்தும், அவையத்திடத்தும், காவிதிமாக்களிடத்தும், எழுகின்ற ஓதை கோதையிருக்கையில் கம்பலை கடுப்பக் கல்லென எனமுடிக்க. பண்ணியம் பகரிடத்தோசையும், நாற்பெருங் குழுவிடத்து ஓசையும், இன்சோறும் பிறவும் தருநரிடத்து ஓசையும், கோடுபோழ் கடைநர் முதலாகக் கண்ணுளர் ஈறாகவுள்ளாரும் பிறரும் கூடிக் கம்மியரும் குழீஇ நிற்றர எழுந்தவோசையும் பட்டினத்து இமிழிசை மானக் கல்லென என முடிக்க. இங்ஙனம் முடித்தபின் நியமத்து அல்லங்காடியில் அழிதருகம்பலை தூரியங் கறங்குகையினாலும், கம்பலை கடுப்பக் கல்லெனகையாலும் ஒல்லென் இமிழிசை கடுப்பக் கல்லென்கையாலும் பல்வேறு புள்ளின் இசையெழுந்தற்றே எனச் சேர வினைமுடிக்க, என்பதாம். இனி, 545-ஒண்சுடர் என்பது தொடங்கி, 620-முந்தையாமம் சென்ற பின்றை என்னுந் துணையும் ஒரு தொடர் : இதன்கண், மதுரை நகரத்தே அந்திமாலைப்போது வருதலும் அம் மாலைக்காலத்தே அந்நகரத்தின்கண் நிகழும் நிகழ்ச்சியும் அம்மாலை கழிந்தபின் இரவின் முதலியாமத்தே ஆண்டு நிகழும் நிகழ்ச்சிகளும் பிறவும் மிக அழகாகக் கூறப்படும்.

மதுரை மாநகர்க்கண் மாலைக்கால வரவும் நிகழ்ச்சிகளும்

545-558 : ஒண்சுடர் ....................... நீங்க

பொருள் : ஒண்சுடர் உருப்பு ஒளி மழுங்கச் சினம் தணிந்து சென்ற ஞாயிறு - ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்கச் சுடுசினம் அகன்று ஒழுகப்போன ஞாயிற்று மண்டிலம், நண்பகற் கொண்டு குடமுதல் குன்றம் சேர - பின்னர் நன்றாகிய பகற்பொழுதைச் சேரக்கொண்டு மேற்றிசையிடத்தே மறையும் மலையினைச் சேராநிற்ப, குணமுதல் நாள் முதிர் மதியம் தோன்றி - கீழ்த்திசையிடத்தே பதினாறுநாட் சென்று முதிர்ந்த நிறைமதி எழுந்து, நிலா விரிவு பகல் உரு உற்ற இரவு வர - நிலாப்பரக்கையினாலே பகலின் வடிவை ஒத்த இராக்காலம் வரும்படியும், நயந்தோர் காதல் இன் துணை புணர்மார் - புணர்ச்சியை நெஞ்சாலே விரும்பின மகளிர் காதன்மிக்க தம் இனிய காதற்கொழுநரைக் கூடும்பொருட்டு, ஆய் இதழ்த் தண் நறும் கழுநீர் துணைப்ப - ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டும்படியும், இழைபுனையூஉ நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய-அணிகளை அணிந்து நன்றாகிய நெடிய கூந்தலிற்பூசின நறிய மயிர்ச்சந்தனத்தை அலைத்து நீக்கும்படியும், நரந்தம் அரைப்ப - கத்தூரியை அரைக்கும்படியும், நறுஞ்சாந்து மறுக-நறிய சந்தனத்தை அரைக்கும்படியும், மென்னூல் கலிங்கம் கமழ்புகை மடுப்ப - மெல்லிய நூலாற் செய்த கலிங்கங்களுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டும்படியும், பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் - குணமுதலிய சிறப்புக்களால் உலகத்துப் பெண்டிர் விரும்பாநின்ற மான்பிணைபோலும் நோக்கினையுடைய மகளிர்களால், நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ - நெடிய ஒளியினையுடைய விளக்கினை யேற்றுவித்து, நெடுகர் எல்லை எல்லாம் நோயோடு புகுந்து கல்லென் மாலை நீங்க-பெரிய ஊரின் எல்லையாகிய இடமெல்லாம் நயந்தோர்க்கு நோயைச் செய்தலோடே புகுந்து கல்லென்னும் ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் பின்னர் நீங்க;

கருத்துரை : ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்குமாறு சினந்தணிந்து சென்றஞாயிறு பகற்போதையும் சேரக்கொண்டு மறையா நிற்ப, கலைகள் நிரம்பிய முழுவெண்டிஙகள் கீழ்த்திசையில் எழுந்து நிலாப் பரப்புகையாலே, பகல்போன்ற ஒளியுடைய இரவு வாராநிற்ப, தம் காதற் கொழுநரோடே கூடி இன்புறுதலை விழைந்த மகளிர்கள் ஆராய்ந்த இதழ்களையுடைய செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டவும் அணிகலன்களை அணியவும் மயிர்ச் சந்தனத்தைக் கூந்தலின்கண்ணிருந்து அலைத்துதிர்ப்பவும், கத்தூரி சந்தன முதலியவற்றை அரைப்பவும், மெல்லிய நூற்சேலைகளை மணமூட்டவும், பெண்டிரானும் விரும்பப்படும் குணமும் அழகும் உடைய மகளிர்கள் மனைதொறும் சுடர் விளக்கத்தை ஏற்றவும் செய்து, ஊரின் எல்லையாகிய இடமெல்லாம் நயந்தோர்க்கு நோயைச் செய்தலோடே புகுந்த ஆரவாரமுடைய அந்திமாலை நீங்க என்பதாம்.

அகலவுரை : ஒண்சுடர் உருப்பு ஒளிமழுங்க என்றது, ஞாயிறு தன் ஒள்ளிய சுடர் வெப்பமும் ஒளியும் குன்றாநிற்ப என்றவாறு. உருப்பு - வெப்பம். உரவுக் கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயம் (குறிஞ்-45) என்றார் பிறரும். சினந்தணிதல், ஈண்டு வெம்மை தணிதல். ஞாயிறு மறைதலோடு பகற்பொழுது முடிவுறுதலான், பகலையும் உடன்கொண்டு சேர என்றார். குடமுதல் குன்றம் - பேற்றிசைக்கண் உள்ள மலை. ஆவது கதிரவன் மறைதற்குரிய மலை. ஞாயிறு மலையில் மறையும் என்பது பண்டையோர் கொள்கை. இம்மலையினை அத்தகிரி என்பர் வடவர். குணமுதல் - கீழ்த்திசையில். குடமுதல் குணமுதல் என்புழி முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. நாண்முதிர் மதியம் என்றது, முழுவெண்டிங்களை, விரிபு-விரிந்து; செய்பு என்னும் எச்சம் நிறைமதியத்தின் பானிலாப் பரந்து நன்கு ஒளியுடைத்தாகலின் பகலுருவுற்ற இரவு என்றார்.

பகல்உரு வுறழ்நிலாக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே  (அகம். 122: 10-11)

என்றார் பிறரும். நயந்தோர் - தம் காதற்கொழுநரோடு கூடுதலை விழைந்த மகளிர் என்க. புணர்மார் - கூடும்பொருட்டு. கூடும் பொருட்டுத் துணைப்பக்குடைய அரைப்ப மறுக புகைமடுப்பப் புகுந்து நீங்க என வினைமுடிவு செய்க. துணைத்தல் - தொடுத்தல் யான் போது துணைப்ப, (அகம். 117;11) என்றார் பிறரும். இழை -அணிகலன். இழைபுனையூ என்றது, வல்லென்ற அணிகலன்களை அகற்றி மெல்லென்ற அணிகலன்களை அணிந்து என்றவாறு. நறுவிரை - நறிய மயிர்ச்சாந்தம். நரந்தம்-கத்தூரி. மென்னூற் கலிங்கம் என்றது பருத்தி நூலினாய் புடைவையை. என்னை?

துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகிலுடுத்து  (பட்டினப்-107-8)

என்பவாகலான். ஏனைப் பெண்டிர் விரும்புதற்குக் காரணமான நற்குணம் நிறைந்த மகளிர் என்பார். பெண்மகிழ்வுற்ற என்றார். இனிப் பெண்டிரும் இம் மகளிரின் எழில்கண்டு பெண்மை எனினுமாம்.

வெங்களி விழிக்கொரு விழவு மாயவர்
கண்களிற் காணவே களிப்பு நல்கலான்
மங்கையர்க் கினியதோர் மருந்து மாயவன்
எங்கணா யகற்கினி யாவதாங் கொலோ,  (கம்ப-மிதிலை: 33)

என்றும்,

கஞ்சத்துக் களிக்கு மின்றேன் கவர்ந்துணும் வண்டு போல
அஞ்சொற்கள் கிள்ளைக் கெல்லாம் அருளினா ளழகை மாந்தித்
தஞ்சொற்கள் குழறித் தத்தம் தகைதடு மாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாத ரார்க்கும் மனமென்ப தொன்றே யன்றோ  (கம்ப-கோல: 19)

என்றும்,

பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கெல்லை யில்லையாம் என்று நின்றாள்
கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃதே கண்ட
பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக் கென்றாள்  (கம்ப-சூர்ப்ப :60)

என்றும் கம்பநாடர் கூறுமாற்றானும், பெண் மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர் பெற்றியை உணர்க. இனி பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையினாளை என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதியை இதற்குக் காட்டினாருமுளர். பெண் மகிழ்வுற்றதென்றதன்றிப் பெண்டிர் ஆண் மகிழ்வுற்ற என்னாமையின் அது பொருந்தாமை உணர்க. பிணை-மான்பிணை. மகளிர் விளக்கினை ஏற்றி என்றதற்கு, மகளிரால் விளக்கினை ஏற்றுவித்து என ஏற்றி என்னும் வினைக்கு மாலையை ஏவுதற்கருத்தாவாக்குக. இனி ஏற்றி என்னும் எச்சத்தை ஏற்ற எனத் திரித்து முடித்தலுமொன்று.

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்  (குறள்-1227)

என்பவாகலான், நோயொடு புகுந்து என்றார்.

மதுரை நகரத்தே இரவின் முதலியாம நிகழ்ச்சிகள் குலமகளிர் செயல்

558-561 : நாணுக்கொள .............. தழீஇ

பொருள் : நாணுக்கொள - அங்ஙனம் துணைவரை நயந்து கோலம் கொண்ட மகளிர் அவரைக் கண்டுழித் தம் நெஞ்சம் நாணத்தான் நிறைதலானே புணர்ச்சி வேண்டாதாரைப் போன்று, ஏழ்புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ் - இசையேழும், தன்னிடத்தே கூடிய தலைமையினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழின் இசையோடு, தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப - அதன் அயலே அதன் அளவிற்றாய்த் தாழ்ந்து செறிந்த தம் மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்ணுப் பெயர்த்து - தம் நெஞ்சு நிலைகொள்ளாமையால் பண்களை மாறிமாறி இசைத்து, வீழ்துணை தழீஇ - தம்மைப் பெரிதும் விரும்புகின்ற காதற்றுணைவரோடே தம் நெஞ்சு நாணுத்துறத்தலான் முயங்கிப் பின்னரும், நாணத்தை மேற் கொள்ளா நிற்ப;

கருத்துரை : அங்ஙனம் மாலைக்காலம் வந்தவுடன் துணைவரை நயந்து கோலங்கொண்ட மகளிர் அம்மாலை நீங்கத் தங் காதலரைக் கண்டுழி மிக்க நாணங்கொண்டவராய்ப் புணர்ச்சி வேண்டாதார் போல் ஏழிசையினையும் தன்பாற்கொண்ட தலைமையினையும் இனிய நரம்பினையுமுடைய தம் யாழின் இசையோடே தம்மிடற்றுப்பாடலின் குரல் தாழ்ந்து பொருந்துமாறு பண்களை மாறிமாறி இசைப்பாராய்ப் பின்னரும் நிறையழிதலானே தம் காதலரை முயங்கிப் புணர்ச்சி நீங்கிய பின்னர் மேலும் நாணமீக்கூரா நிற்ப என்பதாம்.

அகலவுரை : தங் காதலரோடு புணர்ச்சியை விரும்பியே கோலங் கொண்டாரேனும், அக் காதலரைக் கண்டுழித் தமக்கியல்பாகிய நாணமீக்கூர்தலான் தம் கருத்தை மறைப்பாராய் யாழ் வாசிக்கத் தொடங்கினர் என்க. குலமகளிர் இங்ஙனம் தங்கொழுநரிடத்தும் நாணங் கொள்ளல் இயல்பு. இதனை,

எஞ்ஞான்று மெங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போ னாணுதுமால் - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇனர் கொல்லோ பொருணசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.  (நாலடி-385)

என்னும் நாலடியானும் உணர்க. ஏழ்-ஏழிசை: ஆகுபெயர். ஏழிசையாவன : குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன. இன்தொடை - இனிய நரம்பு. தொடை : நரம்பிற்கு ஆகுபெயர். சீறியாழ் - சிறிய யாழ். மகளிர் குரல் யாழ்நரம்பின் இசையளவிற்றாய் மெலிந்து அதன் அயலே அவ்வியாழிசையே போன்று இசைப்ப என்பார், தாழ்பு அயல் கனைகுரல் கடுப்ப என்றார். யாழைக் கனைகுரல் கடுப்ப என்க. குரல்-மிடற்றுப்பாடல். தம்நெஞ்சு புணர்ச்சியிடத்தாகலான் இசையில் நில்லாமையின் பண்ணை அடிக்கடி மாறி வாசித்தார் என்க. இசையும் காம உணர்ச்சியை மிகுவித்தலான் அதன்கண் நிலைகொள்ளாமல் வீழ்துணை தழீஇ என்க. வீழ்துணை என்றார் அக்காதலரும் அம்மகளிர் குறிப்புணர்ந்து அவரைப் பெரிதும் விரும்பி நின்றமை தோன்ற என்னை?

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது  (குறள் - 1196)

என்றும்,

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி,  (குறள் - 1191)

என்றும் ஓதுபவாகலான், வீழ்துணை தழீஇ என்பதன் பின்னரும் காணுக்கொள என்பதனைக் கூட்டி, தழீஇ என்னும் எச்சத்தைக் கொள என்பதனோடு முடித்திடுக. 561-வியல் விசும்பு என்பது தொடங்கி 589-பொய்தல் அயர என்னுந் துணையும் வரைவின் மகளிரின் செயல் கூறப்படும்.

வரைவின்மகளிரின் ஒப்பனைச்சிறப்பு

561-568 : வியல்விசும்பு ................. பூவேய்ந்து

பொருள் : வியல் விசும்பு கமழ - அகன்ற விண்ணிலே சென்று மணக்கும்படி, நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு - நீர் திரண்டாற் போன்ற வெள்ளிய பூக்களாற் புனைந்த மாலைகளைக் கொண்டையிலே முடித்து, ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசி - அழகிய திரட்சியையுடைய விளங்குகின்ற தொடி மிகவிளங்கும்படி கையை வீசி நடந்து, போது அவிழ் புதுமலர் தெருவுடன் கமழ - அலரும் பருவமாக மலர்ந்த புதிய விடுபூக்கள் தெருவெங்கும் கமழாநிற்ப, மேதகு தகைய மிகுநலம் எய்தி - முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமை தருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பனைசெய்து, பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர் திறந்து மோந்தன்ன - பெரிய பலவாகிய செங்கழுநீரிற் சுரும்புகளுக்கு மலர்கின்ற பல பூக்களையும் அலர்கின்ற பருவத்தே கையாலலர்த்தி மோந்து பார்த்தாலொத்த, சிறந்து கமழ் நாற்றத்து - மிக்கு நாறுகின்ற நாற்றத்தோடே, கொண்டல் மலர்ப்புதல் மானப் பூவேய்ந்து - மழைக்கு மலர்ந்த மலரையுடைய சிறுதூற்றை ஒக்க ஏனைப் பூக்களையும் சூடி.

கருத்துரை : விண்ணிடமெல்லாம் பரந்து கமழும்படி நீர்திரண்டாற் போன்ற வெண்மலர் மாலைகளைக் கொண்டையிலே முடித்துத் தொடிகள் விளங்கும்படி கைகளை வீசி நடந்து, விடுபூக்களின் மணம் தெருவெல்லாம் கமழும்படி, பலருடன் புணர்ந்தமையாற் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் புதுமையுண்டாக ஒப்பனைசெய்து, செங்கழுநீர் மலர்களையும் ஏனைப் பூக்களையும் மழையான் மலர்ந்த சிறுதூற்றை யொப்பச் சூடி என்பதாம்.

அகலவுரை : வியல் விசும்பு - அகன்ற வானம். வெள்ளிய மலர்களாற் புனைந்த மாலைக்கு நீரின் திரட்சி உவமை. பிறக்கிட்டு - பின்புறத்தே சூட்டி; என்றது கொண்டையிற் சூட்டி என்றவாறு.

ஓடுகலங் கரையும் துறை பிறக்கு ஒழிய (பெரும்பா-350-1) என்புழியும் பிறக்கு - பின்புறம் என்னும் பொருட்டாதலறிக. ஆய்-அழகிய; ஆராய்ந்த எனினுமாம். கோல்-திரட்சி. அவிர்தல்-விளங்குதல். தெருவுடன் - தெருவெங்கும் புதுமலர் என்றது, விடுபூக்களை, மேதகு தகைய மிகுநலம் என்றதற்கு வரைவின்மகளிர்கட்கு மேம்பாடளிக்கும் தகுதியையுடையவாய மிக்க அழகு எனினுமாம். எய்தி என்றமையால் ஒப்பனையாற் பெற்று என்க. கொண்டையில் நீர் திரண்டன்ன மாலை சூடி, விடுபூக்களாகிய குவளையையும், ஏனைப் பூக்களையும் புதல்மானச் சூடி என்க. புதல் - ஈண்டுப் பூம்புதர். திறந்து மோத்தலாவது அலரும் பருவமுடைய மொட்டினைக் கையால் அலர்த்தி மோத்தல்; புதுமணம் கமழ என்றவாறு.

கொண்டல் - முகில் : மழைக்கு ஆகுபெயர்.

569-583 : நுண்பூணாகம் ................ மகளிர்

பொருள் : நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி - தம்மைப் புணர்வோரின் நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் தம் மார்பிலே வடுப்படும்படியாகத் தழுவி, மாயப் பொய் பல கூட்டி - இடையிடையே வடுப்படும்படியாகத் தழுவி, மாயப் பொய் பல கூட்டி - இடையிடையே வஞ்சனையுடைய பலவாகிய பொய்வார்த்தைகளைப் பேசி, கவவுக் கரந்து - அன்புடையார் போலே முயங்கின முயக்கத்தை அவர் பொருள் தருமளவும் மறைத்து, சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி - சேய்மைக் கண் உள்ள ஊரினரும் அண்ணிய ஊரினருமாய்த் தம்முடைய புறத்தேயுள்ள வடிவழகை விரும்பி வந்த இளைஞராகிய பல செல்வங்களையும் உடையாரை அவருடைய செல்வமெல்லாம் கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு, நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினம் மான - பூ அலரும் காலமறிந்து அதன் நுண்ணிய தாதையுண்டு தாதற்ற வறிய பூவைப் பின்னர் நினையாமல் துறந்துபோம் மெல்லிய சிறகையுடைய வண்டின் - திரளை ஒப்ப, புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து - தம்மை நுகர்ந்தோருடைய நெஞ்சு கலக்கமுறும்படி அவரிடத்து இனிய கூட்டத்தை நேராகக் கைவிட்டு, பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல - பழுமரமுள்ள இடந்தேடிச் சென்று அவற்றின் பழத்தையே ஆராய்ந்து கவர்ந்து நுகர்தலைத் தமக்குத் தொழிலாகவுடைய பறவையினம் போன்று, கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேய மணம் புணர்ந்தோங்கிய அணங்குடை நல்இல் - வளவிய குடியிற் பிறந்த செல்வரும் பிறமாந்தரும் பொருந்தியுள்ள புதிய மணம் நிகழ்ந்தமையால் உயர்ச்சி பெற்றனவும் இல்லுறை தெய்வங்களையுடையனவுமாகிய செல்வத்தான் நன்றாகிய இல்லங்களிலே சென்று, ஆய்பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர் - ஓடவைத்த பொன்னாற் செய்த விளங்குகின்ற தொடியினையும் பசிய பூணினையும் உடையவராகிய மகளிர்களாய், ஒண்சுடர் விளக்கத்துப் பலர் உடன் துவன்றி - ஒள்ளிய சுடரையுடைய விளக்கின் ஒளியிலே பலரும் சேர நெருங்கி, நீல்நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவ மகளிர் மான - நீலநிறத்தையுடைய வானத்தின்கண்ணே நெஞ்சமர்ந்து விளையாடும் தெய்வ மகளிர் வருத்துமாறுபோல, கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉம் கொண்டி மகளிர் - தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்திப் பொருள் வாங்குதலையுடைய வரைவின் மகளிர்;

கருத்துரை : தம்மைப் புணர்வோருடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பைத் தம் மார்பிடத்தே வடுப்படும்படி அணைத்து, இடையிடையே பல வஞ்சனைகளைஉடைய பொய்ம் மொழிகளையும் அவருளம் இனிக்க மொழிந்து, அவர்தரும் பொருள் பெறுமளவும் தம் வஞ்சனை முயக்கம் தோன்றாதபடி மறைத்து, சேய்மைக் கண்ணும், அண்மையினும் உளவாகிய பல ஊர்களினின்றும் தம்முடைய வடிவழகைக் காமுற்று வந்தோராகிய அவ்விளஞ் செல்வர்களின் பொருள் கெடும்படி கவர்ந்து கொண்ட பின்னர், அலரும் பருவம் பார்த்து மலரின் நுண்ணிய தாதுக்களை உண்டு அது வறிதாய பின்னர் அதனை நினையாதே துறந்து போகின்றவண்டினத்தைப் போன்று, தம்மைப்புணர்ந்த அவ்விளம்பல் செல்வரின் நெஞ்சு கலக்கமுறும்படி அவருடன் கூடும் கூட்டத்தை நேராகத் துறந்து, மீண்டும் பழுமரங்களைநாடிச்சென்று அவையிற்றின் பழங்களைக் கவர்ந்துண்ணும் பறவைகளைப் போன்று, கொழுத்த செல்வரும் பிறரும் கூடாநின்ற மணவிழா நிகழ்ந்த இல்லங்களைத் தேடிச் சென்று ஆண்டுப்பொற்றொடி முதலியவற்றை அணிந்த இளமையுடையராய்ச் சுடர் விளக்கின் ஒளியிலே பலரும் நெருங்கி, விண்ணிடத்தே விரும்பியாடும் விண்ணவர் மகளிரைப் போன்று தம்மைக் கண்டோரை வருத்தி அவர் பொருளைக் கவர்கின்ற தன்மையுடைய வரைவின் மகளிர்கள் என்பதாம். மகளிர் (589) பொய்தல் அயர எனமுடியும்.

அகலவுரை : நுண்பூண் ஆகம் என்றார் செல்வர் மார்பு என்பது தோன்ற. வடுக்கொள முயங்கி என்றார் மிக்க அன்புடையார் போற்காட்டும் பொருட்டுப் பொய்யாக மிகத் தழுவுதலை, பேசுங்கால் அதன் கட்கரந்த வஞ்சனை புலப்படாவாறு பேசும் பொய் என்பார் மாயப்பொய் பல கூட்டி என்றார்; அது, நும்மோடு செங்கோடு பாய்தும் (நாலடி - 372) என்றாற் போல்வன. கவவு - அகத்தீடு, அஃதாவது தம் நெஞ்சத்துக் கிடக்கும் வஞ்சனையை மறைத்து என்றவாறு. கவவுக்கை என்புழியும் கவவு அகத்தீடு என்னும் பொருட்டாதல் (சிலப்-1 : 61) உணர்க. அம் மதுரை நகரத்து வாழ்வோரே யன்றித் தொலைக்கணின்றும் செல்வர்கள் அவர் பால் வருதலுமுண்மையின் சேயரும் நணியரும் என்றார். சேயர் - தூரத்தே உள்ளார்; நணியர்-அண்மையிலுள்ளார். நலன் - ஈண்டுப் புற அழகு. அவர் வலையிற் சிக்கினோர் தம் பொருள் முழுதும் கெடுந்துணையும் அவரால் வஞ்சிக்கப்படுவர் என்பது தோன்ற வளந்தப வாங்கி என்றார். தபுதல்-கெடுதல். வண்டினம் அப் பரத்தையர்க்குத் தொழில் உவமை என்க. நுண்டாதுண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டினமான என்னும் இத்தொடரோடு, நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் (மணி-18 : 19-20) என்னும், பயன்பல வாங்கி வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிரை (மணி-18:108-9) என்றும் வரும் மணிமேகலை அடிகளை ஒப்புக் காண்க.

ஏமாப்ப - வருந்த. இன்றுயில் : இடக்கரடக்கல். மென்றோட்டுயில் (குறள் - 1103) என்றார் வள்ளுவனாரும். பழுமரம் : வினைத்தொகை. யாணர்ப் பழுமரம் பள்ளிமிழ்ந் தன்ன (புறம். 173:3) என்றும், மரஞ்சேர் பறவையும் தொக்குடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழுமரத் தீண்டிய பறவையின் எழூஉம் (மணி, 14: 24-6) என்றும், பிறரும் கூறுதல் காண்க. கொழுங்குடி - செல்வத்தாற் கொழுத்த குடி, குடி கொழுத்தக் கண்ணும் (நாலடி. 96) என்றார் பிறரும். மணம் புணர்ந்தோங்கிய அணங்குடை நல்லில் என்றது திருமண விழா நிகழ்ந்து உயர்ச்சிபெற்ற செல்வர் மனைகளை. ஆண்டுத் தெய்வங்கட்குச் சிறப்புச் செய்தல் உண்மையின் அணங்குடை நல்லில் என்றார். வரைவின் மகளிர், செல்வர் மனையில் மணம் நிகழும்போது ஆண்டுச் சென்று ஆடல் பாடல் நிகழ்த்துவர் என்றபடி. அங்ஙனம் சென்று ஆடி வசிகரித்து உறவுகொண்டு பொருள் வாங்குதல் அவர்க்கு இயல்பு என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியரும். அழகினை நன்கு எடுத்துக் காட்டும் பொருட்டு ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி என்க.

ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் லருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி  (மணி-18:103-8)

என்பவாகலின் கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉம் கொண்டி மகளிர் என்றார். நடுக்குறுத்துதலாவது தம்மைக் கண்டோர் நெஞ்சிற் காமத்தீயை எழுப்பி வருத்துதல். இனிக் கண்டோர் என்பதற்கு, அறம் பொருள் இன்பங்களின் இயல்பினை உணர்ந்த சான்றோர் எனப்பொருள் கொண்டு அவருளத்தை அச்சத்தால் நடுக்குறச் செய்யும் கொண்டி மகளிர் என இரட்டுறவும் மொழிந்து கொள்க. என்னை?

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு  (குறள் - 199)

என்று கண்ட சான்றோர் அவரைக் காணவே நடுங்குதல் இயல்பாகலின் என்க. கொண்டி - கொள்ளையுமாம். எனவே பிறர் அறிவையும் பொருளையும் சூறையாடும் மகளிர் எனினுமாம். வானவமகளிர் போல் ஆடும் என இயைப்பினும் ஆம். இருளிடையே ஒண்சுடர் விளக்கத்து ஆடும் அழகுமிக்க பரத்தையர்க்கு நீனிற விசும்பிற் றம்முடல் ஒளியிலேயே ஆடும்தேவ மகளிரை உவமை எடுத்தோதியது உணர்ந்து உணர்ந்து மகிழற்பாற்று. இனி, செல்வரும் பிறரும் மேவப்பட்ட அணங்குடை நல்ல இல்லிலே மணம் புணர்ந்தோங்கிய பாசிழை மகளிர் ஒண்சுடர் விளக்கத்தே சீறியாழைப் பண்ணுப் பெயர்த்து வீழ்துணை தழீஇ நாணுக்கொள எனக் கூட்டுக என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

584-589 : யாம நல்யாழ் .......................... பொய்தலயர

பொருள் : யாம நல்யாழ் நாப்பண் நின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடி - முதல் யாமத்திலே இசைத்தற்குரிய நன்றாகிய யாழ்களுக்கு நடுவே அவற்றின் இசையோடே இயைந்து நின்ற முழவின் முழக்கத்திற்கு ஏற்ப மனமகிழ்ச்சியுடையராய்க் கூத்தாடுதல் செய்தும், குண்டு நீர்ப் பனித்துறைக் குவவு மணன் முனைஇ - ஆழ்ந்த நீரினையுடைய குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலிலே ஆடியும் அவ்விடத்தை வெறுத்துழி, மென்றளிர்க் கொழுங்கொம்பு கொழுதி - மெல்லிய தளிர்களைக் கொழுவிய கொம்புகளினின்றும் கொய்து, நீர் நனை மேவர நெடுந் தொடர்க்குவளை வடிம்பு உற அடைச்சி-நீர்க்கீழ் அரும்புகளோடே பொருந்துதல் வரக் கட்டின நெடிய தொடரையுடைய குவளை மலரை வடிம்பிலே விழும்படி உடுத்து, மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயர-மணம் நாறுகின்ற தம்மில்லங்களிலே விளையாடுதலைச் செய்ய;

கருத்துரை : இரவின் முதல் யாமத்தே இசைத்தற்குரிய பண்ணை இசைக்கும் யாழ் இசையோடு பொருந்தி முழங்கும் மத்தளத்தின் முழக்கத்தாலே மன மகிழ்ந்தனராய்க் கூத்தாடியும், நீர்த்துறையிடத்தே குவிந்த மணற் பரப்பிலே ஆடியும் அவ்விடத்தை வெறுத்துழி, நீரின் அகத்தேயுள்ள அரும்போடு சேரக்கட்டின குவளை மலரையுடைய தொடர் மாலையை வடிம்பிற் புரளுமாறு உடுத்தியவராய்த் தம் மனைகளிடத்தே விளையாடுதலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : 561-கோதை கமழப் பிறக்கிட்டு வீசிப் புதுமலர் கமழ நலமெய்தி, புதல்மானப் பூ வேய்ந்து, முயங்கிச்செல்வர் வளந்தப வாங்கி மானத் துறந்து பறவைபோல மேஎய நல்லில்லிலே இளமகளிராய் விளக்கத்து நெருங்கி மான நடுக்குறூஉம் கொண்டி மகளிர் ஆடி மணன்முனைஇ, குவளை அடைச்சி மனைதொறும் அயர என இயைத்துக் கொள்க. யாமநல்யாழ் என்றது இரவின் முதல் யாமத்தே இசைத்தற்குரிய பண்ணை இசைக்கும் யாழ் என்றவாறு. விரல்கவர்ந் துழந்த கவர்வி னல்யாழ் யாம முய்யாமை (நற்-335: 9-10) என்றும் விளரிப்பாலையிற் றோன்றும் யாம யாழ் (பரிபா-11: 128, பரிமேல்) என்றும் பிறரும் கூறுதல் காண்க. மற்றைக் கருவிகளின் குறையை நிரப்பியும் மிகுதியை அடக்கியும் நிரப்புமிடத்தும் அடக்குமிடத்தும் இடைவெளி தோன்றாதபடி தான் நடுநிற்றலால் நாப்பண் நின்ற முழவு என்றார். என்னை?

ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றிவை ஆசி னுணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத் தியாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவின்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்

என ஆசிரியர் இளங்கோவடிகளும் மிகையும் குறையும் உள்ள ஏனைக் கருவிகட்கு நாப்பண் முழவு நிற்றலைக் கூறினார் ஆகலான். கூத்தியறுற்வார்க்கு முழவின் முழக்கமே ஊக்கம் பெரிதும் அளித்தலின், அதனை ஏதுவாக்கினார். குண்டு நீர்ப் பனித்துறை என்றது ஈண்டு வையைப் பேரியாற்றின் துறையை. வையைப் பேரியாற்றின் நீர்த்துறைக்கண் மணலிடத்தே விளையாட்டயர்ந்து அதுவெறுத்த பின்னர் மனைதொறும் விளையாடினர் என்க. நெடுந்தொடர்க் குவளை யென்றார், இடையில் உடுத்துக்கொள்ளற் கேற்றவாறு தொடராக ஆடைபோன்று குவளை மலரானும் அரும்பானும் தொடுக்கப்பட்ட மாலையை. வடிம்பு - ஈண்டு அடிகளின் விளிம்பு - ஆழி வடிம்பலம்ப நின்றானும் (நள வெண்பா : 137) என்புழியும் அஃதிப் பொருடரல் காண்க. அடைச்சி - உடுத்து. குறுஞ்சினைக் குவளை யடைச்சி (நற் 204:3) நீலமடைச்சி (நற்-357:8) கூந்தல் ஆம்பல் முழு நெறி யடைச்சி (குறுந் -80:1) எனப் பிறாண்டும் வருவன காண்க. பொய்தல்-விளையாட்டு; கைதை வேலி நெய்தலங் கானல் பொய்தலாயம் (6: 150-1) என்றார் சிலம்பினும்!

ஓண நன்னாளில் யானையின் வெம்போர்

590-599 : கணங்கொள் ..................... திரிதர

பொருள் : கணங்கொள் அவுணர்க் கடந்த - குழாங் கொண்ட அவுணர்களைக் கொன்றருளிய, பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள் - பொன்னாற் செய்த மாலையினையுடைய திருமால் உலகிற் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளிடத்தே, கோணந் தின்ற வடு ஆழ்ந்த முகத்த - தோட்டி வெட்டின வடு அழுந்தின முகத்தை யுடையனவும், சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை - போர்க் கருவிகளைப் பலகாலும் பயில்தலால் தேய்ந்து தழும்புபட்ட போரைத்தாங்கும் பெரிய கையினையும், மறங்கொள் சேரி மாறுபொரு செருவின் - வீரத்தைத் தம்மிடத்தே கொண்ட மறவர்கள் வாழும் சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரின்கண்ணே, மாறாது உற்ற வடுப்படு நெற்றி - அடிமாறாமையாற் பட்ட கொம்பழுந்தின தழும்பினையுடைய நெற்றியினை உடையனவும், சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர் கடுங்களிறு - வண்டுகள் நிறைந்த போர்ப் பூவினையும் யானைப் போரின்கண் வெல்லுதலில் பெரிய விரும்பத்தையுமுடைய மறவர்களுடையனவுமாகிய கடிய களிற்று யானைகளை, ஓட்டலில் - அம் மறவர்கள் ஒன்றனோடொன்று பொருமாறு செலுத்துதலானே, காணுநர் இட்ட நெடுங்கரைக் காழக நிலம் பரல் உறுப்ப - அவ்வியானைப் போரைக் காணவந்தோர் ஆண்டு மக்கள்மேல் அப்போர் யானைகள் வாராமைப் பொருட்டு இடற்பட்ட நெடிய கரையாகிய கரிய இடமுடைய நிலத்தின்கட் பரற்கற்கள் தம் கால்களை உறுத்தும்படி, கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர - கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய;

கருத்துரை : கூட்டமாகிய அவுணர்களைக் கொன்றருளிய கரிய திருமால் உலகத்தே பிறந்த திருவோணமாகிய நல்ல நாளிலே தோட்டி வெட்டின வடுவாழ்ந்த முகத்தையும், தழும்புபட்ட பெரிய கையையும், மறவர் சேரிகள் மாறுபட்டுப் பொருதுவித்த போரில் புறமிடாது நின்று போர் செய்தமையால் பகையானையின் கொம்பழுந்தின வடுவுடைய நெற்றியினையும், உடையனவாகிய மறவர்களுடைய கடிய களிறுகளை அவர் ஒன்றனோடு ஒன்று போரிடுமாறு செலுத்துதலானே, அவ்வியானைப் போரைக் காணவந்தோர் ஆண்டு அவ்வியானைகள் மக்கள் மேல் வாராமைப் பொருட்டு எடுக்கப்பட்ட நெடிய கரையின்மேல் கரிய இடமுடைய நிலத்தின்கட் பருக்கைக் கற்கள் தம் காலை உறுத்தி வருத்துதலையும் அறியாராய்க் கடிய கள்ளை நிறையப் பருகிக் களிப்பான் மயங்கி யாண்டும் திரிதலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : அவுணர் -அசுரர்: அவராவார் இரணியன் இராவணன் நரகன் முதலியோர். கணம்-கூட்டம். திருமால் திருவோண நாளில் உலகில் பிறந்தார் என்க. இதனை,

நின்ற மராமரம் ஏழும் சாய்த்தோய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராடவேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்,  (பெரியாழ்-2-4:2)

என்றும்,

ஆண் ஒப் பார்இவன் நேரில்லை காண்திரு
வோணத் தான்உல காளும்என் பார்களே,  (þ-1. 1:3)

என்றும், பெரியாழ்வார் கூறுமாற்றானும் அறிக. கோணம்-தோட்டி. சாணம்-தழும்பு. மாயன்-கரிய நிறமுடையோன்; திருமால் என்றபடி. வினைவழி உயிர்கள் பிறப்பது போலன்றித் தானே பிறத்தல் வேண்டும் எனக்கருதி வந்து பிறப்பன் என்பது தோன்ற மேய என்றார். உலகிற்கு இடையூறு விளைக்கும் அவுணர்களைக் கொன்று உலகில் அறங்காத்தற் பொருட்டு இறைவன் பிறந்த நாளாகலின் அதனை நன்னாள் என்றார். அந் நன்னாளை ஆண்டுதோறும் மக்கள் விழவெடுத்துக் கொண்டாடுதல் மரபு. ஒரு சேரியோடு மற்றொரு சேரி மாறுகொண்டு யானைப் போர் செய்விப்பர் என்பார், மறங்கொள் சேரி என்றார். அடிபிறக் கிடாமையால் பகையானையின் கொம்பு பாய்ந்த நெற்றியுடைய மறக்களிறு என்க. வடுவாழ் முகத்தையும் தடக்கையையும் வடுப்படு நெற்றியையும் உடையனவாகிய மறவருடைய கடுங்களிற்றை என யானைக் கேற்றுக. இவையிற்றை மறவர்க் கேற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர். பெரும் புகல்-பெரிய விருப்பம்; யானைப் போரில் வெற்றி காண்டலில் பெரிய விருப்பமுடைய மறவர் என்க.

ஓட்டுதல் - ஈண்டு யானைகளைப் போர் செய்ய ஏவுதல். யானைப்போர் காண்போர் அப் போர்யானைகளால் தமக்குத் தீங்கு நேராமைப் பொருட்டு யானைகள் ஏறிவரவியலாத மேட்டு நிலம் அல்லது குன்றுகளின்மேல் ஏறி நின்று காண்பர்; இதனை, குன்றேறி யானைப் போர் கண்டற்றால், என்னும் குறளானும் உணரலாம். மதுரை மாநகரத்தே யானைப்போர் காண்டற்கு உயரிய கரை யெடுத்திருந்தனர் என்பதும், அக்கரையின் மேலும், சரிவிலும் யானைகள் ஏறின் சருக்கி விழும் பொருட்டுக் கரிய பருக்கைக் கற்களைப் பரப்பியிருந்தனர் என்பதும் இட்ட நெடுங்கரைக் காழக நிலம் பரல் என்னும் தொடரான் அறியலாம். இத்தொடர்க்கு இங்ஙனம் செம்பொருள் கூறாது ஆசிரியர் நச்சினார்க்கினியர் காணுநர் நெடுங்கரை காழகம் இட்ட பரல் நிலம் உறுப்ப என மாறிக்கூட்டி, அவ்வியானை முன்னேயோடி அதன் விசையைக் காணும் பரிக்காரர் அவ்வியானை பிடித்துக்கொள்ளும் காலத்து மேல் வராமல் அஞ்சி மீளுதற்குச் சமைப்பித்து நெடிய கரையையுடைய நீல நிறத்தையுடைய புடைவைகளிலே வைத்துச் சிந்தின கப்பணம் நிலத்தே கிடந்து கால்களைப் பொதுக்கும்படி, எனத் தாம் வேண்டியவாறே கூறி, மேலும் நெருஞ்சி முள்ளுப் போல முனைபட இரும்பால் சமைத்துத் தூவற்கு யானை அஞ்சுமென்று அவர் மடியிலே வைத்த கப்பணத்தைப் பரல் போறலிற் பரல் என்றார் பிறரும் (285) எனச் சீவகசிந்தாமணிச் செய்யுளின் றொடரையும் எடுத்துக் காட்டியுள்ளார். காணுநர் - அவ்வியானைப் போரைக் காண வந்தோர். செய்கரையாகலின் இட்ட நெடுங்கரை என்றார். காழகம் -கரிய இடம்; காழக நுணங்கறல், (6) என்றார், சிறுபாணாற்றுப் படையினும். ஓண நன்னாளில் கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் பரல் உறுப்பத் தேறல் மகிழ்ந்து திரிதர என இயைத்துக் கொள்க.

புனிற்றிளம் பெண்டிர் குளநீராடல்

600-603 : கணவர் உவப்ப ...................... அயர

பொருள் : கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து - தம் கணவர் இம்மை மறுமையிற் பெறும்பயன் பெற்றோமென்று மகிழும்படி பிள்ளைகளைப் பெற்று, பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற - பாலால் இடங்கொண்டு உயர்ந்த இளைய முலை பால் சுரக்கும்படி, புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு - புலால் நாற்றத்தை யுடைய ஈன்றணிமை தீர்ந்து தம் மகப்பேற்றின் பொருட்டு மகிழ்ச்சியாற் பொலிவுற்ற சுற்றத்தாரோடு, வளமனை மகளிர் குளநீர் அயர - வளப்பமிக்க செல்வத்தையுடைய குடிப்பிறப்பாட்டியராகிய மகளிர் குளத்து நீரிலே ஆடா நிற்ப;

கருத்துரை : தம் கணவர் இம்மை மறுமைப் பயன்களைப் பெற்றோமென்று மகிழும்படி புதல்வரைப் பெற்றவராகிய வளமனை மகளிர் பாலான் இடங்கொண் டேந்திய முலை பால் சுரக்கும்படி மகிழ்ச்சியாற் பொலிவுற்ற சுற்றத்தாருடனே குளத்தின்கண் நீராடுதலைச் செய்ய என்பதாம்.

அகலவுரை : மெய் தீண்டலால் உடற்கின்பமும் சொன்மிழற்றலால் செவிக்கின்பமும் செய்து எழுபிறப்புந் தீயவை தீண்டாமற் செய்வார் புதல்வராகலான் அத்தகைய சிறந்த பேறு பெற்றமையான் கணவர் உவப்ப என்றார். இதனை,

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு  (குறள் - 65)

என்றும்,

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்  (குறள்-62)

என்றும்,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற  (குறள் - 61)

என்றும் எழுந்த மெய்ம் மொழிகளானும்,

படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே  (புறம் - 188)

என்றெழுந்த பாண்டியன் அறிவுடை நம்பி பனுவலானும் உணர்க. மகப்பயந்த அண்மையில் பால்நிறைவான் அடிபருத்து அணந்திருத்தலின் பணைத்து ஏந்து இளமுலை என்றார். மகப்பயந்தோர்க்குப் பயந்த பொழுதே நன்கு பால் சுரவாமையானும் குளிர்ந்த நீராட்டுப்பால் நன்கு சுரத்தற்கு ஏதுவாதலானும் அமுதம் ஊறக் குளநீரயர என ஏதுவாக்கினார். இங்ஙனமாதலைச் சிந்தாமணியில்,

வீங்கிள முலைகள் விம்மித் திறந்துபால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள்

என்புழி நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் உணர்க. இங்ஙனமன்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர் (610) சாலினிமடுப்ப என்றதற்குக் (603) குளநீரயர என்பதனை ஏதுவாக்கிக் கூறுவர். புதல்வர்ப் பயந்த புனிறு தீர் மகளிர் இங்ஙனம் நீராடும் வழக்கமுண்மையை,

அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கந்
தீர்வினை மகளிர் குளனா டரவமும்  (7: 73-6)

என்னும் மணிமேகலையான் நன்கு உணர்க.

கடுஞ்சூன் மகளிரின் கடவுள் வழிபாடு

604-610 : திவவுமெ ................ மடுப்ப

பொருள் : திவவு மெய் நிறுத்துச் செவ்வழி பண்ணி - வலிக்கட்டினை யாழிற் றண்டிலே கட்டிச் செவ்வழிப் பண்ணினை வாசித்து, குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி - குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடனே முழவும் பொருந்தி, நுண்ணீர் ஆகுளி இரட்ட - மெல்லிய நீர்மையுடைய சிறு பறை ஒலிப்ப, பலவுடன் ஒண்சுடர் விளக்கம் முந்துற - பூசைக்கு வேண்டும் பல பொருள்களோடே ஒள்ளிய சுடரையுடைய நெய் விளக்கு முற்பட, மடையொடு - பாற்சோறு முதலிய உண்டிகளோடு, நன்மாமயிலின் மென்மெல இயலி - நன்றாகிய பெருமையையுடைய மயில்போல மெத்தென மெத்தென நடந்து சென்று, கடுஞ்சூல் மகளிர் - முதற்சூல் கொண்ட மகளிர்கள், பேணிக் கைதொழுது பெருந்தோட் சாலினி மடுப்ப - தெய்வத்தைக் கைகுவித்துத் தொழுது பெரிய தோளினையுடைய தேவராட்டி யானே தம் பரவுக் கடனைச் செலுத்தா நிற்ப,

கருத்துரை : வலிக்கட்டினை யாழ்த்தண்டிலே கட்டிச் செவ்வழி என்னும் பண்ணினை இசைத்து, யாழும் முழவும் இயைந்தொலிப்பச் சிறுபறை முழங்கப் பூசைக்கு வேண்டும் பொருள்கள் பலவற்றோடே, சுடர் விளக்கம் முற்பட்டுச் செல்லப் பாற்சோறு முதலிய மடையோடே, நல்ல மயில்போல் மெல்லமெல்ல நடந்து சென்று, திருக்கோயிலின்கண் இறைவனைக் கைதொழுது ஏத்தித் தேவராட்டியான் மடைகொடா நிற்ப என்பதாம்.

அகலவுரை : திவவு - யாழின் வார்க்கட்டு : மெய் நிறுத்தலாவது அதனைச் செறித்துப் பண்ணமைத்தல். செவ்வழி - நால்வகைப் பண்களுள் ஒன்று. திவவுக் கூறினமையால் அதன்கண் நரம்பும் கூறியபடியாம். குரல்-குரல் என்னும் நரம்பு. யாழ் முழவுகளோடே ஆகுளி ஒன்றி இரட்ட எனினுமாம். இரட்டல்-ஒலித்தல். நல்யாழ் முழவொடு ஒன்றி நுண்நீர் ஆகுளி இரட்ட என்ற தொடரோடு,

குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை  (சிலப். 3: 139-42)

என்னும் சிலப்பதிகாரப் பகுதியை ஒப்பு நோக்குக. பலவுடன் என்றது பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியுமாகிய பலபூசைப் பொருள்களோடே என்றவாறு. புகை தோன்றாது மிக்க ஒளியுடைத்தாய்த் திகழும் ஆனெய்பெய்த விளக்கம் என்பது தோன்ற ஒண்சுடர் விளக்கம் என்றார். முற்பட-முன்னர்க் கொண்டு செல்ல என்க. மடை-சோறு. கடுஞ்சூல்-முதற்சூல்: சூல் கொண்டுள்ளமையின் மென்மெல நடந்தென்றார். கடுஞ்சூல்-முதிர்ந்த சூல் எனினுமாம். சாலினி - தெய்வமேறியாடும் மகள்; தேவராட்டி.

பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சி  (சிலப்.வேட்டுவ. 7-9)

என்றார் இளங்கோவடிகளாரும். சாலினியால் என மூன்றாவது விரித்தோதுக. மடுப்ப - செலுத்த. ஓரிடுக்கணும் நேராமல் மகப்பெறுமாறு அருள்க என வேண்டி மடை மடுப்ப என்க.

வெறியாட்டரவமும், வேறு வேறு கம்பலையும்

610-620 : ஒருசார் ................ சென்றபின்றை

பொருள் : ஒருசார் - ஒருபக்கத்தே, அருங்கடி வேலன் முருகொடு வளைஇ - அரிய அச்சத்தைச் செய்யும் வேன்மகன் இவ் விடுக்கண் முருகனால் வந்ததெனத் தான் கூறிய சொல்லின் கண்ணே கேட்டோரை வளைத்துக்கொண்டு, அரிக்கூடு இன் இயம் கறங்க - அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக் கருவிகள் முழங்காநிற்ப, நேர் நிறுத்து கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணி-முருகனை முன்னிலையாகக் கொண்டு கார்காலத்தான் மலர்தலையுடைய குறிஞ்சிப் பூவினைச் சூட்டிக் கடப்பமரத்தின் கண்ணே புகழ் மிக்க செவ்வேளாகிய முருகனை வழிபடுதலாலே, தழூஉப், பிணையூஉ மன்று தொறும் நின்ற குரவை - மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்ற குரவைக் கூத்தும், சேரிதொறும் - குடியிருப்புக்கள் தோறும் நின்ற, உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ - புனைந்துரைகளும் பாட்டுக்களும் பலவகைப்பட்ட கூத்துக்களும் தம்முள் கலக்கையினாலே, வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி - வேறு வேறாகிய ஆரவாரம் ஒழுங்கு கொண்டு மயங்கப்பட்டு, பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்-பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற, சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு - சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற் போன்ற ஆரவாரத்தோடே, முந்தை யாமம் சென்றபின்றை - இரவின் முற்பட்ட யாமம் நிகழ்ந்த பின்னர்;

கருத்துரை : அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் இத் தீங்கு நுமக்கு முருகனால் வந்ததென்று கூறும் தன் சொல்லாலே வளைத்துக் கொண்டு இனிய இசைக் கருவிகள் முழங்க முருகனை முன்னிலையாக்கிக் குறிஞ்சிப்பூவைக் கடப்பமரத்தின் கண்ணே சூடி ஆண்டுப் புகழ் மிக்க முருகனைப் பரவி வழிபடுதலாலே மகளிர் தழுவிக் கைகோத்து மன்றங்கள் தோறும் நின்று ஆடும் குரவைக் கூத்தும், சேரிகளிடத்தே நின்ற புனைந்துரைகளும், ஆடல் பாடல்களும் கலக்கையாலே உண்டாய ஆரவாரமும் மயக்கப்பட்டுப், பெரும்புகழையுடைய நன்னனுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் சேரிகளிடத்தே எழும் ஆரவாரம் போன்று ஆரவாரிக்க, இவ்வாறு இரவின் முதலியாமம் நிகழ்ந்து கழிந்த பின்னர் என்பதாம்.

அகலவுரை : தலைவனைப் பொழிலிடத்தே ஊழ்கூட்டக் கண்டு அவனோடே மெய்யுறுபுணர்ச்சியாகிய களவு மணம் நிகழ்த்திய பின்னர்த் தலைவி பெற்றோர்களால் இற்செறிக்கப்படுதலும் பின்னர்த் தலைவி தலைவனைக் காணப்பெறாமை முதலிய காரணங்களால் நாடோறும் தேய்மதி போன்று நலனழிதலும் அந்நிலை கண்ட செவிலி இந்நோய் இவட்கு எற்றானாயதென வினவ இது தெய்வத்தான் நிகழ்ந்ததெனக் கூறி அவளைத் தன் கூற்றால் வளைத்துக் கோடலும் தலைவியின் நோய் தணிப்பான் களனிழைத்து வெறியாட்டயர்தலும் பிறவும் அகத்தினை பற்றியனவாம். அந்நிகழ்ச்சிகளைக் குறிஞ்சிப்பாட்டு முதலிய அகம்பற்றி எழுந்த பாடல்களினால் உணர்க.

தன் கூற்றைக் கேட்ட பின்னர் வெறியாடலன்றிப் பிழைத்தற்கு வேறு வழியில்லை எனச் செவிலியை அச்சுறுத்தலான், அருங்கடி வேலன் என்றார். கடி - ஈண்டு அச்சம். என்னை?

கடியென் கிளவி,
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்றேற் றாயீரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே  (தொல்-உரி. 85)

என்றோதுபவாகலான். இனி வேலன் இது தெய்வத்தான் நிகழ்ந்தது எனக் கேட்ட செவிலி வெறியாட்டயரத் தொடங்குதல் கண்ட தலைவியும் தோழியும் அஞ்சுதலுண்மையினானும் அருங்கடி வேலன் என்றல் பொருந்துமாறறிக. வேலன் என்னும் பெயர்க்கு பிள்ளையார் (முருகன்) வேலை எடுத்தலின் வேலன் என்றார்; என்றது கழங்குவைத்துப் பிள்ளையாரால் வந்ததென முற்கூறிப் பின் வெறியாடுவன் என்று ஆடும் முறைமை கூறிற்று என்பர் நச்சினார்க்கினியர். அரி-அரித்தெழும் ஓசை. அத்தகைய ஓசையுடையன சல்லிகை கரடிகை முதலியன என்க. அரிக்குரற் றட்டை (மலைபடு-9) என்றார் பிறரும். அரிக்கூட்டின்ணியம் கறங்க (குறிஞ்சி -194) என்னும் குறிஞ்சிப் பாட்டின் தொடர் இதனுடன் ஒப்பு நோக்கற் பாற்று.

நேர் நிறுத்து என்றதற்கு செவ்விதாகத் தன்மெய்க்கண்ணே நிறுத்தி என்றும் கடம்பின் சீர்மிகு நெடுவேள் எனக்கொண்டு கடம்பு சூடுதலால் அழகு மிகுகின்ற முருகன் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை வகுத்தார். இனி முருகனை வழிபட்டு வெறியாட்டயரும்வேலன் கடம்பின்கண் மாலை சூட்டும் வழக்கமுடைமையை,

அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்பத்
திரளரை வளைஇய திணிநிலைக் கடம்பின்
துணையறை மாலை  (குறிஞ் 175-7)

என்பதனானும் அறிக. இனி, 545-ஒண்சுடர் என்பது தொடங்கி 620-முந்தை யாமம் சென்ற பின்றை என்னும் துணையும் விரிந்து கிடந்த இத்தொடரின் பொருளை, ஞாயிறு குன்றம் சேர, மதியம் தோன்றி விரிபு இரவு வர, நயந்தோர் புணர்மார் துணைப்பக் குடைய அரைப்ப மறுக மடுப்பக் கொளீஇப் புகுந்து மாலை நீங்க; நாணுக்கொள நயந்தோர் பண்ணுப் பெயர்த்துத் தழீஇ நாணுக் கொள; கமழப் பிறக்கிட்டு வீசி எய்தி வேய்ந்து முயங்கிக் கரந்து வாங்கித் துறந்து துவன்றி நடுக்குறூஉம் கொண்டி மகளிர் ஆடி அடைச்சி அயர,

ஓண நன்னாள் களிறு ஓட்டலிற் காணுநர் உருப்பச் சிறந்து திரிதர,
உவப்பப் பயந்து ஊற மகளிர் குளநீர் அயர,
நிறுத்துப் பண்ணி இரட்ட முந்துற இயலித் தொழுது மடுப்ப,

வேலன் வளைஇ நிறுத்துச் சூடிப் பேண நின்ற குரவை விரைஇ வேறு வேறு கம்பலை மயங்கிய ஆர்ப் பெழுந்தாங்கு முந்தையாமம் சென்ற பின்றை என இயைத்துக் கொள்க. இனி, 621-பணிலம் என்பது தொடங்கி 653- மற்றை யாமம் பகலுறக் கழிப்பி என்னுந் துணையும் மதுரை நகரின் நள்ளியாமத்தின் தன்மை நுதலிய ஒரு தொடர்.

கண்படை கொண்ட மதுரைக் கடிநகர்

621-631 : பணிலம் ................ இடையது

பொருள் : பணிலம் கலியவிந்து அடங்க - சங்குகள் ஆரவாரமொழிந்து அடங்கிக் கிடக்க, காழ் சாய்த்து நொடை நவில் நெடுங் கடை அடைத்து மடமதர் ஒள்இழை மகளிர் பள்ளி அயர - சட்டக்காலை வாங்கிப் பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மடப்பத்தினையும் செருக்கினையும் ஒள்ளிய அணிகலன்களையும் உடைய மகளிர் துயிலுதலைச் செய்ய, நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை-நல்ல வரிகளை யுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும், அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் கவவொடு பிடித்த வகையமை மோதகம் - கண்ட சருக்கரையை வெப்ப மேற்றிச் சமைத்தலமைந்த பாகினைக் கூட்டிய தேங்காயும் பருப்புமாகிய உள்ளீட்டோடே பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும், தீஞ் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க - இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவினையும் உடைய அப்பவாணிகரும் அவற்றோடே இருந்து தூங்குவனராய் உறங்க, விழவின் ஆடும் வயிரியர் மடிய - திருநாளின்கண்ணே கூத்தாடும் கூத்தர் அதனை ஒழிந்து துயில் கொள்ள, பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய - ஒலி நிறைந்து அடங்கின குளிர்ந்த கடலை ஒக்க, பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப - படுக்கையிலே துயில்கொள்ளுவோர் கண் இனிதாகத் துயில் கொள்ளாநிற்ப, பானாட் கொண்ட கங்குல் இடையது - இரவின் பாதியாகிய பதினைந்து நாழிகையைத் தன்பாற்கொண்ட கங்குலின் இடையாமத்தே;

கருத்துரை : சங்கங்களின் முழக்கம் அடங்கவும், சட்டக்காலை வாங்கிப் பண்டங்கட்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மாதர்கள் துயிலவும், நல்ல வரிகளையுடைய தேனிறால் போன்ற அடைகளையும், காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகங்களையும், பாகுகலந்த மாவினையும் உடைய அப்பவாணிகர் அவற்றோடே இருந்து தூங்கி விழுவாராய் உறங்கவும் கூத்தாடுவோர் அதனை ஒழித்துத் துயிலவும் ஒலியவிந்த கடல் போன்று பாயலில் துயில் கொள்ளும் ஏனை மாந்தர் எல்லாம் இனிதே துயிலவும் செல்லாநின்ற இரவின் நடுயாமத்தே, என்பதாம்.

அகலவுரை : பணிலம்-சங்கு. கலி-முழக்கம். காழ்-சட்டக்கால்; கடையின் தட்டியைத் தூக்கி அதனைத் தாங்குமாறு நிறுத்துங் கால் என்க. நொடை நவில்தல்-பண்டங்கட்கு விலைகூறுதல். நாளா தந்து நறவு நொடை தொலைச்சி, (பெரும்பா-141) என்றும், நறவு நொடைக் கொடியோடு, (பட்டினப்-180) என்றும், பிறரும் கூறுதல் காண்க.

மடமதர் - மடப்பத்தோடு கூடிய செருக்கு. தேத்திறால் வரிவரியாக அமைந்திருத்தலின் நல்வரி இறாஅல் என்றார். தேனடையை ஒத்த அடை என்க; இது வடிவுவமை. விசயம் ஆடுஅமை என்னும் தொடரை இதன் முன் கூட்டிப் பாகிலே சமைத்த அடையென்பர் நச்சினார்க்கினியர். புரையும் : உவம வுருபு. கவவு-உள்ளீடு. இச்சொல் 570 (கவவுக் கரந்து என்புழியும் உள்ளத்தின் உள்ளீடாகிய எண்ணங்களை உணர்த்தி நின்றது) ஈண்டு மோதகத்தின் உள்ளீடாகிய பொருளை உணர்த்தியது. அயிர் - கண்ட சருக்கரை; கற்கண்டுமாம். குடதிசை மருங்கின் வெள் அயிர் (4: 35) என்றார், சிலப்பதிகாரத்தும். வெப்ப மேற்றிச் சமைத்தலின், அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் என்றார். கண்ட சருக்கரையைக் காய்ச்சிச் சமைத்தலமைந்த பாகு என்க. விசயம்-பாகு. மோதகம் - இத் தின்பண்டம் இற்றைக்கும் தமிழ் நாட்டிலுளது. இதனை அப்பம் என்றார் நச்சினார்க்கினியர். கொழுக்கட்டை எனவும் இது வழங்கப்படும். அப்பத்திற்குப் பாகோடு கலந்த மாவினைத் தீஞ்சேறு என்றார் கூவியர் - அப்பவாணிகர். காரகற் கூவியர் பாகொடு பிடித்த விழை சூழ் வட்டம் (377-8) என்றார் பெரும்பாணினும். காழியர் கூவியர் கண்ணொடையாட்டியர் எனச் சிலப்பதிகாரத்தும் (5:24) வருதல் காண்க. வயிரியர் - கூத்தர். மடிய - உறங்க. பாயல் வளர்வோர் என்றது, இவ்வணிகர் முதலியோரை யன்றி ஏனை நகர்வாழ் குடிமக்களை என்க. இடையது - இடையதாகிய யாமம்.

மதுரை நகரத்து நள்ளியாம நிகழ்ச்சிகள்

பேயும், அணங்கும், கள்வரும்

632-642 : பேயும் .................. ஒடுக்கமொற்றி

பொருள் : பேயும் அணங்கும் உருவு கொண்டு - பேய்களும் வருத்தும் தெய்வங்களும் புறக்கண்ணாற் காணத்தக்க உருவங்களைக் கொண்டு, ஆய்கோல் கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப - உயிர்களின் வாழ்நாளை ஆராய்தலையுடைய செங்கோன்மை பிறழாத மறலி கொலை செய்தற்கு ஊரும் தேராகிய கழுதோடே சுழன்று திரிய, இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு - கரிய பிடியின் கண்ணே மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளிடத்தே சேர்ந்து, கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர் - கல்லையும் மரத்தையும் வெட்டும் வன்மையுடைய கூர்மை பொருந்திய தூக்கிட்ட வாளையுடையராய், தொடுதோல் அடியர் - செருப்புக் கோத்த அடியினை யுடையராய், குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி - தொடையிடத்தே தெரியாமற் கிடக்கும்படி அழுத்தின கூரிய முனையினையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும், சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல் நிறங் கவர்பு புனைந்த நீலக் கச்சினர் - மிக்க கருமையினையுடைமையால், நுணுகிய தொழிற்றிறமையாலே, நுண்ணிய கருமணலின்கண் நிறத்தை வாங்கி இயற்றினாற் போன்ற நிறமமைந்த நீலநிறக் கச்சினையுமுடையராய், மெல் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர் - மெல்லிய நூலாற் செய்த ஏணியை அரையிலே பலவாய் மாட்சிமைப் படச் சுற்றிய சுற்றினையுடையராய், நிலன் அகழ் உளியர் - நிலத்தை அகழும் உளியினை உடையராய், கலன் நசைஇக் கொட்கும் கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி - பேரணிகலன்களை விரும்புதலானே அவையிற்றைக் களவு கோடற்கு இடம்பார்த்துச் சுழன்று திரியும் விழித்த கண் இமைக்கும் அளவிலே மறைகின்ற கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை அவர் தம்மையறியாதவாறு ஒற்றுதலைச் செய்து, (வழங்கலின் என 650 ஆம் அடிக்கட் சென்று முடியும்.)

கருத்துரை : பேய்களும், தீண்டி வருத்தும் தெய்வங்களும், கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதும் மக்கள் கட்பொறிக்குப் புலனுமாறு உருவங் கொண்டு திரியாநிற்ப, கரிய பெண்ணியானையின் மேந்தோலை ஒத்த கரிய இருளிடத்தே, கல்லையும் மரத்தையும் துணித்தெறியும் வன்மையுடைய கூரிய தூக்கிட்ட வாளையும் தொடு தோலையும் தொடையிடத்தே பதியக் கிடக்கும் உடைவாளையும்; அறலின் நிறத்தைக் கவர்ந்து புனைந்தாலொத்த நீலநிறக் கச்சினையும், நூலேணியை இடையிற் சுற்றிய சுற்றினையும், நிலத்தைத் தோண்டும் உளியினையும், உடையராய்ப் பேரணிகலன்களை விரும்பி அவையிற்றைக் களவு கோடற்கு இடம் பார்த்துத் திரிகின்ற கள்வர் பதுங்கிக் கிடத்தலை அவர் அறியாதவாறு ஒற்றி என்பதாம்.

அகலவுரை : அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம். இதனைச் சூர் என்றும் வழங்குப. அரவும் சூரும் ......... உறுகண் செய்யா (சிலப்- 13: 7-8) என்றார் இளங்கோவடிகளாரும். ஆய்கோல் கூற்றம் என்றது உயிர்களின் இறுதி நாளை ஆராய்தலையுடைய செங்கோன்மை பிறழாத மறலி என்றவாறு. என்னை?

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோ ரென்னான்  (மணி-சக்கர-97-9)

எத்திறத்தார் மாட்டும் ஒப்பத் தன் ஆட்சியைச் செலுத்துதலான் என்க. கழுது பேயில் ஒருவகை. இதனைப் பிரித்தோதிக் கூற்றத்தின் கொல் தேராக உருவகம் செய்தமையால் இது பேய்களினும் வன்பேய் என்றுணர்க.

இதனைக் கண்டோர் அச்சத்தால் உயிர் நீத்தலின் இதனைக் கூற்றுவனின் தேர் என்றார். என்னை? அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணா, பிணங்கு நூன் மார்பன் பேதுகந்தாக ஊழ்வினை வந்திவன் உயிர் கண்டு கழிந்தது (மணி-சக்கர-150-3) எனச் சம்பாபதி கூறியாங்குக் கூற்றம் வினைமுடிவின் இவையிற்றின் வாயிலாய் உயிர்கவர்தலான் அவன் உயிர் கவர்தற்கு ஊர்ந்து வரும் தேர் என்றார். அதனைக் கண்டபோதே உயிர் நீங்குதலான் அக் கொலைத் தொழிலை அதன் மேலேற்றிக் கொல்தேர் என்றார். இவ் வுருவகத்தின் நுணுக்கம் பெரிதும் இன்பந்தருவ தொன்றாதல் உணர்க.

இனிக் கழுதுக் கடையாகி வந்த ஆய்கோல் கூற்றம் கொஃறேர் என்னும் (633-4) இத் தொடரைப் பிரித்தெடுத்துப் போய் (652) சேய்மையிற் கிடந்த அச்சம் அறியாது ஏமமாகிய என்ற அடியோடு கூட்டி, யாக்கை நிலையாது என்றறிந்து மறுமைக்கு வேண்டுவன செய்து கொண்டமையின் அழகிய கோலையுடைய கூற்றத்தின் கொலைக்கு அஞ்சாமல் காவலுண்டாயிருக்கின்ற (699) மதுரை என்க. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் - துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார், வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்-வருங்காற் பரிவ திலர் (நாலடி -35) எனக் காட்டி கொஃறேர் - கால சக்கரம் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கொட்ப-சுழல. இதனை, வலமாதிரத் தான் வளி கொட்ப (5) என்புழியும் காண்க. இரும்பிடி - கரிய பெண்யானை; இதன் மேந்தோல் இருளுக்கு நிறவுவமை. இருளிடத்தே இயங்கும் கண்மா றாடவர் என்றவாறு. இது கண்மா றாடவரின் இயல்பு நுதலி வந்தது. இதனைக் கரிய பிடியின் கண்ணே மேலின தோலையொத்த கருமை தமக்கு இயல்பாகச் சேரப் பட்டு என்றும், இருள் - கருஞ் சட்டையுமாம் என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

புதையிருளின் எழுகின்ற புகர்முக யானையின் உரிவைப்போர்வை போர்த்த உதயகிரி எனும் கடவுள் எனக் கம்ப நாடரும் இருளை யானைத்தோல் என்றமை காண்க. (கம்ப.மிதிலைக்-150) சேர்பு - சேர்ந்து, இருள் சேர்பு கொட்டும் ஆடவர் என இயைத்துக் கொள்க. முழுத் திங்கள் நிறைந்த இரவையே ஈண்டுக் கூறுகின்றார் ஆகலின் இருள் சேர்பு கொட்கும் என்றதும் பின்னர் மழையமைந்துற்ற அரை நாள் அமையமும் என்றதும் கள்வர் காவலர்களுடைய இயல்புகூறியபடியாம் என்க. தொடுதோல்-செருப்பு. குறங்கு-தொடை. குறும்பிடி; குறுகிய பிடியை உடைய உடைவாளுக்கு ஆகுபெயர். இது தொடையோடு அழுந்துமாறு கச்சான் இறுக்கி மறைத்துக் கட்டப்படுவதால், குறங்கிடைப் பதித்த குறும்பிடி என்றார். இதனைச் சொட்டை என்பர் நச்சினார்க்கினியர். இருளிற் செல்லுங்கால் பிறர் காண்டற்கியலாமைப் பொருட்டுக் கள்வர் நீலக் கச்சணிவர் என்க. நூலேணி, மதிற்றலையிலே உள்ளே விழவெறிந்தால் கைபோல மதிலைப் பிடித்துக் கொள்ளும்படி இரும்பாற் சமைத்ததனைத் தலையிலே உடைய நூற்கயிற்றை உள்ளே விழ எறிந்து அதனைப் புறம்பே நின்று பிடித்துக்கொண்டு அம் மதிலை ஏறுவாராகலின் ஏணி யென்றார் என விளக்கினர் நச்சினார்க்கினியர். கண்ட கண் இமைத்துக் காணுமளவிலே மறைவார் என்பார், கண்மா றாடவர் என்றார். இனி, மந்திரம் நாவிடை வழுத்துவராயின் இந்திர குமரரின் யாம்காண் குவமோ (சிலப்-16172-3) எனப் பொற்கொல்லன் புகன்றவாறு, காட்சியினின்றும் ஞெரேலென மறையும் ஆடவர் எனினுமாம். ஒடுக்கம்-ஒதுங்கி யிருக்கும் இடம். ஒற்றுதல்-தம்மைப் பிறர் அறியாதவாறு பிறரைத் தாம் அறிந்து கோடல். இதனை வேய்த்தல் என்றார் நச்சினார்க்கினியர்.

ஊர் காப்பாளரின் ஊக்கமும் திறலும்

643-653 : வயக்களிறு .................. கழிப்பி

பொருள் : வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல - வலிய களிற்றை இரையாகப் பார்க்கும் வலிய புலியைப் போலே, துஞ்சாக் கண்ணர் - துயில் கொள்ளாத கண்ணையுடையராய், அஞ்சாக் கொள்கையர் - தம்முயிர்க்கு ஏதம் நிகழும் என்று அஞ்சுதலில்லாத கோட்பாட்டை உடையராய், அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் - களவியற் றொழிலை அறிந்தவர்களாலே கள்வரைக் காண்டலில் இவர் வல்லுநர் எனப் புகழப்பட்ட ஆண்மையை உடையராய், செறிந்த நூல்வழிப் பிறையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர்காப்பாளர் பொருட் செறிவினையுடைய நூலின் வழியைத் தப்பாத மிக நுண்ணிதாக நுணுகிய ஆராய்ச்சியின் தெளிவினையுடையராய் ஊர்காத்தற் றொழிலை ஆளுதலை உடையோர், ஊக்க அருங்கணையினர் - தப்பக் கருதி முயல்வார்க்கும் தப்புதற்கு அரிய அம்பினையுடையராய், தேர் வழங்கு தெருவின் நீர்திரண்டு ஒழுக மழை அமைந்து உற்ற அரைநாள் அமையமும் - தேர் ஓடும் தெருவின்கண்ணே நீர் திரண்டு ஒழுகும்படி மழை மிகப் பெய்த இரவின் நடுநாளாகிய பொழுதினும், அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் - மடியிலராய்ப் போந்து விருப்பந்தோன்றி உலாவுகையினாலே, கடவுள் வழங்கும் கையறு கங்குலும் - தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும், அச்சம் அறியாது ஏமமாகிய - ஆண்டு வாழ்வோர் அச்சத்தை அறியாமைக்குக் காரணமாகிய காவலுடைத்தாகிய, மற்றை யாமம் பகலுறக் கழிப்பி - முந்தையாமத்தை அடுத்து வந்த நள்ளியாமத்தையும் பகுத்தல் உண்டாகப் போக்கி;

கருத்துரை : வலிய களிற்றை இரையின் பொருட்டு ஆராயும் வலிய புலியைப் போலத் துயிலாக் கண்ணையுடையராய், அஞ்சாத கோட்பாடுடையராய்க் களவு நூலறிந்தோராற் புகழும் ஆண்மையுடையோராய்ப் பொருள் செறிந்த நூல்வழியிற் றப்பாத நுணுகிய ஆராய்ச்சித் தெளிவையுடையராய், ஊர் காக்குந்தொழிலை மேற்கொண்டோர், தப்புதற்குரிய கணையை உடையராய்த் தேரோடும் தெருவிடத்தே நீர்திரண்டோடுமாறு மிக்க மழைபொழியா நின்ற நள்ளிரவினும் மடிந்திராதே விருப்பத்தோடே எழுந்து உலாவுதலானே, தெய்வங்கள் வழங்குதற்குரிய செயலற்ற இருட்போதினும் மாந்தர் அஞ்சுதல் அறியாத அந் நள்ளியாமத்தையும் இங்ஙனம் பகுப்புண்டாகப் போக்கி, என்பதாம்.

அகலவுரை : வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல வழங்கலின் எனத் தொழிலுவமமாக்குக. வயக்களிறு கள்வர்க்கும், வயப்புலி ஊர் காப்பாளர்க்கும் உவமை என்க. ஈரிடத்தும் வய என்னும் உரிச்சொல் வலிமை என்னும் பொருட்டு. வயவலியாகும் (உரி-68) என்பது தொல்காப்பியச் சூத்திரம்.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்  (குறள்-599)

என வள்ளுவனார் வகுத்த குறளை இது நினைவூட்டும். தொடலை வாளும் குறும்பிடியும் உளியும் உடையராயினும் கள்வர் ஊர்காப்பாளரை வெரூஉவர் ஆதலான், இங்ஙனம் நுண்ணிதின் உவமை எடுத்தோதினார். துஞ்சாக் கண்ணும், அஞ்சாக் கொள்கை
யும், ஊர்காக்கும் தொழிற்கு இன்றியமையாமை காண்க. அஞ்சாமை ஈண்டு மறைந்திருக்கும் கள்வரானும், பேய் அணங்கு முதலியவற்றானும், தமக்குத் தீங்குறுமே என்று அஞ்சாதிருத்தல், செறிந்த நூல் என்றது ஈண்டுக் களவு செய்தற்குரிய நூலும் கள்வரைக் கண்டு பிடித்தற்குரிய காவல்நூலும் என இருவகை நூலையும் குறிக்கும். என்னை? கள்வர்கள் பயின்றுள்ள நூலின் நுணுக்கங்களை அறிந்திராதவழி அவரைக் காண்டல் அரிதாதல் பற்றி அந் நூலின் நுணுக்கங்களையும் அறிதல் இன்றியமையாமையின் என்க. இதனால், களவும் கற்று மற என்னும் பழமொழிக்கும் சிறந்த பொருள் விளங்குதலறிக. இங்ஙனம் கூறியவாற்றாற் களவு நூலும், காத்தல் நூலும் இருந்தமை புலனாம். இவ் விருவகை நூல்களிற் களவு நூலிருந்ததென்பதற்கு,

கருந்தொழிற் கொல்லன் காட்டினன் உரைப்போன்
மந்திரந் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது  (சிலப்-கொலைக். 165-9)

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியும், அப்பகுதியில் காட்டினன் உரைப்போன் என்னுந் தொடர்க்கு, களவு நூலிலுள்ள ஏதுக்களைக் காட்டினாய் உரைக்கின்றவனென்க என அடியார்க்கு நல்லார் கூறும் உரைப்பகுதியும் சான்றாம். உயர்திரு. உ.வே.சா. ஐயரவர்கள் களவு நூல் ஸ்தேய சாஸ்திரமென்று வழங்கப்படுகின்ற தென்றும், அந்நூலைச் செய்தவர் கசரென்பவரின் ஆசிரியராகிய கர்ணிசூதரென்பவர் என்றும் வடமொழியாளர் கூறுவர், என்று குறித்துள்ளார்கள். அறிந்தோர் - இந்த இருவகை நூலையும் அறிந்தோர் என்க. களவுநூல் கற்றோரும் புகழ்தலாவது, நம் நூல் இவ்வூர் காப்பாளர்க்குத் தப்பும் நெறி காட்டிற்றிலது; அத்துணை ஆற்றலுடையோர் இவர் எனத் தம்முட் புகழ்தல். நுணங்கு நுண்டோச்சி-என்றது மிக நுணுகிய தேர்ச்சி என்றவாறு. தெருவில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடுமாறு பெரு மழை பெய்யும் இரவினும், விருப்பத்தோடே தங்கடமையைச் செய்யும் காவலர் என அவர் வினையாற்றும் பெருமையைத் தெரித்தோதியவாறு காண்க. அரைநாள்-நடுநாள்; ஈண்டு இரவின் நடுநாள் என்க. கடவுள் மட்டுமே வழங்குதற் குரியதும் ஏனைமக்கள் செயலறுதற்கு ஏதுவாகியதும் ஆகிய கங்குல் என்க. கங்குல்-இருள்.

இத்தகைய சிறந்த காவலரை உடைமையின் மதுரைநகர் அச்சமறியாதென்க. (620) முந்தையாமம் சென்ற பின்றை என முன்னர் ஓதுதலின் அதனை அடுத்து நிகழும் நள்ளியாமத்தை மற்றை யாமம் என்றார். பகல்உற-பகுத்தல் உண்டாக. 121-பணிலம் என்பது தொடங்கி, மற்றையாமம் பகலுறக் கழிப்பி (652) என்னுந் துணையும்; பணிலம் அடங்க, மகளிர் பள்ளி யயரக் கூவியர் உறங்க, வயிரியர் மடியப் பாயல் வளர்வோர் கண்மடுப்ப இடையது, கொட்ப, கண்மா றாடவர் ஒழுக்கம் ஒற்றிப் புலிபோல ஊர் காப்பாளர் எழுந்து வழங்கலின், ஏமமாகிய மற்றை யாமம் கழிப்பி என அணுகக் காண்க. பானாட்கங்குல் இடையதாகிய மற்றையாமம் எனக் கூட்டுக. இடையதாகிய யாமமும், மற்றை யாமமும் எனப் பகுப்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இனி, 654-போது பிணிவிட்ட என்பது தொடங்கி, 656- ஏம வைகறை என்னுந் துணையும் ஒரு தொடர்.

மதுரை மாநகரத்தே வைகறைப்போதும் நிகழ்ச்சிகளும் வேதமுழக்கம்

654-659 : போது ................. பாட

பொருள் : போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை - பூக்கள் தளையவிழ்ந்த மணம் கமழ்தலையுடைய நறிய பொய்கைகளிலே, தாது உண் தும்பி போது முரன்றாங்கு - தாதையுண்ணுந் தும்பிகள் அப் பூக்களிலே பாடினாற் போன்று, ஓதல் அந்தணர் வேதம் பாட - ஓதுதற் றொழிலையுடைய அந்தணர் அவ்வமயம் ஓதற்குரிய வேதத்தைப் பாடாநிற்ப;

கருத்துரை : அலர்ந்த மலர்களையுடைய மணமிக்க பொய்கைகளிலே தாதுண்ணும் தும்பிகள் அப்பூக்களிடத்தே பாடுமாறுபோல ஓதற்றொழிலையுடைய அந்தணர் வேதங்களை ஓதாநிற்ப என்பதாம்.

அகலவுரை : பொய்கை - மானிடரான் ஆக்கப்படாத இயற்கை நீர்நிலை. காரணநிலையினின்றும் காரியநிலையில் விரிந்துள்ள இப்பேருலகம் இயற்கையிலுள்ள பொய்கைக்கும், அதன்கண் தோன்றியுள்ள உயிர்க் கூட்டங்கள் அப்பொய்கையின் மலரும் பூக்கட்கும், அப்பூக்களுள் பருவம் வாய்ந்த மலருள் ஊறும் தேன், அப் பிறப்புக்களுள் உயரிய அந்தணர் உளத்தே தோன்றும் இறை அன்புணர்ச்சிக்கும், தேனை உண்ட வண்டு களித்துப் பாடுதல் அவ்விறை யன்பு பொங்கி மகிழ்ந்து அந்தணர் வேதம் பாடுதற்கும் உவமையாகக் கொள்க. அந்தணர்க்குரிய அறுதொழிலினும் ஓதல் தலைசிறந்தமையின் ஓதலந்தணர் என்றார். கல்லாக் கழிப்பார் தலையாயார் (நாலடி) என்றார் பிறரும். வைகறைப்போதில் அந்தணர் வேதம் பாடும் வழக்கமுண்மையை,

பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே  (பரி.தி.27: 7-11)

என்பதனானும் அறிக.

657-662 : சீரினது .......................... நுவல

பொருள் : சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி - தாளவறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து, யாழோர் மருதம் பண்ண - யாழோர் மருதப பண்ணை இசையாநிற்ப, காழோர் கடுங்களிறு கவளம் கைப்ப - பரிக்காரர் கடிய களிற்றைக் கவளம் ஊட்ட, நெடுந் தேர்ப் பணை நிலைப்புரவி புல் உணாத் தெவிட்ட - நெடிய தேரிலே பூணும் பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை உண்டு தெவிட்டாநிற்ப, பல்வேறு பண்ணியக்கடை மெழுக்குறுப்ப - பண்டம் விற்போர் பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகளை மெழுகுதலைச் செய்ய, கள்ளோர் களிநொடை நுவல - கள்ளைவிற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல;

கருத்துரை : யாழோர் தாளவறுதியை இனிதாகக் கொண்டு நரம்பை இனிதாக இயக்கி மருதப்பண்ணை இசைக்கவும் பரிக்காரர் களிறுகட்குக் கவளம் ஊட்டவும், பந்தியிலே நிற்றலையுடைய தேர்க்குதிரைகள் புல்லுண்டு தெவிட்டவும், பண்டம் விற்போர் கடைகளை மெழுகவும், கள்விற்போர் கள்ளிற்கு விலைகூறாநிற்பவும் என்பதாம்.

யாழோர் - யாழியக்கும் பாணர்கள். சீர்-தாள அறுதி.

அகலவுரை : காழோர் - கோலையுடையோர். பரிக்காரர் குத்துக் கோலையுடையராகலின் காழோர் எனப்பட்டனர். காழோர் இகழ்பதம் நோக்கிக் கீழ நெடுங்கை யானை நெய்ம்மிதிக் கவளம் கடுஞ்சூன் மந்தி கவரும் என்றார் பெரும்பாணாற்றுப்படையினும், (193-5) கைப்ப - ஊட்ட, தீற்ற எனினுமாம். கவளம் - யானைக்கிடும் உணவு. நெடுந்தேர்ப் புரவி, பணைநிலைப்புரவி, எனத் தனித்தனி கூட்டுக. பணை - குதிரைப் பந்தி புல்லுணா-புல்லாகிய உணவு. தெவிட்டல்-உண்டு தேக்கெறிதல்-தெவிட்ட என்றதற்குக் குதட்ட எனப்பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். மெழுக்குறுத்தல் - மெழுகுதல். உறுப்ப : பகுதிப் பொருளது. கள்ளோர் - கள்விற்போர். நொடை - விலை. நுவலுதல் - எடுத்துக் கூறுதல். கள்விற்போர்-இக் கள் இன்னவிலை கொண்மின் எனக் கூவுவார் என்றபடி. களிப்பை நல்கும் கள்ளை ஆகுபெயராற் களி என்றார்.

குடிப்பிறப் பாட்டியர் செயல்

662-667 : இல்லோர் ................ கரைய

பொருள் : இல்லோர் நயந்த காதலர் கவவுப் பிணி துஞ்சி - கற்புடைமகளிர் தாங்கள் விரும்பின தங்கணவருடைய முயக்கத்திற் பிணிப்பாலே துயில்கொண்டு, புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி - இருள் மாய்ந்து கதிர்விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே அக்காலத்து இல்லத்திற் செய்யத் தகுவனவற்றைச் செய்தற்கு விரும்பி, கண் பொரா எறிக்கும் மின்னுக்கோடி புரைய-கண்ணை வெறியோடப் பண்ணி விளங்கும் மின்னொழுங்கை ஒப்ப, ஒண்பொன் அவிர் இழை தெழிப்ப இயலி - ஒள்ளிய பொன்னாற் செய்து விளங்கும் சிலம்பு முதலியன ஒலிப்பப் புறம் போதுகையினாலே, திண் சுவர் நல்லில் கதவம் கரைய - திண்ணிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களிலே கதவுகள் ஒலியாநிற்ப.

கருத்துரை : கற்புடைய குலமகளிர் இரவின்கண் தாங்கள் விரும்பின கணவருடைய முயக்கத்தின் பிணிப்பாலே இனிது துயில்கொண்டு, இருணீங்கி ஒளிபரவாநின்ற அவ்வைகறைப் போதின்கண் துயில்உணரப் பெற்றாராய், அவ்வமயத்தே இல்லத்தே செய்தற்குரிய செயல்களைச் செய்ய விரும்பி எழுந்து கொடிமின்னல் போன்று சிலம்பு முதலியன ஒலிப்ப நடந்து, கதவங்களைத் திறத்தலான் அவை ஒலியாநிற்ப என்பதாம்.

அகலவுரை : குடிப் பிறந்த குலமகளிர் என்பார். இல்லோர் என்றார். இல்லத்துக் கணவன் வாழ்க்கைக்குத் துணையாயிருந்து இல்லறம் நடத்தும் கற்புடை மகளிர் என்றவாறு.

இரவு வர நயந்தோர்
காத லின்றுணை புணர்மார் ஆயிதழ்த்
தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய
நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப  (549-554)

கண்டாமன்றே, அம் மகளிரே எனச் சுட்டாமற் சுட்டுவார் ஆண்டுக்கூறிய நயந்தோர் காதலர் புணர்மார் என்றதற்கேற்ப ஈண்டும், நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி என மறவாதோதும் அருமை அறிந்து இன்புறற் சாலது. அம்மதுரையில் காதலின்பத்தை விழைந்து கோலங் கொண்ட மகளிருள் யாரும் அதுபெறாது இன்னலுற்றார் இலர்போலும். கவவுப் பிணி - நெகிழாது அகப்படத் தழீஇய கை என்க. காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் (சிலப்-61) என்றார் இளங்கோவடிகளாரும். முயக்கிய கைகளை ஊக்கி ன் இவர் நுதல் பசக்கும் என அறிந்த காதலர் அங்ஙனம் தம் கைப்பிணியுள்ளே அவரைத் துயிற்றுதல் இயல்பே யன்றோ! இஃது அவர்தம் காதற் சிறப்புரைத்தவாறு.

இனி, வாழ்க்கைத் துணையாகிய அம் மடந்தையர் தம் கடமைக்கண் உவப்போடு தலைப்படுதலை, அதற்குத் தொடக்கநேரமாகிய வைகறையிலே துயிலுணர்தலானும், வைகறை கண்டு மகிழ்தலானும் உணர்த்தினார். வைகறைப் போதில் துயிலுணர்ந்து இல்லத்திற் செய்யவேண்டிய பணிகளைச் செய்து கணவன் முதலியோர்க்கு உண்டி முதலியன காலத்தே இயற்றிக் கொடுத்தல் குலமகளிர் இயல்பு. இதனைத் தம் ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியை எண்ணி வள்ளுவனார் உரைத்த,

பின்றூங்கி முன்னெழூஉம் பேதையே போதியோ
என்றூங்கும் என்கண் இரா

என்னும் கையறுநிலையானும் காண்க. சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி (நாலடி-363) என்றார் பிறரும். மின்னுக்கொடி-மின்னொழுங்கு; கொடிமின்னல். மின்னுக்கொடி என்றது அம் மகளிரின் அழகுச் சிறப்பையும், இழை தெழிப்ப இயலி என்றது, அவர்தம் செல்வச் சிறப்பையும் உணர்த்தின.

668-677 : உண்டு .................... குழும

பொருள் : உண்டு மகிழ் தட்ட மழலை நாவில் பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற - கள்ளையுண்டு களிப்பினைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்ட மழலை வார்த்தையையுடைய பழைய களிப்பினையுடையாருடைய முழங்குகின்ற குரல்கள் தோன்றாநிற்ப, சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப - நின்றேத்துவார் வாழ்த்த இருந்தேத்துவார் புகழைச் சொல்ல வைதாளிகர் தத்தம் துறைக்குரியனவற்றை இசைப்ப நாழிகை சொல்லுவார் நாழிகை சொல்ல, இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப - பள்ளி எழுச்சி முரசு ஒலிப்ப ஏறுகள் தம்முள் மாறுபட்டு முழங்க, பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப - பொறிகளையுடைய மயிரினையுடைய கோழிச் சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ, யானையங்குருவின் சேவலோடு காமர் அன்னம் கரைய அணிமயில் அகவ - வண்டாழ்ங்குருகினுடைய சேவல்களோடே விருப்பத்தையுடைய அன்னச் சேவல்களும் தமக்குரிய பேடைகளை அழைப்ப அழகிய மயில்கள் பேடைகளை அழைப்ப, பிடிபுணர் பெருங் களிறு முழங்க - பிடியோடே கூடின பெரிய யானைகள் முழங்க, முழு வலிக் கூட்டுறை வயமாப் புலியொடு குழும - மிக்க வலியையுடைய கூட்டிலே உறைகின்ற கரடி முதலிய வலிய விலங்குகள் புலியுடனே முழங்காநிற்ப;

கருத்துரை : மேலும் மேலும் கள்ளையுண்டு களிப்புத் தம்மைப் பிரியாமற் றடுத்துக்கொண்ட மழலைச்சொல்லையுடைய பழைய களிப்பினையுடைய களிமாக்களின் முழக்கந்தோன்றாநிற்ப, சூதர் வாழ்த்த, மாகதர் புகழ, வைதாளிகர் தத்தம் துறைக்குரியவற்றை இசைப்ப, நாழிகை சொல்வார் நாழிகையைச் சொல்ல, பள்ளி எழுச்சி முரசம் முழங்க, ஏறுகள் மாறுபட்டு முழங்க, கோழிச் சேவல் கூவ, வண்டாழ்ங் குருகின் சேவலும் அன்னச் சேவலும் மயிற்சேவலும் தத்தம் பெடைகளை அழைப்ப, பிடியோடே கூடின பெரிய யானைகள் பிளிறக் கூட்டின்கண் உறையும் கரடி புலி முதலிய வல்விலங்குகள் முழங்க, என்பதாம்.

அகலவுரை : ஒருமுறை உண்ட கள்ளின் களிப்பு மாறப்போம் அமய மறிந்து, மீண்டும் கள்ளினைப்பருகி அக் களிப்பினை மாறாதே நிறுத்திக் கொள்ளும் பெருங்களியர் என்பார், உண்டு மகிழ்தட்ட பழஞ்செருக்காளர் என்றார். உண்டு என்றது மேலும் மேலுங் கள்ளைப் பருகி என்றவாறு. கள்ளருந்துவோர் அறிவு மயங்குதல் காரணமாகத் திருத்தமுறப் பேசவியலாது குழறிப் பேசுவரன்றே! அங்ஙனம் பேசுதலையுடையார் என்பார், மழலைநாவிற் பழஞ்செருக்காளர் என்றார். செருக்கு - களிப்பு.

சூதர் - நின்றேத்துவார். மாகதர்-இருந்தேத்துவோர். வைதாளிகர்-வரிக்கூத்துட்பட்ட வேதாளிக்கூத்தினை ஆடுவோர். இதனை, மிக்க மலையாளி வேதாளி வாணி குதிரை சிலையாடு வேடு சிவப்பு எனவரும் அடியார்க்குநல்லார் (சிலப்-அரங்: 24) உரை மேற்கோளானும் உணர்க. நாழிகை சொல்வோரை ஆகுபெயரான் நாழிகை என்றார். நாழிகை நுவல என்றது நாழிகைக் கணக்கர் நாழிகை இனைத்தென்று கூற என்றவாறு. நாழிகைக் கணக்கர் என்பார் அரசனுக்குச் சென்ற நாழிகைக்குக் கவிசொல்வோர் ஆவர். இங்ஙனம் நாழிகை நுவல்தலை.

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரியும் கருவூரா - யாமங்கள்

ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்று  (சிலப்-இந்திர : 49. உரைமேற்)

என்பதனானும் அறிக.

சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர்  (சிலப்-இந்திர : 48-9)

என்றார் இளங்கோவடிகளாரும். முரசு-காலை முரசம்; இதனைப் பள்ளி யெழுச்சிமுரசம் என்ப. காலைமுரசக் கனைகுர லோதையும் (சிலப்-13: 140) என்றார் பிறரும். யானையங்குருகு - சக்கரவாகப்புள் யானையங் குருகின் கானலம் பெருந்தோடு (குறுந்-34:45) கீசுகீசென்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து (திருப்பாவை.7) என்பதும் அது. பிண்டைக் காலத்தே கரடி புலி முதலியவற்றைக் கூட்டில் அடைத்து நகரங்களில் வைத்திருந்தனர் (இக்காலத்தே உள்ள பொருட்காட்சிச் சாலைகள் போன்று) என்பது முழுவலிக் கூட்டுறை வயமாப் புலியொடு குழும என்பதனான் உணரலாம். முழுவலி வயமா, கூட்டுறை வயமா எனத் தனித்தனி கூட்டுக. வயமா -வல்விலங்கு. அவை, கரடி அரிமா புலி முதலியன என்க. குழுமுதல் - முழங்குதல்.

678-686 : வானம் ............................. வைகறை

பொருள் : வானம் நீங்கிய நீல்நிற விசும்பின் - வானம் பிளக்கும்படியாக நீலநிறமுடைய முகிலினிடத்தே மின்னு நிமிர்ந்தனையராகி - மின்னுக் கொடி நுடங்கின தன்மையுடையராய், நறவு மகிழ்ந்து - மதுவையுண்டு, மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த பரூஉக்காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு - மாட்சிமைப்பட்ட பேரணிகலன்களையுடைய மகளிர் கணவரோடே புலந்தனராய், அறுத்த பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடே, பொன்சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன - பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம்போல, அம்மென் குரும்பைக் காய் படுபு பிறவும் - அழகிய மெத்தென்ற இளைதாகிய பச்சைப் பாக்கு விழுந்து முத்தொழிந்த மாணிக்கமும் மரகதமும் பொன்னும் மணிகளும் விழுந்து கிடப்ப, தருமணன் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப - கொண்டு வந்து இட்ட மணலையுடைய அம்முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப, மென்பூஞ் செம்மலொடு நன்கலம் சீப்ப - மெல்லிய பூவாடல்களுடனே நல்ல பூண்களையும் பொறுக்கிப் போகும்படி, இரவு தலைப்பெயரும் ஏம வைகறை -இராக்காலம் தன்னிடத்தினின்றும் போகின்ற எல்லாவுயிர்க்கும் பாதுகாவலாகிய விடியற்காலத்தே;

கருத்துரை : வானம் பிளக்குமாறு நீலநிற முகிலிடத்தே அடங்கும் கொடி மின்னலை ஒத்த தன்மையுடையராய் மதுவை உண்டுகளித்துத் தம் கணவரோடே ஊடிக்கொண்ட மகளிர் அறுத்த பரிய வடத்தின்கண் முத்தும் பிறமணிகளும், பொன்சுடு நெருப்பு நிலத்தே சிந்திக் கிடந்தாற் போன்று சிதறி அவற்றோடு அழகிய மெல்லிய பச்சைப் பாக்கும் விழுந்து மிளிரும் மணலையுடைய முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப வாடற்பூக்களையும் அணிகலன்களையும் பொறுக்கி மீண்டும் அம்மகளிர் அணிந்துகொள்ளும்படி இரவு தன்னிடத்தினின்றும் பெயர்கின்ற பாதுகாவலாகிய விடியற்காலத்தே என்பதாம்.

அகலவுரை : விண் பிளப்பது போன்ற மின்னல் என்பார், வானம் நீங்கிய மின்னு என்றார். நீங்கிய-நீங்க; பிளக்க என்றவாறு. செய்யிய என்னும் வினையெச்சம். நீங்கிய நிமிர்ந்து என இயைக்க. விசும்பு : ஆகுபெயர்; முகில் என்னும் பொருட்டு. இங்ஙனம் பொருள் காணாது ஆசிரியர் நச்சினார்க்கினியர், வானம் நீங்கிய நீல்நிற விசும்பின் என்னும் தொடர்க்கு, ஆகாயம் தனக்கு வடிவின்றென்னும் தன்மை நீங்குதற்கு மேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே என்று உரை விரித்தார். மேலும் இனிச் செக்கர் வானம் போன விசும்பென்பாரும் உளர் எனக் குறித்தனர். முன்னர் கவவுப்பிணியிற் கூடி இனிது துயில் கொண்ட மகளிர், கண்பொரா எறிக்கும் மின்னுக் கொடி புரைய மென்மெல இயலுதலைக் கூறிய புலவர் ஈண்டு ஊடிய மகளிர் பெற்றியை எடுத்துரைக்கின்றார். என்னை?

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கு மாறு  (குறள் - 1321)

என்றும்,

புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னாற் அகத்து  (குறள்-1323)

என்றும்,

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் (குறள்-1330)

என்றும் இன்பத்துப்பால் ஊடலின்பத்தை ஓதுதல் காண்க. நறவு மகிழ்ந்து - கள்ளைப் பருகி. காழ் - வடம். காழ் ஆரம்: இரு பெயர் ஒட்டு; காழாகிய ஆரமென்க.

கரியும் தழலும் பொன்னுமாகப் பன்னிறம்படச் சிந்திக் கிடக்கும் பொன்சுடு நெருப்புப் போன்று பன்னிற மணிகள் முத்தமொடு சிந்திக் கிடக்கும் முற்றம் என்க. படுபு என்னும் எச்சத்தைப் பிறவும் என்பதன் பின்னாக மாறுக; காயும் பிறவும் படுபு என. தருமணல்-கொணர்ந்து போகட்ட மணல் முற்றத்திற்கு மணல் கொணர்ந்து பரப்புதல் மரபு. இதனை, பழமணன் மாற்றுமின் புதுமணற் பரப்புமின் (1:51) என்னும் மணிமேகலையானும் அறிக. அரிஞிமிறு என்பன வண்டின் வகை. ஞிமிறு ஆரவாரிப்ப நன்கலத்தைச் சீப்பர் என்க. புலந்து வீசிய மலர் மாலையும் ஆண்டுக் கிடத்தலின் அவற்றிற் படிந்த வண்டு நன்கலம் சீக்கும்போது ஆரவாரித்த வென்க. சூடிக்கழித்த பூவென்பார் செம்மல் என்றார், செம்மல்-வாடற்பூ. குயில் குடைந்துதிர்த்த புதுப்பூஞ் செம்மல் (5) என்றார் சிறுபாணாற்றுப்படையினும், தலைப்பெயர்தல் - இடத்தினின்றும் அகலுதல். இராக்காலம் உலகின் நீங்குதல் வைகறைப் போதாகலின் இரவுத்தலைப் பெயரும் வைகறை என்றார். எல்லாவுயிர்களையும் அவ்வவற்றிற்குரிய வினைகளின் ஈடுபடுத்தி அவையிற்றிற்கு உணவு முதலியன கிடைக்கச் செய்தலின் ஏம வைகறை என்றார்.

இனி 654-போது என்பது தொடங்கி 686-வைகறை என்னுந் துணையும் தொடர்ந்த இத்தொடரின் பொருளை, அந்தணர் வேதம் பாட, யாழோர் மருதம் பண்ணக் காழோர் கைப்ப, புரவி தெவிட்ட, கடை மெழுக்குறுப்ப, கள்ளோர் நுவல, இல்லோர் இயலிக் கதவம் கரைய, பழஞ் செருக்காளர் குரல் தோன்ற, வாழ்த்த நுவல இசைப்ப, சிலைப்ப, இயம்ப, கரைய, அகவ, முழங்கக் குழும ஆர்ப்பச் சீப்பப் பெயரும் வைகறை என இயைபு காண்க.

மதுரை மாநகரம்

687-699 : மைபடு ..................... மதுரை

பொருள் : மைபடு பெருந்தோள் மழவர் ஒட்டி இடைப் புலத்து ஒழிந்த ஏந்துகோட்டு யானை - பிறர் தோள் குற்றப்படுதற்குக் காரணமான பெரிய தோளையுடைய மழவரைக் கெடுத்து அவர் விட்டுப் போகையினாலே போர்க்களத்தே நின்ற ஏந்தின கொம்பினையுடைய யானைகளும், பகைப் புலம் கவர்ந்த பாம்பரிப்புரவி-பகைவர் நாட்டிலே கைக்கொண்டு வந்த பாய்ந்து செல்லும் செலவினையுடைய குதிரைகளும், வேல் கோலாக ஆள் செலநூறிக் காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர் ஊர் சுடு விளக்கில் தந்த ஆயமும்-தம் கையில் உள்ள வேலே ஆனோட்டும் கோலாகக் கொண்டு, ஆண்டு நிரை காத்திருந்த வீரரை மாள வெட்டி எரிகின்ற சினத்தை யுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய ஆயக்கரையில் இருந்த வேட்டுவர் பகைவருடைய ஊரைச் சுடுகின்ற விளக்கிலே அடித்துக்கொண்டு வந்த பசுத்திரளும், நாடுடை நல் எயில் அணங்கு உடைத் தோட்டி - அகநாட்டைச் சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும், நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி நாள் தர வந்த விழுக்கலம் - நாள்தோறும் தமக்குச் செல்வம் மிகும்படியாகக் கையால் தொழுது வாழ்த்தி நாட்காலத்தே திறையாகக் கொண்டுவர வந்த சீரிய கலங்களும், அனைத்தும் - அத்தன்மையன பிறவும், கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்தாங்கு அளந்து கடையறியா வளம் கெழு தாரமொடு - கங்கையாகிய அழகிய பெரியாறு ஆயிரமுகமாகக் கடலிலே சென்றாற்போல அளந்து முடிவறிதல் செல்லாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடே, புத்தேள் உலகம் கவினிக் காண்வர - தேவருலகம் போன்று பொலிவெய்தி பிறநாட்டினர் அளாவிக் காணுதல் உண்டாக, மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை-மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பை யுடைய மதுரையின்கண்;

கருத்துரை : பெருந் தோளையுடைய மழவரைக் கெடுத்தமையான் அவர் போர்க்களத்தே விட்டொழிந்த யானைகளும், பகைவர் நாட்டிலே சென்று கைக்கொண்டு வந்த விரைந்த செலவினையுடைய குதிரைகளும், கூளியர் பகைவர் நாட்டிற் புகுந்து ஆண்டு ஆநிரை காத்திருந்த வீரரை வெட்டிக்கொன்று அவர் ஊரைச் சுட்டு அவ்விளக்கிலே தம் வேலையை கோலாகக் கொண்டு அடித்துக்கொண்டு வந்த பசுத்திரளும், தாம் வாழும் பொருட்டுத் தம்மைக் காக்கும்படி கையாற் றொழுது வாழ்த்தி நாட்காலத்தே திறையாகக் கொணரப்பட்ட பொருளும், பிறவும் கங்கையாறு கடலிற் பலமுகமாகப் புகுதுமாறு வந்து புகுதலானே வளப்பத்தை அளந்து முடிவு காண்டற்கியலாத அரும் பண்டங்களோடே தேவருலகம் போன்று பொலிவுபெற்று உலகெலாம் புகழ் பரப்பிய சிறப்பிற்றாய மதுரை யிடத்தே என்பதாம். (மதுரையிடத்தே இனிதுறைமதி பெரும-என நூலிறுதியிற் சென்று முடியும்).

அகலவுரை : மழவர் - சிலவீரர். மைபடு பெருந்தோள், என்றதற்கு கருமைபோன்று கரியவாகிய தோளையுடைய எனினுமாம். மழவர் தோற் றோடுவார் விட்டுப்போன யானைகளும் என்றமையால் இவர் யானைப் படையை மிகுதியாக உடையர் என்பது போதரும். முன்னர் (395-6) தீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர் பூந்தலை முழவு என இவ்வாசிரியர் கூறியிருத்தல் அறிக. உருவக் குதிரை மழவர் (அகம்-1 : 2) என்றார் பிறரும்.

இம் மழவர் தம்பால் வலிந்து போர்க்கு வந்து தோற்றோடினர் என்பது தோன்ற இடைப்புலத்து ஒழிய என்றார்; இது தும்பைப் போர் கூறிற்று, என்னை?

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலையழிக்கும்  (தொல்-புற. 15)

சிறப்புரைத்தமையான். பகைப்புலம் கவர்ந்த பாய்பரிப் புரவி என்றது, உழிஞைப் போர் கூறியவாறு. என்னை? பகைவர் நாட்டிற் சென்று கவர்தல் முழுமுதலரணம் முற்றலுங் கோடலும் அஃதாகலான். வேல் கோலாகத் தந்த ஆயம்,விளக்கிற் றந்த ஆயம், எனத் தனித்தனி கூட்டுக. ஆள்-ஆண்டு ஆன் காவல் செய்திருந்த வீரர். ஆயம்-ஈண்டுப் பசுத்திரள். இது, வெட்சிப்போர் கூறிற்று. என்னை?

வேந்து விடுமுனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்தோம்பன் மேவற் றாகும்  (தொல்-புறத்-2)

என்பதோத்தாகலான். இதன்கண் ஆள் செல நூறி ஊர் சுடு விளக்கில் என்றது, வெட்சித் திணைக்கண் ஊர்க்கொலை என்னும் துறையாம். ஆ கவர்வோர் ஆண்டுள்ள வீரரை வளைத்துக்கொண்டு கொல்லலும், பகைவர் ஊரைத் தீக்கொளுவுதலும் மரபு. இதனை,

அரவூர் மதியில் கரிதூர வீம
விரவூர் எரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற
பல்லான் தொழுவும் பகற்காண்மார் போர்கண்டார்
கொல்வார்ப் பெறாஆர் கொதித்து  (தொல்-புறத்-3. மேற்கோ நச்.)

என்பதனானும் அறிக.

நாடுகெட எரிபரப்பி என இவ்வாசிரியர் முன்னும் கூறிப்போந்தமை காண்க. கூளியர் - மறவர். கொடுவிற் கூளியர் (மலைபடு-421) என்றும் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் (புறம் 23:5) என்றும், பிறரும் கூறுதல் காண்க. இக் கூளியரை, ஆயக் கரையில் இருந்த வேட்டுவர் என்பர் நச்சினார்க்கினியர். ஆயக்கரை - ஆயத்துறை; சுங்கம் கொள்ளுமிடம். நாட்டின் எல்லையில் இருக்கும் படைஞர் என்றபடி. நாடுடை நல்லெயில் அணங்குடை தோட்டி என்றது பகைவர் அரண்களின் கதவுகளை; கதவுகளைக் கொணர்தல் வெற்றியின் அறிகுறியின் பொருட்டென்க. இங்ஙனம் நான்கு திசைகளினும் போரிற் கவர்ந்த பொருளும், திறையாக வரும் பொருளும் இடையறாது வந்து மதுரையிற் புக்க வண்ணமே இருத்தலின் அப் பண்டங்கள் வரையறை செய்யப் படாதனவாயின. கங்கையாறு மலைவளங்களை வரன்றிக்கொண்டு இடையறாது பல முகமாகக் கடலிற் புகுதலின், இப் பொருள் வருவாய்க்குக் கங்கைப் பேரியாற்றின் நீரொழுக்கை உவமித்தார். தாரம் - பண்டம். புத்தேள் உலகம் கவினிக், காண்வர என்ற தொடரை, புத்தேள் உலகம் காண்வரக் கவினி என மாறிக்கூட்டி தேவருலகம் காணுதல் உண்டாகத் தான் அழகைப் பெற்று என்பர் நச்சினார்க்கினியர். பெரும் பெயர் - என்றதற்குப் பெரும் பொருள் என்று பொருள்கூறி அதுவீடு என்றார். இனி, 331 - பாடல் சான்ற, என்பது தொடங்கி இதுகாறும் உட்பிரிவுகள் பலவுடைத்தாய்த் தொடர்ந்த இத் தொடரினை,

பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய், வையைத் துறைதொறும் பாணிருக்கையை உடைத்தாய், கிடங்கும் புரிசையும், வாயிலும் நல்லில்லும் உடைத்தாய், தெருவில் இசைஒலிப்ப இருபெரு நியமத்தில், நாடு துவன்று விழவின் நாடார்த்தாற் போன்று நாளங்காடியில் கம்பலை எழ, அல்லங்காடிக் கம்பலை புள்ளின் இசை யெழுந்தாற்போல எழ, ஞாயிறு குன்றம் சேர மாலை புகுந்து நீங்க, முந்தை யாமம் சென்ற பின்றை, மற்றை யாமம் கழிப்பி, வைகறையிலே அனைத்தும் கங்கையாறு கடற் படர்ந்தாங்கு அளந்து முடிவறியாப் பண்டங்களோடே கவினிப் புகழ்பெற்ற, மதுரை என அணுகக் கொண்டு காண்க. மதுரை நகரின் வளங்கூறும் இதனானும் யாதொன்றும் நிலையாதென்னும் குறிப்பே தோன்ற யாமங்கள் ஒன்றன் பின் னொன்றாய் நிலையின்றிக் கழிதலே கூறிய நுணுக்கம் அறிக. இனி, 700-முதல் நூன்முடியுந் துணையும் (782) ஒரு தொடர். இதன்கண் ; இதுகாறும் குறிப்பானும் வெளிப்படையானும், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, முதலிய நிலையாமைகளையே கூறிவந்த புலவர் பெருமான் இனி, நில்லாத இவ் உலகத்தே, நிலையுதலுடைய வீடு பெறுமாறு பற்றற்று வாழும் வகையைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறிதொன்று புகல்வார் போன்று மிக நுணுக்கமாகவும் குறிப்பாகவும் கூறுகின்றார்.

வீட்டு நெறியை விலக்காத இம்மை இன்பம் காதற் பேரின்ப நுகர்ச்சி

700-சினைதலை என்பது தொடங்கி, 714- எழுந்து என்னுந் துணையும் ஒரு தொடர்.

700-714 : சினைதலை .......................... எழுந்து

பொருள் : சினை தலை மணந்த சுரும்புபடு செந்தீ ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில்-கொம்புகள் தம்மில் தலைக்கூடின சுரும்புகள் உண்டாகின்ற செந்தீப்போலும் ஒள்ளிய பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலிடத்தே, சுடர் பொழிந்து ஏறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதிர் இளவெயில் தோன்றி அன்ன -ஒளியைச் சொரிந்து குடமலையிலே போக விளங்குகின்ற கதிர்களையுடைய ஞாயிற்றினுடைய விளங்கும் கதிர்களின் இளவெயில் தோன்றினாலொத்த, தமனியம் வளைஇய தாவில் விளங்குஇழை-பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்று விளங்குகின்ற பேரணிகலன்களாலே, நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து - நிலம் விளக்கமடையா நிற்பக் கற்புடைமையால் மேன்மைதகப் பொலிவுற்று, மயில் ஓர் அன்ன சாயல் மயிலோடு ஒரு தன்மைத்தாகிய மென்மையினையும், மாவின் தளிர் ஏர் அன்ன மேனி -மாவின் தளிரினது அழகையொத்த நிறத்தினையும், தளிர்ப் புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் - தளிரினது புறத்தில் ஈர்க்குப் போலத் தோன்றிய திதலையையும் உடையராய், கூர் எயிற்று ஒண்குழை புணரிய வண்தாழ் காதின் -கூரிய எயிற்றினையும் ஒள்ளிய மகரக்குழை பொருந்திய வளவிய காதினையும், கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் தாதுபடு பெரும்போது புரையும் வாண் முகத்து - கடவுட்டன்மையையுடைய பொற்றாமரைக் குளத்தின்கண் நெருங்கின நெருப்புப்போலும் இதழ்களையுடைய தாமரையினது தாதுண்டாம் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும், ஆய்தொடி மகளிர் - நன்றாக ஆராய்ந்த தொடியினையும் உடைய மகளிருடைய, நறுந்தோள் புணர்ந்து - நறிய தோளை முயங்கி, கோதையிற் பொலிந்த சேக்கை துஞ்சி - தூக்கு மாலைகளாற் பொலிவு பெற்ற படுக்கையிலே துயில் கொண்டு, திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து - சூதர் இனிய இசையான் ஏத்தித் துயிலெடுத்தலானே திருந்திய உறக்கத்தினின்றும் இனிதாக எழுந்து;

கருத்துரை : மலர்ந்த அசோகம் பூம்பொழிலிலே அந்திமாலைப் போதின்கண் ஞாயிற்றின் இளங்கதிர் பரவுமாறுபோல பொன்னின் ஒளி தழுவப்பட்ட விளங்கும் தம்மொளியைப் பரப்பி நிலத்தை விளக்கும் அணிகலன்களையும், மயிலை ஒத்த சாயலையும், மாந்தளிரை ஒத்த நிறத்தினையும், மாந்தளிரின் புறத்தில் ஈர்க்கை ஒத்த திதலையையும், கூர்த்த எயிற்றினையும், கடவுட்டன்மையுடைய பொற்றாமரைக் குளத்தின் மலரும் பெரிய தாமரைப்பூவை ஒத்த முகத்தினையும், வளையலினையும் உடைய மகளிருடைய நறிய தோளை முயங்கித் தூக்குமாலைகளாற் பொலிவு பெற்ற படுக்கையிலே துயில்கொண்டு வைகறையிற் சூதர் இசையாற் றுயிலுணர்த்த இனிதே எழுந்து, என்பதாம்.

அகலவுரை : மலர்ந்த அசோகம் பொழிலிலே இளவெயில் படர்ந்து அப்பொழிலின் மலர்தளிர் முதலியவற்றை விளக்கம் செய்து மேலும் நிலத்தையும் ஒளிரச் செய்வது போன்று, மணிகள் இழைத்த அணிகலன்களின் மேல் பொன்னின் ஒளிபடர்ந்து அவ்வணிகட்கு அழகின் மேல் அழகு செய்து அப் பொன்னொளியும், மணியொளியும் விரவி நிலத்தையும் விளக்கமடையச் செய்யாநிற்ப, என்க.

தமனியம் - பொன்னொளிக்கு ஆகுபெயர். மணியணிகலன் அணிந்த மகளிர்க்கு மலர்ந்த அசோக மரம் உவமை என்க. நச்சினார்க்கினியர், பொழிலிடத்தே இளவெயில் தோன்றினாலொத்த மகளிர் என்றும், என்றது பூத்த அசோகம் பொழிலிடத்தே இளவெயில் எறித்தாற்போலப் புணர்ச்சியாற் பெற்ற நிறத்தையுடைய மகளிர் என்க என்றும் கூறியுள்ளார். மேலும் நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து என்று இயைத்து நிலத்தை எல்லாம் விளக்கமுறுத்தும்படி கற்பு மேம்படப் பொலிவு பெற்று என்பர். மயிலோரன்ன சாயல் என்புழி, ஓர் : அசையுமாம். சாயல் மென்மைத்தன்மை, அஃதாவது: இற்றென எடுத்துக்காட்ட வியலாத தாய் மனனுணர்வால் நுகர்தற்குரியதாய் மகளிர்பாற் கிடக்கும் மென்மை. மா-மாமரம். ஏர் - அழகு. மாந்தளிர் - மகளிர் மேனியின் நிறத்திற்கு உவமை. ஈர்க்கு-மாவினது தளிரின்கட் படர்ந்துள்ள நரம்பு. ஈர்க்குப் புறக்காழனவாகிய புல்லொடு வரும் மரபிற்றாகவும் ஈண்டு அகக்காழுடைய மாந்தளிர் உறுப்புக்காயது உவம ஆகுபெயர் என்க; என்னை?

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழேபாலை என்றா
ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்  (தொல்-மரபு 86)

என்பது ஒத்தாகலான். இனி இதனை வழுவமைதியாக்கினுமாம். ஈன்றவள் திதலைபோல் ஈர்பெய்யும் தளிரொடும் (32:7) என்றார் கலியினும். திதலை-தேமல்; சுணங்கு. வண்டாழ் காது - வளவிய தாழ்ந்த காது. புணரிய-புணர்ந்த. குழை - காதணிகலன். கடவுட்கயம் என்றது, மதுரையிற் பொற்றாமரைக் குளத்தை. தன்கட் டோய்வார், தீவினை கழுவும் தீர்த்தம் என்பார் கடவுட் கயம் என்றார். முட்டாள சுடர்த்தாமரை (249) என முன்னும் கூறினார். பெரும்போது - பெரிய பூ. அமன்ற - செறிந்த. புணர்ந்து பின்னைத் தனியே துயிலுதல் இயல்பென்பது தோன்றப் புணர்ந்து துஞ்சி என்றார் என்பர் நச்சினார்க்கினியர். சூழ மலர்மாலைகள் நாற்றி ஒப்பனை செய்யப்பெற்ற உயரிய படுக்கையில் என்பார், கோதையிற் பொலிந்த சேக்கை என்றார். தொழில் செய்திளைத்த புறக்கருவி அகக்கருவிகள் இளைப்புத்தீர்ந்து மேலும் தொழில் செய்தற்குத் தகுதியாகத் திருத்தமடைதற்குக் காரணமான நல்லுறக்கம் என்பார், திருந்து துயில் என்றார்; கனா மருவாத நல்ல துயிலுமாம். துயில் எடுப்ப என்றது, சூதர் இசைபாடித் துயிலுணர்த்த என்றவாறு. என்னை?, வைகறையாமத்தே அரசர்கள் துயிலுணர்ந்தெழுதற் பொருட்டுச் சூதர் இன்னிசைபாடுதல் மரபாகலின், இதனை, சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் என்னும் புறத்திணைத் துறையானும் உணர்க. செல்வத்தை நினைந்து இன்புறுகின்ற பற்றுள்ளம் உறக்கத்தை உணர்த்துகையினாலே என்பர் நச்சினார்க்கினியர். மேலும் என்றது - தன் செல்வம் இடையறாதொழுகுதற்கு வேண்டும் காரியங்களை மனத்தானாராயவேண்டுதலின் துயிலெடுப்புக்கு இது காரணமாயிற்று; வைகறையாமந் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறனும் ஒண்பொருளும் சிந்தித்து, என்றார் ஆசாரக் கோவையில் என விளக்கமும் கூறியுள்ளார்.

இவையிற்றை உனக்குப் பால்வரை தெய்வமே அளித்திருத்தலான் ஏற்று நுகர்க! நுகருங்கால் யான் எனதென்றும் செருக்கின்றி நுகர்ந்திருக்கக் கடவை. நிலையாதனவாகிய இவ்வின்பம் வினைக்கீடாக வருதலான் அவை ஏற்று நுகரற்பாலன. முனைப்பின்றி மெய்யுணர்ச்சியோடே நுகர்தல் வேண்டும் எனப் பற்றின்றியும் இன்ப நுகர்ச்சி கூறிக் காட்டியவாறு. என்னை?

சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகில்
சருவசங்க நிவர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவு சிவரன்றோ
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள் அரி வையரோடு
அநுபவித்து அங்கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்
நுழைவர்பிறப் பினின் வினைகள் நுங்கிடாவே

என்பதனான், கருவி கரணங் கடந்த அதீத நிலையுற்றாரும் உண்டுடுத்துப் பூசி முடித்து உலகத்தார்போல் வாழினும் அகப்பற்றற்றிருக்கும் உண்மையை உணர்த்தியவாறு.

715-724 : திண்காழ் ..................... உருவினையாகி

பொருள் : திண் காழ் ஆரம் நீவிக் கதிர் விடும் ஒண்காழ் ஆரம் கவைஇய மார்பின் - திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி ஒளிவிடும் ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பிலே, வரிக்கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப - வரியை உடைய பின்பகுதியையுடைய தேனினமும் மற்றும் மொய்க்கப்படுவனவாகிய வண்டு முதலியனவும் மொய்ப்ப எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியல் - கழுத்தினிடத்தினின்றும் தாழ்ந்த விரவுதலையுடைய பூமாலையினையும், பொலஞ் செயப்பொலிந்த நலம்பெறு விளக்கம் வலி கெழு தடக்கைத் தொடியோடு சுடர்வர - பொன்னாற் செய்கையினாலே பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம் வலிபொருந்தின பெரிய கையில் வீரவளையோடு விளக்கம் வர, சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்-சோறு தன்னிடத்தே பொருந்துதலுற்ற நீரையுடைய துகிலை, உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ - உடைக்கு மேலணியும் அணிகலன்களாலே பொலிவுறுமாறு தாழ்வின்றாக உடுத்து, வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகு இயன்றன்ன உருவினை ஆகி - சிற்பத் துறை வல்லோன் பண்ணி எழுதிக் கைசெய்த பாவையிடத்தே முருகன் அதிட்டித்தாற் போன்ற தன்மையை உடையை ஆகி;

கருத்துரை : சந்தனத்தைப் பூசிமுத்து வடம் சூழப்பெற்ற மார்பிலே வண்டுகள் மொய்க்கும் மலர்மாலைகளும் கைகளிடத்தே பொன்னாற் செய்த மோதிரமும் வீரவளையல்களும் பொருந்தி விளங்காநிற்ப, நன்கு கஞ்சியிட்டு ஒலித்த கலிங்கத்தை உடையின் மேலணியும் மரபினவாகிய அணிகலன்களோடே அழகுற உடுத்துச் சிற்பக்கலை வல்லோனாற் செய்து எழுதிக் கை பாவையிடத்தே முருகன் அதிட்டித்தாற் போன்ற தன்மையை உடையையாகி என்பதாம்.

அகலவுரை : இதன்கண் உடலின் நிலையாமை அறிந்தும் ஊழ் பகுதியாலே அது தன்பால் நிற்குந்துணையும் அதன்பாற் பற்றின்றி அதனைப் போற்றிப் புனையுமாறு கூறப்படுகின்றது. உடலை அழகு செய்தற்குப் பூசுவன பூண்பன உடுத்துவனவாகிய பொருள்கள் இன்றியமையாதனவாகலின் நிரலே சந்தனம் முத்துவடம் கலிங்கம் மூன்றனையும் சிறப்புப் பற்றி எடுத்தோதினார். ஓதினாரேனும், உடற்கு வேண்டிய எல்லாப் பொருள்களானும் அதனை நன்றாக அழகு செய்து என்றல் கருத்தாகக் கொள்க. கடவுளாகிய முருகன் தான் அறிவுப் பொருளும் வியாபகப் பொருளும் ஆதல் நன்கு அறிந்தேயும் தன் தகவுக் கேற்பச் சிற்பியாலியற்றி அழகு செய்யப்பட்ட வடிவத்தே நின்று அடியார்க்குக் காட்சியின்பம் நல்கி அருளுமாப்போலவும் அவன் தான் ஏறிய பாவை அழியுங்கால் தனக்கு அழிவின்மையை உணர்ந்தவனாய் அவ்வுருவத்திற் பற்றின்றியும் உவந்து விளையாடுமாறு போலவும் அம் முருகன் உருவத்தினின்று விளையாடுதல் தன் பொருட்டன்றி உயிர்களின் பொருட்டே ஆதல் போன்றும், நீதானும் உனது உயிரியல்பினை இப் பாசவியல்பின் வேறாக உணர்ந்து கொண்டனையாய், உன் தகுதிக்கேற்ப ஊழாகிய சிற்பியாலியற்றிக் கை செய்தளிக்கப்பட்ட பாவையாகிய இவ்வுடலின் கட்பற்றின்றியும் உவந்திருந்து நினக்கேதும் பயன் கருதாமல் நின் கடமையாகிய அரசியலைப் பிறர்நலத்தின் பொருட்டு ஊக்கத்துடன் இயற்றி வாழக்கடவை; அங்ஙனம் வாழ்தலே உயர்நிலை உலகம் இவணின் றெய்தும் உண்மை நெறியாம் என்பது தோன்ற வல்லோன் கைஇய வரிப்புனை பாவை முருகியன் றன்ன உருவினை யாகி என்றார். இதன் அருமையைப் பன்முறையும் உன்னிஉன்னி இன்புறல் வேண்டும் இந் நுணுக்கத்தை ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறிற்றிலர். அவர், என்றதனால் நாட்காலையில் அரசர்க்குரிய கடன்கள் கழித்துத் தெய்வ வழிபாட்டோடிருந்தமை கூறினார், என்பர்.

விளக்கம்-மோதிரம். வரிக் கடைப் பிரசம் என்றது, பின் பகுதியிலே வரிகளையுடைய வண்டுகள் என்றவாறு. பிரசம் - தேன்; வண்டில் ஒருவகை. பிரசமும் மூசுவனவும் மொய்ப்ப என்க. மூசுவன-மொய்க்கும் இயல்புடைய ஏனை வண்டுகள். சோறமைவுற்ற நீர் என்றது கஞ்சியை. ஆடைக்குக் கஞ்சியிடுதல் மரபு. கலிங்கம் - ஆடை. உடையணி-உடையின் மேல் அணியும் மரபிற்றாய அணிகலன். கவைஇ-உடுத்து. வல்லோன் - சிற்பத்துறை வல்ல கலைஞன். பாவை - முருகனுக்குரிய படிவம்; அஃது அணிமயிலின்மேல் வள்ளிதெய்வ யானையாருடன் ஆறுமுகமும் பன்னிருதோளும் பிறவும் உடைத்தாக வீற்றிருக்கப்பெற்ற திருவுருவம். இத்தகைய தெய்வவுருவத்தைத் தனதாக ஏற்று முருகன் உறைவன் என்க. முருகு-முருகன். இது, யான் என்னும் உடற்பொறையின் நிலையாமை யுணர்ந்தும் அது ஊழ் வரையறையாற் றனதாந்துணையும் அதன்கட் பற்றின்றிப் போற்றி மகிழும் தன்மை கூறிற்று. இனி, அவ்வுடலின்கண் இருந்து ஊழ்தரும் கடமைகளைச் செவ்வன் ஆற்றும் முறை கூறுகின்றார்.

725-736 : வருபுனல் ................. தம்மின்

பொருள் : வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து ஒன்னார் ஓட்டிய செருப் புகல் மறவர் - மிக்குவருகின்ற யாற்று நீரிடத்துக் கல்லணை நின்று தாங்கினாற் போலத் தம் படையைக் கெடுத்து மிக்குவருகின்ற பகைவர் படையை நடுவே தவிர்த்து அவரைக் கெடுத்த போரைவிரும்பும் படைத்தலைவர், வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த - வெற்றியைப் பொருந்தின நின்று முயற்சியின் வெற்றியை வாழ்த்தா நிற்ப வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின் மாதாங்கு எறுழ்த் தோள் மறவர்த் தம்மின் - வில்லை நிரம்ப வலிக்கையினாலே தன்னுள்ளே அடக்கிக்கொண்ட அம்பின் விசையைத் தாங்கும் மார்பினையும், குதிரையைச் செலுத்தி வேண்டும் அளவிலே பிடிக்கும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின், கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின் - கற்றரையைக் பொளிந்து பண்ணின ஒடுங்கிய நீர்வரும் வாயையுடைய கிடங்கினையுடைய முழு முதலரணத்தே நின்று வருந்தின மறச் செல்வத்தையுடையாரைக் கொணர்மின், கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஒவில கறங்க - மாறுபாட்டை ஏற்றுக் கொல்லுதற் றொழிலையுடைய ஏற்றினது செவ்வித்தோலை மயிர் சீவாமற் போர்த்த பெரிய கண்ணையுடைய முரசம் மாறாமல் நின்று ஒலியா நிற்ப, எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்-நெருப்பு நடந்தாற் போன்ற பகைவர் படைக்கு நடுவே சென்று, பெருநல் யானை போர்க்களத்து ஒழிய-பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே பட வெட்டி, விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் -சீரிய புண்ணாலே வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;

கருத்துரை : பெருக்கெடுத்து வருகின்ற பேரியாற்று வெள்ளத்தைக் கல்லணை நின்று தாங்குமாறு போலே தம் படையைக் கெடுத்து மேல் வருகின்ற பகைவர் படைக்கு முன்னின்று அவரைக் கெடுத்த போர் விருப்பமுடைய படைத்தலைவர் வாள்வெற்றி பொருந்தின நினது முயற்சியின் வெற்றியை வாழ்த்தாநிற்ப, வில்லை மிக்கு வளைத்தேவுதல் காரணமாகத் தன்பால் மிக்க விசையுடைத்தாய் வரும் அம்பையும் தாங்கும் மார்பினையும், குதிரையை விரையச் செலுத்தித் தமக்கு வேண்டுமிடத்தே பிடித்து நிறுத்தும் வலியையுடைய தோளினையும், உடைய மறவரை அழையுங்கோள், கல்லை இடித்துச் செய்த சுருங்கிய நீர் வரும் வாயையுடைய முழுமுதலரணத்தே நின்று வருந்திய மறச் செல்வரை அழையுங்கோள், கொலைத் தொழிலையுடைய ஏற்றின் செவ்வித் தோலை மயிர்சீவாது போர்த்த வீரமுரசம் மாறாதே முழங்காநிற்ப, நெருப்பு நிமிர்ந்தாற் போன்றபகைவர் படையின் நடுவே சென்று பெரிய களிற்றி யானைகளை வெட்டிக்கொன்று விழுப்புண் பட்டாமையான் வீழ்ந்த மறவரை அழையுங்கோள்! (என வரையா வாயிற்செறா அது இருந்து என்று 748 ஆம் அடிக்கட் சென்று முடியும்) என்பதாம்.

அகலவுரை : வருபுனல் கற்சிறை கடுப்ப இடையறுத்து ஒன்னார் ஓட்டிய செருப்புகன் மறவர் என்றது, வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும், (தொல்-புறத்: 8) என்னும் வஞ்சித் திணையிற்றுறை கூறிற்று. ஆசிரியர் தொல்காப்பியனார், மொழியையும் இவ்வடிக்கண் மாங்குடி மருதனார் பொன்னே போற் போற்றி யுரைத்தமை காண்க. தன் படை நிலையாற்றாது பெயர்ந்த வழி விசையோடு வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற் போலத் தன் மேல் வரும் படையினைத் தானே தடுத்த மறப்பெருமை என்பது அத் துறையின் பொருளாம்;

கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன்
தார்ப்பற்றி யேர்தரு தோணோக்கித்-தார்ப் பின்னர்
ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்
தேர்க்குழா நோக்கித் தன்மாநோக்கிக் - கூர்த்த
கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக்
கிணைவனை நோக்கி நகும்  (தகடூர்யாத்திரை : புறத்திரட்டு -881)

என்பதூஉம்,

வேந்துடைத் தானை முனைகெட நெரிதலின்
ஏந்துவாள் வலத்த னொருவ னாகித்
தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்
காழி யனையன் மாதோ என்றும்
பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்
புரவிற் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே  (புறம்-330)

என்பதூஉம், அத்துறைக்கு எடுத்துக் காட்டுக்கள்.

இனி, இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறிய அகலம் வருமாறு; வஞ்சித்துறை கூறினார்; இது கூறவே முன்னர் மாராயம் பெற்றவர்களே இப்போரைச் செய்வரென்பது ஆண்டுப் பெற்றாமாகலின் இவர்கள் ஏனாதிப்பட்டம் முதலிய சிறப்புப் பெற்ற படைத்தலைவர் என்பது பெற்றாம், என்பது. இதன்கண் நச்சினார்க்கினியர் ஆண்டு என்று சுட்டியது தொல்காப்பியத்தில் என்றவாறு ஆண்டு முன்னர் மாராயம் பெற்றவனே பின்னர் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க, என இவர் உரை கூறிப் போந்தமையான் இங்ஙனம் கூறினர். மாராயம் - வேந்தனால் செய்யப்பெறும் சிறப்பு. ஏனாதிப்பட்டம் என்பது அரசர் வீரர்க்கு அளிக்கும் ஒரு பட்டம்; இதனை,

போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர்
ஏனாதிப் பட்டத் திவன் (தொல்-புறத்-8.மேற்கோள்)

என்பதனானும், என்னை? ஏனாதி மோதிரஞ் செறித்த திருவுடையான் ஒருவன் ஏனாதி மோதிரஞ் செறிக்கும் அத்திரு அவன் செறிக்கின்ற பொழுதே உண்டாயிற்றன்று, (2-உரை) என வரும் இறையனார் களவியலுரையானும், சேனாதிபதி ஏனாதியாயின சாத்தன் சாத்தற்கு என்னும் வேள்விக்குடிச் சாசனத்தானும் அறிக. வெற்றியைப் பாராட்டி வாழ்த்தற்குரியார் வீரரே யாகலான் மறவர் நின் வலம் வாழ்த்த என்றார்.

அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையும்
ஆணணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்து வயவர் ஏத்த  (சிறுபாண். 210-12)

என்றார் பிறரும். ஒன்னார்-பகைவர். கவைஇக் கணை - என்றதனைக் கவைஇயதனால் விசையேற்ற கணை, என ஏதுப் பொருட்டாய மூன்றனுருபும் பயனும் விரித்தோதுக. கணையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. மாதாங்குதலாவது, மிக்க விசையுடன் குதிரையைச் செலுத்தித் தாம் வேண்டுழி ஞெரேலென நிறுத்த வல்லுநர் ஆதல்; இச் செயல்தோளாற்றன் மிக்கார்க்கே இயல்வதாகலின் மாதாங்கு எறுழ்த்தோள் என்றார். நிமிர்பரிய மாதாங்கவும் .......... வலியவாகும் நின் தாள்தோய் தடக்கை (புறம்-14) என்றார் பிறரும். எறுழ்-வலி; எறுழ் வலியாகும் (உரி-90) என்பர் தொல்காப்பியனார்.

இது தும்பையிற் குதிரைநிலை கூறிற்று; கணைதாங்கு மார்புகூறவே கணை துணையுற மொய்த்தலும் கூறிற்று எனத் துறை கூறினர் நச்சினார்க்கினியர். அஃதாவது, தானை யானை குதிரை யென்ற நோனாருட்கும் மூவகை நிலையும் (தொல்.புற-17) என்னுந் துறையின்கண் ஈண்டு மாதாங்கெறுழ்த்தோள் என்றது குதிரைநிலை கூறிற்று. கணைதாங்கு மார்பின் என்றது கணையும் வேலும் துணையுற மொய்த்தலில் (தொல்.புறத். 16) என்னும் துறை கூறிற்று என்றவாறு. கல்லிடித்தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் நல்லெயில் உழந்த செல்வர் என்றது. ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் (தொல்:புறத்-13) என்னும் புறத்துழிஞைத் துறை கூறிற்று. கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் என்றது, புலியைப் பொருதுகொன்ற ஏறு இறந்துழி அதன் உரிவையைச் சீவாமற் போர்த்த (அடியார்க்கு நல்லார் உரை, சிலப் 5-88) பெரிய கண்ணையுடைய முரசம் என்றவாறு. எரிநிமிர்ந்தனையதானை நாப்பண் பொருநல்யானை போர்க்களத்தொழிய விழுமிய வீழ்ந்த, என்னும் இதனை, களிற்றெதிர்ந்தோர் பாடு என்னுந் தும்பைத் துறை என்பர் நச்சினார்க்கினியர்.

737-748 : புரையோர் .................... இருந்து

பொருள் : புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை - நட்பிற் குற்றந்தீர்ந்த உயர்வினையுடையோர் பொருட்டுக் கட்டப்பட்ட பொன்னாற் செய்த பூவினையுடைய தும்பையை, நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி - நீவிர் யாவிரோ என அவரை வினாவியறியாதே குறிப்பான் உணர்ந்து அவர் தகுதிக்கேற்பக் கொண்டாடும் முறையினை உட்கொண்டு சூட்டி ஏவுகையினாலே, காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி - காம்பு குழைச்சினுள்ளே செருகின வேல்களுடனே அம்புகளும் சென்று நிலை குலைத்தலின் நிலைகலங்கி, பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து - பலவாய்ப் பிரிந்து இணைந்த பொருத்துவாய்கள் அற்ற பழைய நிறங்கெட்ட கவயத்தோடே, வானத்து அன்ன வளநகர் பொற்ப - தேவருலகத்தை ஒத்த வளமுடைய நகர் மேலும் வீரப்பொலிவாலே விளங்க, நோன்குறடு அன்ன ஊன்சாய் மார்பின் - சாகாட்டின் வலிய குறட்டை ஒத்த ஊன்கெட்ட மார்போடே, உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் - உயர்ந்த உதவியை மேலும் முயல்தல் உடையாரைக் கொணர்மின், நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவுபூந் தெரியல் பெருஞ் செய் ஆடவர்த் தம்மின் உயர்ந்த யானைத் திரளின் ஒழுங்குகளைக் கைக்கொண்ட பூசிப் புலர்ந்த சாந்தினையும் விரவுதலையுடைய வியன்பூ மாலையினையும் பெரிய செய்கைகளையும் உடைய மண்டலங்களை ஆளுகின்றவரைக் கொணர்மின், பிறரும் யாவரும் வருக ஏனோரும் தம் என - இன்னோரன்ன பிறரையும் ஏனையோரையும் கொணர்மின் என்று, வரையா வாயில் செறாஅது இருந்து - வரைந்து கூறி வாயிலிடத்தே தகையாமல் இங்ஙனம் யாவருக்கும் காண்டற்கு எளியையாயிருந்து;

கருத்துரை : நட்பின் உயர்ந்தோர்க்குச் சூட்டுதல் கருதிக் கட்டப்பட்ட பொற்பூந்தும்பையினை, நீவிர் யாரென வினவாமலே வரிசையறிந்து சூட்டி ஏவுகையினாலே, வேலும் கணையும் புகுந்து அலைக்கும் போர்க்களத்தே அவையிற்றால் தம் கவயம் சிதைவுண்ட விடத்தும் நம் நகர் மறச்சிறப்பாலே விளங்குதல் வேண்டும் என்று கருதி குறடு போன்று துளைபட்ட ஊன் பெருகும் மார்போடே மேலும் போரின்கண் முயலும், மறப்பெரு மக்களை அழையுங்கோள்! பகைவரின் யானை அணிகளைக் கவர்ந்தவரும் சந்தனம் பூசிப் புலர்ந்த மாலையினையுடைய மார்பினை உடையோரும் ஆகிய மண்டலங்களை ஆள்வாரை அழையுங்கோள்! இன்னோரன்ன பிறரையும் ஏனையோரையும் அழையுங்கோள்! என வரைந்து கூறி அவர்களை வாயிலிடத்தே தகையாமல் வரவேற்று இங்ஙனம் காட்சிக் கெளியையாய் இருந்து, என்பதாம்.

அகலவுரை : புரையோர் - உயர்ந்தோர். உருவுட் காகும் புரையுயர்வாகும் (உரி-4) என்பர் தொல்காப்பியனார். ஈண்டு உயர்ந்தோர் என்றது மறத்துறையில் உயர்ச்சிபெற்ற படைத்தலைவரை. புரையோர்க்குத் தொடுத்த என்றதன்கண், நான்கனுருபு, அதற்பொருட்டு புரையோர்க்குச் சூட்டுதற் பொருட்டுத் தொடுத்த என்க.

தமது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறுபொருளாகக் கருதிப் போர்மேல் வந்த வேந்தனை அங்ஙனம் மாற்று வேந்தனும் அவன் கருதிய வலியே தான் பெறுபொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்கும் சிறப்பினையுடைய தும்பைத்திணை இதனாற் கூறினார். இதற்கு அறிகுறியாகத் தும்பைப்பூச் சூடிச் சேறல் மரபு.

தனது வலிச்செருக்காலே போர்மேல் வந்த படையை எதிர்க்குங்கால் அவர்கள் வேல் அம்பு முதலிய படைகளால் பெரிதும் அலைப்பர் அன்றே! அங்ஙனம் அலைத்துழித் தம் கவசம் சிதைந்துழியும், வண்டியின் குறடு போன்று தம் மார்பம் துளைக்கப்பட்டு ஊர் சோர்ந்துழியும் விடாராய் மேலும் முயன்று வெல்வார் என்பார், காழ்மண்டு எஃகம் கணைஅலைக் கலங்கிப் பிரிபுஇணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து நோன் குறட்டன்ன ஊன்சாய் மார்பின் ஊக்கலர் என்றார். இங்ஙனம் இடுக்கண் அழியாது முயல்தல் தன் நகரின் மறப்பொலிவுக்கு ஏதுவாகலின் வானத்தன்ன வளநகர் பொற்ப என்றார். மறவர்களுள் இத்தகையோரே தலைசிறந்தவர் என்பது தோன்றப் புரையோர் என்றார். இவரே அரசனால் சிறப்புச் செய்தற்கு முதலிடம் பெறத்தக்கார் என்பார் முற்கூறினார். இத்தகைய சிறந்த மறவர்களில் யாரையேனும் தான் நேரில் அறிந்திராதவிடத்தும் அவரைப் பிறரானாதல் குறிப்பானாதல் அறிந்து சிறப்புச் செய்தல் வேண்டுமன்றி, அவரை நீவிர் யாரென வினவில் அத்தகையோர் வருந்துவர் என்பது கருதி நீர் யார் என்னாது என்றார். பொதுவின் நோக்காது, வரிசையான் நோக்குதல் வேண்டும் என்பார் முறை கருதுபு என்றார். முறை-உயர்ந்தோரை முன்னர் அழைத்தலும் ஏனையோரைப் பின்னர் அழைத்தலும் வேண்டும் என்னும் முறை. என்னை?

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா னோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்  (குறள்-528)

என்பவாகலான், முறைகருதுபு என்றதற்கு முன்னுளோர் காத்த முறைமையை நாளும் உட்கொண்டு என்பர் நச்சினார்க்கினியர். பொலம்பூ - பொன்னாற் செய்த பூ. பொலம்-பொன். காழ்-காம்பு. எஃகம்-வேல். அலை கலங்கி - அலைத்தலாற் கலங்கி. பிரிபு இணை அரிந்த - என்றது, தொடர்பிரிந்து பொருத்துவாய் அறுபட்ட என்றவாறு. கவயம்-மறவரிடும் சட்டை ;கவசம். நோன்குறடு - சகட்டின் வலிய குடம். ஆவது; ஆரங்களைத் தைக்கும் உருளையின் நடுவிடத்துள்ளதும் அச்சுக்கோப்பதுமாகிய உறுப்பு. இதன்கண் பல்வேறு ஆரத்துளைகளும் அச்சுத்துளைகளும் உண்மையால் வேல் அம்பு முதலியன தைத்த புண்களையுடைய மார்பிற்கு உவமையாக்கினார். தச்சன் அடுத்தெறி குறட்டின் நின்று மாய்ந்தனனே (புறம். 290: 4-5) என்றும்,

வீரவேல் உடம்பெலாஞ் சூழ வெம்புலால்
சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார்
ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய
வாரமே அமைந்ததேர்க் குழிசி யாயினார்  (சீவக-790)

என்றும் பிறரும் கூறுதல் காண்க. இனி, வானத்து அன்ன வளநகர் பொற்ப உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் என இயைத்துக் கொண்டு, தேவருலகத்தை ஒத்த செல்வத்தையுடைய ஊர்கள் முன்புபோல நட்புக் கொண்ட அகத்துழிஞையோர் ஆளும்படி உயர்ந்த உதவியைச் செய்த முயற்சியை உடையாரைக் கொணர்மின் என உரை கூறி என்றது, தமக்கு நட்பாய் முற்றகப் பட்டோரை முற்றுவிடுவித்தற்கு அவ்வூரை அவர்க்கு மீட்டுக் கொடுத்தமை கூறிற்று; இதனானே, உழிஞைப் புறத்துத் தும்பை கூறினார்; என்னை? கணையும் வேலும் துணையுற மொய்த்தலில் சென்ற வுயிரின் நின்ற யாக்கை (தொல்.புறத்-16) கூறுதலானும், வளநகர் பெறும்படி உயர்ந்தவுதவி செய்தமை கூறுதலானும், என விளக்கமும் கூறியுள்ளார்; நச்சினார்க்கினியர். பிறரும் என்றது இன்னோரன்ன சிறப்புடைய பிற மறவரையும் ஏனோரும் என்றது அறங்கூறவையத்தாரையும் மண்டபத்தாரையும் குறிக்கும். மண்டபத்தார் - பட்டி மண்டபத்தார். வரையா-வரைந்து செறாஅது - வாயிலிற் றடைசெய்யாது. இருந்து என்றது, காட்சிக்கு எளியையாயிருந்து என்றவாறு. இது, யான் எனதென்னும் செருக்கின்றித் தன்தொழிலை இனிதே நடத்தும் முறை கூறியவாறு.

749-752 : பாணர் .................. வீசி

பொருள் : பாணர் வருக - பாணர் வருவாராக, பாட்டியர் வருக - பாணிச்சியர் வருவாராக, யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என - செய்யுளாகிய புது வருவாயினையுடைய புலவரோடே கூத்தரும் வருவாராக என்று அழைத்து, இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி - தம் பெரிய சுற்றத்தாரைப் பாதுகாத்தலையுடைய இன்னோரன்ன பரிசிலர்க்கெல்லாம் கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி;

கருத்துரை : மேலும், பாணரும் பாணிச்சியரும் புலவரம் கூத்தரும் ஆகிய பரிசில் வாழ்க்கையுடையோரையும் அழைத்து, அவர்கள் உவக்கும்படி, முன்னையோர்க்கும் இவர்க்கும் தேர் யானை முதலிய பரிசிலையும் வழங்கி என்பதாம்.

அகலவுரை : பாணர் - பாட்டுப்பாடும் ஒரு வகுப்பினர்; பாட்டியர் என்றது அவருட்பெண்பாலாரை. புலவர் - இயற்றமிழ்ப் புலவர். வயிரியர் கூத்தர். இவர்கள் நாட்டின் பண்பாட்டிற்குரிய இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துக் கலைகளையும் ஓம்புவோர்; இவர்களை ஓம்புமாற்றால் நாட்டின்கண் கலைநலம் பரவச்செய்தல் வேந்தர் கடமை. இங்ஙனம் இக் கலைஞர்களைப் பண்டைநாள் மன்னர்கள் நாடும் தேரும் யானையும் பிறவும் ஈந்து ஓம்பி வந்த செய்தியைப் பத்துப்பாட்டினுள் ஆற்றுப் படைகளானும் புறநானூறு முதலியவற்றானும் நன்குணரலாம்.

இக் கலைவாணர் தாம்பெற்ற பரிசிலை வல்லாங்கு வாழ்துமென்று பேணாது தம் சுற்றத்தார்க்கு நல்கும் பண்புடையார் ஆதலின், இருங்கிளை புரக்கும் இரவலர் என்றார். இவர் இன்னராதலை,

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
...............................................
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே  (புறம்-47)

என்றும்,

நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே  (புறம்-163)

என்றும் வருவனவற்றால் அறிக. கொடுஞ்சி தாமரைப்பூவாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது.

பற்றற்ற செயல்

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

753-760 : களந்தோறும் ................. போகிய

பொருள் : களந்தோறும் கள் அரிப்ப - இடந்தோறும் கள்ளை அரிப்பவும், மரந்தோறும் மை வீழ்ப்ப மரத்தடிகள் தோறும் செம்மறிக் கிடாயைப் படுப்பவும், நிணவூன் சுட்டு உருக்கு அமைய - நிணத்தையுடைய தசைகள் சுடுதலாலே அந்நிணம் உருகுதல் பொருந்தவும், நெய்கனிந்து வறையார்ப்ப - நெய் நிறையப் பெற்றுப் பொரிக்கறிகள் ஆரவாரிப்பவும், குரூஉக்குய்ப்புகை மழை மங்குலிற் பரந்து தோன்றா நிறத்தையுடைய தாளிப்பில் எழுந்த புகை மழையையுடைய திசைகள் போலப் பரந்து தோன்றா நின்ற, வியல் நகரால் - அகன்ற இம் மதுரைமா நகரத்தே, பல்சாலை முதுகுடுமியின் - பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று, நல்வேள்வித்துறை போகிய - நல்ல வேள்வித்துறைகளிலே முயல்தலைச் செய்வாயாக.

கருத்துரை : பண்டைநாள் இடங்கள்தோறும் கள்ளரிப்பவும், மரங்கள் தோறும், செம்மறிக் கிடாயைப்படுப்பவும், ஊன் சுட்டு உருக்கமையவும், நெய்நிறைந்து பொரிக்கறி ஆரவாரிப்பவும், தாளிப்பின் எழுந்த புகை மழைபோலத் திசைதோறும் சூழவும் வளப்பமுடைத்தாகிய இவ்வகன்ற மதுரையிடத்தே பல யாகங்களைச் செய்த உன் முன்னோனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று வேள்வி பல செய்வாயாக! என்பதாம்.

அகலவுரை : இதன்கண் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் செங்கோன்மையை அவன் ஆட்சிக்கண் அமைந்த மதுரை நகரத்தின்கண் மக்கள் பசியும் பிணியுமற்று வசியும் வளனும் சுரந்து வாழுமாற்றால் கூறுகின்றார். இம் மன்னர் பெருமான், வடிவேல் எறிந்த வான் பகை பொறாதுபஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ளுதற்கு முன்னர்க் கடல்கோட்பட்ட குமரிக்கோடும் பஃறுளியாறும் உட்பட்ட பகுதியை ஆண்ட பாண்டியர் மரபின் முன்னோன் ஆவான். இதனை, இம் மன்னர்பெருமானைப் பாடிய நெட்டிமையார் என்னும் நல்லிசைப் புலவர்,

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே  (புறம்-9)

என வாழ்த்துதலானும், இவன் ஆட்சியின் அமைந்த நிலத்திற்கு எல்லை எடுத்தோதிய காரிகிழார் என்னும் நல்லிசைப் புலவர் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் என அக்காலத்தே தென்றிசைக்கண் கடலில்லையாகலான் அந்நிலத்தே ஒழுகிய கன்னிப் பேரியாற்றையே தெற்கெல்லையாக ஓதுதலானும் உணரலாம். இம் மன்னர் பெருமான் ஆக்குமுடிகவித்து அரசாண்டு அரிவையரோடு அநுபவித்து இருந்தான் எனினும் அகப் பற்றற்று இருந்தான் என்பதும், இவன் ஆட்சிக்கண் தான் மேற்கொண்ட அரசுரிமைக் கேற்ப அறம்பிறழா மறக்கள வேள்விபலசெய்தானேனும், அறக்கள வேள்வியே அவற்றினும்பல மிகுதியாக ஆற்றினான் என்பதும், புறநானுற்றின்கட் கிடைக்கும் சான்றுகளால் அறியப்படும். அரசனாகிய தன் நிலைக்குத் தக இம் மன்னன் போர் செய்யப் புக்குழியும்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை  (புறம்-9)

உடையனாகவே முன்னர் அறிவித்துப் பின்னர் அறப்போர் ஆற்றுவன் என்பதும், இம் மன்னனை நெட்டிமையார்,

நின் றெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறு மருப்பிற் களிறவர
காப்புடைய கயம்படியினை
அன்னசீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் எறிந்த கலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்ந்தோர்  பலர்கொல் புரையில்
நற்பனுவ னால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொள்
யாபல கொல்லோ பெரும?  (புறம்-15)

என வினவுமாற்றான் இம் மன்னன் செய்த வேள்விச் சிறப்பும் உணரலாம். அரசனாக இருந்தேயும் பற்றற்று மெய்யுணர் நிலையின் வாழ்ந்த மன்னனாகலின் இவனைப்போன்று நீயும் வாழுதி என்பார், இவனை உவமையெடுத் தோதினார். பல்சாலை முதுகுடுமிபோல நல்வேள்வித்துறை போவாயாக என்க. போகிய; வியங்கோள்.

மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
நோயிகந்து நோக்கு விளங்க

உலகம் ஆண்ட உயர்ந்தோர் என முன்னர்க் கூறியவர்களுள் இவன் தலை சிறந்தவனாதலான் ஈண்டு அவ்வாட்சிப் பயனையே கள்ளரிப்ப மை வீழ்ப்ப உருக்கமைய வறையார்ப்ப புகை மங்குலிற் பரந்து தோன்று நகர், என்றோதிப் போந்தார். நகரால்-என்றதன்கண், ஆல்: உருபு வேற்றுமை மயக்கம். நகரிடத்து என ஏழாம் வேற்றுமை உருபு பெய்துரைக்க. கை - செம்மறிக் கிடாய்; இனிப் புறவாழ்க்கைக்கு இம் முதுகுடுமியை உவமை காட்டியவர் அக வாழ்க்கைக்கு மற்றொரு மன்னனை எடுத்துக் காட்டுகின்றார் என்க.

மெய்ப்பொருள் உணர்ச்சி

நிலந்தரு திருவின் நெடியோன்

761-765 : தொல்லாணை .......................... தோன்றி

பொருள் : தொல் ஆணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட - அகத்தியனாரை யுள்ளிட்ட பழைய ஆணையையுடைய வினையின் நீங்கி விளங்கிய மெய்யறிவினையுடைய நல்லாசிரியர்கள் தம் மகத்தே புணர்ந்து நுகரும் மெய்ப் பொருளின்பத்தை அவர் அருளாலே தானும் உணர்ந்து நுகர்ந்த, புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன்போல - செந்தமிழ் வழங்குங் காலமெல்லாம் தன் புகழ் நிறைந்து விளங்குதற்குக் காரணமான தமிழ்ச் சங்கம் நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறிப்பினையுடைய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்ட மன்னனைப்போல, வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர்வாய்ப் புகர் அறு சிறப்பிற் றோன்றி - மெய்யுணர்ச்சி காரணமாகத் தம்முட் தோன்றும் இன்பத்தின் கண் இறும்பூதும், அது தானாகிய நிறைவும், அந்நிலை மாறாமைக்குரிய செப்ப முடைமையும் நிறைந்த மெய்யுணர்வாளர் பலரிடத்தும் உளதாகிய அழுக்கற்ற செம்பொருள் உணர்வோடே காணப்பெற்று;

கருத்துரை : அகத்தியனாரை உள்ளிட்ட பழைய ஆணையை உடைய மெய்யுணர்ந்த சான்றோர்கள் தம்முள்ளே புணர்ந்து நுகரும் மெய்ப் பொருளின்பத்தை அவர் அருளாலேதானும் அகத்தே உணர்ந்து நுகர்ந்திருந்த புகழ்மிக்க நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று நிரதிசயவின்பத்தானுற்ற புதுமையும் நிறைவும் அந்நிலைக்கட் செம்மையும் நிறைந்த மெய்யுணர்வாளர் பலர் இடத்தும் உளதாய வீட்டின்பம் நின்னுள்ளே எய்தப் பெற்று என்பதாம்.

அகலவுரை : வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடையராகிய சான்றோரே இவ்வுலகிற்கு அறம் முதலிய நாற்பொருளையும் உணர்த்த வல்லார் ஆதலானும், அவர் ஆணையாகிய நூல் வழியே உலகம் ஒழுகிவரலானும். அச் சான்றோரைத் தொல்லாணை நல்லாசிரியர் என்றார். நல்லாசிரியரின் செம்பொருள் உணர்ச்சியைப் புணர் என்றார். புணர்வு என்றது, மெய்யுணர்வுடைமையால் தான் என்னும் முனைப்பற்றுப் பதிப்பொருட்கண் அடங்குதல். இதனை,

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்  (குறள்-359)

என்பதனானும்,

கண்டஇவை அல்லேன் நான் என்றகன்று காணாக்
கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த
தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே
சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
பண்டைமறை களும்அதுநா னானே னென்று
பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே  (சிவ சித்-சுப - 298)

என்றற் றொடக்கத்து மெய்ம்மொழிகளானும் உணர்க. அச் சான்றோர் தாம் பெற்ற பேரின்பத்தை நிலந்தரு திருவிற் பாண்டியனுக்கு ஆசானாகிக் காட்டியருள அவர்களோடு தானும் அதனை உணர்ந்தின்புற்றான் என்பார் புணர் கூட்டுண்ட என்றார். இதனைச் சீவன் முத்தத்தன்மை என்ப. எனவே அரசனாயிருந்தேயும் சீவன் முத்தத் தன்மை பெற்ற நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று நீயும் நல்லாசிரியரின் வழிபாடுடையையாய் மெய்யுணர்ந்து பற்றற்று வீட்டின்பம் எய்துக என்றவாறு.

நிலந்தரு திருவிற் பாண்டியன் தமிழ்ச்சங்கம் நீறீஇத் தொல்காப்பிய முதலிய மெய்ந்நூல் தோற்றுவித்த புகழுடையான் என்பார் புகழ்சால் சிறப்பின் நெடியோன் என்றார். ஏனைமன்னர் போலன்றித் தண்டமிழும் அது வழங்கும் உலகமும் உள்ள துணையும் உளதாக நீண்ட புகழுடை யான் என்பார், நெடியோன் என்றார். மலம் நீங்கிய சீவன் முத்தத் தன்மையைப் புகர் அறு சிறப்பு என்றார் இச் சிறப்புற்றோர் பொருட்புணர்வால் இவ்வியல்பிற்றெனப் பிரித்தறிய வாராது இன்ப மயமாய் நிற்குங்கால் என்னே இஃதென்னே என வியத்தல் இயல்பாகலின் அவ்வியப்பும் அவ்வின்ப நிறைவும் அந்நிலையிற் பிறழாமையும் உடையர் என்பார் வியப்பும் சால்பும் செம்மையும் சான்றோர் என்றார். செம்மையும் என்னுமிடத்து உம்மைதொக்கது.

இனி இப்பகுதிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுதலாவது :

(759-முதல்) நல்ல யாகங்கட்குக் கூறிய துறைகள் எல்லாம் முன்னர் முற்ற முடித்துவிட்ட பழைய ஆணைகளையுடைய நல்ல ஆசிரியர் தாங்கள்பின்பு கூடின கந்தழியாகிய கொள்ளையை அவரிடத்தே பெற்று அனுபவித்த பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல நீயும் நல்லாசிரியரிடத்தே கேட்டிசில் (208) என முன்னே கூட்டுக, என்றது, அந்தணர்க்குக் கூறிய முறையே முன் உள்ள கருமங்களை முடித்துப் பின்னர்த் தத்துவங்களை ஆராய்ந்து மெய்ப் பொருள் உணர்ந்து வீட்டின்ப மெய்திய ஆசிரியரிடத்தே தானும் அம்முறையே சென்று வீட்டின்பத்தைப் பெற்ற குடுமி என்றவாறு. நிலந்தரு திருவின் நெடியோன்போல - எல்லா நிலங்களையும் தன்னிடத்தே காட்டின பெருஞ் செல்வத்தையுடைய மாயோனைப் போலத் தொல்லாணையை உடைய நல்லாசிரியர் (761) என முன்னே கூட்டுக. என்றது கண்ணன் எப்பொருளும் தானாயிருக்கின்றபடியைக் காட்டி ஸ்ரீகீதை யருளிச் செய்து எல்லாரையும் போதித்தாற்போல எல்லாரையும் போதிக்க வல்லாராகிய ஆசிரியர் என்றவாறு. என்பதாம்.

கடப்பாடு

766-774 : அரிய ............................. கேட்ப

பொருள் : அரிய தந்து குடி அகற்றி - இவ்விடத்திற்கு அரியவாய் வேற்றுப் புலத்தில் உள்ள பொருள்களைக் கொணர்ந்து எல்லார்க்கும் கொடுத்து நாட்டில் வாழும் குடிமக்களைப் பெருக்கி, பெரிய கற்று இசை விளக்கி - நற்பொருள்களை விளங்கக் கூறிய நூல்களைக் கற்று நின் புகழே எவ்வுலகத்தும் நிறுத்தி, முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் - கடல் நடுவே தோன்றுகின்ற ஞாயிறு போன்றும், பன்மீன் நடுவண் திங்கள் போலவும் - பல மீன்களுக்கு நடுவே தோன்றுகின்ற முழுத்திங்கள் போன்றும், பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி - நீ பொலிவு பெற்ற சுற்றத்தாருடனே பொலிவு பெற்று இனிதாக விளங்கி, பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும் பெயர் மாறன் தலைவனாக - உண்மையான நல்ல புகழை உலகிலே நிறுத்தின கை செய்த மாலையினையும் பெரிய பெயரினையுமுடைய மாறனாகிய பழையன் தமக்குத் தலைவனாயிருப்ப, கடந்து அடு வாய்வாள் இளம்பல் கோசர் - பகைவரை வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளையபலராகிய கோசர்கள், இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - நடக்கின்ற நெறி முறைமையாலே நின்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு அவ்வழி நடவா நிற்ப.

கருத்துரை : இந்நாட்டிற்கு அரிய பொருளாயவற்றை வேற்றுப் புலங்களினின்றும் கொணர்ந்து எல்லார்க்கும் வழங்கி நின் குடிமக்களைச் செங்கோன்மையால் வளப்படுத்துப் பெருக்கி மெய்ந்நூல்களை ஓதி நின் புகழை அழியாது நிலைநிறுத்தி, ஞாயிறு போன்றும் நிறைவெண்டிங்கள் போன்றும் சுற்றத்தாரோடு இனிது விளங்கிப் பெரும்பெயரை யுடைய பழையனைத் தலைவனாக உடையராய்ப் பகைவரை வெல்லும் இளம்பல் கோசர் நின்னேவல் கேட்டு ஒழுக, (இனிது உறைமதி என, 781 முடியும்) என்பதாம்.

அகலவுரை : அரிய தந்து என்றதற்கு நிலந்தரு திருவிற் பாண்டியன் தமிழ்ச் சங்கம்நிறீஇ அருஞ்செல்வமாகிய மெய்ந்நூல்களைப் புலப்படுத்து அறிவினை உலகிற்குத் தந்தாற்போன்று நீயும் கல்வியைப் பேணி அறிவாகிய அரிய பொருளைத் தந்து எனினுமாம். குடியகற்றுதலாவது - தன் செங்கோன்மையினால் குடிகள் நன்கு தழைத்து வாழச் செய்தல். இதனை,

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி  (குறள் - 542)

என்றும்,

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு  (குறள் - 544)

என்றும்,

இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (குறள் - 545)

என்றும் எழுந்த பொய்யில் புலவன் பொருளுரைகளானும் அறிக. பெரிய கற்று என்பதற்கு, மெய்யுணர்ந்து எனினுமாம். இம்மைப் பயன் அதுவாகலான் இசைவிளக்கி என்றார். இசைவிளக்குதலாவது வண்மை பூண்டொழுகுதல். பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் என்றது, மோகூர்ப் பழையனை. இவன் பாண்டிய மரபினன் என்பதும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நண்பன் என்பதும், இவன் அவையகத்தே இளம்பல் கோசர் என்பார் சிறந்த வீரராய்த் திகழ்ந்தனர் என்பதும் பிறவும் மழை யொழுக்கறாஅப் பிழையா விளையுள் பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றியன்ன (507-9) என்னுமிடத்தே கூறினாம்; ஆண்டுக் காண்க.

நல்லிசைப் புலவரின் வாழ்த்து

775-782 : பொலம்பூ ..................... நல்லூழியையே

பொருள் : பொலம்பூண் ஐவர் உட்பட - பொன்னாற்செய்த பேரணிகலன்களையுடைய ஐம்பெருங்கேளிரும் உட்பட, புகழ்ந்த மறம்மிகு சிறப்பில் குறுநிலமன்னர் அவரும் எல்லாராலும் புகழ்ப்பட்ட மறமிக்க நிலைமையினையுடைய குறுநிலமன்னராகிய அவர்களும், பிறரும் துவன்றி - கூறாதொழிந்தோரும் நிறைந்து, பொற்பு விளங்கும் புகழ் அவை நிற்புகழ்ந்து ஏத்த - பொலிவு விளங்குகின்ற புகழினை உடைய அவை நின்னுடைய அறத்தின் தன்மையைப் புகழ்ந்து வாழ்த்தா நிற்ப, இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப - விளங்குகின்ற பூணினையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களிலே எடுத்த மணம் நாறுகின்ற காம பானத்தைத் தர அதனைப் பருகி, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும - நாள்தோறும் மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக பெருமானே! வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே - பால்வரை தெய்வத்தாலே வரையப்பட்டு நீ அறுதியாக நினக்கு வாழ்நாளாகப் பெற்றுள்ள நல்ல ஊழிக்காலத்தை;

கருத்துரை : பொன்னாற் செய்த பேரணிகலன்களையுடைய ஐம்பெருங்கேளிரோடே புகழ்மிக்கமறமுடைய குறுநில மன்னரும் பிறரும் நிறைந்து திகழும் நின் அவைக்களம் நின் செங்கோனெறியைப் புகழாநிற்ப, விளங்கும் அணிகலன் அணிந்த மகளிர் பொன்வள்ளத்தே வாக்கித் தந்த காம பானத்தைப் பருகி நாடோறும் மகிழ்ந்து இனிதாக வாழ்ந்திருப்பாயாக பெருமானே! ஊழ் - நினக்கென வரைந்தளித்த ஊழிக்காலத்தை; என்பதாம்.

அகலவுரை : பொலம்பூண் ஐவரென்றது அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தவாத்தொழிற் றூதுவர் சாரணர் என்றிவர் என்றோதப்பட்ட ஐம்பெருங்குழுவினரை, வேந்தர்க்கு மாசனம் பார்ப்பார் மருத்தர் வானிமித்தரோடு அமைச்சர் ஆசில் அவைக்களத்தார் ஐந்து என்பாருமுளர். இனம்பற்றி எண்பேராயமும் கொள்க. அவராவார், கரணத்தியலவர் கருமகாரர் கனகச் சுற்றம் கடைகாப்பாளர் நகர மாந்தர் நளிபடைத் தலைவர் யானைவீரர் இவுளிமறவர் என்னும் இவர். இனி எண்பேராயமாவது சாந்துபூ கச்சு ஆடை பாக்கிலை கஞ்சுகம் நெய் ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார் என காட்டுவாருமுளர்.

வீரச் சிறப்புக்குரிய சின்னங்களைப் பெற்ற குறுநில மன்னர் என்பார், மறமிகு சிறப்பிற் குறுநில மன்னர் என்றார். மன்னரவர் என்றதன்கண் அவர் என்றது பகுதிப் பொருளது. துவன்றி - நிறைந்து. நல்லவைக்கேற்ற சிறப்பெல்லாம் அமைந்து சான்றோரால் புகழப்பட்ட அவை என்பார், பொற்பு விளங்கு புகழவை என்றார், இதனை,

புகழுந் தருமநெறி நின்றோர்பொய் காமம்
இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்
எல்லா முணர்ந்தோர் இருந்த இடமன்றோ
நல்லா யவைக்கு நலம்.

என்றும்,

நலனடக்கம் செம்மை நடுவுநிலை ஞானம்
குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர்
சென்று மொழிந்தனவும் கேட்போர் செறிந்தவிடம்
அன்றோ நிறைந்த அவை

என்றும் வரும் வெண்பாப் பாட்டியலானும்  (பொது. 9: 10)

குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற
வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையிற்
காத லின்பத்துத் தூங்கித் தீதறு

நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்கா றின்மை அவாஅ வின்மையென
இருபெரு நிதியமும் ஒருதா மீட்டும்
தோலா நாவின் மேலோர் பேரவை  (புறத்திரட்டு-அவையறிதல்)

எனவரும் ஆசிரியமாலையானும் உணர்க. எண்வகை நுதலிய அவையம் (புறத்-21) என்றோதுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். இனி,

நாடுகளில் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதற் றவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும் இறைஞானம்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்  (சிவ-சித்தி-சுபக்- 308)

என்றும்,

அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும்
ஒளடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா
எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும் ஞானிக்
கிருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத்
தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த
சக்கரமும் கந்தித்துச் சுழலு மாபோல்
மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா
மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே  (சிவ-சித்தி-சுபக்-309)

என்றும் பிற்றைநாள் எழுந்த மெய்கண்ட வித்தகர்களின் மெய்யறிவு திகழும் கொள்கைகளைப் பண்டைநாள் எழுந்த இப் பழம்பனுவலிற் காணலாம். வீடுபேற்றிற்கு நிலையாமை யுணர்தலும் அவ்வுணர்ச்சியானே அவையிற்றிற்பற்றறுதலும் மெய்யுணர்தலுமே காரணமின்றி வேறன்றென்னும் கொள்கையினையுடையராதலின்,

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறன் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!

என்றார். நிலையாமை உணர்ந்து மெய்யுணர்வு பிறந்தவழி யான் எனது என்னும் இருவகைச் செருக்குமின்றி,

உலகினில் என்செயல் எல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயல்எனக்கு இன்றுஉன் செயலே என்றும்
நினைதலே

இயல்பாகும் அன்றோ? அவ்வழி, யான் எனது என்னும் செருக்காலுறற்பால துன்பம் அனைத்தும் அகன்று வீட்டின்பமே உளநிறைந்திருத்தல் பற்றி, மகிழ்ந்து இனிது உறைமதி என்றார். இங்ஙனம் இறைஞானம் கூடி நின்றுழி முன்னர் இப்பிறப்பிற்கு ஏதுவாகிய வினைகள் உள்ள துணையும் இவ்வுடல் நிலைத்தலும் இவ்வுடல் ஒழிவின் கண் எய்துவது வீடே யாதலும் திண்ணம் என்பார், இங்ஙனம் இவ்வுடலில் இருக்குங் காலந்தானும் முன்னரே ஊழான் வரையறை செய்யப்பட்டதாகலின் அதுகாறும் இவ்வுடலிலேயே வீட்டின்பம் மருவப்பெற்றுப் பின்னர் அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டின் அரசுரிமையையும் பெறக்கடவாய் என்பார், வரைந்து நீ பெற்ற நல்லூழியையே என்றார். இவ்வாழ்நாள் வீடுபேற்றிற்குக் காரணமாய்ச் சிறத்தலின் நல்லூழி என்றார். நல்லூழி கலியல்லாத ஊழி என்பர் நச்சினார்க்கினியர். ஏகாரம் ஈற்றசை. இனி, 700-சினைதலை மணந்த என்பது தொடங்கி, 782-நல்லூழியையே என்னுந்துணையும் கிடந்த பொருளை : ஆய்தொடி மகளிர் தோள்புணர்ந்து, துஞ்சி, எழுந்து நலம்பெறு விளக்கம் தொடியொடு கலிங்கம் கவைஇ உருவினையாகி மறவர் வாழ்த்தச் சுடர்வர தம்மின் தம்மின், தம்மின் தம்மென இருந்து வருக வருகென வீசி முது குடுமிபோலத் துறைபோவாயாக, நெடியோன் போலத் தோன்றி, தந்து அகற்றிக் கற்று விளக்கி ஞாயிறு போலவும் திங்கள் போலவும் விளங்கி கோசர் நின்மொழி கேட்ப மன்னரும் பிறரும் துவன்றி விளங்கும் அவை ஏத்தமகளிர் தேறல் மடுப்ப மகிழ்ந்து இனிது வாழ்க நீ பெற்ற நல்லூழியை என இயைத்துக் கொள்க.

இனி, 1-ஓங்குதிரை என்பது முதல் 782-ஊழியையே என்னும் துணையும் விரிந்து கிடந்த பொருளை அணுகக் கொள்ளுமாறு,

உயர்ந்தோர் மருகனே! நெடியோன் உம்பலே! பொருநனே! கொற்றவனே! வெல் கோவே! புகழ் வேந்தே! நசைப்பொருநனே! போரேறே! குருசிலே! நீ கொற்றவர் தம் கோனாகுவை: இசைவேட்குவை; நின்கொற்றம் பிறையிற் சிறக்க! நின் தெவ்வர் ஆக்கம் மதியிற் கெடுக! வாய் நட்பினை! பணிந்தொழுகலை; பழி நமக்கு எழுக என்னாய்; இசைவேட்குவை அன்னாய் நின்னொடு முன்னிலை எவன்? கொன் ஒன்று கிளக்குவல் கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்! நிலைஇயர் நின்இசை! பல்வேன் மன்னர் திரையிடும் மணலினும் பலரே உலகம் ஆண்டு கழிந்தோர். அதனால்; மருதஞ்சான்ற தண்பணை சுற்றி ஒருசார் முல்லைசான்ற புறவணிந்து, ஒருசார் குறிஞ்சி சான்ற மாமலை தழீஇ, ஒருசார் பாலைசான்ற சுரஞ்சேர்ந்து, ஒருசார் நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஒருசார் ஆங்கு ஐம்பாற்றிணையும் கவினி அமைவர, நன்னாட்டு நடுவண்வையைத் துறைதொறும் பெரும்பாண் இருக்கையையும், புரிசையையும், மாடமொடு வாயிலையும், நல்லில்லையும், உடைய தெருவில், இருபெரு நியமத்து, கொடி அருவியின் நுடங்க யானையும், தேரும் புரவியும் மயக்கமும் பெயர்தலில் பூவினர் முதலியோர் அஞ்சிநீங்கிய பின்றை, இருத்தர, முதுபெண்டிர் மயிலியலோரும் மடமொழி யோரும் திளைப்பப் பண்ணியம் பூவொடுகொண்டு மறுக, அந்திவிழவில் நாடார்த்தது போன்றது நாளங்காடிக் கம்பலை,

செல்வர் நாண்மகிழ் இருக்கையிற் காண, மகளிர் திருமுகம் தோன்றுபு மறைய, அந்தி விழவிற் றூரியங்கறங்க, பேரிளம் பெண்டிர் காக்கும் கடவுட் பள்ளியும் அந்தணர் பள்ளியும் நறும்பூஞ் சேக்கையும் தோன்ற, அறங்கூறவையமும் காவிதி மாக்களும், பகர்நரும் குழுவும் வாழும் நால்வேறு தெருவினும் குயினர் முதலியோர் குழீஇ நிற்றர இன்சோறு தருநர் நுகர, பட்டினத்து இசைமான, வினைஞர் கல்லென மறுக, புள்ளிசை யெழுந்தற்று அல்லங்காடிக் கம்பலை, ஞாயிறு குன்றம் சேர நிலா விரிபு புகுந்து மாலை நீங்க, நயந்தோர் நாணுக் கொளப் பண்ணுப் பெயர்த்து துணைதழீஇ நாணுக்கொள, கொண்டி மகளிர் பொய்தல் அயர, காணுநர் திரிதர, மகளிர் நீரயர, சூன் மகளிர் மடைமடுப்ப, நின்ற குரவையும், உரையும் பாட்டும் விரைஇ முந்தை யாமம் சென்ற பின்றை, பானாட்கங்குல் இடையது மற்றை யாமம் கழிப்பி, இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறையில் மிக்குக் கவினி காண்வரப் புகழ் எய்திய மதுரையில், மகளிர் நறுந்தோள் புணர்ந்து துஞ்சி எழுந்து தம்மென வருகென வீசி முதுகுடுமி போல வேள்வித் துறை போவாயாக! நிலந்தரு திருவின் நெடியோன் போலத் தோன்றி, தந்து அகற்றிக் கற்று விளக்கி, விளங்கிக் கேட்ப, ஏத்த, மடுப்ப, நாளும் இனிது உறை மதி பெரும! வரைந்து நீ பெற்ற நல்லூழியை; எனத் தொடர்புகாண்க.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை,  (குறள் - 331)

அற்கா வியல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்  (குறள் - 333)

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்,   (குறள் - 346)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்  (குறள் - 349)

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்,  (குறள் - 356)

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே  (தொல்.புறத்-23)

தனிப் பாடல்கள்

பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல்
திங்கள் நெடுங் குடையின் கீழானை,  அங்கு இரந்து
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர்
தாம் வேண்டும் கூடல் தமிழ்.  1

சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும்
நல் இருந் தீம் தாது நாறுதலால்,  மல்லிகையின்
வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத
தண் தாரான் கூடல் தமிழ்?  2

மதுரைக்காஞ்சி முற்றிற்று.

மதுரைக் காஞ்சிக்குப் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரை முற்றும்.

 
மேலும் மதுரைக்காஞ்சி »
temple news
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. ... மேலும்
 
temple news

மதுரைக்காஞ்சி பகுதி-1 செப்டம்பர் 27,2012

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar