Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
3. காந்தருவ தத்தையார் இலம்பகம் 5. பதுமையார் இலம்பகம்
முதல் பக்கம் » சீவக சிந்தாமணி
4. குணமாலையார் இலம்பகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
03:09

கதைச் சுருக்கம்: சீவகன் காந்தருவதத்தையோடு கருத்தொருமித்து ஆதரவு பட் டின்புற்றிருக்கு நாளில், இனிய இளவேனிற் பருவம் வந்தெய்தியது. அப்பொழுது மாந்தர் எல்லாம் பொழில் விளையாட்டிற் புக்கனர். அவ்விராசமாபுரத்திலுள்ள சுரமஞ்சரி என்பாளும், குணமாலை என்பாளும் தந் தோழிமாரோடு விளையாட அப்பொழிலிற் புக்கனர். அப் பொழிலின்கண் அப்பெருமாட்டியார் இருவரும் நறுஞ்சுண்ணங் காரணமாகத் தம்முட் கலாய்த்துக் கொண்டனர். தஞ்சுண்ணங்களுள் வைத்துச் சிறந்தது யாதென அறிதற்குத் தந்தோழியரை அறிஞரிடத்தே சுண்ணத்தோடு போக்கினர். அதுகண்ட அறிஞர் பலரும், அவரைச் சீவகன்பாற் காட்டி வினவும்படி அறிவுறுத்தனர். அம்மகளிர் அவ்வாறே அவற்றைச் சீவனுக்குக் காட்டி இவற்றுள் சிறந்தது செப்புக! என்று வேண்டினர். சீவகன் அவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து, குணமாலை சுண்ணமே சிறப்புடையது, என்றான். அம்மகளிர் தந்தலைவியர்பாற் சென்று இதனை உணர்த்தினர். சீவகன் தன் சுண்ணத்தை மதியாமை அறிந்த சுரமஞ்சரி பெரிதும் வருந்தினள். அச் சீவகன் என்பால் வலிந்துவந்து என்னருட்கு இரந்து நிற்கும்படி யான் நோன்பியற்றுவல் என்று குறிப்பாலுணர்த்தித் தன் கன்னிமாடம் புகுந்து, சீவகன் தன்பால் வலிநதுவந்து அருள்வேண்டற் பொருட்டு நோன்பாற்றியிருந்தனள். இனி, அப் பொழிலிலே பார்ப்பனர் சோற்றுத் திரளை ஒரு நாய் தீண்டிற்றாக? அப் பார்ப்பனர் அதனைத் தடியாற் புடைத்தனர். அந் நாயைக்கண்ட சீவகன் இரக்கமுற்று, அதன் செவியில் ஐந்தெழுத்து மறைமொழியை ஓதினன். அதனால் அந்நாய் அவ்வுடல் ஒழித்துத் தேவனாயிற்று. சுதஞ்சணன் என்னும் பெயருடைய அத்தேவன் மீண்டுவந்து சீவகனை வணங்கினான். நின்னருளால் யான் இப்பொழுது இயக்கர் தலைவனாகிச் சந்திரோதயமென்னும் நகரில் இனிதே வாழும் பேறுபெற்றேன். என் பெயர் சுதஞ்சணன் என்பதாம். நினக்குக் குற்றேவல் செய்யும் கருத்துடையேன் என்றனன். அது கேட்ட சீவகன் வியந்து நண்ப! நீ எனக்குப் பகைவரால் துன்பம் நேர்ந்தபோது துணைபுரிவாயாக! இப்பொழுது நின்னூர் சென்று இன்புற்றுவதிக! எனக் கூறி விடுத்தனன்.

மாந்தரெல்லாம் பொழிலில் ஆடி மீண்டு வந்தனர். அப்பொழுது கட்டியங்காரன் பட்டத்து யானையாகிய அசனிவேகம் செருக்குற்றுப் பாகர்க்கடங்காமல் சிதைந்து ஓடிற்று. அதனெதிரே வந்த குணமாலையைச் சீறி அவளைக் கொல்லத் தொடங்கியது. அவ்வழியே வந்த சீவகன் விரைந்தோடி அதனை அச்சுறுத்தி ஓட்டிக் குணமாலையை உய்யக்கொண்டனன். இருவருளங்களும் ஒன்றுறக் கலந்தன. குணமாலை சீவகன்பாற் காதல் கொண்டுள்ள செய்தியை அவள் நற்றாயாகிய வினயமாலை குறிப்பானுணர்ந்து தந்தையாகிய குபேரமித்திரனுக் குணர்த்தினள். அவனும் பெரிதும் மகிழ்ந்து கந்துக்கடனிடத்தே தூதுவிட்டுத் தன் கருத்தை உணர்த்தினன். அவனும் மகிழ்ந்துடன்பட்டனன். அவ்வழி சீவகனுக்குங் குணமாலைக்கும் திருமணஞ் சிறப்பாக நிகழ்ந்தது. இருவரும் ஈருடற்கு ஓருயிராய் இணைந்து இன்புற்றனர். இனிச் சீவகனுக்குத் தோற்றமையால் நாணிக் கவளமறுத்து நின்ற அசனிவேகத்தைக் கண்ட கட்டியங்காரன், நிகழ்ச்சியெல்லாம் வினவி அறிந்தனன். சீவகன்பாற் சீற்றங்கொண்டான். அவனைக் கட்டி என் முன்னர்க் கொணர்க என மதனனை மறவருடன் ஏவினன். அவர்கள் சீவகன் இல்லத்தை வளைத்துக் கொண்டனர். சீவகன் சினந்து போராற்றப் புலிபோலப் புறப்பட்டனன்; தான் தன் ஆசிரியனுக்கு அளித்த உறுதிமொழியை நினைந்து அடங்கினன். இருமுதுகுரவரும் அரசன் ஆணைக்கு அடங்கி அவன்பாற் செல்லுதலே அறிவுடைமையாம் என்று செவியறிவுறுத்தினர். சீவகன் அக் கருத்திற் கிணங்கி அம்மறவர்க்கு அடங்கியவனாய் அவர் புடைசூழச் சென்றனன். நந்தட்டன் முதலியோர் மாற்றாரை வெல்லுதற்குரிய சூழ்ச்சியை ஆராய்ந்தனர். இஃதறிந்த காந்தருவதத்தை தன் மந்திர வன்மையால் சீவகனைச் சிறைவீடு செய்ய முயன்றனள். அவள் கருத்தறிந்த சீவகன் நாணினன். சுதஞ்சணனை நினைத்தான். சீவகனுக்குற்ற துன்பத்தைச் சுதஞ்சணன் தனது தெய்வ ஞானத்தால் உணர்ந்து, ஞெரேலெனக் காற்றையும் மழையையும் தோற்றுவித்து மதனன் முதலியோரை நிலைகுலைத்துப் பிறர் உணராதபடி சீவகனைத் தன் மார்போடு அணைத் தெடுத்துக் கொண்டு தன் பதியை எய்தினன். அவ்விடத்தே தமர்க்கெல்லாம் இவன் சிறப்பினை உணர்த்தினன்; இவ்வாற்றால் சீவகன் சுதஞ்சணனோடு அவன் ஊரில் இனிதே உறைவானாயினன்.
 
இனி, மதனன் சீவகன் எவ்வழி மறைந்தான்? என்றுணராதவனாய்த் திகைத்தனன். கட்டியங்காரன் தன்னைக் கடிவான் என்றஞ்சி ஏதிலான் ஒருவனை வாளாற் கொன்று உருத்தெரியாமல் புரட்டிவிட்டுக் கட்டியங்காரன் பாற் சென்று அரசே! மழையும் காற்றும் மிக்கமையால் சீவகனை உயிருடன் கொணர்தல் அருமையாயிற்று. ஆதலால் அவனைக் கொன்று வீழ்த்திவிட்டேன் என்றனன். அதுகேட்ட கட்டியங்காரன் மதனனைப் பாராட்டிச் சிறப்புகள் பலவும் நல்கினான்.
 
851. காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண ழன்னி
ஆசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப்
பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான்.

பொருள் : காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல - குற்றம் அற்ற, துறவு நெறியிற் சிறப்புற்ற முனிவரின் உள்ளம்போல; வெய்யோன் மாசு அறு விசும்பின் வடதிசை அயணம் முன்னி - கதிரவன் தூய வானிலே வடதிசைச் செலவைக் கருதி; ஆசு அற நடக்கும் நாளுள் - நலம்பெறச் செல்லும் நாட்களிலே; ஐங்கணைக் கிழவன் வைகி - காமன் தான் தங்குவதற்கு; பாசறைப் பரிவு தீர்க்கும் - பாசறையிலே தங்கியிருப்போரின் வருத்தத்தை நீக்கும; பங்குனிப் பருவம் செய்தான் - இளவேனிற் காலத்தைப் பிறப்பித்தான்.
 
விளக்கம் : அயனம் என்னாமல் அயணம் என்று பாகதத்தாற் கூறினார் செய்யுட் சொல்லாதலின். வைகி - வைக : எச்சத் திரிபு. கூதிர்க் காலத்தே (போர்மேற் சென்றோர்) பாடி வீட்டிலிருந்து, இளவேனிற்கண் இன்பம் நுகர மனைதிரும்புவாராதலின், பாசறைப் பரிவு தீர்க்கும் என்றார். தலை வந்த திளவேனில் (சீவக, 948) என எதிர்நோக்கிக் கூறிய காலத்தே, ஈண்டு நீர்விளையாட்டு நிகழ்கின்றதென்பர், அக்காலத்தைச் சிறப்பித்துரைக்கின்றார். உலகின்கண் கார்முதலிய பருவங்கள் உண்டாதற்கு ஞாயிற்று மண்டிலத்தின் வடதிசைச் செலவும் தென்றிசைச் செலவும் காரணமாதல்பற்றி வெய்யோன் பருவம் செய்தான் என அவன் செயலாக்கிக் கூறினர். விசும்பிற்குக் கடவுளர் சிந்தை உவமை. ஐங்கணைக் கிழவன் - காமன். ( 1 )

852. தோடணி மகளிர் போன்ற
துணர்மலர்க் கொம்பர் கொம்பி
னாடவர் போல வண்டு
மடைந்தன வளியிற் கொல்கி.
யூடிய மகளிர் போல
வொசிந்தன வூட றீர்க்குஞ்
சேடரிற் சென்று புல்லிச்
சிறுபுறந் தழீஇய தும்பி.

பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.
 
விளக்கம் : சிறுபுறம் : பூங்கொம்பு வளைந்தபோது உயர்ந்திருந்த பக்கம். சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய (தொல். கற்பு 13) என்றலின் அறிவிற் பெரியோரைச் சேடர் என்றார். அளியிற்கு; பிறர்க்கும் இவ்வாறு அருளுளதாம் என்று புலவி நுணுக்கங் கொள்ளுதலை மகளிர்க்குக் கொள்க. அளி - அருள், வண்டு. வளியிற்கு - காற்றிற்கு. எனினுமாம். மலர்க்கொம்பர் மகளிர் போன்ற என்க. சேடர், சேடு என்னும் பண்படியாகப் பிறந்த பெயர்; பெரியோர் என்னும் பொருட்டு. தும்பி - வண்டினத்தில் ஒருவகை. ( 2 )

வேறு
 
853. நான மண்ணிய நன்மண மங்கையர்
மேனி போன்றினி தாய்விரை நாறிய
கானங் காழகி லேகமழ் கண்ணிய
வேனி லாற்கு விருந்தெதிர் கொண்டதே.

பொருள் : நானம் மண்ணிய நல்மண மங்கையர் மேனி போன்று - கத்தூரி பூசப்பெற்ற, நல்ல மணஞ்செய்த மகளிரின் மேனிபோன்று; இனிதாய் விரை நாறிய கானம் - இனிமையாய் மணம் கமழ்ந்த சோலை; காழ் அகிலே கமழ் கண்ணிய வேனிலாற்கு - கரிய அகில் மணமே கமழுங் கண்ணியையுடைய காமனுக்கு; விருந்து எதிர்கொண்டது - விருந்திடுதலை மேற்கொண்டது.
 
விளக்கம் : கண்ணி - முடிமாலை. கண்ணிய - மாலையை உடைய. நானம் : ஆகுபெயர்; மண்ணியதனால் உண்டான நறுமணத்தையுடைய மகளிர் எனவும் பொருள் கூறலாம். வேனிலான் - காமன். ( 3 )

854. கொம்ப ரின்குயில் கூய்க்குடை வாவியுட்
டும்பி வண்டொடு தூவழி யாழ்செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில்வந்
தும்பர் நீடுறக் கத்தியல் பொத்ததே.

பொருள் : கொம்பர் இன் குயில் கூய் - கொம்பிலே இனிய குயில் கூவ; குடை வாவியுள் - எல்லோரும் நீராடும் குளத்திலே; தும்பி வண்டொடு தூவழி யாழ்செய - தும்பியும் வண்டும் தூவழி யென்னும் பண்ணையுடைய யாழ்போல இசைக்க; வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து - எரியுங் காமத்தை விரும்புதற்குக் காரணமான வேனில் வருதலாலே; உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்தது - மேலாகிய பெரிய துறக்கத்தின் தன்மையைப் போன்றது.
 
விளக்கம் : கூய் - கூவ, வந்து - வர : எச்சத்திரிபுகள். ( 4 )

855. நாக நாண்மலர் நாறு கடிநக
ரேக வின்பத் திராச புரத்தவர்
மாக நந்து மணங்கமழ் யாற்றயற்
போக மேவினர் பூமரக் காவினே.

பொருள் : நாகம் நாண்மலர் நாறு கடிநகர் - நாகமரத்தின் புதுமலர் மணம் கமழும் சிறந்த நகரமாகிய; ஏக இன்பத்து இராசபுரத்தவர் - ஒப்பற்ற இன்பத்தையுடைய இராசமாபுரத்தில் உள்ளோர்; மாகம் நந்தும் மணம் கமழ் யாறு அயல் - வானிற் பொருந்த மணம் வீசுகிற, யாற்றின் ஓரத்தில் உள்ள; பூ மரக்காவின் போகம் மேவினர் - மலர் நிறைந்த மரங்களையுடைய காவிலே இன்பம் நுகர விரும்பினர்.
 
விளக்கம் : முதலிற் பொழிலில் இன்புறுதலையும் பின்னர் நீர்விளையாட்டையும் கருதினர். பொழில் யாற்றின் அயலில் உள்ளது.
 
நாகம் - ஒருவகை மரம். நாள் மலர் - அன்றலர்ந்த பூ. கடி - ஈண்டு மணம் என்னும் பொருட்டு. இராசமாபுரம், இராசாராமபுரம் என நின்றது. மாகம் - விசும்பு. நந்துதல் - ஈண்டு விரிதல் என்னும் பொருட்டு. போகம் நுகர்ச்சி. ( 5 )

856. முழவங் கண்டுயி லாத முதுநகர்
விழவு நீர்விளை யாட்டு விருப்பினாற்
றொழுவிற் றோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூதெயில் போற்கிளர் வுற்றதே.

பொருள் : தொழுவில் தோன்றிய தோம்அறு கேவலக் கிழவன் மூதெயில்போல - இல்வாழ்வின் உண்டான குற்றம் அற்ற பேரின்ப மடந்தையையுடைய அருக தேவனது பொன்எயில் வட்டம்போல; முழவம் கண் துயிலாத முதுநகர் - முழவின் ஒலி மாறாத இராசமாபுரம்; நீர் விழவு விளையாட்டு விருப்பினால் - நீர் விழவாகிய விளையாட்டின் காதலால்; கிளர்வுற்றது - கிளர்ச்சி கொண்டது.
 
விளக்கம் : இனி, மூதெயிலுக்குத் திருநாளுக்குப் போவாரைப் போல என்றுமாம். முழவம் - ஈண்டு அதன் முழக்கத்திற்கு ஆகுபெயர். கண்துயிலாத என்றது ஈண்டு, இடையறாத என்றவாறு. முதுநகர் - பழைதாகிய நகரம். தொழு : ஆகுபெயர் ; ஈண்டுக் கட்டுண்ட இல்வாழ்க்கையைக் குறித்துநின்றது. தொழு - தளை. தோம்அறு கேவலக்கிழவன் என்றது அருகக் கடவுளை. எயில் - பொன் எயில் வட்டம். நகர் மூதெயில்போல் கிளர்வுற்ற தென்க. ( 6 )

857. வள்ள நீரர மங்கைய ரங்கையா
லுள்ளங் கூரத் திமிர்ந்துகுத் திட்டசாந்
தள்ள லாயடி யானை யிழுக்கின
வெள்ள நீர்வளை வெள்ள முரன்றவே.

பொருள் : அர மங்கையர் அங்கையால் - வான் மகளிரைப் போன்ற மங்கையரின் அழகிய கையினால்; உள்ளம் கூர - மனக் களிப்பு மிகையால்; உகுத்திட்ட வள்ளநீர் - சிந்திய கிண்ணத்திலுள்ள பனிநீரும்; திமிர்ந்திட்ட சாந்து - திமிர்ந்திட்ட சந்தனமும்; அள்ளலாய் யானை அடி இழுக்கின - சேறாக அச் சேற்றின் கண் யானை அடி வழுக்கின; வெள்ளநீர் வளை வெள்ளம் முரன்ற-கடல் நீரிற் பிறந்த சங்குகளும் வெள்ளம் என்னும் எண்ணாக முழங்கின. 

விளக்கம் : வள்ளநீர் - வள்ளத்துள்ள பனிநீர். அரமங்கையர்: உவம ஆகுபெயர். உள்ளம் - மனவெழுச்சி. கூர்தல் - மிகுதல். அள்ளல் - சேறு; சேறாக அதன்கண் யானைகளும் இழுக்கின என்க. வெள்ளம் இரண்டனுள் முன்னது கடல், ஏனையது ஒரு பேரெண். ( 7 )

858. நீந்து நித்தில வூர்தி நிழன்மருப்
பேந்து கஞ்சிகை வைய மிளவெயிற்
போந்து காய்பொற் சிவிகைநற் போதகங்
கூந்தன் மாலைக் குமரிப் பிடிக்குழாம்.

பொருள் : நீந்தும் நித்தில ஊர்தி - (தெருவிலே மக்களின் நெருக்கத்தைக்) கடந்து செல்லும் முத்துப் பந்தலும்; நிழல் மருப்பு ஏந்து கஞ்சிகை வையம் - ஒளிவிடும் யானைக் கொம்பினால் ஏந்திய, உருவு திரையையுடைய வண்டியும்; இளவெயில் போந்து காய் பொன் சிவிகை - இளவெயில் விட்டு ஒளிரும் பொன் சிவிகையும்; நல்போதகம் கூந்தல் மாலைக் குமரிப் பிடிக்குழாம் - அழகிய யானைகளும் கூந்தலையும் மாலையையும் உடைய இளம் பிடித்திரளும் (ஆகியவற்றை).
 
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். கடத்தற்கருமையின் நீந்தும் என்றார். நித்தில ஊர்தி - முத்தாலாய நடைப்பந்தர். நிழல் - ஒளி. கஞ்சிகை வையம் - உருவுதிரை வீழ்த்தப்பட்டவண்டி; இதனைக் கொல்லாவண்டி என்ப. இளவெயில் போன்று புறப்பட்டு ஒளிரும் பொன் சிவிகை எனினுமாம். போதகம் - யானை. குமரிப்பிடி - இளமையுடைய பெண் யானை. ( 8 )

859. ஏறு வாரொலி யேற்றுமி னோவெனக்
கூறு வாரொலி தோடு குலைந்துவீழ்ந்
தாறி னார்ப்பொலி யஞ்சிலம் பின்னொலி
மாறு கொண்டதொர் மாக்கட லொத்தவே.

பொருள் : ஏறுவார் ஒலி - ஏறுகின்றவரின் ஆரவாரமும் ; தோடு குலைந்து வீழ்ந்து ஏற்றுமினோ எனக் கூறுவார் ஒலி - தம் கூட்டம் சிதறியதால் அதனையடைய விரும்பி ஏற்றிவிடுங்கள் என்று கூறுகின்றவரின் ஆரவாரமும்; ஆறின் ஆர்ப்பு ஒலி - வழியே செல்லுவாரின் ஒலியும்; அம் சிலம்பின் ஒலி - அழகிய சிலம்புகளின் ஆர்ப்பும் (கூடுவதால்); மாறு கொண்டது ஓர் மாக்கடல் ஒத்தது - கடலுடன் மாறுபட்ட மற்றொரு பெருங் கடல் போன்றது.

விளக்கம் : தோடு - கூட்டம். சிறுதலை வெள்ளைத்தோடு என்னும் குறுந்தொகைக் கண்ணும் (163) அஃதப் பொருட்டாதலறிக. ஆறு : ஆகுபெயர்; வழிப்போக்கர் என்க ( 9 )

860. பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டல
மின்செய் வெண்குடை பிச்ச மிடைந்தொளி
யென்செய் கோவென் றிரிந்த திழைநிலா
மன்செய் மாணகர் வட்டம்விட் டிட்டதே.

பொருள் : பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டலம் - பொன்னாற் செய்யப்பட்ட காம்பினைக் கொண்ட, பூ எழுதிய வட்டக்குடையும்; மின்செய் வெண்குடை - ஒளிரும் வெண்குடையும்; பிச்சம் - பீலிக்குடையும்; மிடைந்து - நெருங்குதலால்; ஒளி என் செய்கோ என்று இரிந்தது - (ஞாயிற்றின்) ஒளி இனி யான் என் செய்வேன் என்று கெட்டது; இழைநிலா மன்செய் மாண்நகர் வட்டம் விட்டிட்டது - (அப்போது) அணி கலன்களின் ஒளி பெருமை பொருந்திய பெருநகரம் எங்கும் வட்டமாக விளங்கி வீசியது.
 
விளக்கம் : மண்டலம் : ஆகுபெயர்; வட்டக்குடை என்க. பிச்சம் - ஒருவகைக் குடை, ஒளி - ஈண்டு. ஞாயிற்றொளி என்க. மாணகர் - மாட்சிமையுடைய இராசமாபுரம். ( 10 )

861. திருந்து சாமரை வீசுவ தெண்கடன்
முரிந்த மொய்திரை போன்ற வகிற்புகை
புரிந்த தாமங்க ளாகவப் பூந்துகள்
விரிந்து வானின் விதானித்த தொத்ததே.

பொருள் : திருந்து சாமரை வீசுவ - திருத்தமான சாமரைகள் வீசுவன; தெண்கடல் முரிந்த மொய்திரை பேன்ற - தெளிந்த கடலின் முரிந்த நெருங்கின திரைகளைப் போன்றன; அகிற்புகை புரிந்த தாமங்களாக - அகிற்புகைச் சுருள் கட்டப்பட்ட மாலைகளாக; அப் பூந்துகள் விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே - அப்போது தூவின் பூந்துகள் பரவி வானிலே மேற்கட்டி ஒன்றைக் கட்டியது போன்றது.
 
விளக்கம் : வீசுவ: பலவறிசொல்; வீசப்படுவனவாகிய சாமரை திரை போன்றன என்க. புகை தாமங்கள் ஆக என்க. தாமம் - மாலை. விதானித்தல் - மேற்கட்டியிடுதல். ( 11 )

862. சோலை சூழ்வரைத் தூங்கரு வித்திரண்
மாலை ஊர்திகள் வைய மிவற்றிடைச்
சீலக் கஞ்சிநற் போதகஞ் செல்வன
நீல மேக நிரைத்தன போன்றவே.

பொருள் : சோலைசூழ் வரைத்தூங்கு அருவித்திரள் - சோலை சூழ்ந்து மறைத்த மலையினின்றும் அசையும் அருவித்திரள் போலும்; மாலை ஊர்திகள் வையம் இவற்றிடை - முத்த மாலையையுடைய பீலி வேய்ந்த ஊர்திகளும் வண்டியும் ஆகிய இவற்றின் நடுவே; சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன - பாகன் கற்பித்த ஒழுக்கத்திற்கு அஞ்சி அழகிய யானைகள் செல்வன; நீலமேகம் நிரைத்த்ன போன்றவே - கரிய முகில்கள் அணிவகுத்தன போன்றன.
 
விளக்கம் : சீலங்கு - சீலத்திற்கு; ஒழுக்கத்திற்கு. சாரியை இன்றி உருபு புணர்ந்தது. யானை வரிசைக்கு முகில் வரிசை உவமை.(12)

863. வழங்கு வங்கக் கலிங்கக் கடகமு
மழுங்கு மாந்தர்க் கணிகலப் பேழையுந்
தழங்கு வெம்மதுத் தண்டுந் தலைத்தலைக்
குழங்கன் மாலையுங் கொண்டு விரைந்தவே

பொருள் : வங்கம் வழங்கு கலிங்கம் கடகமும் - மரக்கலத்தில் வந்த ஆடையும் கடகமும்; அழுங்கும் மாந்தர்க்கு அணிகலப் பேழையும் -(அணிகலம் இழந்து) வருந்துவார்க்குக் கொடுக்க அணிகலப் பெட்டிகளும்; தழங்கு வெம்மதுத் தண்டும் - கொடிய மதுவைப் பெய்து முழங்கும் மூங்கிற் குழாய்களும்; தலைத் தலைக் குழங்கல் மாலையும் - ஆங்காங்கே மணந்தரும் மாலையும்; கொண்டு விரைந்த - கைக்கொண்டு (மக்கள் திரள்கள்) விரைந்து சென்றன.

விளக்கம் : வங்கம் - மரக்கலம். வங்கம் வழங்கு - மரக்கலங்கள் கொண்டுவந்து வழங்கிய என்க. கலிங்கம் : ஆகுபெயர். ஆடைப்பேழை. கடகம்: ஆகுபெயர்; அணிகலப்பேழை அழுங்குமாந்தர் - நீராட்டின் கண் ஆடை அணி முதலியன பறிகொடுத்து வருந்தும் மக்கள் என்க. தழங்கும் வெம்மது-இரைகின்ற வெப்பமுடைய கள் : முதிர்ந்த கள் ஓய்யென்றிரையுமியல்புடையது. தண்டு - ஈண்டு மூங்கிற் குழாய். குழங்கல் - மணங்கமழ்தல். விரைந்த என்னும் பயனிலைக்கு (894) மாசனம் எழுவாய்.

864. வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும்
பூச சுண்ணமு முண்ணு மடிசிலுங்
காசில் போகக் கலப்பையுங் கொண்டவண்
மாசின் மாசனம் வாயின் மடுத்தவே.

பொருள் : வாச எண்ணெயும் - மணந்தரும் எண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும் - வண்டுகள் முரலும் சந்தனமும்; பூசு சுண்ணமும் - பூசிக்கொள்ளும் நறுமணப் பொடியும்; உண்ணும் அடிசிலும் - உண்ணும் உணவும்; காசுஇல் போகக் கலப்பையும் - குற்றமற்ற இன்பந் தரக்கூடிய யாழ் முதலியவை வைத்த பெட்டியும்; கொண்டு - கைக்கொண்டு; மாசுஇல் மாசனம் அவண் வாயில் மடுத்த - குற்றம் அற்ற மக்கள் திரள்கள் அந்நகரின் வாயிலில் நிறைந்தன.

விளக்கம் : சுண்ணம் - நறுமணப்பொடி. காசு - குற்றம். கலப்பை - யாழ்ப் பேழை. மாசனம் - மக்கள் கூட்டங்கள். ( 14 )

865. பாட லோசையும் பண்ணொலி யோசையு
மாட லோசையு மார்ப்பொலி யோசையு
மோடை யானை யுரற்றொலி யோசைய
மூடு போயுயர் வானுல குற்றவே.

பொருள் : பாடல் ஓசையும் - பாட்டொலியும்; பண் ஒலி ஓசையும் - யாழ் வாசிக்கும் ஒலியும்; ஆடல் ஓசையும் - ஆட்டத்தினால் வந்த இயங்களின் ஒலியும்; ஆர்ப்பு ஒலி ஓசையும் - ஆரவாரத்தின் ஒலியும் ; ஓடை யானை உரற்று ஒலி ஓசையும் - முகபட்டம் அணிந்த களிறுகள் பிளிறும் ஒலியாற் பிறந்த ஓசையும்; ஊடுபோய் உயர் வான் உலகு உற்றவே - தம்முள் விரவிச் சென்று வானுலகை அடைந்தன.
 
விளக்கம் : பாடல் - மிடற்றுப் பாடல். பண் ஈண்டு ஆகுபெயர், யாழ் நரம்பென்க. ஒலியோசை: வினைத்தொகை; உரற்றொலியுமது. ஊடுபோதல் - ஒன்றனோடொன்று விரவிப்போதல். ( 15 )

866. பூக்க ணீர்விளை யாடிய பொன்னுல
கோக்க நீள்விசும் பூடறுத் தொய்யென
வீக்க மாநகர் வீழ்ந்தது போன்றவண்
மாக்கண் மாக்கடல் வெள்ள மடுத்ததே.

பொருள் : பொன் உலகு பூக்கள் நீர் விளையாடிய - பொன்னுலகு பூக்களையுடைய நீரிலே விளையாடுவதற்கு; ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து - உயர்ந்த நீண்ட வானத்தை ஊடறுத்து வந்து; வீக்கம் மாநகர் ஒய்யென விரைய வீழ்ந்தது போன்று - வளமிகுந்த பெரிய நகரில் விரைய வீழ்ந்ததுபோல்; அவண் மாக்கள் மாக்கடல் வெள்ளம் மடுத்தது - அங்கே மக்கள் திரளாகிய பெருங்கடல் வெள்ளத்தை நோக்கிச் சென்றது.
 
விளக்கம் : பூக்கண்ணீர் - பூவாகிய கண்களையுடைய நீரெனினுமாம். விளையாடிய: செய்யியவென்னும் எச்சம்; விளையாட என்க. ஓக்கம் - உயர்ச்சி. உயர்ச்சியையுடைய நீண்ட விசும்பென்க, ஒய்யென - விரைவுக் குறிப்பு. மாக்கண், மாக்கடல் : பண்புத்தொகை. ( 16 )

867. மின்னு வாட்டடங் கண்ணியர் வெம்முலைத்
துன்னு வாட்டந் தணித்தலிற் றூநிறத்
தன்ன வாட்டத் தணிமலர்ப் பூம்பொழி
லென்ன வாட்டமு மின்றிச்சென் றெய்தினார்.

பொருள் : மின்னு வாள்தடம் கண்ணியர் வெம்முலைத்துன்னு வாட்டம் - ஒலிசெயும் வாளனைய பெருங்கண்ணியரின் வெம்முலைகள் நெருங்குதலால் உண்டான மெய்வருத்தத்தை; தூநிறத்து அன்ன ஆட்டத்து அணிமலர்ப் பூம்பொழில் - தூய நிறமுடைய அன்னங்களின் விளையாட்டினையுடைய அழகிய மலர்ப்பொழில்; தணித்தலின் - போக்குவதனால்; என்ன வாட்டமும் இன்றிச் சென்று எய்தினார் - எத்தகைய சோர்வும் இன்றிச் சென்று அடைந்தனர்.

விளக்கம் : மின்போலும் இடையை மின் என்றார் எனக்கொண்டு, வெம்முலை நெருங்கலின் உண்டான சோர்வை இடைநீக்குதலின், அன்னங்களின் ஆட்டமுடைய பொழில் என்னுமாறு சென்று அப்பொழிலை அடைந்தார் என்பர் நச்சினார்க்கினியர். ( 17 )

868. அள்ளு டைக்குவ ளைக்கய நீடிய
கள்ளு டைக்கழு நீர்ப்புனற் பட்டமும்
புள்ளு டைக்கனி யிற்பொலி சோலையு
முள்ளு டைப்பொலி விற்றொரு பாலெலாம்.

பொருள் : அள்உடைக் குவளைக் கயம் - அள்ளிக் கொளலாந் தன்மையை உடைய நீலமலர் நிறைந்த குளத்தையும்; கள்உடைக் கழுநீர் நீடிய புனல் பட்டமும் - தேன் பொருந்திய கழுநீர் மலர்களையுடைய நீரறாத ஓடையையும்; புள் உடைக்கனியின் பொலி சோலையும் - பறவைகளையுடைய, கனிகளாற் பொலிவுற்ற பொழிலையும்; உள் உடைப் பொலிவிற்று ஒருபால் எலாம் - உள்ளே உடைய பொலிவினையுடையது அப் பொழிலின் ஒருபக்கம் எல்லாம்.
 
விளக்கம் : அள்ளுடை என்புழி அள்ளல் என்பதன் கடைக்குறையாகவும் கொள்ளலாம். அள்ளல் - சேறு. குவளைக்கயம் - குவளைமலர்ந்த குளம். புனற்பட்டம் - வற்றாத நீரோடை. பொலிவிற்று - பொலிவினையுடையது. ( 18 )

869. செம்பு றக்கனி வாழையுந் தேன்சொரி
கொம்பு றப்பழுத் திட்டன கோழரை
வம்பு றக்கனி மாத்தொடு வார்சுளைப்
பைம்பு றப்பல விற்றொரு பாலெலாம்.

பொருள் : செம்புறம் கனி வாழையும் - சிவந்த புறமுடைய கனிகளையுடைய வாழை மரங்களையும்; தேன்சொரி கொம்பு உறப் பழுத்திட்டன கோழ் அரை வம்பு உறக்கனி மா - தேனைச் சொரிந்து கொம்புகளிலுற்றே பழுத்தனவாகிய, கொழுவிய அடிமரத்தையுடைய, புதுமை பொருந்திய கனிகளையுடைய, மாமரங்களையும்; தொடு வார் சுளைப் பைம்புறப் பலவிற்று ஒருபாலெலாம் - தொடுத்த நீண்ட சுளைகளையுடைய, பசுமையான மேற்பக்கமுடைய பலாமரங்களையும் உடையது ஒருபக்கம் எல்லாம்.

விளக்கம் : கொம்புறப் பழுத்திட்டன தேன்சொரி என்னுந் தொடரைப் பலவிற்குக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். கோழரை - வழுவழுப்பான அடிமரம். வம்பு - புதுமை. மாத்தொடு. மாமரத்தினோடு. வார்சுளை - நீண்ட சுளை . பைம்புறம் - பசிய மேற்புறம். பலவிற்று - பலாமரத்தினையுடையது. ( 19 )

870. கள்ள வானர முங்கன்னி யூகமுந்
துள்ளு மானொடு வேழத் தொகுதியும்
வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவ
ணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே.

பொருள் : கள்ள வானரமும் - திருட்டுப் பண்புடைய குரங்கையும்; கன்னி யூகமும் - கன்னித் தன்மையுடைய கருங்குரங்கையும்; துளளும் மானொடு வேழத் தொகுதியும் - துள்ளும் மான்களையும், யானைத் திரள்களையும்; வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து - வெள்ளைநிற அன்னத்தையும் மயிலையும் அணிந்து; அவண் உள்ளும் மாந்தரை - அவ்விடம் தம் துணையை நினைக்கும் மக்களை; உள்ளம் புகற்றும் - நெஞ்சில் விருப்பமூட்டும்.

விளக்கம் : பிறர் பொருளைக் கவர்ந்துகோடலின் கள்ள வானரம் என்றார். கன்னியூகம் - கன்னிமையுடைய பெண்குரங்கு. தோகை: ஆகுபெயர்; மயில். உள்ளும் மாந்தர் என்றது தங்காதற்றுணைவரை நினைக்கும் மாந்தர் என்பதுபட நின்றது. ( 20 )

871. கோக்க ணங்கொதித் தேந்திய வேலென
நோக்க ணங்கனை யார்நுகர் - வேய்தலிற்
றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப்
பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே.

பொருள் : கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என - மன்னர் குழாம் சினந்து ஏந்திய வேல்போல; நோக்கு அணங்கு அனையார் நுகர்வு ஏய்தலின் - நேர்ககுகின்ற நோக்கினையுடைய தெய்வ மகளிர் போன்றவர் தம் கணவரிடம் நுகர்ச்சியால் அவர்களின் உறுப்புக்கள் செவ்விபெறுதலின்; தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரைப் பூக்கணம் - திருமகள் தங்கும் பெரிய தாமரைப் பூக்களின் தொகுதி; பொழில் பட்டது போன்றது - (நீர் நிலையினின்றும் நீங்கி) ஒரு பொழிலிலே தோன்றினதைப் போன்றது.
 
விளக்கம் : நோக்குதலால் அணங்கனையாருமாம். முகம் முதலிய தாமரைக்குவமை. கோக்கணம் - அரசர் குழாம். வேலென நோக்கும் நோக்கினையுடைய அணங்கு அனையார் என்க. வேல் - கண்ணிற்குவமை. ஏய்தல் - இயைதல். தாக்கணங்கு என்றது - திருமகளை. ( 21 )

872. கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவக
மூறித் தேன்றுளித் தொண்மது வார்மண
காரி நாண்மலர் வெண்மணற் றாய்நிழ
றேறித் தெண்கயம் புக்கது போன்றதே.

பொருள் : கூறப்பட்ட அக் கெய்ம்மலர்க் காவகம் - (இது வரை) கூறப்பட்ட அம் மலர்ப் பொழிலினுள்ளாகிய இடம்; தேன் ஊறித் துளித்து ஒண்மது ஆர் மணம் நாறி - தேன் ஊறித் துளித்து, அவ் வொள்ளிய தேனில் நிறைந்த மணம் எங்கும் கமழ்ந்து; நாள் மலர் வெண்மணல் தாய் - புதிய மலர்களும் வெண்மையான மணலும் பரவி; நிழல் தேறி - நிழல் தெளிந்து; தெண் கயம் புக்கது போன்றது - (இக் குளிர்ச்சியால்) தெளிந்த குளத்திலே சென்றாற் போன்றது.
 
விளக்கம் : கொய்ம்மலர் : வினைத்தொகை. காவகம் ஊறித் துளித்து நாறிமணல்தாய்த் தன்கண் புக்கவர்க்குக் குளிர்ச்சியால் கயம் போன்றது என்க. தேறி - தெளிந்து. தெண்கயம் - தெளிந்த நீரையுடைய குளம். ( 22 )

873. காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம்
பூவை யுங்கிளி யும்மிழற் றப்புகுந்
தாவி யந்துகி லாரமர்ந் தார்களே.

பொருள் : ஆவி அம் துகிலார் - பாலாவி போலும் துகிலையுடைய குணமாலையும் சுரமஞ்சரியும்; காவில் கண்டத் திரை வளைத்து - அப் பொழிலில், பலநிறக் கூறுபட்ட திரையை வளைத்து; ஆயிடை தம் பூவையும் கிளியும் மிழற்றப் புகுந்து - அங்கே தம்முடைய பூவையும் கிளியும் மழலை மொழியப் புகுந்து; விண்ணவர் மங்கையர் போன்று - வானவர் மகளிர் போல; மேவி அமர்ந்தார்கள் - விருப்பத்துடன் இருந்தனர்.
 
விளக்கம் : ஆவியத்துகிலார்: எழுவாய. அவர் குணமாலையும் சுரமஞ்சரியும் என்பது அடுத்த செய்யுளான் விளங்கும். கண்டத்திரை - பலவண்ணங்களாற் கூறுபட்டதிரை (வண்ணத் திரை) பூவை - நாகண வாய்ப்புள். ( 23 )

874. பௌவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவண்
மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரி
கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோ
டெவ்வந் தீர்ந்திருந் தாளிது கூறினாள்.

பொருள் : பௌவ நீர்ப் பவளக்கொடிபோல்பவள் - கடல் நீரிலே தோன்றிய பவளக்கொடி போன்றவளாகிய; மௌவல் அம் குழலாள் சுருமஞ்சரி - முல்லை மலரணிந்த கூந்தலையுடைய சுரமஞ்சரி; கொவ்வை அம் கனிவாய்க் குணமாலையோடு - கொவ்வைக் கனி அனைய வாயுடையாள் குணமாலையோடு; எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள் - வழிவந்த வருத்தம் தீர்ந்து இப்போது இதனைக் கூறினாள்.

விளக்கம் : பௌவநீர்ப்பவளக்கொடி - சுரமஞ்சரிக்குவமை. இஃது அவள் குலநலமும் அழகு நலனும் குறித்துவந்த உவமை என்க. மௌவல் - முல்லை. மௌவல்குழலாள் என்றது அவள் கற்புநலம் கூறிற்று. ( 24 )

875. தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குற்
றாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினா
ணாமஞ் சூடிய நன்னுத னீட்டினாள்
காமஞ் சூடிய கண்ணொளிர் சுண்ணமே.

பொருள் : தூமம் சூடிய தூரத்துகில் ஏந்து அல்குல் - அகிற் புகை தாங்கிய தூய ஆடையைத் தாங்கிய அல்குலையும்; தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள் - மாலை யணிந்த வேலனைய பெருங கண்களையும் உடையவள் ஆகிய குணமாலையின்; நாமம் சூடிய நன்னுதல் - பெயரைக் கொண்ட அழகிய நெற்றியை உடைய தோழி; காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணம் நீட்டினாள் - விருப்பத்தைக் கொண்ட, கண்ணுக்கு ஒளியான சுண்ணப் பொடியைக் காட்டினாள்.
 
விளக்கம் : நச்சினார்க்சினியா இச் செய்யுளினையும் முன் செய்யுளையும் (874 - 875) ஒரு தொடராக்கிக் கொண்டுகூட்டிக் கூறும் உரை: அங்ஙனம் இருந்த காலத்தே குணமாலை பெயரைச் சுமந்த மாலையென்னுஞ் சேடி, எல்லோரும் விரும்புந் தன்மையை மேற்கொண்ட சுண்ணத்தை நீட்டினாள்; அது கண்டு கொடிபோல் வாள் குழலாள் சுரமஞ்சரி, அவள் குணமாலையுடனே இவ் வார்த்தையைக் கூறினாள். ( 25 )

876. சுண்ண மென்பதோர் பேர்கொடு சோர்குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவா
னெண்ணி வந்தன கூறிவை யோவென
நண்ணி மாலையை நக்கன ளென்பவே.

பொருள் : சோர்குழல் வண்ண மாலை - சோர் குழலையுடைய குணமாலையே!; சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு - சுண்ணம் என்பதாகிய ஒரு பேரைக் கொண்டு; நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன - (சுமப்போர்) இடையை வருத்த நினைத்து (நின் சுண்ணம்) வந்தனபோலும்!; இவையோ! - (என் சுண்ணமாகிய) இவை யாகுமோ நின் சுண்ணம்?; கூறு என - சொல்லென்று; மாலையை நண்ணி நக்கனள் - குணமாலையை நெருங்கிய நகையாடினாள்.
 
விளக்கம் : என்ப, ஏ : அசைகள். நச்சினார்க்கினியர். குழலையும் நுசுப்பையும் உடைய மாலாய் ! இவை சுண்ண மென்னும் பெயரை ஏறட்டுக்கொண்டு நின்னை வருத்துவான் கருதி வந்தனவோ என்றணுகி அவளைத் தான் நக்காள். நக்கு, சொல்லின், என்னுடைய சுண்ணங்களைச் சொல்லாய், எனச் சொன்னாள் என்று கொண்டு கூட்டி உரைப்பர். ( 26 )

877. பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை
யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற்
செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக்
கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள்.

பொருள் : பைம்பொன் நீள் உலகு அன்றி - பெரிய பசும் பொன்னுலகில் அன்றி; இப் பார்மிசை இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில் - இவ்வுலகிலே இவ்விடத்தே என் சுண்ணத்தை ஒப்பன உள்ளன என்றால்; செம்பொன் பாவை அன்னாய்!- செம்பொன் பாவை போன்ற சுரமஞ்சரியே!; நீ செப்பு என - நீ கூறுக என்று குணமாலை சொல்ல; கொம்பு அன்னாளும் கொதித்து இது கூறினாள் - மலர்க் கொம்பு போன்ற சுரமஞ்சரியும் சினந்து இதனைக் கூறினாள்.
 
விளக்கம் : இம்பர் - இவ்விடத்தே. கொம்பனாள் - பூங்கொம்பு போன்றவளாகிய சுரமஞ்சரி. ( 27 )

878. சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல
மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென
வண்ண வார்குழ லேழையர் தம்முளே
கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே.

பொருள் : சுண்ணம் தோற்றனம் தீம்புனல் ஆடலம் - சுண்ணப் பொடியாலே தோற்றோம் எனில் நீராடுவேமல்லேம்; வென்றார்க்கு எண் இல் கோடி பொன் ஈதும் என - அருகனுக்கு மாற்றற்ற கோடி பொன்னைக் கொடுக்கக் கடவேம் என்று சொல்ல; வண்ணம் வார்குழல் ஏழையர் கமழ் சுண்ணத்தின் - அழகிய நீண்ட கூந்தலையுடைய பேதையர் மணந்தரும் சுண்ணத்தினால்; தம்முளே கண் அற்றார் - தங்களுக்குள்ளே அன்பை விட்டனர்.
 
விளக்கம் : சுண்ணம் தோற்றலாவது - ஒருவர் சுண்ணம் ஒருவர் சுண்ணத்திற்குத் தாழ்ந்ததாய் அதனையுடையார் தோல்வியுறுதல். ஆடலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. வென்றான் - ஈண்டு அருகக்கடவுள். கண்ணுறுதல் - பகைமை கோடல். ( 28 )

வேறு
 
879. மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற்
கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச்
சொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள்
வெல்வது சூதென வேண்டி விடுத்தார்.

பொருள் : மல்லிகை மாலை மணம் கமழ் வார்குழல் கொல் இயல் வேல்நெடுங் கண்ணியர் கூடி - மல்லிகை மாலையும் மணம் வீசும் நீண்ட குழலும் உடைய, கொல்லும் தன்மையுடைய வேலனைய நீண்ட கண்ணியர் இருவரும் கூடி; சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள் - சொல்லும் புகழிலே உயர்ந்த சுண்ண மாறுபாட்டிலே; சூது வெல்வது என வேண்டி விடுத்தார் - ஐயத்தை ஒழிப்பது என்று விரும்பித் தம் பணிப் பெண்களை அவற்றைக் காட்டி வருமாறு போகவிட்டனர்.
 
விளக்கம் : சுண்ணத்தினது மாறுபாட்டிலே வெல்லுமது நமக்குச் சொல்லும் புகழ் மேம்படும் வெற்றியென்று அவ் வெற்றியை விரும்பிப் போகவிட்டார் என்று கொண்டு கூட்டியுரைப்பர் நச்சினார்க்கினியர்.  சூது - ஐயம். கொல் - கொற்றொழிலுமாம். ( 29 )

880. இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற்
றட்டிடை யந்துகில் மூடிய தன்பினர்
நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டன மென்முலை மொய்குழ லாரே.

பொருள் : தாமரை மொட்டு அன மென்முலை மொய்குழலார் - தாமரை அரும்பனைய மென்முலையுடைய செறிந்த கூந்தலார் ஆகிய கனகபதாகை, மாலை என்போர்; இடு இடையார் இரு மங்கையர் ஏந்து பொன் தட்டிடை - நுண்ணிடையாராகிய இரு பணிப்பெண்கள் ஏந்திய (சுண்ணம் வைத்த) பொன் தட்டின்மேல்; அம் துகில் மூடி - அழகிய துணிகொண்டு மூடி; அதன்பினர் - சுண்ணத்தின் பின்னர் ; நெடுஇடை நீந்துபு சென்றனர் - நெடுந்தொலைவாக (மக்கள் திரளை) நீந்திச் சென்றனர்.
 
விளக்கம் : கனகபதாகை - சுரமஞ்சரியின் தோழி. மாலை - குணமாலையின் தோழி. இட்டிடையார் - சுரமஞ்சரியும் குணமாலையும் எனவும். இரு மங்கையர் கனகபதாகை, மாலை எனவும், மொய்குழலார் சேடியர் எனவும் நச்சினார்க்கினியர் கூறுவர். ( 30 )

வேறு
 
881. சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை
மாலை சேர்ந்து
வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர்கைக்
காட்ட மைந்த
ரேர்தங்கு சுண்ண மிவற்றின்நலம்
வேண்டின் வெம்போர்க்
கார்தங்கு வண்கைக் கழற்சீவகற்
காண்மி னென்றார்.

பொருள் : சீர்தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து - சீருடைய கனகபதாகையும் மாலையும் கூடி ; வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கைக்காட்ட - கட்டப்பட்ட பொற்கழலணிந்த மைந்தர்களின் கையிலே அவற்றைக் காட்ட; மைந்தர் - அம் மைந்தர்கள்; ஏர்தங்கு சுண்ணம் - இவையிரண்டுமே அழகிய சுண்ணங்கள்; இவற்றின் நலம் வேண்டின் - இவற்றின் நன்மையைச் சிறப்புற அறிய விரும்பின்; வெம்போர்க் கார் தங்கு வண்கைக் கழல் - போரில் வல்ல, முகிலனைய கொடையுறு கையை உடைய, கழலணிந்த; சீவகன் காண்மின் என்றார் - சீவகனைக் கண்டு காட்டுவீராக என்றனர்.
 
விளக்கம் : மாலை என்பதற்கேற்ப மல்லிகை அடை கூறினார். மைந்தர் - ஈண்டு ஏதிலராகிய சில மைந்தர் என்றவாறு. ஏர்தங்கு சுண்ணம் என்றது இவை இரண்டுமே அழகிய சுண்ணங்களாகவே எமக்குத் தோன்றுகின்றன என்பதுபட நின்றது. இவற்று இன்நலம் எனக்கண்ணழித்து இவற்றின் அழகினையன்றி இனிமையின் நன்மையை நீங்கள் அறியவிரும்பின் எனப் பொருள் விரித்திடுக. வெம்போர்க்கை, வண்கை எனத் தனித்தனி கூட்டுக. சீவகற் காண்மின் என்றது சீவகனைக் கண்டு அவனுக்குக் காட்டி வினவுவீராக என்பது படநின்றது. ( 31 )

882. வாண்மின்னு வண்கை வடிநூற்கடற்
கேள்வி மைந்தர்
தாண்மின்னு வீங்கு கழலான்றனைச்
சூழ மற்றப்
பூண்மின்னு மார்பன் பொலிந்தாங்கிருந்
தான்வி சும்பிற்
கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித்
தோற்ற மொத்தே.

பொருள் : வாள்மின்னு வண்கை வடிநூல் கடல் கேள்வி மைந்தர் - வாள் மின்னற்குக் காரணமான வளவிய கையினையும், தெளிந்த கடலனைய நூற்கேள்வியையும் உடைய தோழரும் தம்பியரும்; தாள் மின்னு வீங்கு கழலான் தனைச்சூழ - காலில்மின்னுமாறு கட்டிய கழலானாகிய தன்னைச் சூழ்ந்திருக்க; அப்பூண் மின்னும் மார்பன் - சீவகனாகிய அந்த அணிகலன் ஒளிரும் மார்பன்; விசும்பில் கோள்மின்னும் மீன் சூழ் - வானில், கோண்மீனும் விண்மீனும் சூழ்ந்த; குளிர் மாமதித் தோற்றம் ஒத்து ஆங்கு இருந்தான் - தண்ணிய பெரிய திங்களின் தோற்றம் போல அவ்விடத்திருந்தான்.

விளக்கம் : வீக்கு கழல் என்பது வீங்கு கழல் என விகாரப்பட்டது. கழலான் நந்தட்டன் எனவும், மார்பன் சீவகன் எனவும் நச்சினார்க்கினியர் வேற பிரித்துக் கூறுவர். அவரே, கழலானாகிய மார்பன் என்பாரும் உளர் என்று கூறுவதனால் ஒன்றாகக் கூறுதலே சிறப்புடைத்து. ஞாயிறு போல்வான் எனினும் கலையைத் தோற்றுவிப்ப இருத்தலின் ஈண்டு மதியை உவமை கூறினார். பன்மீன் நடுவண் பால்மதி போல - இன்னகை ஆயமோ டிருந்தோற் குறுகி (சிறுபாண் 219 - 20.) என்றார் பிறரும். இராகு கேதுக்களை ஒழிந்த ஏழு கோள்களும் சூழப்பட்டதொரு மதி இல்பொருளுவமை தோழர் நால்வரும் தம்பிமார் மூவரும் கோள்மீனுக்குவமை; மின்னும் மீனுக்கு ஒழிந்த தோழருவமை. இனி, ஞாயிறுந் திங்களும் தனக்குவமையாதலின், ஒழிந்த ஏழுகோளுமாம். ( 32 )

வேறு
 
883. காளை சீவகன் கட்டியங் காரனைத்
தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல்
வாளை வவ்வியி கண்ணியர் வார்கழற்
றாளை யேத்துபு தங்குறை செப்பினார்.

பொருள் : காளை சீவகன் - காளையாகிய சீவகன் ; கட்டியங்காரனைத் தோளை ஈர்ந்திடவே - கட்டியங்காரன் தோளைப் பிளக்கவே; துணிவுற்ற நல்வாளை வவ்விய கண்ணியர் - துணிவு கொண்ட நல்ல வாளின் தன்மையைக் கொண்ட கண்களையுடைய அம் மங்கயைர்; வார்கழல் தாளை யேத்துபு தம்குறை செப்பினார் - நீண்ட கழலணிந்த காலை வணங்கித் தம் குறையைக் கூறினர்.

விளக்கம் : செய்ந்நன்றியறிந்து கைம்மாறு செய்யக்கருதுதலும் பகைவர் செய்த தீங்கு குறித்து அவர்க்குத் தீங்குசெய்யக் கருதுதலும் அரசநீதி என்பது தோன்ற தோளையீர்ந்திடவே துணிவுற்ற வாள் என்றார். ஆதியாய அரும்பகை நாட்டுதல் (1920) என்றார் மேலும் என்பர் நச்சினார்க்கினியர். ( 33 )

884. சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக்
கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங்
கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல்
வண்ண மாலையி னீரெனக் கூறினான்.

பொருள் : அண்ணல் ! நல்லன சுண்ணம் சூழ்ந்து அறிந்து - அண்ணலே ! நல்லனவாகிய சுண்ணத்தை ஆராய்ந்து பார்த்து; எங்களுக்குக் கூறு - எங்கட்குச் சொல்க; அடியேம் குறை என்றலும் - இதுவே அடியேம் வேண்டுகோள் என்று அம்மங்கையர் கூறினவுடன்; கண்ணின் கண்டு - கண்ணாலே பார்த்து; கருங்குழல் வண்ண மாலையினீர்! - கரிய குழலில் அழகிய மாலையுடையீர் !; இவை நல்ல எனக் கூறினான் - இவை நல்லவை என்று கூறினான்.

விளக்கம் : இவை நல்ல எனக் குணமாலையின் சுண்ணத்தைக் கூறினான். அவர்கள், இரண்டையும் நல்ல எனக் கூறுகிறான் என்றெண்ணினர். பலவுங் கூட்டி இடித்தலின் இவை எனச் சுண்ணத்தைச் கூறுகிறார். ( 34 )

885. மற்றிம் மாநகர் மாந்தர்கள் யாவரு
முற்று நாயியுங் கண்டு முணர்ந்திவை
பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி
கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ.

பொருள் : இம் மாநகர் மாந்தர்கள் யாவரும் - இப்பெருநகரில் உள்ள மக்கள் எல்லோரும்; உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்து - தொட்டும் மோந்தும் பார்த்தும் ஆராய்ந்து; இவை பொற்ற சுண்ணம் எனப் புகழ்ந்தார் - (வேறுபாடு கூறாமல்) இவை நல்ல சுண்ணப் பொடி என்று புகழ்ந்தனர்; நம்பி! கற்றதும் அவர் தங்களொடே கொல்?- நம்பியே! நீ கற்றதும் அவர்களுடனேயோ?
 
விளக்கம் : உற்றும், என்றது கையாற்றொட்டுப் பார்த்தும் என்றவாறு. நாறியும் என்றது, மூக்கான் முகந்து பார்த்தும் என்றவாறு. பொற்றசுண்ணம் - பொலிவுடைய பொடி. நம்பி கற்றதும் அவர் தங்களொடே கொலோ என்றது, சீவகனை அம்மகளிர் அசதியாடியபடியாம். நீ நன்கு இதனை ஆராய்ந்து பாராமல் கூறுகின்றனை என்பது கருத்து. ( 35 )

886. ஐய னேயறி யும்மென வந்தனம்
பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ
நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதங்
கையி னாற்றொழு தார்கமழ் கோதையார்.

பொருள் : ஐயனே அறியும் என வந்தனம் - சீவகனே அறிவான் என்று பிறர்கூறக் கேட்டு நின்னிடம் வந்தோம்; நூற்கடல் ! அது பொய் அன்றிப் புலமை நுணுக்கி - நூற் கடலே! அது பொய் ஆகாமற் புலமையானே நுண்ணியதாக ஆராய்ந்து; நொய்தின் தேர்ந்து நீ உரை என்று - விரைந்து தெரிந்து நீ கூறுக என்று; கமழ் கோதையார் தம் கையினால் தொழுதார் - மணக்கும் மலர்மாலையார் தம் கையினாலே தொழுதனர்.
 
விளக்கம் : புலமை - நுண்மாணுழைபுலம். நுணுக்குதலாவது. அதனைப் பின்னும் கூரிதாக்கி ஆராய்ந்தல். நொய்தின் - விரைவின். நூற்கடல: அன்மொழித்தொகை ஈண்டு விளியாக நின்றது. ( 36 )

887. நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி
தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற்
புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண
மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே.

பொருள் : இவை நல்ல சுண்ணம் - இவை தூய சுண்ணம்; இவை இவற்றின் சிறிது அல்ல சுண்ணம் - இவை இவற்றினும் சிறிது நல்லவையல்லாத சுண்ணம்; அதற்கு என்னை என்றிரேல் - அதற்குக் காரணம் என்னென்று வினவினிரேல்; பொற்பு உடைப் பூஞ்சுண்ணம் புல்லு கோடைய - நன்மையுடைய அழகிய இச் சுண்ணம் பொருந்திய கோடையில் இடித்தவை; அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே - மற்றவை குளிர்ச்சியுடைய மாரி காலத்தில் இடித்தவை(என்றான்).

விளக்கம் : இவை நல்ல சுண்ணம் என்றும், இவை இவற்றிற் சிறிது அல்ல சுண்ணம் எனவும் சுட்டினை ஈரிடத்துங் கொள்க. நல்ல என்பதனை இவற்றிற் சிறிது நல்ல அல்ல என்றும் ஓட்டுக. இவை தீயசுண்ணம் என்னாது நல்ல அல்ல சுண்ணம் என்றது சீவகனுடைய மொழித் திறத்திற்கொர் சான்றாம். ( 37 )

888. வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந்
தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா
மோரும் வையத் தியற்கையன் றோவெனா
வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள்.

பொருள் : வாரம் பட்டுழித் தீயவும் நல்ல ஆம் - ஒருவர் மேல் அன்புற்ற காலத்து அவர்செய்யும் தீங்குகளும் நல்ல ஆகும்; தீரக் காய்ந் துழி நல்லவும் தீய ஆம் - முற்றும் வெறுப்புற்ற காலத்து அவர் செய்யும் நன்மைகளும் தீய ஆகும்; வையத்து இயற்கை அன்றோ? ஓரும் என - உலக இயற்கையிஃது அன்றோ ? ஆராய்ந்து பாரும் என்று; வீரவேல் நெடுங் கண்ணி விளம்பினாள் - வீர வேலனைய நீண்ட கண்ணினளாகிய கனகபத்கை கூறினாள்.
 
விளக்கம் : ஓரும் என்னும் முற்றுச்சொல், பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை(தொல். வினை. 30) என்ற சூத்திரத்தில் விளக்கின நிகழ்கால உம்மீறன்றி எதிர்கால உணர்த்தும் முன்னிலைப் பன்மையாகலின். இஃது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. இச் செய்யுட் கருத்தோடு காய்வதன்கண் உற்ற குணந்தோன்றாதாகும், உவப்பதன்கண் குற்றமுந் தோன்றா கெடும் எனவரும் அறநெறிச்சாரவெண்பா (23) நினைவுகூரற்பாலது. ( 38 )

889. உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால்
வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக்
கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற்
றெள்ளி நெஞ்சிற் றெளிகெனச் செப்பினான்.

பொருள் : வள்ளல்! - வள்ளலே !; உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் - நீ கூறிய குறைகளை என் நெஞ்சு கொள்ளத் தெளிவித்தால் அன்றி; நீங்கப் பெறாய், வளைத்தேன் என - போகப் பெறாய் ; நின்னைத் தடுத்தேன் என்று கனகபதாகை மேலும் வற்புறுத்த; கள்செய் கோதையினாய்!- தேன் துளிக்கும் மாலையினாய்!; கரிபோக்கினால் - சான்று விடுத்தால்; நெஞ்சில் தெள்ளித் தெளிக எனச் செப்பினான் - உள்ளத்தே ஆராய்ந்து தெளிக என்று சீவகனும் கூறினான். 

விளக்கம் : போக்குதல், நூலாற் போக்குதல் என்றாற்போல உணர்த்தன்மேற்று. வள்ளல் : விளி. கரி - சான்று. ( 39 )

890. கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு
மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை
நண்ணு தீஞ்சொ னவின்றபு ளாதியா
மண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள்.

பொருள் : அண்ணல் ! - பெருந்தகையே!; எண்ணின் - எண்ணினால்; கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும் - கண்ணை உடைய மக்களினும் கண் இமையாதவர்களினும்; நின் சொல் இகந்து அறிவார் இலை - உன் சொல்லைக் கடந்தறிவார் இல்லை; நண்ணு தீஞ்சொல் நவின்றபுள் ஆதியா - (ஆதலின் அவர்களை ஒழிய) தம்மினத்தில் ஒன்றை ஒன்று அழைக்குஞ் சொல்லையறிந்து பயின்ற பறவைகள் முதலாக; நீக்கின அஃது - தெளிந்து இச் சுண்ணத்தை நீக்கின் அதனை; ஒட்டுவல் யான் என்றாள் - பொருந்துவேன் நான் என்றாள்.
 
விளக்கம் : கண்ணின் மாந்தர் என்றது இமைக்கும் கண்ணையுடைய மாந்தர் என்பதுபட நின்றது. இகத்தல் - கடத்தல். ( 40 )

891. காவில் வாழ்பவர் நால்வ ருளார்கரி
போவர் பொன்னனை யாயெனக் கைதொழு
தேவ லெம்பெரு மான்சொன்ன வாறென்றாள்
கோவை நித்தில மென்முலைக் கொம்பன்றாள்.

பொருள் : பொன் அனையாய்! - திருவைப் போன்றவளே!; காவில் வாழ்பவர் நால்வர் உளார் - பொழிலில் வாழ்பவர் நால்வர் (பறவை யினத்தவர்) உளார்; கரி போவர் என - அவர்கள் சான்று வருவர் என்று சொல்ல; கோவை நித்திலம் மென்முலைக் கொம்பு அனாள் - முத்துமாலை அணிந்த மென்மையான முலையை உடைய பூங்கொம்பு போன்றவள் ; கைதொழுது எம்பெருமான் சொன்னவாறு ஏவல் என்றாள் - கைகூப்பி எம்மிறையே நீ கூறியவாறே யாம் இத்தன்மை ஆம் என்றாள்.

விளக்கம் : நால்வர் என்று உயர்திணையாற் கூறுதல். ஒருவரைக் கூறும் (தொல். கிளவி. 27) என்னுஞ் சூத்திரத்து ஒன்றென முடித்தலாற் கொள்க. நால்வர் உளர் என்றது, நான்குவகைப் பறவைகள் (வண்டுகள்) உள என்றவாறு. அவை சான்றாஞ் சிறப்பு நோக்கி உயர்திணையாக ஓதினன் என்று சீவகன் கூற என வினைமுதல் விருவித்தோதுக. கொம்பனாள்: கனகபதாகை. ( 41 )

892. மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன்
றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்.

பொருள் : மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று - மங்கையராகிய நல்லவரின் கண்ணையும் உள்ளத்தையும் போல; எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்! - எங்கும் கடிதாக ஓடித் தட்டித் திரியும் சுரும்புகளே ! ; ஒண் மிஞிற்று ஈட்டங்காள் - ஒள்ளிய மிஞிற்றின் திரள்களே!; மது உண்டு மகிழ் வண்டுகாள்!- தேனுண்டு மகிழும் வண்டுகளே!; மது உண்டு தேக்கிடும் தேனினங்கள் - தேன் உண்டு தேக்கெறியும் தேன் திரள்களே.

விளக்கம் : இஃது அடுத்த செய்யுளுடன் தொடரும். இவ்வாறு கொண்டு கூட்டுவது நச்சினார்க்கினியர் கருத்தே. அவர் கூறும் அதற்குரிய காரணமும் பறவைகட்குச் செவியறிவு உண்டா என்னும் ஆராய்ச்சியும் சீவகன் விலங்கு பறவை முதலியவற்றின் ஒலிக்குறிப்பை அறிவானென்பதும் பின்வருமாறு: கண்ணும் மனமும்போன்று எங்கும் கடிதாக ஓடித் தட்டித்திரியும் சுரும்புகாள் மிஞிறுகாள் என்க. மிஞிற்றிற் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார். கண் சென்றுழிச் செல்கின்ற மனத்தொடே உவமித்தலின் இது நிரனிறை; இவை எல்லா மணத்திலும் செல்லும். மதுவுண்டு மகிழ்கின்ற வண்டுகாள்! மதுவுண்டு தேக்கிடுகின்ற தேன்காள்! என்க. இவை நல்ல மணத்தே செல்லும். (சீவக. 3033, 3034) சுரும்பு முதலியன கூறும் பாஷையைச் சீவகன் உணர்ந்திருத்தலின், அதனால் அவற்றை அழைத்தான் என்று கொள்க; விக்கிரமாதித்தன் எறும்பின் மொழியை அறிந்தான் என்று கதை கூறுகின்றமையின். தாதுண்தும்பி போது முரன் றாங்கு (மதுரைக். 655) என்றும், இரங்கிசை மிஞிறொடு தும்பி தா தூத (கலி. 33) என்றும் கூறுதலின், தும்பியது கிளையாம் இந் நான்கும் என்க. நண்டுந் தும்பியும் நான்கறிவினவே - பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். மரபு 31) என்று தும்பிக்குச் செவியின் றெனவே, இவற்றிற்குஞ் செவியின்றாம் ஆதலின், வருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி வேறன்று. இவை ஈண்டு வந்து கரிபோதலில்; கேள்வியில்லன வருதல் என்னை? என்பது கடா. அதற்கு விடை : ஆசிரியர் நண்டுந் தும்பியும் என்று தும்பியைப் பின் வைத்தது, மேல்வருஞ் சூத்திரத்தின், மாவும் மாக்களும் ஐயறி வென்ப (தொல். மரபு. 32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற் கென்றுணர்க. இதனை, வாராததனால் வந்தது முடித்தல் என்னுந் தந்திர வுத்தியாற் கொள்க வென்று ஆண்டு உரை கூறிப் போந்தாம். (இதனால் நச்சினார்க்கினியர் இந் நூலுக்கு உரை செய்வதற்கு முன்னரே தொல்காப்பிய உரை செய்தாரென்பது தெளிவு) அதுவே ஆசிரியர் கருத்தென்பது சான்றோர் உணர்ந்தன்றே, பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த - தா துண்பறவை பேதுறல் அஞ்சி, மணிநா யாத்த மாண்வினைத் தேரன் (அகநா. 4) என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்றுணர்க. இக் கருத்தான் இவரும் செவியுணர்வுண்டென்று கூறினார்.
 
இங்ஙனம் கூறாது தான்கற்ற விஞ்சையின் ஆணையாற் கேள்வியுணர்வு பிறப்பித்தான் எனின், அவை கரிபோத லாகாவாம், எண்ணின் நின்சொல் இகந்தறிவாரிலை (சீவக. 890) என்றலின். (இவ்வாறு நச்சினார்க்கினியர் வண்டுகடகுச் செவியுணர் பேற்ற முயல வேண்டுவதென்னை? காவியக் கற்பனை யெனல் சாலாதோ?) ( 42 )

893. சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமு
மாலை யென்னு மடமயில் சுண்ணமுஞ்
சால நல்லன தம்முளு மிக்கன
கோல மாகக்கொண் டுண்மி னெனச்சொன்னான்.

பொருள் : சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும் - பொழில் மயில் போல்வாள் சுரமஞ்சரியின் சுண்ணமும்; மாலை என்னும் மடமயில் சுண்ணமும் - குணமாலை யென்னும் இளமயில் போல்வாளின் சுண்ணமும்; சால நல்லன - மிகவும் நல்லனவே; தம்முளும் மிக்கன - அவற்றினுள்ளும் சிறந்தவற்றை; கோலம் ஆகக் கொண்டு உண்மின் எனச் சொன்னான் - நல்லன என்றறிந்து கொண்டு உண்மின் எனச் சொன்னான்.

விளக்கம் : வெறாதிருத்ததற்கு இருவரையும் மயில் என்றான். மஞ்ஞைபோல்பவளாகிய சுரமை எனக். சுரமை: சுரமஞ்சரி. மாலை: குணமாலை. கோலம் - அழகு ஈண்டு நன்மைப் பண்பின் மேனின்றது. ( 43 )

894. வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை
விண்ணிற் றூவியிட் டான்வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே.

பொருள் : வண்ணம் வார்சிலை வள்ளல் கொண்டு - (இங்ஙனம் கூறிய) அழகிய நீண்ட வில்லேந்திய சீவக வள்ளல் இரண்டையும் இரண்டு கையிலும் கொண்டு; ஆயிடை விண்ணில் தூவியிட்டான் - ஆங்கே வானிலே தூவிவிட்டான்; மங்கை சுரமைய சுண்ணம் வீழ்ந்தன - மங்கை சுரமஞ்சரியின் சுண்ணம் நிலத்தே வீழ்ந்தன; மாலைய வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே - குணமாலையின் சுண்ணங்களை அழகிய வண்டும் தேனும் கவர்ந்துண்டன.
 
விளக்கம் : இச் செய்யுளாலும் வண்டும் தேனும் சிறந்தன என்பது தெரிகிறது. தூவியிட்டான்: ஒருசொல். சுரும்பும் மிஞிறும் ஒரு பண்பினவாதலின் சேர்ந்து ஒரு கையை (சுரமை சுண்ணம்) நோக்கின. (எனினும், உண்ணவில்லை) மற்றைய ஒரு பண்புடையவாகலின், சேர்ந்து மற்றைக் கையை நோக்கின. உண்ணாமல் வந்தவற்றிற்கு வைத்திடாமல் இவை கடிதுண்டன என்பது தோன்றக், கவர்ந்து என்றார். ( 44 )

895. தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம்
வைத்த போன்முறு வற்றுவர் வாயினீ
ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க்
குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொன்னான்.

பொருள் : தத்தும் நீர்ப்பவளத்து உறை நித்திலம் வைத்தபோல் - தத்தும் அலைநீரில் தோன்றிய பவளத்தே இருப்பன சில முத்துக்களைக் கொண்டு வந்து வைத்தாற்போலும்; முறுவல் துவர் வாயினீர் - முறுவலுடைய செவ்வாயினீர்!; ஒத்ததோ என நோக்க - (நாள் கூறிய நடுநிலை நுங்கட்குப்) பொருந்தியதோ என்று (இருவர் முகமும்) நோக்கி ; நும் நங்கைமார்க்கு இவ்வண்ணம் உய்த்து உரைமின் எனச் சொன்னான் - நும் தலைவியர்க்கு யான் தேற்றின முறையை மனம் கொள்ளுமாறு கூறுவீர் என்றனன்.
 
விளக்கம் : வேட்கை நிகழாத போதும் மகளிரைச் சிறப்பித்துக் கூறல் இயல்பு என்பது தோன்ற இருவரையும் சிறப்பித்துக் கூறினான். ( 45 )

896. நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக்
கோல மாக வெழுதிய போற்குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண்
போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள்.

பொருள் : நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ - நீல மணியை நன்றாகக் கரைத்து நிறமும் கலந்து; கோலம் ஆக எழுதிய போல் குலாய் - அழகுற எழுதியவைபோல் வளைந்து; ஞாலம் விற்கும் புருவத்து - உலகை விற்கும் புருவத்தினையுடைய ; நங்கை கண்போலும் வேலவனே!- சுரமஞ்சரியின் கண்களைப் போலத் தப்பாத வேலவனே!; புகழ்ந்தேன் என்றாள் - நீ தேற்றின முறையை யான் உடம்பட்டுப் புகழ்ந்தேன் என்று கனகபதாகை கூறினாள்.

விளக்கம் : இவன் தெளிவித்த முறை இவற்கு வேட்கை நிகழ்வது கருத்தாகக் கூறினாள்; அது மேல், என் மனத்தின் உள்ளன (சீவக. 2006) என்பதனான் உணர்க. ( 46 )

வேறு
 
897. சோலையஞ் சுரும்பிற் சுண்ணந்
தேற்றிய தோன்ற றன்னை
வேலையம் படுத்த கண்ணார்
தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற
மழையிடிப் புண்டோர் நாக
மாலையத் தழுங்கி யாங்கு
மஞ்சரி யவல முற்றாள்.

பொருள் : சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை - பொழிலின்கண் வாழும் அழகிய வண்டுகளாற் சுண்ணத்தைத் தெளிவித்த சீவகனை; வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி - வேலோ என்று ஐயப்படுத்தின கண்ணினர் தொழுது விரைந்து சென்று; மாலைக்கு வென்றி கூற - குணமாலைக்கு வெற்றி என்று சொல்ல; ம்ழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்து அழுங்கி ஆங்கு - முகிலிடியுண்டு ஒரு பாம்பு தானுறையும் இடத்தே வருந்தினாற்போல; மஞ்சரி அவலம் உற்றாள் - சுரமஞ்சரி வருத்தமடைந்தாள்.
 
விளக்கம் : தோன்றல் - சீவகன். தொழுதனர்- முற்றெச்சம். மாலை : குணமாலை. ஆலையம் - உறையுள். மஞ்சரி : சுரமஞ்சரி. (47)

வேறு
 
898. திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட
பங்க யப்படு வொத்துளை பாவாய்
நங்கை யென்னொடு ரையாய்நனி யொல்லே
யிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள்.

பொருள் : திங்கள் அம் கதிர் செற்று நங்கை உழக்கப்பட்ட - திங்களின் அழகிய கதிர் தாக்கிக் கலக்கமுற்ற; பங்கயப்படு ஒத்துஉளை பாவாய்! - தாமரை மடுவைப் போல வருந்தும் பாவையே! நங்கையே!, இங்கண் என்னொடு நனி ஒல்லே உரையாய் - இங்கு என்னொடு இனிமையாக முன்புபோல விரைந்து உரையாடுவாய்!; என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள் - என்று அவளடியிலே விழுந்து வேண்டினாள் குணமாலை.

விளக்கம் : ஒத்துளை - ஒத்தாய் என்றுமாம். இயற்கையிலேயே தண்மையுடைய திங்களின் கதிர் தீங்கிலதாகவும் அக்கதிர் கண்டாற்றாது வருந்துதல் தாமரைக்கியல்பு. நின் வருத்தத்திற்குக் காரணம் என் வெறறியன்று, நீ காரணமின்றியே கலங்குகின்றனை என்பாள், இங்ஙனம் உவமை தேர்ந்து கூறினாள் எனக. பங்கயப்படு ஒத்துளை பாவாய் என்றாரேனும் படுவிற்பங்கயம் ஒத்து என்றல் கருத்தாகக் கொள்க; என்னை? திங்கட் கதிர்க்கு உளைவது தாமரையேயல்லது படுவன்மையான் என்க. படு - மடு. ( 48 )

899. மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென்
னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற்
றோற்று வந்தென் சிலம்படி கைதொழ
நோற்ப னோற்றனை நீயென வேகினாள்.

பொருள் : மாற்றம் ஒன்று உரையாள் - சுரமஞ்சரி விடை ஏதும் கூறிலளாய்; மழை வள்ளல் - முகிலனைய கொடையாளியான சீவகன்; ஏற்ற என் சுண்ணத்தை - தகுதியான என்னுடைய சுண்ணத்தை; ஏற்புஇல என்ற சொல் - (நின்மேல் விருப்பினால்) தகுதியில்லாதன என்ற சொல் உட்பட; தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ - தோற்றுச் சொல்லி வந்து என் சிலம்பு புனைந்த அடிகளைக் கையாலே தொழுதற்கு; நோற்பல் - நோற்பேன்; நீ நோற்றனை என - நீ (முன்னரே) நோற்றனை என்ற குறிப்புடன் குணமாலையை நோக்கியவளாய்; ஏகினாள் - வறிதே சென்றாள்.

விளக்கம் : இஃது உட்கோள். பெருமையும் உரனும் ஆடுஉ மேன (தொல். களவு. 7) என்பதனால், தன் வேட்கை மறைத்தான். தீண்டிலேன் ஆயின் உய்யேன் - சீறடி பரவ வந்தேன் அருள்எனத் தொழுது சேர்ந்து (சீவக. 2072) என மேற்கூறுதலின், ஈண்டுச் சொற்றேற்று அடிதொழ என்று கருதினாள். இக் கருத்து அங்ஙனம் முடிக்கின்ற ஊழால் இவட்கு நிகழ்ந்தது. ( 49 )

900. கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக்
கன்னி மாட மடையக் கடிமலர்க்
கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள்
கன்னிக் குற்றது கன்னியர் கூறினார்.

பொருள் : கன்னி நீலக் கடிமலர்க் கண்கன்னி - புதிய நீலமாகிய, மணமுற்ற மலர்போலுங் கண்களையுடைய சுரமஞ்சரி; கன்னியர் சூழதரக் கன்னிமாநகர்க் கன்னிமாடம் அடைய - கன்னிப் பெண்கள் சூழ்ந்துவர அழிவற்ற பெரிய நகரிற் கன்னிமாடத்தைச் சேர்ந்தாளாக; நற்றாய்க்கு அவள் கன்னிக்கு உற்றது - அவள் நற்றாயான சுமதி காரணங் கேட்ட பின் அவள் மகளான கன்னிப் பருவமுடைய சுரமஞ்சரிக்கு நேர்ந்ததை; கன்னியர் கூறினார் - பெண்கள் கூறினார்கள்.

விளக்கம் : கன்னி மாநகர் - அழிவில்லாத பெரிய நகரம். கன்னி நீலக்கடிமலர்க்கண் கன்னி கன்னியர் சூழ்தரக் கன்னி மாநகர்க் கன்னிமாடம் அடைய என மாறுக. கன்னி நீலம் - புதிய நீலம். கன்னியர் நற்றாய்க்குக் கன்னிக்கு உற்றது கூறினார் என மாறுக. கன்னியர் - அவள் தோழியர். கன்னிக்கு என்றது சுரமஞ்சரிக்கு என்னும் பொருட்டாய் நின்றது. ( 50 )

901. கண்கள் கொண்ட கலப்பின வாயினும்
பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென்
றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப்
பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள்.

பொருள் : கண்கள் கொண்ட கலப்பின ஆயினும் - கண்கள் ஒன்றன் குறிப்பினை ஒன்று தப்பாமல் கொண்ட கலப்பின ஆனாலும்; பெண்கள் கொண்ட பிற செற்றம் விடா என்று - பெண்கள் தம் மனத்திற் கொண்ட தனிப்பட்ட செற்றங்களை விடமாட்டார் என்று (மனத்திற் கொணடு); ஒண்கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு - ஒளியுடைய கண்ணாளாகிய சுரமஞ்சரியின் நற்றாய், தந்தையாகிய குபேரதத்தனுக்கு; பண்கொள் தேன்மொழியால் பயக்கூறினாள் - பண்ணனைய இனிய மொழியால் மெல்ல உரைத்தாள்.

விளக்கம் : கூறியவை அடுத்த இரண்டு செய்யுளிலும் வரும். பெண்கள் என்றது பெண்ணினங்கள் என்னும் பொருட்டு ஆதலின் அஃறிணை முடிபேற்றது. பெண்கள் சாதிப்பன்மை என்பர் நச்சினார்க்கினியர். ஒண்கணாளவன் ஒண்கணாளாகிய அச்சுரமஞ்சரியின். தாய் பெயர் - சுமதி, தந்தை பெயர் - குபேரதத்தன் என்பவற்றை மேல் வரும் (2075-76 ஆம்) செய்யுள்களான் உணர்க. ( 51 )

902. விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினா
ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற்
கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு
முண்ண லேனினி யென்றுரை யாடினாள்.

பொருள் : நும்மகள் எண்ணம் - நும் மகளின் நினைவு; விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார் எண்ணம் - வானில் திரியும் திங்களை நீக்க விரும்பினோர் எண்ணமாயிருந்தது; யாது எனின் - அந்த எண்ணம் யாது என்றால்; கண்ணின் ஆடவர்க் காணினும் கேட்பினும் - கண்ணாலே ஆடவரைக் கண்டாலும் ஆடவர் என்ற சொல்லைக் காதினாலே கேட்டாலும்; இனி உண்ணலேன் என்று உரையாடினாள் - இனி உண்ணமாட்டேன் என்று கூறினாள்.
 
விளக்கம் : மற்று : அசை. நும்மகள் எண்ணம் விண்ணின் திங்கள் விலக்குதல் மேயினார் எண்ணம் போன்று முற்றுப் பெறாததோர் எண்ணம் என்றவாறு. கண்ணின் ஆடவர் என்றதற்கேற்பக் காதின் ஆடவர் சொல்லைக் கேட்பினும் என்றும் வருவித்துக் கூறுக.(52)

903. இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை
தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா
டின்றே னாவிக்கோர் கூற்ற மெனநையா
நின்று நீலக்கண் ணித்திலஞ் சிந்தினாள்.

பொருள் : இன்று நீர் விளையாட்டினுள் - இன்று நடந்த நீர்விளையாட்டிலே; ஏந்திழை - சுரமஞ்சரிக்கு; சுண்ணத்தில் தோன்றிய தொன்று வேறுபாடு - சுண்ணங் காரணமாக உண்டாகிய ஊழாலுண்டான வேற்றுமை; இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் - இப்போது என் உயிருக்கோர் காலனாயிற்று; என நையா நின்று - என்று கூறி வருந்தி நின்று; நீலக்கண் நித்திலம் சிந்தினாள் - நீலமலரனைய கண்களாலே முத்தனைய நீரைச் சிதறினாள்.
 
விளக்கம் : ஏந்திழை : சுரமஞ்சரி. தொன்று - ஊழ்வினை. தொன்று வேறுபாடு எனக்கூட்டி ஊழினால் வந்த வேறுபாடு என்க. ஆவி - உயிர். நையா : செய்யாவென்னெச்சம். நீலம் - நீலமலர் : ஆகுபெயர். நித்திலம் - கண்ணீர்: உவம ஆகுபெயர். ( 53 )

வேறு
 
904. பட்டதென் னங்கைக் கென்னப்
பாசிழைப் பசும்பொ னல்குன்
மட்டவிழ் கோதை சுண்ண
மாலையோ டிகலித் தோற்றாள்
கட்டவிழ் கண்ணி நம்பி
சீவகன் றிறத்திற் காய்ந்தா
ளட்டுந்தே னலங்கன் மார்ப
வதுபட்ட தறிமோ வென்றாள்.

பொருள் : என் நங்கைக்குப் பட்டது என் என்ன - (அது கேட்ட குபேரதத்தன்) என் மகளுக்கு நேர்ந்தது யாது என்று வினவ; (நற்றாய்); தேன் அட்டும் அலங்கல் மார்ப! - தேன் சிந்தும் மாலை மார்பனே!; பாசிழைப் பரவை அல்குல் மட்டு அவிழ் கோதை - புத்தணி, யணிந்த பரந்த அல்குலையும் தேன் விரியும் மாலையையும் உடைய சுரமஞ்சரி; மாலையோடு இகலிச் சுண்ணம் தோற்றாள் - குணமாலையுடன் மாறுபட்டுச் சுண்ணத்தாலே தோற்றாள்; கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்திற் காய்ந்தாள் - முறுக்குடைந்த மலர்க் கண்ணி புனைந்த நம்பியாகிய சீவகனாலே ஆடவரை வெறுத்தாள்; அது பட்டது அறிமோ என்றாள் - அதுதான் நிகழ்ந்தது; அறிவாயாக என்று சுமதி கூறினாள்.

விளக்கம் : அறிமோ : மோ : முன்னிலை அசை. மாலை : குணமாலை. இகலிச் சுண்ணந்தோற்றாள் என்க. காய்தல் - வெறுத்தல். (54)

905. பள்ளிகொள் களிறு போலப்
பரிவுவிட் டுயிர்த்தென் பாவை
யுள்ளிய பொருண்மற் றஃதே
லோபெரி துவப்பக் கேட்டேன்
வள்ளிதழ்க் கோதை மற்று
நகரொடுங் கடியு மேனும்
வெள்ளநீ ணிதியி னின்னே
வேண்டிய விளைப்ப லென்றான்.

பொருள் : பள்ளிகொள் களிறுபோல - துயில் கொள்ளும் யானைபோல; பரிவுவிட்டு உயிர்த்து - (குபேரதத்தன்) வருத்தந் தோன்ற நெடுமூச் செறிந்து; என் பாவை உள்ளிய பொருள் மற்று அஃதேல் - என் மகள் நினைத்த பொருள வேறொன்று அன்றி அத்தன்மை ஆயின்; ஓ பெரிது உவப்பக் கேட்டேன் - ஓ! மிகவும் மகிழ்வாகக் கேட்டேன்; வள்இதழ்க் கோதை - வளவிய மலர்க்கோதையாள்; மற்று நகரொடும் கடியுமேனும் - (இத்தெருவிலன்றி நகர்முழுதும் உட்பட ஆடவரை நீக்க விரும்பினாளெனினும்; வெள்ளநீர் நிதியின் - வெள்ளமென்னும் எண்கொண்ட செல்வத்தினால்; வேண்டிய இன்னே விளைப்பல் என்றான் - விரும்பியவற்றை இப்போதே முடிப்பேன் என்றான்.

விளக்கம் : மற்று: இரண்டும் வினைமாற்று. ஓர் மகிழ்ச்சிக் குறிப்பு. பள்ளிகொள்யானை பெருமூச்செறிதல் இயல்பு. இதனை - பள்ளி யானையின் வெய்ய உயிரினை எனவும் (நற்றிணை. 253-2.) , பள்ளி யானையின் உயிர்த்து எனவும் (குறுந். 142.) பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க. ஓ பெரிதென்புழி ஓகாரம் வியப்பின்கண் வந்தது. நகரொடும் என்புழி உம்மை சிறப்பு. எல்லாம் பொருளில் பிறந்து விடும் என்பதுபற்றி நிதியின் இன்னே விளைப்பல் என்றான். ( 55 )

906. இன்னதோர் காலத் தின்னா
னொருமக ளின்ன தொன்றிற்
கின்னதோ ரிடத்தி னெல்லை
யாட்கடிந் தொழுகி னாள்போ
லின்னதோர் நகரி லென்றாங்
கென்பெயர் நிற்க வேண்டு
மின்னதோ ராரந் தம்மோ
வென்றுகொண் டேகி னானே.

பொருள் : இன்னது ஓர் காலத்து - இத்தன்மைத்தான ஒரு காலத்தே; இன்னான் ஒரு மகள் - இன்ன வணிகனுடைய ஒப்பற்ற மகள்; இன்னது ஒன்றிற்கு - இன்னதொரு செயலுக்கு; இன்னது ஓர் இடத்தின் எல்லை - இத் தெருவிடத்தின் எல்லையிலே; ஆள்கடிந்து ஒழுகினாள் - ஆடவரை வெறுத்து வாழ்ந்தாள்; இன்னது ஒர் நகரின் என்று - இத் தன்மைத்தான நகரிலே என்று; என் பெயர் நிற்க வேண்டும் - என்புகழ் நிலைபெற வேண்டும்; இன்னது ஓர் ஆரம் தம்மோ - விலையில்லாத இந்த ஆரத்தைத் தருவாயாக; என்று கொண்டு ஏகினான் - என்றுரைத்து, அதனைக் கையிற்கொண்டு சென்றான்.

விளக்கம் : போல், ஆங்கு: உரையசைகள். ஆங்கு - அரசனிடத்தே என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். தம்மோ - தருவாயக. நல்லெயில் உழந்த செல்வர்த் தம்மின் (மதுரைக். 731) என்றார் பிறரும். செயற்கரிய செயலாகலின் இதனால் புகழ் உண்டாதல் ஒருதலை என்பான்என் பெயர் நிற்கவேண்டும் என்றான். ( 56 )

907. வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச்
செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு
மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப
கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலை யாக்கி னானே.

பொருள் : வையகம் மூன்றும் விற்கும் மாமணி ஆரம் ஏந்தி - மூவுலகையும் விலைகொள்ளும் பெரிய மணிமாலை ஒன்றை ஏந்திச் சென்று; செய்கழல் மன்னற்கு உய்த்து - கழல் அணிந்த வேந்தனுக்குக் கையுறையாக நல்கி; தன்குறை செப்பலோடும் - தன் வேண்டுகோளை விளம்பினவுடன்; ஐ என மன்னன் ஏவ - அழகியதே என்று வேந்தன் அவ்வாறு செய்யப் பணிக்க; ஆள் வழக்கு அற்றது - தெருவிலே ஆடவர் வழங்குதல் நீங்கியது; கைபுனை பாவை எல்லாம் - அப்போது அம் மாடத்திலே (கையாற்) செய்த ஆண் பாவைகளை எல்லாம்; கதிர்முலை ஆக்கினான் - ஒளிரும் பெண்பாவை ஆக்கினான்.

விளக்கம் : வையகம் என்றது ஈண்டு உலகம் என்னும் பொருட்டு; (வையகம் என்பது சிறப்பாக மண்ணுலகம் ஒன்றனையே குறிப்பதாகும்.) மாமணி - மாணிக்கமணி. ஐயென்றது உடன்பாட்டினைக் குறிப்பான் உணர்த்தியது. கதிர்முலை : அன்மொழித் தொகை. கதிர்முலை ஆக்கினான் என்ற குறிப்பான் ஆண்பாவையை என வருவித்தோதுக. ( 57 )

வேறு

908. சென்று காலங் குறுகினுஞ் சீவகன்
பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக
வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா
வொன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள்.

பொருள் : காலம் சென்று குறுகினும் - வாழ்நாள் தன் எல்லையை அடைந்து குறுகியதானாலும்; சீவகன் பொன்துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக - சீவகனுடைய திருருமகள் துயிலும் மார்பைத் தழுவுறின் கூடுவதாக; அன்றி என்நிறை யார் அழிப்பார்?- அல்லது என் நிறையை அழிப்பார் ஒருவரும் இல்லை; எனா ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள் - என்று ஒன்றிய நினைவினளாகி ஒடுங்கினாள்.

விளக்கம் : காலம் ஈண்டு வாழ்நாள் மேனின்றது. யாரழிப்பார் என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்திநின்றது.
( 58 )

909. இன்பக் காரண மாம்விளை யாட்டினுட்
டுன்பக் காரண மாய்த்துறப் பித்திடு
மென்ப தேநினைந் தீர்மலர் மாலை தன்
னன்பி னாலவ லித்தழு திட்டாள்.

பொருள் : இன்பக் காரணம் ஆம் விளையாட்டினுள் - இன்பத்திற்குக் காரணமாகிய விளையாட்டின்கண்; துன்பக் காரணமாய் - அவ் விளையாட்டே துன்பத்திற்குக் காரணமாய்; துறப்பித்திடும் என்பதே நினைந்து - இன்பத்தை நீக்கிடும் என்பதை எண்ணி; ஈர் மலர்மாலை - குளிர்ந்த மலர்போன்ற குணமாலை; தன் அன்பினால் அவலித்து அழுதிட்டாள் - தன் அன்பால் எண்ணித் துன்புற்று அழுதனள்.

விளக்கம் : உள் என்பதற்கு இருவர் மனமும் ஒன்றாய் நடக்கும் கடுநட்பு என்று பொருளுரைப்பர் நச்சினார்ககினியர். அவர், கடுநட்புப் பகை காட்டும் என்னும் பழமொழியை இதற்குச் சான்றாக்கிவிட்டு, மேலும், இனி, விளையாட்டினுள் அவ் விளையாட்டுத் தானே துன்பக் காரணமாய் இன்பத்தைத் துறப்பிக்கும் என்ற பழமொழியுமாம். அது, விளையாட்டே சலாமம் என்னும் பழமொழி என்றுங் கூறுவர். இன்பக் காரணமே துன்பத்திற்கும் காரணமாதலை இக் காவியத்தினும் சிலப்பதிகாரத்தினும் இராமாயணத்தினும் காணலாம். ஏன்? காவியங்களனைத்தினும் காணலாம் போலும். அவளது குணநலந் தோன்ற ஈர்மலர்மாலை என்றார். இச்செய்யுளான் குணமாலை என்னும் அவள் பெயர்க்கேற்ப அவள் குணநலந் தோன்றுதலுணர்க. ( 59 )

910. தண்ணந் தீம்புன லாடிய தண்மலர்
வண்ண வார்தளிப் பிண்டியி னானடிக்
கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை
வண்ண மாமல ரேற்றி வணங்கினாள்.

பொருள் : தண்அம் தீ புனல் ஆடிய - குளிர்ந்த இனிய நீர் விளையாட்டை வேண்டி; தண்மலர் வண்ணம் வார் தளிர்ப்பிண்டியினான் அடிக்கு - குளிர்ந்த மலருடன் அழகிய நீண்ட தளிரையுடைய அசோகின் நிழலில் அமர்ந்த அருகனடிக்கென; எண்ணி - நினைந்து; ஆயிரம் ஏந்து பொன்தாமரை வண்ணமாமலர் - ஆயிரம் பொற்றாமரை மலர்களையும் பிற அழகிய மலர்களையும்; ஏற்றி வணங்கினாள் - இட்டுத் தொழுதாள்.

விளக்கம் : எண்ணி - இந் நட்பினைப் பிரித்த தீவினை நீங்கும் வழி இதுவென நினைந்து. புனலாடப் போகிறவள் இப் பிரிவுக்குக் கழுவாய் கண்டாள். ( 60 )

911. ஆசை மாக்களொ டந்தணர் கொள்கென
மாசை மாக்கடன் மன்னவ னாடலின்
மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ
ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே.

பொருள் : ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என - விரும்பிய மக்களுடன் அந்தணரும் கொள்க என்று; மாசை மாக்கடல் மன்னவன் ஆடலின் - பெரிய பொற்கடலை அரசன் கையாண்டதால்; மீசை நீள் விசும்பின் தலைச்சென்றது ஓர் ஓசையால் - மேலே உள்ள பெரிய வானிலே சென்றதான ஓர் ஒலியுடன்; சனம் ஒள்நிதி உண்டது - மக்கள் திரள் சிறந்த நிதியை வாரிச் சென்றது.

விளக்கம் : ஆடுதல் என்பதற்குப் பிறத்தல் என்று பொருள் கொண்டும் கடல் என்னாது, கடன் என்றும் கொண்டு பெரியதொரு கடனாகப் பொன்னிலே பிறத்தலின் என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். பொன்னிலே பிறத்தலாவது பொன்னாலே பசு ஒன்றைச் செய்து அதன் வாயாற் புகுந்து பின்புறத்தே வெளிவருதல். பிறகு அப் பொற்பசுவைத் தானஞ்செய்திடுவர். இஃது அரசர்க்குரிய தானங்களில் ஒன்றென்பர். உண்டற்குரிய அல்லாப் பொருளை - உண்டன போலக் கூறலும் மரபே (தொல். பொருளியல்-19) என்றதனால் உண்டது என்றார்; குணனுணப் பட்டோர் (கலி. 23) என்றாற்போல. மீசை - மிசை; முதனீண்டது. மீமிசை என்பதன் கண் மி : கெட்டது எனினுமாம். ( 61 )

912. மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய
சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயி
னிகரி னேமிதன் னீணகர்க் காகெனா
நகரம் நாலிரு கோடி நயந்ததே.

பொருள் : மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய - மீனக் கொடியை உடைய காமனை வென்ற; சிகரச் செவ்வரைத் தீ நிறப் பொன் எயில் - உச்சியையுடைய செம்மலை போலும் வடிவத்தையும் நெருப்பின் வண்ணத்தையும் உடைய பொன்மதிலையுடைய; நிகரில் நேமிதன் நீள்நகர்க்கு - ஒப்பற்ற நேமிநாதரின் பெரிய கோயிலுக்கு; ஆகஎனா - ஆகுக என்று; நால் இருகோடி நகரம் நயந்தது - எட்டுக்கோடி பொன்னை நகரம் நீராடுதானமாக நல்கியது.

விளக்கம் : காமனை வாட்டிய நேமிநாதர்; காமனை வாட்டிய பொன் எயிலுமாம். அளித்தது என்றும் பாடம். மகரவெல் கொடிமைந்தன் என்றது காமனை. நேமி - நேமிசுவாமி என்னும் 22 ஆம் தீர்த்தங்கரர். நகரம், கோடி என்பன ஆகுபெயர்கள். ( 62 )

வேறு

913. உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர்
கவான்முதற் கூப்பிய கனக மாழையாற்
றவாவினை யடைகரை தயங்கு சிந்தை நீ
ரவாவெனு முடை கட லடைக்கப் பட்டதே.

பொருள் : இரவலர்க்கு உவாமுதல் உடைமை உய்த்தவர் - இரவலர்க்குப் பொன்னையே யன்றி யானை முதலான உடைமைகளை (முற்படக்) கொடுத்து அவர்கள்; கவான் முதல் கூப்பிய கனக மாழையால் - (பின்னும்) அவ்விரவலரின் காலடியிலே குவித்த பொற்கட்டியால்; தவாவினை தயங்கு சிந்தைநீர் - இரவலரின் கெடாத தீவினையாலுண்டாகிய உள்ள வருத்தம் என்னும் நீரினால்; அடைகரை உடை அவாஎனும் கடல் - அடைகரை உடைந்த ஆசையென்னும் கடல்; அடைக்கப்பட்டது - அடைபட்டது.

விளக்கம் : உவா - யானை. கவான் - துடை; ஈண்டுக் கால் என்னும் பொருட்டு. கவான் முதல் என்பதற்கு மடியின்மேல் எனினுமாம். கனக மாழை - பொற்கட்டி. சிந்தை - ஈண்டுத் துனபம். உடைகடல் : வினைத்தொகை.

வேறு

914. சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி
யாரர வக்கழ லாடவ ரோடும்
போரர வக்களம் போன்றுபொன் னார்புன
னீரர வம்விளத் தார்நிக ரில்லார்.

பொருள் : பொன் ஆர் புனல் - பொன் நிறைந்த யாறு; போர் அரவக்களம் போன்று - போர் செய்யும் ஆரவாரமுடைய களம்போலத் தோன்ற; நிகர் இல்லார் - ஒப்பில்லாராகிய; சீர் அரவச் சிலம்பு ஏந்தும் மென்சிறு அடியார் - ஒலிதரும் சிலம் பணிந்த மெனமையான சிற்றடி மங்கயைர்; அரசக் கழல் ஆடவரோடும் - ஒலிபெறுங் கழலணிந்த ஆடவரோடும்; நீர் அரவம் விளைத்தார் - நீராரவாரத்தை உண்டாக்கினர்.

விளக்கம் : போன்று - போல : எச்சத்திரிபு. உவமவுருபு வினையெச்சமும் பெயரெச்சமுமாய் நிற்கும். புனல் - யாறு : ஆகுபெயர்.
( 64 )

915. கார்விளை யாடிய மின்னனை யார்கதிர்
வார்விளை யாடிய மென்முலை மைந்தர்
தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய
நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே.

பொருள் : கார் விளையாடி மின் அனையார் - காரிலே நுடங்கிய மின்கொடி போன்ற மகளிரின்; கதிர் வார் விளையாடிய மென்முலை - கதிர்த்த வார் பயின்ற மென்முலைகள்; மைந்தர் தார் விளையாட்டொடு தங்குபு - மைந்தரின் தாரிலே விளையாடு தலிலே நிலைபெற்று; பொங்கிய நீர் விளையாட்டு அணி நின்றது - மிக்க நீர் விளையாட்டின் அழகு இடைவிடது நிகழ்ந்தது.

விளக்கம் : நின்றதை: ஐ; சாரியை. அன்று, ஏ: அசைகள். ( 65 )

வேறு

916. விடாக்களி வண்டுண விரிந்த கோதையர்
படாக்களி யிளமுலை பாய விண்டதர்க்
கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக
னடாக்களி யவர்தொழில் காண வேகினான்.

பொருள் : விடாக் களிவண்டு உண - விடாமல், களிப்பையுடைய வண்டுகள் உண்ணுமாறு; விரிந்த கோதையர் படாக்களி இளமுலை பாய - மலர்ந்த மலர்மாலையரின் சாயாத களிப்பை யூட்டும் இளமுலைகள் பாய்தலால்; விண்ட தார்க்கடாக் களிற்று ஏறுழ்வலிக் காளை - அலர்ந்த தாரணிந்த, மதயானை போன்ற மிக்க வலிபடைத்த காளையாகிய; சீவகன் - சீவகன் ; அடாக் களியவர் தொழில் காண ஏகினான் - ஒழுக்கக் கேடுபண்ணாத களிப்பையுடையார் விளையாட்டைக் காணச் சென்றான்.

விளக்கம் : நச்சினார்க்கினியர் காளை என்பது நந்தட்டனை உணர்த்துவதாகக் கூறிச் சீவகன் அடாக்களியவர் தொழில் காணுமாறு, நந்தட்டன் அங்கிருந்து போயினான் என்று பொருள் கூறுவர். அவர் மேலும் கூறுவதாவது: சுண்ணந் தேற்றுகின்ற காலத்திருந்த நந்தட்டன், சீவகன் நீர் விளையாட்டின் வினோதங் காணப்போதற்குத் தானும் தனக்குக் கூடுமவர்களுமாக வேறு போயினான் என்றவாறு. இவன் போகவே, வினோதத்திற்குக் கூடும் புத்திசேனனும் ஒழிந்தோரும் சீவகனைக் கூடினாராம். இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதற்குக் காரணம் நீர் விளையாட்டணியைச் சென்று காணுதல் சீவகனுக்குத் தகவன்று என்று கருதியதாதல் வேண்டும். இனி, இவை யின்னனவும் பிறவும என்ற (சீவக. 933) செய்யுள் வரை நீர் விளையாட்டணி காணுதல் கூறப்படும். ( 66 )

917. ஒன்றே யுயிரை யுடையீ
ரொருவிப் போமி னிவள்க
ணன்றே கூற்ற மாகி
யருளா தாவி போழ்வ
தென்றே கலையுஞ் சிலம்பு
மிரங்க வினவண் டர்ப்பப்
பொன்றோய் கொடியி னடந்து
புனல்சேர் பவளைக் காண்மின்.

பொருள் : இவள்கண் அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது? -இவள் கண்ணல்லவோ காலனாகி இரக்கம் இன்றி உயிரைப் போக்குகின்றது?; ஒன்றே உயிரை உடையீர்! ஒருவிப் போமின் - (ஆதலால்), சேமவுயிரின்றி ஓருயிரே உடையீர் நீங்கிப் போவீராக, என்றே கலையும் சிலம்பும் இரங்க - என்று கூறுவன போலவே மேகலையும் சிலம்பும் ஒலிக்க; இன வண்டு ஆர்ப்ப - கூட்டமாகிய வண்டுகள் ஆரவாரிக்க; பொன்தோய் கொடியின் நடந்து - பொன்னுலகிற் பொருந்திய காமவல்லி போல நடந்து சென்று; புனல் சேர்பவளைக் காண்மின்! - நீரில் இறங்குகின்றவளைக் காண்மின்!

விளக்கம் : இதுமுதல் நந்தட்டனும் அவன் தோழரும் தம்மிற் கூறுவன என்றே நச்சினார்க்கினியர் கூறுகின்றனர். உயிர் ஒன்றேயுடையீர் என மாறுக. என்றது இதுபோய்விடின் மேற்கோடாற்குத் துணையுயீர் இலீர் என்பது படநின்றது. சேம உயிர் - துணையுயிர். இச் செய்யுள் தற்குறிப்பேற்றம். பொன்தோய் கொடி என்றது கற்பகத்திற் படரும் காமவல்லியை. ( 67 )

918. அழல்செய் தடத்துண் மலர்ந்த
வலங்கன் மாலை யதனை
நிழல்செய் நீர்கொண் டீர்ப்ப
நெடுங்கண் ணினையி னோக்கிக்
குழையும் பூணு நாணுங்
கொழுந னுவப்ப வணிகென்
றிழைகொள் புனலுக் கீயு
மிளையோ ணிலைமை காண்மின்.

பொருள் : அழல்செய் தடத்துள் மலர்ந்த - நெருப்பையுடைய தடத்திலே மலர்ந்த; அலங்கல் மாலை அதனை - அசைகின்ற பொன்னரிமாலையை; நிழல்செய் நீர் கொண்டு ஈர்ப்ப - தெளிந்த நீர் தானே கெண்டு போக; நெடுங்கண் இணையின் நோக்கி - அதனை நீண்ட இரு கண்களினாலும் பார்த்து; கொழுநன் உவப்ப அணிக என்று-(இவற்றையும்) நின் கணவன் மகிழ அணிந்து கொள்க என்றுரைத்து; குழையும் பூணும் நாணும் இழைகொள் புனலுக்கு ஈயும் - குழையையும் பூணையும் நாணையும் முன்னர்த் தன் அணியைக் கொண்ட நீருக்குக் கொடுக்கும்; இளையோள் நிலைமை காண்மின் - இளைய நங்கையின் தன்மையைக் காண்மின்.
 
விளக்கம் : அழல் செய்தடம் என்றது பொற்கொல்லருலையினை. நாண் - பொன்நாண். இழைதலையுடைய புனலுமாம். கொழுநன் - வருணன். நிலைமை - ஈண்டு பேதைமையின் மேற்று. ( 68 )

919. கோல நெடுங்கண் மகளிர்
கூந்தல் பரப்பி யிருப்பப்
பீலி மஞ்ஞை நோக்கிப்
பேடை மயிலென் றெண்ணி
யாலிச் சென்று புல்லி
யன்மை கண்டு நாணிச்
சோலை நோக்கி நடக்குந்
தோகை வண்ணங் காண்மின்.

பொருள் : பீலி மஞ்ஞை நோக்கி - தோகை மயிலின் ஆடலைக்கண்டு; கோலம் நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப - அழகிய நீண்ட கண்களையுடைய பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துக் கொண்டு ஈரம் புலர்த்தியிருக்க; பேடை மயில் என்று எண்ணி - பெண்மயில் அவர்களை ஆண்மயில் என்று நினைத்து; ஆலிச் சென்று புல்லி - அகவிச் சென்று தழுவி; அன்மை கண்டு நாணி - தோகைமயில் அல்லாமையைக் கண்டு வெள்க; சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின்-(அதனைக் கண்டு தன் பேடை அறியுமாறு) பொழிலை நோக்கிச் செல்லும் தோகையின் அழகைப் பார்மின்.
 
விளக்கம் : இனி, நாணி யெனவே கொண்டு நாணிய பெட்டை, சோலையை நோக்கி நடக்கும் . அவ்வாறிருக்கும் தோகை போல்வாரைக் காண்மின் என்றுமாம். ( 69 )

920. மின்னொப் புடைய பைம்பூ
ணீருள் வீழக் காணா
ளன்னப் பெடையே தொழுதே
னன்னை கொடியள் கண்டா
யென்னை யடிமை வேண்டி
னாடித் தாவென் றிறைஞ்சிப்
பொன்னங் கொம்பி னின்றாள்
பொலிவின் வண்ணங் காண்மின்.

பொருள் : மின் ஒப்புஉடைய பைம்பூண் நீருள் வீழக் காணாள் - மின்போல ஒளி வீசும் பசிய அணிகலன் நீரிலே விழத் தேடி (நீரசைவினால்) காணாளாய்; அன்னப் பெடையே! தொழுதேன், அன்னை கொடியள் கண்டாய் - பெண்ணன்னமே! நின்னைத் தொழுதேன், என் அன்னை கொடியள் என்பதை அறவிய்; என்னை அடிமை வேண்டின் நாடித்தா - என் அடித்தொண்டு நினக்கு விருப்பமாயின் தேடி எடுத்துக கொடு; என்று இறைஞ்சி - என்று கூறி வணங்கி; பொன்அம் கொம்பின் நின்றாள் - பொன்னாலாகிய அழகிய கொம்புபோல நிற்பவளின்; பொலிவின் வண்ணம் காண்மின் - அழகின் தன்மையை நோக்குமின்.
 
விளக்கம் : இது தோழியின் மொழி என்றும், அன்னப் பெடை என்றது தலைவியை என்றும், அன்னை என்றதும் தோழியின் தாயை என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும், என்று என்பதை, என்ன எனத் திரித்துத் தோழி கேட்ப, அதற்கு நாணி இறைஞ்சிப் பொற்கொம்பென நின்றவள் தலைவி யென்றும் கூறுவர். அன்னப்பெடை என்பதற்குப் பறவை என்று கொள்ளுதலே சிறப்பு; என்னை? அவளின் பேதைமை நன்கு புலப்பட்டு இன்பந் தருதலான் என்க. ( 70 )

921. தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத்
தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக்
காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப்
பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே.

பொருள் : தூமம் கமழும் கோதை - அகிற்புகை மணம் பயின்ற கோதை போல்வாள்; தொடுத்த துயரி முலை ஆ - வாசித்த யாழ்நரம்பு முலையாக; தேன்மென் கீதம் பால் ஆ - (அதில் தோன்றிய) இனிய மெல்லிசை பாலாக; சுரந்து திறத்தின் ஊட்டி - சுரந்து செவ்விதின் ஊட்டி; காமக்குழவி வளர்ப்ப - காமமாகிய குழவியை வளர்ப்ப; புனலுள் கணவன் நீங்கி - நீரில் ஆடிக்கொண்டிருந்த அவள் கணவன் அதுகேட்டு நீங்கிக் கூட்ட விருப்பத்தினால்; பூமென் பொழிலுக்கு இவர்வான் - மலர்களையுடைய மெல்லிய சோலைக்குப் போகின்றவனுடைய; புகற்சி இனிது காண்மின் - விருப்பத்தை இனிதே நோக்குமின்.
 
விளக்கம் : இதனால், அவள் முன்னே குளித்தேறிக் கூட்டம் விரும்பி யாழ் வாசித்தமை கூறினாராயிற்று. காமக் குழவி - காமத்தையுடைய இளமைச் செவ்வி; அது காமமாகிய பிள்ளையை வளர்ப்பப் பிள்ளை வாயிலாகச் சென்ற்னென்றாற்போல நின்றது. துயரி - யாழ்நரம்பு. இன்னிசை காமப் பண்பினை மிகுவித்தலான் அதனைப் பால் என்னும் காமத்தைக் குழவி என்றும் கூறினார். ( 71 )

922. கடலம் பவளம் மணையிற் கனபொற் கயிற்றிற் காய்பொன்
மடலங் கமுகி னூசன் மடந்தை யாட நுடங்கி
நடலைந் நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு
விடலில் விசும்பின் மின்போல் மின்னி வீழ்வகாண்மின்.

பொருள் : கடல் அம் பவளம் கன மணையின் - கடலிற் கிடைத்த அழகிய பவளத்தாலாகிய கனத்த மணையிற்கோத்த; பொன் கயிற்றின் - பொன்னலாகிய கயிற்றினால்; காய்பொன் மடல் அம் கமுகின் ஊசல் - காய்ச்சிய பொன் மடலையுடைய கமுக மரத்திற் கட்டிய ஊசலை; மடந்தை நுடங்கி ஆட - மங்கையாள் ஒசிந்து ஆடும்படி; நடலை நடுவின் மகளிர் நூக்க - பொயயான இடையினையுடைய பெண்கள் ஆட்ட; பரிந்த காசு (அவர்களின் கைதீண்டி) அற்ற் மணிகள்; விசும்பின் மின்போல் மின்னி விடலில் வீழ்வ காண்மின் - வானிலேயிருந்து வீழும் மின்னைப்போல மின்னித் தொடர்ச்சியாக வீழ்வதை நோக்குமின்.

விளக்கம் : பவளம் கன மணையின் எனமாறுக. காய்பொன் : வினைத்தொகை. நடலை - துன்பமுமாம். விசும்பின் விடல் இல்மின் என மாறுக. வீடல்இல்மின் என்றது இடையறாத மின்னல் என்றவாறு. ( 72 )

923. நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி
மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத்
தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின்.

பொருள் : நலம்கொள் பூம்பட்டு நான நீரில் கலந்து ஒளிப்ப - அழகிய பூம்பட்டு நானத்தையுடைய குளிக்கினற நீராலே நனைந்து உடம்பிலே ஒடுங்குதலின்; தோன்ற விளங்கி மேனி வெளிப்பட்டதற்கு நாணி - நன்றாக விளக்கமுற்றுத் தம் மெய்யழகு வெளிப்பட்டதற்கு வெளகி; மான மகளிர்போல மணிமேகலைகள் பேசா - மானமுற்ற பெண்டிர்போல மணி மேகலைகள் பேசாமல்; தானம் தழுவிக்கிடப்பச் செல்வோள் தன்மை காண்மின் - அல்குலைத் தழுவிக் கிடக்குமாறு செல்கின்றவளின் நிலையை நோக்குமின்.

விளக்கம் : நானம் - புழுகு; குளித்தலுமாம். நீரான் நனைந்து பட்டோடு பொருந்துதலானே ஒலியவிந்த மேகலைகளை மேனி வெளிப்பட்டதற்கு நாணி அற்றங்காத்து வாய் வாளாகிடந்த என்னுமித் தற்குறிபபேற்றம் ஆற்றவும் இனிதாதல் உணர்க.
 
924. தீம்பாற் பசியி னிருந்த
செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன்
ஓம்பு தாய்நீர் குடைய
வொழிக்கும் வண்ண நாடிப்
பாம்பால் என்ன வெருவிப்
பைம்பொற் றோடு கழலக்
காம்பேர் தோளி நடுங்கிக்
கரைசேர் பவளைக் காண்மின்.

பொருள் : தீ பால் பசியின் இருந்த செவ்வாய் சிறு பைங்களி - இனிய பால்பருகப் பசியுடன் இருந்த சிவந்தவாயையுடைய சிறிய பச்சைக்கிளி; தன் ஓம்பு தாய் நீர்குடைய - தன்னைக் காக்கும் அன்னை தன் பசியை அறியாமல் நீர் குடைதலாலே; ஒழிக்கும் வண்ணம் நாடி - அவளை நீர்குடையாமல் தடுக்கும் வகையிதுவென எண்ணி ; பாம்பு என்ன - பாம்பு பாம் பென்று கூவ; காம்பு ஏர் தோளி வெருவி நடுங்கி - வேய்த்தோளினாள் அஞ்சி நடுங்கி; பைம்பொன் தோடு கழல் - பசிய பொற்றோடு கழலுமாறு; கரை சேர்பவளைக் காண்மின்-(வந்து) கரையை அடைகின்றவளை நோக்குமின்.
 
விளக்கம் : பாற்பசி - பாலுண்ணாமையால் உண்டான பசியுமாம். ஓம்புதாய் - தன்னை ஊட்டி வளர்க்கும் தாய். வண்ணம் ஈண்டு உபாயம். பாம்பால் என்புழி ஆல் அசைச்சொல்; பாம்பு பாம்பு என அடுக்கி வர வேண்டியது தனித்து வந்தது செய்யுளாகலின். காவிய உலகில் கிளிகள் உலகக் கிளிகளில் சிறந்தன என்க. ( 74 )
 
925. துணையி றோகை மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோன்
மணியார் வளைசோர் முன்கை வலனுமிடனும் போக்கி
யிணையி றோழி மார்க ளிறுமா லிடையென் றிரங்க
வணியார் கோதை பூம்பந் தாடு மவளைக் காண்மின்.

பொருள் : துணைஇல் தோகை மஞ்ஞை - பெடையில்லாது தனித்த தோகைமயில்; ஈயற்கு இவரும் வகைபோல் - சுற்றிப் பறக்கும் ஈயலைப் பற்ற அவற்றின்மேற் செல்லும் கூறுபாடு போல; இணை இல் தோழிமார்கள் இடை இறுமால் என்று இரங்க - ஒப்பற்ற தோழியர் நின்இடை ஒடியுமே என்று இரக்க முறுமாறு; மணிஆர் வளைசேர் முன்கை வலனும் இடனும் போக்கி - மணிபதித்த வளையல் அணிந்த முன்கையை வலமாகவும் இடமாகவும் செலுத்தி; பூம்பந்து ஆடும் அணிஆர் கோதையவளைக் காண்மின் - அழகிய பந்தை ஆடும் அணி பொருந்திய கோதையாளைப் பார்மின்.
 
விளக்கம் : இச் செய்யுளின்கண் பந்தாடும் ஒருத்தியைத் தன்மை நவிற்சியாகக் கூறி அவளுககு வானிலே பறக்கும் ஈயலைக் கவ்வ அணந்துதிரியும் மயிலை உவமையாக எடுத்துக் கூறிய தேவர் புலமைத் திறம் நினைந்து நினைந்து இன்புறற்பாலது. ( 75 )

926. திருவின் சாய லொருத்தி
சேர்ந்த கோலங் காண்பான்
குருதித் துகிலி னுறையைக்
கொழும்பொன் விரலி னீக்கி
அரவ முற்றும் விழுங்கி
யுமிழும் பொழுதின் மதிபோன்
றுருவத் தெண்கண் ணாடி
காண்மின் தோன்றும் வகையே.

பொருள் : திருவின் சாயல் ஒருத்தி - திருமகளின் மென்மையுடையாள் ஒரு மங்கை; சேர்ந்த கோலம் காண்பான் - தான் கொண்ட கோலத்தைக் காண்பதற்கு; குருதித் துகிலின் உறையைக் கொழும்பொன் விரலின் நீக்கி - (கண்ணாடிக்கிட்ட) செம்பட்டுறையை வளவிய பொன்னாழியணிந்த விரலாலே நீக்க; அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதிபோன்று - செம்பாம்பு தன்னை முழுதும் பற்றித் திரும்ப விடும்போது தோன்றும் திங்கைளைப் போல; உருவம் தெண்கண்ணாடி தோன்ற வகை காண்மின் - நிறமுறும் தெளிந்த கண்ணாடி காண்குறும் இயல்பை நோக்குமின்.

விளக்கம் : நீக்கி - நீக்க: எச்சத்திரிபு. காண்பான் : எதிர்கால வினையெச்சம். திரு - திருமகள். குருதித்துகிலின் உறை - செம்பட்டுறை; இது செம்பாம்புக்குவமை. அரவம்-ஈண்டுக் கேது. தோன்றும் வகை காண்மின் என மாறுக. ( 76 )

927. பலகை செம்பொன் னாகப்
பளிங்கு நாயாப் பரப்பி
யலவ னாடும் வகைபோ
லரும்பொன் கவறங் குருளக்
குலவும் பவழ வுழக்கிற்
கோதை புரளப் பாடி
யிலவம் போதேர் செவ்வா
யிளையோர் பொருவார்க் காண்மின்.

பொருள் : செம்பொன் பலகை ஆக - செம்பொன்னாற் பலகையாக; பளிங்கு நாய் ஆப் பரப்பி - பளிங்கினாலே நாயாகச் செய்தவற்றைப் பரப்பி; அல்வன் ஆடும் வகைபோல் அரும்பொன் கவறு அங்கு உருள - நண்டு ஆடுந் தன்மைபோல அரிய பொன்னால் ஆன கவறு தன்னிடத்தே உருளுமாறு; குலவும் பவழ உழக்கில் - பண்ணின பவழ உழக்காலே; கோதை புரளப் பாடி - கோதை அசையுமாறு பாடிக்கொண்டு; இலவம்போது ஏர் செவ்வாய் - இலவ மலரனைய அழகிய செவ்வாயையுடைய; இளையோர் பொருவார்க் காண்மின் - இளமங்கையர் கவறாடுவாரை நோக்குமின்.

விளக்கம் : செம்பொன்னாலியற்றிய பலகைமிசை பளிங்காற் செய்த நாய்களைப் பரப்பிப் பொன் உழக்கில் பொன் கவறுகளையிட்டு உருட்டிப் பாடிக்கொண்டு சூதுப்போர் பொருதும் மகளிரைக் காண்மின் என்றவாறு. ( 77 )

928. தீம்பா லடிசி லமிர்தஞ்
செம்பொன் வண்ணப் புழுக்க
லாம்பா லக்கா ரடலை
யண்பன் னீரூ றமிர்தம்
தாம்பா லவரை நாடித்
தந்தூட் டயர்வார் சொரிய
வோம்பா நறுநெய் வெள்ள
மொழுகும் வண்ணங் காண்மின்.

பொருள் : ஊட்டு அயர்வார் தாம் - உணவு இடுவோர்கள் தாம்; பாலவரை நாடித் தந்து - உண்ணும் இயல்பினரைத் தேடிக் கொணர்ந்து; தீ பால் அடிசில் - இனிய பாற்சோற்றையும் ; செம்பொன் வண்ணப் புழுக்கல் - செம்பொன் நிறமுடைய பருப்புச் சோற்றையும்; அக்கார அடலை - சருக்கரைப் பொங்கலையும்; அண்பல் நீர் ஊறு அமிர்தம் - அடிப் பல்லில் நீரூறும் புளிங்க்றியும்; அமிர்தம் - பிற சோற்றையும்; ஆம் பால் - இவற்றிற்கெல்லாம் பயன்படும் பாலையும்; சொரிய - சொரிதலின்; ஒம்பா நறுநெய் வெள்ளம் - இவற்றையுண்ண வார்த்த கட்டுப்படாத நறுநெய் வெள்ளம்போல; ஒழுகும் வண்ணம் காண்மின்!- ஒழுகும் இயல்பைக் காணுமின்!
 
விளக்கம் : அக்காரடலை - அக்காரத்தினை அடப்பட்டது; அக்காரையாக அடப்பட்டதுமாம். அக்காரம் - சருக்கரை. ( 78 )

929. அள்ளற் சேற்று ளலவ
னடைந்தாங் கனைய மெய்யின்
கள்செய் கடலு ளிளமைக்
கூம்பின் கடிசெய் மாலைத்
துள்ளு தூமக் கயிற்றிற்
பாய்செய் துயரி நிதிய
முள்ளு காற்றா யுழலும்
காமக் கலனும் காண்மின்.

பொருள் : அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யின் - அள்ளலாகிய சேற்றில் அடைந்த அலவனைப் போன்ற மெயயுடன் ; கள்செய் கடலுள் - கள்ளாகிய கடலிலே; இளமைக் கூம்பின் கடிசெய் மாலைக் கயிற்றின் - இளமையாகிய பாய்மரத்திலே கட்டின மணமாலையாகிய கயிற்றுடன்; துள்ளு தூமாப்பாய் செய்து - துள்ளும் புகையாகிய பாயை விரித்து; உயரி - அதனை உயர்த்து; நிதியம் உள்ளு காற்றுஆ உழலும்-பொருளே நினைக்கப்படுங் காற்றாகத் திரிகின்ற; காமக் கலனும் காண்மின்! - காமக் கலமாகிய பரத்தையையும் பார்மின்!
 
விளக்கம் : கள்செய் கடல் - கள்ளுண்டார் தன்மையைச் செய்யும் நீர் விளையாட்டுத் திரள். கடல் : உவமையாகுபெயர். அடாக்களியவர் (சீவக. 916) என்றார் முன்னும். ( 79 )

930. தாய்தன் கையின் மெல்லத்
தண்ணென் குறங்கி னெறிய
வாய்பொன் னமளித் துஞ்சும்
மணியார் குழவி போலத்
தோயுந் திரைக ளலைப்பத்
தோடார் கமலப் பள்ளி
மேய வகையிற் றுஞ்சும்
வெள்ளை அன்னங் காண்மின்.

பொருள் : தாய் தன் கையின் குறங்கின் மெல்லத் தண் என் எறிய - தாய் தன் கையினாலே துடையிலே மெல்லத் தண் எனத் தட்ட; ஆய் பொன் அமளித் துஞ்சும் அணிஆர் குழவி போல - சிறந்த பொன் அணையிலே துயிலும் அழகிய குழந்தை போல; தோயும் திரைகள் அலைப்ப - செறியும் அலைகள் வந்து மோத; தோடு ஆர் கமலப் பள்ளி மேய வகையில் துஞ்சும் - இதழ் நிறைந்த தாமரை மலர்ப்பாயிலே தனக்குப் பொருந்தும் வகையில் துயிலும்; வெள்ளை அன்னம் காண்மின் - வெள்ளை அன்னத்தைப் பார்மின்!

விளக்கம் : கார் அன்னமும் உண்மையின் வெள்ளை அன்னம் இனஞ்சுட்டிய பண்பு. தண் என என்பது மென்மைப் பண்பின் மேனின்றது. குறங்கின் தண்ணென் எறிய என மாறுக. அமளி - படுக்கை. தோடார் கமலம் - இதழ் நிறைந்த தாமரை மலர். மேயவகை-தன்மனம் பொருந்தியபடி. ( 80 )

931. நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள்
கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச்
சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன
வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின்.

பொருள் : நீலத் துகிலில் கிடந்த நிழல்ஆர் தழல் அம் மணிகள் - நீல ஆடையிலே கிடந்த ஒளிவிடும் தீயனைய செம்மணிகள்; கோலச் சுடர்விட்டு உமிழ - அழகிய சுடர்களை மிகுதியாகச் சொரிதலால்; சால நெருங்கிப் பூத்த தடம் தாமரைப் பூ என்ன - (உண்மையறியாமல்) மிகவும் நெருங்கி மலர்ந்த பொய்கையிலுள்ள தாமரை மலரென்றெண்ணி, குமரி அன்னம் குறுகி - இளமையான அன்னப் பறவை அருகிற் சென்று; ஆலி - அகவிக் கொண்டு; சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின் - சுடர்களைப் பற்ற (அகப்படாமையால்) வருந்தும் தன்மையை நோக்குமின்.

விளக்கம் : நீலத்துகில் - நீர்க்குவமை எனினுமாம். நிழல் - ஒளி. குமரியன்னம் - இளமையுடைய அன்னம். ஆலி - ஆரவாரித்து. அழுங்குதல் - வருந்துதல். துகிலினுக்கு இலை உவமை. ( 81 )

932. வடிக்கண் மகளிர் வைத்த
மரக தந்நன் மணிக
ளொடிக்கச் சுடர்விட் டுமிழ
வுழையம் பிணையொன் றணுகிக்
கொடிப்புல் லென்று கறிப்பா
னாவிற் குலவி வளைப்பத்
தொடிக்கட் பூவை நோக்கி
நகுமா றெளிதோ காண்மின்.

பொருள் : வடிக்கண் மகளிர் வைத்த மரகத நன்மணிகள் - மாவடு வனைய கண்களையுடைய பெண்கள் வைத்த மாரகத மணிகள்; ஒடிக்கச் சுடர்விட்டு உமிழ - ஒடிக்கலாம் படி ஒளியினை மிகுதியாகச் சொரிய; உழை அம்பிணை ஒன்று - அழகிய பெண்மான் ஒன்று; கொடிப் புல் என்று - அறுகம் புல் என்று எண்ணி; அணுகிக் கறிப்பான் நாவின் குலவி வளைப்ப - நெருங்கிக் கறிப்பதற்கு நாவினாலே (கழுத்தை வளைத்து) வளைப்ப; தொடிக்கண் பூவை நோக்கி நகும் ஆறு ஓ எளிது காண்மின்! - வளையல் போல் வட்டமான கண்களையுடைய பூவை அக் காட்சியைப் பார்த்து நகைப்பது ஓ எளிதான காட்சி! அதனைப் பார்மின்!
 
விளக்கம் : ஓ : வியப்பினைத்தரும் குறிப்பிடைச்சொல். வடி - மாவடுவின் வகிர். உழை - மான். அம் உழைப்பிணை என மாறுக. அழகிய மான்பிணை என்க. கொடிப்புல் - அறுகம்புல். கறிப்பான் : வினையெச்சம். பூவை - நாகணவாய்ப்புள். இதன் கண்ணுக்கு வளையல் உவமை. ( 82 )

933. இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன்
கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவின்
சுவையின் மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதா
னவையி னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம்.

பொருள் : இன்னன இவையும் பிறவும் - இத்தன்மையான காட்சிகளும் பிற காட்சிகளும்; கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவின் - கவிகளின் புகழ்ச்சியினும் மேம்பட்டுக் காண்பதற்கு இனிய நீர்விழாவிலே; எரிபொன் ஆரம்மார்பன் - ஒளிவிடும் பொன்மாலை அணிந்த மார்பன்; சுவையின் மிகுதியுடைய சோர்வுஇல் பொருள் ஒன்று - இனிமையின் மேம்பட்ட அழிவற்ற பொருளால் ஓருயிரை; நவையின் அகல நோக்கி - குற்றத்தினின்றும் நீங்குமாறு பார்க்க; அதுதான் நயந்தவண்ணம் மொழிவாம் - அவ்வுயிர் அப் பொருளால் விரும்பின தன்மையை உரைப்போம்.
 
விளக்கம் : மதியின் : இன் : நீங்கற்பொருள். ஒன்று - ஓருயிர்; நவையின் அகலுதல் - நாயுடம்பினின்றும் நீங்க; நோக்கி - நோக்க. சோர்வில் பொருள் பஞ்ச நமஸ்காரமந்திரம். ( 83 )

வேறு
 
934. அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை
வந்தொரு நாய்கது விற்றது கண்டவ
ருய்ந்தினிப் போதி யெனக்கனக் றோடினர்
சிந்தையி னின்றொளிர் தீயன நீரார்.

பொருள் : அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுக் குவாலினை - அந்தணர்கட்குக் சமைத்த சோற்றின் திரளை; வந்து ஒரு நாய் கதுவிற்று - ஒருநாய் வந்து கௌவியது; சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார் அவர் அதுகண்டு - உள்ளத்திலே விடாமல் நின்று ஒளிரும் தீப்போன்ற பண்பினராகிய அவர்கள் அந்நாயைக் கண்டு; இனி உய்ந்து போதி எனக் கனன்று ஓடினர்- இனி நீ பிழைத்துப் போவாய் என்று கூறிச் சினந்து ஓடி வந்தனர்.
 
விளக்கம் : அக்கினி சித்தரென அவர்களின் கொடுமை கூறினர். சோற்றுக் குவால் - சோற்றுக்குவியல். ஒரு நாய்வந்து என மாறுக. அவர் அதுகண்டு என மாறுக. உய்ந்தினிப்போதி என்றது குறிப்புச் சொல் ; இனி நீ உய்ந்துபோகவியலாது; நின்னைக் கொன்றொழிப்பேம் என்பது கருத்து. ( 84 )

935. கல்லொடு வன்றடி கையினர் காற்றினும்
வல்விரைந் தோடி வளைத்தன ராகிக்
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினை யார்வலைப் பட்டதை யன்றே.

பொருள் : கல்லொடு வன்தடி கையினர் - (அவர்கள்) கல்லையும் வலிய தடியையும் கொண்ட கையினராய்; காற்றினும் வல்விரைந்து ஓடி வளைந்தனர் ஆகி - காற்றினும் கடிது விரைந்து ஓடி வளைத்துக்கொண்டவராய்; கொன்றிடு கூற்றினும் கொல்வது மேயினர் - கொல்லுமியல்புடைய கூற்றுவனினும் மேம்பட்டுக் கொல்லத் தொடங்கினர்; வல்வினையார் வலைப்பட்டது - (அதுவும்) கொடிய வினையாளர் கையில் அகப்பட்டது.

விளக்கம் : பட்டதை : ஐ : சாரியை; பகுதிப்பொருள் விகுதி என்பர் நச்சினார்க்கினியர். அன்று, ஏ : அசைநிலைகள். ( 85 )

936. வேள்வியி லுண்டி விலக்கிய நீவிர்க
ளாளெனக் கென்ற தறைவது மோரார்
தாளிற மூர்க்க ரதுக்கலிற் றண்டுறை
நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும்,

பொருள் : வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள் எனக்கு ஆள் என்று அறைவதும் ஓரார் - (நாய் கதறுவது) வேள்வியில் எனக்கு உணவின்றித் தடுத்த நீங்கள் எனக்கு மறுபிறவியில் ஆள் என்பதுபோல அறைவதையும் உணராராய்; மூர்க்கர் தாள் இற அதுக்கலின் - கொடிய அந்தணர் அதன் காலொடிய அடிக்கலுற்றதும்; அது நீள் கயம் பாய்ந்து நீந்துதலோடும் - (அடி தாங்க இயலாத) அந் நாய் பெரிய கயத்திலே பாய்ந்து நீந்தினவுடன்,
 
விளக்கம் : நீந்துதலோடும் ஒருவன் தோன்றினான் என அடுத்த செய்யுளில் முடியும். நச்சினார்ககினியர் (934 - 936) மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டுகூட்டிக்கூறும் முடிபு: - தீயன நீரராகிய அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுத்திரளை ஒரு நாய் வந்து கௌவிற்று; அவர் அதுகண்டு, இனிப் பிழைத்துப்போவை என்று கூறி ஓடி எடுத்த கல்லையும் தடியையும் கையிலே உடையராய்க் கனன்று காற்றினும் கடுக விரைந்தோடி, அது நீள்கயத்தே பாய்ந்து நீந்தின அளவிலே வளைத்தனராகி, அம்மூர்க்கர் அறைவதும் ஓராராய்த் தாளிற அடித்தலின், அது வல்வினையார் வலையிலே அகப்பட்டே விட்டது; அதனைப் பின்னரும் கொன்றிடு கூற்றிற் காட்டிற் கொல்லுந் தன்மையை மேயினர். ( 86 )

வேறு
 
937. மட்குட மல்லன மதியின் வெள்ளிய
கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன்
றுட்கென யாவரும் நடுங்கத் தூய்மையி
லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான்.

பொருள் : மண்குடம் அல்லன மதியின் வெள்ளிய கள்குடக் கன்னியர் இருவரோடு - மண்ணாலாக்கப்படாமல் திங்களினும் வெள்ளிய வெள்ளியாற் செயப்பட்டனவாகிய கள்குடங்களைச் சுமந்த கன்னியரிருவரோடு; தூய்மையில் உட்கு உடைக் களிமகன் ஒருவன் - தூய்மையற்ற அச்சந் தரும் தோற்றமுடைய கட்குடியன் ஒருவன்; யாவரும் உடன் துட்கென நடுங்கத் தோன்றினான் - எவரும் கண்டவுடன் திடுக்கிட்டு நடுங்குமாறு தோன்றினான்.
 
விளக்கம் : கள்ளின் கடுமை தாங்க வெள்ளியாற் சமைத்தனர். கட்குடக்கன்னியர் - கட்குடஞ்சுமந்த கன்னியர். உடன் - கண்டவுடன், தூய்மை, புறந்தூய்மையும் அகந்தூய்மையுமாம். உட்கு - அச்சம். களிமகன் - கட்குடியன். ( 87 )

938. தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது
வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை
யூன்றிவாய் மடுப்பவோர் முழையுட் டீங்கதிர்
கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே.

பொருள் : தோன்றிய புண்செய் வேலவற்கு - அங்ஙனந் தோன்றிய புண்செய்யும் வேலேந்திய அவனுக்கு; வான்திகழ் கொடியனார் - முகிலிடைத் தோன்றும் மின்னுக் கொடியனையார் இருவரும்; வெள்ளி வட்டகை வாய் ஊன்றி - வெள்ளிக் கிண்ணத்தை வாயிலே அழுத்தி ; தூமது மடுப்ப - தூய மதுவைக் கொடுப்ப; ஓர் முழையுள் தீங்கதிர் கான்றிடு கதிர்மதி இரண்டு போன்றவே - ஒரு குகையிலே இனிய கதிரைச் சொரியும் ஒளிமதி இரண்டினைப் போன்றன.
 
விளக்கம் : வேலவன் : முற்கூறிய கனிமகன். வான்திகழ்கொடி - மின்னற்கொடி; இஃது அக்கனியர்க்குவமை. வட்டகை - கிண்ணம். அம்மகளிர் மதுவை வார்த்து மாறிமாறிக்கொடுக்கும் வெள்ளிக் கிண்ணங்கட்கு ஒருமுழையில் மாறிமாறிக் கதிர்பொழியும் இரண்டு தங்கள் உவமை என்க. இஃது இல்பொருளுவமை. முழை-அக்களிமகன் வாய்க்குவமை. தீங்கதிர் கள்ளுக்குவமை. ( 88 )

வேறு
 
939. அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச்
சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன்
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
மழலைச் சொற்களின் வைதிவை கூறினான்.

பொருள் : அழல் அம்பூ நறவு ஆர்ந்து - அழல் போன்ற அழகிய மலரால் ஆக்கின நறவை அருந்தியதனால்; அழல் ஊர்தரச் சுழலும் கண்ணினன் - வெம்மை பரக்கச் சுழலும் கண்ணினனாய்; சோர் தரும் மாலையன் - கழலும் மாலையனாய்; கழலன் - கழலுடையவனாய்; காழகம் வீக்கிய கச்சையன் - கருமை பொருங்திய இறுக்கிய கச்சையனாய்; மழலைச் சொற்களின் வைது இவை கூறினான் - குழறுஞ் சொற்களாலே வைதபின் இவற்றைக் கூறினான்.

விளக்கம் : அழல் நறவு, அம்பூ நறவு எனத் தனித்தனி கூட்டி அழல்வதும் அழகிய பூவாற்சமைத்துமாகிய கள் எனினுமாம். அழல் - வெப்பம். காழகம் - கருமைநிறம். மழலைச் சொல், ஈண்டுக் குழறிப்பேசும் சொல். வைதுபின்னர் இவை கூறினான் என்க. ( 89 )

940. புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர்
கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறிற்
றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி
னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான்.

பொருள் : என் நாயினைப் புடைத்துப் பொன்றுவித்தீர் - என் நாயை அடித்துக் கொன்றுவிட்டீர்; அவ்வுயிர் கடுக்கப் பேர்த்தனிர் தம்மின்! -அவ்வுயிரை விரைய மீட்டுத் தருவீராக; கலாய்க்குறின் தடக்கை மீளிமை தாங்குமின்!- கலகம்புரியின் என் பெரிய கையின் வலிமையைப் பொறுப்பீராக!; அன்றெனின் கட்குடம் உடைப்பென என்று உரையாடினான் - அவ்விரண்டும் அல்லவாயின் கட்குடம் உடைப்பேன் என்று கூறினான்.
 
விளக்கம் : கட்குடம் உடைத்தல் குறிப்பு மொழி. கடுக்க : கடுக: விரித்தல் விகாரம். கலாய்க்க உறின் : கலாய்க் குறின் : அகரம் தொகுத்தல் விகாரம். ( 90 )

வேறு
 
941. நல்வினை யொன்று மிலாதவ னான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல்சுடர் வேல்வல சீவக சாமிசென்
றல்ல லகற்றி யருந்துயர் தீர்த்தான்.

பொருள் : நல்வினை ஒன்றும் இலாதவன் - நல்வினை ஒன்றும் செய்தறியாதவன்; நான்மறை வல்லவர் தம்மை வருத்தலின் - நான்மறை வல்லாளரைத் துன்புறுத்தலின்; செல்சுடர் வேல்வல சீவகசாமி வல்லே சென்று - ஒளி வீசும் வேலை யேந்த வல்ல சீவகன் விரைந்து சென்று; அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான் - அக் களிமகன் நாயிழந்த துன்பத்தை முதற்போக்கி அந்தணர் துயரத்தையுங் களைந்தான்.

விளக்கம் : நல்வினை இலாதவன் என்றது களிமகனை. நான்மறை வல்லவர் என்றது மறைவல்லவரேயல்லது அவர்கிருக்கவேண்டிய செந்தண்மையில்லாதவர் என்பது பட நின்றது. வல்லே - விரைந்து. ( 91 )

942. மீண்டவ ரேகுத லும்விடை யன்னவ
னீண்டிய தோழரொ டெய்தின னாகி
மாண்ட வெயிற்றெகி னம்மற மில்லது
காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான்.

பொருள் : அவர் மீண்டு ஏகுதலும் - அவ்விரு திறத்தாரும் திரும்பிச் சென்றவுடன்; விடை அன்னவன் ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி - இடபம் போன்ற சீவகன் தன்னுடன் குழுமிய தோழருடன் சென்று ; மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது காண்டலும் - இழந்த பற்களையுடைய அந்த நாய் வலிமை யிழந்ததாகக் காணப்பட்டவுடன்; கட்கு இனியான் கலுழ்ந்திட்டான் - கண்ணுக்கினியவன் அழுதிட்டான். 

விளக்கம் : நீந்திய நாய் கரையேறிச் சோர்ந்து உயிர் போகுந்தறுவாயிற் கிடந்ததைச் சீவகன் தோழருடனே சென்று கண்டான். அன்றி, நச்சினார்க்கினியர் முன்னர் (936) முடித்தவாறு கொள்ளினுங் கொள்க. நச்சினார்க்கினியர் முன்னர்த் தம்பியை விட்டுத் தனியே நின்றானென்பதற்கேற்ப, இவன் வினோதம் ஒழிந்து நிற்றலின், தோழல் வந்து திரண்டமை தோன்ற, ஈண்டிய என்றார். எனவே, தம்பியர் வந்தமையும் பெறுதும் என்றுரைத்தனர். அருளினால், இவனை விடை என்றார். இச் செய்யுள் சீவகனுடைய அருட்பண்பை விளக்கிற்று. ( 92 )

943. நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக்
காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர்
சேயுடம் பெய்துவை செல்கதி மந்திர
நீயுடம் பட்டு நினைமதி யென்றான்.

பொருள் : நாய் உடம்பு இவண் இட்டு - நாய் உடலை இங்கே விட்டு; நந்திய பேரொளிக் காய்கதிர் மண்டலம் போன்று - வளர்ந்த பேரொளியை உடைய திங்கள் மண்டிலம் போல; ஒளி கால்வது ஓர் சேய் உடம்பு செல்கதி எய்துவை - ஒளி வீசுவதாகிய ஒரு பெரிய உடம்பை நீ செல்லுங்கதியிலே அடைவாய்; மந்தரம் நீ உடம்பட்டு நினை என்றான் - (அதற்காக) யான் கூறுகின்ற மந்திரத்தை நீ ஒருமனப்பட்டு நினைவாயாக என்றான்.
 
விளக்கம் : நினைமதி : மதி : முன்னிலை அசை. நந்துதல் - பெருகுதல். நந்திய பேரொளிக் காய்கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வதோர் சேயுடம்பு என்றது தெய்வ உடம்பினை. காய்கதிர் மண்டலம் என்றது திங்கள் மண்டிலத்தை. ( 93 )

944. என்றலுந் தன்செவி யோர்த்திரு கண்களுஞ்
சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி
யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங்
குன்றனை யான்பதங் கூற வலித்தான்.

பொருள் : என்றலும் - என்று கூறின அளவிலே; தன் செவி ஓர்த்து - (அது) தன் காதினாலே கேட்டுச் சிந்தித்து; இரு கண்களும் சென்று உகு நீரொடு - இரு கண்களாலும் வடிந்து வீழ்கின்ற நீருடனே; செம்மலை நோக்கி - சீவகனைப் பார்த்து; ஒன்றுபு வால்குழைத்து உள் உவப்பு எய்தலும் - ஒருமனப்பட்டு வாலைக் குழைத்து மகிழ்ந்த அளவிலே ; குன்று அனையான் பதம் கூற வலித்தான் - சலிப்பற்ற சீவகன் (இது தான் காலம் என) மறையைக் கூறத் துணிந்தான்.
 
விளக்கம் : செம்மல் : சீவகன். ஒன்றுபு - மனம் ஒருமைப்பட்டு. குன்றலையான் : சீவகன். வலித்தான் - துணிந்தான். ( 94 )

வேறு
 
945. நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின்
முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து
மற்செய்து வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ
குதற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான்.

பொருள் : நல்செய்கை ஒன்றும் இல்லார் - இம்மையில் நல்வினை ஒன்றுமில்லாதவர்; நாள் உலக்கின்ற போழ்தின் - வாழ்நாள் கழிகின்ற காலத்தே; முன்செய்த வினையின் நீங்கி - (இம்மையில்) அவர் இறக்குமுன் செய்த தீவினையிலிருந்து நீங்க; நல்வினை விளைக்கும் வித்து - (பழவினையாகிய) நல்வினையைத் தரும் வித்தாகிய; மந்திரம் ஐந்தும் - மறை ஐந்தையும்; மல் செய்து வீங்கு தோளான் - மற்போர் புரிந்து பருத்த தோளையுடைய சீவகன்; தன் செய்கை தளிர்ப்ப ஆங்கு தாழ்ந்து அதன் செவிச் செப்புகின்றான் - மறையின் செய்கை தழைக்கும் படியாக ஆங்கே தாழ்ந்து நாயின் செவியிலே செப்புவான் ஆயினான்.
 
விளக்கம் : நீங்கி - நீங்க : எச்சத்திரிபு. தற்செய்கை தளிர்ப்ப என்பதனை அடுத்த செய்யுளில் அகற்றினான் என்பதோடு முடிப்பர் நச்சினார்க்கினியர். நற்செய்கை - தானம் தவம் சீலம் அறிவர்ச் சிறப்பு என்பன. நாள் - வாழ்நாள். தற்செய்கை என்புழித் தன் என்றது மந்திரத்தை. ( 95 )

946. உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சில்
மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மரண வச்சத்
திறுகனீ யிறைவன் சொன்ன வைம்பத வமிர்தமுண்டாற்
பெறுதிநற் கதியை யென்று பெறுநவை யகற்றி னானே.

பொருள் : உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று - நன்மையாக முன்னே செய்தது ஒன்றுமில்லாமல் இருந்தேன் என்று; நீ நெஞ்சில் மறுகல் - நீ உள்ளத்திலே நினைந்து மறுகாதே; பற்றொடு ஆர்வம் விட்டிடு - பற்றையும் ஆர்வத்தையும் விடு; மரண அச்சத்து இறுகல் - இறப்பெனும் அச்சத்திலே நிலைபெறாதே; (அவ்விதம் இருந்து) ; இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் நீ உண்டால் - இறைவன் கூறிய ஐம்பதமாகிய அமிர்தத்தை நீ பருகினால்; நற்கதியைப் பெறுதி என்று - நல்ல கதியை அடைவாய் என்று கூறி; பெரு நவை அகற்றினான் - பெருந்துன்பத்தை நீக்கினான்.
 
விளக்கம் : மறுகல் - சுழலாதேகொள் : வியங்கோள். பற்று - உள்ள தன் மேலுளது. ஆர்வம் - பெறவேண்டியதன் மேலுளது. விட்டிடு: ஒரு சொல். இறுகல் - நிலைபெறாத கொள்: வியங்கொள். பெறுதி நற்கதியை என்பதன் முன் அடுத்த செய்யுளில் உள்ள, நின் கண் நின்ற நீனிற வினையின் நீங்கி என்பதைச் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். மற்றும் இறுகல் என்பதன்பின் பெறுநவை அகற்றினான் என்பதைச் சேர்ப்பர். ( 96 )

947. மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்து
நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி
யெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற்
கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே.

பொருள் : மனத்திடைச் செறும்பு நீக்கி - உள்ளத்திலுள்ள செற்றத்தை நீக்கி; மறவலை ஆகி ஐந்தும் நினைத்திடு - மறவாமல் ஐம்பதத்தையும் நினைப்பாயாக ; நின்கண் நின்ற நீல்நிற வினையின் நீங்கி - நின்னிடமுள்ள தீவினையிலிருந்து விடுபட்டு; எனைப் பகல்தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு - எப்போதும் நீங்காத பேரின்பத்தைத் தரும் என்று உபதேசித்தானுக்கு; அனைப்பத அமிர்தம் நெஞ்சின் அயின்று - அத்தகைய பதமான அமிர்தத்தை நெஞ்சாலே பருகி; விட்டு அகன்றது - நாயுடம்பை விட்டு நீங்கியது.

விளக்கம் : செறும்பு நீக்கி என்பதை முற்செய்யுளில், உறுதி முன் செய்ததின்றி ஒழுகினேன் என்று நெஞ்சில் மறுகல் என்பதன் முன் சேர்ப்பர். செறும்பு - காம வெகுளி மயக்கம். மறவலையாகி - மறத்தலிலையாகி, ஐந்தும் : ஆகுபெயர் ; என்றது ஐந்தெழுத்து மந்திரத்தை. நீல்நிறவினை என்றது தீவினையை. விள்ளா இன்பம் - நீங்காத பேரின்பம். ( 97 )

வேறு
 
948. பாடு பாணி முகமெனும் பான்மையி
னோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற்
கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந்
தாடு கூத்தரி னையெனத் தோன்றினான்.

பொருள் : பாடு பாணிமுகம் எனும் பான்மையின் - அருகனாகமத்திற்கு கூறப்பட்ட, உயிர் செல்லும் முகங்களிற் பாணிமுகம் என்றும் கதியாலே ; ஓடி - சென்று; ஆங்கு ஓர் உயர்வரை உச்சிமேல் கூடி - ஆங்கு உயர்ந்த ஒப்பற்ற வெள்ளி மலைமேலே பொருந்தி; கோலம் குயிற்றி - அணியெல்லாம் புனைந்து; படம் களைந்து ஆடு கூத்தரின் - திரை நீக்கிவிட்டு ஆடும் கூத்தரைய போல; ஐ எனத் தோன்றினான் - வியப்புறத் தோன்றினான்.
 
விளக்கம் : பாணி - கை. பாணிமுகம் - கைம்முகம் ; சுட்டு விரலும் பெருவிரலும் நீங்கின இடம். அதன் வடிவம் (ட). அதுபோல நேரே ஓடிப் பின் விலங்கி ஓடுதலாம். நாயுடம்பு நீங்கிய உயிர் வெள்ளிமலையை அடைந்த கதியே பாணிமுகம். இக்கதி தேவருக்கும் மக்களுக்கும் உரியதென்பர். தத்துவார்த்த சூத்திரம் என்னும் நூலிற்கூறப்பட்டுள்ள தென்பர் இப்பொருள். ( 98 )

949. ஞாயில் சூடிய நன்னெடும் பொன்னகர்க்
கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல்
வேயி னன்னமென் றோளியர் தோன்றியங்
காயி னார்பரி யாள மடைந்ததே.

பொருள் : ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர் - மதிலை உடுத்த அழகிய பெரிய பொன்னகரிலே; கோயில் வட்டம் அங்கு எல்லாம் - கோயில் உள்ள இடம் எல்லாம் ; கொங்கு சூழ்குழல் வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி ஆயினார் - மணஞ் சூழுங் குழலையும் வேயனைய மெல்லிய தோளையும் உடைய மகளிர் தோன்றித் தேவியர் ஆயினார்; பரியாளம் அடைந்தது - ஒழிந்த சுற்றமும் வந்தது.

விளக்கம் : ஞாயில் - மதிலுக்கு ஆகுபெயர். கொங்கு - மணம். வேயின் அன்ன என்புழி இன்சாரியை தவிர்வழி வந்தது. வேய் அன்ன என்க. பரியாளம் - பரிவாரம். ( 99 )

950. மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற்
றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத்
தடைந்த சாய லரம்பையர் தம்முழை
மடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான்.

பொருள் : மடங்கல் ஏறு அனையான் - சிங்கவேற்றைப் போன்றவன்; மிடைந்த மாமணி மேகலை ஏந்து அல்குல் - நெருங்கிய பெரிய மணிகளாலான மேகலை தாங்கிய அல்குலையும்; தடம்கொள் வெம்முலை - பெரிய விருப்பூட்டும் முலையினையும் ; தாமரை வாள் முகத்து - தாமரை யனைய ஒளி பொருந்திய முகத்தினையும்; அடைந்த சாயல் - பொருந்திய மென்மையையும் உடையஅரம்பையர் தம் உழை - அரம்பையரிடத்தே; மகிழ்வு எய்தினான் - களிப்புற்றான்.
 
விளக்கம் : மடங்கல் ஏறு - ஆண் சிங்கம். அல்குலையும் முலையினையும் முகத்தினையும் சாயலையும் உடைய அரம்பையர் என்று விதந்தார். அவர்தரும் போகவின்பத்தின் சிறப்புணர்த்தற்கு. ( 100 )

வேறு
 
951. கற்றவைம் பதங்க ணீராக்
கருவினை கழுவப் பட்டு
மற்றவன் றேவ னாகி
வானிடு சிலையிற் றோன்றி
யிற்றத னுடம்பு மின்னா
விடரொழித் தினிய னாகி
யுற்றத னிலையும் எல்லாம்
ஓதியின் உணர்ந்து கொண்டான்.

பொருள் : கற்ற ஐம்பதங்கள் நீர்ஆ - கற்ற பஞ்சநமக்கார மந்திரம் நீராகக் கொண்டு ; கருவினை கழுவப்பட்டு - தீவினை கழுவப்பெற்று; அவன் வான் இடு சிலையின் தேவன் ஆகித் தோன்றி - அவன் இந்திர வில்போல வானவனாகித் தோன்றி; இற்ற தன் உடம்பும் - விடப்பட்ட தன் உடம்பையும்; இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி உற்றவன் நிலையும் - துன்பந்தரும் இடரைக் கெடுத்துத் தனக்கு இனியவனாகித் தன்னைச் சேர்ந்த சீவகன் நிலையும்; எல்லாம் ஓதியின் உணர்ந்து கொண்டான் - யாவற்றையும் தன் அகஅறிவினாற் கண்டுணர்ந்தான் என்க.
 
விளக்கம் : இற்றஅவ் வுடம்பு எனவும், உற்றவன் நிலை எனவும் பாடம். ஐம்பதங்கள் - ஐந்தெழுத்து மந்திரம். கருவினை - ஈண்டுத் தீவினை. முன்னர் நீனிறவினை என்றதும் நினைக. வானிடு சிலையிற்றோன்றி என்பதற்கு, நூல்கள் இந்திரவில் இன்னவாறு தோன்றுமென்று அது தோன்று முறைமை கூறாவாகலின் அங்ஙனம் தோன்றுகின்ற தேவர்க்கு அஃது உவமையாயிற்று. இக் கருத்தானன்றே வானிடு வில்லின் வரவறியா என்றார் பிறரும் என்று வியக்கங் கூறியுள்ளார். ஓதி - முற்பிறப்பை யுணரும் அறிவு. ( 101 )

வேறு
 
952. இரும்பி னீர்மை கெடுத்தெரி தன்னிறத்
தரும்பொ னாக்கிய வாருயிர்த் தோழனை
விரும்பி விண்ணிறுத் தொய்யெனத் தோன்றினான்
சுரும்புண் கண்ணிச் சுதஞ்சண னென்பவே.

பொருள் : இரும்பின் நீர்மை கெடுத்து - இரும்பைப் போன்ற இழிநிலையைக் கெடுத்து; எரிதன் நிறத்து அரும்பொன் ஆக்கிய - தீ நிறமுடைய அரிய பொன்போல உயர் நிலையை நல்கிய; ஆருயிர்த் தோழனை விரும்பி - சிறந்த உயிரனைய தோழனைக் காண வேண்டி ; சுரும்பு உண்கண்ணிச் சுதஞ்சணன் - வண்டு தேனைப் பருகும் கண்ணியணிந்த சுதஞ்சணன் என்பவன்; விண் இறுத்து ஒய் எனத் தோன்றினான் - வானைக் கடந்து விரைந்து வந்து நிலமிசைத் தோன்றினான்.
 
விளக்கம் : விண்அறுத்து சுதஞ்சனன் எனவும் பாடம். இரும்பும் நரகருயிர்; பொன் வானவர் உயிர் ; உவமை. இரும்பினீர்மை கெடுத்து எரிதன்னிறத்து அரும்பொன் ஆக்கிய ஆருயிர்த் தோழன் என்னுமிதனை இந்நூல் 3107-8-ஆம் செய்யுள்களால் நன்குணரலாம். விண்ணிறுத்து - வானுலகைவிட்டு. ஒய்யென என்றது விரைவுக் குறிப்பு. இஃது அச்சுதஞ்சணன் செய்ந்நன்றியறிதலை விளக்கி நின்றது. சுதஞ்சணன் என்பது நாயாயிருந்து தேவனாகிய உயிர்க்குப் பெயரும் இஃதென்றுணர்த்தியபடியாம்.
( 102 )

வேறு
 
953. ஓசனை நறும்புகை கமழ வொண்ணிலா
வீசிய கதிர்பரந் திமைக்கு மேனியன்
மாசறு மணிமுடி மிடைந்த மாலையன்
பூசுறு பருதியின் பொலிந்து தோன்றினான்.

பொருள் : ஓசனை நறும் புகை கமழ - ஓசனையளவு நறியபுகை மணங்கமழ; ஒண் நிலா வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன் - ஒள்ளிய நிலவைப் போல எறியும் கதிர் பரவி ஒளிரும் மெய்யினனாகவும்; மாசு அறு மணி முடி மிடைந்து மாலையன் - குற்றம் அற்ற மணிமுடியிலே நெருங்கிய மாலையனாகவும்; பூசுஉறு பருதியின் பொலிந்து தோன்றினான் - கையினாற் புனைந்த ஞாயிறு போல விளங்கித் தோன்றினான்.
 
விளக்கம் : நச்சினார்க்கினியர், சுதஞ்சுணன் சீவகனைக் கண்ட பொழுதே வணங்கினான் எனக்கொண்டு, மேனியனது முடிமிடைந்த சீவகன் அப்பொழுது பருதிபோலத் தோன்றினான் என்று பொருள் கூறுவர்.
 
 அவர் கூறும் விளக்கம் :-
 
நறும்புகை ஓரோசனை கமழா நிற்க இமைக்கும் மேனி, நிலாவை வீசி மதிபோல விளங்கும் மேனியன் - சுதஞ்ணன். அவனுடைய முடிவந்து சேர்ந்த இயல்பினையுடையான் - சீவகன் ; என்றது, இவன் ஆசிரியன் ஆதலிற் கண்டபொழுதே முடிவணங்கினான்; மேல், எந்தை (சீவக- 955) ; அண்ணல் ஏந்தி (மேற்படி-1158); காய் கதிர் சுமந்து (மேற்படி-1168) ;  உரிமை தன்னால் ஆட்டி (மேற்படி-1169) எரிபொன்நீள் முடிகவித்தனன் பவித்திரற் றொழுதே (மேற்படி-2366): தாளார ஏத்தி (மேற்படி-3937); களிப்புற்றான் (3685) என்று கூறுமவைகளான் இதுவே கருத்தாம். விளக்கத்தானும் மதியைத் தோற்றுவித்தலானும் பருதி யுவமை. இனி, மேனியனாய், மாலையனாய்ப் பருதியிடத்தே தோன்றினான் என்பாரும் உளர். ( 103 )

வேறு
 
954. குன்றெனத் திரண்ட தோளான்
குறுகலுங் குமர னோக்கி
நின்றவ னெடுங்க ணொன்று
மிமைப்பில நிழலில் யாக்கை
யன்றியுங் கண்ணி வாடா
தமரனே யென்று தேறி
நன்றவன் வரவு கேட்பா
னம்பி நீயாரை யென்றான்.

பொருள் : குன்று எனத் திரண்ட தோளான் குறுகலும் - மலைபோலத் திரண்ட தோளையுடைய சுதஞ்சணன் நெருங்குதலும்; குமரன் நோக்கி - சீவகன் பார்த்து; நின்றவன் நெடுங்கண் ஒன்றும் இமைப்பில் - இங்கு நின்றவனுடைய நீண்ட கண்கள் சிறிதும் இமைப்பிலவாயின!; நிழல் இல் யாக்கை - உடம்போ நிழலில்லாதது!; அன்றியும் கண்ணி வாடாது-மேலும் கண்ணியும் வாடலிலது; அமரனே என்று தேறி - (ஆதலால்) வானவனே என்று தெளிந்து; அவன் வரவு நன்று கேட்பான் - அவன் வரவை நன்றாக அறியவேண்டி; நம்பி! நீ யார்? என்றான் - நம்பியே! நீ யார்? என்று வினவினான்.
 
விளக்கம் : யாரை : ஐ; அசை. அமரனே ஆதல் தேறி என்றும் பாடம். தோளான் : சுதஞ்சணன். குமரன் : சீவகன். ஒன்றும் என்றது சிறிதும் என்னும் பொருள் குறித்துநின்றது. கண்ணிமையாமையும் உடற்கு நிழல்படாமையும் கண்ணிவாடாமையும் தேவர்கட்குரிய அடையாளங்கள். இவ்வுடலை வைக்கிரீக சரீரம் என்று வழங்குப. நம்பி : அண்மை விளி. ( 104 )

955. குங்குமக் குவட்டின் வீங்கிக்
கோலம்வீற் றிருந்த தோளா
யிங்குநின் னருளிற் போகி
யியக்கரு ளிறைவ னாகிச்
சங்கவெண் மலையின் மற்றுச்
சந்திரோ தயத்தி னுச்சி
யங்கியா னுறைவ லெந்தை
யறிகமற் றென்று சொன்னான்.

பொருள் : குங்குமக் குவட்டின் வீங்கிக் கோலம் வீற்று இருந்த தோளாய்! - குங்கும மலைபோலப் பருத்து அழகு குடி கொண்ட தோளனே ; எந்தாய்! - எந்தையே!; இங்கு நின் அருளின் போகி - இங்கிருந்து நின் அருளினாற் சென்று; இயக்கருள் இறைவன் ஆகி - இயக்கருக்குத் தலைவன் ஆகி ; சங்க வெண்மலையின் உச்சி - சங்க வெண்மலையின்மேல்; சந்திரோதயத்தின் - சந்திரோதயம் என்னும் நகரிலே ; அங்கு யான் உறைவல் - அங்கே நான் வாழ்கின்றேன் ; அறிக என்று சொன்னான் - அறிந்து கொள்க என்று சுதஞ்சணன் கூறினான்.
 
விளக்கம் : குவட்டின்: இன் : உவமப் பொருள். மற்று : இரண்டும் அசை. தோளாய்! யான் நின் அருளிற்போகி, இயக்கர் தலைவனாகிச் சங்கமலை உச்சியிலுள்ள சந்திரோதயம் என்னும் நகரத்திலே உறைவல் என்றான் என்க. சங்கமலை - ஒரு மலையின் பெயர்; சந்திரோதயம் - அம்மலைக்கண் உள்ளதொரு நகரத்தின் பெயர் என்க. தன் அன்புடைமை தோன்றத் தான் பெற்றுள்ள தேவவுடம்பிற்குக் காரணனாதல் பற்றி எந்தை என்றான் என்க. ( 105 )

956. என்றவ னுரைப்பக் கேட்டே
இமயமு நிகர்க்க லாற்றாப்
பொன்றரு மாரி வண்கைப்
புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற
வேந்துடை யின்ப மெல்லா
மின்றெனக் கெதிர்ந்த தென்றா
னெரியுமிழ்ந் திலங்கும் வேலான்.

பொருள் : என்று அவன் உரைப்பக் கேட்டு - இவ்வாறு அவன் கூறக் கேட்டு; இமயமும் நிகர்க்கல் ஆற்றா - இமயமலையும் உவமைக் கொவ்வாத; பொன் தரு மாரி வண்கைப் புரவலன் - கற்பகத் தருவையும் முகிலையும் போன்ற கொடைக்கையனான; எரி உமிழ்ந்து இலங்கும் வேலான் - அனல் சொரிந்து விளங்கும் வேலினான்; புகன்று நோக்கி - விரும்பிப் பார்த்து ; வென்றவர் உலகம் பெற்ற - சித்த மீக்ஷத்திரத்தைப் பெற்ற ; வேந்து உடை இன்பம் எல்லாம் - சித்தபரமேட்டிகளின் இன்பம் முற்றும்; இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் - இப்போது எனக்குக் கிடைத்தது என்றுரைத்தான்.
 
விளக்கம் : இமயமும் நிகர்க்கலாற்றாப் புரவலன், பொன் தரு மாரி வண்கைப் புரவலன் எனத் தனித்தனிக் கூட்டுக. இமயமலை உலகந் தாங்குதற்குச் சீவகனுக்குக் கூறப்பட்ட மாறுபடவந்த உவமத் தோற்றம். நச்சினார்க்கினியர் இமயமலையைப் பொன்னுக்கு அடையாக்குவர். பொன்றரு - கற்பகத்தரு. மாரி - முகில். புகன்று - விரும்பி. ஈத்துவக்கும் இன்பமே இன்பங்களுட் சிறந்தமைபற்றிச் சித்தபரமேட்டியின் இன்பத்தை உவமையாக எடுத்தான். ( 106 )

957. சூடுறு கழலி னாற்குச் சுதஞ்சண னிதனைச் சொன்னான்
பாடல்வண் டரற்றும் பிண்டிப் பகவன திறைமை போல
மூடியிவ் வுலக மெல்லா நின்னடித் தருவ லின்னே
யாடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான்.

பொருள் : சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனைச் சொன்னான் - அணிந்த கழலானுக்குச் சுதஞ்சணன் இதனைக் கூறினான்; பாடல் வண்டு அரற்றும் பிண்டிப் பகவனது இறைமைபோல - பாட்டையுடைய வண்டுகள் முரலும் அசோகின் நீழலில் அமர்ந்த முதல்வனுடைய தலைமை இவ்வுலகையெல்லாம் அகப்படுத்தினாற்போல; இவ்வுலகம் எல்லாம் மூடி - நின் இறைமையாலே இவ்வுலகெலாம் அகப்படுத்தி; ஆடியுள் பாவைபோல் - கண்ணாடியிடத்துப் பாவைபோல; நீ அணங்கியது அணங்க - பல்லுயிரும் நீ வருந்திய தொழிலுக்கு வருந்துமாறு; இன்னே நின் அடித்தருவல் என்றான் - இப்போதே நின் அடியிடத்தே தருவேன் என்றான்.

விளக்கம் : உள் - இடம். சூடுறுகழல் - சூடுதலுற்ற வீரக்கழல் என்க. கழலினான் : சீவகன். இதனை என்றது கீழ்வருவதனை என்றவாறு. பகவன் - அருகக் கடவுள். மூடி - அகப்படுத்தி. ஆடியுட்பாவை - கண்ணாடியிற்றோன்றும் எதிர் உருவம். அணங்கியது : பெயர்; வருந்தியதற்கு என்க. கையும் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல என்றார் குறுந்தொகையினும் (அ). நீ அணங்கிய தணங்க என்றதற்கு மன்னுயிரெல்லாம் நின்னஞ்சுமே என்று நச்சினார்க்கினியர் காட்டிய எடுத்துக் காட்டு அவர் உரையோடு பொருந்திற்றில்லை. மன்னுயிர் எல்லாம் உடலாகவும் மன்னன் உயிராகவும் கூறப்படுதலின், உயிர் வருந்துதற்கு உடலும் வருந்துதல் போன்று நீ வருந்தியதற்கு வருந்தும் அன்புடைய உயிர்களை உடைத்தாக இவ்வுலகத்தை ஆக்கி நின்னடித் தருவல் என்பதே நூலாசிரியர் கருத்தாதல் வேண்டும் என்க. ( 107 )

958. வாளொடு வயவ ரீண்டி வாரணத் தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்பநின் னினைப்ப தல்லால்
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்த லில்லாக்
கோளுடைக் கிழமை யொப்பாய் குறைவிலன் பிறவி (னென்றான்.

பொருள் : நாளொடு பக்கம் நைந்து வீழினும் - நாட்களும் பக்கங்களும் கெட்டு வீழ்ந்தாலும்; வீழ்தல் இல்லாக் கோள் உடைக்கிழமை ஒப்பாய் - வீழுந்தன்மை இல்லாத கோள்களின் உரிமை போன்ற உரிமையுடையாய் !; வாளொடு வயவர் ஈண்டி - வீரர்கள் வாளுடன் குழுமி; வாரணத் தொழுவின் முற்றி - யானைத் தொழுவுடன் என்னை வளைத்து; மீளிமை செய்யின் - வன்மை செய்தாராயின்; வெய்ய நண்ப! - விருப்பம் ஊட்டும் நண்பனே!; நின் நினைப்பது அல்லால் - உன்னைச் சிந்திப்பதன்றி; பிறவின் குறைவு இலன் என்றான் - பிறவாற்றான் யாதும் குறைவிலேன் என்றுரைத்தான்.
 
விளக்கம் : அருமை நோக்கிச், செய்யின் என்றான். அங்ஙனம் மேல் வருகின்ற ஊழ் இக் கருத்தினைப் பிறப்பித்தது நின்றது.  இங்கு நச்சினர்ர்க்கினியர், முற்றி எனவே சிறைகோடலன்றிக் கட்டுதல் இன்மை உணர்க எனத் தாம் பின்னர்க் கூறும் உரைக்கேற்ப முன்மொழிந்து கொள்கின்றனர். ( 108 )

959. இன்னிழ லிவரும் பூணா
னிருவிசும் பிவர்த லுற்றப்
பொன்னெழு வனைய தோளாற்
புல்லிக்கொண் டினைய கூறி
நின்னிழல் போல நீங்கே
னிடவர்வரி னினைக்க வென்று
மின்னெழூஉப் பறப்ப தொத்து
விசும்பிவர்ந் தமரன் சென்றான்.

பொருள் : இன் நிழல் இவரும் பூணான் - இனிய ஒளி பரவும் கலன் அணிந்த சுதஞ்சணன் ; இரு விசும்பு இவர்தல் உற்று - பெருவானிலே செல்லக்கருதி; பொன் எழு அனைய தோளான் புல்லிக் கொண்டு - பொற்றூண் போன்ற தோளரனைத் தழுவிக்கொண்டு; நின் நிழல்போல நீங்கேன் - உன் நிழலை போல நீங்காமல் இருப்பேன்; இடர் வரின் நினைக்க என்று - நினக்குத் துன்பம்வரின் நினைந்திடுக என்று; இனைய கூறி - இவை போன்ற இனிய மொழிகளை இயம்பி; மின் எழூஉப் பறப்பது ஒத்து - மின்னல் எழுந்து பறப்பது போல; விசும்பு இவர்ந்து அமரன் சென்றான் - விண்ணிலே எழுந்து அச் சுதஞ்சணன் சென்றான்.

விளக்கம் : அமரனாகிய பூணான் என்க. பூணான்: சுதஞ்சணன்: தோளான்: சீவகன், எழூஉ - எழுந்து. ( 109 )

960. சொல்லிய நன்மை யில்லாச் சுணங்கனிவ் வுடம்பு நீங்கி
யெல்லொளித் தேவ னாகிப் பிறக்குமோ வென்ன வேண்டா
கொல்லுலை யகத்திட் டூதிக் கூரிரும் பிரதங் குத்த
வெல்லையில் செம்பொ னாகி யெரிநிறம் பெற்ற தன்றே.

பொருள் : சொல்லிய நன்மை இல்லாச் சுணங்கன் - நன்மையென்று கூறப்பட்டவை ஒன்றும் இம்மையிற் செய்தறியாத நாய்; இவ் உடம்பு நீங்கி எல் ஒளித்தேவன் ஆகி - இம் மெய்யை விட்டு (இதற்கு முன்னர்ச் செய்த நல்வினை வந்து துணையாகி ஒருவன் கூறிய மறையினால்) பேரொளியுறும் வானவன் ஆகி; பிறக்குமோ என்ன வேண்டா - பிறக்குமோ என்று (உலகினர்) கருத வேண்டா; கொல் உலை அகத்து இட்டு ஊதி - கொல்லன் உலையிலே வைத்து ஊதி; இரதம் குத்த - (உருகின போது) இரதத்தை வார்க்க; கூர் இரும்பு எல்லை இல் செம்பொன் ஆகி. - மிக்க இரும்பு மாற்றற்ற செம்பொன் ஆகி; எரி நிறம் பெற்றது அன்றே - தீயின் நிறத்தை அடைந்தது அல்லவா? (ஆகையால்). 

விளக்கம் : முன், பெருநவை அகற்றினான் (சீவக. 946) என்றது உருகு முகத்திற்குவமை. ( 110 )

வேறு
 
961. எரிமாலை வேனுதியி னிறக்கிக் காம னடுகணையாற்
றிருமாலை வெம்முலைமேற் றிளைக்குந் தேவர் திருவுறுக
வருமாலை யெண்வினையு மகற்றி யின்பக் கடலாக்கித்
தருமாலை யல்ல தியான் றலையிற் றாழ்ந்து பணிவேனோ.

பொருள் : எரிமாலை வேல் நுதியின் இறக்கி - எரியொழுங்கு போலும் வேலின் முனைகளான் இரணியன் முதலானோரைக் கொன்று; காமன் அடுகணையால் - (பின் காமனுக்குத் தோற்று) அவன் எய்த கணைகளினாலே; திருமாலை வெம்முலை மேல் திளைக்கும் தேவர் திருஉறுக - திருமகளின் மாலையணிந்த விருப்பமூட்டும் முலைகளின்மேல் இன்பந் துய்க்கும் திருமால் முதலான வானவர்கள் எல்லோரும் செல்வம் எய்துக; அருமாலை எண் வினையும் நீக்கி - நீக்குதற்கரிய எண் வினைகளையும் நீக்கி; இன்பக் கடல் ஆக்கி -வீட்டின்பத்தை உண்டாக்கி; தரும் மாலை அல்லது - தரும் அருகனை அல்லாமல்; யான் தலையின் தாழ்ந்து பணி வேனோ? - நான் தலையினால் தாழ்ந்து வணங்குவேனோ ?

விளக்கம் :எண் வினைகளை, எண்மர் கவிழ்ந்தனர் (சீவக. 3076) எனத் துறவில் விரியக் கூறுவர். எரிமாலை - தீயின் ஒழுங்கு. நுதி - நுனி. இறக்கி - இறக்கச் செய்து. இரணியன் முதலிய பகைவரைப் படைக்கலனாற் கொன்றமை திருமால் முதலிய தேவர்கட்குச் சினமுண்மையைக் காட்டுதலானும் காமன்கணையால் நொந்து அத்தேவர்கட்கு மகளிர் போகமுடைய ராதலைக் காட்டுதலானும் இவ்வாற்றால் காமவெகுளி மயக்கமுடைய அத்தேவர் இறைவர் ஆகார் என்பது கருத்து. திருவுறுக என்றது இகழ்ச்சிக் குறிப்பு. எண்வினை - ஞானாவரணீயம் முதலியன. மாலை அல்லது என்புழி மால் அருகக் கடவுள்.  (111 )

962. ஒன்றாய வூக்கவேர் பூட்டி
யாக்கைச் செறுவுழுது
நன்றாய நல்விரதச் செந்நெல்
வித்தி யொழுக்கநீர்
குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின்
வேலி காத்தோம்பின்
வென்றார் தம் வீட்டின்பம் விளைக்கும்
விண்ணோ ருலகீன்றே.

பொருள் : ஒன்றாய ஊக்க ஏர் பூட்டி - பிளவுறாத ஊக்கமாகிய ஏரைப்பூட்டி; யாக்கைச் செறுஉழுது - உடம்பாகிய செய்யைத் தவத்தாலே வருந்துவித்து; நன்று ஆய நல்விரதச் செந்நெல் வித்தி - நல்ல நோன்பாகிய செந்நெல்லை விதைத்து; ஒழுக்கம் நீர் குன்றாமல் தாம் கொடுத்து - நல்லொழுக்கமாகிய நீரை வற்றாமற் பாய்த்தி; ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின் - ஐம்பொறியாகிய வேலியைப் புலனாகிய பசுக்கள் பிரியாத வண்ணம் காத்துத் தீங்கைத் தடுத்தால்; (அந்நிலை) விண்ணோர் உலகு ஈன்று - முதலில் துறக்கத்தினை நல்கி; வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் - புலனை வென்ற சித்த பரமேட்டிகளின் பேரின்ப வீட்டினைத் தரும்.

விளக்கம் : ஊக்கத்திற்கு ஏரும், யாக்கைக்கு வயலும், விரதத்திற்குச் செந்நெல்லும், ஒழுக்கத்திற்கு நீரும் பொறியடக்கத்திற்கு வேலியும் வீட்டின்பத்திற்கு அச்செந்நெல் விளைவும் உவமைகள். வென்றார் - சித்தபரமேட்டிகள். (960) சொல்லிய முதலிய மூன்று கவியும் சீவகன் தோழரை நோக்கிக் கூறியவை. ( 112 )

வேறு
 
963. இத்தலை யிவர்க ளேக
விமயநட் டரவு சுற்றி
யத்தலை யலற முந்நீர்
கடைந்தவ ரரவ மொப்ப
மைத்தலை நெடுங்க ணாரு
மைந்தரு மறலி யாட
மொய்த்திரள வன்ன மார்க்கு
மோட்டிரும் பொய்கை புக்கார்.

பொருள் : இவர்கள் இத்தலை ஏக-சீவகனும் தோழர்களும் இங்கிருந்து செல்ல; மைத்தலை நெடுங்கணாரும் மைந்தரும் - மைதீட்டிய நெடுங்கண் மகளிரும் மைந்தரும்; அத்தலை இமயம் நட்டு அரவு சுற்றி - அக் காலத்தே இமயத்தை நட்டுப் பாம்பைச் சுற்றி; முந்நீர் அலறக் கடைந்தவர் அரவம் ஒப்ப - கடல் அலறுமாறு கடைந்தவர்களின் ஆரவாரம் போல; மறலி ஆட - மாறு பட்டு ஆடுதற்கு; இள அன்னம் மொய்த்து ஆர்க்கும் - இளமையான அன்னங்கள் மொய்த்து ஆரவாரிக்கும்; மோட்டு இரும்பொய்கை புக்கார் - மேன்மையான பெரிய பொய்கையை அடைந்தனர்.

விளக்கம் : மந்தரத்தின் தொழிலை இமயத்துக் கேற்றினார், அது மலையரையன் ஆதலின்; இமயவில் வாங்கிய (கலி. 38) என்றார் பிறரும்; (மேருவின் தொழிலை இமயத்திற் கேற்றுதல்) அத்தலை - அக்காலத்து. ( 113 )

964. கலந்தெழு திரைநுண் ணாடைக்
கடிக்கய மடந்தை காம
ரிலங்குபொற் கலாபத் தல்கு
லிருகரைப் பரப்பு மாக
வலர்ந்ததண் கமலத் தம்போ
தணிதக்க முகத்திற் கேற்ப
நலங்கெழு குவளை வாட்க
ணன்னுத னலத்தை யுண்டார்.

பொருள் : இருகரைப் பரப்பும் - இருகரை யிடமும் ; காமர் இலங்கு பொன் கலாபத்து அல்குல் ஆக - அழகிய விளக்கமுற்ற பொன் மேகலை அணிந்த அல்குலாகவும் ; கலந்து எழுதிரை நுண் ஆடை - அதிலே கலந்து எழுகின்ற அலையாகிய நுண்ணிய ஆடையினையும்; அலர்ந்த தண்கமலத்து அம்போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப - மலர்ந்த தண்ணிய தாமரைப் போதாகிய அழகிய முகத்திற்குத்தக; நலம் கெழுகுவளை வாள்கண் - அழகு பொருந்திய குவளையாகிய வாட்கண்ணினையும் உடைய; கடிக்கய மடந்தை காமர் நன்னுதல் நலத்தை உண்டார் - மணமுறுங் கயமாகிய மடந்தையாகிய அழகிய நன்னுதலாளின் நலத்தைப் பருகினர்.

விளக்கம் : அணிதக்க குவளை வாட்கண் என்று கூட்டி, ஏற்ப என்னும் எச்சம் தக்க என்னும் வினைகொண்டது என்பர் நச்சினார்க்கினியர். இந் நூலாசிரியர் கலைபயிலுதல் அரசு கட்டிலேறுதல் முதலியவற்றையும் திருமணமாகக் கூறும் தம் வழக்கத்திற்கேற்பவே ஈண்டும் புனலாட்டின்பத்தையும் மகளிர் போகமாகவே கூறுகின்றார். கடிக்கய மடந்தை - மணமுடைய குளமாகிய நங்கை. கலாபம் - ஓர் அணிகலன். அணிதக்க முகம் - அழகு வீற்றிருத்தற்கு ஏற்ற முகம். நன்னுதல் : அன்மொழி. ( 114 )

965. தண்ணுமை முழவு மொந்தை
தகுணிச்சம் பிறவு மோசை
யெண்ணிய விரலோ டங்கை
புறங்கையி னிசைய வாக்கித்
திண்ணிதிற் றெறித்து மோவார்
கொட்டியுங் குடைந்து மாடி
யொண்ணுதன் மகளிர் தம்மோ
டுயர்மிசை யவர்க ளொத்தார்.

பொருள் : தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் - தண்ணுமை முதலியவற்றின் ஓசைகளையும்; பிறவும் எண்ணிய ஓசை - மற்றும் எண்ணி கருவிகளின் ஓசைகளையும்; விரலோடு அங்கை புறங் கையின் இசைய - விரலாலும் உள்ளங்கையாலும் புறங்கையாலும் பொருந்துமாறு; திண்ணிதின் தெறித்தும் கொட்டியும் குடைந்தும் ஆக்கி - உறுதியாகத் தெறித்தும் தட்டியும் கலக்கியும் நீரிலே பிறப்பித்து; ஓவார் - ஒழிவிலராய்; ஒண் நுதல் மகளிர் தம்மோடு ஆடி - ஒள்ளிய நெற்றியையுடைய மகளிருடன் ஆடி ; உயர்மிசை யவர்கள் ஒத்தார் - வானலகத்த வரைப் போன்றனர் ஆடவர்கள்.

விளக்கம் : தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் என்பன இசைகருவிகள். உயர்மிசையவர்கள் - வானவர். இன்ப நுகர்ச்சிக்கு வானவர் உவமை.  (115 )

966. சிவிறியின் மாறு தூயுங்
குங்கும மெறிந்துந் தேங்கொ
ளுவறுநீ ருழக்கி யோட்டி
யுடைபுறங் கண்டு நக்குத்
தவறெனத் தாமம் பூட்டித்
தருதிறை கொண்டு மின்பத்
திவறினார் காம வெள்ளத்
தேத்தருந் தன்மை யாரே.

பொருள் : தேன் கொள் உவறு நீர் - இனிமை கொண்ட ஊற்று நீரில்; சிவிறியின் மாறு தூயும் - நெடுந்துருத்தியினால் மாறுகொண்டு தூவியும்; குங்குமம் எறிந்தும் - குங்குமத்தை மேலே வீசியும்; உழக்கி ஓட்டி உடைபுறம் கண்டு நக்கு - (நீரைக்) கலக்கி வெளியேற்றித் தோல்வி கண்டு நகைத்து; தவறு எனத்தாமம் பூட்டித் தரு திறை கொண்டும் - அஞ்சினாய் ஆகையால் தவறு செய்தாய் என்று கூறி மலர்மாலையாற் பிணித்துத் திறை பெற்றும்; ஏத்தருந் தன்மையார் - புகழ்தற்கரிய பண்பினார்; காம வெள்ளத்து இன்பத்து இவறினார் - (மேலும்) காம வெள்ள இன்பத்திலே மிகுந்தனர்.

விளக்கம் : தரு திறை : புணர்ச்சியின்பம். சிவிறி - நீர் வீசுமொரு கருவி. தூயும் - தூவியும். மாறுதூவுதல் - ஒருவர்மேல் ஒருவர் எதிர்நின்று தூவுதல். உடைபுறம் - உடைதலானே காட்டப்படும் முதுகு. உவறு நீர் - ஊறும் நீர்; உவறு நீர் உயர் எக்கர் என்றார் கலியினும் (136.) இவறுதல் - மிகுதல். ( 116 )

967. சாந்தக நிறைந்த தோணி
தண்மலர் மாலைத் தோணி
பூந்துகி லார்ந்த தோணி
புனைகலம் பெய்த தோணி
கூந்தன்மா மகளிர் மைந்தர்
கொண்டுகொண் டெறிய வோடித்
தாந்திரைக் கலங்கள் போலத்
தாக்குபு திரியு மன்றே.

பொருள் : கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டு கொண்டு ஓடி எறிய - கூந்தலையுடைய மகளிரும் ஆடவரும் சாந்து முதலியவற்றைக் கொண்டு ஓடி எறிதலால்; சாந்தகம் நிறைந்த தோணி - சாந்தைத் தன்னிடத்தே கொண்ட தோணியும்; தண்மலர் மாலைத் தோணி - குளிர்ந்த மலர்மாலை கொண்ட தோணியும்; பூந்துகில் ஆர்ந்த தோணி - பூவேலை செய்த ஆடை நிறைந்த தோணியும்; புனைகலம் பெய்த தோணி - அணிகலம் கொண்ட தோணியும்; தாம் - ஆகிய இவைகள்; திரைக் கலங்கள் போல - கடலிற் கலங்கள் போல; தாக்குபு திரியும் - தம்மில் தாக்கித் திரியும்.

விளக்கம் : அன்று, ஏ : அசைகள். நீராட்டுவிழவிற்குவேண்டிய சாந்து முதலியவற்றை யுடையவாய் நீரிலே நின்ற பல்வேறு தோணிகளும் அவர்கள் நீராட்டின் எழுந்த அலைகளான் அலைப்புண்டு ஒன்றனோடொன்று தாக்கித் திரியும் என்றவாறு. தாக்குபு - தாக்கி. ( 117 )

968. கலிவளர் களிறு கைந்நீர்
சொரிவபோன் முத்த மாலை
பொலிவொடு திவண்டு பொங்கிப்
பூஞ்சிகை யலமந் தாடக்
குலிகநீர் நிறைந்த பந்திற்
கொம்பனா ரோச்ச மைந்தர்
மெலிவுகண் டுவந்து மாதோ
விருப்பொடு மறலி னாரே.

பொருள் : முத்த மாலை பொலிவொடு திவண்டு பொங்கி - முத்துமாலை அழகுற அசைந்து பொங்க; பூஞ்சிகை அலமந்து ஆட - பின்னின மயிர் சுழன்று அசைய; கொம்பனார் - பெண்கள்; கலிவளர் களிறு கை நீர் சொரிவ போல் - தழைத்து நீண்ட, களிற்றின் துதிக்கை நீரைச் சொரிவனபோல ; குலிக நீர் நிறைந்த பந்தின் - செங்குலிக நீர் நிறைந்த மட்டத் துருத்தியினால்; ஓச்ச - நீரை வீசி; மைந்தர் மெலிவு கண்டு உவந்து - ஆடவரின் சோர்வு கண்டு மகிழ்ந்து; விருப்பொடு மறலினார் - (மேலும்) விருப்பத்துடன் மாறுபட்டார்.

விளக்கம் : பொங்கி - பொங்க: எச்சத்திரிபு. மாது, ஓ : அசைகள். கலிவளர் களிறு என்றதற்குச் செருக்கு மிகாநின்ற களிறு எனலுமாம். குலிகம் - சாதிலிங்கம். பந்து, இதுவுமோர் வகைத்துருத்தி ; இதனை மட்டத்துருத்தி என்பர். ( 118 )

969. வண்ணவொண் சுண்ணம் பட்டு
மாலையுஞ் சாந்து மேந்தி
யெண்ணருந் திறத்து மைந்த
ரெதிரெதி ரெறிய வோடி
விண்ணிடை நுடங்கு மின்னு
மீன்களும் பொருவ போல
மண்ணிடை அமரர் கொண்ட
மன்றலொத் திறந்த தன்றே.

பொருள் : விண்ணிடை நுடங்கும் மின்னும் மீன்களும் போருவ போல - வானிலே அசையும் மின்கொடியும் மீன்களும் தம்மிற் பொருவன போல; வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி - அழகிய ஒள்ளிய சுண்ணப் பொடியையும் பட்டையும் மாலையையும் சாந்தையும் ஏந்தி ; எண் அருந் திறந்து மைந்தர் - எண்ணற்கரிய ஆடவர்கள்; எதிர் எதிர் எறிய - (மகளிரின்) எதிரே எதிரே; மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து - நிலமிசை வானவர்கொண்ட மணம் போல; ஓடிஇறந்தது - (அவ்விரு திறத்தாரும்) சோர்ந்த பிறகு நீர்விளையாட்டுக்) கழிந்தது.
 
விளக்கம் : வண்ண ஒண் சுண்ணம் - நன்னிறமும் ஒளியும் உடைய நறுமணப் பொடி. மீன்கள் மைந்தர்க்கும் நுடங்குமின் மகளிர்க்கும் உவமையாகக் கொள்க. மன்றல் - திருமணம். இந்நீராட்டு விழா தேவர் திருமண விழாப் போன்றிருந்தது என்பது கருத்து. ( 119 )

வேறு
 
970. உரைத்த வெண்ணெயு மொண்ணறுஞ் சுண்ணமு
மரைத்த சாந்தமு நானமு மாலையு
நுரைத்து நோன்சிறை வண்டொடு தேனின
மிரைத்து நீர்கொழித் தின்ப மிறந்ததே.

பொருள் : உரைத்த எண்ணெயும் - தேய்த்துக்கொண்ட எண்ணெயும்; ஒள் நறுஞ் சுண்ணமும் - சிறந்த சுண்ணப் பொடியும்; அரைத்த சாந்தமும் - அரைத்த சந்தனமும்; நானமும் மாலையும் - கத்தூரியும் மாலைகளுமாக; நுரைத்து - நுரை செய்து ; நோன்சிறை வண்டொடு தேன் இனம் இரைத்து - வலிய சிறகுகளையுடைய வண்டும் தேன் இனமும் முரன்று; கொழித்து - தெளிவுடையதாய்; நீர் இன்பம் இறந்தது - நீர் இனிமை மிகுந்தது.
 
விளக்கம் : உரைத்த முதலிய பெயரெச்சங்கள் செயப்படுபொருளன. உரைத்த - உரைக்கப்பட்ட; அரைத்த - அரைக்கப்பட்ட, நுரைத்து - நுரைக்கப்பட்டு, இரைத்து - இரைக்கப்பட்டென இவ்வெச்சங்களை செயப்பாட்டு எச்சங்ளாகக் கொள்க. இன்பம் இறந்ததே என்பதற்குத் தனது நலமிழந்தது எனலுமாம். என்னை? நீராடியபின் அந்நீர் உண்ணவும் ஆடவும் தகுதியற்றதாகும் என்பதே பரிபாடலினும் காணப்பட்டது ஆகலான் என்க.
 
கழுநீர மஞ்சனக் குங்குமக் கலங்கல்
வழிநீர் விழுநீர அன்று வையை
 
என்பது பரிபாடல். ( 120 )

வேறு
 
971. கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவு ளன்ன
வித்தக விளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி
முத்தணிந் தாவி யூட்டி முகிழ் முலை கச்சின் வீக்கிப்
பித்திகைப் பிணையல் சூழ்ந்து பெண்கொடி பொலிந்த வன்றே.

பொருள் : கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவுள் அன்ன - குருக்கத்திக் கண்ணியணிந்த நெற்றியை உடைய, யாவருங் கைகுவித்துத் தொழும் முருகனைப் போன்ற; வித்தக இளையர் எல்லாம் விழுமணிக் கலங்கள் தாங்கி - திறமுடைய இளைஞர்கள் யாவரும் சிறந்த மணியணிகளைப் புனையவும்; பெண் கொடி - பெண் கொடிகள் எல்லாம்; ஆவி ஊட்டி - கூந்தலுக்கு அகிற்புகையூட்டி; முத்து அணிந்து முகிழ்முலை கச்சின் வீக்கி - முத்துமாலை அணிந்து, அரும்பனைய முலைகளைக் கச்சினால் இறுக்கி; பித்திகைப் பிணையல் சூழ்ந்து - பிச்சிமாலை புனைந்து; பொலிந்த - பொலிவுற்றன.

விளக்கம் : கத்திகை . குருக்கத்தி மலர். கண்ணி-தலையிற் சூடும் மாலை. உலகெலாங் கை தொழுதற்குரிய கடவுள் என்க. கடவுள் ஈண்டு முருகன். வித்தகம் - சதுரப்பாடு. விழுமணி - சிறந்தமணி. தாங்கி என்னும் எச்சத்தைத் தாங்க எனத் திரித்துக் கொள்க. ஆவி - நறுமணப் புகை. பித்திகைப் பிணையல் - பிச்சிமலர் மாலை. பெண் கொடிகள் பல பொலிந்த எனப் பலவின்பால் முற்றுவினையைக் கூட்டுக. ( 121 )

972. திருந்துபொற் றேருஞ் செம்பொற்
சிவிகையு மிடைந்து தெற்றிக்
கருங்கயக் களிறு மாவுங்
காலியற் பிடியு மீண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு
நெடுவரைத் தொடுத்த வெள்ளங்
கருங்கடற் கிவர்ந்த வண்ணங்
கடிநகர்க் கெழுந்த வன்றே.

பொருள் : திருந்து பொன் தேரும் - அழகிய பொற்றோரும்; செம்பொன் சிவிகையும் - செம் பொன்னாலான பல்லக்கும் ; மிடைந்து தெற்றி - நெருங்கிப் பிணங்கி; கருங்கயக் களிறும் - கரிய பெரிய களிறுகளும் ; கால்இயல் பிடியும் - காற்றெனச் செல்லும் பிடியும் ; மாவும் நெருங்குபு - புரவிகளுமாக நெருங்கி; மள்ளர் தொக்கு - வீரர் குழுமி ; நெடுவரைத் தொடுத்த வெள்ளம் - பெரிய மலையினின்றும் இடையறாது பெறுகும் வெள்ளம்; கருங்கடற்கு இவர்ந்த வண்ணம் - கரிய கடலை நோக்கிச் சென்றாற் போல; கடிநகர்க்கு எழுந்த - காவலையுடைய நகருக்குப் போயின.

விளக்கம் : தெற்றுதல் - செறிதல். கருங்கயக்களிறு என்புழி கய உரிச்சொல்; பெருமைப் பண்பு குறித்து நின்ற. மா - குதிரை. கால் - காற்று, நெருங்குபு - நெருங்கி. வெள்ளம் - நீராடிமீளும் குழுவிற் குவமை, கருங்கடல் - நகரத்திற்குவமை. ( 122 )

வேறு
 
973. கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென
வுடல்சின வுருமென வூழித் தீயெனத்
தொடர்பிணி வெளின்முதன் முருக்கித் தோன்றிய
தடலருங் கடாக்களிற் றசனி வேகமே.

பொருள் : கடல் என - முழக்காற் கடல்போலவும்; காற்று என - விரைவாற் காற்றெனவும்; கடுங்கண் கூற்று என - கொடுமையால் கூற்றுவன் நிகர்ப்பவும்; உடல் சின உரும் என - வருத்தும் சினத்தால் இடி யேய்ப்பவும்; ஊழித் தீ என - ஒன்றாக அழித்தலின் ஊழித்தீ யொப்பவும்; அடல் அருங்கடாக் களிற்று அசனி வேகம் - கொல்லற்கரிய மதகளிறாகிய அசனிவேகம்; தொடர்பிணி வெளில் முதல் முருக்கி - காலிற் சங்கிலி பிணித்த மரத்தையும் கம்பத்தையும் அடியிலே முறித்து; தோன்றியது - வெளிப்பட்டது.

விளக்கம் : கடல் முதலிய உவமைகட்கு முழக்கம் முதலிய பொதுத் தன்மைகள் விரித்துக் கொள்க. உடல் சினம் : வினைத்தொகை. உடலுதல் - மாறுபடுதல். உரும் - இடி. ஊழித்தீ - ஊழிக்காலத்தே தோன்றி உலகினை அழிக்கும் நெருப்பு. தொடர் - சங்கிலி. வெளில் - தறி. அசனிவேகம் - கட்டியங்காரன் பட்டத்தியானை. களிற்றசனி வேகம் என்புழி உயிர்த்தொடர் றகரவொற்று அல்வழிக்கண் இரட்டிற்று. ( 123 )
 
974. பொருதிழி யருவி போன்று
பொழிதரு கடாத்த தாகிக்
குருதிகொண் மருப்பிற் றாகிக்
குஞ்சரஞ் சிதைந்த தென்னக்
கருதிய திசைக ளெல்லாங்
கண்மிசைக் கரந்த மாந்தர்
பருதியின் முன்னர்த் தோன்றா
மறைந்தபன் மீன்க ளொத்தார்.

பொருள் : குஞ்சரம் பொருது இழி அருவி போன்று - அக்களிறு, மலையிடைப் பொருது விழும் அருவி போல; பொழி தரு கடாத்தது ஆகி - சொரியும் மதமுடையதாய்; குருதி கொள் மருப்பிற்று ஆகி - செந்நீர் பயின்ற கொம்புடையதாய்; சிதைந்தது என்ன - தன் பண்பு கெட்டது என்று அதனைக் கண்டவர் கூக்குரலிட்டாராக; கருதிய திசைகள் எல்லாம் கண்மிசைக் கரந்த மாந்தர் - அக்களிற்றின் கண்கள் நோக்குந் திக்கெல்லாம் அதன் கண்ணிடத்தே தோன்றாமல் மறைந்த மக்கள் பருதியின் முன்னர்த் தோன்றா - கதிரவன் முன்னே தோன்றாதனவாய்; மறைந்த பன்மீன்கள் ஒத்தார் - மறைந்த பல விண்மீன்களைப் போன்றனர்.
 
விளக்கம் : மிசை - இடம். இது போகாமல் நின்ற நிலையிலே மறைந்ததற்குவமை. மக்களைக் குத்திக்கொன்றதென்பது தோன்றக் குருதிகொள் மருப்பிற்றாகி என்றார். குஞ்சரம் - யானை. தோன்றா : பலவறிசொல் ; தோன்றாதவனவாய் என்க. ( 124 )

975. கருந்தடங் கண்ணி தன்மேற்
காமுக ருள்ளம் போல
விருங்களி றெய்த வோடச்
சிவிகைவிட் டிளைய ரேக
வரும்பெற லவட்குத் தோழி
யாடவ ரில்லை யோஎன்
றோருங்குகை யுச்சிக் கூப்பிக்
களிற்றெதி ரிறைஞ்சி நின்றாள்.

பொருள் : கருந் தடங்கண்ணி தன்மேல் - கரிய பெரிய கண்ணாளாகிய குணமாலையின் மேல்; காமுகர் உள்ளம் போல - காமுகர் உள்ளம் செல்வது போல; இருங்களிறு எய்த ஓட - பெரிய களிறு நோக்கமுற்றோட; சிவிகை விட்டு இளையர் ஏக - பல்லக்கை விட்டுப் பணியாளரும் ஓடிவிட்டதால்; அரும் பெறல் அவட்குத் தோழி - பெறுதற்கரிய அவளுக்குத் தோழியானவள்; ஆடவர் இல்லையோ என்று - ஆடவர் யாரும் இங்கிலையோ என்று கூவி; உச்சி கை ஒருங்கு கூப்பி - உச்சியிலே கைகளை ஒன்றாகக் குவித்து; களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள் - யானையின் எதிரே வணங்கி நின்றாள்.
 
விளக்கம் : கார் விரி மின்னனார் மேற் காமுகர் நெஞ்சின் ஓடும் தேர் பரி கடாவி (சீவக. 442) என முன்னரும் இவ்வுவமை வருதல் காண்க. கண்ணி - ஈண்டுக் குணமாலை. இளையர் - சிவிகை காவுவோர். அரும்பெறலவள் - குணமாலை.( 125 )

976. என்னைக்கொன் றிவள்க ணோடு
மெல்லையி லொருவன் றோன்றி
யின்னுயி ரிவளைக் காக்கு
மன்றெனி லென்கண் மாய்ந்தாற்
பின்னைத்தான் ஆவ தாக
வென்றெண்ணிப் பிணைக ணோக்கி
மின்னுப்போ னுடங்கி நின்றாள்
வீததை பொற்கொம் பொப்பாள்.

பொருள் : என்னைக் கொன்று இவள்கண் ஓடும் எல்லையில் - என்னை இக்களிறு கொன்று இவளிடம் ஓடும்போது; ஒருவன் தோன்றி - ஒருவன் வந்து; இவள் இன்னுயிரைக் காக்கும் - இவளுடைய இனிய உயிரைக் காப்பான்; அன்று எனில் - இல்லையென்றால்; என்கண் மாய்ந்தாற் பின்னைத்தான் ஆவது ஆக - என்கண் இறந்தாற் பிறகு ஆவது ஆகுக; என்று எண்ணி - என நினைந்து (நிற்க); பிணைகொள் நோக்கி - மானோக்கினாள் ஆகிய; வீததை பொன் கொம்பு ஒப்பாள் - மலர்கள் செறிந்த பொற்கொடி போன்ற குணமாலை ; மின்னுப்போல் நுடங்கி நின்றாள் - மின்னைப்போல் ஒசிந்து நின்றாள்.
 
விளக்கம் : எண்ணி - எண்ண, ஒருவன் என்பது உட்கோளாதலின், ஆடவர் எனப் பன்மையாற் கூறினாள். நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் (975) இதனைப் பிணைத்துக், குணமாலை தன்மேற் களிறு ஓடிவருதலைக் கண்டு இறைஞ்சி மின்னுப் போல் நுடங்கி நின்றாள் என்றும், தோழி மேற்கூறியவாறு எண்ணிக் களிற்றின்முன் கைகுவித்து நின்றாள் என்றும் முன் பின்னாக மாற்றியுரைப்பர். மேல், நெடுங்கணாற் கவர்ந்தகள்வி - அஞ்சனத் துவலையாடி நடுங்கினாள் நாட்டமும் நடுக்கமும் (சீவக- 1024, 1003) என வருவதால், மின்னுப் போல் நுடங்கி நின்றாள் குணமாலையாகக் கொள்ளவேண்டியுள்ளது. அதன் பொருட்டே எண்ணி என்பதை, எண்ண எனத் திரிக்க வேண்டியுள்ளது. இது நச்சினார்க்கினியர்க்குடன்பாடேயாகும். ( 126 )

977. மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா
லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து
தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப்
பணிவருங் குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான்.

பொருள் : பணிவருங் குருசில் - பிறரைப் பணிதலில்லாத சீவகன்; மணி இருதலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால் - இரு முனைகளினும் மணியைச் சேர்த்துச் சிறந்த பொன்னாற் செய்யப்பட்ட கயிற்றினால்; அணி இருங் குஞ்சி ஏறக் கட்டியிட்டு - அழகிய கரிய குஞ்சியைச் சேர்த்துக்கட்டி; அலங்கல் சூழ்ந்து - மாலையை அதன்மேற் சுற்றி ; தணிவு அருந்தோழர் சூழ - அன்பு குறைதல் அறியாத தோழர்கள் சூழ்ந்துவர தாழ்குழை திருவில் வீச - தாழ்ந்த குழை வானவில்லென ஒளி சொரிய; செல்வான் பாவையது இடரைக் கண்டான்-செல்பவன் குணமாலையின் துன்பத்தைக் கண்டான்.
 
விளக்கம் : கட்டியிட்டு : ஒரு சொல், குழல் , யேறக்கட்டி என்றும் பாடம்.  வான்பொன் - சிறந்த பொன். இருங்குஞ்சி - கரிய மயிர். தணிவரும் என்புழி அன்பு தணிதலில்லாத என வருவித்தோதுக. குழை - குண்டலம். தாழ்குழை : வினைத்தொகை. குருசில் - தலைமைத் தன்மையுடைய சீவகன். பாவை : குணமாலை. ( 127 )

978. பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத
லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா
வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா
வண்ணலங் களிற்றை வையா ஆர்ததுமே லோடினானே.

பொருள் : பெருந்தகை பெண்ணுயிர் அவலம் நோக்கி - பெருந்தகையான சீவகன் ஒரு பெண்ணின் உயிர் இறந்துபடுதல் கண்டு ; வாழ்வின் சாதல் எண்ணினன் - வாழ்வதினும் சாதல் மேலென எண்ணினான் ; எண்ணி நொய்தா இனம் மலர்மாலை சுற்றா - எண்ணிக் கடிதாக இனமலர் மாலைகளைச் சுற்றி; வண்ணப் பொன் கடகம் ஏற்றா - அழகிய பொற்கடத்தை மேலே ஏற்றி; வார் கச்சில் தானை வீக்கா-நீண்ட கச்சினால் ஆடையை இறுக்கி; அண்ணல் அம் களிற்றை வையா - பெருமை தங்கிய களிற்றை வைது; ஆர்த்து மேல் ஓடினான் - ஆர்ப்பரித்துக் களிற்றின்பால் ஓடினான்.

விளக்கம் : வேழம் நான்கும் வெல்லும் ஆற்றலன் (சீவக. 649) ஆதலால், இக்களிறு அடர்க்க எளிதாயினும். அடர்த்தாற் கட்டியங்காரற்கும் நமக்கும் வேறுபாடு பிறக்கு மென்றெண்ணி, முதலில் அதனை அடக்காது சென்றானெனினும், பெண்ணுயிர் அவலப்படுதல் கண்டு, அவ் வேறுபாடு, இவள் இறந்து படுதல் கண்டு போதலினும் நன்றென்று கருதினான்; அக்களிற்றை அடர்ப்பதால் இறப்பு நேரினும் ஏற்கவும் எண்ணனின். ( 128 )

979. குண்டலங் குமரன் கொண்டு
குன்றின்மேல் வீழு மின்போ
லொண்டிறற் களிற்றி னெற்றி
யெறிந்துதோ டொலித்து வீழ
மண்டில முத்துந் தாரு
மாலையுங் குழலும் பொங்க
விண்டலர் கண்ணி சிந்த
மின்னிற்சென் றெய்தி னானே.

பொருள் : குமரன் குண்டலம் கொண்டு - (ஓடிய) குமரன் (தான் செல்வதற்கு முன்னே களிறு தாழாதவாறு) காதின் குண்டலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு; குன்றின்மேல் வீழும் மின்போல் - மலையின்மேல் விழும் மின்னல்போல ; ஒண்திறல் களிற்றின் நெற்றி எறிந்து - பெருந்திறல் படைத்த யானையின் நெற்றியிலே வீசி; தோடு ஒலித்து வீழ - தோடு ஒலியுடன் வீழ; மண்டிலம் முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க - வட்டமான முத்து வடமும் தாரும் மாலையும் சிகையும் பொங்கி நிற்க; விண்டு அலர் கண்ணி சிந்த -முறுக் கவிழ்ந்து மலர்ந்த கண்ணி விழ ; மின்னின் சென்று எய்தினான் - மின்னுப் போலப் போய்ச் சேர்ந்தான்.

விளக்கம் : தோடு தானே, குண்டலம் எறிந்த விசையில் வீழ்ந்தது. தார், கண்ணி, மாலை என்பற்றின் வேறுபாடுணர்க. ( 129 )

980. படம்விரி நாகஞ் செற்றுப்
பாய்ந்தரு கலுழன் போல
மடவர லவளைச் செற்று
மதக்களி றிறைஞ்சும் போழ்திற்
குடவரை நெற்றி பாய்ந்த
கோளரி போன்று வேழத்
துடல்சினங் கடவக் குப்புற்
றுருமென வுரறி யார்த்தான்.

பொருள் : படம் விரி நாகம் செற்றுப் பாய்தரு கலுழன் போல - படம் விரிந்த நாகத்தைச் சினந்து பாயுங் கருடனைப் போல; மடவால் அவளைச் செற்று - முன்பு நின்ற மாலையென்னும் மடவரலாகிய அவளைச் சீறி ; மதக்களிறு இறைஞ்சும் போழ்தில் - மதயானை தாழும் அளவில்; குடவரை நெற்றி பாய்ந்த கோள் அரி போன்று - மேலைமலை உச்சியிலே தாவிய கொலைவல்ல சிங்கம் போல; வேழத்து உடல் சினம் கடவக் குப்புற்று - களிற்றின் கொல்லுஞ் சீற்றம் பொங்குமாறு அதன் நெற்றியிலே குதித்து; உரும் என உரறி ஆர்த்தான் - இடி போல முழங்கி ஆர்த்தான்.
 
விளக்கம் : குடவரை யானை நெற்றியிலுள்ள புள்ளிக்குவமை.  செற்று இரண்டும் சினந்து என்னும் பொருளன. கலுழன் - கருடன். மடவரலவளை என்றது, தோழியை. இறைஞ்சுதல் கோட்டாற் சூத்திக் கொல்லுதற்குக் குனிதல். குடவரை - யானையின் மத்தகத்திற்குவமை. கோள் அரி-கொலைத் தொழிலையுடைய சிங்கம்: இது சீவகனுக்குவமை. உடல் சினம் : வினைத்தொகை. குப்புறுதல் - குதித்தல். உரறுதல் - முழங்குதல். ( 130 )

981. கூற்றென முழங்கிக் கையாற்
கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து
காற்றென வுரறி நாகங்
கடாம்பெய்து கனவிற் சீறி
யாற்றலங் குமரன் றன்மே
லடுகளி றோட லஞ்சான்
கோற்றொடிப் பாவை தன்னைக்
கொண்டுயப் போமின் என்றான்.

பொருள் : கூற்று என முழங்கி - (சீவகன்) காலனைப் போல ஆர்த்து; கையால் கோட்டிடைப் புடைப்ப - கையினாலே கொம்புகளின் இடையிலே தாக்கலின்; நாகம் காய்ந்து காற்று என உரறி - யானை சினந்து காற்றைப் போல முழங்கி; கடாம் பெய்து - மதம் பொழிந்து; கனலின் சீறி - நெருப்பெனப் பொங்கி; ஆற்றல் அம் குமரன் தன்மேல் - ஆற்றலையும் அழகையுமுடைய சீவகன் மேலே; அடுகளிறு ஓட அஞ்சான் - அக்கொல்யானை ஓட அதற்கு அஞ்சாதவனாய்; கோல் தொடிப் பாவைதன்னைக் கொண்டு உயப்போமின் என்றான் - திரண்ட வளையல் அணிந்த குணமாலையை உயிர் பிழைக்கக் கொண்டுபோயின் என்று (அருகிந்தோரிடம்) கூறினான்.

விளக்கம் : சேடி மேலும் குணமாலை மேலும் செல்வது கண்டு அஞ்சினவன் தன்மேல் வருவது கண்டு அச்சம் நீங்கினாள். தலைமை பற்றிக் குணமாலையைக் கொள்க. ( 131 )

982. மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே
பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப்
பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பெற்றார்க்
கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே.

பொருள் : மதியினுக்கு இவர்ந்த வேக மாமணி நாகம் - திங்களைப் பற்றச் சென்ற விரைவுடைய, மாணிக்கங்கொண்ட கரும்பாம்பு; வல்லே பதி அமை பருதி தன்மேல் படம் விரித்து ஓடி யாங்கு-விரைந்து, தன் இடம் விட்டுச் செல்லும் ஞாயிற்றின் மீது படத்தை விரித்துக்கொண்டு ஓடினாற்போல; பொதி அவிழ்கோதை தன்மேல் பொரு களிறு - கட்டவிழ்ந்த மலர் மாலையாள் குணமாலையின்மேற் சென்ற போர்க்களிறு; அகன்று - (அவளைக்) கைவிட்டு; பொன் தார்க் கதிஅமை தோளி னானை - தன்மேல் வந்த பொன்மாலை அணிந்த, தோளையுடைய சீவகனை கை அகப்படுத்தது - கைப் பற்றியது.

விளக்கம் : அன்று, ஏ : அசைகள், பதிய்மை பருதி : அமைதல் ; தவிர்தல், அமைந்த தினிநின் தொழில் (கலி- 82) என்றது போல - கதி அமை தேரினானை என்றும் பாடம். ( 132 )

983. கையகப் படுத்த லோடுங்
கார்மழை மின்னி னொய்தா
மொய்கொளப் பிறழ்ந்து முத்தார்
மருப்பிடைக் குளித்துக் காற்கீ
ழையென வடங்கி வல்லா
னாடிய மண்வட் டேய்ப்பச்
செய்கழற் குருசி லாங்கே
கரந்துசே ணகற்றி னானே.

பொருள் : கை அகப்படுத்த லோடும் - கைப்பற்றியவுடன்; செய்கழல் குருசில் - கழலணிந்த சீவகன்; கார் மழை மின்னின் நொய்தா - கரிய முகிலிடை மின்னினும் விரைந்து; மொய் கொளப் பிறழ்ந்து - வலிமையுண்டாகும்படி உடம்பைப் புரட்டி; முத்துஆர் மருப்பிடைக் குளித்து - முத்தினையுடைய கொம்பிடையிலே புகுந்து; வல்லான் ஆடிய மணிவட்டு ஏய்ப்ப - வல்லவன் உருட்டிய மணிவட்டைப்போல; கால்கீழ் ஐ என அடங்கி - காலின்கீழ் வியப்புற அடங்கி; கரந்து - மறைந்து ; செண் அகற்றினான் - சேய்மையிலே நீக்கினான்.
 
விளக்கம் : கார் மழை - கரிய முகில். நொய்தா, நொய்து ஆக: ஈறுகெட்டது. மொய் - வலிமை. கண்டோர் ஐ என்று வியக்கும்படி என்க. யானையின் காற்கீழ்க் கரந்திருந்தே அதனைத் துன்புறுத்தி அதனை அவ்விடத்தினின்றும் ஓட்டினான் என்பது கருத்து. ( 133 )

984. மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட்
கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச்
செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற்
பில்கும் மும்ம தவேழம் பெயர்ந்ததே.

பொருள் : பில்கும் மும்மத வேழம் - துளிக்கும் மும்மதமுடைய அசனிவேகம்; மல்லல் நீர் மணி வண்ணனை - கடல் நீரும் நீலமணியும் போன்ற நிறமுடைய கண்ணபிரானை; பண்டு ஒர் நாள் கொல்ல ஓடிய குஞ்சாரம் போன்றது - முன்னொரு நாள் கொல்ல ஓடிய குவலயாபீடம் என்னும் யானையைப் போன்றது; சீவகன் அச் செல்வன் போன்றனன்-சீவகனும் அக் கண்ணனைப் போன்றான் ; தெய்வம்போற் பெயர்ந்தது-அக் களிறு (குவலயா பீடமாக வந்த) தெய்வத்தைப் போலவே தன்னிலையிலே திரும்பியது.

விளக்கம் : பகையன்மையின் இவன் விலங்கிற்கும் உயிர் அளித்தான். கண்ணன் தனக்குப் பகையாதலிற் கொன்றான். தெய்வம் போற் பெயர்ந்தது என்றதனாற், கண்ணன் குவலயா பீடத்தைக் கொல்லாது விட்டிருப்பின் அதுபோலுமென இல்பொருளுவமையாகக் கொள்க. குவலாய பீடத்தைக் கொல்லாது விட்டதாகவும், அதனாற் கண்ணணுக்குக் கரிவரதன் என்று பெயர் வந்ததென்றும் ஸ்ரீ புராணத்தில், 22ஆம் தீர்த்தங்கரர் புராணத்திற் கூறப்பட்டிருப்பதாகக் கூறுவாரும் உளர். கஞ்சனுக்காகத் தெய்வமே யானையாய் வருதலின், தெய்வம் என்றார். ( 134 )

வேறு
 
985. ஒருகை யிருமருப்பின் மும்மதத்த
தோங்கெழிற்குன் றனைய வேழந்
திருகு கனைகழற்காற் சீவகன்வென்
றிளையாட்கு டைந்து தேனார்
முருகு கமழலங்கன் முத்திலங்கு
மார்பினனைஞ் ஞாற்று நால்வ
ரருகு கழல்பரவத் தனியேபோ
யுய்யான மடைந்தா னன்றே.

பொருள் : ஒருவகை இருமருப்பின் மும்மதத்தது - ஒரு துதிக்கையும் இரு கொம்புகளும் மும்மதமும் உடைய; ஓங்கு எழிற்குன்று அனைய வேழம்-உயர்ந்த அழகிய குன்றைப்போன்ற களிற்றினை; திருகு கனைகழல்கால் சீவகன் வென்று - முறுக்கிய ஒலியையுடைய கழலணிந்த காலையுடைய சீவகன் வெற்றி கொண்டு; இளையாட்கு உடைந்து - குணமாலைக்குத் தன் அறிவு முதலியன தோற்று; தேன் ஆர் முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் - வண்டுகள் நிறைந்த, மணங்கமழும் அலங்கலும் முத்து வடமும் விளங்கும் மார்பினனாய்; ஐஞ்ஞாற்று நால்வர் அருகு கழல்பரவ - ஐஞ்ஞாற்று நான்கு தோழர்களும் அருகிருந்து அடியை வாழ்த்தச் சென்று (பிறகு பிரிந்து); தனியே போய் உய்யானம் அடைந்தான் - தனியே சென்று தன் அரண்மனைப் பொழிலை அடைந்தான்.
 
விளக்கம் : தத்தை தன் வேறுபாட்டை அறியலாகாதென்று பொழிலிற் புகுந்தான். ஒருகை இருமருப்பின் மும்மதத்தது என்புழி முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. திருகு கழல், கனைகழல் எனத் தனித்தனி கூட்டுக. இளையாள் : குணமாலை. முருகு - நறுமணம். உய்யானம் - பூம்பொழில். ( 135 )

வேறு
 
986. மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய
திணிபொற் றோளினான் செல்ல னீக்கிய
வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன்
றணிவில் காதலார் தாங்கொ டேகினார்.

பொருள் : மணி செய் கந்துபோல் மருள வீங்கிய திணி பொன் தோளினான் - மாணிக்கத் தூண்போலும் என ஐயமுறப் பருத்த திண்ணிய தோளையுடைய சீவகனால்; செல்லல் நீக்கிய அணி பொன் கொம்பினை - துன்பம் நீக்கப் பெற்ற அணிகலனுடைய பொற்கொடி போன்ற குணமாலையை; தன் தணிவு இல் காதலார் - அவளுடைய நீங்காத அன்புறு தோழியர்; அழுங்கல் என்று தாம் கொடு ஏகினார் - வருந்தற்க என்று தாங்கள் அழைத்துச் சென்றனர்.

விளக்கம் : இவள் வேட்கை வருத்தத்தை யானைக்கு வருந்தினாளாக உட்கொண்டனர். மணிசெய் கந்து - மணியாற் செய்ததூண். கந்துபோலும் என மருள என விரிக்க. செல்லல் - துன்பம். பொன்கொம்பு; குணமாலை காதலார் - ஈண்டுத் தோழியர். ( 136 )

987. முழங்கு தெண்டிரை மூரி நீணிதி
வழங்கு நீண்டகை வணிகர்க் கேறனான்
விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய்
குழைந்த கோதையைக் கண்டு கூறினாள்.

பொருள் : முழங்கு தெண்திரை மூரி நீள்நிதி வழங்க - ஆரவாரிக்கும் தெள்ளிய அலைகளையுடைய கடல்போலப் பெருமை பெற்ற மிகுந்த செல்வத்தை வழங்கியதால்; நீண்டகை வணிகர்க்கு ஏறு அனான் - நீண்ட கைகளையுடைய வணிகர் தலைவன் குபேரமித்திரன்; விழுங்கு காதலாள் - விழுங்குமாறு போன்ற காதலையுடையாளாகிய; வேற்கண் பாவை தாய் - வேலனைய கண்ணாள் குணமாலையின் அன்னை; குழைந்த கோதையைக் கண்டு கூறினாள் - வாடிய மலர்க் கோதைபோலிருந்த குணமாலையைக் கண்டு ஒருமொழி யுரைத்தாள்.
 
விளக்கம் : குணமாலையின் அன்னை விநயமாமலை. அப் பெயர் தோன்ற, வேற்கட்பாவை என்றார். வருத்தந் தோன்ற குழைந்த கோதை என்றார்.  மூரி - பெருமை. தெண்டிரை - கடல் : அன்மொழி; கடல்போன்ற பெரிய நிதி என்க. பாவை : குணமாலை, கோதை : குணமாலை. ( 137 )

988. நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய
கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிற
நைய வந்ததென் னங்கைக் கின்றென
வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார்.

பொருள் : நெய்பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய கைசெய் மாலைபோல் - நெய்வார்த்த மிகுநெருப்பின் முடியிலே அழுத்திய, புனைந்த மலர்மாலை போல; கரிந்து பொன்னிறம் நைய - கரிந்து பொன்நிறம் வாடுமாறு; நங்கைக்கு இன்று வந்தது என் என - குணமாலைக்கு இன்று நேர்ந்தது யாது என்று (தாய்) வினவ; உய்தல் வேட்கையால் உரைத்தல் மேயினர் - (தோழியரும் அத்த ய் இறவாமல்) வாழவேண்டும் என்னும் ஆசையால் (யானை கொல்லப் புகுந்ததென்பதை) உரையாமற் காத்தனர்.
 
விளக்கம் : குணமாலை பெருந்துயர்க்கிலக்காகி உய்ந்தமை தோன்ற நெய்பெய் நீளெரி என உவமையை விதந்தார்; இது துயரத்திற்குவமை. கைசெய்மாலை - கையாற் புனைந்த மாலை. உய்தல் வேட்கையால் என்பதற்கு இப் பேரிடரைக்கேட்ட அளவில் அத் தாய் இறந்துபடுவள் என்றும் அங்ஙனம் இறந்துபடாமலிருத்தற்பொருட்டு என்று கோடலே பொருந்தும். இதுவே நச்சினாக்கினியர் கருத்துமாகும். குணமாலை பிழைத்தலிலுள்ள விருப்பத்தால் என்பாரும் உளர். ( 138 )

989. முருகு விண்டுலா முல்லைக் கத்திகை
பருகி வண்டுலாம் பல்கு ழலினாள்
வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத்
துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள்.

பொருள் : முருகு விண்டு உலாம் முல்லைக் கத்திகை - மணம் விரிந்து பரவும் முல்லைத் தொடையில்; வண்டு பருகி உலாம் பல்குழலினாள் - வண்டுகள் தேனைப் பருகி உலவும் பல் குழலாளாகிய குணமாலையை; தாய் வருக என்று வாட்கண் நீர் துடைத்து - அவர் கூறாமையான அதனை அறியாத அவள் அன்னை வருக என அழைத்து, வாளனைய கண்களிலிருந்து பெருகும் நீரைத் துடைத்து; உருகும் நுண் இடை ஒசியப் புல்லினாள் - தேயும் நுண்ணிடை வருந்தத் தழுவினாள். 

விளக்கம் : முருகு - மணம். கத்திகை - மாலை. கூந்தல் ஐம்பால் எனப்படுதலின் பல்குழலினாள் என்றார். குழலினாள் : குணமாலை. உருகும் - மெலிகின்ற. ஓசிய - வருந்த. ( 139 )

990. கடம்பு சூடிய கன்னி மாலைபேற்
றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங்
குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு
ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள்.

பொருள் : கடம்பு சூடிய கன்னி மாலைபோல் -கடம்பிலே பூத்த புதிய மாலைபோல; தொடர்ந்து கைவிடாத் தோழிமாரொடும் - தொடர்ப்பட்டுக் கைவிடாத தோழியரோடும்; குடங்கை உண்கணாள் - உள்ளங்கை யளவாகிய மையுண்ட கண்ணாள் ; கொண்ட பண்ணையுள் - ஆடிய விளையாட்டில்; அடைந்த துன்பம் என்று - மிகுதியால் வந்த வருத்தம் என்று ; அறிவின் நாடினாள் - அறிவினால் ஆராய்ந்தாள்.

விளக்கம் : சுரமஞ்சரியும் குணமாலையும் கன்னியாராதலிற் கன்னி மாலை என்றார். கண்ணி மாலை பாடம் எனின், கண்ணிகட்டினற் போலும் மாலையாம். ( 140 )

991. கம்மப் பல்கலங் களைந்து கண்டெறூஉம்
விம்மப் பல்கலம் நொய்ய மெய்யணிந்
தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங்
கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே.

பொருள் : கொடி அனாளை - கொடியனைய குணமாலையை (க்கோலஞ் செய்யும் மகளிர்) கம்மம் பல்கலம் களைந்து - வேலைப்பாடமைந்த பல கலங்களையும் நீக்கி; கண் தெறூஉம் நொய்யப் பல்கலம் விம்ம மெய்அணிந்து - கண்ணைப் பறிக்கும் நொய்யனவாகிய பல அணிகளை மிகுதியாக அவள் உடம்பிற் பூட்டி; அம்மென் மாலையும் அடைச்சி - அழகிய மெல்லிய மலர்மாலைகளையும் அணிந்து ; கொம்மை குங்குமம் மட்டித்தார் - முலைமிசை குங்குமத்தையும் பூசினர்.

விளக்கம் : உடல் நுணுகுதலுணர்ந்து நொய்யவற்றை விம்ம அணிந்தார். புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவு பிறத்தலின், இது புறஞ்செயச் சிதைதல் என்னும் (தொல். மெய். 18. பேர்) மெய்ப்பாடு. மென்மாலை : கழுநீர்மலை. கொம்மை : ஆகுபெயர்.  கம்மம் - தொழில். நொய்யகலம் அணிந்தென்றமையால், வன்மையுடைய பலவாகிய கலன்களையும் களைந்து என்க. அடைச்சி - சூட்டி, கொம்மை - முலைக்குப் பண்பாகுபெயர். மட்டித்தல் - பூசுதல். ( 141 )

992. அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங்
கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப்
பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி
செம்பொற் கொம்பினெம் பாவை செல்கின்றாள்.

பொருள் : அம்பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் - அழகிய பொற் கிண்ணத்திலே பாலை யெமக் கூட்டுகின்ற; எம்கொம்பின் அவ்வையைச் சென்று கொணர்க என - எம், கொம்பனைய அன்னையைப் போய் அழைத்து வருக என்று; பைம்பொன் அல்குலைப் பைங்கிளி பயிரும் - பசிய மேகலை யணிந்த அல்குலையுடைய நின்னை நின் பச்சைக்கிள்ளை கூப்பிடும்; செம்போன் கொம்பின் எம்பாவை செல்க என்றாள் - செம்போற் கொடி போன்ற எம்பாவையே! இனி நீ அங்குச் செல்க என்று விநயமாமலை கூறினாள்.

விளக்கம் : பைம்பொன் அல்குலை என்பதும் பாவை என்பதும் முன்னிலைப் புறமொழி. பயிர்தல் - அழைத்தல். ( 142 )

வேறு
 
993. நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற்
றிறத்தை வெளவிய சேயரிக் கண்ணினாள்
பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம்
வெறுத்தி யாவையும் மேவல ளாயினாள்.

பொருள் : நிறத்து எறிந்து பறித்த நிணம்கொள் வேல் திறத்தை - மார்பில் எறிந்து (சிறிது நின்று) வாங்கிய நிணம் பொருந்திய வேலின் தன்மையை; வெளவிய சேய் அரிக் கண்ணினாள் - கவர்ந்த சிவந்த வரிபரந்த கண்ணாளாகிய குணமாலை; பிறப்பு உணர்ந்தவர்போல் - பிறப்புத் தீதெனக் கண்டு பற்றற்றாரைப் போல; தமர் பேச்சு எலாம் வெறுத்து - உறவினர் மொழியை எல்லாம் கைவிட்டு; யாவையும் மேவலள் ஆயினாள் - உணவு முதலியவற்றை யெல்லாம் விரும்பாதவளானாள்.
 
விளக்கம் : தமர் பேச்சு எலாம் வெறுத்து என்னுவரை, புலம்பித் தோன்றல் என்னும் மெய்ப்பாடு ; செய்த கோலந் துணையொடு கழியப் பெறாதே அழிந்து, சுற்றத்திடையும் தனியே தோற்றுதலின். மேவலள் எனவே, இன்பத்தை வெறுத்தலும், பசியட நிற்றலும் மெய்யப்பாடு; (தொல். மெய். 22-பேர்.)  பிறப்புணர்ந்தவர் என்றது, பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என்னும் உண்மையை உணர்ந்து பற்றுறுத்தோர் என்பது பட நின்றது. ( 143 )

994. குமரி மாநகர்க் கோதையங் கொம்பனா
டமரி னீங்கிய செவ்வியுட் டாமரை
யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற்
குமர னாகிய காதலிற் கூறினாள்.

பொருள் : கோதை அம் கொம்பு அனாள் - மலர்க் கோதையையுடைய அழகிய கொம்பு போன்றவள்; குமரி மாநகர் - கன்னிமாடத்திலே; தமரின் நீங்கிய செவ்வியுள் - உறவினரை நீங்கித் தனித்த காலத்திலே; அமரர் மேவரத் தாமரை தோன்றிய அண்ணல் போல் - வானவர் வேண்டத் தாமரையிலே தோன்றிய முருகனைப் போன்ற; குமரன் ஆக்கிய காதலின் கூறினாள் - சீவகன் உண்டாக்கிய காதலாலே சில கூறினாள்.
 
விளக்கம் : குமரிமாநகர் என்றது கன்னி மாடத்தை. கொம்பனாள் : குணமாலை. அண்ணல் : முருகன் - முருகக் கடவுள் தாமரையிற்றோன்றியதனை,
 
நிவந்தோங்(கு) இமயத்து நீலப் பைஞ்சுனைப்.
பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்.
பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே (5: 48-50).

எனவரும் பரிபாடலானும் உணர்க. முருகன் சீவகனுக்கு உவமை. ( 144 )

995. கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா
முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா
விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா
லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ.

பொருள் : வெஞ்சரம் ஐந்து உடையான் - கொடிய அம்புகள் ஐந்தினையும் உடையானாகிய காமன்; முலைத்தடத்திடை மொய் எருக் குப்பைஆ - என் முலைத்தடங்களின் நடுவிடம் நெருங்கிய எருக் குவியலாகவும்; என உயிர் இலக்கம்ஆ - என் உயிர் குறியாகவும்; எய்து அலைக்கும் - அடித்து வருத்தும்; (ஆதலால்); கல்லூரி நல் கொட்டில் - கல்லூரியையுடைய விற்பயிற்சி செய்யும் இடத்திலே; கலத்தற் காலம்ஆ கற்கும் - விற்பயிற்சி தொடங்கும் காலமாக எண்ணிக் கற்குந் தொழிலை நடத்துகின்றான்.
 
விளக்கம் : கற்பார் எருவிலும் இலக்கிலும் எய்து கற்பர். இது மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடு; அறிவு மடம் நீங்கிக் காமப் பொருட்கண்ணே அறிவு தோன்ற நிற்றலின் (தொல். மெய்ப். 19-பேர்) ( 145 )

996. பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால்
வேமெ னெஞ்சமும் வேள்வி முளரிபோல்
தாம மார்பனைச் சீவக சாமியைக்
காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள்.

பொருள் : பூமியும் பொறை ஆற்ற அருந்தன்மையால்-புவியும் பொறுமையைச் செலுத்தற்கியலாத தன்மையாலே; வேள்வி முளரிபோல் என் நெஞ்சமும் வேம் - வேள்வித் தீயில் இட்ட தாமரை மலர்போல என் உள்ளமும் வேகும்; தாம மார்பனைச் சீவகசாமியைக் காமனை - மாலை மார்பனும்; சீவகனும் ஆகிய காமனை; தேவிர்காள்! கடிதே தம்மின்! - வானவர்களே! விரைய நல்குமின்!

விளக்கம் : வேம் என்னும் துணையும் காதல் கைம்மிகல்; (தொல். மெய்ப். 23-பேர்) காமம் கையிகந்த வழி நிகழும் ஆதலின்; உள்ளின் உள்ளம் வேமே (குறுந். 102) என்பது உதாரணம். தம்மின் என்பது தூதுழனிவின்மைப் பாற்படும் (தொல். மெய்ப். 23-பேர்) ; கானலும் கழறாது (அகநா. 170) என்பது உதாரணம். அறன் அளித்துரைத்தல் (தொல். மெய்ப். 22-பேர்) எனினும் ஆம்.
( 146 )

997. கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடு
மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்
செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போ
லுய்ய லாவதொர் வாயிலுண் டாங்கொலோ.

பொருள் : மொய்கொள் சிந்தையின் - (பிறர்க்குக் கூறலாகாத குறைகள்) செறிதல் கொண்ட உள்ளத்தினால்; செய்தவம் புரியாச் சிறியார்கள்போல் - செய்யக்கடவ தவம் புரியாத அறிவிலார்கள்போல; கையினால் சொலக் கண்களின் கேட்டிடும் - கையாற் கூறிக் கண்ணாற் கேட்கும்; மூங்கையும் ஆயினேன் - ஊமையும் ஆனேன்; உய்யல் ஆவதொர் வாயில் உண்டாம் கொலோ? - பிழைக்கலாவதாகிய ஒரு வாயிலும் உண்டாகுமோ?
 
விளக்கம் : மூங்கையும் ஆயினேன் என்பது சிதைவு பிறர்க்கின்மை (தொல். மெய்ப். 13-பேர்) ; புறத்தார்க்குப் புலன் ஆகாமை நெஞ்சில் நிறுத்தலின். வாயில் - கூட்டுவார்.( 147 )

998. கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற்
புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ
வெண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.

பொருள் : கண்ணும் வாள் அற்ற - கண்களும் ஒளியிழந்தன; கைவளை சோரும் - கைவளையல்கள் கழலும்; என் நெஞ்சம் புண்போன்று புலம்பும் - என் மனமும் புண்ணென வருந்தும்; எண் இல் காமம் எரிப்பினும் - எல்லையற்ற காமம் சுடினும் ; மேற்செலாப் பெண்ணின் - (மடலூர்தல் முதலியவற்றிற்கு) நடவாத பெண்ணினத்தினும்; மிக்கது பெண் அலது இல்லை - கொடுமை மிக்கது பெண்ணல்லதில்லையாயிருந்தது.

விளக்கம் : அவன் உருவெளியையே நோக்கி வேறொரு பொருளினை நோக்காமையின், காணுதல் தொழிலின்றிக், கண்ணும் வாள்அற்ற என்றாள். இஃது எதர்பெய்து பரிதல் (தொல். மெய்ப். 22-பேர்), வளை சோருதல் உடம்பு நனிசுருங்கல் (தொல். மெய்ப். 22-பேர்) நெஞ்சும் புண் போன்று புலம்பும்.. இது முதலாகக் கலக்கம் (தொல். மெய்ப். 18-பேர்); கூறத் தகாதன கூறுதலின், அது தலைவிக்காயின், பிறங்கிரு முந்நீர் வெறுமணலாகப் - புறங்காலிற் போக விறைப்பேன் (கலி. 144) என்றாற் போல்வனவும், தலைவற்காயின், மடலேறுதல் முதலிய கூறலுமாம். ( 148 )

999. சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன்
வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர
வோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக்
கால வேற்றடங் கண்ணி கருதினாள்.

பொருள் : சோலைவேய் மருள் சூழ்வளைத் தோளி - சோலையில் மூங்கிலென மருளும் வளையணிந்த தோளியாகிய; காலவேல் தடம் கண்ணி - காலன் வேலனைய பெருங்கண்ணினாள்; தன் வேட்கை - தன் காமம்; வேலை மாக்கடல் மிக்கு ஊர்தா - கரையையுடைய பெரிய கடல்போல மிகுந்து மேற்கொளலால்; ஓலைதாழ் பெண்ணை மாமடல் ஊர்தலை - (ஆடவர் செயலாகிய) ஓலை தங்கிய பனை மாமடல் ஊர்வதை; கருதினாள் - நினைத்தாள். 

விளக்கம் : மடலூர்தல் ஆடவர்க்கே யன்றிப் பெண்டிருக்கில்லையாதலின் கருதினாள் என்றார். சோலைவேய், பசுமைக் குவமை. ஈண்டுக் கூறியது, புலனெறி வழக்கம் அல்லாத காந்தருவமாய் ஆசுரத்தின் பாற்பாடும் கைக்கிளையாதலின், மெய்ப்பாட்டுப் பொருள்களை முறையிற் கூறாது மயங்கக் கூறினாரென்று கொள்க. நச்சினார்க்கினியர் 997-முதல் 999-வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டும் பொருள் முடிபு:-வளைத்தோளி, கண்ணி, தன் வேட்கை கடனீர்போல மிக்குப் பரத்தலின், தவஞ்செய்யாதாரைப்போல மூங்கையும் ஆயினேன்; கண்ணும் வாளற்ற; வளையும் சோரும்; நெஞ்சும் புலம்பும்; இங்ஙனம் எல்லையில்லாத காமம் முழுக்க நின்று சுட்டாலும் பெண்ணை மாமடலூர்தலை மேற்செல்லாத பேதைச் சாதியிற் காட்டின் கொடுமை மிக்கது பெண்ணல்ல தில்லையாய் இருந்தது என்று கூறி. இக் காலத்தே பிழைக்க லாவதொரு வாயிலுண்டாமோ என்று கருதினான். ( 149 )

1000. உய்யு மாறுரை யுன்னை யலாலிலேன்
செய்ய வாய்க்கிளி யேசிறந் தாயென
நைய னங்கையிற் நாட்டகத் துண்டெனிற்
றைய லாய்சம ழாதுரை யென்றதே.

பொருள் : செய்ய வாய்க் கிளியே ! - சிவந்த வாயையுடைய கிளியே !; சிறந்தாய் ! - சிறப்புடையாய்!; உன்னை அலால் இலேன் - உன்னையொழிய வேறொரு வாயிலும் இலேன்; உய்யும் ஆறு உரையாய் என - யான் பிழைக்கும் வழியை உரைப்பாய் என்றாளாக; நங்கை - நங்கையே!; தையலாய் - தையலே!; நையல் - வருந்தற்க; இந் நாட்டகத்து உண்டு எனின் - நீ விரும்பியது இந்த நாட்டிலே யிருப்பின்; சமழாது உரை என்றது - வருந்தாமற் கூறுக என்று கிளி கூறியது.
 
விளக்கம் : தாய் தந்தையினுஞ் சிறந்தாய் என்றாள், அவர்க்குக் கூறலாகாதவற்றை இதனிடம் கூறுதலின். ( 150 )

1001. தெளிக யம்மலர் மேலுறை தேவியி
னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள்
களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன்
கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே.

பொருள் : தெளி கயம் மலர்மேல் உறை தேவியின் - தெளிந்த பதுமை யென்னும் கயத்தில் தாமரை மலரில் வாழும் திருமகளினும்; ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் - ஒளியும் மென்மையும் வேறொப்புமை இல்லாத குணமாலை; களிகொள் காமத்தின் கையறவு எய்தி - மயக்கங்கொண்ட காமத்தாலே செயலறுதல் பொருந்தி; தன் கிளியைக் கிளந்து - தன் கிளியினிடம் தன் வருத்தத்தை வெளிப்படையாக எடுத்துக் கூறி; தூதுவிட்டாள் - அதனைத் தூதாக விடுத்தாள்.
 
விளக்கம் : கயம் - பதுமை என்னும் குளம். மலர் மேலுறைதேவி திருமகள். தேவியின் என்புழி இன் உறழ்பொருள். சாயல் - மென்மை - ஒளிக்கும் சாயலுக்கும் தேவியல்லது பிறர் ஒப்பாகாதவள் என்க. களி - மகிழ்ச்சி. கையறவு - செயலறவு. கிளந்து - கூறி. ( 151 )

1002. பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனா
ணாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட
வீணை வித்தகற் காணிய விண்படர்ந்
தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே.

பொருள் : பூணொடு ஏந்திய வெம்முலைப் பொன்னனாள் - பூணைச் சுமந்து நிமிர்ந்த விருப்பம் ஊட்டும் முலைகளையுடைய திருவனையாளின்; தன்நாணும் குலம் நலனும் கீழ்ப்பட-நாணமும் குலனும் நன்மை குறைய அவளுடைய வேட்கையை அறிவிக்க; வீணை வித்தகன் காணிய - சீவகனைக் காண்தற்கு; ஆணுப் பைங்கிளி - நட்புடையதான பசுங்களி; விண்படாந்து ஆண்டுப் பறந்தது - விண்ணிலே சென்று அவனிருக்கும இடம் அடையப் பறந்தது.

விளக்கம் : யாழ்வென்று கொண்ட தத்தையை விரும்பினவன் என்னுங் கருத்துப்பட வீணை வித்தகன் என்றார். பொன்னனாள் : குணமாலை. குலம் : ஆகுபெயர் ஒழுக்கம் என்க. நலம் - பெண்மை நலம். காணிய : செய்யியவென் வாய்பாட்டு வினையெச்சம். ஆணு - நட்பு. ஆண்டு - அச் சீவகனிடத்து. ( 152 )

வேறு
 
1003. கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்
றீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல்
வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர்
நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே.

பொருள் : மணிபல தெளித்துக் கூட்டினாள் - பல மணிகளையும் கரைத்துக் கூட்டினான்; கொண்டவன் கிழிமிசைத் திலகவாணுதல் - கூட்டியவன் படத்தின் மேல், திலகம் அணிந்த ஒள்ளிய நெற்றியாளை; வேட்ட மால் களிற்றிடை வெருவி நின்றது - தான் விரும்பிய, பெரிய களிற்றின் முன்னர் அஞ்சி நின்றதாகிய; ஓர் நாட்டமும் நடுக்கமும் - ஒரு நோக்கமும் நடுக்கமும் ; நங்கை வண்ணமே - குணமாலையின் இயலாகவே எழுதினான்.
 
விளக்கம் : நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்ளி - அஞ்சனத் துவலை ஆடி நடுங்கினாள் (சீவக. 1024) என்பன் பின்னும்.  இது முதல் மூன்று செய்யுட்கும் 1006 ஆம் செய்யுளின்கண் உள்ள இறைமகன் என்பதை எழுவாயாகக் கொள்க. இறைமகன்: சீவகன். தெளித்தல் ஈண்டுக் கரைத்தல் என்னும் பொருட்டு. கிழி - படாம். குணமாலை களிற்றின்முன் அஞ்சி நடுங்கி அலமந்து நோக்கிய பொழுது தோன்றிய தோற்றத்தை ஓவியமாகத் தீட்டினன் என்பது கருத்து. ( 153 )

1004. நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே
மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடு
முகிழ்ந்து வீங் கிளமுலை முத்தந் தைவரும்
புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மென்பவே.

பொருள் : நெகிழ்ந்து வீழ் பூந்துகில் நோக்கி நோக்கியே - நெகிழ்ந்து விழும் அழகிய துகிலினை மனத்தாற் குறித்துப் பார்த்துக் கண்ணாலும் பார்த்து; மகிழ்ந்து - களித்து; வீழ் மணிக்குழல் மாலைகால் தொடும் - வீழும் கருங் குழலையும் மாலையையும் காலையும் திருத்தத் தொடுவான்; முகிழ்ந்து வீங்கு இளமுலை முத்தம் தைவரும் - அரும்பிப் பருத்த இளமுலைமேல் முத்துக்களைத் திருத்தமாக இடுவதற்குத் தொடுவான்; புகழ்ந்து தன் தோள்களிற் புல்லும்-அவளழகைப் புகழ்ந்து தன் தோள்களால் தழுவுவான்.

விளக்கம் : நோக்கி : நோக்கில்லாத நோக்கம் (மன நோக்கம்) நோக்கியே: இது பொறியால் நோக்கும் நோக்கம். வெருவி நின்ற நடுக்கம் எழுதலின், குலைந்தனவற்றை மயக்கத்தால் திருத்தத் தேடினான். மாலை : அவள் பெயரெனினும் ஆம். மணிக்குரல் மாலையும் பாடம். (குரல் : ஐம்பாலில் ஒன்று) ( 154 )

1005. படைமலர் நெடுங்கணாள் பரவை யேந்தல்குன்
மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற்
புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன
வடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்றவே.

பொருள் : படைமலர் நெடுங்கணாள் பரவை ஏந்த அல்குல் - வேற்படையும் மலரும் போன்ற நீண்ட கண்ணவளின் பரவிய ஏந்திய அல்குலில்; மிடை மணிமேகலை நோற்ற - செறிந்த மணிமேகலைகள் நோற்றன; வெந்தொழில் புடைதிரள் வனமுலைப் பூணும் நோற்றன - கொடுந்தொழிலையுடைய, பக்கங்களிலே திரண்ட அழகிய முலைகளிற் பூண்களும் நோற்றன; அடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்ற - அடிகளாகிய தாமரை மலரில் அணிந்த சிலம்புகளும் நோற்றன.

விளக்கம் : யானே நோற்றிலேன் என்பது குறிப்பெச்சம். படை - ஈண்டு வேல். மலர் - தாமரை மலர். பரப்புடையதாய் ஏந்திய அல்குல் என்க. வெந்தொழில் முலை புடைதிரள்முலை எனத் தனித்தனி கூட்டுக. அடித் தாமரை மலர் என மாறுக. அடிமலர் ஒருசொல் என்பர் நச்சினார்க்கினியர். ( 155 )

1006. மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக்
கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந்
தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை
மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே.

பொருள் : மின் அணங்குறும் இடை மேவரு சாயலுக்கு - மின்னை வருத்தும் இடையும் விருப்பம் வரும் மென்மையுமுடைய குணமாலைக்கு; இறைமகன் இன்னணம் புலம்ப - சீவகன் இவ்வாறு வருந்தக் கண்டு; தன் அணங்குறும் மொழித் தத்தையாவதும் மகிழ்ந்து - தன் குணமாலையின் வருந்துமொழியைக் கொண்டு வந்த கிளி எல்லா வகையானும் மகிழ்ந்து; தத்தையை மன் அணங்கு உறலொடு கண்டது - காந்தருவதத்தை வருவதை மிகுதியான வருத்தத்துடன் கண்டது.

(விளக்கம்.) மேவர் : மேவரு என்பதன் விகாரம். எல்லா வழியானும் பெறுதற்குரியவன் வருந்ததுலின் இறைமகன் புலம்ப என்றார். ( 156 )

1007. ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற்
சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி
லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை
கூடிமற் றதன்புறங் குலாய கொள்கைத்தே.

பொருள் : ஆடு பாம்பு எனப் புடை அகன்ற அல்குல்மேல் - (படம் விரித்து) ஆடும் அரவம்போல அகன்ற அல்குலின் மேல்; சூடிய கலைப்புறம் சூழ்ந்த பூந்துகில் -அணிந்த மேகலையின்மேல் சுற்றிய அழகிய ஆடை; வளைத்து ஓடிய எரி - வளைய ஓடின எரியை; உருவ வெண்புகை - நிறமுடைய வெள்ளிய புகை; கூடி அதன்புறம் குலாய கொள்கைத்தே - சேர்ந்து வளைத்து அதன் புறத்திலே நிலைபெற்ற தன்மையது.

விளக்கம் : பாம்பு அல்குற்கே உவமையாதலின் அடுத்துவரல் உவமை அன்று; அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே (தொல். 34) என்றார். மற்று : அசை. மாண்குலாம் குணத்தினால் (சீவக. 2233) என்பர் பின்னும். ( 157 )

1008. கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன
மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி
ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன
பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே.

பொருள் : கொன்வளர் குவிமுலைக் கோட்டில் - பெருமை வளரும் குவிந்த முலைக் கோட்டிலே; தாழ்ந்தன மின்வளர் திரள்வடம் - கிடந்தவனவாகிய ஒளிவளரும் முத்துவடங்கள்; பைங்கதிர் இன்வளர் இளம்பிறை - புதிய கதிர்களையுடைய இனிமை வளரும் இளம்பிறை; எழுதப்பட்டன பொன்வளர் செப்பின்மேல் பொலிந்த போன்றவே - எழுதப்பட்டன போன்ற பொன்னால் வளர்ந்த செப்பின்மேல் பொலிந்தன போன்றன.
 
விளக்கம் : கொன் - பெருமை. முலைக்கோட்டிற் கிடந்த முத்து வடம் செப்பின்மேற் பிறை பொலிந்தன போன்றன என்க. வடம் பல வாகலிற் பன்மை பிறைக்கும் கூறினர். ( 158 )

1009. குண்டல மொருபுடை குலாவி வில்லிட
விண்டலர்ந்த தொருபுடை தோடு மின்செய
மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே
யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே.

பொருள் : குண்டலம் ஒருபுடை குலாவி வில்இட - குண்டலம் ஒரு புறத்தே வளைந்து ஒளிசெய ; தோடு ஒருபுடை விண்டு அலர்ந்து மின்செய - தோடு மற்றொரு புறத்தே வேறுபட விரிந்து ஒளிவீச; மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் - வட்டமாக நிறைவுற்ற ஒருதிங்கள் (இருப்பின்); ஒண்தொடி திருமுகத்து உருவமாட்சி அன்னது - ஒள்ளிய வளையணிந்த இம்மங்கையின் திருமுகத்தின் உருவ அழகு அத்தகையது.
 
விளக்கம் : இஃ தில்பொரு ளுவமை. குண்டலம் ஒரு காதினும் தோடு ஒரு காதினும் அணிந்ததிருத்தலால் இங்ஙனம் உவமை கூறினர். மண்டிலம் - வட்ட வடிவம். மதியம் - திங்கள். ( 159 )

1010. பூணிற முலையவள் பொருவில் பூநுதன்
மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய
நாணிற மிகுகதிர்ப் பட்ட நல்லொளி
வானிற மின்னிருள் வளைந்த தொத்ததே.

பொருள் : பூண் நிறம் முலையவள் - பூணையும் நிறத்தையும் உடைய முலையாளின்; மாண் நிறக் கருங்குழல் மருங்கில் - சிறந்த நிறமுடைய கரிய கூந்தலின் பக்கத்திலே; பொருஇல் பூநுதல் போக்கிய - ஒப்பற்ற அழகிய நெற்றியிலே சேர்த்துள்ள ; நாள் நிறம் மிகுகதிர் பட்டம் நல்லொளி - நாடொறும் ஒளி மிகும் பிறைமதி போன்ற பட்டத்தின் நல்லொளி; வாள்நிறம் மின் இருள் வளைந்தது ஒத்தது - ஒளி பொருந்திய நிறமுடைய மின் இருளை வளைந்தது போன்றது.
 
விளக்கம் : நாணிற மிகுகதிர்ப் பூநுதல் என இயைத்து நாடொறும் நிறம் மிகும் பிறைபோன்ற அழகிய நுதல் என்பர் நச்சினார்க்கினியர். நெற்றிற்குப் பிறையும் கூந்தலுக்கும் இருளும் பட்டத்திற்கு மின்னலும் உவமைகள். ( 160 )

1011. கடிகமழ் பூஞ்சிகை காமர் மல்லிகை
வடிவுடை மாலைகால் தொடர்ந்து வாய்ந்தது
நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க்
கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே.

பொருள் : காமர் மல்லிகை வடிவுடை மாலை - அழகிய மல்லிகையாலான வடிவுறு மாலை; கால் தொடர்ந்து வாய்ந்தது கடிகமழ்பூ சிகை - தன்னிடத்தே கட்டப்பட்டுப் பொருந்திய மணமிகுமலர் முடி ; நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மாமலர்க் கொடியின்மேல் - நடுவு வளைந்து நுடங்கிய மணமுறும் மலர்க்கொடியின்மேல்; குயில் குனிந்து இருந்தது ஒத்தது - குயில் வளைந்து தங்கிய தன்மையை ஒத்தது.

விளக்கம் : மாலையைக்கொண்ட பூஞ்சிகைக்குப் பூங்கொடியின் மேல் குனிந்திருந்த குயில் உவமை. ( 161 )

1012. சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம்
அலங்கலுண் டியாழ்செயும் அம்பொன் பூங்கெடி
நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ்
விலங்கரித் தடங்கணாள் யாவள் ஆங்கொலோ.

பொருள் : தேன் இனம் அலங்கல் உண்டு யாழ்செயும் அம்பொன் பூங்கொடி - வண்டுகளின் இனம் மாலையில் தேனைப் பருகி யாழென முரலும் அழகிய பொன்னாலான பூங்கொடி ஒன்று; சிலம்பொடு மேகலை மிழற்ற - சிலம்பும் மேகலையும் ஒலிக்க; நலம்பட நல்நடை கற்றது ஒக்கும் - நலம்பெற நல்ல நடையைக் கற்றது போன்ற; இவ் இலங்கு அரித்தடங்கணாள் யாவள்? - இந்த விளங்கும் செவ்வரி பரந்த பெருங்கண்ணாள் யாவளோ?
 
விளக்கம் : இல்பொருளுவமை.  மிழற்ற - ஒலிப்ப. தேனினம் - வண்டினம். அலங்கல்: ஆகுபெயர்; தேன் என்க. யாழ் - இசைக்கு ஆகுபெயர். ( 162 )

1013. யாவளே ஆயினும் ஆக மற்றிவள்
மேவிய பொருளொடு மீண்ட பின்னலால்
ஏவலாற் சேர்கலேன் என்று பைங்கிளி
பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே.

பொருள் : யாவளே ஆயினும் ஆக - (இவள்) எவளாக இருப்பினும் இருக்க; இவள் மேவிய பொருளொடு மீண்டபின் அலால் - இவள் தான் விரும்பியது முடிந்து திரும்பின பின்னர் அன்றி; ஏவலால் சேர்கலேன் என்று - குணமாலையின் ஏவலாற் செல்லக் கடவன் அல்லேன் என்றுன்னி; பைங்கிளி பூ அலர் சண்பகம் பொருந்திற்று - அப் பச்சைக்கிளி மலர்ந்த சண்பகத்தைச் சார்ந்து தங்கியது.
 
விளக்கம் : ஏவலான் - ஏவில் வல்லவன்( சீவகன்) எனினும் ஆம். இவள் என்றது காந்தருவதத்தையை. மேவிய பொருள் - தான் விரும்பிவந்த செயல். சேர்கலேன்: தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று. ( 163 )

1014. மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி
யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர்
கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப்
புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள்.

பொருள் : மதுக்களி நெடுங்கணாள் - கள்ளின் களிப்பைத் தன்னிடத்தே கொண்ட நீண்ட கண்ணினாள்; வான்பொன் கிண்கிணி ஒதுக்கிடை மிழற்றச் சென்று எய்தி - உயர்ந்த பொற்கிண்கிணி நடையிலே ஒலிப்பப் போய் நெருங்கி; ஊன்கவர் கதக்களி வேலினான் கண்டு - ஊனைக் கவரும் சீற்றத்துக்கும், வெற்றிக் களிப்புக்கும் உரிய வேலினானைக் கண்டு; காமநீர்ப் புதுத்தளிர் அனையவள் புலந்து நோக்கினாள் - காம நீரிலே தோன்றும் புதிய தளிரைப் போன்று (நடுங்கி) ஊடியவளாய் அப் படத்தைக் குறித்துப் பார்த்தாள்.

விளக்கம் : கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று (பதிற்றுப் பத்து- 52) என்பது காண்க. காமத்தாற் புலந்து என்றும் கூட்டலா மென்பர் நச்சினார்க்கினியர். ( 164 )

1015. இதுவென வுருவென வியக்கி யென்றலும்
புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலான்
மதுவிரி கோதையம் மாலை நின்மன
மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே.

பொருள் : இது என உரு என - (பார்த்தவள்) இஃது என்ன உருவம் என்று வினவ; இயக்கி என்றலும் - (சீவகன்) இயக்கியின் உருவம் என்றவுடன்; பூந்துகில் குழல்கள் சோர்தலால் புதிது இது - பூந்துகிலும் குழலும் சோர எழுதுவதால் புதியதே இப் படம் (நீ கூறியது பொய்யன்று); மதுவிரி கோதை அம்மாலை நின்மனம் அது - தேன்மிகுங் கோதையாளாகிய அக்குணமாலை நின் உள்ளமாகிய அதனை; முறை இயக்கலின் இயக்கி ஆகும் - முறையே ஆற்றாமை மிக இயக்குவதால் இயக்கி ஆவாள்.
 
விளக்கம் : இயக்கி தெய்வமாதலின் இது என்றாள்.  அம்மாலை - அக்குணமாலை. ( 165 )

1016. முளைத்தெழு மதியமுத் தரும்பி யாங்கென
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெஞ்சிலை
வளைத்தன புருவமு முரிந்த வல்லையே
கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே.

பொருள் : முளைத்து எழு மதியம் ஆங்கு முத்து அரும்பியது என - கிழக்கே முளைத்தெழுந்த திங்கள் ஆங்கே முத்துக்களை அரும்பிய தென்னுமாறு; திருமுகம் வியர்ப்பு விளைத்து - (அவள்) அழகிய முகம் வியர்வை பொடித்தது; வெஞ்சிலை வளைத்தஅன புருவமும் முரிந்த - கொடிய விற்களை வளைத்தால் அன்ன புருவங்களும் நெற்றியிலேறி வலலையே வளைந்தன; கிளைக் கழுநீர்க்கணும் சிவப்பின் கேழ்த்த - விரைவாகவே அலர்ந்த பூவிற்குக் கிளையாகிய கழுநீரின் (நீர்க்கீழ் அரும்பினும்) கண்கள் சிவப்புற்றன.

விளக்கம் : வல்லையே என்பதனைத் திருமுகத்தின் வியர்ப்புக்கே கூட்டுவர் நச்சினார்க்கினியர். கிளைக்கழுநீர் - நீர்க்கீழரும்பு. கணும் - கண்ணும். கண்ணும் கிளைக் கழுநீர்ச் சிவப்பிற் கேழ்த்த என மாறுக. கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு (29) என்றார் திருமுருகாற்றுப் படையினும். அலர்ந்த பூவினும் இவ்வரும்பு இதழ் மிக்குச் சிவப்புடையதாதல் பற்றி இங்ஙனம் கூறினர்.
( 166 )

1017. பாவைநீ புலவியி னீடல் பாவியேற்
காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க்
கூவல்வாய் வெண்மணல் குறுகல் செல்லுமே
மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே.

பொருள் : பாவை ! நீ புலவியில் நீடல் - பாவையே! நீ புலவியிலே காலம் நீட்டிக்காதே; இரண்டு உடம்பு அல்லது பாவியேற்கு ஆவி ஒன்று - நம் மிருவர்க்கும் இரண்டும் உடம்பே அல்லாமல், பாவியேனுக்கு உயிர் ஒன்றாக (நின்னுயிரே என்னுயிராக) இருக்கும். (இது நம் இயல்பு) ; பூங்கங்கையுள் மேவி விழைந்த அன்னம் - பூமலிந்த கங்கையை விரும்பி அடைந்த அன்னம் ; வெண்மணல் ஊற்றுநீர்க் கூவல் வாய்குறுகல் செல்லுமே? - வெள்ளிய மணலின்கண் ஊறும் ஊற்று நீரையுடைய கிணற்றிலே நெருங்கிச் செல்லுமோ? 

விளக்கம் : கூவலிற் செல்லாதெனவே, கங்கையை நிகர்க்கும்யாற்றிலே செல்லும் என்பதாயிற்று; எனவே, குணமாலை மரபுங்கூறி அவளை வரைதலும் முறைமை யென்று கூறினானாம். ( 167 )

1018. பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள்
நேர்மலர்ப் பாவையை நோக்கி நெய்சொரி
கூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததே
யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே.

பொருள் : பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள் - வேறொரு பெண்டிரின் பேருரைப்பினும் பொறாமற் சீறும் தத்தை; மலர்ப் பாவையை நேர் நோக்கி - திருமகளைப் போன்றாளை எதிர்முகமாக நோக்கியபோது (அவள் வடிவு மிகுதி கண்டு); ஆர்வுறு கணவன்மாட்டு அமிர்தின் சாயற்கு - விருப்பம் மிகுந்த கணவனிடத்திலே அமிர்தமனைய மெல்லியலாட்கு; நெய்சொரிகூர் அழல்போல்வது ஓர் புலவி கூர்ந்தது - நெய் பெய்தலாலே மிகுந்தெரியும் அழலைப் போல்வதாகிய ஊடல் மிக்கது.
 
விளக்கம் : நேரமர்ப் பாவையை நோக்கி என்பது பாடமாயின், தனக்கு மாறாகிய பாவையை நேரே நோக்கி என்க.  பேரினும் என்றது, வேறொரு பெண்ணின் பெயர் சொல்லுமளவிற்கே என்பதுபட நின்றது. மலர்ப்பாவை - திருமகளை ஒத்த குணமாலை என்க. என்றது அவள் உருவப் படத்தை. கூரழல் : வினைத்தொகை. ஆர்வு - ஆர்வம். அமிர்தின்சாயல் : காந்தருவதத்தை. ( 168 )

1019. புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச்
சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே
லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல
மிலங்கப்பேர்ந் தினமலர் சிதறி யேகினாள்.

பொருள் : புலந்தவள் கொடிஎன நடுங்கி - இவ்வாறு பிணங்கினவள் மலர்க்கொடிபோல நடுங்கி : சென்னிமேல் அலங்கல் வாய் - அவன் முடிமேல் மாலையிடத்தே; பொன் அரிச் சிலம்பொடு மேகலை மிழற்ற - பொற்சிலம்பும் மேகலையும் மெல்லென ஒலிக்கும்படி; அடிமலர் அணிந்து - தன் அடியாகிய மலரைச் சூட்டி; குண்டலம் இலங்கப் பேர்ந்து - குண்டலம் ஒளிவிட அவ்விடத்தினின்றும் பெயர்ந்து; இனமலர் சிதறி ஏகினாள் - பின்னர் இனமலர்களைச் சிந்திவிட்டுத் தன் மனைக்குச் சென்றாள்.
 
விளக்கம் : இச் செய்யுளில் சென்னிமேல் அடிமலர் அணிந்து என்றது, அவள் புலவி தணித்தற்கு அவள் அடிகளில் வணங்கிய சீவகனுடைய சென்னிமேல் என்பதுபட நின்றது. இனமலர் - தொகுதியான மலர். ( 169 )

1020. துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு
மினிப்பிறர்க் கிடமிலை யெழுவ லீங்கெனாக்
கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன்
பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே.

பொருள் : துனிப்பு உறுகிளவியால் - அவன் கூறிய வெறுப்பூட்டும் வார்த்தையுடனே; துணைவி ஏகலும் - தத்தை போனவுடன்; இனி பிறர்க்கு இடம் இலை - (அவள் ஊடல் நீங்காது போதலின்) இனி வேறொருவர்க்கு இங்கே இடம் இல்லை; ஈங்கு எழுவல் எனா - இங்கு நின்றும் எழுவேன் என்று; கனிப்பு உறுசொல் அளைஇ-இனிமையான மொழிகளைத் தன்னிலே இயம்பிக் கொண்டு; பறந்து - பறந்து சென்று; காளைதன் பனிக்கதிர்ப் பகை மலர்ப் பாதம் சேர்ந்தது - சீவகனுடைய தண்ணிய நிலவின் பகையான தாமரை மலரனைய அடிகளை வணங்கியது. 

விளக்கம் : அளைஇ: சொல்லிசை அளபெடை. துனிப்பு - வெறுப்பு. துணைவி : காந்தருவதத்தை. ஈங்குப் பிறர்க்கிடமிலை என மாறுக. கனிப்பு - இனிமை. பனிக்கதிர்ப்பகை - தாமரை மலர். ( 170 )

1021. வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே
தோழியர் சுவாகதம் போது கீங்கெனச்
சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட
யாழறி வித்தக னங்கை நீட்டினான்.

பொருள் : மைந்த ! நின் கழலடி வாழ்க என்ன - மைந்தனே ! நின் கழலணிந்த அடி வாழ்வதாக! என்று வணங்கிய கிளி வாழ்த்த ; யாழ் அறி வித்தகன் - யாழ் உணர்ந்த திறலோன்; தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என - எம் தோழியரின் நல்வரவே! இங்கு வருக என்று கூறி ; சூழ்மணி மோதிரம் சுடர்ந்து வில்இட அங்கை நீட்டினான் - விரலைச் சூழ்ந்த மணியாழி சுடர்விட்டு ஒளிவீச அங்கையை நீட்டினான்.

விளக்கம் : அடி வாழ்க என்றல் முறைமை. குணமாலையையும் சுரமஞ்சரியையும் குறித்துத் தோழியர் என்றான். தோழியர் சுவாகதம் எனப் பாடம் ஓதி, வியந்து தோழி சுகமே வந்ததே என்றுமாம். மைந்தன் நின் கழலடி வாழ்க என மாறுக. சுவாகதம் என்ற சொல்லிற்கு நல்வரவு என்றும் கிளி என்றும் பொருளுண்டு. ( 171 )

1022. பொன்னிய குரும்பையிற் பொலிந்த வெம்முலைக்
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்தென முறுவல் நோக்கமோ
டென்னைகொல் வரவென வினிய செப்பினான்.

பொருள் : பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம்முலைக் கன்னியர் தூதொடு - பொன்னாலியன்ற குரும்பைபோல விளங்கும் வெம்முலைக் கன்னியரின் தூதாக; காமர் பைங்கிளி முன்னமே வந்தென - அழகிய பச்சைக்கிளி என் முன்னரே வந்தது என்றெண்ணி; முறுவல் நோக்கமொடு - நகைமுகப் பார்வையுடன்; வரவு என்னைகொல் என - வரவு எதனைக் கருதியோ என்று; இனிய செப்பினான் - இனிய மொழிகளை இயம்பினான்.
 
விளக்கம் : என் முன்னமே என்றான், பின்பும், ஆற்றாதேன் ஆற்ற, விடுந்த சிறுகிளி (சீவக. 1041) என்கின்றமையின். வந்ததென என்பது வந்தென என விகாரப்பட்டது. ( 172 )

1023. மையலங் களிற்றொடு பொருத வண்புக
ழையனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப்
பையர வல்குலெம் பாவை தூதொடு
கையிலங் கெஃகினாய் காண வந்ததே.

பொருள் : கை இலங்கு எஃகினாய் - கையில் விளங்கும் வேலோனே!; மையல்அம் களிற்றொடு பொருத வண்புகழ் ஐயனை - மயக்கங்கொண்ட யானையுடன் போர்செய்த வளமிகு புகழுடைய ஐயனை; கண்டு செவ்வி அறிந்து வம்என - பார்த்து நிலை அறிந்து வருக என்று சொல்லிய; பை அரவு அல்குல் எம்பார்வை தூதொடு - படமுடைய பாம்பனைய அல்குலையுடைய எம் பாவையின் தூது மொழியுடனே; காண வந்தது - நின் செவ்விகாணவே என் வரவு நேர்ந்தது.
 
விளக்கம் : செவ்வி அறிதல் - வேட்கையுண்டில்லை யென்றறிதல். மையல் அங்களிறு - மயங்கிய அழகிய அசனிவேகம். வம்: ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. பாவை : குணமாலை. எம்பாவை என்றது எம்மூர் என்றாற்போன்று ஏனைக் கிளிகளையும் உளப்படுத்திக் கூறியபடியாம். என்னை கொல் வரவு என்றதற்கு விடையாகக் காணவந்தது என்று கிளி கூறிற்று. வந்தது காண்டற்கு என்றவாறு. ( 173 )

வேறு
 
1024. வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக
நெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி
அஞ்சனத் துவலை யாடி நடுங்கினா ணிலைமை யென்னை
பைஞ்சிறைத் தத்தை யென்னாப் பசுங்கிளி மொழியும்

பொருள் : பைஞ்சிறைத் தத்தை - பசுஞ் சிறகுடைய தத்தையே !; வெஞ்சின வேழட்ம உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக- கொடிய சினமுற்ற வேழம் என்னும் நோயால் உண்ணப்பட்ட விளாம்பழம்போல வெறுவியேம் ஆமாறு; நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி - உள்ளத்தையும் நிறையையும் (பிறர் அறியாமல்) நீண்ட கருங்கண்களாற் கவர்ந்த கள்வி; அஞ்சனத் துவலை ஆடி நடுங்கினாள் - கண்ணுக்குத் தீட்டிய மைத்துளியிலே முழுகி (முன்னர் யானையைக் கண்டபோது) நடுங்கினாள் ; நிலைமை என்னை ? என்ன - அவள் நிலை எங்ஙனமுள்ளது? என்று சீவகன் வினவ; பசுங்கிளி மொழியும் - பைங்கிள்ளை மொழியும்.
 
விளக்கம் : வேழம், தேரை போயிற்றென்றாற் போல்வதொரு நோயென்க. இனி, யானை யுண்டது வெறுவிதாம் என்றும் உரைப்ப. ஈண்டு நாட்டமும் நடுக்கமும் (1003) வருத்தினமை கூறினான். வேழம் - விளம்பழத்திற் குண்டாகுமொரு நோய். அஃது அவ்வேழத்திற்குரிய வெஞ்சினமென்னும் அடையேற்றது. நெட்டிலை வஞ்சிக்கோ என்றாற்போன்று. வெள்ளில் - விளாம்பழம். துவலை - துளி. தத்தை - கிளி : விளியேற்று நின்றது. ( 174 )

வேறு
 
1025. பூவணை யழலின்மேற் சேக்கும் பொன்செய்தூண்
பாவைதான் பொருந்துபு நிற்கும் பற்பல்கா
லாவியா வழலென வுயிர்க்கு மையென
மேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே.

பொருள் : பாவைதான் பூ அணை அழலின் மேல் சேக்கும் - என் தலைவி மலரணை ஆகிய நெருப்பின் மேல் தங்குவாள்; பொன் செய்தூண் பொருந்துபு நிற்கும் - பொன்னாலாகிய தூணைச் சார்ந்து நிற்பாள்; பற்பல்கால் ஆவியா அழல் என உயிர்க்கும் - பலமுறை கொட்டாவி விட்டு நெருப்புப்போல மூச்செறிவாள்!; ஐ எனப் பூ நிலமிசை மேவி மெல்ல இருக்கும் - ஐயென வருந்தித் தரையிலே சென்று மெல்ல அமர்வாள்.
 
விளக்கம் : ஐ : வருத்தக் குறிப்பு. பூவணை அழலிற் சேக்கும் என்றது அவட்குப் பூவணைமேலிருத்தல் தீமேல் இருப்பது போல்வதாயிற்று என்னும் கருத்துடையது. ஆவியா - ஆவித்து: செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஆவித்தல் - கொட்டாவி விடுதல். பூநிலம் : இருபெயரொட்டு. ( 175 )

1026. பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாண்
மணிக்கழங் காடலண் மாமைதான் விளர்த்
தணித்தகை யாழினோ டமுதம் விட்டொழீஇத்
துணைப்பெரு மலர்க்கணிற் றுயிலு நீங்கினாள்.

பொருள் : பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாள் - பிறரைத் தாழ்விக்கத்தக்க கோலத்தைப் புனைந்துகொள்ளாள், பந்தும விளையாடாள்; மணிக் கழங்கு ஆடலள் - மணிகளாற் செய்த கழங்கையும் ஆடாள்; மாமைதான் விளர்த்து - அவளுடைய பொன்மேனி வெளுத்து; அணித்தகை யாழினோடு அமுதம்விட்டு ஒரீஇ - அணியத்தக்க யாழையும் உணவையும் விட்டு நீங்கி; துணைப்பெரு மலர்க்கணில் துயிலும் நீங்கினாள் - பெரிய இரண்டு மலரனைய கண்களில் துயில்வதையும் விட்டாள்.
 
விளக்கம் : பந்தும் என்பதற்கு கேற்ப விளையாடாள் என வருவித்தோதுக. மணிக்கழங்கு - மணியாற்செய்த கழற்சிக்காய். மாமை-நிறம். அமுதம் - உணவிற்கு ஆகுபெயர். ( 176 )

1027. திருந்துவேற் சீவக சாமி யோவெனுங்
கருங்கடல் வெள்வளை கழல்ப வோவெனும்
வருந்தினேன் மார்புறப் புல்லு வந்தெனும்
பொருந்துபூங் கொம்பன பொருவின் சாயலே.

பொருள் : பொருந்து பூங்கொம்பு அன பொருஇன் சாயல் - பொருந்திய பூங்கொம்பு போன்ற உவமை கூறற்கு இனிய மென்மையுடைய என் தலைவி; திருந்துவேல் சீவகசாமியோ ! எனும் - திருந்திய வேலேந்திய சீவகசாமியே! என விளிப்பாள் ; கருங்கடல் வெள்வளை கழல்ப ஓ எனும் - கரிய கடலிற் பிறந்த வெள்ளிய வளைகள் கழல்வவாயின்! ஓ ! என வருந்துவாள் ; வருந்தினேன் மார்புற வந்து புல்லு எனும் - (நின்னுருவெளியைத் தழுவி அகப்படாமையின்) யான் தழுவி வருந்தினேன்; இனி நீ வந்து மார்புறத் தழுவிக்கொள் என்பாள்.

விளக்கம் : யானை கொல்லாமல் உயிரைக் காத்த வருத்தம் இன்று உடம்பைக் காத்தற்கரியதோ என்று கருதி, வளை கழல்பவோ என்றாள். நச்சினார்க்கினியர் 1025 - 1027 ஆகிய மூன்று பாட்டுகளையும் ஒரு தொடர்ப்படுத்திக் கொண்டு கூட்டும் முடிபு:-  பாவைதான் கோலத்தையும் பந்தையும் பாராளாய் ஆடலளாய் விளர்த்து யாழையும் உணவையும் விட்டு நீங்கி, உறக்கத்தையும் விட்டாள்; இத்தன்மையே யன்றி உயிரும் நீங்குமோ என்று கருதிப் பூம்படுக்கையாகிய நெருப்பிலே கிடந்து பார்க்கும்; அதினும் உயிர் நீங்காமையின் , தூணைப் பற்றுக்கோடாகப் பொருந்தி நின்றும் பார்க்கும்; வருந்தக் குறிப்புத் தோன்றி ஐயெனக் கூறிப்போய்ப் பல்கால் ஆவித்து நெட்டுயிர்ப்புக் கொள்ளா நிற்கும்; பின்பு அதுவுமின்றி நிலமிசை மெல்ல இருக்கும் ; அங்ஙனமிருந்து, சாயலை உடையாள், சீவகசாமி ! வளைகழல அமையுமோ எனும்; நின் உருவம் வெளிப்பட்டதனைப் பல்காலும் சென்று புல்லி, அது தன் எதிர் புல்லாமையின், யான் புல்லி வருந்தினேன்; இனி, நீ தான் வந்து மார்புறும்படி புல்லென்னும்; அது காணாமையின் ஓ என்று வருந்தும். ( 177 )

1028. கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்குமஃ
தின்னதென் றுரையலர் நாணி னாதலான்
மன்னும்யா னுணரலேன் மாத ருற்றநோய்
துன்னிநீ அறிதியோ தோன்ற லென்றதே.

பொருள் : கன்னியர் உற்றநோய் இன்னதென்று கண்ணனார்க்கும் நாணின் உரையலர் ஆதலான் - கன்னிப் பெண்கள் தாம் அடைந்த காமநோய் இத்தகையதென்று கண்ணைப் போன்றவர்கட்கும் நாணத்தினால் மொழியார்; ஆகையால் (எனக்கும் உரையாள்); மன்னும் யான் உணரலேன் - யான் பறவை யானதால் நெருங்கி மிகவும் அறிகிலேன் ; தோன்றல் ! மாதர் உற்றநோய் நீ துன்னி அறிதியோ என்றது - தோன்றலே ! மாலை உற்ற நோயை நீ பொருந்தி அறிவையோ ? கூறு என்றது.
 
விளக்கம் : கன்னியர் உற்றநோய் கண்ணனார்க்கும் இன்ன தென்றுரையலர் என்னுமிதனை,  தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்பதென்ப(து) ஆமெனல் ஆவதன்றால் அருங்குல மகளிர்க்கம்மா (சூர்ப்ப - 45) எனவரும் இராமாவதாரத்தோடும் ஒப்பு நோக்குக. மன்னும் - மிகவும். மாதர் : குணமாலை. ( 178 )

வேறு
 
1029. புள்ளின் வாயுரை கேட்டலும் பொன்செய்வே
லெள்ளி நீண்டகண் ணாடிறத் தின்னுரை
யுள்ளி னாருழைக் கண்டதொத் தானரோ
வள்ளன் மாத்தடிந் தானன்ன மாண்பினான்.

பொருள் : வள்ளல் மாத்தடிந்தான் அன்ன மாண்பினான் - வள்ளலாகிய மாமரங் கொன்ற முருகனனைய சிறப்பினான் ; புள்ளின் வாய்உரை கேட்டலும் - கிளியின் வாய்மொழியைக் கேட்டவுடன்; பொன் செய்வேல் எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன்உரை - பொன்னாற் செய்யப்பட்ட வேலை இகழ்ந்து நீண்ட கண்களையுடையாளிடமிருந்து வந்த இனிய மொழியை, உள்ளினாருழைக் கண்டது ஒத்தான் - தன்னால் நினைக்கத் தக்காரிடம் கண்டாற்போல மகிழ்ந்தான்.
 
விளக்கம் : இன்னுரை : ஆகுபெயராய் இன்னுரை அடங்கிய ஓலையைக் குறிக்கும். இனி, கண்ணாள் திறத்தின்னுரையைப் புள்ளின் வாயுரையாகக் கேட்டலும், தான் பெறற்கரியரா நினைத்தவர் தன் எதிரே வரக்கண்டார் போல மகிழ்ந்தான் என நச்சினார்க்கினியர் கூறுமாறு கொள்ளினும் கொள்க. அன்றி, இன்னுரையால் என உருவு விரித்து, உள்ளினார் உழைவரக் கண்டாற் போன்ற மகிழ்வடைந்தா னெனக் கொள்ளினும் பொருந்தும். ( 179 )

1030. சென்ம ருந்துதந் தாய்சொல்லு நின்மனத்
தென்ன மர்ந்த துரைத்துக்கொ ணீயென
வின்னி மிர்ந்தநின் வீங்கெழிற் றோளவட்
கின்ம ருந்திவை வேண்டுவ லென்றதே.

பொருள் : சொல் மருந்து தந்தாய்நீ - குணமாலையின் மொழியாகிய மருந்தினை யான் ஆற்றுமாறு தந்த நீயே; சொல்லும் நின் மனத்து என் அமர்ந்தது - கூறுகின்ற நின் உள்ளத்திற்கு என்ன பொருந்தியதோ; உரைத்துக்கொள் என - அதனைக் கூறிக்கொள் என்றானாக; வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில்தோள் அவட்கு இன்மருந்து - வில் பொருந்திய, நின்னுடைய பருத்த அழகிய தோள்கள் அவளுக்கு இனிய மருந்தாகும். (அன்றி நின்னைப்போற் சொல் மருந்தால் ஆற்றாள்) ; இவை வேண்டுவல் என்றது - (ஆகவே) இத் தோள்களையே வேண்டுவேன் என்றது.
 
விளக்கம் : சொல் மருந்து, குணமாலை சொல்லும் சொல் : அவை, திருந்து வேற் சீவகசாமியோ.......வருந்தினேன் மார்புறப் புல்லு வந்து என்று குணமாலை கூற்றைக் கிளிகொண்டு கூறப்பட்டவை என்க. அச்சொற்களே இனி அவளை யாம் எய்துதல் ஒருதலை என்று தெளிவித்துத் துயரகற்றலின் மருந்து என்றான். இன் மருந்து இவை என்றது நின்போன்று அவள்சொன்மருந்தான் ஆற்றுகிலாள் என்பது படநின்றது. ( 180 )

1031. பொற்குன் றாயினும் பூம்பழ னங்கள்சூழ்
நெற்குன் றாம்பதி நேரினுந் தன்னையான்
கற்குன் றேந்திய தோளிணை கண்ணுறீ இச்
சொற்குன் றாபுணர் கேன்சொல்லு போவென்றான்.

பொருள் : பொற்குன்று ஆயினும் பூம்பழனங்கள் சூழ் நெற்குன்று ஆம்பதி நேரினும் - (அவள் சுற்றத்தார் வேண்டுவன) பொன்மலை யெனினும், அழகிய பழனங்கள் சூழ்ந்த, நெற்குன்றுகளையுடைய நகரமே எனினும்; தன்னை யான் கற்குன்று ஏந்திய தோளிணை கண் உறீஇப் புணர்கேன் - (அவற்றைக் கொடுத்து) அவளை நான் கற்குன்றுபோல் நிமிர்ந்த என் இரு தோளினும் அணைத்துத் தழுவிக்கொள்வேன்; சொல் குன்றா - இச் சொற்கள் குன்றமாட்டா; போ, சொல்லு என்றான் - போய்க் கூறு என்றான்.
 
விளக்கம் : கற்குன் றேந்திய தோள் கொடுஞ்சிலையான் (சீவக. 1041)என்று தன்னை வியத்தல் குற்றமெனின், கிழவி முன்னர்த்தற்புகழ் கிளவி - கிழவோன் வினைவயின் உரிய என்ப (தொல். கற்பு. 40) என்பதன் கருத்தாற் குற்றம் அன்று. வினை - செயப்படுபொருள். பொருளும் ஊரும் கெர்டுத்துப் புல்லுவேன் என்னுங் கடைப்பிடியாகிய செயப்படு பொருளும், முயற்சிக்குச் சிறப்புடைமையின், யானே புணர்வேன் என்னும் ஆள்வினைக் கருத்தால் தன்னைப் புகழ்ந்துரைக்கவே அது பற்றுக்கோடாக ஆற்றுவாள் என்பது பயனாம். இது, கைக்கிளையாதலின், முன்னிலை யன்றியும் புகழ்ந்தான்; புறத்திணை ஆயின், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் (தொல். புறத்திணை. 5) தலைவற்குரித்து. ( 181 )

1032. சேலை வென்றகண் ணாட்கிவை செப்பரி
தோலை யொன்றெழு திப்பணி நீயென
மாலை மார்பன் கொடுப்பத் தினைக்குர
லோலை யோடுகொண் டோங்கிப் பறந்ததே.

(இதன்பொருள்.) சேலை வென்ற கண்ணாட்கு - சேல்மீனை வென்ற கண்ணையுடைய குணமாலைக்கு; இவை செப்ப அரிது - (அவள் வருத்தம் எல்லாம் நீங்குமாறு) இவற்றையெல்லாம் கூறுதல் அரிது; நீ ஓலை ஒன்று எழுதிப் பணி என - நீ ஒரு திருமுகம் எழுதிக்கொடு என்று (கிளி) சொல்ல; மாலை மார்பன் தினைக் குரல்ஓலையோடு கொடுப்ப - மாலை அணிந்த மார்பன் அவ்வாறே எழுதிப் பிறர் ஐயுறாமல் தினைக்கதிரில் வைத்த திருமுகத்தையும் தன் ஆழியையும் கொடுத்தவுடன்; கொண்டு ஓங்கிப் பறந்ததே - எடுத்துக் கொண்டு வானிடை உயர்ந்து பறந்தது.
 
விளக்கம் : மேல் ,நாம மோதிரந் தொட்டு (சீவக. 1040) என வருவதால் ஓலை ஒன்று என்னுமிடத்து ஒன்றென்பதற்கு ஆழி எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். சீவகன் கூற்றைத் தான் கேட்டுச் சென்று கூறும் சொற்களினும் சீவகன் கையால் எழுதிய ஓலையே அவள் துயரத்தை நன்கு தீர்ப்பதாகும் என்று கருதிக் கிளி ஓலைவேண்டிற்று என்க. ( 182 )

1033. திருந்து கோதைச் சிகழிகைச் சீறடி
மருந்தின் சாயன் மணங்கமழ் மேனியாள்
பொருந்து பூம்பொய்கைப் போர்வையைப் போர்த்துடன்
கருங்கட் பாவை கவின்பெற வைகினாள்.

பொருள் : திருந்து கோதை சிகழிகைச் சீறடி - திருந்து கோதையையும் மயிர் முடியையும் சிற்றடியையும்; மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள் - அமுதமனைய மென்மையையும் மணம் வீசும் மேனியையும் உடைய தத்தை; பொருந்து பூம் பொய்கைப் போர்வையை உடன் போர்த்து - பொருந்திய மலர்ப் பொய்கை வடிவமாக எழுதிய போர்வையை மெய்ம்முழுதும் போர்த்து; கருங்கண் பாவை கவின்பெற வைகினாள் - கருங்கண்ணாளாகிய அவள் (சினந்து) விழித்துக் கிடந்தாள்.
 
விளக்கம் : மருந்து - அமுதம்; அமிர்தன்ன சாயல் (சீவக. 8) என்றதன் குறிப்பை நோக்குக. பொய்கைபோலும் கண்ணீர்ப் போர்வை எனலும் ஆம். ( 183 )

1034. மறங்கொள் வெங்கதிர் வேலவன் வார்கழல்
கறங்க வேகித்தன் காதலி யூடலை
யுறைந்த வொண்மலர்ச் சென்னியி னீக்கினா
னிறைந்த தின்ப நெடுங்கணிக் கென்பவே.

பொருள் : மறம்கொள் வெம்கதிர் வேலவன் - போருக்குரிய வெய்ய கதிர்களையுடைய வேலவனான சீவகன்; வார்கழல் கறங்க ஏகி - (கிளி சென்ற பின்னர்) நீண்ட கழல் ஒலிக்கச் சென்று; தன் காதலி ஊடலை - தத்தையின் பிணக்கை ; ஒண்மலர் உறைந்த சென்னியின் நீக்கினான் - சிறந்த மலர்கள் அணிந்த தன் முடியாலே வணங்கி நீக்கினான்; நெடுங்கணிக்கு இன்பம் நிறைந்தது - நீண்ட கண்களையுடைய தத்தைக்கு இன்பம் நிறைவுற்றது. ( 184 )

விளக்கம் : வேலவன் : சீவகன். காதலி - ஈண்டுக் காந்தருவதத்தை. சென்னியின் நீக்கினான் என்றது, அவளடிகளிலே வீழ்ந்து வணங்கி அவ்வூடலை நீக்கினன் என்றவாறு. நெடுங்கணி என்புழி ணகர வொற்றுக் கெட்டது: செய்யுள் விகாரம். ( 184 )

வேறு
 
1035. தன்றுணைவி கோட்டியினி னீங்கித் தனியிடம்பார்த்
தின்றுணைவற் சேர்வா னிருந்ததுகொல் போந்ததுகொல்
சென்றதுகொல் சேர்ந்ததுகொல் செவ்வி அறிந்துருகு
மென்றுணைவி மாற்றமிஃ தென்றதுகொல் பாவம்.

பொருள் : சென்றது கொல் - (கிளி) சென்றதோ?; தன் துணைவி கோட்டியினின் நீஙகி - தன் காதலியுடன் இருக்கும் இருப்பினின்றும் நீங்கி; தனி இடம் பார்த்து இன்துணைவன் சேர்வான் இருந்தது கொல் - தனியேயிருக்கும் இடத்தைப் பார்த்து என் இனிய காதலனை அடையக் (காலங்கருதி) இருந்ததோ?; போந்தது கொல்? - (கோட்டி பெறாதே) திரும்பி விட்டதோ?; சேர்ந்தது கொல்? - இடம் அறிந்து சேர்ந்ததோ?; செவ்வி அறிந்து - இடம் பெற்றபின் காலமும் அறிந்து ; உருகும் இன்துணைவி மாற்றம் இஃது என்றது கொல்? - உருகும் நின் இனிய துணைவியின் மொழியீது என்றுரைத்ததோ?; பாவம்! - இஃதொரு பாவம் இருந்தவாறு என்னே?
 
விளக்கம் : கிளிப்பிள்ளையும் தானும் பட்டது என் என்றாள். தன் துணைவி என்றது ஈண்டுக் காந்தருவதத்தையை. கோட்டி - கூட்டம். சேர்வான் - சேரும் பொருட்டு. கொல் அனைத்தும் ஐயப் பொருளன. செவ்வி - தகுந்த காலம். காமத்தால் வருந்தும் நெஞ்சத்தின் விதுவிதுப்பை இச் செய்யுள் நன்கு உணர்த்துதல் உணர்க. இங்ஙனமே இதனுடன் இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல் இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் இவ்வளவின் மீளுங்கொல் எனவரும் நளவெண்பாவினையும் (சுயம் - 40) நினைக. ( 185 )

வேறு
 
1036. செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரைதான்
றந்தாரேற் றந்தாரென் னின்னுயிர்தாந் தாராரே
லந்தோ குணமாலைக் காதகா தென்றுலக
நொந்தாங் கழமுயன்று நோற்றானு மெய்துவனே.

பொருள் : செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கு - சிவந்து மாலையை உடைய பைங்கிளியாராகிய போனவர்க்கு; ஓர் இன்னுரைதான் தந்தாரேல் - ஓர் இனிய மொழியை அவர் கூறினாரெனின்; என் இன்உயிர் தந்தார் - எனக்கு இனிய உயிரையே அளித்தவராவார்; அந்தோ! தாம் தாராரேல் - ஐயோ! அவர்தாம் கூறாரெனின்; குணமாலைக்கு ஆ தகாது என்று - குணமாலைக்கு இத் துன்பம் வ்ரலாகாது என்று; உலகம் நொந்து அழ - உலகம் வருந்தியிரங்க; முயன்று - முயற்சி செய்து; நோற்றானும் அங்கு எய்துவனே - தவம் செய்தாயினும் அவரை அடைவேனோ? (அம் முயற்சியில் இறந்துபடுவேன்.)
 
விளக்கம் : செந்தார் - கழுத்தில் உள்ள கோடு. கிளியார் என உயர்திணையாற் கூறல் ஒன்றென முடித்தலாற் கொள்க. எய்துவனே: ஏ: எதிர்மறை. அந்தோ! ஆ: இரக்கக் குறிப்பிடைச் சொற்கள். நச்சினார்க்கினியர், அங்ஙனங் கூறாராயின் அவ்விடத்து யான் சுரமஞ்சரியைப் போலே முயன்று தவஞ்செய்தாயினும் பின்பு எய்து வேனோ? ஆ! குணமாலைக்கு இவ்விறந்துபாடு தகாதென்று உலகம் நொந்து அழும்படி இறந்துபாட்டை எய்துவேன் அன்றோ? என்று கருதினாள் என்று பொருள் கூறுவர். முன் நிகழ்ச்சியிற் சுரமஞ்சரி தவஞ்செய்வேன் என்று மனத்திற் கொண்டு குணமாலையுடன் மாறுபட்டுச் சென்றனளேனும், அவள் மனக்கோள் குணமாலைக்குத் தெரிந்திருக்க இடமில்லை. ( 186 )

1037. சென்றார் வரைய கருமஞ் செருவேலான்
பொன்றாங் கணியகலம் புல்லப் பொருந்துமேற்
குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணன்மே
லன்றாங் கணியிழையா ளாழி யிழைத்தாளே.

பொருள் : கருமம் சென்றார் வரைய - வினையின் முடிவு வினைமேற் சென்றவரின் அறிவின் திறனளவாய் இருக்கும். (என் கிளி பேதையாதலால் எங்ஙனமோ? என்றெண்ணி) செருவேலான் ; பொன் தாங்கு அணி அகலம் புல்லப் பொருந்துமேல் - போர் வேலானுடைய அணியேந்திய அழகிய மார்பம் என்னைத் தழுவக் கூடுமாயின்; குன்றாது கூடுக எனக் கூறி - தவறாமற் கூடுவதாக என்றுரைத்து; ஆங்கு முத்த ஆர்மணல் மேல் - அவ்விடத்தே முத்துக்கள் நிறைந்த மணல்மேல்; அன்று - அதனைப் போகவிட்ட அப்போது; அணி இழையாள் ஆழி இழைத்தாள் - குணமாலை கூடற்சுழி தீட்டத் தொடங்கினாள்.

விளக்கம் : கருமம் சென்றார் வரைய என மாறுக. கருமம் சென்றார் வரைய என்றது என்பொருட்டுச் சென்ற கிளி பேதையே ஆதலின் அஃது அக்கருமத்தை முடித்துக்கொண்டு வருதல் ஒரு தலையன்றென்பதுபட நின்றது. கூடலிழைத்தலாவது - வருவரோவாராரோ என்றையுற்றவர் விரலால் வட்டமாகக் கோடு கிழித்து அக்கோட்டின் இருமுனைகளும் ஒன்று கூடியவிடத்து வருவர் என்றும் கூடாமல் விலகியவழி வாரார் என்றும் துணிதல் என்க. ( 187 )

1038. பாகவரை வாங்கிப் பழுதாகிற் பாவியேற்
கேகுமா லாவி யெனநினைப்பப் பைங்கிளியார்
மாகமே நோக்கி மடவாளே யவ்விருந்தா
ளாகும்யான் சேர்வ லெனச்சென் றடைந்ததே.

பொருள் : பாகவரை வாங்கி - (அங்ஙன மிழைப்பவள்) பாதிவரையில் வளைத்து; பழுதாகின் பாவியேற்கு ஆவி ஏகும் - இது கூடாதாயின் பாவியேனுக்கு உயிர் நீக்கும்; என நினைப்ப - என்றெண்ணிக் (கூடற்சுழியை முடியாமலே வானிற் கிளி வரவை நோக்கி வாளா இருப்ப); மாகமே நோக்கி - வானையே நோக்கி ; அவ்விருந்தாள் யார்? மடவாளே ஆகும் - அங்கிருந்தாள் யார்? (வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் வேறொருத்தி இங்கிராள் ஆகையால்) குணமாலையே ஆவாள்; யான் சேர்வல் என - யான் இனி அவளிடஞ் செல்வேன் என எண்ணி ; பைங்கிளி சென்று அடைந்தது - பசுங்கிள்ளை போய்ச் சேர்ந்தது.
 
விளக்கம் : குணமாலை மாகமே நோக்கியும் கன்னிமாடத்திலும் இருந்ததால், மெய்வாடி, வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் கிளி அறிந்தது எனக் குணமாலையின் காதல் நிலை கூறியவாறு. தான் போனபின்புள்ள வேறுபாட்டால் ஐயுற்றாலும் வருத்த மிகுதி கண்டு கிளி தெளிந்தது. ( 188 )

1039. கண்டா ணெடிதுயிர்த்தாள்
கைதொழுதாள் கையகத்தே
கொண்டா டினைக்குரறான்
சூடினாள் தாழ்குழன்மே
னுண்டார்ப் பசுங்கிளியை
நோவ அகட்டொடுக்கி
வண்டாரான் செவ்விவாய்க்
கேட்டாடன் மெய்ம்மகிழ்ந்தாள்.

பொருள் : கண்டாள் - (தன்னை அணுகின கிளியைக்) கண்டாள் ; நெடிது உயிர்த்தாள் - (இது என்னுரைக்குமோ என்று) பெருமூச் செறிந்தாள்; கைதொழுதாள் - (கிளியின் வாயில் தினைக்கதிரைக் கண்டு அதிலே ஓலையிருக்கும் என்று துணிந்து) கைகுவித்து (நல்லூழை) வணங்கினாள்; கையகத்தே தினைக்குரல் கொண்டாள் - கையிலே தினைக்கதிரை வாங்கிக் கொண்டாள்; தாழ்குழல் மேல் சூடினாள் - நீண்ட கூந்தலிலே வைத்துக் கொண்டாள் ; நுண்தார்ப் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி - நுண்ணிய செவ்வரி கழுத்திற் பொருந்திய கிளியை அது வருந்துமளவு வயிற்றில் அணைத்துக்கொண்டு ; வண்தாரான் செவ்வி வாய்க் கேட்டாள் - செழுவிய மாலையான் நிலையை அதன் வாய்மொழியாலே கேட்டாள்; தன் மெய்ம் மகிழ்ந்தாள் - தன் உடல் குளிர்ந்தாள்.

விளக்கம் : அன்பினால் வயிற்றில் அணைத்தாள். தினைக்கதிரிலே மோதிரமும் ஓலையும் இருந்தனவாகையால் தனியே ஓய்வாக அமர்ந்து படிக்க எண்ணித் தன் குழலிலே வைத்துக்கொண்டாள். கையகத்தே கொண்டாள் என்பதற்குக், கையிலே ஆழியை மறையக் கொண்டாள் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆழி தனியே கொண்டு வரப்பட்டதென்று அவர் கருதியிருத்தல் வேண்டும்.  இஃதென் கூறுமோஎன் றையுற்று உயிர்த்தாள் என்க. ஓலையிருக்கும் என்னுந் துணிவால் கைதொழுதாள் என்க. நுண்தார் -நுண்ணிய (கழுத்து) வரை. தாரான்: சீவகன். செவ்வி - ஈண்டு நிலைமை. ( 189 )

1040. தீம்பா லமிர்தூட்டிச் செம்பொன் மணிக்கூட்டிற்
காம்பேர் பணைத்தோளி மென்பறவை கண்படுப்பித்
தாம்பான் மணிநாம மோதிரந்தொட் டையென்னத்
தேம்பா வெழுத்தோலை செவ்வனே நோக்கினாள்.

பொருள் : காம்பு ஏர் பணைத்தோளி - மூங்கிலனைய அழகிய பருத்த தோளினாள் ; மென்பறவை தீ பால் அமிர்து ஊட்டி - மென்மையான கிளியை, இனி பாலாகிய உணவை ஊட்டி ; செம்பொன் மணிக்கூட்டில் கண் படுப்பித்து - மணிகள் இழைத்த பொற்கூட்டிலே துயிலச் செய்து; ஆம் பால் மணி நாமம் மோதிரம் தொட்டு - ஆம் பகுதியையுடைய சீவகனென்னும் பெயர் பொறித்த ஆழியை எடுத்து அணிந்து கொண்டு ; ஐ என்ன - விரைவாக; தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள் - வருந்தாத எழுத்துள்ள ஓலையைச் செவ்வனே பார்த்துப் படிக்கின்றாள்.

விளக்கம் : தேம்பாமைக்குக் காரணமான ஓலை எனினும் ஆம். காம்பு -மூங்கில். ஏர் : உவம உருபு. பணை - பருத்த. மென்பறவை : ஈண்டுக் கிளி. ஆம்பால் - ஆகும் பகுதி. நாமமோதிரம் - பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம். ஐஎன்ன : விரைவுக் குறிப்பு. ( 190 )

1041. கொடுஞ்சிலையா னோலை குணமாலை காண்க
வடுந்துயர முள்சுடவெந் தாற்றாதே னாற்ற
விடுந்த சிறுகிளியால் விம்மனோய் தீர்ந்தே
னெடுங்கணா டானு நினைவகல்வா ளாக.

பொருள் : கொடுஞ்சிலையான் ஓலை - வளைந்த வில் ஏந்திய சீவகன் விடுக்கும் ஓலை; குணமாலை காண்க - குணமாலை காண்பாளாக, அடும் துயரம் உள்சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற - காமநோய் உள்ளத்தைச் சுடுதலாலே வெந்து ஆற்றாதன் நான் ஆற்றுமாறு; விடுந்த சிறுகிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன் - தான் வரவிட்ட சிறுகிளியினால் யான் மிக்க வருத்தத்திலிருந்து நீங்கினேன்; நெடுங்கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக - நீண்ட கண்களையுடைய அவளும் வருத்தமிகா தொழிவாளாக.
 
விளக்கம் : கொடுஞ்சிலையான் எனத் தற்புகழ்தல் தகுமென்பதை முன்னரே (சீவக. 1031) கூறினாம். இன்னார் ஓலை இன்னார் காண்க என்றல் முறைமை. விடுந்த : விட்ட என்பதன் விகாரம். கொடுஞ்சிலையான் என்றது சீவகன் என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது. ( 191 )

1042. ஈட்டஞ்சா னீணிதியு மீர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ்
மோட்டு வளஞ்சுரக்கு மூரு முழுதீந்து (மென்றோட்
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்
பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே.

பொருள் : ஈட்டம்சால் நீள்நிதியும் - அறத்திற் சேர்க்கப் பட்ட பெருஞ் செல்வத்தையும்; ஈர்ங்குவளைப் பைந்தடம் சூழ் மோட்டுவளம் சுரக்கும் ஊரும் - தண்ணிய குவளை நிறைந்த பசுந்தடங்கள் சூழ்ந்து உயரிய செல்வத்தைப் பெருக்கும் ஊரையும் ; முழுது ஈந்து- (குரவர் விரும்பியவாறு) முற்றவும் நல்கி ; பூட்டு ஆர் சிலை நுதலாள் - பூட்டப்பட்ட வில்லனைய புருவத்தாளின், வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய - விரும்பினார்க்கு விரும்பினவை போல, இனிமையான ; வேய்மென் தோள் - மூங்கில் அனைய மெல்லிய தோள்களை ; புல்லாது ஒழிவேனே - தழுவாமல் விலகுவேனோ?

விளக்கம் : சிலைநுதலாளைத் தோளைப் புல்லாதொழியேன் எனக் கூட்டி நச்சினார்க்கினியர் பொருள் கொண்டார். இங்ஙனம் இரண்டனுருபு முதலுககும் சினைக்கும் வருதல் முதன்முன் ஐவரின் என்ற சூத்திரத்தில், தெள்ளிது (தொல். வேற்றுமை மயங். 5) என்பதனாற் கொள்க. ஈட்டஞ்சால் என்றது, அறத்தால் ஈட்டமமைந்த என்பது படநின்றது. நீள்நிதி - பெருஞ்செல்வம். மோட்டுவளம் - பெருவளம்.
 
வேட்டபொழுதின் அவையவை போலுமே.
தோட்டார் கதுப்பினாள் தோள் (குறள்: 1105).

என்றார் திருவள்ளுவனாரும். ( 192 )

1043. குங்குமஞ்சேர் வெம்முலைமேற்
கொய்தார் வடுப்பொறிப்பச்
செங்கயற்கண் வெம்பனியாற்
சிந்தை யெரியவித்து
மங்கை மகிழ
வுறையேனேல் வாளமருட்
பங்கப்பட் டார்மேற்
படைநினைந்தே னாகென்றான்.

பொருள் : கொய்தார் குங்குமம்சேர் வெம்முலைமேல் வடுப்பொறிப்ப - (என்) மாலை தன்னுடைய குங்குமம் அணிந்த விருப்பூட்டும் முலையின்மேல் வடுவாய் அழுந்துமாறு; செங்கயல்கண் வெம்பனியால் சிந்தை எரி அவித்து - (யான் முயங்குதலிற் பிறந்த) சிவந்த கயற்கண்ணிலிருந்து பிறந்த உவகைக் கண்ணீராற் சிறிது தணிந்த காமத் தீயை அவித்து; மங்கை மகிழ உறையேனேல் - அவள் என் அன்புடைமைக்கு மகிழுமாறு அவளுடன் உறைந்திலேன் எனின்; வாள் அமருள் பங்கப்பட்டார்மேல் படை நினைந்தேன் ஆக என்றான் - வாட் போரிலே அஞ்சினார் மேலே படைவிட எண்ணினேன் ஆகக்கடவேன் என்றொழுதியிருந்தான்
 
விளக்கம் : வெம்பனி என்றான், புணர்ந்தாலன்றி முயக்கத்தால் மட்டும் உண்ணிறை வெப்பம் முழுதும் தீராதென்று. பங்கப்படுதல் - இமைத்தல், திடுக்கிடல் முதலியன. ஆகென்றான் என்பதனைத் தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) எனக் கொண்டு அடுத்த செய்யுளில் நுண்வரிகள் என்பதற்கு எழுவாயாக்குவர் நச்சினார்க்கினியர். ( 193 )

1044. நூல்புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ்சேர் நுண்வரிகள்
பான்மடுத்துத் தீந்தேன் பருகுவாள் போனோக்கிச்
சேல்படுத்த கண்ணீர் சுமந்தளைஇ மெய்ம்மகிழ்ந்து
மால்படுத்தான் மார்பின் மணந்தாளே போன்மகிழ்ந்தாள்.

பொருள் : நூல்புடைத்தால் போன்று - நூல் எற்றினாற் போல; இனிய வித்தகம் சேர் நுண்வரிகள் - இனிய திறமை பொருந்திய நுண்ணிய எழுத்தின் வரிகளை; பால் மடுத்துத் தீந் தேன் பருகுவாள்போல் நோக்கி- பாலிலே கலந்து இனிய தேனைப் பருகுவாள் போல இனிமையுற்றுப் படித்து; அளைஇ சேல்படுத்த கண்ணீர் சுமந்து மெய்ம்மகிழ்ந்து - உவகை கலந்து சேலை வென்ற கண்களில் நீர் நிறைய உடம்பு குளிர்ந்து; மால்படுத்தான் மார்பில் மணந்தாளேபோல் மகிழ்ந்தாள் - மயக்கத்தை உண்டாக்கினவன் மார்பிலே கலந்தவளைப்போல இனிமையுற்றாள்.

விளக்கம் : வித்தகம் - உறுப்புமாம். மடுத்து - கலந்து. மால்படுத்தான் - தன்னைக் காம மயக்கத்துட்படுத்தவனாகிய சீவகன். (194)

1045. பாலவியும் பூவும் புகையும் படுசாந்துங்
காலவியாப் பொன்விளக்குந் தந்தும்மைக் கைதொழுவேன்
கோலவியா வெஞ்சிலையான் சொற்குன்றா னாகெனவே
நூலவையார் போனீங்க ணோக்குமினே யென்றாள்.

பொருள் : பால் அவியும் - பாற்சோறும் ; பூவும் - மலரும் ; புகையும் - மணப்புகையும்; படுசாந்தும் - அரைத்த சாந்தும் ; கால் அவியாப் பொன் விளக்கும் - காற்றில் அவியாத மாணிக்க விளக்கும்; தந்து உம்மைக் கைதொழுவேன் - படைத்து உங்களைக் கைகூப்பி வணங்குவேன் ; கோல் அவியா வெஞ்சிலையான் சொல் குன்றான் ஆக எனவே - அம்பு மாறாமல் எய்தற்குரிய கொடிய வில்லான் (நும்மை நீங்காது ஒற்றுமைப்படக் கூறிய) சொற்குன்றன் ஆகுமாறு; நூல் அவையார்போல் நீங்கள் நோக்கு மின் எனற்ள் - அறநூல் உணர்ந்த அவையோர்களை (நீங்கள் சொற்குன்றாமல் நோக்குதல்) போல அச்சொற்களுக்கு இடையூறின்றி ஆகவென்றே கருதி நோக்குங்கள் என்று வேண்டினாள்.

விளக்கம் : நீங்கள் என்றது எழுத்துக்களை ; அவற்றின் தன்மையும் வடிவும் ஆசிரியர்க்கல்லது உணரலாகாமையின், நூலில் விளங்கக் கூறிற்றிலரேனும் சமய நூல்களிற் கூறுதலின், அவ்வெழுத்துக்களைத் தெய்வம் என்றே கொள்க. ( 195 )

வேறு
 
1046. மவ்வலங் குழலி னாளை மதியுடம் படுக்க லுற்றுச்
செவ்வியுட் செவிலி சொல்லுஞ் சிலையிவர் நுதலி னாய்நின்
னவ்வைக்கு மூத்த மாம னொருமகற் கின்றுன் றாதை
நவ்வியம் பிணைகொ ணோக்கி நகைமுக விருந்து செய்தான்.

பொருள் : மவ்வல் அம் குழலினாளை மதி உடம்படுக்கல் உற்று - முல்லை மலர் அணிந்த கூந்தலாளாகிய குணமாலையை, அவள் அறிவை அறிய எண்ணி ; செவ்வியுள் செவிலி சொல்லும் - அதற்கேற்பச் செவிலி செப்புவாள்; சிலை இவர் நுதலினாய்! - வில்லென விளங்கும் புருவத்தாய் ; நவ்வி அம்பிணை கொள் நோக்கி - பெண்மானின் நோக்கைக் கொண்டவளே!; நின் அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு - நின் அன்னைக்கு முன் பிறந்தவனும் நினக்கு மாமனும் ஆவானுடைய ஒப்பில்லாத மகனுக்கு ; இன்று உன் தாதை நகைமுக விருந்து செய்தான் - இன்று உன் தந்தை நகைமுகமாகிய விருந்தை யிட்டான்.

விளக்கம் : குழலினாளை - குணமாலையை. அவ்வை - தாய். அவ்வைக்கு - மூத்தவனான நின் மாமன் என்க. நகைமுகவிருந்து என்றது உடன்பாடு என்னும் பொருளின்மேனின்றது. நின்னைக் கொடுப்பதாக உடன்பட்டான் என்பது கருத்து. ( 196 )

1047. பண்டியாற் பண்டி செம்பொன்
பல்வளை பரிய மாகக்
கொண்டுவந் தடிமை செய்வான்
குறையுறு கின்ற தன்றிக்
கண்டவர் கடக்க லாற்றாக்
கிழிமிசை யுருவ தீட்டி
வண்டிமிர் கோதை நின்னை
வழிபடு நாளு மென்றாள்.

பொருள் : பல்வளை! வண்டு இமிர் கோதை! - பல்வளைகளை உடையாய்! வண்டுகள் முரலும் கோதையாய்! ; பண்டியால் பண்டி செம்பொன் பரியமாகக் கொண்டு வந்து - நின் மைத்துனன் வண்டியாலே ஒரு வண்டி செம்பொன் பரிசமாகக் கொணர்ந்து ; அடிமை செய்வான் குறையுறுகின்றது அன்றி - நினக்குப் பணிபுரியக் குறையுற்று நிற்பதே அன்றி; கண்டவர் கடக்கல் ஆற்றா உருவு கிழிமிசை தீட்டி - பார்த்தவர் பார்வையை விட்டுக் கடந்துபோக இயலாத நின் வடிவத்தைக் கிழியிலே வனைந்து; நின்னை நாளும் வழிபடும் என்றாள் - உன்னை எப்போதும் வழிபடுவான் என்று கூறினாள்.
 
விளக்கம் : பல்வளை; அன்மொழித்தொகை, விளியேற்று நின்றது. கோதை : விளி. பண்டி - வண்டி. கண்டவர் கடக்கலாற்றா உருவு - என்பதனை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ என்னும் மணிமேகலையோடு ஒப்புக்காண்க. ( 197 )

1048. மைத்துனன் வனப்பின் மிக்கான்
வளர்நிதிக் கிழவன் காளை
யுத்தம னுனது நாம
மல்லதொன் றுரைத்த றேற்றா
னித்திறத் திவன்க ணின்னை
யெண்ணினா ரென்ன லோடுந்
தத்தையங் கிளவி கையாற்
செவிமுத லடைச்சிச் சொன்னாள்.

பொருள் : மைத்துனன் வனப்பின் மிக்கான் - மேலும் நின்மைத்துனன் அழகிற் சிறந்தவன் ; வளர்நிதிக் கிழவன் - பெருஞ் செல்வத்துக்குரியவன் ; காளை - இளைஞன்; உத்தமன் - நல்ல வன்; உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான் - உன் பெயரை யன்றி உரைத்தல் அறியாதவன் ; இத் திறத்து இவன்கண் - இக் கூறுபாடுகளையுடைய இவனிடத்தே ; நின்னை எண்ணினார் என்னலோடும் - நின்னைக் கொடுக்க நினைத்தனர் என்ற அளவிலே ; தத்தை அம் கிளவி - கிளிமொழியாள் ; கையால் செவிமுதல் அடைச்சிச் சொன்னாள் - கைகளினாலே செவிகளைப் புதைத்து ஒருமொழி உரைத்தாள்.
 
விளக்கம் : மைத்துனன் என்றது மேலும் நின்னை மணத்தற்கும் உரிமையுடையன் என்பதுபட நின்றது. இதன்கண் மணமகன்பால் பெண்ணின் தந்தை விரும்பும் வித்தையுடைமை உத்தமன் என்றதனானும், தாய் விரும்பும் தனம் வளர்நிதிக் கிழவன் காளை என்றதனானும், சுற்றம் விரும்பும் குலம் மைத்துனன் என்றதனானும், பெண் விரும்பும் அழகு வனப்பின்மிக்கான் என்றதனானும் போந்தமை உணர்க. ( 198 )

1049. மணிமதக் களிறு வென்றான்
வருத்தச்சொற் கூலி யாக
வணிமதக் களிற னானுக்
கடிப்பணி செய்வ தல்லாற்
றுணிவதென் சுடுசொல் வாளாற்
செவிமுத லீர லென்றாள்
பணிவரும் பவளப் பாவை
பரிவுகொண் டனைய தொப்பாள்.

பொருள் : பணிவரும் பவளப்பாவை பரிவுகொண்டனையது ஒப்பாள் - பணிவித்தற்கு அரிய பவளப்பாவை வருத்தங்கொண்ட தன்மை போன்றாள் ; மணிமதக் களிறு வென்றான் வருத்தச் சொல் கூலி ஆக - கட்டுமணியையுடைய மதயானையை வென்றவன் கொண்டுய்யப் போமின் (சீவக. 981) என்ற பரிவுமொழிக்குக் கூலியாக; அணி மதக்களிறு அனானுக்கு அடிப்பணி செய்வது அல்லால் - அழகிய மதயானை போன்ற அவனுக்கு அடித்தொண்டு செய்தல் அன்றி; துணிவது என் ?- வேறு கொடுக்கத் துணிவது எதற்கு ?; சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல் என்றாள் - (இவ்வாறு) சுடுசொல்லாகிய வாளாலே செவியிடத்தைப் பிளவற்க என்றுரைத்தாள்.
 
விளக்கம் : அடிச் செருப்பாவதல்லால் என்றும் பாடம். வருத்தச் சொல் - பரிவினைக் காட்டுஞ்சொல்; அஃதாவது கோற்றொடிப்பாவை தன்னைக் கொண்டுயப் போமின் என்று (981) தன் பொருட்டு முன்னர்ச் சீவகன் கூறிய சொல். சுடுசொல் - உள்ளத்தைச் சுடுவதுபோன்று வருத்துங் கொடுஞ்சொல் ; அது நின்னை எண்ணினார் என்ற செவிலி சொல். ( 199 )

1050. கந்துகப் புடையிற் பொங்குங்
கலினமா வல்லன் காளைக்
கெந்தையும் யாயு நேரா
ராய்விடி னிறத்த லொன்றோ
சிந்தனை பிறிதொன் றாகிச்
செய்தவ முயற லொன்றோ
வந்ததா னாளை யென்றாள்
வடுவெனக் கிடந்த கண்ணாள்.

பொருள் : வடு எனக் கிடந்த கண்ணாள் - (மேலும்) மாவடுவைப் போன்ற கண்ணினாள்; கந்துகப் புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு - பந்தின் புடைத்தல் போல விரைகின்ற புரவியைச் செலுத்த வல்லனாகிய காளைக்கு; எந்தையும் யாயும் நேரார் ஆய்விடின் - என் தந்தையும் தாயும் கொடுக்க ஒவ்வாராயின்; இறத்தல் ஒன்றோ - இறந்துபடுதலோ; சிந்தனை பிறிது ஒன்றாகிச் செய்தவம் முயறல் ஒன்றோ - வேறு நினையாமல் செய்யும் தவத்தினைக் கைக்கொள்ளுதலோ; நாளை வந்தது என்றாள் - நாளைக்கு (இவ்விரண்டில் ஒன்று) நமக்கு வந்துற்றது என்று அழுதாள்.
 
விளக்கம் : ஆகி - ஆக : குரவர் நினைவு வேறாய்ப்போக என்பர் நச்சினார்க்கினியர். கலினமா - குதிரை. வல்லனாகிய காளை என்க. காளை - சீவகன். வந்தது என்று இறந்த காலத்தாற் கூறினாள், வாராக் காலத்து வினைச்சொற் கிளவி, இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தேர்னறும், இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை என்பதோத்தாகலான். ( 200 )

1051. தேனெய்போன் றினிய சொல்லாள்
சிறுமுதுக் குறைமை கேட்டே
யூனைநைந் துருகிக் கைத்தா
யுண்ணிறை யுவகை பொங்க
வானெய்பாற் கிவர்ந்த தொத்த
தழேற்கவென் பாவை யென்று
தானையாற் றடங்க ணீரைத்
துடைத்துமெய் தழுவிக் கொண்டாள்.

பொருள் : கைத்தாய் - (அதனைக் கேட்ட) செவிலித்தாய்; தேன்நெய் போன்று இனிய சொல்லாள் - தேனும் நெய்யும்போல இனிய சொல்லினாளின்; சிறு முதுக்குறைமை கேட்டு - சிறு பருவத்தினும் பேரறிவுடைமை கேட்டு; ஊன் நைந்து உருகி-மெய்இளகி உருகி ; உள்நிறை உவகை பொங்க - உள்ளத்திலே நிறைந்த உவகை பொங்குவதால்; என்பாவை - என் மகளே!; ஆன்நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது - உன் நினைவு பசுநெய் பாலை விரும்பியது போன்றது; அழேற்க என்று - அழாதே என்றுரைத்து; தானையால் தடம்கண் நீரைத் துடைத்து - தன் முன்றானையால் குணமாலையின் கண்ணீரைத் துடைத்து; மெய் தழுவிக்கொண்டாள் - உடல் பொருந்தத் தழுவிக்கொண்டாள்.

விளக்கம் : ஊனை : ஐ: அசை பாற் கவர்ந்தது என்றும் பாடம். தேனாகிய நெய்யெனினுமாம். சிறுமுதுக்குறைமை - இளம்பருவத்திலேயே பேரறிவுடைமை. சிறுமுதுகுறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16 - 68.) என்பது கோவலன் கூற்று. அழேற்க - அழாதே. தானை - முன்றானை.  (201 )

1052. துகண்மனத் தின்றி நோற்ற
தொல்வினைப் பயத்தி னன்றே
தகணிலாக் கேள்வி யான்கட்
டங்கிய தென்று பின்னு
மகண்மனங் குளிர்ப்பக் கூறி
மறுவலும் புல்லிக் கொண்டாங்
ககன்மனைத் தாய்க்குச் சொன்னா
ளவளுந்தன் கேட்குச் சொன்னாள்.

பொருள் : மனத்துத் துகள் இன்றி நோற்ற - மனத்திலே அழுக்கில்லாமல் நோற்ற; தொல் வினைபபயத்தின் அன்றே - நல்லூழின் பயனால் அன்றே; தகண் இலாக் கேள்வியான்கண் தங்கியது என்று - தட்டற்ற நூற் கேள்வியானிடத்தே நின் உள்ளம் நின்றது என்று ; பின்னும் மகள் மனம் குளிர்ப்பச் சொல்லி - மற்றும் மகளுடைய உள்ளம் குளிரக் கூறி ; மறுவலும் புல்லிக்கொண்டு - மறுமுறையும் தழுவிக்கொண்டு ; ஆங்கு அகல்மனைத் தாய்க்குச் சொன்னாள் - அங்கே நற்றாய்க்குத் தெளியக் கூறினாள்; அவளும் தன் கேட்குச் சொன்னாள் - அவளும் தன் கணவனுக்கு உரைத்தாள்.

விளக்கம் : செவிலி நற்றாய்க்குக் கூறியதும், நற்றாய் தந்தைக்குக் கூறியதும் அறத்தொடு நிற்றல் எனப்படும். குணமாலை, உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்ற பழமொழிப்படி என் உயிரை மீட்ட சீவகனையேயன்றி மற்றொருவரை மணம்புரியேன் என்றலே அறத்தொடு நிற்றல் ஆம். துகள், ஈண்டு மனமாசு. தகண் - முட்டுப்பாடு. கேள்வி - நூற்கேள்வி. கேள்வியான் - ஈண்டுச் சீவகன். மறுவலும் -மீண்டும். மனைத்தாய் என்றது நற்றாயை, கேள் என்றது கணவனை. ( 202 )

1053. வினையமா மாலை கேள்வன்
குபேரமித் திரற்குச் சொல்ல
வனையதே பட்ட தென்றா
லையனே நங்கைக் கொத்தான்
வனையவே பட்ட போலு
மணிமருண் முலையி னாளைப்
புனையவே பட்ட பொற்றார்ப்
புண்ணியற் கீது மென்றான்.

பொருள் : வினயமாமாலை கேள்வன் குபேர மித்திரற்குச் சொல்ல - வினயமாமாலை தன் கணவனாகிய குபேரமித்திரனுக்குக் கூறியவுடன்; அனையதே பட்டது என்றால் - (அவனும்) அதுவே அவள் உள்ளத்திற் கொண்டது என்றால்; ஐயனே நங்கைக்கு ஒத்தான் - அவனே நம் பெண்ணிற்கேற்றவன்; வனையவே பட்டபோலும் மணிமருள் முலையினாளை - எழுதப்பட்டனவே போன்ற மணிமருண்ட முலையாளை; புனையவே பட்ட பொன்தார்ப் புண்ணியற்கு ஈதும் என்றான் - அணிசெயப் பெற்ற பொன்மாலை அணிந்த நல்லோனுக்குக் கொடுப்போம் என்றான்.
 
விளக்கம் : அனையதே: ஏ : வினா என்பர் நச்சினார்க்கினியர். அனையதே - அப்படியே. வினயமாலை: என்பது, எதுகை நோக்கி வினயமாமாலை எனப் போலி ஆயிற்று; நற்றாயின் பெயர். கேள்வன் - கணவன். குபேரமித்திரன், குணமாலையின்றந்தை. அனையது என்றது, உவமை கருதாமல் சுட்டுக்பொருட்டாய் நின்றது. ஐயன் : சீவகன். நங்கை : குணமாலை: மகளிருட்சிறந்தோள் என்னும் பொருட்டு. புண்ணியம் : சீவகன். ஈதும் : தன்மைப் பன்மை. ( 203 )

வேறு
 
1054. கற்றார் மற்றுங் கட்டுரை
வல்லார் கவியென்னு
நற்றேர் மேலார் நால்வரை
விட்டாற் கவர்சென்றார்
சுற்றார் வல்விற் சூடுறு
செம்பொற் கழனாய்கன்
பொற்றார் மார்பீர் போதுமி
னென்றாங் கெதிர்கொண்டான்.

பொருள் : கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும் நால்வரை - படித்தவர் மேலும் புனைந்துரைப்பதிற் சிறந்தவர் கவிஞர் என்னும்முத்திறமுடையார் நால்வரை; நல்தேர் மேலார் விட்டாற்கு அவர் சென்றார் - நல்ல தேரின் மிசையராய்ச் செல்ல விட்டாற்கு இசைந்து அவர்களும் சென்றனர்; சுற்று ஆர் வல்வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன் - (அப்போது) கட்டப்பட்ட வலிய வில்லையும் அணிந்த பொற்கழலையும் உடைய நாய்கன் ; பொன்தார் மார்பீர் ! போதுமின் என்று - பொன்மாலை மார்பினீர் ! வம்மின் என்றுரைத்து; ஆங்கு எதிர்கொண்டான் -வாயிலிற் சென்று எதிர்கொண்டான்.
 
விளக்கம் : இம் மூன்று கலையும் வல்லார் நால்வர் என்க. கற்றாரும் வல்லாரும் கவியும் ஆகியவர் என்னும் என வேண்டிய உம்மையும் ஆக்கச் சொல்லும் தொக்கன. கவி - கவிஞர். நால்வரைத் தேரின்மேல் ஏற்றி உய்த்தான் என்பது கருத்து. நாய்கன், ஈண்டுக் கந்துகன். விட்டாற்கு என்புழி நான்கனுருபு அதற்குடம்படுதற் பொருட்டு. போதுமின் - வம்மின். ( 204 )

1055. சீந்தா நின்ற தீமுக வேலான் மணிச்செப்பி
னீந்தான் கொண்டா ரின்முக வாச மெரிசெம்பொன்
காந்தா நின்ற கற்பக மன்னீர் வரப்பெற்றேன்
சேர்ந்தே னின்றே வீடென நாய்கற் கவர்சொன்னார்.

பொருள் : சீந்தா நின்ற தீமுக வேலான் - சீறுகின்ற அனல் கொண்ட வேலானாகிய நாய்கன்; மணிச்செப்பின் இன்முக வாசம் ஈந்தான் - மணியிழைத்த செபபிலே இனிய முகவாசம் கொடுத்தான்; கொண்டார் - அவர்களும் எடுத்துக்கொண்டனர்; எரி செம்பொன் காந்தாநின்ற கற்பகம் அன்னீர் - எரியும் பொன்னின் ஒளியை விடுகின்ற கற்பகம் போன்றீர் ; வரப்பெற்றேன் - நீவிர் வரும் பேறு பெற்றேன் ; இன்றே வீடு சேர்ந்தேன் என - (அதனால்) இன்றே பேரின்பம் பெற்றவனானேன் என்று முகமனுரைக்க; நாய்கற்கு அவர் சொன்னார் - கந்துகனுக்கு வந்த நால்வரும் கூறினர்.

விளக்கம் : சீந்துதல் - சினத்தல். இனி, சிந்தாநின்ற என்றதன் விகாரமாகக் கொண்டு தீசிந்தாநின்ற முகவேலான் எனினுமாம். மணிச் செப்பின் இன்முகவாசம் ஈந்தான் என மாறுக. முகவாசம் - வெற்றிலை. காந்துதல் - ஒளிவிடுதல். கற்பகம் - தூதர்க்கு உவமை. இன்றே வீடு சேர்ந்தேன் என மாறுக. வீடு : ஆகுபெயர். வீட்டின்பம் என்றது, வீட்டின்பம் பெற்றேன்போல மகிழ்ந்தேன் என்றவாறு. ( 205 )

1056. யாமக ளீது நீர்மகட் கொண்மி னெனயாருந்
தாமக ணேரா ராயினுந் தண்ணென் வரைமார்பிற்
பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக்
கியாமக ணேர்ந்தே மின்றென நாய்கற் கவர்சொன்னார்.

பொருள் : யாம் மகள் ஈதும் - யாம் எம் மகளைத் தருகிறோம் ; நீர் மகள் கொண்மின் - நீர் அவளைக் கொண்மின் ; என யாரும் தாம் மகள் நேரார் ஆயினும் - என எவரும் தம் மகளைக் கொடுக்க இசையார் என்றாலும் (புது முறையாக) ; தண் என் வரை மார்பில் - குளிர்ந்த மலையனைய மார்பிலே; பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன்று அனையானுக்கு - திருமகள் தங்கும் நலம் நிறைந்த பொன்மலை போன்ற சீவகனுக்கு ; இன்று யாம் மகள் நேர்ந்தேம் என - இன்று யாம் மகட்கொடை விரும்பினேம் என்று; நாய்கற்கு அவர் சொன்னார் - குபேரமித்திரனுக்காக வந்த நால்வரும் கந்துக்கனிடம் உரைத்தனர்.

விளக்கம் : தாம்மகள் : தம்மகள் என்பதன் விகாரமும் ஆம். குபேரமித்திரனுக்கும் தமக்கும் வேற்றுமையின்றென்பது தோன்றயாம் மகள் நேர்ந்தேம் என்றார். நாய்கற்காக அத்தூதுவர் சொன்னார் என்க. குபேரமித்திரன் உரையை அவர்கொண்டு கூறினதாகக் கூறுதல் வேண்டாவுரையாகும். இதனோடு,

யாமகள் தருதும் கொள்கெனக் கூறுதல்.
ஏமவையத் தியல்பன்று (பெருங் - 4: 71-2)

எனவரும் பெருங்கதையின் ஒப்புநோக்குக. ( 206 )

1057. சுற்றார் வல்விற் சூடுறு செம்பொற் கழலாற்குக்
குற்றேல் செய்துங் காளையும் யானுங் கொடியாளை
மற்சேர் தோளான் றன்மரு மானுக் கருள்செய்யப்
பெற்றே னென்னப் பேசினன் வாசங் கமழ்தாரான்.

பொருள் : சுற்று ஆர் வல்வில் சூடுறு செம்பொன் கழலாற்கு - கட்டப்பட்ட வலிய வில்லும், சூடிய பொற்கழலுமுடைய குபேரமித்திரனுக்கு; காளையும் யானும் குற்றேல் செய்தும் - சீவகனும் யானும் சிறுபணி புரிவோம்; மல்சேர் தோளான் கொடியாளைத் தன் மருமானுககு அருள் செய்யப் பெற்றேன் என்ன - மல்லுக்கியன்ற தேர்ளினன் தன் பூங்காடியனைய மகளைத் தன் மருமகனுக்குக் கொடுக்கும் பேறு பெற்றேன் என்று ; வாசம் கமழ்தாரான் பேசினன் - மணங்கமழ் மாலையான் பணிவுடன் கூறினன்.
 
விளக்கம் : குற்றேல் : குற்றேவல் என்பதன் விகாரம். அவன் தானே மகட்கொடை நேர்தலானும் கொள்வார் தாழவே வேண்டுதலானும் இங்ஙனங் கூறினான். வாசங்கமழ்தாரான் என்றது கந்துக்கடனைக் குறிப்பால் உணர்த்தியது. யானும் காலையும் குற்றேவல் செய்தும் என்பது பணிமொழி. ( 207 )

1058. விடைசூ ழேற்றின் வேல்புக ழான்றன் மிகுதாதை
கடல்சூழ் வையங் கைப்படுத் தான் போன் றிதுகூறக்
குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும்மப்
படர்சூழ் நெஞ்சிற் பாவைதன் பண்பு மவர்சொன்னார்.

பொருள் : விடைசூழ் ஏற்றின் வெல்புகழான் தன்மிகு தாதை - விடைகள் சூழ்ந்த விடைபோலும் வெல்லும் புகழுடைய சீவகனின் தந்தை; கடல்சூழ் வையம் கைப்படுத்தான் போன்று - கடல்சூழும் உலகைக் கையகப் படுத்தான் போல; இதுகூற - இப் பணிமொழியை இயம்ப; குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் - குடர் சூழ்ந்த கோட்டையுடைய அசனி வேகத்தைச் சீவகன் வென்றவாறும் ; அப் படர்சூழ் நெஞ்சின் பாவைதன் பண்பும் - அந்தத் துன்பம் சூழ்ந்த உள்ளமுடைய குணமாலை கொண்ட இயல்பையும்; அவர் சொன்னார் - வந்தவர்கள் உரைத்தார்கள்
 
விளக்கம் : பண்பு : நேராராயின் இறந்துபடுதல், தவஞ்செய்தல் என்பவை. விடை, ஏறு என்பன காளை என்னும் பொருளன. சீவகன் தோழர்கள் சூழத் திகழ்தலாற் விடைசூழ் ஏறு என்று உவமை கூறினர். கைப்படுத்தான் போன்று மகிழ்ந்து எனப் பொதுத் தன்மை விரித்தோதுக. குஞ்சாரம் - யானை ; ஈண்டு அசனிவேகம். படர் - துன்பம். ( 208 )

1059. மறையார் வேள்வி மந்திரச்
செந்தீக் கொடியேபோற்
குறையாக் கற்பிற் சீவகன்
றாயுங் கொலைவேற்கட்
பொறையொன் றாற்றாப் போதணி
பொறையொன் றாற்றாப் போதணி
நறையார் கோதை நன்றென
வின்புற் றெதிர்கொண்டாள்.

பொருள் : மறையார் வேள்வி மந்திரச் செந்தீக் கொடியே போல் - மறை வழிப்படும் வேள்வியிலே, மந்திரங் கூறும், செந்தீயின் கொடியைப் போன்ற; குறையாக் கற்பின் சீவகன் தாயும் - குறையாத கற்பினையுடைய சுநந்தையும்; கொலை வேல்கண் பொறை ஒன்று ஆற்றாப் போது அணி பொன் கொம்பு அனையாளை - கொலை வேலனைய கண்களையும், இல்லறப் பொறை ஒன்றுமே நடத்திப் போதணிந்த பொற்கொம்பு போன்ற குணமாலையை; நறையார் கோதை நன்று என - தேன் பொருந்திய கோதை போன்றவளை மணப்பது நன்று என்று ; இன்பு உற்று எதிர்கொண்டாள் - இன்பமுற்று விரும்பிக் கொண்டாள்.
 
விளக்கம் : பொற்கொம்பனையாள் வினயமாமாலை என்றும் நறையார்கோதை குணமாலை என்றும் நச்சினார்க்கினியர் கொள்வர். போதணி பொற்கொம்பு : இல்பொருளுவமை. கொடி - ஒழுங்கு. ஆற்றா - ஆற்றி : செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம். ( 209 )

1060. பொற்கச் சார்த்த பூணணி பொம்மன் முலையாளை
யற்கச் செய்த யாப்பின ராகி யவண்வந்தார்
பொற்பக் கூறிப் போகுது மென்றார்க் கெழுகென்றார்
வற்கம் மிட்ட வண்பரி மாவி னவர்சென்றார்.

பொருள் : அவண் வந்தார் - அங்கு வந்த நால்வரும்; பொன் கச்சு ஆர்ந்த பூண் அணி பொம்மல் முலையாளை - பொற்கச்சினாற் கட்டப்பெற்ற, அணிகலன் அணிந்த பெரிய முலையினாளை; அல்கச் செய்த யாப்பினராகி - அடையச் செய்த உறுதியுடையவராய்; பொற்பக் கூறி - (மணஞ் செய்யும் பொழுதையும்) அழகுறக் கூறி ; போகுதும் என்றார்க்கு - போவோம் என்று கூறினவர்க்கு; எழுக என்றார் - அங்ஙனமே செல்க என்றார் ; அவர் வற்கம் இட்ட வண்பரி மாவின் சென்றார் - வந்தவர்களும் பண்முற்றப் பெற்ற சிறந்த புரவி மீதிலே சென்றனர்.
 
விளக்கம் : திருமணம் தப்பாமல் முடித்தற்குக் கடிதிற் சென்றார். அல்க - அற்க என எதுகைநோக்கி வலித்தது. அல்குதல் - தங்குதல். யாப்பினர் - யாப்பு - தொடர்புமாம். பொற்ப - பொலிவுற. வற்கம் - குதிரையணிகலனில் ஒன்று. வண்பரிமா - வளவிய செலவினையுடைய குதிரை. ( 210 )

வேறு
 
1061. மடந்தை திறத்தி னியையம்மகட் கூறி வந்தார்
விடந்தைத்த வேலாற் குரைத்தார்க்கவன் மெய்ம்மகிழ்ந்தா
னுடங்குங் கொடிப்போல் பவணூபுர மார்ப்ப வந்து
தடங்கண் ணவடா யதுகேட்டலுந் தக்க தென்றாள்

பொருள் : மடந்தை திறத்தின் இயைய மகள் பேசி வந்தார் - குணமாலையின் திறத்தாலே அவர்கள் இசைய மகளைக் கொடுப்பதாகப் பேசி வந்தவர்கள்; விடம்தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு - நஞ்சுபதிந்த வேலையுடைய குபேரமித்திரனுக்குக் கூறினார்க்கு; அவன் மெய்மகிழ்ந்தான் - அவனும் உண்மையான மகிழ்ச்சியடைந்தான்; நுடங்கும் கொடிபோல் பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து அது - அசையும் கொடிபோன்ற சுநந்தை நூபுரம் ஒலிக்க வந்து (கூறிய) அம் மொழியை ; தடம் கண்ணவள் தாய் கேட்டலும் தக்கது என்றாள் - பெருங்கண்ணினளின் அன்னையான வினயமாமாலை கேட்டவுடன் அவளுக்கு அது தக்கது என்றாள்.
 
விளக்கம் : மடந்தை : குணமாலை. வேலான் : குபேரமித்திரன். கொடி போல்பவள்: சுநந்தை. நூபுரம் - ஓர் அடியணிகலன். தாய் : வினயமாமாலை. அது தக்கதென்றாள் என இயைக்க. ( 211 )

1062. திருவிற் கமைந்தான் றிசைபத்து மறிந்த தொல்சீ
ருருவிற் கமைந்தாற் கமைந்தாளென யாரு மொட்டப்
பெருகுங் கணியிற் கணிபேசிய பேதி னாளாற்
பருகற் கமைந்த வமிர்தின்படர் தீர்க்க லுற்றார்.

பொருள் : திருவிற்கு அமைந்தான் - திருவனையாளாகிய குணமாலைக்குச் சீவகன் அமைந்தான் ; திசைபத்தும் மலிந்த தொல்சீர் உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் - பத்துத் திசையினும் நிறைந்த பழம் புகழையுடைய, அழகுக்கெனவே அமைந்த சீவகனுக்குக் குணமாலையும் அமைந்தாள்; என யாரும் ஒட்ட - என்று எல்லோரும் இசையுமாறு; பெருகும் கணியின் கணிபேசிய பேதுஇல் நாளால் - வளருங் கணித நூலை அறிந்த கணி கூறிய மயக்கம் அற்ற நாளிலே; பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கல் உற்றார் - உண்பதற்குத் தக்க அமிர்தமாகிய குணமாலையின் வருத்தத்தை நீக்கலுற்றனர்.
 
விளக்கம் : திரு : உவமவாகுபெயர். திருவிற்குச் சீவகன் அமைந்தான் என வருவித்துக் கூறுக. ஒட்ட - உடன்பட. கணியிற்கணி என்புழி முன்னின்ற கணி ஆகுபெயர்; நூல். ஏனையது - கணிவன். பேது இல்நாள் - மயக்கமில்லாத நல்லநாள்; குற்றமில்லாத நாளுமாம். படர்தீர்க்க லுற்றார் என்பது திருமண விழா நடத்துதற்கு முற்பட்டார் என்றவாறு. ( 212 )

1063. கரைகொன் றிரங்குங் கடலிற்கலி கொண்டு கல்லென்
முரசங் கறங்க முழவிம்மவெண் சங்க மார்ப்பப்
பிரசங் கலங்கிற் றெனமாந்தர் பிணங்க வேட்டான்
விரைசென் றடைந்த குழலாளையவ் வேனி லானே.

பொருள் : கரை கொன்று இரங்கும் கடலின் கலிகொண்டு - கரையோடு மோதி ஆரவாரிக்கும் கடலைப்போல முழக்கங்கொண்டு ; கல் என் முரசம் கறங்க - கல்லென்று முரசு முழங்க; முழவு விம்ம - முழவு ஒலிக்க ; வெண் சங்கம் ஆர்ப்ப - வெண்மையான சங்குகள் ஒலிக்க ; பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க - வண்டுகளின் திரள் மயங்கியது என மக்கள் நெருங்க ; அவ் வேனிலான் - சிவனுடைய நெற்றிக் கண்ணுக்கு அழி யாத காமனான சீவகன் ; விரைசென்று அடைந்த குழலாளை - மணம் வந்து பொருந்திய கூந்தலாளை; வேட்டன் - மணந்தான்.

விளக்கம் : கலி - முழக்கம். கல்லென் : ஒலிக்குறிப்பு. கறங்க - முழங்க. முழா - முழ என ஈற்று ஆகாரம் குறுகி நின்றது. பிரசம் - வண்டு. பிணங்க - நெருங்கும்படி. குழலாள் : குணமாலை. வேனிலான் : சீவகன் : ஆகுபெயர். ( 213 )

1064. மழைமொக்கு ளன்ன வருமென்முலை மாதர் நல்லா
ரிழைமுற் றணிந்தா ரெழுநூற்றுவர் கோடி செம்பொன்
கழைமுற்று தீந்தேன் கரும்பார்வய லைந்து மூதூர்
குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு நாய்க னீந்தான்.

பொருள் : மழை மொக்குகள் அன்ன வரும் மென்முலை மாதர் நல்லார் - மழைநீரின் குமிழிபோல வளரும் மென்முலைகளையுடைய இளம் பெண்கள் ; இழைமுற்றும் அணிந்தார் எழுநூற்றுவர் - எல்லோரும் அணிகலன் அணிந்தவராக எழுநூறு மகளிரும் ; கோடி செம்பொன் - கோடி பொன்னும் ; தீதேன் முற்று கரும்பின் கழை ஆர்வயல் - இனிய தேனையுடைய முற்றிய கருப்பங் கழிகளையுடைய கழனி சூழந்த ; ஐந்து மூதூர் - ஐந்து பழம்பதிகளும் ஆகிய இவற்றை ; குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு - குழை பொருந்திய காதினையுடைய மணிக்கொம்பான குணமாலையை நீர்வார்த்துக் கொடுக்கும்போது ; நாய்கன் ஈந்தான் - குபேரமித்திரன் கொடுத்தான்.
 
விளக்கம் : நல்லார் எழுநூற்றுவரும் இழையணிந்தார் எழுநூற்று வரும் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மழைமொக்குகள் முலைக்குவமை. மாதர் நல்லார் - அழகும் நன்மையும் உடைய மகளிர். வயலையுடைய ஐந்து பழைய ஊரும் என்க. மணிக்கொம்பு : குணமாலை. நாய்கன் - குபேரமித்திரன். ( 214 )

வேறு
 
1065. பண்ணார் கிளவிப் பவழம் புரைசெவ்வாய்க்
கண்ணார் கதிர்மென் முலைக்காம் படுமென்றோள்
விண்ணோ ருலகின் னொடுமிந் நிலத்தில்லாப்
பெண்ணா ரமிர்தே யவன்பெற் றவமிர்தே.

பொருள் : அவன் பெற்ற அமிர்து - சீவகன் அடைந்த அமிர்து; விண்ணோர் உலகின்னொடும் இந்நிலத்து இல்லா - வானவர் உலகினும் இந்த நிலவுலகினும் இல்லாத; பண்ஆர் கிளவி - பண் நிறைந்த மொழியையும்; பவழம் புரை செவ்வாய் - பவளம் அனைய செவ்வாயையும்; கண்ஆர் கதிர்மென்முலை -கண்ணுக்கு நிறைந்த ஒளி பொருந்திய மென்முலையையும் ; காம்பு அடும் மென்தோள் - மூங்கிலை வெல்லும் மெல்லிய தோளையும் உடைய ; பெண்ஆர் அமிர்து - பெண்மை நிறைந்த அமிர்தமாகும்.
 
விளக்கம் : கிளவி - மொழி. புரை : உவமவுருபு. கண்ணார் - கண்ணுக்கு நிறைந்த என்க. காம்பு - மூங்கில். அவன் : சீவகன். (215)

1066. தேதா வெனவண் டொடுதேன் வரிசெய்யப்
போதார் குழலாள் புணர்மென் முலைபாயத்
தாதார் கமழ்தார் மதுவிண் டுதுளிப்ப
வீதா மவரெய் தியவின் பமதே.

பொருள் : தேதா என வண்டொடு தேன்வரி செய்ய - தேதா என்று வண்டும் தேனும் பாட்டிசைப்ப; போது ஆர் குழலாள் புணர் மென்முலை பாய - மலர்க் கூந்தலாளின் இரு மென்முலைகளும் பாய்தலினால்; தாது ஆர் கமழ்தார் மதுவிண்டு துளிப்ப - தாது நிறைந்த மணங்கமழ் (சீவகனுடைய) மாலையில் தேன் விண்டு துளிக்க; ஈது அவர் எய்திய இன்பமது ஆம் - இவர்கள் அடைந்த இன்பம் வானவர் பெற்ற இன்பம் ஆகும்.

விளக்கம் : தேதா - ஆளத்தி யென்னும் இசை. அவர் - தேவர். தேதா : ஒலிக்குறிப்பு. தேன் - வண்டு. வரி - பாட்டு. அவர் என்பதற்கு, குணமாலையும் சீவகனும் ஆகிய அவ்விருவரும் எனினுமாம். ( 216 )

1067. முந்நீர்ப் பவளத் துறைநித் திலமுத்த
மந்நீ ரமிர்தீன் றுகொடுப் பவமர்ந்தான்
மைந்நீர் நெடுங்கண் புருவங் கண்மலங்கப்
பொன்னா ரரிக்கிண் கிணிபூ சலிடவே.

பொருள் : முந்நீர்ப் பவளத்து உறை நித்தில் முத்தம் - கடலிற் பிறந்த பவளத்தில் இருக்கின்ற முத்துப் போன்ற பற்கள்; அந்நீர் அமிர்து ஈன்று கொடுப்ப - அக் கடலிற் பிறந்த அமிர்தத்தைத் தான் பெற்றுத்தர; மைநீர் நெடுங்கண் புருவங்கள் மலங்க - மையின் தன்மை கொண்ட நீண்ட கண்களும் புருவங்களும் பிறழ; பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இட - பொன்னால் ஆன பரலுடைய கிண்கிணிகள் ஒலிக்க; அமர்ந்தான் - புணர்ச்சியைப பொருந்தினான்.
 
விளக்கம் : அயின்றான் என்னும் பாடத்திற்குப் பானமும் புணர்ச்சியும் உடனிகழ்ச்சியாம். முந்நீர் - கடல். நித்திலமுத்தம் என்புழி முத்தம் என்பது உவமை குறியாது வாளா எயிறு என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. நித்திலம்போன்ற எயிறு என்க. அந்நீர் என்னும் சுட்டு முந்நீரைச் சுட்டியது. அமிர்து - அமிர்தம்போன்ற ஊறலை. அமர்ந்தான் என்றது இடக்கரடக்கு. அரி - பரல். ( 217 )

1068. கம்பார் களியா னைகலக் கமலங்கி
யம்பே ரரிவா ணெடுங்கண் புதைத்தஞ்சிக்
கொம்பே குழைவா யெனக்கே குழைந்திட்டாய்
வம்பே யிதுவை யகத்தார் வழக்கன்றே.

பொருள் : கொம்பே! - கொம்பு போன்றவளே!; கம்பார் களியானை கலக்க மலங்கி - தூணிற் பொருந்தும் மதயானை கலக்கியதனாற் கலங்கி ; அம்புஏர் அரிவாள் நெடுங்கண் புதைத்து அஞ்சி - அம்பனைய அழகிய செவ்வரி படர்ந்த ஒளிமிகுங் கண்களை மூடிக்கொண்டு நடுங்கி ; குழைவாய் எனக்கே குழைந்திட்டாய் - வருந்துகின்ற நீ (பொது நோக்கினால் இவன் இறந்துபடுவான் என்று அருள் நோக்கினை அளித்தாய் ஆதலால்) எனக்கே வருந்தினை ; இது வையகத்தார் வழக்கு அன்று, வம்பு - இங்ஙனஞ் செய்தல் உலகத்தார் வழக்கன்று ; புதியதொரு வழக்கமாகும்.
 
விளக்கம் : இவ்வாறு கூறுதல் நயப்பு. தாம் வளைவார் பிறர்க்கு ஊற்றங்கோல் ஆகார் என்பது உலகு வழக்கு. நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி (சீவக. 1024) என்பது பொதுநோக்கு. ( 218 )

1069. பூவார் புனலாட் டினுட்பூ நறுஞ்சுண்ணம்
பாவாய் பணைத்தோட் சுரமஞ் சரிதோற்றாள்
காவா தவள்கண் ணறச்சொல் லியவெஞ்சொ
லேவோ வமிர்தோ வெனக்கின் றிதுசொல்லாய்.

பொருள் : பாவாய் - பாவையே!; பூஆர் புனல் ஆட்டினுள் - மலரையுடைய நீர் விளையாட்டில்; பணைத்தோள் சுரமஞ்சரி - பெருந்தோளையுடைய சுரமஞ்சரி; பூநறுஞ் சுண்ணம் தோற்றாள் - அழகிய நல்ல சுண்ணத்திலே தோல்வியடைந்து ; காவாது அவள் கணஅறச் செர்ல்லிய வெஞ்சொல் - வாய் காவாமல் அவள் கண்ணோட்டமின்றிக் கூறிய கொடுஞ்சொல்; இன்று எனக்கு ஏவோ அமிர்தோ சொல்லாய் - இன்று எனக்குத் துன்பமாயிற்றோ? இன்பமாயிற்றோ ? கூறுவாய்.

விளக்கம் : காவாத சொல், கூறு இவையோ? (சீவக. 876) என்று சுரமஞ்சரி கூறியது. அதனால், அவள், சுண்ணம் தோற்றனம் தீம்புனல் ஆடலம் (சீவக. 878) என்று கூறவே, வென்றவர் புனலாட வேண்டுதலின், இவள் புனலாட்டயர்ந்து வருகின்ற நேரத்துத் தான் களிற்றிடையுதவி எதிர்ப்பட்டதனால் இவ்வின்பம் பெறுதலின். தான், கண்ணின் கண்டிவை நல்ல (1884) என்றும், சால நல்லன (சீவக. 893) என்றும் , உய்த்துரைமின் (சீவக. 895) என்றுங் கூறுதலின், வாய்காவாது கூறிற்றென்பது பொருந்தாது. ஓவா அமிர்து என்றும் பாடம். ( 219 )

1070. நற்றோ ளவள்சுண் ணநலஞ் சொலுவா
னுற்றீர் மறந்தீர் மனத்துள் ளுறைகின்றாள்
செற்றா லரிதாற் சென்மின்போ மின்றீண்டா
தெற்றே யறியாத வொரேழை யேனோயான்.

பொருள் : நல் தோளவன் சுண்ண நலம் சொலுவான் உற்றீர் - (நும்முடைய) அழகிய தோளினளின் சுண்ணத்திற்கே நன்மை கூறக் கருதினீர் ; மறந்தீர் - என் நல்வினையாலே அதனை மறந்தீர் ; மனத்துள் உறைகின்றாள் - அவள் உம்முடைய உள்ளத்திலே வாழ்கின்றாளாதலின்; செற்றால் அரிது - அவள் சினந்தாற் சினந்தீர்த்தல் அரிது; சென்மின் ! தீண்டாது போமின் ! - இவ்விடத்தினின்றும் இனிச் செல்லுமின்! என்னையருளித் தீண்டாதே போமின் ; எற்றே ! - என்னே !; யான் அறியாத ஓர் ஏழையேனோ? - யான் நுமக்கு வரும் துன்பத்திற்கு வருந்தாத அறிவிலியோ?

விளக்கம் : சென்மின் எனத் தீண்டுதலின், தீண்டாதே போமின் என்றாள். பணைத்தோள் சுரமஞ்சரி என்றதனாலும், தோற்றாள் என்பதனாலும் ஊடல் நேர்ந்தது. சீவகன் சுரமஞ்சரி தோற்றாள் என்றதுபற்றி அவள் நும் மனத்துள்ளுறைகின்றார் சென்மின் போமின் என்னும் இவ்வூடல் மிகவும் நுண்ணிதாதல் உணர்க. ( 220 )

1071. தூமஞ் கமழ்பூந் துகில்சேரா வசையாத்
தாமம் பரிந்தாடு தண்சாந்தந் திமிர்ந்திட்
டேமன் சிலைவா ணுத லேற நெருக்காக்
காமன் கணையேர் கண்சிவந்து புலந்தாள்.

பொருள் : தூமம் கமழ் பூந்துகில் சேரா அசையா - அகிற் புகை கமழும் அழகிய ஆடையை இறுக உடுத்து ; தாமம் பரிந்து - மாலையை அறுத்து ; ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு - பூசிய குளிர்ந்த சந்தனத்தை உதிர்த்து ; ஏமன் சிலை வாள்நுதல் ஏற நெருக்கா - அம்பிசைந்த வில்லனைய ஒளி பொருந்திய புருவத்தை நெற்றியில் ஏந நெருக்கி; காமன் கணைஏர் கண் சிவந்து புலந்தாள் - காமன் கணையனைய அழகிய கண்கள் சிவக்க ஊடினாள்.
 
விளக்கம் : தூமம் - நறுமணப்புகை. தாமம் - மாலை. பரிதல் - அறுத்தல். ஏ - அம்பு. சிலை - வில். காமன்கணை என்றது புருவத்தை. ( 221 )

1072. மின்னே ரிடையா ளடிவீழ்ந் துமிரந்துஞ்
சொன்னீ ரவளற் பழலுட் சொரிந்தாற்ற
விந்நீ ரனகண் புடைவிட் டகன்றின்ப
மன்னார்ந் துமதர்ப் பொடுநோக் கினண்மாதோ.

பொருள் : மின்நேர் இடையாள் அடிவீழ்ந்தும் இரந்தும் - (அவள் புலத்தல் கண்ட சீவகன்) மின் னொக்கும் சிற்றிடையாளின் அடியிலே வீழ்ந்தும் வேண்டியும்; சொல்நீர் அவள் அனபு அழலுள் சொரிந்து ஆற்ற - சொல்லாகிய நீரை அவளுடைய அன்பாகிய தீயிலே பெய்து அவித்தானாக; இந்நீரன கண்புடை விட்டு அகன்று - இத் தன்மையவற்றைக் கண்களிலிருந்து நீக்கிவிட்டு; இன்பம் மன்ஆர்ந்து மதர்ப்பொடு கண்புடை நோக்கினள் - இன்பம் மனத்தே மிக நிறைதலின் களிப்பொடு கடைக்கணித்துப் பார்த்தாள்.
 
விளக்கம் : மாது, ஓ: அசைகள். கண்புடை என்பதைப் பின்னருங் கூட்டுக; கண்களே நோய் நோக்கும் மருந்துமாய் நிற்றலின். இந்நீரன விட்டு. . . . .மதர்ப்பொடு கண்புடை நோக்கினள் என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர். அன்பு காரணமாகப் பிறத்தலானும் கணவனுக்குத் துன்பமாயிருத்தலானும் ஊடலை அன்பழல் என்றார். அதனை அவித்தலாற் பணி மொழியை நீர் என்றார். ( 222 )

1073. இன்னீ ரெரிமா மணிப்பூண் கிடந்தீன்ற
மின்னா ரிளமென் முலைவேய் மருண்மென்றோட்
பொன்னார் கொடியே புகழிற் புகழ்ஞால
நின்வா ணெடுங்கண் விலையா குநிகர்த்தே.

பொருள் : இன்நீர் எரிமா மணிப்பூண் கிடந்து ஈன்ற - இனிய பண்புடைய, ஒளிவிடும் மணிக்கலன் கிடந்து உண்டாக்கின; மின் ஆர் இளமென்முலை - ஒளியார்ந்த இளமையான மென்முலையையும்; வேய்மருள் மென்தோள் - மூங்கிலை மயக்கும் மென்மையான தோளினையும் உடைய ; பொன்ஆர் கொடியே !- பொற்கொடியே!; புகழின் - யான் புகழ நினைத்தால் ; புகழ் ஞாலம் நின்வாள் நெடுங்கண் நிகர்த்தே விலை ஆகும்? - புகழ் பெற்ற உலகம் உன்னுடைய வாட்கண்களுக்கு ஒப்பாகுமோ? ஆகாது. ஆதலால் புகழ்தலும் அரிது.
 
விளக்கம் : நிகர்த்தே : ஏ : எதிர்மறை. இன் நீர் எரி மாமணி - காட்சிக்கினிய நீர்மையையுடைய ஒளி சிறந்த மணி என்க. மின் - ஒளி. வேய் - மூங்கில். நிகர்த்தே என்பதிலுள்ள ஏகாரத்தை ஆகுமே எனக் கூட்டி ஆகாது என எதிர்மறைப் பொருள் கொள்க. (223)

1074. தோளாற் றழுவித் துவர்த்தொண் டையஞ்செவ்வாய்
மீளா மணிமே கலைமின் னின்மிளிர
வாளார் மணிப்பூ ணவன்மாதரம் பாவைதன்னை
நாளாற் பெற்றநல் லமிர்தென்ன நயந்தான்.

பொருள் : வாள்ஆர் மணிப்பூணவன் மாதர் அம் பாவை தன்னை - ஒளி பொருந்திய மணிக்கலனணிந்தவன் விருப்பூட்டும் அழகிய பாவையாளை; தோளால் தழுவி - தோள்களால் தழுவி ; மீளா மணிமேகலை மின்னின் மிளிர - நீங்காத மணிமேகலை மின்னென ஒளிவிட; துவர்த் தொண்டை அம் செய்வாய் - சிவந்த கொவ்வைக் கனியனைய இதழை ; நாளாற் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான் - நாட் காலத்திலே பெற்ற இனிய அமிர்தம் என்ன நுகர்ந்தான்.
 
விளக்கம் : மீளா என்பதனை அமிர்துக்கு அடையாக்கி, மீளா அமிர்து - கருடன் வாங்கிவராத அமிர்து என்பர் நச்சினார்க்கினியர். நயத்தல் - பருகுதல் மேற்று. ( 224 )

வேறு
 
1075. சித்திர மணிக்குழை திளைக்கும் வாண்முகத்
தொத்தொளிர் பவளவா யோவக் கைவினைத்
தத்தரி நெடுங்கணா டன்னொ டாடுநாள்
வித்தகற் குற்றது விளம்பு கின்றதே.

பொருள் : சித்திர மணிக்குழை திளைக்கும் வாள் முகத்து - அழகிய மணிக்குழை பயிலும் ஒளியுறு முகத்தினையும்; பவளம் ஒத்து ஒளிர்வாய் - பவளத்தை யொத்து விளங்கும் வாயினையும்; ஓவக் கைவினை - ஓவியம் அனைய ஒப்பனையையும் உடைய; தத்து அரி நெடுங்கணாள் தன்னொடு - காதொடு மோதும் செவ்வரி பரவிய நீண்ட கண்ணாளான குணமாலையுடன்; ஆடும்நாள் - இங்ஙனம் கூடியாடும் நாளிலே; வித்தகற்கு உற்றது விளம்புகின்றது - திறமுடைய சீவகனுக்கு நேர்ந்த தீவினை இனி உரைக்கப்புகுவது.

விளக்கம் : ஓவக் கைவினை என்பதற்கு ஓகை வீணை என்பதும் பாடம். மணிக்குழை - ஒன்பது வகை மணிகளைப் பதித்துப் பொன்னாற் செய்யப்பட்ட காதணி. இரு செவிகளினும் புனைந்த காதணிகளின் ஒளி திளைத்தலால் விளங்கும் முகம் என்பார், குழைதிளைக்கும் வரள் முகம் என்றார். ஓவக் கைவினை - ஓவியம்போன்ற தொழிற்சிறப்பு. வித்தகன் : சீவகன். இனி யாம் விளம்புகின்றது வித்தகற்குற்றது என்க. ( 225 )

வேறு
 
1076. அரும்பெறற் குருசிற் கஞ்ஞான்
றோடிய நாக நாணிக்
கரும்பெறி கடிகை யோடு
நெய்ம்மலி கவளங் கொள்ளா
திரும்புசெய் குழவித் திங்கண்
மருப்பிடைத் தடக்கை நாற்றிச்
சுரும்பொடு வண்டு பாடச்
சுளிவொடு நின்ற தன்றே.

பொருள் : அஞ்ஞான்று அரும்பெறல் குருசிற்கு ஓடிய நாகம் - நீர் விளையாட்டின்போது, பெறுதற்கரிய சீவகனுக்குத் தோற்ற யானை ; நாணி - வெட்கமுற்று; கரும்பு எறி கடிகையோடு நெய்ம்மலி கவளம் கொள்ளாது - கருப்பந் துண்டங்களையும் நெய் நிறைந்த கவளத்தினையும் கொள்ளாமல்; இரும்புசெய் குழவித் திங்கள் - கிம்புரியிட்ட பிறைத்திங்கள் போன்ற ; மருப்பிடைத் தடக்கை நாற்றி - கொம்பிலே துதிக்கையை வளைத்துத் தொங்கவிட்டு ; சுரும்பொடு வண்டு பாட - மதம் மிகுதலின் உண்ண முடியாமல் சுரும்பும் வண்டும் பாட ; சுளிவொடு நின்றது - சினத்தொடு நின்றது.
 
விளக்கம் : குருசில் - ஈண்டுச் சீவகன். அஞ்ஞான்று என்பது பண்டறிசுட்டு. நாகம் - யானை ; அசனிவேகம். கடிகை - துண்டம். குழவித்திங்கள் பிறை ; இது மருப்பிற்குவமை. சுளிவு - சினம் ( 226 )

1077. பகைபுறங் கொடுத்த வேந்திற்
பரிவொடு பகடு நிற்பத்
தகைநிறக் குழைக டாழ்ந்து
சாந்தின்வாய் நக்கி மின்னப்
புகைநிறத் துகிலிற் பொன்னாண்
டுயல்வரப் போந்து வேந்தன்
மிகைநிறக் களிற்றை நோக்கி
வேழமென் னுற்ற தென்றான்.

பொருள் : பகைபுறம் கொடுத்த வேந்தின் - பகைவனுக்கு முதுகு கொடுத்த வேந்தனைப்போல; பகடு பரிவொடு நிற்ப - யானை வருத்தத்துடன் நிற்றலின்; தகைநிறக் குழைகள் தாழ்ந்து சாந்தின்வாய் நக்கி மின்ன - நன்னிறக் குழைகள் தாழ்ந்து தோளில் அணிந்த சந்தனத்தைத் தடவி ஒளிவிட ; புகைநிறத் துகிலில் பொன்நாண் துயல்வர வேந்தன் போந்து -புகையனைய நிறமுடைய ஆடையிற் பொன் அரைநாண் அசைய அரசன் வந்து; மிகைநிறக் களிற்றை நோக்கி - உயர் நிறமுடைய யானையைப் பார்த்து; வேழம் என் உற்றது என்றான் - யானை அடைந்த வருத்தம் என்னென்று பாகனை வினவினான்.

விளக்கம் : நச்சினார்க்கினியர் தாழ்ந்து என்பதனைக், களிற்றைத் தாழ்ந்து நோக்கி எனப் பின்னே கூட்டுவர். அவ்வாறு கூட்டுதலிற் போதப் பயனுண் டெனிற் கொள்க. வேந்தன் களிறுற்ற வருத்த நிலையைக் கேட்டு வந்து நோக்கினான் என்று கொள்க. ( 227 )

1078. கொற்றவன் குறிப்பு நோக்கிக்
குஞ்சரப் பாகன் கூறு
மிற்றென வுரைத்த றேற்றே
னிறைவநின் னருளி னாங்கொல்
செற்றமிக் குடைமை யாற்கொல்
சீவக னின்ன நாளான்
மற்றிதற் குடற்சி செய்ய
மதுமிது செறித்த தென்றான்.

பொருள் : கொற்றவன் குறிப்பு நோக்கி - அரசன் மனக் கருத்தை உணர்ந்து; குஞ்சரப் பாகன் கூறும் - யானைப் பாகன் சொல்வான் ; இறைவ! - அரசே!; நின் அருளின் ஆம்கொல் - நின் உடன்பாட்டினாலோ; செற்றம் மிக்கு உடைமையால் கொல் - இதனிடத்துச் சீவகன் கொண்ட சீற்றமிகுதியாலோ ; சீவகன் இன்ன நாளால் - சீவகன் நீர்விளையாட்டன்று; இதற்கு உடற்சி செய்ய - இதற்குச் சினம் மிக உண்டாக்க ; இது மதம் செறித்தது - இது மதத்தை அடக்கியது ; இற்று என உணர்தல் தேற்றேன் - இதனைத் தவிர யான் வேறு இத்தன்மையது என விளங்கத் தெளிகிலேன் ; என்றான் - என்றுரைத்தான்.
 
விளக்கம் : குறிப்பு நோக்கி யென்றார், சீவகனைக் குறை கூறலாகாதெனக் கருதினும், அரசன் சினமுணர்ந்து அரசன் நினைவு மகிழக் கூறுதலின். மற்று ; வினைமாற்று. ( 228 )

1079. ஈண்டழற் குட்டம் போல
வெரியெழத் திருகி நோககிக்
கோண்டரு குறும்பர் வெம்போர்
கோக்குழர்ம் வென்ற துள்ளி
மாண்டதில் செய்கை சூழ்ந்த
வாணிகன் மகனை வல்லே
யாண்டிறங் களைவெ னோடிப்
பற்றுபு தம்மி னென்றான்.

பொருள் : ஈண்டு அழல் குட்டம்போல - (அதுகேட்ட அரசன்) செறிந்த நெருப்புக் குண்டம்போல ; எரி எழத் திருகி நோக்கி - அனல் எழச் சினந்து நோக்கி ; கோண்தரு குறும்பர் வெம்போர் - மாறுபடும் வேடருடன் செய்த கொடுஞ் சமரையும்; கோககுழாம் வென்றது - அரசர் கூட்டத்தை வென்றதையும்; உள்ளி - நினைத்து; மாண்டது இல் செய்கை செய்த - தகுதியற்றதாகிய செயலை (என்னுடன் மாறுபடுதலை)ச் செய்த ; வாணிகன் மகனை - செட்டி மகனை; வல்லே ஆண்திறம் களை வென் - இப்பொழுதே ஆண்மைச் செருக்கை ஒழிப்பேன் ; ஓடிப் பற்றுபு தம்மின் என்றான் - ஓடிக் கைக்கொண்டு தாரும் என்றான்.
 
விளக்கம் : பின்னர்த் தாம் கருதிய பொருளை நிறுவ நினைத்த நச்சினார்க்கினியர் ஈண்டு, அர்சன் ஏவல் செய்ய வேண்டுதலின்,  பற்றுபு தம்மின் என்று கூறவே, அவர் கட்டினாரென்றல் பொருந்தாமை உணர்க என்கின்றனர். ( 229 )

1080. கன்றிய வெகுளி வேந்தன்
கால்வலி யிளையர் காய்ந்து
கொன்றுயிர் கொணர வோடுங்
கொழுங்குடர்க் கண்ணி மாலை
யொன்றிய வுதிரச் செச்சை
யொண்ணிண மீக்கொ டானைத்
தென்றிசைக் கிறைவன் றூதிற்
செம்மலைச் சென்று சேர்ந்தார்.

பொருள் : கன்றிய வெகுளி வேந்தன் - தழும்பேறிய சீற்றங்கொண்ட மன்னனுடைய ; கால்வலி இளையர் காய்ந்து - நடை வல்ல ஏவலர் சினந்து ; கொன்று உயிர்கொணர ஓடும் - கொன்று உயிரைக் கொண்டுவர ஓடுகின்ற; கொழுங்குடர்க் கண்ணிமாலை - கொழுவிய குடரைக் கண்ணியாகவும் மாலையாகவும் கொண்டு; ஒன்றிய உதிரச் செச்சை - பொருந்திய குருதியைச் சட்டையாக அணிந்து ; ஒள் நிணம் மீக்கொள் தானை - ஒள்ளிய நிணத்தை மேலே ஆடையாகக் கொண்ட; தென் திசைக்கு இறைவன் தூதின் - கூற்றுவனுடைய தூதரைப் போல; சென்று செம்மலைச் சேர்ந்தார் - போய்ச் சீவகனிருப்பிடத்தை அடைந்து சூழ்ந்தனர்.
 
விளக்கம் : கன்றுதல் - முதிர்தல்; காழ்ப்பேறுதல், கால் - காற்றுமாம். தென்றிசைக் கிறைவன்: கூற்றுவன். செம்மல் - சீவகன். கட்டியங்காரனைக் கூற்றுவனாகவும் ஏவலர்களை உயிர்கொண்டு ஓடும் கூற்றுவன் தூதராகவும் சீவகனை உயிராகவும் கொள்க. ( 230 )

1081. சண்பக மாலை வேய்ந்து
சந்தனம் பளிதந் தீற்றி
விண்புக நாறு சாந்தின்
விழுமுலைக் காம வல்லி
கொண்டெழுந் துருவு காட்டி
முகத்திடைக் குளித்துத் தோண்மேல்
வண்டளி ரீன்று சுட்டி
வாணுதல் பூப்ப வைத்தான்.

பொருள் : சண்பக மாலை வேய்ந்து - சண்பக மாலையைச் சூட்டி ; சந்தனம் பளிதம் தீற்றி விண்புக நாறு சாந்தின் - சந்தனத்தையும் பச்சைக் கருப்பூரத்தையும் கலந்து வானளாவ மணக்கும் சந்தனக் குழம்பினாலே; காமவல்லி விழுமுலைக் கொண்டு எழுந்து - காமவல்லியானது சிறந்த முலையை அடியாகத் தொடங்கி எழுந்து; உருவு காட்டி - தனது உருவத்தைக் காட்டி; தோண்மேல் வண்தளிர் ஈன்று - தோளின்மேல் வளவிய தளிரை நல்கி ; முகத்திடைக் குளித்து - முகத்திலே மறைந்து போய் ; வாள்நுதல் சுட்டி பூ வைத்தான் - ஒள்ளிய நெற்றீயிலே சுட்டியாக மலருமாறு எழுதினான்.

விளக்கம் : பளிதம் - பச்சைக் கருப்பூரம். தீற்றுதல் - பூசுதல். விழுமுலை - சிறந்த முலை. காமவல்லி - கற்பக மரத்திற் படருமொரு பொன்னிறப் பூங்கொடி. அக்கொடியின் உருவத்தைச் சீவகன் குணமாலை முலைமேல் எழுதினன் என்க. ( 231 )

1082. பண்ணடி வீழுந் தீஞ்சொற்
பாவைநின் வனப்பிற் கெல்லாங்
கண்ணடி கருங்க ணென்னு
மம்பறாத் தூணி தன்னாற்
புண்ணுடை மாம்பத் தோவா
தெய்தியா லெங்குப் பெற்றாய்
பெண்ணுடைப் பேதை யென்றோர்
நாண்முற்றும் பிதற்றி னானே.

பொருள் : பண்அடி வீழும் தீசொல் பாவை - பண் தோற்று அடியிலே வணங்கும் இனிய மொழிகளையுடைய பாவையே !; வனப்பிற்கு எல்லாம் கண்ணடி - அழகிற்கெல்லாம் கண்ணாடி போன்றவளே!; நின் கருங்கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால் - நின் கரிய கண்களாகிய அம்பறாத்தூணியில் நோக்கமாகிய அம்பினால் ; புண்உடை மார்பத்து ஓவாது எய்தி - (பழைய) புண்ணுடைய மார்பிலே ஓயாமல் எய்கின்றனை; எங்குப் பெற்றாய் - இத்தகைய அம்பறாத்தூணியை எங்குப் பெற்றனை ; பெண் உடைப் பேதை ! - பெண்மையுடைய பேதையே !; என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினான் - என்று ஒருநாளெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்தான்.
 
விளக்கம் : கண்ணாடி என்பது கண்ணடி என விகாரப்பட்டது. எல்லார்க்கும் அழகு இத்தன்மைத்தென்று உணர்த்துதலின் கண்ணாடி உவமை ஆயிற்று. மார்பத்துழை என அத்திற்குப் பின் ஓர் ஏழனுருபு விரிக்கவே அஃது இடப்பொருளுணர்த்தி, அவற்குச் சேர்ந்த நெஞ்சினை உணர்த்தும்; அரசனுழை யிருந்தான் போல. பிதற்றினானென்றது மயக்கத்தால். ( 232 )

1083. திங்கள்சேர் முடியி னானுஞ்
செல்வியும் போன்று செம்பொ
னிங்குவார் கழலி னானுங்
கோதையு மிருந்த போழ்திற்
சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த
சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தா
ரங்கது கண்ட தாதி
யையனுக் கின்ன தென்றாள்.

பொருள் : திங்கள்சேர் முடியினானும் செல்வியும் போன்று - பிறை முடியணிந்த பெருமானும் உமையம்மையும் போல; செம்போன் இங்கு வார்கழலினானும் கோதையும் - செம்பொன் தங்கிய வாரில் தங்கிய கழலினானும் குணமாலையும்; இருந்த போழ்தில் - அமர்ந்திருந்த காலத்தில்; சிங்க ஏறு எள்ளிச் சூழ்ந்த - சிங்க ஏற்றினை இகழ்ந்து அதன் குகையிலே சூழ்ந்த; சிறுநரிக் குழாத்தின் சூழ்ந்தார் - குள்ளநரிக் கூட்டம்போல மனையை வந்த வீரர்கள் சூழ்ந்தனர் ; அங்கு அது கண்ட தாதி - அங்கே அதனைக் கண்ட சேடி ; ஐயனுக்கு இன்னது என்றாள் - சீவகனுக்கு இங்ஙனம் சூழ்ந்தார் என்றனள்.
 
விளக்கம் : திங்கள் சேர்முடியினான் : சிவபெருமான். செல்வி : இறைவி. அன்பினால் இரண்டறக் கலந்திருந்ததற்குச் சிவபெருமானும் இறைவியும் உவமை என்க. சிங்கவேறு - ஆண் சிங்கம்; இது சீவகற் குவமை. சிறு நரிக்குழாம் - கட்டியங்காரன் ஏவிய படைஞர் குழாத்திற்குவமை. தாதி - பணிமகள். ( 233 )

1084. என்றவ ளுரைப்பக் கேட்டே
யிடிபட முழங்கிச் செந்தீ
நின்றெரி வதனை யொத்து
நிண்முழைச் சிங்க வேறு
தன்றுணைப் பெட்டை யோடு
தான்புறப் பட்ட தொத்தான்
குன்றிரண் டிருந்த போலுங்
குங்குமக் குவவுத் தோளான்.

பொருள் : என்று அவள் உரைப்பக் கேட்டு - இவ்வாறு சேடி செப்பக் கேட்டு; குன்று இரண்டு இருந்த போலும் குங்குமக் குவவுத் தோளான் - மலைகள் இரண்டு இருந்தன போன்று, குங்குமம் அணிந்த திரண்ட தோளையுடைய சீவகன்; இடிபட முழங்கி - வெடித்தல் உண்டாக முழங்கி ; செந்தீ நின்று எரிவதனை ஒத்து - சிவந்த தீ நிலையாக எரிவதைப்போல ; நீள் முழை சிங்க ஏறு - பெருங்குகையிலிருந்த ஆண் சிங்கம் ; தன் துணைப் பெட்டையோடு - தன் துணையான பெண் சிங்கத்துடன்; தான் புறப்பட்டது ஒத்தான் - அது வெளிப்பட்டதைப் போல மண அறையினின்றும் குணமாலையுடன் வெளிப்பட்டான்.
 
விளக்கம் : பெட்டை யென்பதற்கு எழுந்து விண்படரும் (சீவக. 752) என்னும் செய்யுளிலே கூறப்பட்டது. இங்கும் நச்சினார்க்கினியர் பின்னர்த் தம்கோள் நிறுவ, இவ்விரண்டு கவியிலும் சீவகற்குச் சிங்க வேறு உவமையும், பகைவர்க்கு நரியுவமையுமாகக் கூறலின், அவராற் கட்டலாகாமையுணர்க என்றனர். ( 234 )

1085. பொன்னரி மாலை தாழப்
போதணி கூந்த லேந்திப்
பன்னரு மாலை யாற்குப்
பட்டதை யெவன்கொ லென்னாப்
பின்னரு மாலை யோராள்
பெருநடுக் குற்று நின்றாண்
மன்னரு மாலை நாக
மழையிடிப் புண்ட தொத்தாள்.

பொருள் : மாலை, பொன் அரிமாலை தாழப்போது அணி கூந்தல் ஏந்தி - குணமாலை, பொன்னரி மாலை தாழுமாறு, மலர்க் கூந்தலைக் கையில் ஏந்தி; பின்னரும் ஓராள் - (முன்னர் யானையை அடக்கியபோது இவன் வலிமை அறிந்திருந்தும்) மறுமுறையும் அறியாதவளாய்; பன்னஅரு மாலையாற்குப் பட்டது எவன்கோல் என்னா - புகழ்தற்கரிய இயல்பினையுடையானுக்குப் பிறந்த துன்பந்தான் யாதோ என்று எண்ணி; பெருநடுக்கு உற்று நின்றாள் - மிகுதியும் நடுங்கி நின்றவள்; மன்அரு மாலை நாகம் மழை இடிப்புண்டது ஒத்தாள் - (மக்கள் திரளில்) நிலைபெறற் கரிய இயல்புறும் பாம்பு இடியால் தாக்குண்டது போல ஆனாள்.

விளக்கம் : பொன்னரிமாலை - ஒரு கூந்தலணி. மாலையான் : சீவகன் ; இயல்பினையுடையானாகிய சீவகன் என்னும் பொருட்டு. மாலை : குணமாலை. மாலை - இயல்பு. நாகம் - பாம்பு. ( 235 )

1086. கடுகிய விளையர் நோக்குங்
கண்ணிய பொருளு மெண்ணி
யடுசிலை யழல வேந்தி
யாருயிர் பருகற் கொத்த
விடுகணை தெரிந்து தானை
வீக்கற விசித்து வெய்தாத்
தொடுகழ னரல வீக்கிச்
சொல்லுமின் வந்த தென்றான்.

பொருள் : கடுகிய இளையர் நோக்கும் - அரசன் ஆணையிற் கடுகி வந்த ஏவலர் நோக்கையும்; கண்ணிய பொருளும் எண்ணி - அரசன் யானையைக் கண்டு ஆண்திறம் களையக் கருதியதையும் ஒருவாறு சிந்தித்துணர்ந்து; தானை வீக்கற விசித்து - ஆடையை இனி இறுகாதென்னுமாறு இறுக்கி ; வெய்துஆ தொடுகழல் நரல வீக்கி - விரைவாகக் கழலை ஒலிக்கக் கட்டி ; அழல அடுசிலை ஏந்தி - வெம்மையாக அடுதற்குரிய வில்லை ஏந்தி; ஆருயிர் பருகற்கு ஒத்த விடுகணை தெரிந்து - உயிரைப் பருகற்குத் தக்க அம்புகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டு; வந்தது சொல்லுமின் என்றான் - வந்ததைக் கூறுங்கள் என்றான்.
 
விளக்கம் : தானை - ஆடை, விசித்து - கட்டி. வெய்தாக என்பது ஈறுகெட்டது. நரலுதல் - ஒலித்தல். வந்தது - நீயிர் வருதற்குற்ற காரணம். ( 236 )

1087. அடிநிழற் றருக வென்றெம்
மாணைவேந் தருளிச் செய்தான்
வடிமலர்த் தாரி னாய்நீ
வருகென வானி னுச்சி
யிடியுரு மேற்றிற் சீறி
யிருநிலஞ் சுடுதற் கொத்த
கடிமதின் மூன்று மெய்த
கடவுளிற் கனன்று சொன்னான்.

பொருள் : வடிமலர்த் தாரினாய்! - தெரிந்தெடுத்த மலர் மாலையாய்!; எம் ஆணை வேந்து அடிநிழல் தருக என்று அருளிச் செய்தான் - எமக்குப் பணியிடும் வேந்தன் தன் அடிநிழலிலே கொண்டு வருக என்று அருள் செய்தான் ; நீ வருக என - நீ வந்தருள்க என்று ஏவலர் கூற ; வானின் உச்சி இடி உரும் ஏற்றின் சீறி - வான்மீதிருந்து இடிக்கும் இடியேற்றைப்போல முழங்கி ; இருநிலம் சுடுதற்கு ஒத்த கடிமதில் மூன்றும் எய்த கடவுளின் - பெருநிலத்தைப் பறந்து திரிந்து சுடுதற்குப் பொருந்தின காவலுறு மும்மதில்களையும் வீழ்த்திய சிவபெருமானைப் போல ; கனன்று சொன்னான் - வெகுண்டுரைத்தான்.
 
விளக்கம் : வடிமலர்த்தாரினாய் எனவும் வருக எனவும் கூறியவற்றை நச்சினார்க்கினியர்தம் பிற்கூற்றுக்கு அரணாக்கக், கட்டவந்தவ ரன்மை உணர்க என்றார். ( 237 )

1088. வாளிழுக் குற்ற கண்ணாள்
வருமுலை நயந்து வேந்தன்
கோளிழுக் குற்ற பின்றைக்
வருகென வானி னுச்சி
னாளிழுக் குற்று வீழ்வ
தின்றுகொ னந்த திண்டேர்
தோளிழுக் குற்ற மொய்ம்ப
பண்ணெனச் சொல்லி னானே.

பொருள் : வாள் இழுக்கு உற்ற கண்ணாள் வருமுலை நயந்து - வாளை வென்ற கண்ணாள் விசயையின் இன்பத்தை விரும்பி ; வேந்தன் கோள் இழுக்கு உற்ற பின்றை - சச்சந்த மன்னன் தன் கொள்கையிற் பிழைத்த பிறகு; கோத்தொழில் நடாத்துகின்றான் - அரசுரிமை எய்தி ஆள்கின்ற கட்டியங்காரனின் ; நாள் இழுக்குற்று வீழ்வது இன்றுகொல் - வாழ்நாள் வழுவி வீழ்வது இன்றுபோலும் ; நந்த! தோள் இழுக்குற்ற மொய்ம்ப! - நந்தட்டனே! பிறர் தோள்கள் பின்னுறும் வலிமையனே!; திண்தேர் பண் எனச் சொல்லினான் - திண்ணிய தேரைப் புனைக என்றுரைத்தான்.
 
விளக்கம் : தோள் இழுக்குற்ற என்பதற்குக், கட்டியங்காரனின் தோள்கள் இழுக்குற்றன என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும் அவர், வாளிழுக்குற்ற கண்ணாள் அனங்கமாலை எனக் கொண்டு அனங்கமாலையையும் விரும்பி என்னையொழியத்தர்னே அரசன் தொழிலை நடத்தி வருகின்றான். என்று கட்டியங்காரன் சீவகனைக் கூறியதாகவும் உரைப்பர். எனினும், மேற்கூறிய பொருளையும் ஒப்புவர் ( 238 )

1089. வேந்தொடு மாறு கோடல்
விளிகுற்றார் தொழில தாகுங்
காய்ந்திடு வெகுளி நீக்கிக்
கைகட்டி யிவனை யுய்த்தா
லாய்ந்தடு மழற்சி நீங்கு
மதுபொரு ளென்று நல்ல
சாந்துடை மார்பன் றாதை
தன்மனத் திழைக்கின் றானே.

பொருள் : வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலது ஆகும் - அரசனொடு மாறுபடுதல் கெடுதலடைந்தார் தொழிலாகும், (ஆகையால்) ; காய்ந்திடு வெகுளி இவனை நீக்கிக் கைகட்டி உய்த்தால் - காயும் வெகுளியை இவனிடமிருந்து நீக்கிக் கையைப் போர்த்தொழில் செய்யாதவாறு கட்டி இவர்களுடன் போகவிட்டால்; ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் - இவன் செய்தவற்றை ஆராய்ந்து, இவனை வருத்தும் வெகுளியை அரசன் நீங்குவான் ; அது பொருள் என்று - அதுவே செய்யத் தக்கது என்று ; நல்ல சாந்து உடை மார்பன் தாதை - நல்ல சந்தனம் அணிந்த மார்பனுக்குத் தந்தை; தன் மனத்து இழைக்கின்றான் - (சீவகன் போர்க்கோலத்தையும் நந்தட்டன் தேர்கொண்டுவரச் சென்றதையும் கண்டு) தன் உள்ளத்தே நினைக்கின்றான்.

விளக்கம் : கைகட்டி என்பதற்கு கையைத் தொடராற் பிணித்து என்று பொருள் கொள்ளலாகாது என்றும், தடைசெய்து என்றே பொருள் கொள்ளவேண்டும் என்றும் நச்சினார்க்கினியர் கருதுகிறார். அதற்கேற்பவே முன்னர்ப் பலவிடங்களிலும் (சீவக. 1079, 1084, 1087) தம் கருத்துக்கு அரண் செய்து வந்துளார்.

ஈண்டு அவர் கூறும் விளக்கம் :

கைகட்டுதலைப், பாம்பை வாயைக் கட்டிற்று என்றாற்போலக் கொள்க. துறவின் கண்ணே சீவகன் அறங்கேட்ட பின்னர், தொல்லையெம் பிறவியும் தொகுத்த பாவமும் - வல்லையே பணிமினம் அடிகள் என்று (சீவக. 2849) சாரணரைக் கேட்க, அவரும் பாவங் கூறுகின்றவர், தாமரைத் தடமுறை வீர்க்கிவை தடங்கள் அல்லவே வடமுலை யெனநடாய் வருடிப் பாலமு - துடனுறீஇ ஓம்பினார் (சீவக. 2863) என்று, முலைமேலே வளர்த்தார்கள் என்று கூறிப், பவணமா தேவன் தன் மகன் அசோதரனை நோக்கிக் கூறுகின்றானாகத் தாம் கூறுகின்ற காலத்தும், கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல் (சீவக. 2897) என்றும், பூவை கிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா - யாவை அவை தம் கிளையின் நீங்கியழ வாங்கிக் - காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கிப் - போவர் (சீவக. 2875) என்றும் காவல் செய்து வைத்தார் என்றும் கூறினமையானும், மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறை வைத்ததனாற் - பொன்னார மார்ப! சிறைப்பட்டனை போலும (சீவக. 2860) என்று தாம் கூறினமையானும் சாரணர் பாவங் கூறுகின்ற இடத்து, அன்னப் பார்ப்பைக் கட்டினார் என்று கூறாமையின், ஈண்டுக் கட்டுண்ண வேண்டும் பாவம் ஆண்டின்மை உணர்க. இச் சமயத்தார் பிறரும். சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா (நாலடி. 110) என்றதனாலும் உணர்க. அன்றியும் தசகுமார சரிதத்துள் அன்னப் பார்ப்பை நூலிட்டுக் காலைக் கட்டின பாவத்தாற் பின்பு, வெள்ளி விலங்கு காலிற் கிடந்தது என்று ஆசாரியதண்டி கூறிய வாற்றானும் உணர்க. அன்றியும், அரசன் கைக்கொண்டு வரச் சொன்னவனை, அவரும் அவன் கூறியவாறே கைக்கொண்டு போயினாரென்னவே வேண்டும் ஆதலானும் அவர்கள் அவனை, வடிமலர்த் தாரினாய் நீ வருக (சீவக. 1087) எனப் புகழ்ந்து இரந்து கொண்டமையானும், சிங்க வேறெள்ளிச் சூழ்ந்த சிறு நரிக் குழாத்திற் சூழ்ந்தார் (சீவக. 1083) என்றும், அடுபுலி கண்ட மான்போல் ஆறல் ஆயினாரே (சீவக. 1137) என்றும், மின்னிலங் கெயிற்று வேழம் வேழத்தாற் புடைத்து (சீவக. 1154) என்னுங் கவியில், என்னையிக் கிருமி கொன்று என்றும் கூறியிருப்பதாலும், நூபுரம் திருத்திச் சேர்ந்த நுதிவிரல் நொந்த (1111) என்ற தற்குத் தோளையன்றி, விரலைக் கட்டினாரென்றும் கூறவேண்டுதலானும், ஆசிரியன் கூற்றும் குரவர் கூற்றும் மனத்தைப் போர் செய்யாமற் பிணித்தலின், இளையர் காவல் செய்து கொண்டு போனார் என்றலே தேவர்க்குக் கருத்தென்றுணர்க. ஊன்பிறங் கொளிரும் வேலான் ஓர்த்துத் தன் உவாத்திசொல்லால் - தான் புறங்கட்டப்பட்டு (சீவக. 1090) என்றும், ஈன்ற தாய்தந்தை வேண்ட இவ்விடர் உற்றதென்றால், தோன்றலுக் காண்மை குன்றா தென்றசொல் இமிழிற் பூட்டி (சீவக. 1091) என்றும், தேவர் மனத்தை இறுகப் பிணித்தமை தோன்றக் கட்டி என்றும், பூட்டி என்றும் செய்யுள் செய்தமை பறறிக் கந்தியாரும் இடையிடையே பாடியிட்ட செய்யுட்களிலும், அப்பொருள் தரக் கட்டியென்று செய்யுள் செய்தார் என்று உணர்க. அன்றியும் சிறை செய்தல் என்னும் சொற்குக் காவலிடுதலே பொருளாமென்று. தேவர் தாமே, காவல் செய்து வைத்தவர்கள் என்று கூறியவாற்றானும் கட்டலென்னும் சொற்கு மனத்தை இறுகப் பிணித்தல் என்று பொருள் கொள்க.
 
நச்சினார்க்கினியர் இத்துணையானுங் கூறிய கருத்துத் தேவர்க் கிருக்குமேற், புறங்கட்டுப்பாடு (சீவக. 1090) தோளிணை கழலுடையினையவர் கச்சின் விக்கலின் (1092) என்பன போன்று திறம்படக் கட்டுதல் என்ற பொருள்படச் செய்யுள் செய்யார் என்றே கொள்ளல் வேண்டும். மேலும் இந்நூலாசிரியர் சீவகன் முன்னர்த் தன் ஆசிரியனாகிய அச்சணந்திற்கு வாய் நேர்ந்தமைக்கு இணங்க ஈண்டும் சிறு நரிக் குழாத்தாற் சிங்வேறு கட்டுண்டாற்போன்று அழச்சியின்றி அடங்கினான் என அவன் சால்புடைமையைக் காட்டவே இந்நிகழ்ச்சியினைப் படைக்கின்றாராதலானும் ஓராண்டளவும் இவ்வாறு அழலாதடங்குதலே சீவகற்குப் பெருமையாதலானும் தேவர் வெளிப்படையாகக் கூறியபடி கட்டிச் சென்றார் என்பதே சிறப்பாதலும் அறிக. இக் கருத்தினை அடுத்த செய்யுளானும் உணர்க. தருமன் பாஞ்சாலியைத் துகிலுரிந்த பொழுது அறத்திற் கடங்கி வாளாவிருந்தாற் போன்றதொரு பெருஞ் சிறப்பை இதனால் ஆசிரியர் சீவகனுக்குக் கூட்டுகின்றார். ( 239 )

1090. ஊன்பிறங் கொளிரும் வேலா
னோர்த்துத்த னுவாத்தி சொல்லாற்
றான்புறங் கட்டப் பட்டுத்
தன்சினந் தணிந்து நிற்பத்
தேன்பிறங் கலங்கன் மாலைச்
சுநந்தையுந் துணைவன் றானுங்
கோன்புறங் காப்பச் சேறல்
குணமெனக் கூறி னாரே.

பொருள் : ஊன் பிறங்கு ஒளிரும் வேலான் - ஊன் விளங்கி ஒளிசெய் வேலானாகிய சீவகன்; ஓர்த்துத் தன் உவாத்தி சொல்லால் தான் புறம் கட்டப்பட்டு - தான் ஆசிரியனுக்கு நேர்ந்த நிலையை உணர்ந்து தன்மெய் கட்டப்பட்டு ; தன் சினம் தணிந்து நிற்ப - தன் சீற்றம் ஆறி நின்றபோது; தேன் பிறங்கு அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் - தேன் விளங்கி அசையும் மாலையணிந்த சுநந்தையும் அவள் கணவனும்; கோன்புறம் காப்பச் சேறல் குணம் எனக் கூறினார் - அரசன் காப்பச் செல்லுதல் குடிகட்குக் குணம் என்று சொல்லினர். 

விளக்கம் : முன்னர் அகப்பொருளே நிகழ்த்தினவன் பகைவரைக் கண்டு புறப்பொருள் நிகழ்த்தக் கருதியதனை ஆசிரியன் கூற்று விலக்கிற்றென்பது தோன்ற புறம் கட்டப்பட்டு என்றார். அச் சொல் அரிய தொன்றனை விளக்கிற்று.  இங்கு நச்சினார்க்கினியர், புறம் கட்டப்பட்டு என்பதற்கு வீரம் பிணிப்புண்ணப்பட்டு என்று பொருள் கூறுகின்றார். ( 240 )

1091. ஈன்றதாய் தந்தை வேண்ட
விவ்விட ருற்ற தென்றாற்
றோன்லுக் காண்மை குன்றா
தென்றசொல் லிமிழிற் பூட்டி
மூன்றனைத் துலக மெல்லா
முட்டினு முருக்கு மாற்றல்
வான்றரு மாரி வண்கை
மதவலி பிணிக்கப் பட்டான்.

பொருள் : ஈன்ற தாய் தந்தை ஏவ இவ்இடர் உற்றது என்றால் - பெற்ற அன்னையும் தந்தையும் ஏவியதால் இத் துனபம் நேர்ந்தது என்றது உலகம் கூறின் ; தோன்றலுக்கு ஆண்மை குன்றாது - நினக்கு வீரம் மாசுறாது ; என்ற சொல் இமிழின் பூட்டி - என்று பெற்றோர் கூறிய சொல்லாலே கயிறுபோலக் கட்டப்பட்டு; மூன்று உலகனைத்தும் எல்லாம் முட்டினும் - மூன்றாகிய உலகம் அனைத்தும் அங்குள்ள எல்லாமும் தாக்கினும் ; முருக்கும் ஆற்றல் - அவற்றையெல்லாம் கெடுக்கும் ஆற்றலையுடைய; வான்தரு மாரி வண்கை மதவலி - கற்பகத் தருவையும் மாரியையும் நிகர்க்கும் வண்கையினையும் உடைய பெருவலி படைத்த சீவகன் ; பிணிக்கப்பட்டான் - கட்டப் பட்டான்.
 
விளக்கம் : இன் : உவமப் பொரு. இங்கு, அச் சொல் கயிற்றாற் பிணித்தாற் போல மனத்தைப் பிணித்தது. ஈண்டு, இவர் கட்டிற்றில ரெனவே இளையரான் (ஏவலரால்) மேற்கட்டலாகாமையும் உணர்க என்று உணர்க என்பர் நச்சினார்க்கினியர். ( 241 )

வேறு
 
1092. குழலுடைச் சிகழிகைக் குமரன் றோளிணை
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலி
னழலுடைக் கடவுளை யரவு சேர்ந்தென
விழவுடை முதுநகர் விலாவிக் கின்றதே.

பொருள் : குழலுடைச் சிகழிகைக் குமரன் தோளிணை - குழற்சியாகிய முடியினையுடைய சீவகன் தோளிணைகளை ; அழல் உடை கடவுளை அரவு சேர்ந்தென - ஞாயிற்றைப் பாம்பு சேர்ந்தாற்போல ; கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின் - கழலணிந்த ஏவலர் கச்சினாற் கட்டியதால் ; விழவுடை முதுநகர் விலாவிக்கின்றது - திருவிழா மலிந்த பழம்பதி அழாநின்றது.
 
விளக்கம் : இங்கும் நசசினார்க்கினியர், வீக்கலின் என்பதிலுள்ள இன்: உவமப்பொரு என்றும் பாம்பு ஞாயிற்றை ஒளி குறைய மறைத்தாற்போல இவரும் இவன் ஒளி குறையுமாறு சிறையாகக் கொண்டாரென்க. மனத்தை இறுகப் பிணிக்கவே தோளைப் போர்த்தொழிலை விலக்கிற்றாம் என்றும் விளக்கங் கூறுவர். மற்றும் அவர், குமரன் தோளிணைகளைக் குரவர் அங்ஙனங் கச்சிட்டுக் கட்டினாற்போலப் போர்த்தொழில் செய்யாதபடி விலக்கினார்களாக, வந்த இளையவர் ஞாயிற்றை அரவம் சேர்ந்தென்னச் சேர்தலின் என்று பொருள் கூறுவர். ( 242 )

வேறு
 
1093. தோளார் முத்துந் தொன்முலைக் கோட்டுத் துயன்முத்தும்
வாளா ருண்கண் வந்திழி முத்தும் மிவைசிந்தக்
காளாய் நம்பி சீவக சாமி யெனநற்றாய்
மீளாத் துன்ப நீள்கடன் மின்னின் மிசைவீழ்ந்தாள்.

பொருள் : தோள் ஆர் முத்தும் - தோளில் அணிந்த முத்துக்களும்; தொல்முலைக் கோட்டுத் துயல் முத்தும் - முதிய முலைச் சிகரத்திலே அசையும் வடத்திலுள்ள முத்துக்களும் ; வாள்ஆர் உண்கண் வந்து இழிமுத்தும் - வாளனைய மையுண்ட கண்களிலிருந்து வந்து சிந்தும் கண்ணீராகிய முத்துக்களும்; இவை சிந்த - (ஆகிய) இவை சிந்தும்படி ; காளாய்! நம்பி! சீவகசாமி ! என - காளையே ! நம்பியே ! சீவகசாமியே ! என்று கதறி; மீளா துன்ப நீள்கடல் மிசை - மீளமடியாத துன்பமாகிய பெருங்கடலிலே; மின்னின் - மின்போல; வீழ்ந்தாள் - விழுந்தனள்.

விளக்கம் : மகப்பெற்று முதிர்ந்தாளாதலின் தொன்முலை என்றார். தொன்மையை முத்துக்களுக்குக் கூட்டுக என்பர் நச்சினார்க்கினியர். மற்றும், மீளா என்பதற்கு மீண்டு என்று பொருள் கொண்டு காரியத்தின் மேற்சென்ற கருத்து மீண்டும் என்றும், துன்பமாகிய கடல் - அழுகின்ற மக்கட் டொகுதி என்றும் உரைப்பர். ( 243 )

1094. பாலா ராவிப் பைந்துகி லேந்திப் படநாகம்
போலா மல்குற் பொற்றொடி பூங்கட் குணமாலை
யேலா தேலா தெம்பெரு மானுக் கிஃதென்னா
நூலார் கோதை நுங்கெரி வாய்ப்பட் டதுவொத்தாள்.

பொருள் : பால்ஆர் ஆவிப் பைந்துகில் ஏந்தி - பாலாவி போன்ற புத்தாடையை ஏந்தி ; படநாகம் போல் ஆம் அல்குல் - நாகத்தின் படம் போன்றமைந்த அல்குலையும் ; பொன்தொடி - பொன் வளையலையும்; பூகண் குணமாலை - அழகிய கண்களையும் உடைய குணமாலை ; எம்பெருமானுக்கு இஃது ஏலாது ஏலாது என்னா - எம் உயிரைக் காத்த நுமக்கு அதனால் இத் தீங்கு வருதல் தகாது தகாது என்று புலம்பி ; நூல் ஆர் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள் - நூலிற் பொருந்திய மலர் மாலை விழுங்கும் தீயிலே வீழ்ந்தது போன்றாள்.

விளக்கம் : பாலாவி - பாலில் எழுந்த புகை : பானீர் நெடுங்கடற் பனிநாளெழுந்த - மேனீ ராவியின் மெல்லி தாகிய - கழுமடிக் கலிங்கம் (பெருங்கதை. 2.7 : 154-6) என்றார் பிறரும். ( 244 )

வேறு
 
1095. எரிதவழ் குன்றத் துச்சி யிரும்பொறிக் கலாப மஞ்ஞை
யிரிவன போன்று மாடத் தில்லுறை தெய்வ மன்னார்
பரிவுறு மனத்தி னோடிப் பட்டதை யுணர்ந்து பொற்றா
ரரியுறழ் மொய்ம்ப வோவென் றாகுலப் பூசல் செய்தார்.

பொருள் : எரிதவழ் குன்றதது உச்சி இருஞ்சிறைக் கலாப மஞ்ஞை இரிவன போன்று - நெருப்புப் பரவிய மலையின் உச்சியிலே பெரும் புள்ளிகளையுடைய கலவங்கொண்ட மயில்கள் கெட்டோடுவன போல ; இல்உறை தெய்வம் அன்னார் - வீட்டுத் தெய்வம் போன்ற மகளிர் ; பரிவுறு மனத்தின் மாடத்து ஓடி - வருத்தம் உற்ற மனத்துடன் மாடத்திற்கு ஓடி ; பட்டதை உணர்ந்து - நிகழ்ந்ததை அறிந்து ; பொன்தார் அரி உறழ் மொய்ம்ப ! ஓ! என்று - பொன்மாலை அணிந்த சிங்கம் போன்ற வலிமிகு தோளானே! ஓ! என்று; ஆகுலப் பூசல் செய்தார் - வருத்தத்தையுடைய ஆரவாரத்தை யுண்டாக்கினர்.

விளக்கம் : இரும்பொறி - பெரிய புள்ளிகள். கலாபம் - தோகை. மஞ்ஞை - மயில். இரிவன - கெட்டோடுவன. இல்லுறை தெய்வம் - இல்லங்களிலே உறைகின்ற தெய்வம். அரி - சிங்கம் உறழ் : உவமவுருபு. ஆகுலப்பூசல் - துன்ப ஆரவாரம். ( 245 )

1096. கங்கையின் சுழியிற் பட்ட
காமரு பிணையின் மாழ்கி
யங்கவர்க் குற்ற துள்ளி
யவலநீ ரழுந்து கின்ற
குங்குமக் கொடியோ டேந்திக்
கோலம்வீற் றிருந்த கொம்மைப்
பொங்கிள முலையி னார்க்குப்
புலவல னிதனைச் சொன்னான்.

பொருள் : கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி - கங்கை நீர்க் சுழியிலே அகப்பட்ட அழகிய பெண்மான்களைப்போல வருந்தி; அங்கு அவர்க்கு உற்றது உள்ளி - அம்மாடத்திலே சுநந்தை முதலாயினோர்க்கு நேர்ந்த துயரத்தை எண்ணி ; அவலநீர் அழுந்துகின்ற - கவலை நீரிலே அழுந்திய; குங்குமக் கொடியோடு ஏந்தி - குங்குமத்தையும் தொய்யிற் கொடியையும் ஏந்தி ; கோலம் வீற்றிருந்த - அழகுத் தெய்வம் வீற்றிருந்த ; கொம்மை பொங்கு இளமுலையினார்க்கு - பருத்த இளமுலையாராகிய புறமகளிர்க்கு ; புரவலன் இதனைச் சொன்னான் - சீவகன் இதனைக் கூறினான். 

விளக்கம் : வந்த இளையரைக் கொல்லாது விடுதலிற் புரவலன் என்றார். கங்கை நீர்ச்சுழி - துன்பத்திற்குவமை. காமருபிணை - விரும்புதற்குக் காரணமான பெண்மான். அவலநீர் என்புழி நீர்  கடல் என்னும் பொருட்டு. கோலம் - அழகுத் தெய்வம். கொம்மை - பெருமை. புரவலன் - இகழ்ச்சியுமாம். ( 246 )

1097. கட்டுயி லனந்தர் போலக் கதிகளுட் டோன்று மாறும்
விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறு
முட்பட வுணர்ந்த யானே யுள்குழைந் துருகல் செல்லே
னெட்பக வனைத்து மார்வ மேதமே யிரங்கல் வேண்டா.

பொருள் : கண்துயில் அனந்தர் போலக் கதிகளுள் தோன்றும்ஆறும் - கண்ணுறக்கமும் விழிப்பும் போலப் பல பிறவிகளினும் பிறக்கும்படியும்; விட்டு உயிர்போகும் ஆறும் - உடலைவிட்டு உயிர் போகும்படியும் ; வீடுபெற்று உயரும் ஆறும் - வீடடைந்து மேம்படும்படியும்; உள்பட உணர்ந்த யானே - மனம் பொருந்த அறிந்த யானே; உள் குழைந்து உருகல் செல்லேன் - மனங்குழைந்து உருகலிற் போகேன் ; ஆர்வம் எள்பகவு அனைத்தும் ஏகமே - ஆசை எள்ளின் பிளவவ்வளவே எனினும் துன்பமே ; இரங்கல் வேண்டா - (எனவே) வருந்தல் வேண்டா.

விளக்கம் : கண்துயில் அனந்தர்போல விட்டு உயிர் போகுமாறும் என மாறிக் கண்துயிலுதற்குக் காரணமான உறக்கம்போன்று உயிர் இவ்வுடலை விட்டுப் போம்படியும் அவ்வுயிர் மீண்டு விழித்தல்போன்று பிறக்கும்படியும் என அனந்தர்போல என்றமையாட்ல விழிப்புப்போல என வருவித்துப் பொருள் கூறலே நன்று. இதே நச்சினார்க்கினியர் கருத்து. அனந்தர் - உறக்கம். இதனால் இன்ப துன்பமிரண்டினையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் சீவகன் மனநிலையினை ஆசிரியர் உணர்த்துகின்றார். மெய்த்திருப்பத மேவென்ற போதினும், இத்திருத்துறந்தேகென்ற போதினும், சித்திரத்தி னலர்ந்தசெந் தாமரை, ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள், எனக் கம்பநாடரும் இராமன்பால் இப்பெருமையைக் காட்டுதல் உணர்க.
 
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி.
விழிப்பது போலும் பிறப்பு (குறள் - 339).

என்னும் திருக்குறளை இதனோடு நினைக. ( 247 )

1098. நன்மணி யிழந்த நாகர்
நல்லிளம் படியர் போல
வின்மணி யிழந்த சாம்பி
யிருநில மிவர்க ளெய்த
மின்னணி மதியங் கோள்வாய்
விசும்பிடை நடப்ப தேபோற்
கன்மணி யுமிழும் பூணான்
கடைபல கடந்து சென்றான்.

பொருள் : கல்மணி உமிழும் பூணான் - (இங்ஙனம் அறிவுரை கூறியபின்) கல்லிற் பிறந்த மணிகளின் ஒளியுமிழும் அணிகலனுடையான் ; நல்மணி இழந்த நாகர் நல்இளம்படியர் போல - அழகிய மாணிக்கத்தை இழந்த அழகிய நாகரிள மகளிரைப் போல ; இவர்கள் இல்மணி யிழந்து சாம்பி இருநிலம் எய்த - உறவு மகளிர் சீவகனையிழந்து வருந்தி நிலத்திடை மயங்கி வீழ ; மின் அணி மதியம் கோள்வாய் விசும்பிடை நடப்பதே போல்-ஒளி யணிந்த திங்கள் பாம்பாகிய கோளாற் பற்றப்பட்டு வானிடை செல்வதே போல் ; கடைபல கடந்து சென்றான் - தன் மனையின் பல வாயில்களையும் கடந்து சென்றான்.
 
விளக்கம் : கோள் - பிறகோள்களுமாம் ; பரிவேடிப்புமாம். வீரர்களாற் கட்டுண்டு செல்வதாற் பாம்புபற்றிய திங்களும், வீரர்கள் சூழ நடுவே செல்வதாற் கோள்கள் சூழ்ந்த திங்களும் பரிவேடிப்புடைய திங்களும் உவமை. இளம் பிடியர் என்பதூஉம் பாடம். நச்சினார்க்கினியர் உறவு மகளிர் இருநிலம் எய்தக் கண்டு அறிவுரை கூறியதாக இரு செய்யுள்களையும் தொடராக்கி மாட்டேறு செய்வர். ( 248 )

வேறு
 
1099. வெந்தனம் மனம்மென வெள்ளைநோக்கின் முள்ளெயிற்
றந்துவர்ப் பவளவா யம்மழலை யின்சொலார்
பந்துபாவை பைங்கழங்கு பைம்பொன்முற்றில் சிற்றிலுண்
ணொந்துவைத்து நூபுரம்மொ லிப்பவோடி நோக்கினார்.

பொருள் : வெள்ளை நோக்கின் முள் எயிற்று அம் துவர் பவளவாய் அம் மழலை இன்சொலார் - வஞ்சம் இல்லாத நோக்கினையும் கூறிய பற்களையும் சிவந்த பவள வாயையும் மழலையான இனிய மொழியையும் உடைய பேதைப் பருவ மகளிர்; மனம் வெந்தன என - இம் மகளிரின் உள்ளங்கள் வருந்தின என்று கண்டார் கூறுமாறு; பந்து பாவை பைங்கழங்கு பைம்பொன் முற்றில் - பந்தும் பாவையும் கழங்கும் சிறு சுளகுமாகியவற்றை; நொந்து சிற்றிலுள் வைத்து - வருந்தித் தாம் கட்டிய சிற்றிலில் வைத்து விட்டு; நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார் - நூபுரம் புலம்ப ஓடிவந்து பார்த்தனர்.

விளக்கம் : வெந்தனம் மனம்மென மகரங்கள் சந்தம் நோக்கி விரிந்தன. வெள்ளை நோக்கு : உள்ளொன்றும் கொள்ளாத நோக்கு
 ( 249 )

1100. மல்லிகை மலிந்தமாலை சோரவார்ந்த குண்டலம்
வில்விலங்க மின்னுக்கோட்ட வீணைவிட்டு வெய்துரா
யொல்லெனச் சிலம்பரற்ற வீதிமல்க வோடினார்
சில்சுணங் கிளமுலைச் செழும்மலர்த் தடங்கணார்.

பொருள் : சில் சுணங்கு இளமுலைச் செழுமலர்த் தடங்கணார் - சில தேமல்கள் பரந்த இளமுலையையும் செழுமலரனைய பெருங்கண்களையும் உடைய பெதும்பைப் பருவ மகளிர்; மல்லிகை மலிந்த மாலை சோர - மல்லிகை மலர்நிறைந்த மாலைகள் நழுவ; ஆர்ந்த குண்டலம் வில்விலங்க - பொருந்திய குண்டலம் ஒளி வீச ; மின்னுக் கோட் வீணை விட்டு - ஒளி பொருந்திய கோடு என்னும் உறுப்பினையுடைய வீணையை விட்டு ; வெய்து உராய் - விரைந்து பரவி ; ஒல் எனக் சிலம்பு அரற்ற - ஒல்லென்னும் ஒலியுடன் சிலம்புகள் ஒலிக்க ; வீதி மல்க ஓடினார் - தெரு நிறைய ஓடிவந்தனர்.
 
விளக்கம் : கோட்ட - கோட்டையுடைய; கோடு - தண்டு. வில் - ஒளி. சில்சுணங்கு - சிலவாகிய தேமல். ( 250 )

1101. நெய்த்தலைக் கருங்குழ னிழன்றெருத் தலைத்தர
முத்தலைத் திளம்முலை முகஞ்சிவந் தலமரக்
கைத்தலங் கடுத்தடித்த பந்துநீக்கி வந்தவண்
மைத்தலை நெடுந்தடங்கண் மங்கையர் மயங்கினார்.

பொருள் : மைத்தலை நெடுந்தடம் கண் மங்கையர் - மை தீட்டிய நீண்ட பெரிய கண்களையுடைய மங்கைப் பருவத்தார்; நெய்த்தலைக் கருங்குழல் நிழன்று எருத்து அலைத்தர - புழுகு பூசிய கரிய குழல் பிடரிலே ஒளிவீசி அலைய ; இளமுலை முகம் சிவந்து முத்து அலைத்து அலம்வர - இளமுலை முகம் சிவக்க முத்து வடம் அலைத்து அசைய; கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து - கைகள் கடுக்க விரைந்தடித்த பந்தைவிட்டு வந்து; அவண் மயங்கினார் - சீவகன் வரும் நெற்றியிலே மயங்கி நின்றனர்.
 
விளக்கம் : சிவந்து - சிவக்க, கடுத்து - கடுக்க ; எச்சத்திரிபுகள். நெய் - புழுகு. குழல் - கூந்தல். எருத்து - பிடர். முத்தலைத்தலான் என்க. கடுத்து - கடுப்ப. அவண் - அவ்விடத்து. ( 251 )

1102. கோதைகொண்ட பூஞ்சிகைக் கொம்மைகொண்ட வெம்முலை
மாதுகொண்ட சாயலம் மடந்தையர் மனங்கசிந்
தோதமுத் துகுப்பபோ லுண்கண்வெம் பனியுகுத்
தியாதுசெய்க மையவென் றன்புமிக் கரற்றினார்.

பொருள் : கோதை கொண்ட பூஞ்சிகை - மாலையணிந்த கூந்தலினையும் ; கொம்மை கொண்ட வெம்முலை - பருத்த விருப்பூட்டும் முலைகளையும் ; மாது கொண்ட சாயலின் - காதல் தோன்றும் மென்மையினையும் உடைய; மடந்தையர் - மடந்தைப் பருவ மகளிர் ; மனம் கசிந்து - உள்ளம் உருகி ; ஓதம் முத்து உகுப்பபோல் உண்கண் வெம்பனி உகுத்து - கடல் முத்துக்களைச் சிந்துதல் போல மையிண்ட கண்களினின்றும் வெதும்பிய பனித் துளிகளைச் சிந்தி ; யாது செய்கம் ஐய! என்று அன்பு மிக்கு அரற்றினார் - யாங்கள் யாது செய்வோம்? ஐயனே! என்று அன்பின் மிகுதியால் அழுதனர்.
 
விளக்கம் : பூஞ்சிகை - மயிர்முடி. கொம்மை - பெருமை. மாது - காதல். ஓதம் - கடல்; இது கண்ணுக்குவமை. முத்து - கண்ணீர்த் துளிக்குவமை. உண்கண் - மையுண்டகண். செய்கம் : தன்மைப் பன்மை. ( 252 )

1103. செம்பொனோலை வீழவுஞ் செய்கலங்கள் சிந்தவு
மம்பொன்மாலை யோடசைந் தவிழ்ந்துகூந்தல் சோரவு
நம்பனுற்ற தென்னெனா நாடகம் மடந்தையர்
வெம்பிவீதி யோடினார் மின்னினன்ன நுண்மையார்.

பொருள் : மின்னின் அன்ன நுண்மையார் நாடக மடந்தையர் - மின் போன்ற நுண்ணியரான நாடக மடந்தையர்; செம்பொன் ஓலை வீழவும் - பொன் ஓலை (காதிலிருந்து) வீழவும்; செய்கலன்கள் சிந்தவும் - அணிகலன்கள் சிதறவும்; அம் பொன் மாலையோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும் - அழகிய பொன்னரி மாலையுடன் அவிழ்ந்து அசைந்து கூந்தலில் சோர்ந்து போகவும் ; நம்பன் உற்றது என் எனா வெம்பி - சீவகன் உற்ற துன்பம் என்னோ என்று வருந்தி ; வீதி ஓடினார் - தெருவிலே ஓடிவந்தனர்.
 
விளக்கம் : நம்பன் : சீவகன். நம்பு - நசை. பிறரால் விரும்பப்படுபவன் என்பது பொருள். நம்பும் மேவும் நசையாகும்மே என்பது தொல்காப்பியம் (உரி - 33). நாடகம் மடந்தையர் - விறலியர். மின்னினன்ன - மின்னலை ஒத்த. நாடகம் மடந்தையர் என்புழி மகரவொற்று வண்ணம் கருதிக் கெடாது நின்றது. ( 253 )

1104. பூவலர்ந்த தாரினான் பொற்புவாடு மாயிடிற்
போவுடம்பு வாழுயிர் பொன்றுநீயு மின்றெனா
வீகலந்த மஞ்ஞைபோல் வேனெடுங்க ணீர்மல்க
வாகுலத் தரிவைய ரவ்வயி றதுக்கினார்.

பொருள் : வீகலந்த மஞ்ஞை போல் - கெடுதியுற்ற மயில் போல ; ஆகுலத்து அரிவையர் - வருத்தமுற்ற அரிவைப் பருவ மகளிர் ; பூ அலர்ந்த தாரினான் - மலர் மலர்ந்த மாலையான்; பொற்பு வாடும் ஆயிடின் - அழகு கெடும் எனின்; உடம்புவாழ் உயிர் ! போ - உடம்பில் வாழும் உயிரே! நீ போ ; நீயும் இன்று பொன்று - (உடம்பே!) நீயும் இப்பொழுது அழிவாயாக; எனா - என்றுரைத்து ; வேல் நெடுங்கண் நீர் மல்க - வேலனைய நெடுங்கண்கள் நீரைச் சொரிய; அவ் வயிறு அதுக்கினார் - அழகிய வயிற்றிலே அடித்துக்கொண்டனர்.

விளக்கம் : பொற்பு - அழகு. உடம்பு உயிர் என்னுமிரண்டும் விளி. உடம்பே நீ போ ; உயிரே நீயும் பொன்று என மாறுக. பொன்றுதல் - இறத்தல். வீ - துன்பம். ஆகுலம் - துன்பம். அரிவை - ஈண்டுப் பருவப்பெயர். அ வயிறு என்புழி. அ - அழகு என்னும்பொருட்டு. ( 254 )

1105. தேன்மலிந்த கோதைமாலை செய்கலம் முகுத்துராய்க்
கான்மலிந்த காமவல்லி யென்னதன்ன ராயரோ
பான்மலிந்த வெம்முலைப் பைந்துகி லரிவையர்
நூன்மலிந்த நுண்ணுசுப்பு நோவவந்து நோக்கினார்.

பொருள் : பால் மலிந்த வெம்முலைப் பைந்துகில் அரிவையர் - பால் நிறைந்த வெவ்விய முலைகளையும் பைந்துகிலையும் உடைய அரிவைப் பருவ மகளிர்; தேன் மலிந்த கோதை மாலை செய்கலம் உகுத்து உராய் - தேன் நிறைந்த மலர்மாலை, மற்றைய மாலைகள், அணிகலன்கள் ஆகியவற்றைச் சிந்திப் பரவி; கால் மலிந்த காம வல்லி என்னது அன்னராய் - காற்று மிக்க காம வல்லி போல அசைந்து; நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார் - நூலைப் போன்ற மெல்லிடை வருந்த வந்து பார்த்தனர்.
 
விளக்கம் : கான்மலிந்த பொழுது காமவல்லி எங்ஙனம் அலமரும் அங்ஙனம் அலமந்து என்பது கருத்து. அரோ : அசை. அரிவைப் பருவமகளிர் ஆகலின் மகப்பேறுடையர் என்பது தோன்ற பான்மலிந்த வெம்முலை அரிவையர் என்றார். நுசுப்பு - இடை. ( 255 )

1106. மாதரார்கள் கற்பினுக்கு டைந்தமா மணிக்கலைத்
தீதிலார நூற்பெய்வார் சிதர்ந்துபோகச் சிந்துவார்
போதுலா மலங்கலான்முன் போந்துபூந் தெரிவைய
ராதகா தெனக்கலங்கி யவ்வயி றதுக்கினார்.

பொருள் : பூந்தெரிவையர் மாதரார்கள் கற்பினுக்கு உடைந்த மாமணிக்கலை - அழகிய தெரிவையராகிய பெண்டிர்கள் தம் கற்பினுக்குத் தோற்ற மாமணிக் கற்களை; தீது இல்ஆரம் நூல் பெய்வார் - குற்றம் இல்லாத மாலையாக நூலிலே கோத்துக் கொண்டிருந்தவர்கள்; சிதர்ந்துபோகச் சிந்துவார் - சிதறிப் போகச் சிந்துவாராய்; போது உலாம் அலங்கலான் முன் போந்து - மலர் கலந்த மாலையான்முன் வந்து ; ஆ தகாது எனக் கலங்கி - ஆ ! இது பொருத்தமின்று என்று கலங்கி ; அவ் வயிறு அதுக்கினார் -அழகிய வயிற்றிலே அடித்துக் கொண்டனர்.
 
விளக்கம் : மாமணிக்கலைக் கற்பினுக்கு உடைந்த மாதரார்கள் தீதுஇல் ஆரம் நூற்பெய்வார் தெரிவையர் என மொழிகளை மாற்றி, முத்துக் கோக்கக் கற்ற கல்விக்குத் தோற்ற மாதரார்களின் கையில் உள்ள ஆரங்களை வாங்கிக் கோப்பாளாகிய தெரிவையர் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மணியாகிய கலை என்க. கல்லை என்பது கலை என நின்றது விகாரம். கற்பின் ஒளிக்கு மணியொளி நிகராகாமையின் கற்பினுக்கு உடைந்த மணிக்கல் என்றார். இனி மாமணிக்கல் என்பதற்கு வயிரமணி என்று கொண்டு திண்மையாலே தங்கற்பினுக்குத் தோற்ற மணி என்றும் கொள்ளலாம். தொவை - ஈண்டுப் பருவப் பெயர். ( 256 )

1107. வட்டிகை மணிப்பலகை வண்ணநுண் டுகிலிகை
யிட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையிற்
கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுக
மட்டவிழ்ந்த கோதையர்கள் வந்துவாயில் பற்றினார்.

பொருள் : மட்டு அவிழ்ந்த கோதையர்கள் - தேன் சொரியும் மாலை அணிந்த மாதர்கள்; வட்டிகை மணிப்பலகை வண்ணம் நுண் துகிலிகை இட்டு - மணிகள் இழைத்த வட்டிகைப் பலகையிலே வண்ணத்தையும் நுண்ணிய எழுதுகோலையும் போகட்டுவிட்டு; நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின் - வருந்திக் கெடுதலுற்ற மயில்களைப் போல ; கட்டழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக - பெருநெருப்புப் போன்ற மூச்சிலே காய்ந்து கண்ணிகள் தீயவும் பூண்கள் சிதறவும்; இடை நுடங்க வந்து வாயில் பற்றினார் - இடை நொசிய வந்து வாயிலைப் பற்றி நின்றனர்.
 
விளக்கம் : வட்டிகை - ஓவியம். தீந்து - தீய : எச்சத்திரிபு. இது கற்புடைமகளிர் நிலை. ( 257 )

வேறு
 
1108. வினையது விளைவு காண்மி
னென்றுகை விதிர்த்து நிற்பா
ரினையனாய்த் தெளியச் சென்றா
லிடிக்குங்கொ லிவனை யென்பார்
புனைநல மழகு கல்வி
பொன்றுமா லின்றொ டென்பார்
வனைகலத் திகிரி போல
மறுகுமெம் மனங்க ளென்பார்.

பொருள் : வினையது விளைவு காண்மின் என்று கை விதிர்த்து நிற்பார் - தீவினையின் பயனைக் காணுமின் என்றுரைத்துக் கை நடுங்கி நிற்பார்; இனையனாய்த் தெளியச் சென்றால் இவனை இடிக்கும்கொல் என்பார் - இவ்வாறு வீரர் கையில் அகப்பட்டுத் தெளிவுடன் (கலக்கமின்றி) சென்றால் இவனைக் காவலன் கொல்வானோ என்பார் ; இன்றொடு புனைநலம் அழகு கல்வி பொன்றும் என்பார் - இன்றோடு புனையும் நலனும் அழகும் கல்வியும் அழியும் என்பார் ; எம் மனங்கள் வனைகலத் திகிரிபோல மறுகும் என்பார் - எம் உள்ளங்கள் எல்லாம் குயவன் பானை வனையும் சக்கரம்போலச் சுழலும் என்பார். 

விளக்கம் : விணை - ஈண்டுத் தீவினை. வினையது விளைவு என்றது ; இம்மைச் செய்தது யாமறி நல்வினை இஃது உம்மைப் பயன்கொல் என்பது படநின்றது. ( 258 )

1109. நோற்றிலர் மகளி ரென்பார்
நோங்கண்டீர் தோள்க ளென்பார்
கூற்றத்தைக் கொம்மை கொட்டிக்
குலத்தொடு முடியு மென்பா
ரேற்றதொன் றன்று தந்தை
செய்தவிக் கொடுமை யென்பா
ராற்றலள் சுநந்தை யென்பா
ராதகா தறனே யென்பார்.

பொருள் : மகளிர் நோற்றிலர் என்பார் - இவன் கிடைத்தும் நெடுங்காலம் நுகர்தற்கு மனைவியரிருவரும் நோற்றிலர் என்பார் ; தோள்கள் நோம்கண்டீர் என்பார் - தோள்கள் வருந்தும் என்பார்; கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடும் முடியும் என்பார் - கூற்றுவனைக் கைதட்டியழைத்துக் குலத்தோடும் (அரசன்) முடிவான் என்பார்; தந்தை செய்த இக் கொடுமை ஏற்றது ஒன்று அன்று என்பார் - தந்தை காட்டிக் கொடுத்த இக் கொடிய செயல் தக்கது ஆகாது என்பார் ; சுநந்தை ஆற்றலள் என்பார் - (இனி) சுநந்தை இத் துயரத்தைப் பொறுக்கமாட்டாள் என்பார்; ஆ! தகாது அறனே! என்பார் - ஆ! இது தக்கதன்று! அறக்கடவுளே! என்பார்.

விளக்கம் : யாம் உளேமாகவும் எம்மாற் பயன் கொளாது இவன் இங்ஙனம் சிறைவாய்ப் போவதே என்று தோள்களும் தம்மில் நோம் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
 
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்(கு).
ஆற்றாதார் இன்னா செயல்..

என்னுந் திருக்குறளை நினைக. மூன்றனைத் துலகமெல்லாம் முட்டினும் முருக்குமாற்றல் உடையன் என்பது பற்றி இங்ஙனம் கூறினர் ( 259 )

1110. தூக்குமின் காளை சீறிற் றுற்றிவ னுளனோ வென்பார்
காக்குமால் வைய மெல்லாங் காவல னாகி யென்பார்
பாக்கயம் பெரிது மேகா ணிதுவுமோர் பான்மை யென்பார்
நோக்கன்மி னாணுங் கண்டீர் நுதிகொ ணாகரிக னென்பார்.

பொருள் : தூக்குமின் ! - ஆராய்ந்து பாருங்கோள் ; காளை துற்றுச் சீறின் இவன் உளனோ? என்பார் - சீவகன் நெருங்கிச் சீறின் இம் மதனன் இருப்பானோ என்பார் ; காவலன் ஆகி வையம் எல்லாம் காக்கும் என்பார் - இவன் மேலும் அரசனாகி உலகம் எல்லாம் காப்பான் என்பார் ; பாக்கியமே பெரிதுகாண் இதுவும் ஓர் பான்மை என்பார் - இவனுக்கு நல்வினையே மிக்குள்ளது, எனினும், இஃது ஒரு தீவினைப் பயன் என்பார்; நுதிகொள் நாகரிகன் நாணும் - கூரிய பலகலை வல்லோன் ஆகையால் நாணுறுவான் ; நோக்கன்மின் என்பார் - (ஆகையால்) அவனை நோக்காதீர்கள் என்பார்.
 
விளக்கம் : பெரிதும் : உம் இசை நிறை. பெரிதுமே என்பதிலுள்ள ஏ யைப் பாக்கியமே எனப் பிரித்துக் கூட்டுக. கண்டீர் : முன்னிலையசை. ( 260 )

1111. பூவரம் பாய கோதைப் பொன்னனார் புலவி நீக்கி
நூபுரந் திருத்திச் சேந்த நுதிவிர னொந்த வென்பார்
யாவரும் புகழு மைய னழகுகெட் டொழியு மாயிற்
கோபுர மாட மூதூர் கூற்றுண விளிக வென்பார்.

பொருள் : பூவரம்பு ஆய கோதைப் பொன்னனார் புலவி நீக்கி - மலர்களுக்கு எல்லையான மாலையை அணிந்த திருவனை யாரின் பிணக்கை நீக்கி; நூபுரம் திருத்திச் சேந்த - சிலம்பைத் திருத்திச் சிவந்த ; விரல்நுதி நொந்தது என்பார் - விரல்நுனி (கட்டப்பட்டதனால்) வருந்திற்று என்பார் ; யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும் ஆயின் - எல்லோராலும் புகழப்படும் சீவகனுடைய அழகு கெட்டேவிடுமெனின் ; கோபுரம் மாடம் மூதூர் கூற்று உணவிளிக என்பார் - கோபுரமும் மாடமும் இம் மூதூர் முற்றும் காலன் கொள்ள அழிக என்பார்.
 
விளக்கம் : விரல்கள், வீரத்திற்கும் காமத்திற்கும் கொடை முதலியவற்றிற்கும் தோற்றிய யாம், ஈண்டு இவன் வீரஞ் செய்யாமையின் வீரத்திற்கு உதவியாயிற்றிலேம் என்று நொந்தன் என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 261 )

1112. கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல
விருஞ்சிலை பயின்ற திண்டோட் கிதுதகா தென்றுகுன்றிற்
கருங்கட றுளுப்பிட் டாங்குக் கல்லெனக் கலங்கிக் காம
ரருங்கடி யரண மூதூ ராகுல மயங்கிற் றன்றே.

பொருள் : கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல - கொடிய வில்லேந்திய வேடர் கொண்ட திரளான ஆணிரையை மீட்கும் வலிமையுள்ள ; இருஞ்சிலை பயின்ற திண்தோட்கு இது தகாது என்று - பெரிய வில் பழகிய திண்ணிய தோள்களுக்குக் (கட்டுப்படும்) இஃது ஏற்காது என்றுரைப்பதால்; கருங்கடல் குன்றில் துளுப்பிட்டாங்கு - கரிய கடல் மலையாலே கலக்குற்றாற்போல ; கல் எனக் கலங்கி - கல்லென்னும் ஒலியுடன் கலங்கி ; காமர் அருங்கடி அரணம் மூதூர் - அழகிய, அரிய காவலான அரண்களையுடைய இராசமாபுரம் ; ஆகுலம் மயங்கிற்று - துன்பக் குரலால் மயங்கியது.
 
விளக்கம் : நிரை மீட்ட தோள் என்றார் ஆண்டுக் கொல்லாமலே வென்றாற்போல ஈண்டும் கொல்லாமலே வெல்ல வல்லன் என்பது கருதி. ( 262 )

1113. இங்கன மிவர்க ளேக
வெரியகம் விளைக்கப் பட்ட
வெங்கணை விடலை தாதை
வியனக ரவல மெய்தி
யங்கவ ருகுத்த கண்ணீ
ரடித்துக ளவிப்ப நோக்கிப்
பொங்கம ருழக்கும் வேலான்
புலம்புகொண் டழேற்க வென்றான்.

பொருள் : இங்கனம் இவர்கள் ஏக - இவ்வாறு இவர்கள் துயருற்றுச் செல்ல; எரியகம் விளைக்கப்பட்ட வெங்கணை விடலை தாதை - தீயில் விளைவிக்கப்பட்ட கொடிய கணை ஏந்திய சீவகன் தந்தையினுடைய; வியன் நகர் அவலம் எய்தி - பெரிய மனையிலுள்ளார் துன்பம் அடைந்து ; அங்கு அவர் உகுத்த கண்ணீர் - அவர்கள் சிந்திய கண்ணீர் ; அடித்துகள் அவிப்ப நோக்கி - செல்கின்றவரின் அடித் துகளை அவித்தலாலே, அவர்களை நோக்கி; பொங்கு அமர் உழக்கும் வேலான் - கிளர்ந்த போரைக் கலக்கும் வேலேந்திய சீவகன் ; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - புலம்புதல் கொண்டு அழாதீர் என்றான்.
 
விளக்கம் : எரியை உள்ளே விளைத்த வெங்கணை எனினும் ஆம். இவன் குணமாலை மனையினின்றும் போந்தான் ; தந்தை மனையில் உள்ளார் புலம்புவதைப் பார்த்தான். தாதையினதுவியனகர் என ஆறாம் வேற்றுமையை விரித்துக் கொள்க. ( 263 )

1114. மின்னினான் மலையை யீர்ந்து
வேறிரு கூறு செய்வான்
றுன்னினான் றுளங்கி னல்லாற்
றுளங்கலம் மலையிற் குண்டே
யன்னதே துணிந்த நீதி
யருநவை நமனு மாற்றா
னென்னைநேர் நின்று வாழ்த
லிருநிலத் தாவ துண்டே.

பொருள் : மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான் துன்னினான் - மின்னைக் கொண்டு மலையைப் பிளந்து வேறாக இரு பிளவு செய்தலை மேற்கொண்டவன்; துளங்கின் அல்லால் - தான் நிலைகுலைதல் அன்றி; துளங்கல் அம் மலையிற்கு உண்டே? - நிலைகுலைதல் அம் மலைக்கு உளதோ ?; துணிந்த நீதி அன்னதே - கட்டியங்காரன் துணிந்த நீதியும் அத்தகையதே; நமனும் அருநவை ஆற்றான் - எனக்குக் காலனும் துன்பியற்ற வல்லவன் அல்லன் ; இருநிலத்து என்னை நோநின்று வாழ்தல் ஆவது உண்டே? - இப் பேருலகில் எனக்கு எதிராகப் பகைத்து நின்று வாழ்வது எவருக்கும் ஆகுமோ?
 
விளக்கம் : என்னை : ஐ : அசைநிலை யிடைச்சொல். அருநவை நமனும் ஆற்றான் என்பதற்கு அருநவை செய்யும் நமனும் என் எதிர் நின்று வாழ்தலை ஆற்றான் எனினும் ஆம். ( 264 )

1115. வளைகடல் வலையிற் சூழ்ந்து
மால்வரை வேலி கோலி
யுளையரி படுக்க லுற்றான்
படுப்பினும் படுக்க மற்றென்
கிளையழ வென்னை வாள்வாய்க்
கீண்டிட லுற்று நின்றான்
றளையவிழ் கண்ணி சிந்தத்
தன்றலை நிலத்த தன்றே.

பொருள் : வளைகடல் வலையின் சூழ்ந்து மால்வரை வேலி கோலி - வளைந்த கடலை வலையாகச் சூழவிட்டும் பெரிய மலையை வேலியாகக் கோலியும் ; உளை அரி படுக்கல் உற்றான் - பிடரி மயிரையுடைய சிங்கத்தைச் சிறைப்படுத்த முயன்றவன்; படுப்பினும் படுக்க - சிறைப்படுத்தினும் படுத்துக; (அவற்றானும் என்னை அகப்படுத்தல் அரிது; அதுவும் இவனால் இயலாது) கிளை அழ என்னை வாள்வாய் கீண்டிடல் உற்று நின்றான் தன் தலை - என் உறவினர் அழ என்னை வாளின் வாயாற் பிளத்தலை மேற்கொண்டு நின்றவனுடைய தலை ; தளை அவிழ் கண்ணி சிந்த நிலத்தது - (சிலநாள் செல்லின்) முறுக்கலர்ந்த கண்ணி சிதற நிலத்ததாகும். 

விளக்கம் : சிலநாள் என்பது ஓராண்டுக் காலம். நச்சினார்க்கினியர் 1113 - முதல் மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கித் தன்னை வாள்வாய்க் கீண்டிடலுற்று நின்ற கட்டியங்காரன் தலை நிலத்ததாம் என்பதனை உட்கொண்டு, அழும் உறவினரை நோக்கித் தன்னை ஒருவரும் ஒன்றுஞ் செய்ய முடியாதென்பதை விளக்கிப் புலம்புகொண்ட ழேற்க என்றான் என முடிப்பர். ( 265 )

1116. நீரகம் பொதிந்த மேக
நீனிற நெடுநல் யானைப்
போரகத் தழலும் வாட்கைப்
பொன்னெடுங் குன்ற மன்னா
னார்கலி யாணர் மூதூ
ரழுதுபின் செல்லச் செல்வான்
சீருறு சிலம்பி நூலாற்
சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான்.

பொருள் : நீரகம் பொதிந்த மேகம் நீல்நிற நெடுநல் யானை - நீரைத் தன்னிடத்தே கொண்ட முகில் போன்ற கருநிறமுடைய பெரிய களிற்றையும் போரகத்து அழலும் வாள்கை - போரிலே கனலும் வாளேந்திய கையையுமுடைய; பொன் நெடுங்குன்றம் அன்னான் - பொன்னாலான பெரிய மலையைப் போன்ற சீவகன் ; ஆர்கலி யாணர் மூதூர் அழுதுபின் செல்லச் செல்வான் - ஆரவாரத்தையும் புதுவருவாயையுமுடைய பழம்பதியிலுள்ளார் அழுதவாறே பின்வரச் செல்கின்றவன்; சீருறு சிலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்கம் ஒத்தான் - சிறப்புற்ற சிலம்பியின் நூலினாற் சிக்குண்ட சிங்கம் போன்றான்.

விளக்கம் : நூல், வீரர்க்குவமை என்பர் நச்சினார்க்கினியர். மேலும் புதல் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள். 274) என்றாற்போலக் கொள்க என்று உவமையுங் கூறுவர். ( 266 )

1117. மன்னர்தம் வெகுளி வெந்தீ
மணிமுகில் காண மின்னிப்
பொன்மழை பொழியி னந்து
மன்றெனிற் புகைந்து பொங்கித்
துன்னினார் தம்மை யெல்லாஞ்
சுட்டிடு மென்று செம்பொன்
பன்னிரு கோடி யுய்த்துக்
கந்துகன் பணிந்து சொன்னான்.

பொருள் : மன்னர்தம் வெகுளி வெந்தீ - அரசருடைய வெகுளியாகிய கொடிய நெருப்பு ; மணிமுகில் காணம் மின்னி -மணியாகிய முகில் பழங்காசு என்கிற மின்னை மின்னி; பொன்மழை பொழியின் நந்தும் - பொன்னாகிய மழையைப் பொழியின் அவியும் ; அன்று எனின் புகைந்து பொங்கி - பெய்யாதெனின் அத் தீ புகைந்து பொங்கி ; துன்னினார் தம்மை யெல்லாம் சுட்டிடும் - நெருங்கினாரை யெல்லாம் சுட்டுவிடும் ; என்று - என்றெண்ணி ; கந்துகன் பன்னிரு கோடி செம்பொன் உய்த்துப் பணிந்து சொன்னான் - கந்துகன் பன்னிருகோடி செம்பொன்னைக் குவித்துத் தாழ்ந்து சிலமொழி கூறினான். 

விளக்கம் : வெகுளி வெந்தீ - சினமாகிய வெவ்விய நெருப்பு. நந்தும் - அழியும். துன்னினார் - தன்னைச் சேர்ந்தோர். தம்மை வேந்தன் ஒறுத்திடா திருத்தற்பொருட்டுப் பன்னிருகோடி உய்த்துப் பணிந்தான் என்க. ( 267 )

1118. மன்னவ வருளிக் கேண்மோ
மடந்தையோர் கொடியை மூதூர்
நின்மதக் களிறு கொல்ல
நினக்கது வடுவென் றெண்ணி
யென்மக னதனை நீக்கி
யின்னுயி ரவளைக் காத்தா
னின்னதே குற்ற மாயிற்
குணமினி யாது வேந்தே.

பொருள் : மன்னவ! அருளிக் கேண்மோ! - அரசே! அருள் செய்து கேட்பாயாக!; மடந்தை ஓர் கொடியை - மடந்தையாகிய ஒரு கொடியை ; மூதூர் - (பெண்கொலை பிறந்தறியா) இப் பழம்பதியிலே ; நின் மதக் களிறு கொல்ல - நின் மதயானை கொன்றால் ; நினக்கு அது வடு என்று எண்ணி - நினக்கு அது பழியாமென்று நினைத்து; அதனை என் மகன் நீக்கி - அக்கொலையை என் மகன் தடுத்து ; அவளை இன் உயிர்காத்தான் - அவள் இனிய உயிரைக் காப்பாற்றினான்; வேந்தே! இன்னதே குற்றம் ஆயின் - அரசே! இப்பழி நீக்கியதே குற்றமாக முடியின் ; இனி குணம் யாது ? - இனி நன்மை யென்பதுதான் யாது ? கூறுவாயாக. 

விளக்கம் : கேண்மோ என்புழி மோ முன்னிலையசை. கொடி : உவமவாகுபெயர். கொடி என்றது குணமாலையை. நின்மதக்களிறு என்றான் நினக்கு அது வடு என்றற்கு ஏதுக்காட்டற்கு. என்மகன் நினக்குச் சிறிதும் குற்றமிழைத்திலன் நின்மூதூரில் ஒரு மடந்தையை நின்மதக் களிறு கொன்றது என்றால் அது நினக்கு வசைச்சொல் என்று நினைத்தான். ஆதலாற் காத்தருள்க என்பது கருத்து.
( 268 )

1119. நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார்
நடுக்குறு நவையை நீக்க
லாண்மக்கள் கடனென் றெண்ணி
யறிவின்மை துணிந்த குற்றம்
பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப
பொறுமதி யென்று பின்னு
நீண்மைக்க ணின்று வந்த
நிதியெலாந் தருவ லென்றான்.

பொருள் : நாண் மெய்க்கொண்டு ஈட்டப்பட்டார் - நாணத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டு சேர்க்கப்பட்ட பெண்கள் ; நடுக்குறும் நவையை நீக்கல் - அஞ்சத்தகும் குற்றத்தை நீக்குதல் ; ஆண் மக்கள் கடன் என்று எண்ணி - ஆண்மக்களின் கடமை யென்று நினைத்து ; அறிவின்மை துணிந்த குற்றம் - அறிவின்மையால் துணிந்து செய்த பிழையை ; பூண் மெய்க்கொண்டு அகன்ற மார்ப! பொறுமதி - அணிகலன் மெய்யிற் கொண்டு விரிந்த மார்பனே! பொறுத்தருள்க; என்று - என்றுரைத்து; பின்னும் - மேலும்; நீண்மைக்கண் நின்று வந்த நிதியெலாம் தருவல் என்றான் - நெடுங்காலமாக இருந்து வரும் செல்வம் யாவும் கொடுப்பேன் என்றும் கூறினான்.

விளக்கம் : ஆண்மக்கள் என்பார் ஈண்டு அரசராவார்; உயிரைக் காத்தலும் அழித்தலும் அவர் தொழிலாதலின். ( 269 )

1120. வாழிய ரிறைவ தேற்றான்
மாநிரை பெயர்த்த காளை
பீழைதான் பொறுக்க வென்னப்
பிறங்கிண ரலங்கன் மாலை
சூழ்கதி ராரம் வீழ்நூல்
பரிந்தற நிமிர்ந்து திண்டோ
ளூழ்பிணைந் துருமிற் சீறி
யுடல்சினங் கடவச் சொன்னான்.

பொருள் : இறைவ! வாழியர் - அரசே!. வாழ்வாயாக!- தோற்றான் மாநிரை பெயர்த்த காளை பீழை பொறுக்க என்ன - அறியாமையால் பெருநிரையை மீட்ட சீவகனின் குற்றத்தைப் பொறுத்தருள்க என்று கந்துகன் வேண்ட; பிறங்கு இணர் அலங்கல் மாலை - விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை; வீழ்நூல் பரிந்து - அமைந்த நூல் அறுந்து; சூழ்கதிர் ஆரம் அற - சூழ்ந்த ஒளியையுடைய முத்துமாலை அற்றுப்போக; நிமிர்ந்து - நிமிர்ந்து அமர்ந்து; திண்தோள் ஊழ்பிணைந்து - திண்ணிய தோளில் கையோடு கைமாறி ஏறத் தட்டி ; உருமின் சீறி - இடியென முழங்கி ; உடல்சினம் கடவச் சொன்னான் - மாறுபடும் சீற்றம் உந்த அரசன் கூறினான்.
 
விளக்கம் : பீழை: பிழையின் விகாரம். மாநிரை பெயர்த்த காளை என்றான் மாநிரை பெயர்த்தது அரசனுக்குற்ற வடுவை நீக்கலும் அறமும் ஆகி நின்றதுபோல இதுவும் ஆகும் எனக் கருதிச் செய்தான் என்பது தோன்ற. நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் இதனையும் ஒரு தொடராக்கி, இன்னதே குற்றமாயின் குணமினி யாது? என்றதற்கு முகம் ஆகாமை கண்டு, மகளிர் நடுக்கத்தை நீக்கல் ஆண்மக்கள் கடனென்று தோற்றானாய்த் தான் பெயர்த்த மாநிரையென்றெண்ணி, அறிவின்மையாலே துணிந்த குற்றத்தைப் பொறுப்பாய் என்றான் ; பின்னும் செவ்வி பெறாமையின் தொன்றுதொட்டு வ்ந்த பொருள் எலாம் தருவேன்; எனக்காகப் பொறுப்பாயாக என்றான், - எனக் கொண்டு கூட்டுவர். ( 270 )

1121. ஆய்களிற் றசனி வேக
மதன்மருப் பூசி யாகச்
சீவக னகன்ற மார்ப
மோலையாகத் திசைகள் கேட்பக்
காய்பவன் கள்வ ரென்ன
வெழுதுவித் திடுவ லின்னே
நீபரி வொழிந்து போய்நின்
னகம்புகு நினைய லென்றான்.

பொருள் : ஆய்களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக - அவனாற் சோர்வுற்ற களிறாகிய அசனி வேகத்தின் கொம்பு ஊசியாகவும் ; சீவகன், அகன்ற மார்பம் ஓலைஆ - சீவகனுடைய விரிந்த மார்பு ஓலையாகவும் கொண்டு ; திசைகள் கேட்ப - திசைகள் அறியுமாறு ; கள்வர் காய்பவன் என்ன - கள்வரைக் கொல்லுவேன்போல ; இன்னே எழுதுவித்திடுவல் - இப்போதே எழுதுவிப்பேன் ; நீ பரிவு ஒழிந்துபோய் - நீ வருத்தம் நீங்கிச் சென்று ; நின் அகம்புகு - நின் மனையை அடைக ; நினையல் என்றான் - இதனை நினையாதே என்றான்.
 
விளக்கம் : திசைகள் கேட்ப என்றான் வெள்ளிமலைக்கும் இவனால் வெல்லப்பட்ட அரசருக்கும் அறிவிப்பேன் என்னுங் கருத்துடன். கொல்லுதலை எழுதுவிப்பேன் என்றான், அசனி வேகம் என்னும் களிற்றின் கொம்பை ஊசியாகக்கொண்டு சீவகன் மார்பினை ஓலையாக வைத்து எழுதுவேன் என்றது கொல்வேன் என்பதைக் குறித்தது. ( 271 )

1122. நஞ்சனா னுரைப்பக் கேட்டே
நாய்கனு நடுங்கி யுள்ளம்
வெஞ்சின வேழ முண்ட
விளங்கனி போன்று நீங்கி
யெஞ்சினான் போல நின்றா
னேத்தருந் தவத்தின் மிக்க
வஞ்சமில் கொள்கை யான்சொ
லமிர்தினால் வற்புற் றானே.

பொருள் : நஞ்சு அனான் உரைப்பக் கேட்டு - நஞ்சு போன்ற கட்டியங்காரன் இவ்வாறு சொல்லக் கேட்டு; நாய்கனும் நடுங்கி - கந்துகனும் அச்சுற்று ; வெஞ்சின வேழம் உண்ட விளங்கனி போன்று உள்ளம் நீங்கி - கொடிய சினமுடைய களிறு என்னும் நோயால் உண்ணப்பட்ட விளம்பழம்போல வெறுமையாக அறிவு முதலியன நீங்கி ; எஞ்சினான் போல நின்றான் - இறந்தான் போல நின்றவன் ; ஏத்த அருந் தவத்தின் மிக்க - புகழ்தற்கரிய தவத்திற் சிறந்த ; வஞ்சம்இல் கொள்கையான் - தூய முனிவனுடைய ; சொல் அமிர்தினால் வற்பு உற்றான் - சொல்லாகிய அமிர்தத்தினால் உளவலிமை பெற்றான்.
 
விளக்கம் : நஞ்சனான் என்றது அவன் சச்சந்தனைக் கொன்ற கொடுமை குறித்துநின்றது. வேழம் - விளங்கனியிற்படுவதோர் நோய் அப்பெயருடைய யானைக்கியன்ற அடையோடு வந்தது. எஞ்சினான் - இறந்தோன். ( 272 )

1123. மின்னிலங் கெஃகி னானைப்
பெறுகலான் றந்தை மீண்டு
தன்னிலங் குறுக லோடுந்
தாயழு தரற்று கின்றா
ளென்னிலை யைற் கென்ன
யாவதுங் கவல வேண்டா
பொன்னலங் கொடிய னாயோர்
பொருளுரை கேளி தென்றான்.

பொருள் : மின் இலங்கு எஃகினானைப் பெறுகலான் - ஒளி விடும் வேலேந்திய சீவகனை மீட்காமல் ; தந்தை மீண்டு தன் இலம் குறுகலோடும் - தந்தை திரும்பித் தன் மனையை அடைந்தவுடன் ; தாய் அழுது அரற்றுகின்றாள் - தாய் அழுது அரற்று கின்றவளாய் ; ஐயற்கு என் நிலை ? என்ன - நம் ஐயனுக்கு நிலை ஏது ? என்ன ; பொன்நலம் கொடியனாய் !- பொன்னாலான நலமுறுங் கொடி போன்றவளே!; யாதும் கவல வேண்டா - ஏதும் கவலையடைய வேண்டா ; இது ஓர் பொருளுரை கேள் என்றான் - இந்த ஒரு பொருளுடைய மொழியைக் கேள் என்றான்.

விளக்கம் : பழைய நிலையோ சிறையோ என்றாள். தந்தை - கந்துகன். இல்லம், இலம் என விகாரமுற்றுநின்றது. தாய் : சுநந்தை. ஐயற்கு - சீவகனுக்கு. யாவதும் - ஒருசிறிதும். பொன்னலங்கொடி என்றது காமவல்லியை ; இது சுநந்தைக்குவமை. பொருளுரை - உறுதிமொழி. ( 273 )

1124. மதுமடை திறந்து தீந்தேன்
வார்தரு கோதை நீமுன்
செதுமகப் பலவும் பெற்றுச்
சிந்தைகூர் மனத்தை யாகி
யிதுமக வழியின் வாழே
னிறப்பல்யா னென்னு மாங்கட்
கதுமெனக் கடவு டோன்றிக்
கடைமுகங் குறுக வந்தான்.

பொருள் : தீ தேன் மதுமடை திறந்து வார்தரு கோதை - இனிய வண்டினத்திற்கு மதுவின் மடைதிறந்து ஒழுங்குங் கோதை போல்வாய் !; நீ முன் செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தைகூர் மனத்தையாகி - நீ முன்னர் சாப்பிள்ளை பலவற்றையும் பெற்றுச் சிந்தனையுடைய மனத்தையாய்; இது மகவு அழியின் வாழேன் - இம் மகவு இறப்பின் வாழமாட்டேன் ; யான் இறப்பல் என்னும் ஆங்கண் - நான் இறந்துபடுவேன் என்ற அளவிலே ; கதுமெனக் கடவுள் தோன்றிக் கடைமுகம் குறுக வந்தான் - விரைந்து ஒரு முனிவன் தோன்றித் தலைவாயிலை நெருங்கி வந்தான்.

விளக்கம் : கோதை - விளி. செதுமகவு - சாப்பிள்ளை. சிந்தை - துன்பம். மனத்தை : முன்னிலைஒருமை. இதுமகவு - இம்மகவு. கதுமென: விரைக் குறிப்பு. கடவுள் - துறவி. கடைமுகம் - தலைவாயில். ( 274 )

1125. கறவைகாண் கன்றின் வெஃகிக்
கண்டடி பணிந்து காமர்
நறவயா வுயிர்க்கு மாலை
நாற்றிய விடத்து ளேற்றி
யறவியாற் காறு மூன்று
மமைந்தநா லமிர்த மேந்தப்
பறவைதா துண்ட வண்ணம்
பட்டினிப பிரிவு தீர்த்தான்.

பொருள் : கறவை காண் கன்றின் - தாய்ப்பசுவைக் காணும் கன்றுபோல ; வெஃகிக் கண்டு அடி பணிந்து - விரும்பிக் கண்டு அடிகளில் வணங்கி ; காமர் நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி - அழகிய, தேனைச் சிந்துகின்ற பூமாலை தூக்கிய இடத்தில் அமர்த்தி; அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த - அறத் துறையாளற்கு ஒன்பது முறையும் அமைந்த நான்குவகை உணவுகளைப் படைக்க; பறவை தாது உண்ட வண்ணம் பட்டினிப் பரிவு தீர்த்தான் - வண்டு மகரந்தப் பொடியை உண்பதுபோலப் பசியின் வருத்தத்தைப் போக்கினான்.

விளக்கம் : ஒன்பது முறை : எதிர்கொளல் இடம் நனிகாட்டல் கால் கழீஇ - அதிர்பட அருச்சனை அடியின்வீழ்தரல் - மதுரநன் மொழியொடு மனம்மெய் தூயராய் - உதிர்கநம் வினையென உண்டி ஏந்தினார் (சீவக. 2828. நச்சி. மேற்) இது நவபுண்ணியக் கிரமம் எனவும்படும். நால் அமிர்து : உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. கறவை - கறக்கும் ஆன். கறவைகாண் கன்று ஈண்டுமுகத்தான் அமர்ந்து நோக்கியதற்கு உவமை. மாலை நாற்றியவிடம் என்றது ஒப்பனை செய்யப்பட்ட மணையில் என்றவாறு. அறவியான் - துறவற மேற்கொண்டோன். பறவை - ஈண்டு அறுகாற் சிறுபறவை. ( 275 )

1126. ஆய்மணிப் பவளத் திண்ணை
யரும்பெறற் கரகத் தங்கட்
டூய்மணி வாச நன்னீர்
துளங்குபொற் கலத்து ளேற்று
வேய்மணித் தோளி நிற்ப
விழுத்தவ னியம முற்றி
வாய்மணி முறுவ றோன்ற
வந்தனை விதியிற் செய்தேன்.

பொருள் : ஆய்மணிப் பவளத் திண்ணை - ஆராய்ந்த மணி அழுத்தின பவளத் திண்ணையிலிருந்து ; அரும்பெறல் கரகத்து அங்கண் - அரியதாகக் கிடைத்த கரகத்தில் உள்ள ; தூய்மணி வாசம் நன்னீர் - தூய நீல மணிபோல் விளங்கும் மணமிகும் நறுநீரை ; துளங்கு பொன் கலத்துள் ஏற்று - ஒளிவிடும் பொற்கலத்திலே (தரையில் வீழாமல்) ஏற்று ; வேய்மணி தோளி நிற்ப - மூங்கிலனைய மணி அணிந்த தோளியாகிய நீ நிற்ப ; விழுத்தவன் நியமம் முற்றி - சிறந்த தவமுடையோன் தன் நியமங்ளை முடித்துக்கொண்ட பின்னர் ; வாய்மணி முறுவல் தோன்ற வந்தனை விதியின் செய்தேன் - வாயில் முத்தனைய முறுவல் தோன்றுமாறு குறையிரக்கும் நிலையுடன் வணக்கத்தை முறையாக இயற்றினேன்.
 
விளக்கம் : முற்றி - முற்ற : எச்சத்திரிபு. ( 276 )

1127. ஆறெலாங் கடலுள் வைகு
மருந்தவத் திறைவ னூலுள்
வேறெலாப் பொருளும் வைகும்
விழுத்தவ வறிதி நீயே
யூறிலா வுணர்வி னோக்கி
யுரைமதி யெவன்கொன் மக்கட்
பேறிலா ளல்லள் பெற்ற
வுயிர்சென்று பிறக்கு மென்றேன்.

பொருள் : விழுத்தவ! - சிறந்த தவமுடையானே!; ஆறு எலாம் கடலுள் வைகும் - ஆறுகள் யாவும் கடலிலே தங்கும் (அதுபோல) ; அருந்தவத்து இறைவன் நூலுள் வேறு எலாப் பொருளும் வைகும் - அரிய தவத்தினையுடைய அருகன் ஆகமத்திலே வேறு வேறுபட்ட எல்லா நூல்களின் பொருளும் தங்கும் ; நீயே அறிதி - நீயே அப் பொருள்களை அறிவாய்; ஊறு இலா உணர்வின் நோக்கி உரைமதி - கெடுதியில்லா அறிவுடன் ஆராய்ந்து கூறுக; மக்கள்பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் எவன்கொல் சென்று பிறக்கும் ? என்றேன் - குழந்தைப் பேறில்லாதவள் அல்லள் ஆகிய இவள் பெற்ற உயிர் எங்கே சென்று பிறக்கும் என்றேன்.

விளக்கம் : இவள் மக்கட் பேறில்லாதவளல்லள் ; பெற்ற மக்களுயிர் மற்றோரிடத்தே சென்று பிறக்கும் ; இனிப் பிள்ளை எத்தன் மைத்து? என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். அருகனாமத்துள் எல்லாம் அடங்குதலின் அதனையறிந்த நீ கணித நிலையும் அறிவாய் என்ற கருத்துடன் இங்ஙனம் வினவினான். கரகம் - கமண்டலம். தூய்நீர் மணிநீர் வாசநீர் நன்னீர் எனத் தனித்தனி கூட்டுக. தோளி : முன்னிலைப்புறமொழி ; நீ என்பது பொருள். விழுத்தவன் - சிறந்த தவத்தையுடையவன். நியமம் - ஒழுக்கமுறைமை. ( 277 )

1128. வம்பவிழ் கோதை தந்த
வான்றுவர்க் காயை வீழ்த்தோர்
செம்பழுக் காயை வாங்கித்
திருநிலத் தெடுத்துக் கொண்டாங்
கம்பழ நீண்ட வாட்க
ணலமரு மணிசெ யம்பூங்
கொம்படு நுசுப்பி னாய்க்குத்
தந்தனென் பேணிக் கொண்டாய்.

பொருள் : வம்பு அவிழ்கோதை!- மணம் விரியும் மாலையாய்!; தந்த வான்துவர்க் காயை வீழ்த்து - நான் தந்த சிறந்த துவர்க்காய் ஒன்றை நீ வீழ்ப்ப ; ஓர் செம்பழுக்காயை வாங்கித் திருநிலத்து எடுத்துக்கொண்டு - ஒரு செம்மையான பழுக்காயை வளைந்து நீ வழிபாடு செய்த நிலத்திலிருந்து எடுத்து; ஆங்கு, அம்பு அழ நீண்ட வாள்கண் அலமரும் அணிசெய் அம்பூங் கொம்பு அடு நுசுப்பினாய்க்கு - அதனை, அம்பு வருந்த நீண்ட ஒளிமிகுங் கண்களையும், அசையும் அழகிய பூங்கொம்பை வருத்தும் இடையினையுமுடைய நினக்கு ; தந்தனென், பேணிக் கொண்டாய் - கொடுத்தேன் நீ, அதனைக் காப்பாற்றிக் கொண்டாய்.
 
விளக்கம் : வம்பு - மணம். கோதை - முன்னிலைப் புறமொழி. யான் தந்த என்க. வீழ்த்த - வீழ்ப்ப. வாங்கி - குனிந்து. அலமரும் நுசுப்பு, அணிசெய் நுசுப்பு அம்பூங்கொம்பு அடுநுசுப்பு எனத் தனித்தனி கூட்டுக. ( 278 )

1129. பெற்றவந் நிமித்தத் தானும்
பிறந்தசொல் வகையி னானு
மற்றமின் மணியை யங்கைக்
கொண்டவர் கண்டு காட்டக்
கற்பகங் காம வல்லி
யனையநீர் கேண்மி னென்று
முற்றுபு கனிந்த சொல்லான்
முனிவரன் மொழியு மன்றே.

பொருள் : பெற்ற அந் நிமித்தத்தானும் - (முனிவனுக்கு நம்மாற்) கிடைத்த அந்த நிமித்தத்தாலும் ; பிறந்த சொல் வகையினானும் - என் வாயிற் பிறந்த சொல் வகையாலும் ; அற்றம் இல் மணியை அங்கைக் கொண்டவர் - அழிவற்ற இறைவனாகிய மணியை அங்கையிலே கொண்டவர் ; கண்டு காட்ட - அறிந்து நமக்குக் கூறவேண்டி ; கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்மின் என்று - கற்பகத்தையும் காமவல்லியையும் போன்ற நீங்கள் கேளுங்கோள் என்று ; முற்றுபு கனிந்த சொல்லான் - முதிர்ந்து கனிந்த சொல்லாலே; முனிவரன் மொழியும் - முனிவரன் கூறுவான்.
 
விளக்கம் : நிமித்தம் : துவர்க்காயை வீழ்த்துப் பழுக்காயை எடுத்தது. சொல்வகை: இறக்கும் என்னாது சென்று பிறக்கும் என்றதனாற் போமதுவும் பிறக்குமதுவும் சொல்லியது. கொண்டவர், முனிவரன்: பன்மை யொருமை மயக்கம். இனி, அற்றம் இன் மணியை அங்கையிற் கொண்டோர் அம் மணியை நன்றாக அறியுமாறு போல என உவமையாகக் கூறின் பன்மையொருமை மயக்கம் இராது. ( 279 )

1130. ஒன்றுநீர் கவலல் வேண்டா
வுலகெலா மாளுஞ் சீர்த்திப்
பொன்றிக ழுருவி னானோர்
புண்ணியற் பெறுதி ரென்ன
நின்றநீ யுவந்து நீங்க
நிகழ்பொரு ளெனக்குச் செப்பிப்
பின்றையு நிகழ்வ துண்டு
பேசுவல் கேளி தென்றான்.

பொருள் : ஒன்றும் நீர் கவலல் வேண்டா - எதற்கும் நீர் வருந்த வேண்டா ; உலகு எலாம் ஆளும் சீர்த்தி - உலகமெல்லாம் ஆளும் சிறப்பினையுடைய ; பொன்திகழ் ஒளியினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன - பொன்போல் விளங்கும் ஒளியையுடைய நன்மகனைப் பெறுவீர் என்று கூற ; நின்ற நீ உவந்து நீங்க - (அதனைக் கேட்டு) ஆங்கு நின்ற நீ மகிழ்ந்து செல்ல, அதன்பின் ; நிகழ்பொருள் எனக்குச் செப்பி - (அம் மகனுக்குப் பிறப்பு முதல் துறவளவும்) நிகழ்பொருளை எனக்குக் கூறி ; பின்றையும் நிகழ்வதுண்டு - பின்னர் நிகழுமொரு துன்பமும் உண்டு ; பேசுவல் இது கேள் என்றான் - கூறுவேன் ; இதனைக் கேள் என்று மேற்கூறினான்.

விளக்கம் : பெறுதிர் என்றது சுநந்தைக்குப் பிள்ளை பெறுவை என்றாற் போலிருந்தது. அவன் கூறியது வளர்க்கப் பெறுவீர் என்று.
( 280 )

1131. நிலவுறழ் பூணி னானை
நெடுநக ரிரங்கக் கையாத்
தலபல செய்து கொல்வா
னருளிலான் கொண்ட போழ்திற்
குலவிய புகழி னானைக்
கொண்டுபோ மியக்க னஞ்சல்
சிலபகல் கழிந்து காண்டி
சிந்தியீ தென்று சொன்னான்.

பொருள் : நிலவு உறழ் பூணினானை - நிலவை மாறுபடும் ஒளியுறு பூணினையுடையவனை; நெடுநகர் இரங்கக் கையாத்து - பெருநகர் புலம்பக் கையைப் பிணித்து; அலபல செய்து கொல்வான் - தகவற்றன பல செய்து கொல்வதற்கு ; அருள் இலான் கொண்ட போழ்தில் - இரக்கமற்ற கட்டியங்காரன் கொண்ட காலத்தில் ; குலவிய புகழினானை இயக்கன் கொண்டுபோம் - பொருந்திய புகழுடையானை ஓர் இயக்கன் அழைத்துச் சென்றுவிடுவான் ; அஞ்சல் -அஞ்சற்க ; சில பகல் கழிந்து காண்டி - சில நாட்கள் கழித்துக் காண்பாய் ; ஈது சிந்தி என்று சொன்னான் - இதனை நீ சீந்திக்க என்றுரைத்தான்.

விளக்கம் : நீங்கள் அலபல செய்து பூணினானைக் கையைத் தொழில் செய்யாதவாறு பண்ணுதலாலே என்பர் நச்சினார்க்கினியர். அதனானே நீயும் வருந்தாதே என்று ஆறுதல் கூறினான் கந்துகன். ( 281 )

1132. வசையற நிறைந்த கற்பின்
மாலையு மாமி தானுந்
தசையற வுருகி வெந்து
தம்முயிர் நீங்கு மாங்க
ணொசிதவன் சொற்க ளென்னு
நோன்புணை தழுவி நெஞ்சிற்
கசிவெனுங் கடலை நீந்திக்
கரையெனுங் காலை கண்டார்.

பொருள் : வசை அற நிமிர்ந்த கற்பின் மாலையும் மாமிதானும் - பழிப்பு நீங்க உயர்ந்த கற்பினையுடைய குணமாலையும் சுநந்தையும் ; தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் அங்கண் - தசையின்றி மெலிந்து வெதும்பித் தம் உயிரை விடும் நிலை வந்தபோது ; நொசி தவன் சொற்கள் என்னும் நோன்புணை தழுவி - நுண்ணிய தவத்தினனுடைய சொற்களாகிய வலிய தெப்பத்தைக் கைப்பற்றி ; நெஞ்சில் கசிவு எனும் கடலை நீந்தி - உள்ளத்தே வருத்தம் என்கிற கடலைக் கடந்து ; காலையெனும் கரை கண்டார்; (எட்டுத் திங்க்ள் என்னும்) காலையாகிய கரையைக் கண்டனர்.
 
விளக்கம் :எட்டுத் திங்கள் கழிந்து சீவகனைக் கண்டார். ஆதலின் எட்டுத் திங்கள் என்கிற காலை என்றார் நச்சினார்க்கினியர். (282)

1133. திருக்குழன் மகளிர் நையச்
சீவக சாமி திண்டோள்
வரிக்கச்சிற் பிணிக்கப் பட்டான்
மன்னனா லென்னக் கேட்டே
தருக்குடை வேழம் வாளார்
ஞாட்பினுட் டகைமை சான்ற
மருப்புட னிழந்த தொத்தார்
மன்னுயிர்த் தோழன் மாரே.

பொருள் : திருக்குழல் மகளிர் நைய - அழகிய குழலையுடைய மகளிர் வருந்துமாறு ; மன்னனால் சீவகசாமி திண்தோள் வரிக்கச்சின் பிணிக்கப்பட்டான் - அரசனாற் சீவகன் தன் திண்ணிய தோள்கள் வரிதலையுடைய கச்சினாற் கட்டப்பட்டான் ; என்னக் கேட்டு - என்று கேள்வியுற்று ; மன் உயிர்த் தோழன் மார் - நிலைபெற்ற உயிரனைய தோழர்கள் ; வாள்ஆர் ஞாட்பினுள் - வாளேந்திச் செய்யும் போரிலே ; தருக்கு உடைவேழம் - செருக்குற்ற களிறு ; தகைமை சான்ற மருப்பு உடன் இழந்தது ஒத்தார் - சிறப்புற்ற மருப்புகளைச் சேர இழந்தனைப் போன்றனர்.
 
விளக்கம் : இங்கும் நச்சினார்க்கினியர், தன் தோளை இருமுது குரவராலே கச்சினாற் கட்டினாற் போலத் தொழில் செய்யாதபடி பண்ணப்பட்டான் என்பர். ( 283 )

1134. நட்டவற் குற்ற கேட்டே
பதுமுக னக்கு மற்றோர்
குட்டியைத் தின்ன லாமே
கோட்புலி புறத்த தாகக்
கட்டியங் கார னென்னுங்
கழுதைநம் புலியைப் பாய
வொட்டியிஃ துணர லாமே
யுரைவல்லை யறிக வென்றான்.

பொருள் : நட்டவற்கு உற்ற கேட்டு - தன் நண்பனுக்கு நேர்ந்தவற்றைக் கேட்டு ; பதுமுகன் நக்கு - பதுமுகன் நகைத்து; கோள் புலி புறத்தது ஆகக் குட்டியைத் தின்னல் ஆமே?- கொல்லவல்ல புலி காத்துக்கொண்டிருக்க (மற்றொன்றாற்) குட்டியைத் தின்ன இயலுமோ? இயலாது ; கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியைப் பாய - கட்டியங்காரன் எனப்படுங் கழுதை நம் புலியைப் பாய்வதற்கு ; ஒட்டி இஃது உணரலாமே?- நாமும் மெய்யென்று நம்பிப் பொருந்தி உணர்த்ல் ஆகாது ; உரைவல்லை அறிக என்றான் - உரைவல்லவனே! இதனை அறிந்து வருக என்று ஒற்றனிடம் கூறினான்.
 
விளக்கம் : தான் காத்தற் றொழிலையுடைமையின் குட்டியென்றான். மடங்கலாற்றற் பதுமுகன் காக்க (சீவக. 1896) காண்க. ( 284 )

1135. சிலையொடு செல்வ னின்றாற்
றேவரும் வணக்க லாற்றார்
முலையுடைத் தாயோ டெண்ணித்
தந்தையிக் கொடுமை செய்தான்
கலைவல்லீ ரின்னுங் கேண்மி
னின்னதென் றுரைக்கு மாங்கண்
விரைவொடு சென்ற வொற்றாள்
விளைந்தவா பேசு கின்றான்.

பொருள் : சிலையொடு செல்வன் நின்றால் - வில்லொடு சீவகன் நின்றால்; தேவரும் வணக்கல் ஆற்றார் - வானவரும் அவனைத் தாழ்வித்தல் ஆற்றார் ; முலையுடைத்தாயோடு எண்ணி - நற்றாயொடு சூழ்ந்து ; தந்தை இக்கொடுமை செய்தான் - தந்தை இக் கொடிய செயலைச் செய்திருத்தல் வேண்டும் ; கலைவல்லீர், இன்னும் இன்னது கேண்மின் - கலைவல்ல தோழர்களே ! மற்றும் இதனையுங் கேட்பீராக ; என்று உரைக்கும் ஆங்கண் - என்று கூறும் அப்போது; விரைவொடு சென்ற ஒற்று ஆள் - அங்கே விரைந்து வந்த ஒற்றன் ; விளைந்தஆ பேசுகின்றான் - நேர்ந்த ஆறு இதுவெனச் செப்புகின்றான்.
 
விளக்கம் : ஆறு என்பது ஆ எனக் கடைகுறைந்து நின்றது. ( 285 )

1136. இட்டிவேல் குந்தங் கூர்வா
ளிருஞ்சிலை யிருப்புச் சுற்றார்
நெட்டிலைச் சூலம் வெய்ய
முளைத்தண்டு நெருங்க வேந்தி
யெட்டெலாத் திசையு மீண்டி
யெழாயிரத் திரட்டி மள்ளர்
கட்டழற் கதிரை யூர்கோள்
வளைத்தவா வளைத்துக் கொண்டார்.

பொருள் : இட்டிவேல்குந்தம் கூர்வாள் இருஞ்சிலை இருப்புச் சுற்றுஆர் நெடுஇலைச் சூலம் வெய்ய முளைத்தண்டு - ஈட்டியும் வேலும் குந்தமும் வாளும் வில்லும் இருப்புப்பூண் அமைந்த நீண்ட இலையையுடைய சூலமும் கொடிய முளையையுடைய தண்டும் ; நெருங்க ஏந்தி - செறிய எடுத்துக்கொண்டு ; எட்டு எலாத் திசையும் ஈண்டி - எட்டாகிய எல்லாத் திசையினும் வந்து நிறைந்து; எழாயிரத்து இரட்டி மள்ளர் - பதினாலாயிரம் வீரர் ; கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தஆ -மிகுந்த வெப்பமுடைய ஞாயிற்றைப் பரிவேடிப்பு வளைந்தவாறு போல; வளைத்துக் கொண்டார் - வளைத்துக் கொண்டனர்.
 
விளக்கம் : ஈட்டி : இட்டியென விகாரப்பட்டது. இருப்புச் சுற்று - பூண். ( 286 )

1137. பிடியொடு நின்ற வேழம்
பெருவளைப் புண்ட வண்ணம்
வடிமலர்க் கோதை யோடும்
வளைத்தலின் மைந்தன் சீறி
விடுகணை சிலையொ டேந்தி
வெருவரத் தோன்ற லோடு
மடுபுலி கண்ட மான்போ
லாறல வாயி னாரே.

பொருள் : பிடியொடு நின்ற வேழம் பெருவளைப்பு உண்ட வண்ணம் - பிடியுடன் நின்ற களிறு பெரிதும் வளைப்புற்றாற் போல ; வடிமலர்க் கோதையோடும் வளைத்தலின் - தெளிந்த மலர்க்கோதையாள் குணமாலையுடனே மனையிடத்தே வளைப்புறுதலின் ; மைந்தன் சீறி விடுகணை சிலையொடு ஏந்தி - சீவகன் முழங்கி ஆராய்ந்த அம்பையும் வில்லையும் ஏந்தி ; வெருவரத் தோன்றலோடும் - அஞ்சுறுமாறு வெளிப்பட்டபோது ; அடுபுலி கண்ட மான்போல் - கொல்லும் புலியைக் கண்ட மானைப்போல ; ஆறு அல ஆயினார் - வழி தெரியாமல் ஓடினர்

விளக்கம் : பிடி குணமாலைக்கும் வேழம் சீவகனுக்கும் உவமைகள். வேழம் - ஈண்டு களிறு என்பதுபட நின்றது. புலி சீவகனுக்கும் மான், படைஞர்க்கும் உவமை. ஆறு - வழி. அல : பலவறிசொல். அல்லாத வழிகள் என்னும் பொருட்டு. ( 287 )

1138. சூழ்கழன் மள்ளர் பாறச்
சூழ்ச்சியிற் றந்தை புல்லி
வீழ்தரு கண்ண டம்மோய்
விளங்குதோள் பிணிப்ப மற்றென்
றோழரை வடுச்செய் திட்டே
னென்றுதான் றுளங்கி நின்றா
னூழ்திரைப் பாம்பு சேர்ந்த
வொளிமிகு பருதி யொத்தான்.

பொருள் : சூழ்கழல் மள்ளர் பாற - கழலணிந்த மள்ளர்கள் இங்ஙனம் கெடுதலாலே; தந்தை சூழ்ச்சியின் புல்லி - இது பொருளன்றென்றெண்ணித் தந்தை வந்து தழுவ ; வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்குதோள் பிணிப்ப - நீர் வீழுங் கண்ணினளாய் நற்றாய் சீவகனது விளங்குந் தோளைக் கட்ட ; மற்று என் தோழரை வடுச் செய்திட்டேன் - இனி என் தோழர்களைப் பழியுறச் செய்தேன்; என்று தான் துளங்கி நின்றான்-என்று அவன் கலங்கி நின்றான் ; ஊழ்திரைப் பாம்பு சேர்ந்த ஒளிமிகு பருதி ஒத்தான் - (அப்போது) ஊழினாற் கடலின் முகட்டிலே பாம்பினாற் பற்றப்பட்ட ஒளியுறும் ஞாயிறு போன்றான்.

விளக்கம் : தம் ஆய் : தம் மோய் எனத் திரிந்தது. தம்மொய் விளங்கு தோள் எனவும் பாடம். அதற்குத் தம் என்பது பன்மைக் காதலாற் பன்மை யொருமை மயக்கம் எனக் கொள்க. திரைப் பரப்புச் சேர்ந்த எனவும் பாடம். இங்கும் நச்சினாக்கினியர் புல்லி என்பதற்கு நெருங்கிய என்றும், பிணிப்ப என்பதற்குத் தொழில் செய்யாதபடி செய்ய என்றும் பொருள் கூறுவர். மற்றும் அவர் ஊழ் என்பது ஊழியின் விகாரம் என்றுரைத்து, ஊழித் திரைப்பருதி என இயைத்துக் கடலிற் றோன்றிய ஞாயிறு என்று பொருள் கூறுவர்.
( 288 )

1139. ஒற்றன்வந்த துரைப்பக் கேட்டே
யொத்ததோ வென்சொ லென்னாச்
சுற்றினார் முகத்தை நோக்கிச
சூழிமால் யானை யன்னா
னுற்றவிவ் விடரைத் தீர்க்கு
முபாயநீ ருரைமி னென்றான்
பொற்றிரட் குன்றம் போலப்
பொலிவுகொண் டிருந்த தோளான்.

பொருள் : ஒற்றன் வந்து உரைப்பக் கேட்டு - ஒற்றன் வந்து இங்ஙனம் கூறக் கேட்டு ; சூழிமால் யானை அன்னான் - முகபடாம் அணிந்த பெரிய யானை போன்றவனும்; திரள் பொன் குன்றம் போலப் பொலிவு கொண்டிருந்த தோளான் - திரண்ட பொன்மலைபோல அழகுகொண்ட தோளானுமாகிய பதுமுகன்; சுற்றினார் முகத்தை நோக்கி - சூழ இருந்தவரின் முகத்தைப் பார்த்து ; என் சொல் ஒத்ததோ ? என்னா - என் மொழி பொருந்திற்றோ என்று வினவி; உற்ற இவ் இடரைத் தீர்க்கும் உபாயம் நீர் உரைமின் என்றான் - நேர்ந்த இவ் விடுக்கணைப் போக்கும் சூழ்ச்சியை நீவிர் மொழிமின் என்றான்.
 
விளக்கம் : சூழி - முகபடாம். மால் - பெரிய. யானையன்னானாகிய தோளான் என்க. திரள் பொன் குன்றம் என்பது திரண்ட பொன்னாகிய மலை என முன்னது வினைத்தொகையும் பின்னது பண்புத் தொகையுமாம். ( 289 )

1140. நிறைத்திங்க ளொளியொ டொப்பான்
புத்திசே னினைந்து சொல்லு
மறைத்திங்க ணகரை வல்லே
சுடுதுநாஞ் சுடுத லோடு
மிறைக்குற்றேல் செய்த லின்றி
யெரியின்வாய்ச் சனங்க ணீங்கச்
சிறைக்குற்ற நீங்கச் செற்றாற்
செகுத்துக்கொண் டெழுது மென்றான்.

பொருள் : நிறைத் திங்கள் ஒளியொடு ஒப்பான் - கலை நிறைந்த திங்களின் ஒளியுடன் ஒப்பானாகிய; புத்திசேன் நினைந்து சொல்லும் - புத்திசேனன் சூழ்ந்து சொல்வான்; நாம் இங்கண் நகரை மறைத்து வல்லே சுடுதும் - நாம் இப்போதே நகரை மறைந்திருந்து எரிப்போம்; சுடுதலோடும் - எரித்தவுடன்; இறைக் குற்றேல் செய்தல் இன்றி - அரசனுக்குக் குற்றேவல் செய்தலை விடுத்து ; எரியின்வாய்ச் சனங்கள் நீங்க - தீயை அணைக்க மக்கள் நீங்கிய பின் ; செற்றான் செகுத்து - மதனனைக் கொன்று ; சிறைக்குற்றம் நீக்கிக்கொண்டு எழுதும் என்றான் - சிறையாகிய குற்றத்தை நீக்கிக் கொண்டு பேர்வோம் என்றான்.
 
விளக்கம் : மறைந்து என்பது விகாரப்பட்டு மறைத்து என வந்தது. புத்திசேன், குற்றேல் : விகாரங்கள் (புத்திசேனன், குற்றேவல்). இவன் அந்தணன் ஆதலின் முற்கூறினான் என்பர். இவனைத் திங்கள் விரவிய பெயரினான் (சீவக. 171) என்றார் முன்னும். (290 )

1141. காலத்தீ நகரை மேயக்
கடியரண் கடிந்த வம்பிற்
சாலத்தீச் சவரர் கோலஞ்
செய்துநம் மறவ ரீண்டிக்
கோலத்தீ வேலி னானைக்
கோயிலுள் வளைப்ப விப்பர்
லாலைத்தீ யிடங்க டோறு
மாகுலஞ் செய்து மென்றான்.

பொருள் : கடி அரண் கடிந்த அம்பின் - காவலுடைய மூன்று மதிலையும் அழித்த கணையைப்போல ; காலத்தீ நகரை மேய - ஊழித்தீயைப் போன்று நாம் இடும்தீ நகரை அழிக்க ; சாலத்தீச் சவரர் கோலம் செய்து - பொருந்துமாறு கொடிய வேடர் கோலங்கொண்டு ; நம் மறவர் ஈண்டி - நம் வீரர் கூடி ; கோயிலுள் கோலத் தீ வேலினானை வளைப்ப - அரண்மனையிலே அழகிய தீயனைய வேலுடையவனைச் சூழ்ந்து கொள்ள ; இப்பால் - இப் பக்கத்தே ; ஆலைத் தீ இடங்கள்தோறும் ஆகுலம் செய்தும் என்றான் - ஆலையிற் பாகு காய்ச்சும் தீயையுடைய நாடெங்கும் துன்பத்தை உண்டாக்குவோம் என்று (பதுமுகன்) கூறினான்.

விளக்கம் : உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண் - டெய்ய வல்லானுக்கே உந்தீபற (திருவா. திருவுந்தி.4) என்றாற்போல. காலத்தீ - ஊழிமுடிவில் உலகினை அழிக்கும் நெருப்பு. ஊழித்தீப் போலும் தீ என்க. மேய்தல் - ஈண்டு அழித்தல். கடியரண் என்றது முப்புரத்தை. அம்பு - ஈண்டுச் சிவபெருமான் எய்த அம்பு. சவரர் - வேடருள் ஒருவகையினர், வேலினான் - கட்டியங்காரன், ஆலைத்தீயிடம் என்றது மருதநில ஊர்களை. ( 291 )

1142. சிறைப்புறங் காத்துச் செல்லு
மதனனைத் தெருவில் வீழப்
பிறைத்தலை யம்பிற் சென்னி
பெருநிலத் திடுவ லிட்டான்
மறுக்குற்று மள்ளர் நீங்க
மைந்தனைக் கொண்டு போகி
யறைத்தொழி லார்க்குஞ் செல்லா
வருமிளை புகுமி னென்றான்.

பொருள் : சிறைப்புறம் காத்துச் செல்லும் மதனனை - (அப்போது) சிறையைப் பாதுகாத்துக் கொண்டு போகும் மதனனை; சென்னி தெருவில் பெருநிலத்து வீழப் பிறைத்தலை அம்பின் இடுவல் - அவன்தலை தெருவிலே தரையில் வீழுமாறு பிறை போன்ற தலையை உடைய அம்பினாலே வீழ்த்துவேன்; இட்டால் - வீழ்த்தினால் ; மறுக்குற்று மள்ளர் நீங்க - மனங்கலங்கி வீரர்கள் நீங்கினவுடன் ; மைந்தனைக் கொண்டு போகி - சீவகனைக் கொண்டு சென்று ; அறைத் தொழிலார்க்கும் செல்லா - கீழறுக்குந் தொழிலுடைய அமைச்சர்க்கும் நினைக்கவொண்ணாத ; அருமிளை என்றான் - காவற் காட்டிலே செல்லுமின் என்றான்.
 
விளக்கம் : மதனன் - கட்டியங்காரன் மைத்துனன். பிறைபோலும் முகத்தையுடைய அம்பு. மள்ளர் - படைமறவர். மைந்தன் : சீவகன். பதுமுகன் தன் தோழர்களை நோக்கி மதனனை ஓர் அம்பினாற் கொன்று விடுவேன். நீங்கள் சீவகனைக்கொண்டு காவற்காட்டிற் புகுமின் என்றான் என்பது கருத்து. அறைத்தொழிலார் - அமைச்சர் : கீழறுக்குந் தொழிலையுடையோர் என்பது பொருள்.
 
அறைபோகமைச்சர் (5 - 130).

என்பர் இளங்கோவடிகளார்.
 
அறைபோக்கமைச்சின் முறைபோக்கெண்ணினும் (3 - 17 : 53).

என்றார் கதையினும். ( 292 )

1143. மாற்றவர் மலைப்பி னாங்கே
வாட்கடாக் கொண்டு நொய்தா
வேற்றுல கேற்றி நும்பின்
விரைதர்வே னுலகிற் கெல்லா
மாற்றிய நட்பு வல்லே
வலிப்புறீஇ யிடுமி னென்றான்
கூற்றங்கள் பலவுந் தொக்க
கூற்றத்திற் கூற்ற மொப்பான்.

பொருள் : கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான் - கூற்றுக்கள் பலவுந் திரண்ட கூறுபாட்டிலே சிறந்த கூற்றத்தைப் போன்றவனான பதுமுகன் ; மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடாக் கொண்டு - (அவ்வாறு மிளையிற் புகுந்தால்) பகைவர்கள் மலைவதுண்டாயின், வாளாலே கடாவிட்டு; நொய்துஆ வேறு உலகு ஏற்றி நும்பின் விரைதர்வேன் - விரைவாக விண்ணுலகினேற்றி உம்முடன் விரைந்து வருவேன்; ஆற்றிய நட்பு உலகிற்கு எல்லாம் வலிப்பு உறீஇ இடுமின் என்றான் - நீங்கள் நடத்திய நட்பை உலகெல்லாம் நிலைபெறுத்தியிடுமின் என்றான்.
 
விளக்கம் : கூற்றத்தில் உவமை கூறுமிடத்துப் பல கூற்றங்களாலே பண்ணினதொரு கூற்றம் ஒப்பான் என்றுமாம்.  கடாக்கொள்ளுதலாவது எருதுகளால் வைக்கோலைத் துவைத்தல் போன்று பகைவரைப் போர்க்களத்தே துவைத்தழித்தல் என்க.
 
கடாவிடு களிறுபோல உச்சியும்
மருங்கும்பற்றிப் பிளந்துயிர் பருகி

என்பர் பின்னும் (1153) . விரைதருவேன் என்பது விரைதர்வேன் என உகரம் கெட்டுநின்றது. ( 293 )

1144. காலனைச் சூழந்த நோய்போ னபுலமா விபுலர் சூழ
வேலினை யேந்தி நந்தன் வெருவரத் தோன்ற லோடு
மாலைதன் றாதை தானு மக்களும் வந்து கூடிப்
பாலவர் பிறரு மீண்டிப் பாய்புலி யினத்திற் சூழ்ந்தார்.

பொருள் : காலனைச் சூழ்ந்த நோய்போல் நபுலமா விபுலர் சூழ - காலன் ஏவினவாறு செய்ய அவனைச் சூழ்ந்த நோய்போல நபுலனும் விபுலனும் ; மாவின் மேற்சூழ ; நந்தன் வேலினை ஏந்தி - நந்தட்டன் வேலேந்தியவனாய் வெருவரத் தோன்றலோடும் - அச்சமுண்டாகத் தோன்றின அளவிலே ; மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடி - குணமாலையின் தந்தையும் அவன் மக்களும் வந்து சேர்ந்து ; பல்லவர் பிறரும் ஈண்டி - தம் பகுதியிலுள்ள மற்றோரும் வந்து தோழருடன் தொக்கு; பாய்புலி இனத்தின் சூழ்ந்தார் - பாயும் புலியினம் போலச் சூழ்ந்தனர்.

விளக்கம் : நபுல விபுலர் கபில பரணர் போலக் கொள்க. காலன் ஆவி கவருங்கால் அவனுக்குதவியாக அவ்வுயிர் கொண்ட உடலைச் சிதைக்குமாறு சீவகன் எளிதில் வெல்லும்படி பகைவர் வலியை அழிக்கும் துணைவர் என்பது கருத்து. காலன் ஏவியவிடத்தே சேறற்கு அவனைச் சூழ்ந்த நோய்கள் என்க. அன்றியும் உயிர்களைக் கவர்தற்குக் காலன் கொண்டல், இடி, மின்னல், நீர், காற்று, தீ, மரம், கல், மண் முதலிய பல பொருள்களையும் ஏவுவன் ஆதலால் அவைகள் என்னினும் பொருந்தும். மாலை : குணமாலை. ( 294 )

1145. மட்டுவா யவிழ்ந்த தண்டார்த்
தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன்மேற்
காப்பமைந் திவர்க ணிற்பப்
பட்டுலாய்க் கிடந்த செம்பொற்
கலையணி பரவை யல்கு
லிட்டிடைப் பவளச் செவ்வாய்த்
தத்தையு மிதனைக் கேட்டாள்.

பொருள் : மட்டுவாய் அவிழ்ந்த தண்தார்த் தாமரை நாமன் சொன்ன - தேனைத் தன்னிடத்தே கொண்டு அலர்ந்த தண்ணிய தாமரையின் பெயருடையான் (பதுமுகன்) கூறிய ; கட்டு அமை நீதி தன்மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்ப - வகுப்பமைந்த முறையிலே காவலாகக் கூடி இவர்கள் நிற்க; பட்டு உலாய்க் கிடந்த செம்பொன் கலை அணி - பட்டுக் கலந்து கிடந்த, பொன்னாலான மேகலை அணிந்த; பரவை அல்குல் - பரப்பமைந்த அல்குலையும்; இட்டு இடை - சிற்றிடையையும்; பவளச் செவ்வாய் - பவளம் போன்ற சிவந்த வாயையும் உடைய; தத்தையும் இதனைக் கேட்டாள் - தத்தையும் சீவகனுக்குற்றதைக் கேள்வியுற்றாள். 

விளக்கம் : தாமரை நாமன் என்றது பதுமுகனை. கட்டு அமைநீதி - கட்டுப்பாடமைந்த நீதி என்க. இவர்கள்-இந்நபுல விபுலர் முதலியோர். இட்டிடை - சிறிய இடை. தத்தை : காந்தருவதத்தை ( 295 )

1146. மணியியல் யவனச் செப்பின்
மங்கலத் துகிலை வாங்கிக்
கணைபுரை கண்ணி யேற்ப
வுடுத்தபின் செம்பொற் செப்பிற்
பிணையலு நறிய சேர்த்திப்
பெருவிலை யாரந் தாங்கித்
துணைவனுக் குற்ற துன்பஞ்
சொல்லிய தொடங்கி னாளே.

பொருள் : கணைபுரை கண்ணி - அம்பனைய கண்ணாள் ; மணி இயல் பவளச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கி - மணிகளாற் செய்யப்பட்ட யவனச் செப்பிலிருந்து தூய ஆடையை எடுத்து ; ஏற்ப உடுத்தபின் - (வழிபாட்டுக்குத்) தக்கவாறு உடுத்த பிறகு; செம்பொன் செப்பில் நறிய பிணையலும் சேர்த்தி - செம்பொன் செப்பிலிருந்து நல்ல மலர் மாலையையும் அணிந்து ; பெருவிலை ஆரம் தாங்கி - மிகுவிலை பெற்ற முத்து மாலை சூடி ; துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய - கணவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்குதற்கு; தொடங்கினாள் - வழி படத் தொடங்கினாள்.
 
விளக்கம் : சொல்லிய தொடங்கினாள் என்புழிச் செர்ல்லிய என்பது நீக்க என்னும் பொருட்டு.
 
பண்டைச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய (புறநா- 90-7).

என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. ( 296 )

1147. பொன்னணி மணிசெ யோடை
நீரின்வெண் சாந்து பூசித்
தன்னுடை விஞ்ஞை யெல்லாந்
தளிரிய லோத லோடு
மின்னடு வாளும் வேலுங்
கல்லொடு தீயுங் காற்று
மன்னுட னேந்தித் தெய்வ
மாதரைச் சூழ்ந்த வன்றே.

பொருள் : பொன் அணி மணிசெய் ஓடை வெண்சாந்து - பொன்னாற் செய்து மணியிழைக்கப்பட்ட மடலிலிருந்த வெண்சாந்தை ; நீரின் பூசி - பனிநீருடனே கலந்து பூசிக்கொண்டு; தன் உடை விஞ்சை எல்லாம் - தான் கற்ற மறை யெல்லாவற்றையும் ; தளிர் இயல் ஓதலோடும் - தளிரனையாள் ஓதின அளவிலே; மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும் - மின்னை வென்ற ஒளியுறு வாள், வேல், கல், தீ, காற்று ஆகியவற்றை மன் உடன் ஏந்தி - மிகுதியாகத் தம்முடன் ஏந்தி ; மாதரைத் தெய்வம் சூழ்ந்த - தத்தையைத் தெய்வங்கள் சூழ்ந்தன.

விளக்கம் : இதனானும், பின், விண்ணோர்களை வாழ்த்தி (சீவக. 1160) என்றதனானும் ஈண்டு விஞ்சையர் வாராமை யுணர்க. சாந்து பூத்த என்றும், தன்னிடை விஞ்சை என்றும் பாடம். ( 297 )

வேறு
 
1148. ஆரமின் னும்பணை வெம்முலை யாடமைத் தோளினாள்
வீரனுற் றதுயர் மின்னென நீக்கிய மெல்லவே
நேரமன் னும்வரு கென்றுநின் றாணினைந் தாளரோ
பாருண்மன் னும்பழி பண்பனுக் கின்று விளைந்ததே.

பொருள் : ஆரம் மின்னும் பணை வெம்முலை ஆடு அமைத் தோளினாள் - முத்துவடம் ஒளிரும் பருத்த வெம்முலைகளையும் அசையும் மூங்கிலனைய தோள்களையும் உடைய தத்தை ; வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய - தன் கணவன் அடைந்த துயரை மின்போலக் கடிது நீக்க ; மன்னும் நேர வருக என்று நின்றாள் - மிகவும் அணுக வருக என்று தெய்வங்களை வேண்டி நின்றவள்; பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்தது - உலகில் நிலைபெறும் வடுச்சொல் தன் கணவனுக்கு இன்று நேர்ந்ததை; மெல்ல நினைந்தாள் - மெல்லென எண்ணினாள்.
 
விளக்கம் : நினைந்தது மேற்கூறுகின்றார். ஆரம் - முத்துவடம். பணைவெம்முலை: வினைத்தொகை. தோளினாள் : காந்தருவதத்தை . வீரன் : சீவகன். மின்-ஈண்டு விரைவின் மறைதற்குவமை. மன்னும் - மிகவும். அரோ : அசை. மன்னும்பழி - நிலையுறும்பழி. பண்பன் : சீவகன்; நற்குணம் நிறைந்தவன் என்பது கருத்து. ( 298 )

1149. மன்னன்செய் தசிறை மாகட லுட்குளித் தாழ்வுழித்
தன்னையெய் திச்சிறை மீட்டன டன்மனை யாளெனி
னென்னையா வதிவ னாற்றலுங் கல்வியு மென்றுடன்
கொன்னும்வை யங்கொழிக் கும்பழிக் கென்செய்கோ தெய்வமே.

பொருள் : மன்னன் செய்த சிறை மாகடலுள் குளித்து ஆழ்வுழி - அரசன் செய்த சிறைப் பெருங்கடலிலே முழுகி அழுந்தும்போது ; தன் மனையாள் தன்னை எய்திச் சிறை மீட்டனள் எனின் - தன் மனைவி தன்னைச் சேர்ந்து சிறையை நீக்கினாள் என்றால் ; இவன் ஆற்றலும் கல்வியும் என் ஆவது என்று - இவன் வலிமையும் படிப்பும் என்னாகத் தகுவன என்று ; உடன் கொன்னும் வையம் கொழிக்கும் பழிக்கு - சிறை நீக்கினவுடன்! பெரிதும் உலகம் எடுத்துச் சொல்லும் பழிக்கு ; தெய்வமே என் செய்கோ ?- தெய்வமே! நான் என்ன செய்வேன்?

(விளக்கம்.) என்னை : ஐ : அசை. ஆவது : ஒருமைப் பன்மை மயக்கம். இச் செய்யுள்,
 
அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ.
எல்லை நீத்த உலகங்கள் யாவுமென்.
சொல்லி னாற்சுடு வேனது தூயவன்.
வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன் (கம்ப- சூளாம- 18).

என்னும் சீதையின் கூற்றை நினைப்பிக்கின்றது. ( 299 )

1150. செல்வனுற் றசிறை செய்யவ ணீக்குமென் றாற்பழி
யில்லையா யின்னவள் யானெனும் வேற்றுமை யில்லையே
சொல்லின்வெள் ளிம்மலை தோடவிழ் தாமரைப் பொன்மல
ரெல்லையா கும்பொதுப் பெண்ணவள் யான்குல மங்கையே.

பொருள் : செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் - செல்வன் அடைந்த சிறையைத் திருமகள் நீக்குவாளாயின்; பழி இல்லை ஆயின் - பழியில்லை யென்றால் ; அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே - அவளென்றும் யானென்றும் வேறுபாடு இல்லையே, சொல்லின் - வேற்றுமை கூறின் வெள்ளிமலை தோடு அவிழ் பொன் தாமரை மலர் எல்லை ஆகும் - எனக்கு வெள்ளிமலையும் அவளுக்கு இதழ்விரிந்த பொற்றாமரை மலரும் எல்லை ஆகும் ; அவள் பொதுப்பெண் - (மற்றும்) அவளோ பொதுமகள் ; யான் குலமங்கை - யானோ குலப்பெண். (ஆகையாற் பழியில்லையாம்).
 
விளக்கம் : திருமகள் பார்க்கின் தீங்கு நீங்கும் என்று உலகங் கூறுதலின் இங்ஙனங் கூறினாள். செல்வன், ஈண்டுச் சீவகன். செய்யவள் - திருமகள். திருமகள் பலரிடத்தும் கைம்மாறிப் போதலின் பொதுமகள் எனப்பட்டாள். எனவே குலமகளாகிய யான் அவன் சிறை நீக்குதல் பழியாகாது எனத் துணிந்தவாறாயிற்று. ( 300 )

1151. ஆவதா கபுக ழும்புழி யும்மெழு நாளவை
தேவர்மாட் டும்முள மக்களு ளில்வழித் தேர்கலே
னோமெனெஞ் சம்மென நோக்கிநின் றாள்சிறைப் பட்டதன்
காவற்கன் றிற்புனிற் றாவன கார்மயிற் சாயலே.

பொருள் : புகழும் பழியும் ஆவதாக - (மேலும்) ஈண்டுப் புகழும் பழியும் ஆவதாகுக; அவை எழும் நாள் தேவர்மாட்டும் உள - அவை தோன்றும்போது விண்ணவரிடத்தும் தோன்றுகின்றன ; மக்களுள் இல்வழித் தேர்கலேன் - மக்களிடம் அவை இல்லாத இடத்தைக் கண்டறியேன் ; என் நெஞ்சம் நோம்-இவற்றை யெல்லாம் எண்ணின் உள்ளம் வருந்தும், (நினைக்குங் காலமும் அன்று); என - என்றுரைத்து; சிறைப்பட்ட தன் காவல் கன்றின் - ஒரு சிறையிலகப்பட்ட தன் காப்பில் உள்ள கன்றினிடம்; புனிற்று ஆ அன - இளங்கன்றின் தாயான பசு நோக்கல் போல ; கார் மயில் சாயல் - கார்நோக்கும் மயிலின் மென்மையாள் ; நோக்கி நின்றாள் - பார்த்து நின்றாள்.
 
விளக்கம் : ஆ விடுவிக்க நோக்கி நின்றாற்போல நின்றாள். ( 301 )

வேறு
 
1152. மாநகர் சுடுத லொன்றோ
மதனனை யழித்த லொன்றோ
வானிக ரில்லா மைந்தர்
கருதிய ததுவு நிற்க
வேய்நிக ரில்ல தோளி
விஞ்சையால் விடுத்துக்கொள்ளப்
போயுயிர் வாழ்தல் வேண்டே
னெனப்பொருள் சிந்திக் கின்றான்.

பொருள் : வான்நிகர் இல்லா மைந்தர் - வானும் நிகர் இல்லாத நம் தோழர்கள்; மாநகர் சுடுதல் ஒன்றோ, மதனனை அழித்தல் ஒன்றோ கருதியது - பெரிய நகரைச் சுடுதலாவது , மதனனைக் கொல்வதாவது நினைத்தாகும்; அதுவும் நிற்க - அதுவும் குறைவில்லை; வேய்நிகர் இல்ல தோளி - மூங்கில் ஒவ்வாத தோளி ; விஞ்சையால் விடுத்துக்கொள்ள - தன் விஞ்சைத் திறத்தால் விடுவித்துக் கொள்ள; போய் உயிர் வாழ்தல் வேண்டேன் - பிழைத்துச் சென்று உயிர் வாழ்தலை விரும்பேன்; எனப் பொருள் சிந்திக்கின்றான்-என்று கருதி மேலே செய்யவேண்டிய பொருளை நினைக்கின்றான்.
 
விளக்கம் : ஆய்நிகர் என்றும் பாடம். மாநகர் - அரண்மனையுமாம். வான் - முகில் : இது கைம்மாறு வேண்டாது நன்மை செய்தற்குவமை. இனி வான் - தேவருலகமுமாம். இது தன்பாலுற்றார் துன்பம் துவரத்துடைத்து இன்பமெலாந் தடையின்றித் தருதற்குவமை என்க. மைந்தர் என்றது தோழரை. தோளி - ஈண்டுக் காந்தருவத்தை. பொருள் - இனிச் செய்யக்கடவதாகிய செயல். (302 )

1153. கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறு போல
வுச்சியு மருங்கும் பற்றிப் பிளந்துயிர் பருகிக் கோண்மா
வச்சுற வழன்று சீறி யாட்டினம் புக்க தொப்பக்
குச்சென நிரைத்த யானைக் குழாமிரித் திடுவ லென்றான்.

பொருள் : கச்சு அற நிமிர்ந்து - என்னைக் கட்டிய கச்சு அறுமாறு நிமிர்ந்து ; கடாவிடு களிறுபோல - பற்றி எறிகின்ற களிற்றைப்போல; மாந்தர் உச்சியும் மருங்கும் பற்றிப் பிளந்து - வீரர்களின் தலையையும் இடையையும் பிடித்துப் பிளந்து ; உயிர் பருகி - உயிரைக் கொன்று ; கோள்மா அச்சு உற அழன்று சீறி ஆட்டினம் புக்கது ஒப்ப - கொல்லுதல் வல்ல புலி அச்சம் உண்டாகக் கனன்று முழங்கி, ஆட்டு மந்தையிற் புகுந்தாற் போல; குச்சென நிரைத்த யானைக்குழாம் - பாவாற்றிபோல நெருங்க வளைந்த யானைத் திரளையும்; இரித்திடுவல் என்றான் - கெடுத்திடுவேன் என்று கருதினான்
 
விளக்கம் : ஆசிரியற்கு நேர்ந்ததற்குத் தாழ்வாகாதென்று இத்திரளைக் கொல்லக் கருதினான். கச்சு - கச்சை. இது தன்னைக் கட்டிய கச்சை. கோள்மா - கொல்லுதல் வல்ல புலி. அச்சு - அச்சம். குச்சு - பாவாற்றி என்னுமொரு நெய்தற்றொழிற் கருவி. ( 303 )

1154. மின்னிலங் கெயிற்று வேழம்
வேழத்தாற் புடைத்துத் திண்டேர்
பொன்னிலங் கிவுளித் தேராற்
புடைத்துவெங் குருதி பொங்க
வின்னுயி ரவனை யுண்ணு
மெல்லைநாள் வந்த தில்லை
யென்னையிக் கிருமி கொன்றென்
றோழனை நினைப்ப லென்றான்.

பொருள் : மின் இலங்கு எயிற்று வேழம் - மின்னென விளங்கும் பற்களையுடைய வேழங்களை; வேழத்தால் புடைத்து - யானைகளால் அடித்து; திண்தேர் பொன் இலங்கு இவுளித் தேரால் புடைத்து - திண்ணிய தேரைப் பொன் விளங்கும் புரவி பூட்டிய தேராலே தாக்கி ; வெம் குருதி பொங்க இவன் இன் உயிரை உண்ணும் - வெப்பமான குருதி கொப்புளிக்கப் பகைவனுடைய இனிய உயிரைப் பருகுகின்ற; இறுதிநாள் வந்தது இல்லை - எல்லைக் காலம் இன்னும் வரவில்லை; இக் கிருமி கொன்று என்னை - (பகை களைதலை விட்டு) இப் புழுக்களைக் கொல்வதால் யாது பயன்?; என் தோழனை நினைப்பல் என்றான் - என் தோழனான சுதஞ்சணனை நினைப்பேன் என்றெண்ணினான்.
 
விளக்கம் : எயிறு - பல். இவுளி - குதிரை. அவனை என்றது கட்டியங்காரனை. எல்லைநாள் வந்ததில்லை என்றும் பாடம். கிருமி என்றது போர் மறவரை. கிருமி - புழு. இஃது அழித்தலின் எளிமையும் பயனின்மையும் கருதிக் கூறியபடியாம். தோழன் : சுதஞ்சணன் ( 304 )

1155. தோழனுந் தேவி மார்தங் குழாத்துளான் றுளும்பு முந்நீ
ரேழ்தரு பருதி தன்மே லிளம்பிறை கிடந்த தேபோற்
றாழ்தகை யார மார்பிற் சீவகன் குணங்க டம்மை
யாழெழீஇப் பாடக் கேட்டோ ரரம்பையைச் சேர்ந்திருந்தான்.

பொருள் : தோழனும் தேவிமார்தம் குழாத்துளான் - சுதஞ்சணனும் தன் மனைவியரின் குழாத்திலே யிருப்பவன் ; துளும்பும் முந்நீர் ஏழ்தரு பருதி தன்மேல் இளம்பிறை கிடந்ததே போல் - அலைதலையுடைய கடலில் எழுதரும் இளங்கதிரின் மேல் இளம்பிறை கிடந்தாற் போல ; தாழ்தகை ஆரம் மார்பின்-தங்கின முத்தார மார்பினையுடைய; சீவகன் குணங்கள் தம்மை - சீவகனின் பண்புகளை ; ஓர் அரம்பையைச் சார்ந்து - அரம்பை யொருத்தியைக் கொண்டு ; யாழ் எழீஇப் பாடக் கேட்டிருந்தான் - யாழிசைத்துப் பாடக் கேட்டிருந்தான்.

விளக்கம் : ஏழ்தரு : எழுதரு என்பதன் விகாரம். ஏழ்தரும் - எழுதரும்; தோன்றாநின்ற. பருதி - ஞாயிறு ; இது மார்பினுக்குவமை. பிறை - முத்தாரத்திற்குவமை. தோழனும் அவ்வமயம் பாடக்கேட்டு இருந்தான் என்க. ( 305 )

வேறு
 
1156. வயிரம் வேய்ந்த மணிநீண்முடி வாலொளி வானவன்
செயிரிற் றீர்ந்த செழுந்தாமரைக் கண்ணிட னாடலு
முயிரனா னைநினைந் தானுற்ற தோதியி னோக்கினான்
மயிலனார்க் குப்படி வைத்தவன் மால்விசும் பேறினான்.

பொருள் : வயிரம் வேய்ந்த நீள் மணிமுடி - வயிரம் பதித்த நீண்ட மணிமுடியினையும்; வால் ஒளி - வெள்ளிய நிறத்தினையும் உடைய; வானவன் - சுதஞ்சணனது ; செயிரின் தீர்ந்த செழுந்தாமரைக் கண் - குற்றத்தினின்றும் நீங்கிய வளமிகு தாமரைக் கண்களில்; இடன் ஆடலும் - இடக்கண் ஆடின அளவிலே; உயிர் அனானை நினைந்தான் - (தனக்குத் தீங்குறுமோ என்று நினையாமல்) உயிரனைய சீவகனை எண்ணினான் ; உற்றது ஓதியின் நோக்கினான் - நேர்ந்ததை மனவுணர்வாலே அறிந்தான் ; மயிலனார்க்குப் படிவைத்து - மயிலனைய மனைவியர்க்குத் தன் உருவைப் புனைந்து வைத்து ; அவன் மால் விசும்பு ஏறினான் - தன் ஊர்தியாகிய பெரிய முகிலின்மிசை அமர்ந்தான்.

விளக்கம் : தான் இருந்த அவை குலைவுறாமற் படிவம் வைத்தான். படி: படிவம் என்பதன் விகாரம். ( 306 )

1157. இடியு மின்னும் முழக்கும்மிவற் றானுல கந்நிறைந்
தொடியு மூழி யிவணின்றுறு கால்வரை கீழ்ந்தென
நடலை நோக்கிக் கதிர்நாணுவ தொப்ப மறைந்தபின்
கடலை யேந்தி நிலத்திட்டென மாரி கலந்ததே.

பொருள் : உறுகால் வரை கீழ்ந்தென - பெருங்காற்று மலையைப் பிளந்ததாக; மின்னும் இடியும் முழக்கும் இவற்றால் உலகம் நிறைந்து - மின்னாலும் இடியாலும் இடிமுழக்காலும் உலகெங்கும் அம் முகில் நிறைய; நடலை நோக்கிக் கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின் - இப் பொய்த் தோற்றத்தைப் பார்த்து, நம்மையின்றியே ஊழி நிகழ்ந்ததென்று ஞாயிறு நாணுவது போல மறைந்த பிறகு ; ஒடியும் ஊழி இவண் இன்று என - உலகம் அழியும் ஊழி இங்கே இப்போது நிகழ்ந்தது என்னும் படி; கடலை ஏந்தி நிலத்து இட்டு என - கடலையெடுத்து நிலமிசை யிட்டாற்போல ; மாரி கலந்தது - மழை கலந்தது.
 
விளக்கம் : நிறைந்து - நிறைய ; கீழ்ந்து - கீழ்: எச்சத் திரிபு. இடியும் மின்னும் முழக்குமாகிய இவற்றான் என்க. உறுகால் - பெருங்காற்று. நடலை - பொய். கதிர் - ஞாயிறு. ( 307 )

1158. விண்ணு மண்ணும் மறியாதுவி
லங்கொடு மாந்தர்தங்
கண்ணும் வாயும் மிழந்தாங்கடல்
கொண்டது காண்கெனப்
பெண்ணு மாணும் மிரங்கப்
பெருமான்மகன் சாமியை
யண்ண லேந்தி யகலம்புலிக்
கொண்டெழுந் தேகினான்.

பொருள் : விலங்கொடு மாந்தர் - விலங்குகளும் மக்களும்; விண்ணும் மண்ணும் அறியாது - விண்ணெனவும் மண்ணெனவும் அறியாமல் ; தம் கண்ணும் வாயும் இழந்து - கண்ணையும் வாயையும் இழக்குமாறு; ஆம் கடல் கொண்டது காண்க என - மேல் ஊழியிலே வரும் கடல் இப்போது கொண்டதைப் பார்ப்பீராக என்று கூறி; பெண்ணும் ஆணும் இரங்க - பெண்டிரும் ஆடவரும் வருந்த ; பெருமான் மகன் சாமியை - சசசந்தன் மகனான சீவகசாமியை; அண்ணல் ஏந்தி - சுதஞ்சணன் எடுத்து; அகலம் புலிக் கொண்டு - மார்பிலே தழுவிக் கொண்டு; வானில் எழுந்து ஏகினான் - வானில் உயர்ந்து சென்றான்.
 
விளக்கம் : விலங்குகள் மேயாமையின் வாயிழந்தன; மாமேயல் மறப்ப (நெடுநல். 2) என்றார் பிறரும். ( 308 )

1159. குன்றுண் டோங்கு திரடோளவற்
கொண்டெழுந் தேகலு
நன்றுண் டாக வெனநன்னுதல்
வாழ்த்தினள் வாழ்த்தலு
மொன்றுண் டாயிற் றவளுள்ளழி
நோயுறு காளையை
யென்றுண் டாங்கொல் லினிக்கட்படு
நாளெனுஞ் சிந்தையே.

பொருள் : குன்று உண்டு ஓங்கு திரள் தோளவன் - மலையை அடக்கி வளர்ந்த திரண்ட தோளையுடைய சீவகனை; கொண்டு எழுந்து ஏகலும் - சுதஞ்சணன் கொண்டு போகின்ற அளவில்; நன்னுதல் நன்றுண்டாக என வாழ்த்தினள் - தத்தை நலம் வருக என்று வாழ்த்தினள் ; வாழ்த்தலும் - வாழ்த்தின அளவிலே; இனி உயர் காமனைக் கண்படும் நாள் என்று உண்டாம்கொல் - இனி உயர்ந்த சீவகனைக் கண்ணாற் காணும் காலம் எப்போது உண்டாகுமோ? எனும் சிந்தை - என்னும் நினைவாகிய ; அவள் உள்அழி நோய் ஒன்று உண்டாயிற்று - அவள் மனம் வருந்தும் நோய் ஒன்று நேர்ந்தது.
 
விளக்கம் : குன்று உண்டு : உண்டு : உவம வாசகம். நாளென்றது காலத்தை உணர்த்தும். ( 309 )

1160. சந்தமா லைத்தொகை தாழ்ந்துசாந் தங்கமழ் பூமியுள்
வந்தவிண் ணோர்களை வாழ்த்தியேத் திம்மலர் மாலைதூ
யெந்தை மார்க ளெழுகென்ன வேகவிடுத் தாள்குரல்
சிந்தை செய்யுஞ் சிறகர்க்கிளி தோற்குமந் தீஞ்சொலாள்.

பொருள் : சந்த மாலைத்தொகை தாழ்ந்து சாந்தம்கமழ் பூமியுள் - நிறமிகும் மாலைத்திரள் தூங்கப்பெற்றுச் சந்தனங் கமழ்கின்ற தான் வழிபட்ட நிலத்திலே ; வந்த விண்ணோர்களை மலர்மாலைதூய் வாழ்த்தி ஏத்தி - வந்த வானவர்களை மலர்மாலை தூவி வாழ்த்திக் கொண்டாடி ; எந்தைமார்கள் எழுக என்ன - எந்தையர்காள்! போவீராக என்று ; குரள் சிந்தை செய்யும் - யாழிற் குரல் என்னும் நர்ம்பு தான் இத்தன்மை பெறவேண்டும் என்று கருதுகின்ற ; சிறகர்க்கிளி தோற்கும் - சிறகினையுடைய கிளி தோல்வியுறுகின்ற; அம் தீ சொலாள் - அழகிய இன்மொழித் தத்தை; ஏக விடுத்தாள் - போக விடுத்தாள்.

விளக்கம் : குரல் சிந்தை செய்யும் தீஞ்சொல், சிறகர்க்கிளி தோற்கும் தீஞ்சொல் எனக் கூட்டுக. தான் வழிப்பட்ட வானவர் செய்து முடிக்கும் வேலை, வேறு வகையால் முடிதலின், அவரைப் போக வென்றாள். ( 310 )

வேறு
 
1161. மலைத்தொகை யானை மன்னன்
மைத்துனன் மதன னென்பான்
கொலைத்தொகை வேலி னானைக்
கொல்லிய கொண்டு போந்தா
னலத்தகை யவனைக் காணா
னஞ்சுயிர்த் தஞ்சி நோக்கிச்
சிலைத்தொழிற் றடக்கை மள்ளர்க்
கிற்றெனச் செப்பு கின்றான்.

பொருள் : மலைத்தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான் - மலைக் கூட்டம் போன்ற யானைக் கூட்டத்தையுடைய வேந்தனின் மைத்துனனாகிய மதனன் என்பவனாகிய; கொலைத் தொகை வேலினானைக் கொல்லிய கொண்டு போந்தான் - கொலைகளைக் கணக்கிடும் வேலேந்திய சீவகனை அரசன் கொல்வதற்குக் கொண்டு வந்தான்; நலத்தகையவனைக் காணான் - நலமிகும் பண்புடைய சீவகனைக் காணாமல்; நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி - நஞ்சென மூச்சுவிட்டு அச்சத்துடன் பார்த்து ; சிலைத் தொழில் தடக்கை மள்ளர்க்கு - விற்றொழில் புரியும் பெருங்கை வீரர்கட்கு ; இற்றெனச் செப்புகின்றான் - இவ்வாறு பொருத்தமில்லை.
 
விளக்கம் : மன்னற்கு என்னும் பாடம் பொருட் பொருத்தமில்லை. மலைத்தொகை போன்ற யானைத்தொகையையுடைய மன்னன் என்க. தொகை - கூட்டம். மன்னன் - ஈண்டுக் கட்டியங்காரன். மைத்துனனாகிய மதனன் என்பான் என்க. கொலைத்தொகை வேலினான் - கொலைத்தொழின் மிக்க கூட்டமாகிய வேற்படையையுடையவன் என்க. வேலினான் - ஈண்டுச் சீவகன். ( 311 )

1162. மன்னனாற் சீறப் பட்ட
மைந்தனைக் கொல்லப் போந்தா
மென்னினிச் சொல்லிச் சேறு
மென்செய்தும் யாங்க ளெல்லா
மின்னது பட்ட தென்றா
லெரிவிளக் குறுக்கு நம்மைத்
துன்னுபு சூழ்ந்து தோன்றச்
சொல்லுமின் செய்வ தென்றான்.

பொருள் : மன்னனால் சீறப்பட்ட மைந்தனைக் கொல்லப் போந்தாம் - அரசனாற் சினக்கப்பெற்ற சீவகனைக் கொல்லக் கைக்கொண்டு வந்த நாம் ; இன்னது பட்டது என்றால் நம்மை எரிவிளக்குறுக்கும் - யாம்பட்ட துன்பம் இத்தன்மைத்தென்று கூறின் நம்மை நடைவிளக்கு எரிப்பான்; யாங்கள் இனி என் சொல்லிச் சேறும் - நாம் இனி யாது கூறிச் செல்வோம்?; என் செய்தும்?- யாது புரிவோம்?; துன்னுபு சூழ்ந்து செய்வது தோன்றச் சொல்லுமின் என்றான் - எல்லோரும் ஒன்று கூடி ஆராய்ந்து செய்யக்கடவதை விளங்கச் சொல்லுங்கோள் என்றான். 

விளக்கம் : மன்னன் : கட்டியங்காரன். மைந்தன் : சீவகன். சேறும் - செல்வேம். செய்தும் - செய்வேம். தன் கையறவு தோன்ற என் சொல்லிச் சேறும் என்செய்தும் என்றான். எரி விளக்குறுத்தல் குற்றஞ் செய்தார் தலையில் விளக்கேற்றிவைத்து ஊர்வலஞ் செய்விக்குமொரு தண்டனை. துன்னுபு - கூடி . ( 312 )

1163. வாழ்வதோ ருபாய நாடி மதியுடம் பட்டு வல்லே
சூழ்வினை யாள ராங்க ணொருவனைத் தொடர்ந்து பற்றிப்
போழ்படப் பிளந்து வாளிற் புரட்டியிட்டரியக் கண்டே
யாழ்கல மாந்தர் போல வணிநக ரழுங்கிற் றன்றே.

பொருள் : சூழ்வினையாளர் - ஆராய்ச்சி செய்தோர்; வாழ்வதோர் உபாயம் நாடி - தாம் உயிர் வாழும் ஒரு சூழ்ச்சியை எண்ணி; மதி உடம்பட்டு - அறிவு ஒன்றுபட்டு; ஆங்கண் ஒருவனை வல்லே தொடர்ந்து பற்றி - ஆங்குச் சென்ற ஒருவனை விரைந்து பின்சென்று ப்ற்றி ; வாளின் போழ்படப் பிளந்து - வாளால் வகிர்படப் பிளந்து; புரட்டியிட்டு அரிய - (வடிவு தெரியாமற்) புரட்டி யிட்டுவைத்து அரிதலைப் பார்த்து ; ஆழ்கலம் மாந்தர் போல - கடலில் அமிழும் கலத்தில் உள்ள மக்களைப் போல ; அணிநகர் அழுங்கிற்று - அழகிய நகரம் வருந்தியது.

விளக்கம் : சூழ்வினையாளர் நாடி உடம்பட்டு ஒருவனைப் பற்றிப் பிளந்து புரட்டி அரியக் கண்டு நகர் அழுங்கிற்று என்க. வாழ்வதோர் உபாயம் - தாங்கள் கட்டியங்காரன் சினத்திற் றப்பி உயிர்வாழ்தற்குரியதொரு சூழ்ச்சி. ஒருவனை என்றது ஏதிலான் ஒருவனை என்பதுபட நின்றது. அணிநகர்: ஆகுபெயர். ( 313 )

1164. காய்சின வெகுளி வேந்தே
களிற்றொடும் பொருத காளை
மாசனம் பெரிது மொய்த்து
மழையினோ டிருளுங் காற்றும்
பேசிற்றான் பெரிதுந் தோன்றப்
பிழைத்துய்யப் போத லஞ்சி
வாசங்கொ டாரி னானை
மார்புபோழ்ந் துருட்டி யிட்டேம்.

பொருள் : காய்சின வெகுளி வேந்தே! - சுடுகின்ற சீற்றமுடைய அரசே!; களிற்றொடும் பொருத காளை - நம் பட்டக் களிற்றுடன் போர் செய்த சீவகனுடைய; மாசனம் பெரிதும் மொய்த்து - பெருஞ் சுற்றத்தார் நெருங்கி மொய்ப்ப; மழையினோடு இருளும் காற்றும் - மழையும் இருளும் காற்றுமாக; பேசின் பெரிதும் தோன்ற - கூறுமிடத்து மிக்குத் தோன்றின அளவிலே; பிழைத்து உய்யப் போதல் அஞ்சி - எங்களிடமிருந்து தப்பி அவன் உய்ந்து போதற்கு அஞ்சி; வாசம்கொள் தாரினானை - மணங்கமழ் மாலையுடைய அவனை; மார்பு போழ்ந்து உருட்டியிட்டேம் - மார்பைப் பிளந்து தள்ளி விட்டோம்.
 
விளக்கம் : அரசனிடம் சென்று இங்ஙனம் மதனன் முதலியோர் கூறினர் என்று கொள்க. காய்சினம் : வினைத்தொகை. காளை : சீவகன் . மாசனம் - பெரிய மாந்தர் கூட்டம், என்றது சீவகன் சுற்றத்தாரை. மொய்த்து - மொய்ப்ப. பேசிற்றான் என்புழி, தான் அசை. தாரினானை: சீவகனை.  (314 )

1165. அருள்வலி யாண்மைகல்வி யழகறி விளமை யூக்கந்
திருமலி யீகை போகந் திண்புகழ் நிண்பு சுற்ற
மொருவரிவ் வுலகில் யாரே சீவக னொக்கு நீரார்
பெரிதரி திவனைக் கொன்றாய் பெறுகெனச் சிறப்புச் செய்தான்.

பொருள் : அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம் திருமலி ஈகை போகம் திண்புகழ் நண்பு சுற்றம் - அருளும் மெய்வலியும் ஆளுந்தன்மையும் கல்வியும் அழகும் இயற்கை அறிவும் இளமையும் முயற்சியும் செல்வம் மிகுங் கொடையும் எல்லாவற்றையும் நுகரும் பேறும் திண்ணிய புகழும் நட்பும் உறவும் ஆகியவற்றில்; இவ்வுலகிற் சீவகன் ஒக்கும் நீரார் ஒருவர் யாரே?- இவ்வுலகிலே சீவகனைப் போன்றவர் ஒருவருமிலர் ; பெரிது அரிது இவனைக் கொன்றாய் - பெரிதும் அரியதாக இவனைக் கொன்றனை; பெறுக எனச் சிறப்புச் செய்தான் - நீ இவற்றைப் பெற்றுக் கொள்க என்று மதனனுக்குச் சிறப்புப் பல செய்தனன்.

விளக்கம் : யாரே : ஏ : எதிர்மறை இடைச்சொல். திருமலிதற்குக் காரணமான ஈகை என்க. போகம் - ஈண்டுக் காம நுகர்ச்சி. உலகுள்ள காலமெல்லாம் நிலையுதலின் திண்புகழ் என்றான். நீரார் - தன்மையுடையோர். இதனால் கட்டியங்காரன் சீவகன்பால் அழுக்காறுடையனாதற்குரிய காரணங்கள் தொகுத்துக் கூறப்பட்டன. ( 315 )

குணமாலையார் இலம்பகம் முற்றிற்று.

 
மேலும் சீவக சிந்தாமணி »
temple news
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக ... மேலும்
 

கடவுள் வாழ்த்து நவம்பர் 14,2011

சித்தர் வணக்கம் 1. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்திஓவாது நின்ற ... மேலும்
 
கதைச் சுருக்கம்: இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. ... மேலும்
 
கதைச்சுருக்கம்: சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; ... மேலும்
 
கதைச் சுருக்கம்: சீவகன் முதலியோர் இராசமாபுரத்தின்கண் இவ்வாறு இனிது உறைந்தனராக; அந்நகரத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar