Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
5. பதுமையார் இலம்பகம் 7. கனகமாலையார் இலம்பகம்
முதல் பக்கம் » சீவக சிந்தாமணி
6. கேமசரியார் இலம்பகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
03:09

கதைச் சுருக்கம்: சுதஞ்சணன் கூறிய நெறி பற்றிச்சென்ற சீவகன் சித்திர கூடம் என்னும் சிறந்ததொரு தவப்பள்ளியை எய்தினன். ஆண்டுள்ள தாபதர்களோடு அளவளாவி அவர்க்கு அறவுரை பல கூறித் திருத்தினன். அப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் தக்க நாட்டிற் புகுந்தனன். அந்நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை எய்தினன். இனி அந்நகரத்தில் வாழும் சுபத்திரன் என்னும் வணிகனுக்குக் கேமசரி என்னும் ஓர் அழகிய மகளிருந்தனள். அம்மகள் பிறந்தபொழுது சுபத்திரன் கணிகளை அழைத்து இவட்குக் கணவன் யாவன்? என வினவினன். அக் கணிகள், நின்மகள் எவனைக் கண்டு நாணுகின்றனளோ! அவ்வாடவனே இவட்குக் கணவன் ஆகுவன். இவட்குப் பிற ஆடவரைக் காணுங்கால் நாணந் தோன்றமாட்டாது, என உணர்த்தியிருந்தனர். இக் காரணத்தால் அவ்வணிகன் நாடொறுந் தன் கடைக்குவரும் அழகிய இளைஞரைத் தன்மனைக்கழைத்துச்சென்று விருந்தூட்டுவன், அத்தகையோருள் ஒருவரையும் கேமசரி கண்டு நாணமுற்றிலள். மணப்பருவம் கழிந்து விடுமோ என்று சுபத்திரன் வருந்தியிருந்தான்.
 
சீவகன் ஊழ்வலியுண்மையால் சுபத்திரன் கடைக்குச் சென்றனன். இவனது எழிலும் இளமையும் கண்ட சுபத்திரன் வியப்புற்றனன். இவனையும் சுபத்திரன் தன்னில்லத்திற்கழைத்துச்சென்று விருந்தூட்டினன். சீவகனைக் கண்ட கேமசரி பெரிதும் நாணமுற்றனள். அவன்பாற் காதன்மிக்கு வருந்தா நின்றனள். அவ்வழி சுபத்திரன் சீவகனுக்குக் கேமசரியை மணம் செய்வித்தனன். அம்மங்கை நல்லாளுடன் சீவக நம்பி இரண்டு திங்கள் இன்புற்றிருந்தனன். பின்னர்க் கேமசரி யறியாதபடி, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். வழியில் ஒருவனுக்கு அறவுரை பகர்ந்து தன் அணிகலன்களை அவனுக்கு வழங்கினன்; வழங்கி அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். கேமசரி பிரிவாற்றாது பெரும் பேதுற்றனள். அவள் தாயாகிய நிப்புதி அவளை அரிதில் தேற்ற ஒருவாறு தேறியிருந்தனள்.

1412. வானின் வழங்கும் வண்கை மணிசெய் யார மார்பிற்
றேனும் வழங்கும் பைந்தார் விசையை சிறுவன்றேங்கொ
ணானம் வழங்குங் கோதை நைய வெய்ய வாய
கானம் வழங்கன் மேவிக் காலின் னேகி னானே.

பொருள் : வானின் வழங்கும் வண்கை - முகிலெனக் கொடுக்கும் கொடைக்கையினையும்; மணிசெய் ஆரம் மார்பின் - முத்துக்களால் ஆகிய மாலையணிந்த மார்பினையும்; தேனும் வழங்கும் பைந்தார் - மணமேயன்றித் தேனையும் நல்கும் பசிய தாரினையும் உடைய; விசையை சிறுவன் - விசையையின் மகன்; தேம்கொள் நானம் வழங்கும் கோதை நைய - வண்டுகள் தங்கும் புழுகு கமழும் மாலையாள் பதுமை வருந்த; வெய்ய ஆய கானம் வழங்கல்மேவி - கொடியன ஆகிய காடுகளிலே செல்லுதலை மேற்கொண்டு; காலின் ஏகினான் - காலால் நடந்து சென்றான்.
 
விளக்கம் : கை மார்பு தார் என்னும் மூன்றும் சிறுவனுக்கு அடை மொழிகள். கை முதலியவற்றையுடைய சிறுவன்; விசையை சிறுவன் எனத் தனித்தனி கூட்டுக. தேம் - தேன். காலின் ஏகினான் என்றது ஊர்திகளின்றி என்பதுபட நின்றது. நானம் - புழுகு. கோதை : ஆகுபெயர்; பதுமை. விசையை சிறுவன், காலின் ஏகினான் என்பன சீவகன் நிலைக்கு இரங்கிய நூலாசிரியரின் இரக்கமொழிகள். தேனும் : உம் : இசைநிறை. காலின் - காற்றைப்போல என்றலுமாம். ( 1 )

1413. சிலைகொ ணாணிற் றீராத் திருந்து கற்பின் னவர்த
மிலைகொள் பூந்தா ருழுத வின்ப வருத்த நீங்க
முலைகொள் கண்கள் கண்ணின் னெழுதி முள்கு மொய்ம்பன்
மலைகொள் கானம் முன்னி மகிழ்வோ டேகு கின்றான்.

பொருள் : சிலைகொள் நாணின் தீராத் திருந்து கற்பினவர் தம் - வில் தன்பாற் கொண்டுள்ள நாண் தான் கெடுமளவும் முறுக்குடையாததைப்போல இறுமளவும் கெடாத திருந்திய கற்பினையுடைய மகளிர்பால்; இலைகொள் பூந்தார் உழுத - (தன் மார்பிலணிந்த) இலைமிடைந்த மலர்மாலை உழுததால் உண்டான; இன்ப வருததம் நீங்க -இன்பச் சோர்வு தவிர; முலைகொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கும் மொய்ம்பன் - அவர்களுடைய முலை தம்மிடத்தே கொண்டுள்ள கண்களைத் தன் கண்களால் எழுதி முயங்கும் தோள்களையுடையவன்; மலைகொள் கானம் முன்னி - மலைகளையுடைய காட்டைப் பொருந்தி; மகிழ்வோடு ஏகுகின்றான் - களிப்புடன் செல்கின்றான்.

விளக்கம் : வில்நாண் பசையிட்டு முறுக்கப்படுதலால் தான் அழியுந் துணையும் முறுக்குடைதலின்று; அதுபோல அன்பாற் பிணைக்கப் படுதலின் இறுமளவும் பிறழ்தலில்லாக் கற்பினையுடையோர் என்பார் நாணிற் றீராக் கற்பின்னவர் என்றார். முலைக் கண்களின் எழிலைக் கூர்ந்து நோக்கித் தன்னுள்ளக் கிழியின் எழுதிப் பின் முயங்குபவன் என்றவாறு. இதனால் காட்சியின்பமும் உற்றின்பமும் ஒருங்கே கூறப்பட்டன. முள்குதல் - முயங்குதல். மலையும் கானமு முதலியவற்றின் எழில் கண்டு மகிழ்வதென் நோக்கம் என்று சீவகன் சுதஞ்சணனுக்குக் கூறியதற்கிணங்க (1175) ஈண்டு மகிழ்வோடேகுகின்றான் என்ற நயம் உணர்ந்து மகிழ்க.
 
இச் செய்யுளும் நூலாசிரியரின் இரக்கத்தைக் காட்டுகின்றது. ( 2 )

1414. கனிகொள் வாழைக் காட்டுட்
கருமை மெழுகி யவைபோன்
றினிய வல்லா முகத்த
முசுவுங் குரங்கு மிரியத்
துனிவு தீர நோக்கித்
தோன்றல் செல்லு முன்னாற்
பனிவெண் டிரைசூழ் கடல்போற்
பழுவந் தோன்றிற் றவணே.

பொருள் : கனிகொள் வாழைக்காட்டுள் - பழமுடைய வாழைக்காட்டிலே; கரு மை மெழுகியவைபோன்று இனிய அல்லா முகத்த - கரிய மையை மெழுகிவைத்தவை போலும் அழகில்லாத முகத்தையுடையனவாகிய; முசுவும் குரங்கும் இரியத் துணிவுதீர நோக்கி - முசுவும் குரங்கும் தன்னைக் கண்டு அஞ்சி ஓடுதலின், அவற்றின் அச்சம் நீங்குமாறு அருளுடன் நோக்கி; தோன்றல் செல்லும் முன்னால் - தலைவன் போகும் அவ்விடத்தின் முன்னே; பனி வெண் திரைசூழ் கடல்போல் - குளிர்ந்த வெள்ளிய அலைசூழ் கடல்போல; பழுவம் தோன்றிற்று - ஒரு காடு தோன்றியது; அவண் - அவ்விடத்தே.
 
விளக்கம் : முசு - கருங்குரங்கு. இரிதல் - கெட்டோடுதல், துனிவு - துன்பம். நோக்கி என்றது அவற்றின் அச்சந்தீர்தற்குக் காரணமான அருட்பார்வையாலே நோக்கி என்பதுபட நின்றது, இதனால் சீவக நம்பியின் பேரருளுடைமை கூறப்பட்டது. கடத்தற் கின்னாக் கல்லதர் அத்தம் இதுவே என்றுணர்த்தற்குப் பணி வெண்திரைசூழ் கடல் போற் பழுவம் என்றார். பழுவம் - காடு. ( 3 )

1415. பருகு வாரிற் புல்லிப்
பயங்கண் மாறத் துறக்கு
முருகு விம்மு குழலார்
போல மொய்கொ டும்பி
யுருவப் பூங்கொம் பொசியப்
புல்லித் தீந்தேன் பருகி
யருகு வாய்விட் டார்ப்ப
வண்ணன் மெல்லச் சென்றான்.

பொருள் : பருகுவாரின் புல்லி -நீரைப் பருகுவாரைப் போல ஆர்வமுறத் தழுவி; பயம் கண்மாறத் துறக்கும் - பொருள் மாறினவுடனே தம்மை அடைந்த ஆடவரை விட்டுப் பிரிகின்ற; முருகு விம்மு குழலார் போல -மணம் பொங்கும் கூந்தலையுடைய பரத்தயரைப்போல; மொய்கொள் தும்பி - செறிவுகொண்ட வண்டுகள்; உருவப் பூங்கொம்பு ஒசியப் புல்லித் தீம் தேன் பருகி - அழகிய மலர்க்கொடி சாயத் தழுவி இனிய தேனை நுகர்ந்து; வாய்விட்டு அருகு ஆர்ப்ப - தேன் வற்றியவுடனே மலர்க்கொடியை விட்டு அருகிலேயே தூற்றுவனபோல ஆரவாரிப்ப; அண்ணல் மெல்லச் சென்றான் - சீவகன் அதனைக் கண்டு மெல்லச் சென்றான்.
 
விளக்கம் : பருகுவார் என்னும் வினைக்குத்தகுதி பற்றி நீர் என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. பயம் - பொருள்: ஆகுபெயர். பயங்கண் மாறத் துறக்குங் குழலார் எனவே அவர் புல்லுவது பொருள் உளவாயபொழுதே என்பது பெற்றாம். அகத்தே அன்பில்லார் என்பது பட முருகுவிம்மு குழலார் என்றார். எனவே பொருட் பெண்டிர் என்றாராயிற்று. பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிர் என்றார் பிறரும் (மணி.18 108-9.) அப் பழுவத்துட் புகாமல் சித்திரகூட நோக்கிச் சென்றான் என்பது தோன்றபுக்கான் என்னாது சென்றான் என்றார். ( 4 )

1416. செல்வர் மனத்தி னோங்கித் திருவின் மாந்தர் நெஞ்சி
னெல்லை யிருளிற் றாகிப் பூந்தா தினிதி னொழுகிக்
கொல்லும் மரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற்
செல்லச் செல்ல வஃகு நெறிசேர் சிலம்பு சேர்ந்தான்.

பொருள் : செல்வர் மனத்தின் ஓங்கி - திருவுடையார் உள்ளம்போல மேல்நோக்கி; திரு இல் மாந்தர் நெஞ்சின் எல்லை இருளிற்று ஆகி - செல்வம் இல்லாதார் நெஞ்சுபோலப் பகலினும் இருளையுடையதாய்; பூந்தாது இனிதின் ஒழுகி - மரகந்தம் இனியதுபோல ஒழுகி; கொல்லும் அரவின் மயங்கி - கொல்லும் பாம்புபோலத் தலைமறைந்து; சிறியார் கொண்ட தொடர்பின் - கீழ்மக்கள் கொண்ட நட்பைப்போல; செல்லச் செல்ல அஃகும் நெறிசேர் - செல்லச்செல்லக் குறையும் வழிபொருந்திய ; சிலம்பு சேர்ந்தான் - மலையைச் சென்றடைத்தான்.

விளக்கம் : செல்வர் மனத்தின் என்புழி ஆகூழால் திருவுடையராய கீழ்மக்களின் நெஞ்சம்போல என்று கொள்க. என்னை? மேலலார் செல்வமேபோல் தலைநிறுவி என இவரே முன்னருங் கூறுதல் காண்க. ஓங்குதல் மனதிற் செருக்குற்று நிமிர்தல். நெறிக்கு ஏறுதற்கரிய தாய்ச் செல்லச் செல்ல உயர்ந்துபோதல் எனக் கொள்க. இனிதின் என்புழி இன் ஐந்தாவதன் உருபு; ஒப்புப் பொருளில் வந்தது. இனிது போல எனவே காட்சிமாத்திரையான் இனிதுபோலத் தோன்றிப் பின் துயர்தருவது என்பது பெற்றாம். பூந்தாது துன்பந் தருவதாதலை : மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் - சண்பகம் நிறைத்த தாதுசேர் பொங்கர் - பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் - கையறு துன்பங்காட்டினுங் காட்டும் (சிலப், 10-68-71 ) என்றார் பிறரும். இனி மாவின் மயங்கி என்று பாடம் ஓதிப் புலி முதலியவற்றால் மயங்கி யென்றும் உரைப்பர். ( 5 )

1417. சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியா
வனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கி
இனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடி
நனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்.

பொருள் : வரை சூழ்ந்த சுனைகள் குவளை கண்களாக விழியா - மலைகள் தம்மிடத்திற் சூழ்ந்துள்ள சுனைகளில் உள்ள குவளை மலர்கள் கண்களாக விழித்துப் பார்த்து; மைந்தற்கு வனையல் ஆகா உருவம் நோக்கி இரங்கி - சீவகனுக்குரிய எழுத வியலாத உருவத்தைக் கண்டு வருந்தி; இனைவபோலும் அருவி - அழுவனபோலும் தோற்றமுள்ள அவ்வருவியிலே; இனிதின் ஆடி - மகிழ்வுடன் குளித்து; நனைகொள் போது வேய்ந்து - தேன் பொருந்திய சுனைமலராலே இறைவன் திருவடிகளை மறைத்து; நாதன் பாடுகின்றான் - இறைவனைப் பாடத்தொடங்கினான்.
 
விளக்கம் : வரைகள் தம்மைச் சூழ்ந்த சுனைகள் கண்களாக அவற்றின் மலர்ந்த குவளை மலர்கள் கருவிழிகளாகக் கொண்டு நோக்கிக் கண்ணீர் வீழ்ந்து அழுவன போலத் தோன்றுதற்குக் காரணமான இனிய அருவியின் ஆடி என்று இயைத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் உரையில் தன்னைச் சூழ்ந்த என்றிருத்தல், தம்மைச் சூழ்ந்த என்றிருத்தல் வேண்டும், திருத்தாத வழி, ஒருமை பன்மைகள் எழுவாய் முதலியன தலைதடுமாறுதலுணர்க. நாதன் - இறைவன். நச்சினார்க்கினியர் சுனைகளை எழுவாயாக்குதல் சிறப்பாகத் தோன்றவில்லை. ( 6 )

வேறு
 
1418. செய்தா னிருவினையின்
பயத்தைச்சேருஞ் சென்றென்றி
யெய்தா னதன்பயத்தைப்
பிறனேதுய்த்த லியல்பென்றி
கொய்தாமந் தாழ்ந்தொசிந்த
குளிர்பூம்பிண்டிக் கோமானே
யிஃதேநின்சொ லியல்பென்றா
லடியேனின்னைத் தொழுதேனே.

பொருள் : செய்தான் இருவினையின் பயத்தைச் சென்று சேரும் என்றி - இருவினையையுஞ் செய்த ஒருவன் அவ் வினையின் பயனைச் சென்று நுகரும் என்று கூறுகின்றாய் (அவ்வாறு கூறிய நீயே); அதன் பயத்தை எய்தான் பிறனே துய்த்தல் இயல்பு என்றி - இருவினைப் பயனைச் செய்தவனே அடையான், மற்றவன் நுகர்தலே இயற்கை என்றாய்; கொய்தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர்பூம்பிண்டிக் கோமானே - கொய்து தொடுத்த மாலை தங்கி நுடங்கும் தண்ணிய மலர்ப்பிண்டியின் நீழலில் எழுந்தருளிய இறைவனே!; இஃதே நின்சொல் இயல்பு என்றால் - இவ்வாறு இரண்டுபட்டிருக்கும் இதுவே நீ மொழியும் மொழிகளின் தன்மையென்றால்; அடியேன் நின்னைத் தொழுதேனே - அடியேன் அஞ்சி நின்னை வணங்குகின்றேன்.
 
விளக்கம் : இருவினை - நல்வினையுந் திவினையும். பயம் - பயன். அவையாவன - இன்பமுந் துன்பமும். இஃதே என்னுஞ் சுட்டு இங்ஙனம் இரண்டுபட்டிருக்குமிதோ என்பதுபட நின்றது. உயிர் ஒன்றாதலின் செய்தவனே வினைப்பயனைத் துய்த்தல் இயல்பு என்றும், உயிர் ஒன்றாயினும் பல பிறப்பு எடுத்துப் பல உடம்புகளினாலும் அவ் வினைப்பயனைத் துய்த்தலின் பிறனே துய்த்தல் இயல்பு என்றும் கூறினார் என்க. என்றி : நிகழ்கால முன்னிலை ஒருமை முற்று. ( 7 )

1419. உண்டே தனதியல்பி
னுணருங்காலை யுயிரென்றி
யுண்டாய வ்வவுயிரே
பிறிதினில்லை யெனவுரைத்தி
வண்டார்த்து நாற்காதம்
வண்ணமாலை சுமந்தொசிந்து
கொண்டேந்து பூம்பிண்டிக்
கோமானின்னைத் தொழுதேனே.

பொருள் : உயிர் தனது இயல்பின் உணருங்காலை உண்டே என்றி - உயிர் தனது இயல்பால் உணர்ந்தால் உண்டே என்று கூறுகின்றாய்; உண்டாய அவ்வுயிரே பிறிதின் இல்லை என உரைத்தி - இருக்கின்றதாக உணரப்பட்ட அவ்வுயிரே மற்றொன்றின் இயல்பால் இல்லையென்று கூறுகின்றாய்; வண்டு ஆர்த்து நாற்காதம் வண்ணமாலை சுமந்து ஒசிந்துகொண்டு ஏந்து பூம்பிண்டிக் கோமான் - வண்டுகள் முரன்று நாற்காதம் பரவி அழகிய மாலைகளைச் சுமந்து நுடங்கிக்கொண்டு ஏந்து மலர்ப் பிண்டிக்கோமானே!; நின்னைத் தொழுதேன் - (ஆதலால், ஒரு பொருளிலே உண்டும் இல்லையுங் கூறிய) நின்னை அஞ்சி வணங்கினேன். 

விளக்கம் : உயிர் தனதியல்பின் உணர்தலாவது, மெய்ப்பொருளாந்தனது இயல்பில் வைத்து ஆராய்ந்துணர்தல். பிறிதின் இயல்பால் ஆராய்தலாவது, உடல் முதலிய பொய்ப் பொருளின்கண் வைத்து ஆராய்தல். இதனாற் கூறியது மெய்யுணர்வார்க்கு உயிர் உள்பொருள்; அஃதுணரமாட்டார்க்கு அஃதில் பொருள் என்பதாம். பூம்பிண்டிக் கோமான் : விளி : அருகன். இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் : உயிர் ஒருவனிடத்துண்டு; தூணில் இல்லை. ஆதலால், உயிர் தனக்கே உண்டும் இல்லையும் தங்கின. இத்  தன்மை வேறுபாட்டால் அங்கில்லை என்பர். ( 8 )

1420. காதலா லெண்வினையுங்
கழிபவென்றி யக்காத
லாதலா லெண்வினையுங்
கழியாவென்று மறைதியாற்
போதுலாய்த் தேன்றுளித்துப்
பொழிந்துவண்டு திவண்டுலாங்
கோதைதாழ் பூம்பிண்டிக்
கோமானின்னைத் தொழுதேனே.

பொருள் : காதலால் எண் வினையும் கழிப என்றி - காதலினால் எண்வகை வினையும் கழிகின்றன என்கிறாய்; அக் காதல் ஆதலால் எண்வினையும் கழியா என்றும் அறைதி - அக் காதலே மற்றொன்றின் ஆகும்போது எண்வினையும் கழியா என்றும் அறைகின்றாய்; போது உலாய்த் தேன்துளித்துப் பொழிந்து வண்டு திவண்டு உலாம் கோதை தாழ் பூம்பிண்டிக் கோமான் - மலர்கள் சூழ்ந்து தேன்துளிகொண்டு பெய்து வண்டுகள் அசைந்து உலவும் மாலை தங்கிய மலர்ப்பிண்டிக் கோமானே!; நின்னைத் தொழுதேன் - இவ் வேறுபட்ட மொழியால் அஞ்சி நின்னை வணங்கினேன்.
 
விளக்கம் : எண்வினையாவன : அப்பிரத்தியாக்கியானக் குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம் அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியானலோபம், பிரத்தியாக்கியான குரோதம், பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்னுமிவ் வெட்டுமாம். இவற்றின் விளக்கம் முத்தியிலம்பகத்தில் (3076) கூறப்படும், ஆண்டுக் காண்க. இச் செய்யுள்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள். 350)

என்றும்,
 
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (குறள். 347)
 
என்றும் வரும் இரண்டு திருக்குறட் கருத்தினையுந் தன்பாற் கொண்டுளது.
 
கழிப : பலவறிசொல்.
 
இவை இருபுறவாழ்த்து; தேவபாணித் தாழிசைக்கொச்சக ஒருபோகு. இவற்றின் இடையிடையே நாலசைச்சீர்களும் வந்துள்ளன.
( 9 )

வேறு
 
1421. இனிதி னிங்ஙன மேத்தி வலங்கொண்டு
முனிவர் சித்திர கூடமு னாதெனத்
தனிதி னேகுபு தாபதர் வாழ்வதோர்
பனிகொள் பூம்பொழிற் பள்ளிகண் டானரோ.

பொருள் : இங்ஙனம் இனிதின் ஏத்தி வலம்கொண்டு - இவ்வாறு குரலின் இனிமையோடு வாழ்த்தி வலம்புரிந்துவிட்டு; முனிவர் சித்திரகூடம் முனாது என - முனிவருடைய சித்திரகூடம் முன்னுள்ளதென்று சுதஞ்சணன் கூறியதால்; தனிதின் ஏகுபு - (அதனைக் காண எண்ணித்) தனியே சென்று; தாபதர் வாழ்வது ஓர் பனிகொள் பூம்பொழில் பள்ளிகண்டான் - தாபதர்கள் வாழ்வதாகிய ஒரு குளிர்ச்சி தங்கிய மலர்ப்பொழிலில் உள்ள பள்ளியைக் கண்டான்.
 
விளக்கம் : சித்திரகூடம், பள்ளியின் பெயர். தனித்து என்பது தனிது என விகாரப்பட்டது. தனிதின் : இன் : அசை. அரோ : அசை. இனிதின் என்புழி இன் அசைச்சொல். என - என்று சுதஞ்சணன் முற்கூறியிருந்தமையால் (1190). ( 10 )

1422. புல்லு மல்லியும் போகுயர் நீள்கழை
நெல்லு நீர்விளை கேழலுந் தோரையு
மல்ல தீம்பழங் காய்கிழங் காதியா
நல்ல வேநுகர் வார்பள்ளி நண்ணினான்.

பொருள் : புல்லும் அல்லியும் போகுஉயர் நீள்கழை நெல்லும் நீர்விளை கேழலும் தோரையும் - (ஊனை நுகராமல்) புல்லும் அல்லியும் மிக உயர்ந்த மூங்கிலரிசியும் நீரில்விளை குளநெல்லும் தோரை என்னும் நெல்லும்; அல்ல தீம் பழம் காய்கிழங்கு ஆதி ஆ - ஆகிய இவையல்லாமலும் இனிய பழமும் காயும் கிழங்கும் முதலாக; நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான் - நல்லவற்றையே நுகர்வாராகிய தாபதர் வாழும் பள்ளியைச் சேர்ந்தான்.
 
விளக்கம் : புல், அல்லி, நெல், கேழல், தோரை என்பன இவற்றின் அரிசிகட்கு ஆகுபெயர். போகுயர் : ஒரு பொருட் பன்மொழி; மிக வளர்ந்த என்க. கேழல் - குளநெல். தோரை - மூங்கிலரிசி. அல்ல என்றது இவையல்லாதவிடத்து என்றவாறு. நல்லவே என்புழி ஏகாரம் - பிரிநிலை; என்னை? தீயவாகிய ஊன் உணவைப் பிரித்து நிற்றலின் என்க. ( 11 )

1423. அரிய கொள்கைய ராரழ லைந்தினுண்
மருவி வீடு வளைக்குறு மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார்.

பொருள் : அரிய கொள்கையர் - அரியவான கோட்பாடுகளையுடையவர்; ஆர் அழல் ஐந்தினுள் மருவி வீடு வளைக்குறும் மாட்சியர் - நிறைந்த ஐந்தழலின் நடுவே பொருந்தி வீட்டுலகை வளைத்திடும் பெருமையினர்; விரிய வேதம் விளம்பிய நாவினர் - விளக்கமாக நான்மறை பயின்ற நாவினர்; தெரிவு இல் தீத்தொழில் சிந்தையின் மேயினார் - விளக்கமற்ற தீய தொழிலான காமத்தொழிலைச் சிந்தையிற் கொண்டவர்.

விளக்கம் : ஆர் அழல் ஐந்திடை மருவி என்றது, நான்கு திசைகளினும் வளர்க்கப்பட்ட ஓமகுண்டத் தீயும் உச்சியிற் கதிரவனுமாகிய ஐந்து தீயின் நடுவண் நின்று என்றவாறு.  தெரிவுஇல் தீத்தொழில் என்றது, காம வேட்கையாலியற்றும் தீவினைகளை. அரிய கொள்கையாவன : நாலிரு வழக்கில் தாபதப் பக்கம்; நீர்பில கால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் - சோர்நடை தாழச் சுடரோம்பி - ஊரடையார் - கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் - வானகத் துய்க்கும் வழி. (பு. வெ. 168) என்பனவும் பிறவுமாம். ( 12 )

1424. வள்ளி யின்னமு தும்வரை வாழையின்
றெள்ளு தீங்கனி யுஞ்சில தந்தபின்
வெள்ள மாரிய னாய்விருந் தார்கென
வுள்ள மாட்சியி னாருவந் தோம்பினார்.

பொருள் : வள்ளி இன் அமுதும் - வள்ளிக்கிழங்காகிய சுவையுடைய உணவும், வரை வாழையின் - மலையிலுண்டாம் வாழையினது; தெள்ளு தீ கனியும் - ஆராய்ந்தெடுத்த இனிய பழமும் ஆகிய; சில தந்தபின் - இவற்றுள் சிலவற்றைக் கொடுத்த பின்னர்; வெள்ள மாரி அனாய் - நீர் பொழிகின்ற மேகத்தையொத்தவனே; விருந்து ஆர்க என - விருந்துண்பாயாகவென்று கூறி; உள்ள மாட்சியினார் - மனமாண்புடைய முனிவர்கள்; உவந்து ஓம்பினார் - மகிழ்ந்து பேணினார்.
 
விளக்கம் : அமுது : ஆகுபெயர். வெள்ளமாரியனாய் என்றது பலர்க்கும் பயன்படுபவனே என்றவாறு. ( 13 )

1425. பாங்கின் மாதவர் பான்மதி போன்றிவன்
வீங்கு கல்வியன் மெய்ப்பொருட் கேள்விய
னாங்கு நாமு மளக்குவ மென்றுதம்
மோங்கு கட்டுரை யொன்றிரண் டோதினார்.

பொருள் : பாங்கின் மாதவர் - நல்ல இடத்தில் உள்ள முனிவர்; இவன் பால்மதி போன்று வீங்கு கல்வியன் - இவன் முழுத் திங்கள் போலே எல்லாக் கலைகளும் நிறைந்த கல்வியன்; மெய்ப்பொருள் கேள்வியன் - உண்மைப் பொருளைக் கேட்டறிந்தவன்; ஆங்கு நாமும் அளக்குவம் என்று - இவனிடத்துள்ள அக் கல்வி கேள்விகளை நாமும் அளந்தறிவேம் என்று எண்ணி; தம் ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார் - தம் உயர்ந்த கட்டுரைகளில் ஒன்றிரண்டுரைத்தனர்.
 
விளக்கம் : பால்மதி - பால் போன்ற ஒளியையுடைய முழுத்திங்கள். ஒவ்வொரு கலையாக நாடோறும் வளர்ந்து நிரம்பிய திங்கள் ஒவ்வொரு கலையாகப் பயின்று நிரம்பிய சீவகனுக்க உவமை. மெய்ப்பொருள் - காரண காரியங்களிரண்டுமின்றி முடிவாய் நிற்கும் பொருள். அளக்குவம் : தன்மைப் பன்மை. கட்டுரை - பொருள் பொதிந்த மொழி.

ஒன்றிரண் டென்பதொரு வழக்கு; ஒருசில என்பது கருத்து.
பாங்கு - நல்லிடம்; பாங்கர்ப் பல்லி (அகம் : 9) என்ப. ( 14 )

1426. ஐயர் கூறலு மண்ணலுங் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திர நீந்துவா
னுய்யு மேற்றொடர்ப் பாட்டினிங் கியாவையு
மெய்தி னார்களு முய்பவென் றோதினான்.

பொருள் : ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான் - அவர்கள் கூறுகின்ற அளவிலே சீவகனும் கூறுகின்றான்; சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான் உய்யுமேல் - கல்லைக் கழுத்திலே கட்டிக் கொண்டு கடலிடை நீந்துவோன் பிழைப்பான் என்றால்; இங்குத் தொடர்ப்பாட்டின் யாவையும் எய்தினார்களும் - இவ்வுலகிற் காமநுகர்ச்சியோடே விரதங்களைக் கொண்டவர்களும்; உய்ப என்று ஓதினான் - பிழைப்பரென்று நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினான்.

விளக்கம் : ஐயர் - தலைவர்; என்றது அம் முனிவரை. சையம் - கல். இச் செய்யுளோடு,

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள். 344)
 
என்னுந் திருக்குறளை நினைக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் வந்து மனக்கலக்கம் செய்யும் என்பான், தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும் உய்ப என்றோதினான் என்க. இச் செய்யுள் மனைவிமக்களோடிருந்தும் வீடெய்துதல் கூடும் என்னும் ஏனைச் சமயிகளைப் பழித்தபடியாம். அவர்கள் மனைவியருடன் இருத்தலின் தொடர்ப்பாடு என்றான். ( 15 )

1427. வீடு வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை
யோடுகோட லுடுத்தலென் றின்னவை
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே.

பொருள் : வீடு வேண்டி விழுச்சடை நீட்டல் - வீடு பெற விரும்பிச் சிறப்புறச் சடையை நீட்டுதல்; மெய்ம் மூடு கூறையின் மூடுதல் - உடம்பை மறைக்கும் துவர் ஊட்டின ஆடையினாலே போர்த்துக் கொள்ளுதல்; வெண்டலை ஓடு கோடல் - மண்டையோடு கைக்கொள்ளுதல்; உடுத்தல் - தனியே இருத்தல்; என்று இன்னவை - என்று கூறப்படும் இத்தன்மையவை; பீடு இலாப் பிறவிக்கு வித்து என்ப - சிறப்பிலாத பிறப்புக்கு வித்து என்று உண்மையுணர்ந்தோர் கூறுவர்.
 
விளக்கம் : இச் செய்யுள்,
 
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
 
என்னுந் திருக்குறளின் விளக்கமாக அமைந்துள்ளமை உணர்க. துன்பமல்லது தொழுதகவு இல்லாப் பிறப்பென்பான், பீடிலாப் பிறவி என்றான். ( 16 )

1428. ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறி
தூய்மை யின்னெறி யாமுந்து ணிகுவங்
காமன் றாதை நெறியின்கட் காளைநீ
தீமை யுண்டெனிற் செப்பெனச் செப்பினான்.

பொருள் : எம் நெறி ஏமம் நல்நெறி - யாங்கள் நிற்கின்ற வழி நல்வழி; அல்நெறி தூய்மை இல்நெறி - இஃது ஒழிந்தன நீ கூறியவாறே தூய்மை இல்லாத வழி; யாமும் துணிகுவம் - அதனை நாங்களும் தெரிந்திருப்போம்; காமன் தாதை நெறியின் கண் - திருமால் கூறிய இவ்வழியிடத்தில்; தீமை உண்டு எனில் - தீங்கு உண்டாயின்; காளை நீ செப்பு எனச் செப்பினான் - காளையே! நீ கூறுக என்று அவர்கள் வினவ, அவனும் சொன்னான்.
 
விளக்கம் : ஏமம் - இன்பம். காளைபோல்வானைக் காளையென்றது ஆகுபெயர். அல்நெறி - இந் நெறியல்லாத பிற நெறிகள். காமன் தாதை - திருமால். காளை : விளி. ( 17 )

வேறு
 
1429. தூங்குறிக் கிடந்து காயும்
பழங்களுந் துய்ப்ப நில்லா
பாங்கலா வினைக ளென்றார்
பகவனா ரெங்கட் கென்னி
னோங்குநீண் மரத்திற் றூங்கு
மொண்சிறை யொடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்க டுய்ப்பப்
பழவினை பரியு மன்றே.

பொருள் : பகவனார் எங்கட்கு - திருமால் எங்களுக்கு; தூங்கு உறிக்கிடந்து காயும் பழங்களும் துய்யப்ப - தூக்கப்பட்ட உறிகளிலே இருந்து காயும் கனிகளும் உண்பதனால்; பாங்கு அலாவினைகள் நில்லா என்றார் என்னின் - நல்லவை அல்லாத வினைகள் நில்லா என்றுரைத்தார் என்றால்; ஒங்கும் நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல் - உயர்ந்து நீண்ட மரங்களிலே தொங்குகின்ற சிறந்த சிறகுகளையுடைய, ஒடுங்குமியல்புள்ள வெளவால்கள்; பாங்கரில் பழங்கள் துய்ப்பப் பழவினை பரியும் அன்றே - அருகில் உள்ள பழங்களைத் துய்ப்பதனால் அவற்றின் பழவினைகள் நீங்கும் அல்லவா?
 
விளக்கம் : சமயங்கள் கூறிய புற ஒழுக்கமாத்திரையானே பழவினைகள் கழியா என்பது இச் செய்யுளின் கருத்து. பழங்களையே உண்டு மரத்திலே தலைகீழாய்த் தொங்குதலானே வெளவால்களின் பழவினை தீர்தல் இல்லையானாற் போன்று  இவ்வொழுக்கமாத்திரையாற் பிறப்பறாது என்றபடியாம். இது மாறுபட வந்த உவமத்தோற்றம். ( 18 )

1430. அல்லியும் புல்லு முண்டாங்
காரழ லைந்து ணின்று
சொல்லிய வகையி னோற்பத்
துணியும்வெவ் வினைக ளென்னிற்
கல்லுண்டு கடிய வெம்புங்
கானுறை புறவ மெல்லாம்
புல்லிய வினையை வென்று
புறக்கொடை காணு மன்றே.

பொருள் : அல்லியும் புல்லும் உண்டு - அல்லிக் காயில் உள்ள அரிசியையும் புல்லரிசியையும் சாப்பிட்டு; ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று - அங்கே நிறைந்த ஐந்தழலின் நடுவே நின்று; சொல்லிய வகையின் நோற்ப - பகவனார் கூறிய நெறியிலே நோற்பதனால்; வெவ்வினைகள் துணியும் என்னின் - தீவினைகள் அறும் என்றால்; கடிய வெம்பும் கான் கல் உண்டு உறையும் புறவம் எல்லாம் - கொடிய வெப்பமுடைய கானிலே கற்களை உண்டு வாழும் புறாக்கள் யாவும; புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே - தம்மைத் தொடர்ந்த இருவினையையும் வென்று புறங்காணும் அல்லவா?
 
விளக்கம் : வெப்பமிக்க பாலையின்கண் கல் முதலியவற்றை உண்டு வாழும் புறாவின் பிறப்பறாமைபோல நல்லனவே உண்டு அழல் நடுவில் நின்று தவமியற்றன் மாத்திரையானே பிறப்பொழியா தென்பது கருத்து. இதுவும் மாறுபடவந்த உவமத் தோற்றமே.
( 19 )

1431. நீட்டிய சடைய மாகி
நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள்
வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக்
கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும்
வெளிற்றுரை விடுமி னென்றான்.

பொருள் : நீட்டிய சடையம் ஆகி - நீண்ட சடையினேம் ஆகி; நீர் மூழ்கி - நீரிலே குளித்து; நிலத்திற் சேர்ந்து - தரையிலே தங்கி; வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி வளைத்தும் என்னின் - வாட்டிய உடம்பினாலே நாங்கள் மேலோன வீட்டை அடைவோம் என்றால்; காட்டிடைக் கரடி போகிக் கயம் மூழ்கி -காட்டில் உறையும் கரடி சென்று குளத்திலே குளித்து; காட்டில் நின்று வீட்டினை விளைக்கவேண்டும் - (அதனால்) காட்டிலிருந்து வீட்டை அடையவேண்டும்; வெளிற்றுரை விடுமின் என்றான் - பொருளற்ற மொழியை விடுங்கோள் என்றான்.

விளக்கம் : சடையுடைமை கருதிக் கரடியை உவமை கூறினான். சடை வளர்த்தலும் காட்டிடை வாழ்தலும் கயமூழ்கலும் உடைமையாற் கரடி பிறப்பொழியாமை போல இவ்வொழுக்கமாத்திரையானும் பிறப்பறாது என்பது கருத்து. இதுவும் அவ்வுவமமே. ( 20 )

1432. கலைவளர் கிளவி யார்தங் காமர்மென் சேக்கை நீங்கி
யிலைவளர் குரம்பை யங்க ணிருநிலஞ் சேக்கை யாக
முலைவள ராகந் தோய முழுவினை முரியு மாயின்
மலைவளர் குறவர்க் கம்மா வினைகளு மாயு மன்றே.

பொருள் : கலைவளர் கிளவியார் தம் காமர் மென் சேக்கை நீங்கி - கலை வளர்தற்குரிய மொழியாரான மகளிருடன் துயிலும் அழகிய மெல்லிய அணையை விட்டு; இலைவளர் குரம்பை அங்கண் - இலைகளால் மூடிய குடிசையிலே; இருநிலம் சேக்கை ஆக முலைவளர் ஆகம் தோய - பெருநிலமே அணையாக அக் கிளவியாரின் முலைவளர் மார்பைத் தழுவ; முழுவினை முரியும் ஆயின் - வினைகள் யாவும் கெடுமென்றால்; மலைவளர் குறவர்க்கு அம் மா வினைகளும் மாயும் அன்றே - மலைவாழ்வினையுடைய குறவர்கட்கு அக்கொடிய வினைகளெல்லாம் கெடும் அல்லவா?
 
விளக்கம் : இஃது வானப்பிரத்த நிலையினைப் பழித்தபடியாம். அந்நிலையின்கண் உளதாம் பேதைமையை விளக்குவான், காமர் மென் சேக்கையை நீங்கி இருநிலஞ் சேக்கையாக என்று விதந்தோதினான். இயல்பாகவே குறவர்களுக்கு இவ்வானப்பிரத்த நிலை எய்தியதாகவும் அவர் பிறப்பறாமைபோல இதனாற் பிறப்பறாது என்பது கருத்து. கலை - ஈண்டு இசைக்கலை. காமர் மென்சேக்கை என்றதனால், கற்கள் உறுத்தும் புன்னிலச் சேக்கை எனவும், இலைவளர் குரம்பை என்றதனால் மணிமாடத்து நிலாமுற்றத்திலமைந்த காமர்மென்சேக்கை எனவும் விரித்தோதுக. ( 21 )

1433. வெண்ணிறத் துகிலி னாங்கண் வீழ்ந்துமா சாகிநின்ற
வொண்ணிற வுதிரந் தன்னை யுதிரத்தா லொழிக்க லாமே
பண்ணிறக் கிளவி யார்தம் பசையினாற் பிறந்த பாவங்
கண்ணிற முலையி னார்தங் கலவியாற் கழிக்க லாமே.

பொருள் : வெள் நிறத் துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற - வெண்ணிற ஆடையிலே வீழ்ந்து கறையாகி நின்ற; ஒள் நிற உதிரந்தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே - ஒளிரும் நிறமுடைய குருதியைக் குருதியாலே போக்க முடியுமோ? முடியா தன்றே (அதுபோல); பண் நிறக் கிளவியார் தம் பசையினால் பிறந்த பாவம் - பண்ணின் இயல்புற்ற மொழியாராகிய மகளிரின் ஆசையினால் உண்டான பாவத்தை; கண் நிற முலையினார் தம் கலவியால் கழிக்கலாமே - கண்களையுடைய ஒளிபொருந்திய முலையார்களின் சேர்கையினாலே போக்க முடியுமோ? (முடியாது.)
 
விளக்கம் : துகிலின் கட்பட்ட குருதிக்கறையைக் குருதியாலே மாற்றல் கூடாமைபோலப் பிறவிக்குக் காரணமாகிய பற்றாலேயே பிறவியை அறுக்க இயலாது என்பதாம். பிறப்பறுக்கலுற்றார் முலையினார் கலவியைத் தவிர்தல் வேண்டும் என்பது கருத்து. ( 22 )

1434. நுண்டுகில் வேத லஞ்சி
நெருப்பகம் பொதிந்து நோக்கிக்
கொண்டுபோய் மறைய வைத்தாற்
கொந்தழல் சுடாது மாமே
கண்டத்தி னாவி யார்தங்
கடிமனை துறந்து காட்டுட்
பண்டைச்செய் தொழிலிற் பாவம்
பறைக்குற்றாற் பறைக்க லாமே.

பொருள் : நுண் துகில் வேதல் அஞ்சி - நுண்ணிய ஆடைவேதற்கு அஞ்சி; நெருப்பு அகம் நோக்கிப் பொதிந்து - நெருப்பை ஆடையினுள்ளே பார்த்துவைத்து மூடி; கொண்டுபோய் மறைய வைத்தால் - கொண்டு சென்று மறைவான இடத்திலே வைத்தால், கொந்து அழல் சுடாதும் ஆமே - அப் பொங்கும் நெருப்புச் சுடாதும் விடுமோ?; கண்டத்தின் நாவியார் தம் கடிமனை துறந்து - கழுத்திலே புழுகை அணிந்த மகளிரின் காவலுறும் மனையை விட்டு நீங்கி; காட்டுள் பண்டைச் செய் தொழிலின் - காட்டிலே சென்று முன் செய்த கலவித் தொழிலையே கொண்டு; பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே - பாவத்தைப் போக்க நினைத்தாற் போக்கமுடியுமோ?
 
விளக்கம் : தொன்று தொட்டுப் பிறப்புக்கடோறுந் தொடர்ந்து வரும் செயல் என்பார், பண்டைச் செய்தொழில் என்றான். பறைக்கல் - தேய்த்தல். பறைதல் - தேய்தல். பார்வையாத்த பறைதாள் விளவின் என்னும் பெரும்பாணாற்றுப்படையினும் (95) அஃதப்பொருட்டாதல் காண்க. சுடாதும் என்புழி, உம்மை, இசை நின்ற. மகளிரின் மனையைத் துறந்தகல (அவரை நெஞ்சாலே நோக்கிக்) காட்டிலே கொண்டுபோய் வைத்து, முன்பு செய்த தொழிலிற் பிறந்த பாவத்தைப் போக்கலுற்றாற், போக்க ஒண்ணாது என்பர் நச்சினார்க்கினியர். ( 23 )

1435. நோய்முதிர் குரங்கு போல
நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா
காய்முதிர் கனியி னூழ்த்து
வீழுமிவ் வியாக்கை யின்னே
வேய்முதிர் வனத்தின் வென்றா
னுருவொடு விளங்க நோற்றுப்
போய்முதிர் துறக்கத் தின்பம்
பருகுவ புரிமி னென்றான்.

பொருள் : நோய்முதிர் குரங்குபோல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா - காமநோயினால் முதிர்ந்த குரங்கைப்போல நீவிர் காம நுகர்ச்சியை நோக்குதல் வேண்டா; காய் முதிர் கனியின் ஊழ்த்து இவ் யாக்கை வீழும் - காய் முற்றிப் பழமாகி விழுவதைப் போல, முதிர்ச்சி அடைந்து இவ்வுடம்பு விழுந்து விடும்; வேய் முதிர் வனத்தின் - மூங்கில் முற்றிய காட்டிலே; வென்றான் உருவொடு விளங்க இன்னே நோற்றுப்போய் - காமனை வென்ற அருகப்பெருமான் உருவத்துடன் நின்று விளக்கமுற இப்பொழுதே நோற்றுச் சென்று; முதிர் துறக்கத்து இன்பம் பருகுதலைப் புரிமின் என்றான் - முற்றிய துறக்க வின்பத்தை நுகர்தலை விரும்புமின் என்று சீவகன் செப்பினான்.
 
விளக்கம் : கொண்டது விடாமையானும் குரங்கு உவமையாயிற்று. வேண்டின் உண்டாகத் துறக்க என்பான் இன்னே என்றான். இன்னே என்பதனை நோற்றுப்போய் என்பதனோடு கூட்டுக. வென்றான் : பெயர். ( 24 )

1436. மெய்வகை தெரிதன் ஞானம்
விளங்கிய பொருள்க டம்மைப்
பொய்வகை யின்றித் தேறல்
காட்சியைம் பொறியும் வாட்டி
யுய்வகை யுயிரைத் தேயா
தொழுகுத லொழுக்க மூன்று
மிவ்வகை நிறைந்த போழ்தே
யிருவினை கழியு மென்றான்.

பொருள் : ஞானம் மெய்வகை தெரிதல் - ஞானமாவது உண்மை அறிதல்; காட்சி விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் - காட்சியாவது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல்; ஒழுக்கம் ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் - ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களிற் செல்லாமற் கெடுத்து உயிரைக் கெடாமல் அவ்வுயிர் உய்யும் வகையிலே நடத்தல்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான் - இம் மூன்றொழுக்கமும் இப்படி நிறைந்த பொழுதே இருவினையும் கெடும் என்றான்.
 
விளக்கம் : இச் செய்யுளில் நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்னும் மூன்றன் இயல்பும் கூறுகின்றார். இவற்றை, இரத்தினத்திரயம் என்றும் பரத்திரயம் என்றும் வழங்குப. இவற்றுள் நன்ஞானம் - எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தாகிய அறிவு, நற்காட்சி ஐயமின்மை அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கமின்மை, அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல், அறத்துக்கு அளவளவு, அறத்தை விளக்கல் என்னும் எண்வகை உறுப்பிற்று. நல்லொழுக்கம் அணுவிரதம் மாவிரதம் என இருவகைப்படும். ( 25 )

1437. குன்ற னானுரைப்பக் கேட்டே
பாகத்தார் குடும்ப நீக்கி
யின்றுகண் விடுக்கப் பட்டேம்
யாமென வெழுந்து போகி
வென்றவன் பாதஞ் சேர்ந்து
வீட்டுநன் னெறியைப் பெற்றார்
சென்றது பருதி வட்டஞ்
செம்மலு மசைவு தீர்ந்தான்.

பொருள் : குன்று அனான் உரைப்பக் கேட்டு - சலிப்பற்ற சீவகன் இவ்வாறு கூறக்கேட்டு; பாகத்தார் குடும்பம் நீங்கி - நல்வினை வந்தடையும் நிலையுடையார் மனைவியரைத் துறந்து; யாம் இன்று கண் விடுக்கப் பட்டேம் என எழுந்து போகி - யாங்கள் இன்று நின்னாலே அறிவுண்டாக்கப் பட்டேம் என்று கூறி எழுந்து சென்று; வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நன்னெறியைப் பெற்றார் - காமனை வென்றவனுடைய திருவடியை அடைந்து வீட்டிற்குச் செல்லும் நல்ல வழியைப் பெற்றார்; பருதி வட்டம் சென்றது - அவ்வளவிலே ஞாயிறு மறைந்தது ; செம்மலும் அசைவு தீர்ந்தான் - சீவகனும் இளைப்புத் தீர்ந்தான்;
 
விளக்கம் : குன்றம் சீவகனுக்குச் சலியாமை என்னும் பண்பு பற்றி வந்த பெருமித வுவமை. பாகத்தார் என்றது இத்தகைய ஞானக்கேள்வியைக் கேட்டற்குரிய அதிகாரிகள் என்பதுபட நின்றது. குடும்பம் என்றது மனைவி முதலிய தொடர்ப்பாட்டினை. கண் : ஈண்டு அறிவுக்கண். கண் திறப்பிக்கப்பட்டேம் என்றவாறு. முன்னர் (24) இன்னே என்றதற்கேற்ப ஈண்டும் எழுந்து போய் என்றார்.
எழுந்து போய் என்றது, அப்பொழுதே எழுந்துபோய் என்பதுபட நின்றது. வட்டம் என்றது, ஞாயிறு நாடோறும் வட்டமாய் மாமேரு வருதலை என்பர் நச்சினார்க்கினியர்.  (26 )

வேறு
 
1438. அசைவு தீர்ந்திரு ளஃகிய காலையே
வசையி னீங்கியி னார்வழி காட்டலிற்
றிசையும் யாறுந் தெரிந்துகொண் டேகினான்
மிசையு மில்லதோர் மெய்ப்பொறி யாக்கையான்.

பொருள் : அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே - அங்ஙனம் இளைப்பாறி இருள்புலர்ந்த வைகறையிலே; வசையின் நீங்கினார் வழி காட்டலின் - குற்றத்திலிருந்து நீங்கினவர்கள் வழிகாட்டியதால்; மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான் - மேலுலகினும் இல்லாததாகிய ஒப்பற்ற உண்மை இலக்கணம் அமைந்த உடம்பினான்; திசையும் யாறும் தெரிந்து கொண்டு ஏகினான் - திக்கும் யாறும் விளங்கிக்கொண்டு சென்றான்.

விளக்கம் : வசை - காமவெகுளி மயக்கமென்னும் குற்றம். இனி 9 - ஆம் செய்யுளிற் கூறப்பட்ட அப்பிரத்தியாக்கியான, பிரத்தியாக்கியான குரோதம் மானம் மாயை லோபம் என்பனவுமாம். மிசை : தேவருலகிற்கு ஆகுபெயர். மெய்ப்பொறி - உடலுக்குக் கூறும் நல்லிலக்கணம். நீங்கியினார் : இன் : அசை. ( 27 )

வேறு
 
1439. படம்புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத்
தடம்பல தழீ இயது தக்க நாடது
வடங்கெழு வருமுலை மகளிர் மாமைபோன்
றிடம்பெரி தினிதத னெல்லை யெய்தினான்.

பொருள் : புனைந்து எழுதிய படம் வடிவில் - ஒப்பனை செய்து வரைந்த படத்தின் வடிவுபோல; பங்கயத் தடம் பல தழீ இயது - தாமரைக்குளம் பல சூழ்ந்தது; வடம்கெழு வருமுலை மகளிர் மாமைபோன்று இடம் பெரிது இனிது - முத்து வடம் முதலிய பொருந்திய வளரும் முலையுடைய மங்கையரின் அழகு போல நுகர்வார்க்குப் பெரிதும் இனியது; அது தக்க நாடு - அது தக்க நாடென்னும் பெயருடையது; அதன் எல்லை எய்தினான் - அதன் எல்லையைச் சீவகன் அடைந்தான்.
 
விளக்கம் : ஓவியப்புலவன் கிழியின்கண் தன் கலையுணர்ச்சியினாற்புனைந்து வரையப்பட்ட ஓவியம் போலத்தோன்றும் தாமரைத் தடம்பல தன்பால் அமைந்தது என்னும் இச்சொல்லோவியம் மிகவும் இனிதாதல் உணர்க. மாமை - அழகு. ஈண்டு அந்நாடு தெவிட்டாத காட்சியின் பமுடைத்தாதற்கு உவமை. ( 28 )

1440. தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
பூங்குழன் மடந்தையர் புனைந்த சாந்தமு
மாங்கெலா மகிற்புகை யளாய வாசமுந்
தாங்கலா றக்கநா டாய தென்பவே.

பொருள் : தேம் கயத்து அணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - இனிய கயத்தின் அழகிய மலர் வாய்விட்ட மணமும்; பூங்குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும் - மலர்க் கூந்தலையுடைய மாதர்கள் அணிந்த சந்தனமும்; அகில் புகை அளாய வாசமும் - அகிற்புகை கலந்த மணமும்; ஆங்குஎலாம் தாங்கலால் தக்கநாடு ஆயது என்ப - அங்கெல்லாம் தரித்தலின் தக்கநாடு என்னும் பெயர்த்தாயிற்றென்பர்.

விளக்கம் : தெகிழ்ந்த - நெகிழ்ந்த; மலர்ந்த என்றவாறு. தக்க நாடு - தகுதியுடைய நாடு; தகுதி -தாங்குதல். எனவே தக்க நாடென்பது அதற்குக் காரணப் பெயர் என்றவாறு.  என்ப - என்று சான்றோர் கூறுவர். ( 29 )

1441. சண்பக நறுமலர் மாலை நாறுசாந்
தொண்பழுக் காயினோ டுருவ மெல்லிலை
யுண்பத மியாவர்க்கு மூன மில்லது
வண்புகழ் நாட்டது வண்ண மின்னதே.

பொருள் : சண்பக நறுமலர் மாலை - சண்பகமலர்களாகிய மணமிகு மாலையும்; நாறு சாந்து - மணக்கும் சந்தனமும்; ஒண்பழுக்காயினோடு - சிறந்த பழுக்காயுடன்; உருவம் மெல்இலை - அழகிய வெற்றிலையும்; உண்பதம் - உண்ணும் உணவும் என இவை; யாவர்க்கும் ஊனம் இல்லது - எவருக்கும் குறைவின்றி அமைந்தது; வண்புகழ் நாட்டது வண்ணம் இன்னது - வளமிகும் புகழுற்ற தக்கநாட்டின் இயல்பு இத்தகையதே.

விளக்கம் : பழுக்காய் - பாக்கு. உருவம் - அழகு. மெல்லிலே : வினைத்தொகை; வெற்றிலை. உண்பதம் : வினைத்தொகை. நாறுசாந்து என்பதும் அது. ஒண்பழுக்காய், வண்புகழ் : பண்புத்தொகைகள். மலர் முதலிய இன்னோரன்னவற்றால் ஊனம் இல்லது என்க. ஊனம் - குறைவு. வண்ணம் - இயல்பு. ( 30 )

1442. கரும்பணி வளவயற் காமர் தாமரை
வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செநெ
லரங்கணி நாடக மகளி ராய்நுதற்
சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே.

பொருள் : கரும்பு அணி வளவயல் - கரும்பை அணிந்த வளத்தையுடைய கழனியில்; காமர் தாமரை வரம்பு அணைந்து - அழகிய தாமரைமலர் சாய்ந்து வரம்பைச் சேர (இருக்க); அதன் நுதல்கிடந்த வார் செநெல் - அத் தாமரையின் நெற்றியிலே கிடந்த நீண்ட செந்நெற் கதிர்; அரங்கு அணி நாடகமகளிர் ஆய்நுதல் - அரங்கிலே அணிந்துவந்த நாடக மகளிரின் அழகிய நெற்றியிலே; சுரும்புசூழ் இலம்பகத் தோற்றம் ஒத்தது - வண்டுகள் சூழ்ந்த தலைக்கோலம் என்னும் அணியின் தோற்றம் போன்றது.
 
விளக்கம் : அதன் - அத்தாமரை மலரினது. இலம்பகம் - தலைக்கோலம் என்னும் ஓரணிகலம். வார்செநெல் - என்புழி நகரமெய் விகாரத்தாற் கெட்டது. அணைந்து - அணைய : எச்சத்திரிபு. சுரும்பு தாமரைமலரைச் சூழ இருக்கும். அவ்வாறே தலைக்கோலத்தை சூழக் கூந்தல் இருக்கும். வரம்புக்கு அரங்கு உவமை. ( 31 )

1443. வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமே
னண்டுகி ருற்றென நடுங்கி நாணினால்
விண்டொளித் தூண்டுறந் தொடுக்கும் வீழ்புனல்
கொண்டபூங் கிடங்கணி நகரம் கூறுவாம்.

பொருள் : வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமேல் - வண்டுகள் உறையும் வளைந்த துறையிலே கன்னியாகிய வாளையின் மேல்; நண்டு உகிர் உற்றென நடுங்கி - நண்டின் நகம்பட்டதாக, அதனால் நடுக்கமுற்று; நாணினால் விண்டு ஒளித்து ஊண்துறந்து ஒடுங்கம் வீழ்புனல் - நாணத்தினால் அவ்விடத்தைவிட்டு உணவே வெறுத்து ஒடுங்கியிருக்கும் ஆழ்ந்த நீரை; கொண்ட பூங்கிடங்கு அணி நகரம் கூறுவாம் - தன்னிடத்தே கொண்ட அகழிசூழ்ந்த நகரத்தை இனி இயம்புவோம்.
 
விளக்கம் : ஒரு கன்னி தன்மேலே உகிர் உற்றதனால் நாணத்தினால் நடுங்கி, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று ஒளித்து ஊணைத்துறந்து ஓடுங்குமாறு போல என வாளைக்கு உவமை கொள்க. வரியகட் டலவன் வள்ளுகிர் உற்றெனக் கன்னிவாளை உண்ணா தொடுங்கும் தண்பணை என்றார் கதையினும் (1 - 89 : 100 - 2.) ( 32 )

1444. அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி
புகழ்தகு மேகலை நாயில் பூண்முலை
திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ்
சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே.

பொருள் : செல்விக்கு - மதிலாகிய செல்விக்கு; அகழ்கிடங்கு அம்துகில் - அகழ்ந்த கிடங்கு அழகிய துகில்; ஆர்ந்த பாம்புரி புகழ்தகு மேகலை - பொருந்திய பாம்புரி புகழத்தக்க மேகலை; நாயில் பூண்முலை - ஞாயில் பூணணிந்த முலை; திகழ் மணிக்கோபுரம் திங்கள் வாண்முகம் - விளங்கும் மணிக்கோபுரம் திங்களனைய ஒளிரும் முகம்; நெடுங்கொடி சிகழிகை - நீண்ட கோடி மயிர்முடி; என்ப - என்று சொல்வார்.

விளக்கம் : பத்திரப் பாம்புரி அத்தகக் கலாஅய் என்றார் கதையினும் (3 - 3 : 17) பாம்புரி : மதிலின் அடியே உள்ள ஆளோடிகள் (சீவக. 1250; அடிக்குறிப்பு) நாயில் : ஞாயில்: போலி. ஞாயில் - மதிலின் ஓர் உறுப்பு; மதிலில் இருப்போர் வெளியார்மேல் அம்பெய்து மறையும் சூட்டு. ( 33 )

1445. நாட்டிய மணிவரை கடைந்து நல்லமிர்
தூட்டினு மதனைவிட் டுறைந ரின்மையா
லீட்டிய வளநிதி யிறைகொண் மாநகர்ச்
சூட்டுவைத் தனையதச் சுடர்ப்பொ னிஞ்சியே.

பொருள் : அச் சுடர்ப்பொன் இஞ்சி - அந்த ஒளியுறும் பொன்மதில்; நாட்டிய மணிவரை கடைந்து நல் அமிர்து ஊட்டினும் - மந்தரம் என்று பெயர் நாட்டிய மலையாலே கடலைக் கடைந்து அமிர்தத்தை ஊட்டினும்; அதனை விட்டு உறைநர் இன்மையால் - அந் நகரை விட்டுப் போய்த் தங்கவாரில்லாமையால்; ஈட்டிய வளநிதி இறைகொள் மாநகர் - ஈட்டப்பட்ட வளமுறு செல்வம் தங்கிய அப் பெருநகரம்; சூட்டு வைத்தனையது - நகரங்கட்கெல்லாம் தலையென்று சூட்டு வைத்தால் ஒத்தது என்க.
 
விளக்கம் : இனி, அ மணிவரை நாட்டி - எனப் பிரித்துக் கூட்டுக் கண்ணழித்து அம்மணி மலையாகிய மந்தரத்தை நட்டு எனினுமாம். இதற்கு அகரச்சுட்டுப் பண்டறி சுட்டு ஆகும். இதற்கு நிதி, ஆகுபெயர். சூட்டு என்றது சிறப்புப் பட்டத்திற்கு அடையாளமாகிய ஓரணிகலனை. ( 34 )

1446. எறிசுற விளையவ ரேந்து பூங்கொடி
மறிதிரை வரைபுரை மாட மாக்கலம்
பெறலருந் திருவனா ரமுதம் பேரொலி
யறைகடல் வளநக ராய தென்பவே.

பொருள் : பேரொலி வளநகர் - பேரொலியை உடைய அவ்வளமிகு நகரம்; இளையவர் எறிசுறவு - வீரர் எறியும் சுறா மீனாகவும்; ஏந்து பூங்கொடி மறிதிரை - ஏந்திய பூங்கொடி மறி திரையாகவும்; மாடம் மாக்கலம் - மாடங்கள் பெரிய மரக்கலமாகவும்; பெறல் அருந் திருவனார் அமுதம் - கிடைத்தற்கரிய திருவைப் போன்ற மகளிர் அமுதமாகவும்; அறைகடல் ஆயது என்ப - ஆரவாரமுடைய கடலாயிற் றென்ப.  நகர், சுறவையும் திரையையும் மரக்கலங்களையும் அமுதத்தையும் உடையதாய்ப் பாற்கடலை ஒத்தது என்றவாறு. வீரர் எதிர்வாரை எறிதலின் சுறவினையும் கொடி காற்றால் அசைதலின் திரையினையும் மாடம் மாந்தரையும் சரக்குக்களையும் கொண்டிருத்தலின் கலத்தினையும் மகளிர் தங்காதலர் உயிர் தளிர்ப்ப முயங்கலின் அமிழ்தத்தினையும் உவமையாகக் கூறினார். இத் தொடர் வேறுபட வந்த உவமவிசேடமாம் என்பர் நச்சினார்க்கினியர்.(தொல். உவ. 32) ( 35 )

வேறு
 
1447. மதியக டுரிஞ்சுஞ் சென்னி
மாடநீண் மறுகு தோறும்
பொதியவிழ் மாலை வீழ்ந்து
பொன்செய்நன் கலன்கள் சிந்தி
நிதியறை திறந்து நோக்கி
யன்னதோர் நீர்மை யெய்திப்
புதியவர்க் கியங்க லாகாப்
பொற்பொடு பொலிந்த தன்றே.

பொருள் : மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம்நீள் மறுகு தோறும் - திங்களின் நடுவைத் தேய்க்கும் உச்சியையுடைய மாடங்களையுடைய நீண்ட தெருக்கள்தோறும்; பொதி அவிழ் மாலை வீழ்ந்து - மயிர்முடி குலைதலின் முத்துமாலை வீழந்து; பொன்செய் நன்கலன்கள் சிந்தி - பொன்னால் இயற்றிய பேரணிகளும் சிந்துதலாலே; நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி - நிதியறையைத் திறந்து பார்த்தால் ஒத்ததொரு தன்மை பெற்று; புதியவர்க்கு இயங்கல் ஆகாப் பொற்பொடு பொலிந்தது - அச்சமுண்டாக்குதலின் புதியவர்க்குச் செல்லலாகாத அழகொடு விளக்கம் உற்றது.
 
விளக்கம் : உரிஞ்சும் - தேய்க்கும். மறுகு - தெரு. நிதியறை - கருவூலம். புதியவர் பொருள் கிடக்குமிடத்தே புகுதற்கு அஞ்சுதல் இயல்பாகலின் புதியவர்க்கு இயங்கலாகாப் பொற்பு என்றார். இதனால் அந்நகரத்துத் திருவுடைமை உணர்த்தப்பட்டது. ( 36 )

வேறு
 
1448. கேமமா புரமெனுங் கேடி னல்லிசைப்
பூமிமேற் றிலகம்வைத் தனைய பொன்னகர்த்
தாமம்நீ ணெடுங்குடைத் தரணி காவல
னாமம்வே னரபதி தேவ னென்பவே.

பொருள் : பூமிமேல் திகலம் வைத்தனைய - உலகிற்குத் திலகம் இட்டால் ஒத்த; கேமமாபுரம் எனும் கேடுஇல் நல் இசைப் பொன்நகர் - கேமமாபுரம் எனும் பெயரிய கெடுதல் இல்லாத நல்ல புகழையுடைய பொன்னகரிலே; தாமம்நீள் நெடுங்குடைத் தரணி காவலன் - மாலையணிந்த நீண்ட குடையை உடைய உலக காவலன்; நாமம் வேல் நரபதிதேவன் என்ப - அச்சமூட்டும் வேலேந்திய நரபதிதேவன் என்னும் பெயரையுடையோன் என்பார்கள்.
 
விளக்கம் : நல்லிசையை நரபதி தேவனுக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர். ( 37 )

1449. அந்நகர்க் கரசனே யனைய வாண்டகை
மெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன்
கைந்நிக ரமைந்தவேற் கமழுந் தாரினான்
மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான்.

பொருள் : அந் நகர்க்கு அரசனே அனைய ஆண்தகை - அந்த நகரத்திற்கு அரசனே போலும் ஆண்தகையினான்; மெய் நிகர் இலாதவன் - வடிவம் ஒப்பிலாதவன்; வேதவாணிகன் - மறைவழி ஒழுகும் வணிகன்; கைந்நிகர் அமைந்த வேல் கமழும் தாரினான் - கைக்கு நிகராக அமைந்த வேலும் மணஞ்செயும் மாலையும் உடையான்; மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான் - மைதீட்டிய தம்முள் நிகர்த்த குளிர்ந்த கண்களையுடைய மகளிர் மயக்க அவர்களின்பத்தே தங்குவான்.
 
விளக்கம் : இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். அரசன் : நரபதிதேவன். ஆண்மைத் தன்மையில் அரசனையே ஒத்தவன் என்றவாறு. ஆற்றலுடைய கையும், அதற்குத் தகுந்த வேலும் இவற்றால் எய்திய வெற்றி மாலையினையும் உடையோன் என்றவாறு. மழைக்கணார் மருட்ட வைகுவான் என்றது அவனுடைய வாழ்க்கைச் சிறப்பினை விதந் தோதியபடியாம். ( 38 )

வேறு
 
1450. வார்சிலை வடிப்ப வீங்கி
வரையெனத் திரண்ட தோளான்
சோர்புய றொலைத்த வண்கைச்
சுபத்திரன் மனைவி பெற்ற
சீர்நலம் கடந்த கேம
சரியெனத் திசைக ளெல்லாம்
பேர்நலம் பொறித்த பெண்மைப்
பெருவிளக் காகி நின்றாள்.

பொருள் : வார்சிலை வடிப்ப வீங்கி வரையெனத் திரண்ட தோளான் - நீண்ட வில்லைப் பயிற்றுதலாற் பருத்து மலைபோலத் திரண்ட தோளையுடையான்; சோர் புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் - மழைபெய்யும் முகிலை ஓட்டிய வண்மையுடைய கையினான் ஆன சுபத்திரன் என்னும் பெயரினானுக்கு; மனைவி பெற்ற - அவன் மனைவி நிப்புதியென்பாள் ஈன்ற, சீர் நலம் கடந்த கேமசரியென (ஒரு பெண்) - பிறமகளிரின் சிறந்த அழகை வென்ற கேமசரி என்று; திசைகள் எல்லாம் பேர்நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக்கு ஆகி நின்றாள் - திசைகளில் எல்லாம் பெயரின் நலத்தை எழுதிய பெண்மையையுடைய பெரு விளக்கு என ஆகி இருந்தாள்.
 
விளக்கம் : ஆகி யெனவே மங்கைப்பருவமுடையாளென்பது பெற்றாம். கேமசரி என (ஒரு பெண்) என ஒரு மொழி சேர்க்க. (39)

1451. மாசிலாள் பிறந்த ஞான்றே
மதிவலான் விதியி னெண்ணிக்
காசிலாள் கண்ட போழ்தே
கதுமென நாணப் பட்டான்
றூசுலா மல்கு லாட்குத்
துணைவனாம் புணர்மி னென்று
பேசினா னன்று கொண்டு
பெருவிருந் தோம்பு கின்றான்.

பொருள் : மாசு இலாள் பிறந்த ஞான்றே - குற்றமிலாத அவள் பிறந்தபொழுதே; மதிவலான் விதியின் எண்ணி - அறிவில் வல்லவனான கணி நூல் முறையானே ஆராய்ந்து; காசு இலாள் கண்டபோழ்தே கதும் என நாணப்பட்டான் - இவள் கண்ட பொழுதே நாணமுறப்பட்டவன்; தூசு உலாம் அல்குலாட்குத் துணைவன் ஆம் - ஆடையணிந்த அல்குலையுடையாட்குக் கணவனாவான்; புணர்மின் என்று பேசினான் - அவனுக்குக் கொடுங்கோள் என்று கூறினான்; அன்று கொண்டு பெருவிருந்து ஓம்புகின்றான் - அன்று தொட்டுச் சுபத்திரன் தன் மகள் அத்தகையானைக் காண்டற்குப் பெருவிருந்து இடுதலைக் கைக்கொண்டுள்ளான்.

விளக்கம் : தன் கணவனைத் தவிர மற்றோர் அவட்கு ஆடவராய்த் தோன்றாரென்பது தோன்றப் பலரையும் நோக்கும் அவளை, மாசிலாள் என்றும், காசிலாள் என்றும் கூறினார். மதிவல்லான் என்றது கணிவனை. விதி - நூல் கூறும் முறை. காசிலாள் - குற்றமற்றவள் என்னும் பொருட்டு; இது வாளா அவள் என்னுஞ் சுட்டு மாத்திரையாய் நின்றது. பெருவிருந்தோம்புகின்றான் என்றது, அத்தகையானைக் காணும் பொருட்டு என்பதுபட நின்றது. ( 40 )

1452. தாழ்தரு பைம்பொன் மாலை தடமலர்த் தாம மாலை
வீழ்தரு மணிசெய் மாலை யிவற்றிடை மின்னி னின்று
சூழ்வளைத் தோளி செம்பொற் றூணையே சார்ந்து நோக்கு
மூழ்படு காத லானை யொருபிடி நுசுப்பி னாளே.

பொருள் : ஒருபிடி நுசுப்பினாள் சூழ்வளைத் தோளி - ஒரு பிடியில் அடங்கும் இடையினாளாகிய, வளைசூழ்ந்த தோளினாள்; தாழ்தரு பைம்பொன்மாலை - தூங்கப்பட்ட பைம்பொன்னாலான மாலை; தடமலர்த் தாமம் மாலை - பெரிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை; வீழ்தரு மணிசெய் மாலை - விருப்பம் ஊட்டும் மணிகளாற் செய்யப்பட்ட மாலை; இவற்றிடை - ஆகிய இவற்றின் இடையிலே; மின்னின் நின்று - மின்போல நின்று; செம்பொன் தூணையே சார்ந்து - பொன்னாலான தூணைப் பொருந்திநின்று, ஊழ்படு காதலானை நோக்கும் - ஊழ்தருகின்ற கணவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

விளக்கம் : தான் நோக்குழிச் சிறிது தோன்றித் தன்னைப் பிறர் நோக்குழிக் கணத்திலே தூணின் மறைந்து விடுதல் பற்றி, மின்னின், தூணையே சார்ந்து நோக்கும் என்றார். தந்தை செய்யுள் விருந்திடையே இவள் ஒரு தூணைச் சார்ந்து நின்று தனக்கு ஊழினால் தரப்படுஞ் காதலனை நோக்குவாள் என்க. ( 41 )

1453. சேயிழை கணவ னாகுந் திருமகன் றிறத்து நாளு
மாயிரத் தெட்டு நேர்ந்த வாரமு தடிசி லூட்டி
யேயின வகையி னாலே யாறிரண் டெல்லை யாண்டு
போயின வென்ப மற்றப் பூங்கொடிச் சாய லாட்கே.

பொருள் : சேயிழை கணவன் ஆகும் திருமகன் திறத்து - கேமசரியின் கணவனாகிய திருமகனைக் காணுதற்கு; நாளும் ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆரமுது அடிசில் ஊட்டி - வைகலும் ஆயிரத்தெண்மருக்கு ஆக்கிய ஆரமுது போலும் சோற்றை ஊட்ட; ஏயின வகையினாலே அப் பூங்கொடிச் சாயலாட்கு - பொருந்திய வகையாலே அப் பூங்கொடிபோலும் மென்மையாட்கு; ஆறிரண்டு எல்லை ஆண்டு போயின என்ப - பன்னிரண்டு ஆகிய எல்லையையுடைய ஆண்டுகள் கழிந்தன என்க.
 
விளக்கம் : சேயிழை : அன்மொழித் தொகை. அமுதடிசில் : உவமத்தொகை. திருமகன் திறத்து என்பது, என்றிறத்து அவலங்கொள்ளல் என்பதுபோல (புறநா. 253) பொருட்டு என்னும் பொருளில் வந்தது. ஊட்டி - ஊட்ட : எச்சத்திரிபு. ( 42 )

1454. முருக்கிதழ் குலிக மூட்டி
வைத்தன முறுவற் செவ்வாய்த்
திருக்கவி னிறைந்த வெங்கட்
பணைமுலைத் தேம்பெய் கோதைப்
புரிக்குழற் பொன்செய் பைம்பூட்
புனையிழை கோல நோக்கித்
தரிக்கிலா துருகி நையுந்
தடமலர்க் கோதை நற்றாய்.

பொருள் : முருக்கிதழ் குலிகம் ஊட்டி வைத்த அனமுறுவல் செவ்வாய் - முருக்கமலரின் இதழை இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்ற, முறுவலையுடைய சிவந்த வாயையும்; திருக்கவின் நிறைந்த வெம்கண் பணைமுலை - திருமகளின் அழகு நிறைந்த விருப்பம் ஊட்டுங் கண்களையுடைய பருத்த முலைகளையும்; தேன் பெய் கோதை - தேன் பொருந்திய மலர்மாலையையும்; புரிக்குழல் - நெறித்த கூந்தலையும்; பொன்செய் பைம்பூண் - பொன்னாலான புத்தணியையும் உடைய; புனையிழை கோலம் நோக்கி - கேமசரியின் கோல முதிர்ச்சியைப் பார்த்து; தடமலர்க் கோதை நற்றாய் - பெரிய மலராலான மாலையினாளின அன்னை; தரிக்கிலாது உருகி நையும் - பொறாமல் வருந்துவாள்.
 
விளக்கம் : இயல்பாகவே சிவந்த முருக்க மலரின்மேல் இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்று நனிசிவந்த வாய் என்பார், முருக்கிதழ் குலிகம் ஊட்டிவைத்தன செவ்வாய் என்றார். புனையிழை : அன்மொழித் தொகை; கேமசரி. இத்தகைய அழகினாட்கு இன்னும் கணவன் வாய்த்திலனே என்று நற்றாய் நோக்குந்தோறும் நைந்துருகினாள் என்பது கருத்து. ( 43 )

1455. மாவடு மருட்டு நோக்கின் மதிமுக மழைக்கண் மாசில்
பூவொடு புரையுஞ் சாயல் புனைநலந் தனித்து வைக
வேவடு பிணையி னோக்கி யிறைவளை கழல நின்ற
தாய்படுந் துயர மெல்லாந் தாரவ னீக்கி னானே.

பொருள் : மதிமுகம் மாஅடு மருட்டும் நோக்கின் மழைக்கண் - திங்கள் போலும் முகத்திலே மானை வென்று, கண்டாரை மயக்கும் பார்வையையுடைய குளிர்ந்த கண்களையும்; பூவொடு புரையும் சாயல் - மலரொடு பொருந்தும் மென்மையினையும் உடைய கேமசரி; புனைநலம் தனித்து வைக - ஒப்பனை செய்த இத்தகைய அழகுடன் தனியே தங்குதலால்; ஏ அடு பிணையின் நோக்கி - அம்பால் ஏறுண்ட மான்பிணைபோலப் பார்த்து; இறைவளை கழல நின்ற - மன்கைவளை கழலுமாறு மெலிந்து நின்ற; தாய்படு துயரம் எல்லாம் - (கேமசரியின்) அன்னையுறுந் துயரத்தையெல்லாம்; தாரவன் நீக்கினான் - சுபத்திரன் போக்கினான்.
 
விளக்கம் : மாவடுப் பிளவினை ஒத்த கண் எனினுமாம். தாரவன் : சுபத்திரன். நீக்கினான் என்றது பின்விருமாறு கூறி நீக்கினான் என்பது பட நின்றது. ஏ - அம்பு. பிணை - பெண்மான். இறை - முன்கை. தாய் : நிப்புதி. ( 44 )

1456. போதுவாய் திறந்த போதே
பூம்பொறி வண்டு சேர்ந்தாங்
கூதுமே மகளிர்க் கொத்த
போகமு மன்ன தொன்றே
யாதுநீ கவல வேண்டா
வாரழ குடைய நம்பி
காதலான் றவத்தின் மிக்கான்
கண்ணுறு நாளை யென்றான்.

பொருள் : போது வாய் திறந்தபோதே - மலரின் வாய் நெகிழ்ந்த அளவிலே; பூம் பொறி வண்டு சேர்ந்து ஆங்கு ஊதுமே - அழகிய புள்ளிகளையுடைய வண்டு பொருந்தி நுகருமன்றோ?; மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே ஆகும் - பெண்களுக்குப் பொருந்தின நுகர்ச்சியும் அத்தகையதாகிய ஒன்றேயாம்; (ஆதலின்); ஆர் அழகு உடைய நம்பி காதலான் தவத்தின் மிக்கான் - சிறந்த அழகுடைய நம்பியும் இவளாற் காதலிக்கப்படுவானும் ஆகிய தவத்திற் சிறந்தவன்; நாளை கண்ணுறும் - நாளைக்கே வந்து எதிர்ப்படுவான்; நீ கவல வேண்டா - இனி நீ சிறிதும் வருந்தல் வேண்டா (என்று ஆற்றுவித்தான்).
 
விளக்கம் : இவளை நுகர்தற்குரியோன் தவத்தின் மிக்கோனும் ஆரழகுடையோனும் காதலானும் நம்பியுமாக இருத்தல் ஒருதலை என்பான், ஆரழகுடைய நம்பி காதலான் தவத்தின் மிக்கான் என்றான். அத்தகைய தவம் வீண்போகாது என்பான் நாளைக் கண்ணுறும் என்றான். ஆங்கு : அசைச்சொல். ஊதுமே : ஏ : வினா. ஒன்றே : ஏ : தேற்றம். ( 45 )

வேறு
 
1457. பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடி
மின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள்
பின்னிவிட் டனகுழற் பெருங்கட் பேதையூர்
துன்னினன் றொடுகழற் குருசி லென்பவே.

பொருள் : தொடுகழல் குரிசில் - தொடுத்த கழலையுடைய சீவகன்; பொன் நிலத்து எழுந்தது ஓர் பொருஇல் பூங்கொடி - பொன்னாகிய நிலத்திலே தோன்றியதான ஓர் ஒப்பற்ற காமவல்லியைப் போல்; மின்னுவிட்டு எரிவது ஓர் நலத்தள் - ஒளிவிட்டு விளங்குவதொரு நலத்தினளாகிய; வீங்கு இருள் பின்னி விட்ட அன குழல் பெருங்கண் பேதையூர் - மிக்க இருளைப் பின்னிவிட்டாற் போன்ற குழலையுடைய பெருங்கண்ணாளாம் பேதையின் ஊரை; துன்னினன் - (சுபத்திரன் தன் மனைவியைத் தேற்றுவித்துக் கொண்டிருக்கும் அவ்வளவிலே) அடைந்தனன்.
 
விளக்கம் : பொன்னிலம் - வானுலகம். காமவல்லி - கற்பகமரத்திற்படர்வதொரு பொன்னிறப் பூங்கொடி. பேதை : கேமசரி. குருசில் - தலைவன் : ஈண்டுச் சீவகன். ( 46 )

1458. மல்லிகை மணங்கமழ் மாலை வார்குழற்
சில்சுணங் கிளமுலைச் சிறுமி தந்தையுஞ்
செல்வனைத் திருநகர்ச் சேட்பட் டானரோ
பல்கதிர் மணியொளி பரந்த பூணினான்.

பொருள் : பல்கதிர் மணியொளி பரந்த பூணினான் - பல கதிரையுடைய மணிகள் ஒளிரும் பரவிய பூணினான் ஆகிய; மல்லிகை மணம் கமம் மாலை வார்குழல் சில் சுணங்கு இளமுலைச் சிறுமி தந்தையும் - மல்லிகை மணம் வீசும் மாலையினையும் நீண்ட கூந்தலையும் சிலவாகிய தேமல் பரவிய இளமுலையினையும் உடைய கேமசரியின் தந்தையும்; செல்வனை - சீவகனை; திருநகர்ச் சேண் பட்டான் - கேமமா புரத்திலே எதிர்ப்பட்டான்.

விளக்கம் : சிறுமி தந்தையும் பூணினானுமாகிய சுபத்திரன் என்க. செல்வன் : சீவகன். திருநகர்ச் சேட்பட்டான் என்றது, அவன் வருகையை உணர்ந்து தன்னகரத்தினின்றும் தொலைவிடத்திலேயே எதிர் சென்று கண்டு அழைத்து வந்தனன் என்பதுபட நின்றது.
( 47 )

1459. தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுட
ரொன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண்
மன்றல்கொண் மார்பினான் வந்தொ ரானிழ
னன்றுவந் திருந்தன னாதற் சிந்தியா.

பொருள் : தென்திசை முளைத்தது ஓர் கோலம் செஞ்சுடர் - தென் திசையிலே முளைத்ததாகிய ஓர் ஒப்பனையுறுஞ் சிவந்த ஞாயிறு; உத்தரம் ஒன்றி வருவது ஒத்து - வடதிசை நோக்கி நிலத்தே பொருந்தி வருவது போல; மன்றல் கொள் மார்பினான் வந்து - மணம் கொண்ட மார்பினானாகிய சீவகன் வந்து; ஒர் ஆல் நிழல் - ஓர் ஆலமரத்தின் நிழலிலே; நாதன் சிந்தியா நன்று உவந்து இருந்தனன் - அருகனைத் தியானித்தவாறு மிகவும் மகிழ்ந்திருந்தனன்.
 
விளக்கம் : இச் செய்யுளின்கண் சுபத்திரன் சீவகனை எதிர்ப்பட்ட இடமும் அவன் அவ்விடத்து இறைவணக்கஞ் செய்திருந்ததும் கூறுகின்றார். நாதன் - இறைவன். சிந்தியா - சிந்தித்து. நன்று - பெரிதும். தியானித்தல் : நமோ அரஹந்தாணம் என்றுகூறி மந்திரத்தியானஞ் செய்தல். வேற்று நாட்டின் சுவைகளை அறிந்து நுகரவேண்டும் என்று சீவகன் கூறியதற் கிசைந்த சுதஞ்சணன் இவனுக்கு ஊழ் வகையான் உறவு கொண்டு நுகர்ச்சி எய்தும் இடங்களை நாடி ஆண்டுச் சேறற்கு வழி கூறலின், வடதிசையிற் போதல் உளதாயிற்று. விசயமாதேவியைக் கண்டாற் பின்பு இராசமாபுரம் நோக்குவான். ( 48 )

1460. குடைகவித் தனையது கோல மாமுடி
யடியிணை யாமையின் வடிவு கொண்டன
புடைதிரள் விலாவும்வில் வளைந்த பொற்பின
கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே.

பொருள் : கோலமாமுடி குடைகவித்தனையது - இவனுக்கு அழகிய பெருமைமிக்க தலையும் உச்சி சிறிது உயர்ந்து முறைமையுறத் தாழ்ந்து சுற்றொத்தலின் குடைப்புறத்தை யொக்கும்; அடியிணை ஆமையின் வடிவு கொண்டன - இரண்டு புறவடிகளும் ஆமையின் உருவத்தைக் கொண்டுள்ளன; புடை திரள் விலாவும் வில் வளைந்த பொற்பின - பக்கந்திரண்ட விலாக்களும் வில் வளைந்தாற் போன்ற அழகின; கண்ணின் வண்ணம் கடிகமழ் தாமரை - கண்ணின் தன்மை மணங்கமழும் தாமரை மலரின் தன்மை.

விளக்கம் : இது முதல் ஆறுபாட்டுக்கள் சீவகன் உருவச் சிறப்புக் கூறுகின்றன. ஆலமர நீழலில் இருந்த சீவகனைச் சுபத்திரன் கண்டு மனத்திடை இவ்வாறு சிந்திக்கிறான். கண்ணின் வண்ணம் தாமரை வண்ணம் என வண்ணத்தைத் தாமரையோடுங் கூட்டுக. ( 49 )
 
1461. குறங்கணி மயிலொடு கோல மார்ந்தன
பிறங்கிய வுறுப்பின்மேற் பெரிய நோக்கின
கறங்கிசை மணிமுழா வெருத்தங் காண்டகு
மறங்கெழு பெரும்புலி வாயின் வண்ணமே.

பொருள் : குறங்கு அணி மணிரொடு கோலம் ஆர்ந்தன - துடைகள் அழகிய மயிருடன் அழகு பொருந்தினவாகி; பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின - பருத்த உறுப்புக்களைக் காட்டிலும் சிறப்புறும் அழகுடையன; எருத்தம் கறங்கு இசை மணி முழா - பிடரி ஒலிக்கும் இசையையுடைய அழகிய முழவை ஒக்கும்; வாயின் வண்ணம் மறம் கெழு பெரும்புலி - வாயின் அழகு வீரம் பொருந்திய பெரிய புலியின் வாயை ஒக்கும்.
 
விளக்கம் : கோலம் - அழகு, நோக்கு - அழகு; நோய் இகந்து நோக்கு விளங்க எனவரும் மதுரைக்காஞ்சியினும் அஃதப்பொருட்டாதல் உணர்க. பிறங்குதல் - பருத்தல். கறங்கிசை: வினைத்தொகை. மணி முழா என்றது குடமுழவினை. புலியின் வாய் சிறுகி வளைந்திருத்தலின் உவமையாக எடுத்தோதினர். வாயின் வண்ணம் புலிவாய் வண்ணம் என்க. ( 50 )

1462. வரையகன் மார்பிடை வரியு மூன்றுள
புரைதபு பொன்புரை நாவு முள்ளுடைத்
தருவரைத் தோள்களு மமரர் கோன்களிற்
றுருவுகொ டடக்கையி னுருவு கொண்டவே.

பொருள் : வரை அகல் மார்பிடை வரியும் மூன்று உள - மலையைப் போன்று அகன்ற மார்பிலே வரிகளும் மூன்றுள்ளன; புரைதபு பொன்புரை நாவும் முள் உடைத்து - குற்றம் அற்ற பொன்னைப் போன்ற நாவும் சருச்சரையுடையதாயிருக்கும்; அருவரைத் தோள்களும் அமரர் கோன் களிற்று உருவுகொள் தடக்கையின் உருவு கொண்ட - அரிய வரையனைய தோள்களும் வானவர் கோனுடைய ஐராவதத்தின் அழகு கொண்ட துதிக்கையின் உருவத்தைக் கொண்டன.
 
விளக்கம் : அகல் மார்புவரை அம்மார்பிடை என விரித்தோதி அகன்ற மார்பும் மலையை ஒக்கும் அம்மார்பினிடத்தே என்க.வரி - கோடு. அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ப்பின் என்றார் திருமுருகாற்றுப்படையினும். இங்ஙனம் மூன்று கோடமைதல் உத்தம விலக்கணம் என்ப. அமரர்கோன் : இந்திரன். உருவிரண்டனுள் முன்னது அழகு, ஏனையது வடிவம். ( 51 )

1463. இலங்குபொன் னிறுவரை யனைய வேந்தலுக்
கலங்கிதழ்த் தாமரைக் கொட்டை யன்ன தாய்
வலஞ்சுழிந் தமைவரக் குழிந்த வாய்ப்பொடு
நலங்கிளர் நாபியு மினிது நாறுமே.

பொருள் : இலங்கு பொன் இறுவரை அனைய ஏந்தலுக்கு - விளங்கும் பொன்னாகிய பெரிய மலையை ஒத்த தலைவனுக்கு; அலங்கு இதழ்த் தாமரைக் கொட்டை அன்னதாய் - விளங்கும் இதழையுடைய தாமரைப் பொகுட்டுப் போன்றதாய்; வலம் சுழிந்து அமைவரக் குழிந்த வாய்ப்பொடு - வலமாகச் சுழிந்து பொருந்துதல் வரக் குழிந்த இயல்போடு; நலம் கிளர் நாபியும் இனிது நாறும் - அழகு விளங்கும் நாபியும் நன்றாகத் தோன்றும்.
 
விளக்கம் : இறுவரை - பெரிய மலை. பொன் இறுவரை என்றது, மேருமலையினை. நாபி - உந்தி. நாறுதல் - தோன்றதல். இனிது என்புழி இனிமைப் பண்பு கட்கினிமையைக் குறித்து நின்றது. ( 52 )

1464. தடித்திறை திரண்டுதம் மளவிற் கேற்றசூழ்
கெடிற்றழ கழிப்பன கிளர்பொற் றோரைய
கடிப்பகை நுழைவறக் கதிர்த்த கைவிர
லடுத்தமூக் கருமணி வயிரத் தோட்டியே.

பொருள் : தடித்து இறை திரண்டு கிளர் தோரையதடித்து வரிகள் திரண்டு விளங்கும் பொன்னிற மூங்கிலரிசி அனையவாய்; கடிப்பகை நுழைவு அறக் கதிர்த்த கைவிரல் - வெண்சிறு கடுகும் நுழைய இயலாதவாறு ஒளிசெயும் கைவிரல்கள்; தம் அளவிற்கு ஏற்ற - தம் அளவிற்குத் தகவான; சூல் கெடிற்று அழகு அழிப்பன - சூல் கொண்ட கெளிற்று மீனின் அழகைக் கெடுப்பன; அடுத்த மூக்கு அருமணி வயிரத் தோட்டி - முகத்திற்குப் பொருந்திய மூக்கும் வயிரத் தோட்டியை ஒக்கும்.
 
விளக்கம் : இறை - விரலிலுள்ள கோடுகள். இலக்கண நூலிற் கூறப்பட்ட அளவிற்கு என்க. கெடிறு - கெளிறு; ஒருவகை மீன். பொன் தோரை - பொன்னிறமுடைய மூங்கில் நெல்; கடிப்பகை: ஐயவி - வெண் சிறு கடுகு. கடிப்பகையும் நுழைதற் கியலாதபடி இடைவெளியற இணைந்த என்பது கருத்து. கதிர்த்தல் - ஒளிவிடுதல். வயிரத்தோட்டி - வயிர மணியாற் செய்த தோட்டி (அங்குசம்.) தோரைய என்னும் குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய், கதிர்த்த என்னும் பெயரெச்சத்தைக் கொண்டு அது கை விரல் என்பதைக் கொண்டது. ( 53 )

1465. வார்ந்திலங் கெயிறணி பவழ மாண்டவா
யார்ந்தபூ வங்கையு மடியுந் தாமரை
தேர்ந்தனன் றிருமகள் கணவ னாமெனத்
தீர்ந்தனன் சொல்லளைஇத் தேர்க்கொண் டேறினான்.

பொருள் : வார்ந்து இலங்கு எயிறு அணிவாய் பவழம் - நீண்டு விளங்குகின்ற, பற்களையுடைய வாய் பவழத்தை ஒக்கும்; அங்கையும் அடியும் ஆர்ந்த தாமரைப்பூ - அகங்கையும் உள்ளடியும் பொருந்திய தாமரைப் பூவை ஒக்கும்; (ஆதலால்) திருமகள் கணவன் ஆம் எனத் தேர்ந்தனன் - இவன் திருமாலாவான் என்று தன்னிலே ஆராய்ந்தான்; சொல் அளை இத் தீர்ந்தனன் - சீவகனோடு கலந்து உரையாடித் திருமால் அல்லன் என்ற தெளிந்தான்; தேர் கொண்டு ஏளினான் - பின்னர்த் தேரிலே அவனை அமர்த்திக் கொண்டு தானும் ஏறினான்.

விளக்கம் : மாண்ட வாய் - மாட்சிமையுடைய வாய். பற்களால் அணியப்பட்ட வாய் என்க. அளைஇ - கலந்து அளைஇ என்பது தீர்ந்தனன் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இவனே என் திருமகள் கணவனாம் என்றும் ஒரு பொருள் தோற்றி நின்றது.சீவகனுடைய தோற்றம் இந்த ஆறு செய்யுட்களிலும் தலைதடுமாறக் கூறிற்றாயினும் தலைமுதல் அடிவரை முறையே கொள்க. (54)

1466. தேரிவ ரூர்ந்தனர் செல்ல விற்றலைக்
கூருகிர் விடுத்ததோர் கோல மாலையைப்
பேரிசை வீணையிற் சூட்டிப் பெண்கொடிக்
காரிகை யுலகுணர் கடவுட் பாடுமே.

பொருள் : இவர் தேர் ஊர்ந்தனர் செல்ல - இவர்கள் தேரூர்ந்து சென்று கொண்டிருக்கும்போது; இல்தலை - சுபத்திரன் வீட்டிலே; கூர் உகிர் விடுத்தது ஓர் கோலம் மாலையை - கூரிய நகத்தால் வலிய மலர்த்திப் புனைந்த ஒரு செங்கழுநீர் மாலையை; பேர் இசை வீணையில் சூட்டி - நல்லிசையை எழுப்பும் வீணையிலே சூட்டி; உலகு உணர் கடவுள் - உலகு உணர்ந்த கடவுளை; பெண் கொடிக் காரிகை பாடும் - பெண் கொடியாகிய காரிகை பாடுவாள்.
 
விளக்கம் : ஊர்ந்தனர்: முற்றெச்சம். தண்கயத் தமன்ற ஒண்பூங்குவளை அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி என்றும் (அகநா. 180) காலமன்றியும் கையினெரித்த கழுநீர்க் குவளை (பெருங். 1-35 : 1834) என்றும் பிறசான்றோர் கூறுதல் நோக்கி மாலை என்றது செங்கழுநீர் மாலை எனப்பட்டது. காரிகை : கேமசரி; ஆகுபெயர். உலகு - உயர்ந்தோர்.( 55 )

வேறு

1467. வீங்கோத வண்ணன் விரைததும்பு பூம்பிண்டித்
தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானைத்
தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி
நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே.

பொருள் : வீங்கு ஓத வண்ணன் - பொங்கும் கடல் நிறத்தவனாகிய; விரை ததும்பு பூம்பிண்டித் தேங்கு ஓதம் முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானை - மணம் கமழும் மலர்ப்பிண்டியின் அடியிலே தங்கிய குளிர்ச்சியை உடைய முக்குடையின் கீழ் எழுந்தருளிய வானவர் தலைவனை; தேவர் பெருமானை -; தேன் ஆர் மலர் சிதறி - வண்டுகள் பொருந்திய மலர்களை யிட்டு; நாவின் நவிற்றாதார் வீட்டு உலகம் நண்ணார் - நாவினாற் கூறாதார் வீட்டுலகை அடையார்.

விளக்கம் : எனவே, நவிற்றுவோர் வீட்டுலகம் நண்ணுவர் என்பதாயிற்று.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள். 8)

என்றார் வள்ளுவனாரும். முக்குடை : சந்திராதித்தம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன. ஓதவண்ணம் : நேமிநாதர். ( 56 )

1468. அடல்வண்ண வைம்பொறியு மட்டுயர்ந்தோர் கோமான்
கடல் வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின் றுணர்ந்தான்
காசின் றுணர்ந்தான் கமல மலரடியை
மாசின்றிப் பாடாதார் வானுலக நண்ணாரே.

பொருள் : அடல் வண்ண ஐம்பொறியும் அட்டு உயர்ந்தார் கோமான் - உயிரை வருத்தும் இயல்பையுடைய ஐம்பொறிகளையும் வென்று மேம்பட்ட முனிவர்கள் தலைவன்; கடல் வண்ணன் - கடல் நிறத்தான்; முக்குடைக் கீழ்க் காசு இன்று உணர்ந்தான் - முக்குடையின் கீழ் அமர்ந்த குற்றமில்லாது உணர்ந்தவன்; காசின்றுணர்ந்தான் கமல மலரடியை - அப்பெருமானுடைய தாமரை மலர்போலும் அடியை; மாசு இன்றிப் பாடாதார் வான் உலகம் நண்ணாரே - குற்றமின்றிப் பாடாதவர் விண்ணுலகை அடையமாட்டார்.

விளக்கம் : காசு - ஐயந்திரிபு. மாசு - காமவெகுளி மயக்கம். வானுலகம் - வீடு. பொறிவாயிலைந்தவிந்தான் என்பது பற்றி ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான் என்றார். பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. அவற்றை அடலாவது தத்தமக்குரிய புலன்களில் செல்லாது அடக்குதல். ( 57 )

1469. பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனை
நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரே
வீட்டுலக நண்ணார் வினைக்கள்வ ராறலைப்ப
வோட்டிடுப வெண்குணனுங் கோட்பட் டுயிராவே.

பொருள் : பூத்து ஒழியாப் பிண்டிக் கீழ்ப் பொங்கு ஓதவண்ணனை - மலர்ந்து மாறாத பிண்டியின் கீழ் எழுந்தருளிய பொங்குங் கடல் வண்ணனை; நாத்தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணார் - நாவானது தழும்பு உறப்போற்றாதார் வீட்டையடையார்; வீட்டுலகம் நண்ணார் - அவ்வாறு வீட்டையார்; வினைக் கள்வர் ஆறு அலைப்ப - தீவினையாகிய கள்வர் வழிபறித்தலாலே; எண் குணனும் கோட்பட்டு உயிரா ஓட்டிடுப - எண் குணங்களும் கள்வராற் பற்றப்பட்டுப் பெருமூச்செறிந்து ஓடிடுவர்.
 
விளக்கம் : ஓடிடுப என்பது ஓட்டிடுப என விகாரப்பட்டது. எண்குணம், வரம்பிலா அறிவு முதலிய பண்புகள். அருகனை வணங்காதார்க்கு நுகரப் பெறாமையால் உளதாம் பற்று ஒழிவின்றாய் வருவதன்றி, நுகர்ச்சி எய்திப் பற்றற்று வீடு பெறுதல் கூடாதாய் இருந்த தென்பது கருத்து. முன்னர் வணங்காமையின் தானும் இவ்வருத்தம் உற்றேன் என்றாள். இவை படர்க்கையாதலிற் பொருள் வேறுபட்டு வந்த தேவபாணிக் கொச்சக ஒருபோகு. ( 58 )

வேறு
 
1470. முத்துமிழு முந்நீர் மணிவண்ணன் மூன்றுலகும்
பத்திமையாற் பாடப் படுவான்றாள் பாடக்கேட்
டொத்தரம்பை யன்னா ளுவந்திவளொ டொப்பானோர்
வித்தகனை யின்னே பெறுக வெனவுரைத்தாள்.

பொருள் : முத்து உமிழும் முந்நீர் மணிவண்ணன் - முத்துக்களைக் கொழிக்கும் கடல் நீர் போன்ற நீலவண்ணனும்; மூன்று உலகும் பத்திமையால் பாடப்படுவான் தாள் பாடக் கேட்டு - மூன்றுலகும் அன்பினாற் பாடப்படுவோனுமாகிய அருகன் தாளைக் கேமசரி பாடக் கேட்டு; அரம்பை அன்னாள் ஒத்து உவந்து - அரம்பையைப் போன்ற நிப்புதி தன் கருத்தும் தன் மகள் கருத்தும் ஒத்தலின் மகிழ்ந்து; இவளொடு ஒப்பான் ஓர் வித்தகனை - இவளழகுக்கு ஏற்றவனாகிய ஒரு வித்தகனை; இன்னே பெறுக என உரைத்தாள் - இப்போதே இவள் அடையவேண்டும் என்று இறைவனை பரவினாள்.

விளக்கம் : முந்நீர் வண்ணன் மணிவண்ணன் எனத் தனித்தனி கூட்டுக முந்நீர் - மூன்று நீரையுடையது அல்லது மூன்று தொழிலையுடையது என்னும் பொருள்பட்டுக் கடலுக்காயிற்று. வித்தகன் - சதுரப்பாடுடையவன். இன்னே - இப்பொழுதே. உரைத்தாள் என்பது வேண்டிப்பரவினள் என்பதுபட நின்றது. ( 59 )

வேறு
 
1471. நிலந்தினக் கிடந்தன நிதியந் நீணகர்ப்
புலம்பறப் பொலிவொடு புக்க காலையே
யிலங்குபூங் கொடியன வேழை நோக்கமு
முலங்கொடோ ளுறுவலி நோக்கு மொத்தவே.

பொருள் : நிலம் தினக் கிடந்த அன நிதி - மண் தின்னுமாறு கிடந்த செல்வத்தையுடைய; அந்நீள் நகர் - அப் பெரிய மனையிலே; புலம்பு அறப் பொலிவொடு புக்க காலை - அம் மனையிலுள்ளோரின் வருத்தம் நீங்க அழகுறச் சீவகன் புகுந்தபோது; உலம்கொள் தோள் உறுவலி நோக்கும் - கற்றூண் போன்ற தோளையுடைய மிகுவலியுடைய சீவகன் பார்வையும்; இலங்கு பூங்கொடி அன ஏழை நோக்கமும் - விளங்கும் பூங்கொடி போன்ற கேமசரியின் பார்வையும்; ஒத்த - ஒன்றுபடப் பொருந்தின.
 
விளக்கம் : நிலத்தினக் கிடந்தன நிதியம் என்றது அழிவின்றி மிக்குக் கிடக்கும் நிதியம் என்பதுபட நின்றது. அஃகா வியல்பிற்றாய செல்வம் தங்கிக் கிடத்தற்குக் காரணங் கூறுவார் நச்சினார்க்கினியர் அறத்தால் தேடின பொருள் என்று நுண்ணிதின் உரைத்தனர். நிதியந் நீள்நகர் என்புழி மகரவீறு கெடாமல் நகர வீறாய்த் திரிந்து நின்றது. பெண்டிரின் மென்மைப் பண்பு குறித்த ஏழை என்னும் சொல்லால் கேமசரியையும் ஆடவரின் வன்மையைக் குறித்த உறுவலி என்னுஞ் சொல்லால் சீவகனையுங் கூறிய நயமுணர்க. அவளைப் பூங்கொடி என்றும் அவனை உலங்கொள்தோள் உடையன் என்றலும் உணர்க. உறுவலி : அன்மொழித்தொகை : சீவகன். ( 60 )

வேறு
 
1472. கண்ணுறக் காளையைக் காண்டலுங் கைவளை
மண்ணுறத் தோய்ந்தடி வீழ்ந்தன மாமையு
முண்ணிறை நாணு முடைந்தன வேட்கையு
மொண்ணிறத் தீவிளைத் தாளுருக் குற்றாள்.

பொருள் : காளையைக் கண்உறக் காண்டலும் - காளையை அங்ஙனம் அவள் எதிர்ப்படக் கண்டாளாக; கைவளை மண்உறத்தோய்ந்து அடி வீழ்ந்தன - கையில் இருந்த வளைகள் மண்உறப் பொருந்திக் காலடியிலே வீழ்ந்தன; மாமையும் உள்நிறை நாணும் உடைந்தன - மாமையும் உள்ளிருந்த நிறையும் நாணும் கேட்டன; வேட்கையும் ஒள்நிறத் தீ வினைத்தாள் உருக்கு உற்றாள் - அவாவையும் ஒளிரும் தீயென விளைவித்துக் கொண்டாள்; தானும் அத் தீயாலே உருக்குண்டாள்.

விளக்கம் : உண்ணிறையும் நாணம் : வினைத்தொகை.( 61 )

1473. வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவ
ணோக்கணங் காய்மன நோய்செய நொந்தவன்
வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர்
தாக்கணங் கோமக ளோனெத் தாழ்ந்தான்.

பொருள் : வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு - திருத்தமுற்ற தெய்வத்தன்மை நிறைந்த அழகிய யாழ் வல்ல சீவகனுக்கு; அவள் நோக்கு அணங்காய் மனநோய் செய - அவள் நோக்கம் வருத்தமாய் மனத்தை நோய் செய்தலாலே; அவன் நொந்து - அவன் வருந்தி; வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடுந்தோளி - கச்சினால் இறுக்கப்பட்டு வருத்தம் நிறைந்த முலையினையும் வேய் போன்ற நீண்ட தோளினையும் உடையாள்; ஓர் தாக்கு அணங்கோ மகளோ எனத் தாழ்ந்தான் - தாக்கி வருத்தும் ஒரு தெய்வ மகளோ மானிட மகளோ என ஐயுற்றுக் குறைந்தான்.
 
விளக்கம் : வாக்கு - திருத்தம். வாக்கணங்கு என்று கொண்டு நாமகள் எனினுமாம். இனி, அணங்கு என்றற்கு வீணைக்குரிய மாதங்கி என்னும் தெய்வம் எனினுமாம். இது நச்சினார்க்கினியர் கொள்கை. சீவக 550 ஆம் செய்யுளையும் உரையையும் காண்க. தாக்கு அணங்கு : திருமகள் என்பர் நச்சினார்க்கினியர். ( 62 )

1474. நல்வளத் தாமரை நாணிய வாண்முகக்
கொல்வளர் வேற்கணி னாள்குழைந் தாளெனச்
சொல்வளர்த் தாரவ டோழியர் சோர்குழன்
மல்வளர் மார்பனை வந்து வளைந்தார்.

பொருள் : நல்வளம் தாமரை நாணிய வாண்முகம் - நல்ல வளமிகும் தாமரை மலர் வெள்கிய ஒளியுறும் முகத்திலே; கொல்வளர் வேற்கணினாள் குழைந்தாள் என - கொல்லுந் தொழிலிற்கிடந்த வேலைப்போன்ற கண்ணாள் வருந்தினாள் என்று; சோர்குழல் அவள் தோழியர் சொல் வளர்த்தார் - சோர்ந்த குழலையுடைய கேமசரியின் தோழிகள் சொல்லைப் பரப்பியவராய்; மல்வளர் மார்பனை வந்து வளைந்தார் - மல்லிலே மேம்பட்ட மார்பின்னாம் சீவகனை வந்து சூழ்ந்தனர்.
 
விளக்கம் : சோர்குழல் அவள் எனக் கூட்டுக. ( 63 )

1475. நினைப்பரு நீணிறை நிப்புதி சேர்ந்தாங்
கினத்திடை யேறனை யானெழி னோக்கிப்
புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பினை யேகண்டு வாட்க ணகன்றாள்.

பொருள் : நினைப்ப அரு நீள் நிறை நிப்புதி ஆங்கு சேர்ந்து - நினைப்பில் அடங்காத பெருங் கற்பினளாகிய நிப்புதி ஆங்கு வந்து; இனத்திடை ஏறனையான் எழில் நோக்கி - ஆவின் திரளிடையே நிற்கின்ற ஏறுபோன்ற சீவகனின் அழகைப் பார்த்து; புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி வனப்பினையே கண்டு - புனத்திற் கொடிபோன்ற கேமசரியின் அழகுடன் சீவகனின் அழகையுமே ஒப்பிட்டுப் பார்த்து; வாள்கண் அகன்றாள் - வாளனைய கண்கள் உடம்பெல்லாம் பெற்றாற் போலானாள்.
 
விளக்கம் : ஏறனையான் எழில் புனக்கொடி பொற்பொடு நோக்கி என முன்னர்க் கூட்டிப், பின்னர், புண்ணிய நம்பி வனப்பினையே பார்த்து வாட்கண் அகன்றாள் என்பர் நச்சினார்க்கினியர். நிப்புதி : நிஸ்ப்ருதி என்பதன் திரிபு என்பர். வாட்கண்ணாள் மீண்டுபோனாள் என்றும் உரைக்கலாம். மகளிர் கூட்டத்தினிடையே நின்றமை கருதி இனத்திடை ஏறனையான் என்றார். ( 64 )

1476. வள்ளலை வாசநெய் பூசி மணிக்குடத்
தெள்ள னீர்சொரிந் தாட்டினர் தேம்புகை
யுள்ளுற வுண்ட கலிங்க முடுத்தபின்
கள்ளவிழ் கண்ணி கலத்தொ டணிந்தார்.

பொருள் : வள்ளலை வாச நெய்பூசி - சீவகனை மணமுறும் நெய்யைப் பூசி. மணிக்குடம் தெள் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் - மணிக்குடத்திலிருந்து தெள்ளிய அறலையுடைய நீரைப் பெய்து ஆட்டினர்; தேம் புகை உள்உற உண்ட கலிங்கம் உடுத்த பின் - பிறகு, இனிய புகையைத் தன்னிடம் கொண்ட ஆடையை அவன் உடுத்திய பின்னர்; கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார் - (மகளிர் அவனுக்குத்) தேன் சொரியும் கண்ணியையும் பூண்களையும் அணிவித்தனர்.
 
விளக்கம் : தானே வலியவந்து கேமசரிக்குத் தன்னையே வழங்கினமை கருதி வள்ளலை என்றார். கலிங்கம் - கலிங்க நாட்டில் நெய்யப்பட்டதோர் ஆடையைக் குறித்துப் பின்னர் ஏனைய ஆடைக்கும் பொதுவாய் நின்றதொரு சொல். கண்ணி - தலையிற் சூட்டுமாலை. கலத்தொடு - ஆபரணத்துடன். ( 65 )

1477. மங்கல வெள்ளை வழித்துமுத் தீர்த்தபின்
கொங்கலர் கோதையர் கொண்டக மெய்தி
யங்கதிர்ப் பொற்கலத் தாரமிர் தேந்தினர்
செங்கயற் கண்ணியர் சீரி னயின்றான்.

பொருள் : மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்தபின் - (உண்ணுமிடத்தைச்) சந்தனத்தால் மெழுகி முத்தாலே கோலம் இட்டபிறகு; கொங்கு அலர் கோதையர் செங்கயற் கண்ணியர் கொண்டு அகம் எய்தி - தேனையுடைய மலர்க் கோதையராகிய கயற்கண்ணியர் அவனை அழைத்துச் சென்று உட்புகுந்து; அம்கதிர்ப் பொற்கலத்து ஆர் அமிர்து ஏந்தினர் - அழகிய ஒளிமிகும் பொற்கலத்திலே சிறந்த அடிசிலை ஏந்தினர்; சீரின் அயின்றான் - அவனும் அவர் புகழ்ச்சியுடன் உண்டான்.
 
விளக்கம் : வெள்ளை - சந்தனத்தில் ஒருவகை. இது வெண்ணிறமுடைமையின் மங்கலப் பொருளாகவும் மதிக்கப்படும். முத்தும் மங்கலங்கருதிக் கூறப்பட்டது. ( 66 )

1478. பத்தியிற் குயிற்றிய பைம்பொற் றிண்ணைமேற்
சித்திரத் தவிசினுட் செல்வன் சீர்பெற
நித்தில மணியுறழ் கரக நீரினா
லத்துறை விடுத்தன னலர்ந்த தாரினான்.

பொருள் : பத்தியில் குயிற்றிய பைம்பொன் திண்ணைமேல் சித்திரத் தவிசினுள் - பத்தியாகச் செய்யப்பட்ட பசும்பொன் திண்ணையின் மேல் ஓவியத் தொழில் கொண்ட இருக்கையிலே; அலர்ந்த தாரினான் செல்வன் - மலர்ந்த மாலையான் ஆகிய சீவகன் (அமர்ந்து); நித்தில மணி உறழ் கரக நீரினால் - முத்தாகிய மணியைப்போன்ற கரகத்திலிருந்து வார்த்த நீரைக்கொண்டு; சீர்பெற அத்துறை விடுத்தனன் - ஒழுங்காகப் பூசுதற்குரிய தொழில்களையெல்லாம் முடித்துவிட்டான்.

விளக்கம் : திண்ணைமேல் இடப்பட்ட தவிசினுள் இருந்து என்க. அத்துறை - உண்ணுதலாகிய அத்துறை என்க. கரகம் : கெண்டிகை. ( 67 )

1479. இளிந்தகாய் கமழ்திரை வாச மீண்டியோர்
பளிங்குபோழ்ந் தருகுபொன் பதித்த பத்தியின்
விளிம்புமுத் தழுத்திய யவனக் கைவினைத்
தெளிந்தபொன் னடைப்பையுட் பாகு சென்றவே.

பொருள் : ஓர் பளிங்கு போழ்ந்து - ஒரு முழுப் பளிங்கை அறுத்து; அருகு பொன் பதித்த பத்தியின் - அதன் பக்கத்தே பொன்னிடப்பட்ட பத்தியிலே; விளிம்பு முத்து அழுத்திய - விளிம்பில் முத்துக்களை அழுத்திய; யவனக் கைவினைத் தெளிந்த பொன் அடைப்பையுள் - யவனத் தச்சர் கைவினையுடைய தெளிந்த பொன் அடைப்பையிலே; இளிந்த காய் கமழ் திரைவாசம் பாகு ஈண்டிச் சென்ற - இணுங்கின காயும் மணங்கமழ் வெற்றிலையும் முகவாசமும் தனிப்பாகும் சென்றன.
 
விளக்கம் : இணுங்குதல் - பறித்தல். காய் - பாக்கு. திரை - வெற்றிலை. பவனம் - அந்நாட்டுக் கம்மியர்க்கு ஆகுபெயர். அடைப்பை - வெற்றிலை முதலியன இட்டுவைக்கும் பை. ஒரு பளிங்கையறுத்தப் பொன்னை விளிம்பிற் பதித்த அடைப்பையில் இணுங்கின காயும் வெற்றிலையும் பார்வைக்குச் சென்றன என்றும், யவனக் கைவினைபெற்ற முத்தழுத்திய பொன்னடைப்பையிலே பாக்கும் வெற்றிலையும் முகவாசமும் ஈண்டித் தின்றற்குச் சென்றன என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பார். ஒன்றாக உரைப்பாருமுளரென்றார். ( 68 )

1480. பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத்
தேசிகம் படத்துடைத் துமிழ்ந்து தேங்கமழ்
வாசம்வாய்க் கொண்டனன் மணிசெய் குண்டலம்
வீசிவில் விலங்கிவிட் டுமிழ வென்பவே.

பொருள் : மணிசெய் குண்டலம் வீசி வில் விலங்கி விட்டு உமிழ - மணியாற் செய்த குண்டலம் ஒளியைக் குறுக்கிட்டு உமிழும்படி; பாசிலை சுருட்டுபு கறித்து - வெற்றிலையைச் சுருட்டிக் கறித்து; பல்லினைத் தேசிகம் படத்துடைத்து உமிழ்ந்து - (அதன் குறையாலே) ஒளியுண்டாகப் பல்லைத்துடைத்து அதனை உமிழ்ந்து; தேன்கமழ் வாசம் வாய்க்கொண்டனன் - இனிமை கமழும் வெற்றிலை முதலிய முகவாசத்தை உட்கொண்டான்.

விளக்கம் : வெற்றிலையை முன்னிட்டுப் பின் பிளவை மெல்லுதல் வேண்டும் என்பது ஒரு விதி. கறித்து - மென்று; இக்காலத்தே கடித்து என வழங்குவர். மெல்லுங்காற் குண்டலம் அசைதல் இயல்பாதலுணர்க. தேசு - தேசிகம் எனத் திரிந்தது. ( 69 )

1481. பண்ணுலாங் கிளவிதன் பரவை யேந்தல்குல்
வண்ணமே கலையிவை வாய்ந்த பூந்துகி
லுண்ணிலாய்ப் பசுங்கதி ருமிழ்வ பாவியேன்
கண்ணையு மனத்தையுங் களங்கொண் டிட்டவே.

பொருள் : பண்உலாம் கிளவிதன் பரவை ஏந்து அல்குல் வண்ணமேகலை இவை - பண்ணொத்த கிளவியாளுடைய பரப்புடைய ஏந்திய அல்குலும் வண்ணமுறும் மேகலையும் ஆகிய இவை; வாய்ந்த பூந்துகில் உள் நிலாய்ப் பசுங்கதிர் உமிழ்வ - பொருந்திய அழகிய துகிலின் உள்ளே நிலைபெற்று நின்று புத்தொளி உமிழ்வன; பாவியேன் கண்ணையும் மனத்தையும் களம் கொண்டிட்ட - பாவியேனுடைய கண்ணையும் மனத்தையும் தமக்கு இருப்பிடமாகக் கொண்டுவிட்டன.
 
விளக்கம் : உலாம் : உவமப்பொருட்டு. கிளவி : கேமசரி. பரப்புடையதாய் ஏந்திய அல்குல் என்க. அல்குல் முதலியன பூந்துகிலுள் இருப்பனவாகவும் என் கண்ணினும் மனத்தினும் இருந்தன, இஃதொரு புதுமை என்று வியந்தபடியாம்.இது முதல் கலைத்தொகை (சீவக - 1488) வரை சீவகன் கேமசரியை நினைத்து வருந்துதல் கூறப்படும். ( 70 )

1482. கடிகமழ் குழலினாற் கட்டி மெய்யெலா
நடுவொசி நோன்சிலைப் புருவத் தாற்புடைத்
தடுமலர் நெடுங்கணா லாவி போழ்ந்திடாக்
கொடியவ ளிளமுலை கொல்லுந் கொல்லுமே.

பொருள் : மெய்யெலாம் கடிகமழ் குழலினால் கட்டி - என் மெய்யையெல்லாம் மணம்கமழும் தன் குழலினாலே கட்டி; நடு ஒசி நோன்சிலைப் புருவத்தால் புடைத்து - நடு வளைந்த வலியவில்லாகிய தன் புருவததாலே அடித்து; அடும் மலர் நெடுங்கணால் ஆவி போழ்ந்திடா - வருத்தும் மலரனைய நீண்ட கண்களால் உயிரைப் பிளந்திட்டு; கொடியவள் இளமுலை கொல்லும் - கொடியவளுடைய இளமுலைகளாகிய யானை என்னைக் கொல்லும் கொல்லும்.
 
விளக்கம் : முலை தான் வருத்தலுடைமையின் தானும் வினைமுதலாம். புருவத்தாற் புடைத்துக் கண்ணால் ஆவிபோழ்ந்திடாத கொடியவள் தன் குழலாலே கட்ட முலைகொல்லும்என முடிப்பர் நச்சினார்க்கினியர். இவையெலாம் வருத்துகின்றனவே யாதலின் புருவத்தையுங் கண்ணையுந் தீங்கு செய்யாதனவாகக் குறிப்பிடுதலிற் போதிய பயனின்றாம். போழ்ந்திடா - போழ்ந்திட்டு : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ( 71 )
 
1483. கடியன கச்சினாற் கட்டப் பட்டன
கொடியன குங்குமங் கொட்டப் பட்டன
வடிநிலம் பரந்துமுத் தணிந்த வெம்முலை
யிடைநிலஞ் செகுப்பன வென்னை யென்செயா.

பொருள் : கடியன - இயல்பாக மணமுடையனவாய்; கச்சினால் கட்டப்பட்டன - கச்சினாற் கட்டப்பட்டனவாய்; கொடியன - எழுது கொடி உடையனவாய்; குங்குமம் கொட்டப்பட்டன - குங்குமம் இடப்பட்டனவாய்; அடிநிலம் பரந்து முத்து அணிந்த வெம்முலை - அடியிடம் பரந்து முத்துக்களை அணிந்த விருப்பூட்டும் முலைகள்; இடை நிலம் செகுப்பன - தம்மைச் சுமந்திருக்கின்ற இடையாகிய இடத்தைக் கெடுப்பன; என்னை என் செயா - யான் அகப்பட்டால் எத்துன்பத்தையும் செய்யும் அல்லவோ!
 
விளக்கம் : உலகில் தொழிலாற் கடியவர்கள் கட்டுண்ணப்படுவரென்றும், மனம் கொடியவர்கள் ஒன்றாற் புடையுண்ணப் படுவரென்றும் ஒரு பொருள் தோன்றிற்று என்பார் நச்சினார்க்கினியர்.தம்மைத் தாங்குவதாகிய இடையினையே செகுப்பன; ஏதிலனாகிய என்னை என் செயா! எதுவுஞ்செய்யும் என்பது கருத்து. ( 72 )

1484. கரியவுள் வெறியன கட்டப் பட்டன
புரிவொடு புறத்திடப் பட்ட பூங்குழல்
தெரியின்மற் றென்செயா செய்ய நீண்டன
பெரியகண் போலவும் பேது செய்யுமே.

பொருள் : கரிய - கருநிறமுடையனவாய்; உள் வெறியன - உள்ளே மணமுடையனவாய்; கட்டப்பட்டன - கட்டி முடிக்கப்பட்டனவாய்; புரிவொடு புறத்து இடப்பட்ட பூங்குழல் - கடை குழைதலுடன் எருத்தத்தே கிடத்தப்பட்ட பூங்குழல்கள்; செய்ய நீண்டன - செய்யனவாய் நீண்டிருக்கின்றனவாகிய; பெரிய கண்போலவும் பேது செய்யும் - பெரிய கண்களைப்போலவும் வருத்தம் புரிகின்றன; தெரியின் என் செயா - ஆராயின் எல்லாஞ் செய்ய வல்லன.
 
விளக்கம் : செய்யனவும் நீண்டனவும் பெரியனவும் ஆகிய கண்கள் தம் நல்லியல்பிற்கு மாறாகத் தீங்கு செய்கின்றன; இங்ஙனமாகக் கரியனவும் வெறியனவும் புறத்தே தள்ளப்பட்டனவுமாகிய தீயவியல்புடைய ஐம்பால் அக்கண்போற் றீங்கு செய்தல் வியப்போ? ஆராயின் அவை எதுவும் அஞ்சாமற் செய்யும் என்பது கருத்து. இதன்கண் சிறப்புப் பொருளையே உவமையாக்கி இரண்டன் தீமையையும் விளக்குதல் உணர்க. கொடியனவாய், உள்ளே கள்ளின் மயக்குடையனவாய்க் கட்டுண்ணப்பட்டனவாய் எப்போதும் திருகுதலுடனே தம்மிடத்தினின்றும் கீழ்ப்போந்து கிடக்கும்படி புறத்திடப்பட்டனவாய் என்றும் ஒரு பொருள் தோன்றிற்று. உள்வெறியன - உள்ளே ஒன்றுமில்லதனவாய் எனினும் ஆம். ( 73 )

1485. காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனுந்
தூதினாற் றுணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க்
கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்
கோதநீ ரமுதமு முலகும் விற்குமே.

பொருள் : காதன்மை கண்ணுளே அடக்கி - தன் வேட்கையையெல்லாம் தன் கண்ணுள்ளே கிடத்தி; கண் எனும் தூதினால் துணிபொருள் உணர்த்தி - அக் கண்ணென்கின்ற தூதாலே தான் எண்ணிய பொருளை எனக்கு அறிவித்து; தான் தமர்க்கு ஏதின்மைபடக் கரந்திட்ட - தான் தன் சுற்றத்தார்க்கு வேட்கை யாகிய காரணம் தோன்றாதவாறு மறைத்திட்ட; வாள் கண் நோக்கு - கேமசரியின் நோக்கம்; ஓதநீர் அமுதமும் உலகும் விற்கும் - கடலில் தோன்றிய அமுதத்தையும் உலகையும் தனக்கு விலையாகக் கொள்ளும்.

விளக்கம் : காதன்மை : காதற்றன்மை. கண்ணென்னும் தூது என்றது தானோக்காக்காற் றன்னை நோக்கும் களவு நோக்கத்தை. இஃதவள் உடம்பாட்டைத் தனக்குணர்த்துதலின் தூது எனப்பட்டது. தமர் அறியாமைப் பொருட்டு என்னை ஏதின்மைபடவும் நோக்கும். நோக்கு என்க.
 
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. (குறள். 1099)
 
இச்செய்யுள் தேவரின் ஒப்பற்ற புலமைக்கோர் எடுத்துக்காட்டாகும். கண்ணுளே என்பதற்குத் தன்னுளே என்பதூஉம் பாடம். (74)

வேறு
 
1486. மிகுகொடா முத்தஞ் சூட்டி
மீளிமை தீர்த்து மின்னு
நகுகொடா மணிக ணல்ல
தெளித்துக்கொண் டெழுதி நன்பொன்
முகபடாம் வைப்ப வாட்செற்
றழன்றுகண் கரிந்த முல்லைத்
தொகுகடாங் கோதை வெய்ய
துணைமணி முலைக டாமே.

பொருள் : முல்லைத் தொகு கள்தாம் கோதை வெய்ய துணைமணி முலைகள் தாம் - முல்லைமலரின் திரண்ட தேன்பரக்கும் மாலையையுடைய இணையாகிய, மணியணிந்த வெய்யனவாகிய முலைகள்தாம்; கொடா மிகு மீளிமை தீர்த்து - ஒழிந்தவற்றிற்குக் கொடாத மிகுகின்ற வலிமையைத் தீர்த்து; முத்தம் சூட்டி - முத்துக்களை அணிந்து; மின்னும் நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக் கொண்டு எழுதி - மின்னும் தம்மை யிகழாத மணிகளில் நல்லனவற்றைக் கரைத்துக்கொண்டெழுதி; நன்பொன் முகபடாம் வைப்ப - நல்ல பொற்கச்சாகிய முகபடாத்தையும் வைப்ப; (இவ்விடையீட்டாலே வெளியே நின்று கொல்லமுடியாமல், உள்ளே நின்று); ஆள் செற்று - ஆளைச் செறுத்து; அழன்று - நோக்கி உள்ளம் அழன்று; கண் கரிந்த - கண் கருகின.
 
விளக்கம் : ஒழிந்தவை - இம்முலைகள் ஒழிந்த ஏனையுறுப்புகள். ஏனையுறுப்புக்களினும் மிக்கு வருத்துகின்றமையால் கொடா மிகு - மீளிமை என்றார். நகுகொடா - நகுதற்கு இடங்கொடாத எனினுமாம். சூட்டுதலாலும் எழுதுதலாலும் முகபடாம் வைத்தலாலும் மீளிமை தீர்த்து மறைத்தலான் வெளியே நின்று கொல்லமாட்டாமல் உள்ளேயிருந்தே அழன்று கண்கரிந்தன என்பது கருத்து.  மீளிமை - கொங்கையின் வலி : பன்னீராண்டும் சென்று முலை முதிர்தலின் கண் கருகின என்றார். ( 75 )

1487. தேன்கறி கற்ற கூழைச்
செண்பக மாலை வேற்க
ணூன்கறி கற்ற கால
னொண்மணித் தடக்கை வைவேல்
கூன்பிறை நுதலோர் கூற்றங்
குவிமுலை நமன்கைப் பாசம்
யான்பிற னளியன் வாழ்வா
னாசைப்பட் டிருக்கின் றேனே.

பொருள் : தேன்கறி கற்ற கூழைச் செண்பகமாலை வேற்கண் - வண்டுகள் உண்ணக் கற்ற கூந்தலையுடைய கேமசரியின் கண்கள்; ஊன்கறி கற்ற காலன் தடக்கை ஒண்மணி வைவேல் - ஊனைத் தின்னக் கற்ற, காலனுடைய பெரிய கையிலுள்ள ஒள்ளிய மணியிழைத்த கூரிய வேலாகும்; கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் - வளைந்த பிறை அனைய புருவம் ஒப்பற்ற காலனேயாகும்; குவிமுலை நமன்கைப் பாசம் - குவிந்த முலைகள் நமன் கையில் உள்ள பாசம்; வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே - (இங்ஙனமாகவும்) உயிர் வாழ ஆசைகொண்டுள்ளேனே ஆதலின்; யான் பிறன் அளியன் - யான் மக்களிடையுள்ளே னல்லேன்; இரங்கத்தக்கேன்.

விளக்கம் : செண்பகமாலை என்றது கேமசரி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. வேற்கண் என்புழி அடை மொழி உவமங்குறியாமல் வாளா நின்றது. இனிக் குவிமுலை என்பதனைப் பெயராக்கிக் குவிமுலையின் கூழைச் செண்பகமாலை கைப்பாசம், கண் கை வேல் எனினுமாம். இருக்கின்றேனே : ஏ : தேற்றம். கூற்றம், நமன் என்பன சுட்டுப்பெயர். இனி, காலன் கூற்றத்திற்கு ஏவல் செய்பவனுமாம். ( 76 )

வேறு
 
1488. திருவிற்குங் கற்பகத் தெரியன் மாலையா
ருருவிற்கோர் விளக்கமா மொண்பொற் பூங்கொடி
முருகற்கு மநங்கற்கு மெனக்கு மொய்சடை
யொருவற்கும் பகைத்தியா லொருத்தி வண்ணமே.

பொருள் : கற்பகத்தெரியல் மாலையார் உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண்பொன் பூங்கொடி - கற்பத்தில் தெரிதலையுடைய மாலை பொருந்தியதோர் உருவிற்கு விளக்கமாம் பொற்பூங்கொடி; திருவிற்கும் முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய்சடை ஒருவற்கும் - திருமகளுக்கும் முருகனுக்கும் காமனுக்கும் எனக்கும் நெருங்கிய சடையையுடைய இறைவனுக்கும்; பகைத்தி - பகையாக இருக்கின்றாள்; ஒருத்தி வண்ணம் - ஒருத்தியின் வடிவிருந்தபடி என்னை!
 
விளக்கம் : திருமகளின் அழகையும், முருகன் வேலையும், காமன் வில்லையும், சீவகன் அறிவையும், இறைவன் பிறையையும் வாங்கியதாற்பகை யென்றான். வேல் கண்ணுக்கும், வில் புருவத்திற்கும், பிறை நெற்றிக்கும் உவமையாயின. திருவிற்கோர் என்பதூஉம் பாடம். இனி பூங்கொடி ஒருத்தி திரு. முருகன், காமன், இறைவன் ஆகியோற்கு வடிவினாலேயே பகைத்தியாயினாள்; எனக்கு உயிர்க்கே பகைத்தியாயினாள் என்றுமாம். திருவிற்கும் கற்பகத்தெரியலாகிய மாலையணியும் இந்திராணி முதலிய வானவ மகளிர்க்கும் அழகிற்கொரு விளக்கமாக அமைந்த கேமசரி எனினும் பொருந்தும். பூங்கொடி : கேமசரி. இறைவன் - சிவபெருமான். பகைத்தி - பகைமை யுடைவள். ( 77 )

1489. கலைத்தொகை நலம்பல கடந்த காளைதா
னலத்தகை யவணல நினைப்ப நாய்கனு
மலைத்தொகை மதந்தவழ் யானை மன்னவ
னிலத்தவர்க் கறிவுற நெறியிற் செப்பினான்.

பொருள் : கலைத்தொகை நலம்பல கடந்த காளைதான் - கலைத்தொகுதிகளின் நலம் பலவற்றையும் அறிந்த சீவகன் தான்; நலத்தகையவள் நலம் நினைப்ப - தன்மேல் அன்பின் தகைமையையுடையவள் அழகினை இவ்வாறு நினைத்திருப்ப; நாய்கனும் - சுபத்திரனும்; மலைத்தொகை மதம் தவழ் யானை மன்னவன் நிலத்தவர்க்கு - மலைகளின் திரள் போன்ற மதம்பொருந்திய யானைகளையுடைய அரசனுக்கும் தன் சுற்றத்தவர்க்கும்; அறிவுற நெறியிற் செப்பினான் - தெரியுமாறு முறைப்படி அறிவித்தான்.
 
விளக்கம் : அரசன் செறிந்திருத்தலின் அவனுக்கு மணத்தினை அறிவித்தான். கேமசரி வருத்தம் கண்ணுற நல்வள (சீவக. 1472, 1474) என்பனவற்றிற் கூறினார். அரசனுந் தானும் நெருங்கிய கேண்மையுடையர் ஆதலின் அவனுக்கும் ஏனையோக்கும் அறிவித்தான் என்பது கருத்து. மன்னவன் என்புழி நான்கனுருபோடு உம்மையும் நிலத்தவர்க்கு என்புழி உம்மையும் செய்யுள் விகாரத்தாற் றொக்கன. ( 78 )

1490. இடியுமி ழெறிதிரை முழக்கிற் பல்லியங்
கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக்
கடிமண மியற்றினார் கடவு ணாளினால்
வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே.

பொருள் : கொடி அணி வியன் நகர் - கொடி அணிந்த பெரு நகரில்; கடவுள் நாளினால் - நல்லநாளிலே; மைந்தற்கு வடிமலர்க் கோதையை - சீவகனுக்குக் கேமசரியை; இடி உமிழ் எறி திரை முழக்கில் - இடியுமிழ் ஒலியும் வீசும் அலைகடல் முழக்கும்போல; பல்இயம் குழுமி ஆர்த்து எழ - பல திருமண இயங்கள் திரண்டொலிக்க; கடிமணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்.

விளக்கம் : இடியுமிழ் முழக்குப்போலவும் திரைமுழக்குப் போலவும் பல்லியம் ஆர்த்தெழ என்க. பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். கடவுள் நாள் - கடவுட்டன்மையுடைய நன்னாள். ( 79 )

1491. மணிக்குட மழுத்திவைத் தனைய தோளினான்
கணிக்கிடங் கொடாநலங் கதிர்த்த காரிகை
யணிக்கிட னாயி வரிவை தன்னொடும்
பிணித்திடை விடாதவன் பெற்ற வின்பமே.

பொருள் : மணிக்குடம் அழுத்திவைத்த அனைய தோளினான் - மணியாற் செய்த குடத்தை அழுத்திவைத்தாற் போன்ற தோளையுடைய சீவகனின்; கணிக்கு இடம் கொடாநலம் - வடிவிற்குக் கூறிய நூல் வல்லாற்கும் புகழ இடங்கொடாத நலத்தை; அணிக்கு இடன் ஆகிய அரிவை கதிர்த்த காரிகை தன்னொடும் - அணிகட்கு இடம்பெற்ற கேமசரியின் ஒளிரும் அழகுடனே ; பிணித்து - அவர்கள் பிணித்தலால்; அவன் பெற்ற இன்பம் இடைவிடாது - அவன் நுகர்ந்த இன்பம் நீங்காதாயிற்று.
 
விளக்கம் : கணி - கணிவன், கதிர்த்தல் - ஒளிர்தல். காரிகை - அழகு. பிணித்து என்ற செய்தெனெச்சத்தை பிணிப்ப எனச் செயவெனெச்சமாக்கி ஏதுப்பொருட்டாக்குக. ( 80 )

1492. பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம்முலை
யேந்திய மணிவரை யிரக்க நீர்த்தரங்
காய்ந்தவன் றோளிணை நாக மாகவைத்
தீந்ததக் கடலவற் கமுத மென்பவே.

பொருள் : பூந்துகில் பொருதிரை - அழகிய ஆடை மறி தரும் அலையாக; பொம்மல் வெம்முலை ஏந்திய மணிவரை - பெரிய விருப்பூட்டும் முலை ஏந்திய மலையாக; இரக்கம் நீர்த்தரங்கு - தன் அருள் நீரின் அசைவாக; ஆய்ந்த வன்தோள் இணை நாகம் ஆக - ஆராய்ந்த வலிய இரு தோள்களும் பாம்பாக; வைத்து - வைத்து; அக்கடல் அவற்கு அமுதம் ஈந்தது - அக்காமக்கடல் அவனுக்கு அமுதத்தைக் கொடுத்தது.
 
விளக்கம் : வரை - மந்தரம். அருள் நெகிழ்தலுண்மையின் நீரின் அசைவு என்றார். நாகம் - வாசுகி. கடல் - பாற்கடல். அவன் கடைதலின் என ஒரு சொல் வருவித்துக்கொள்க. இவற்றால் முயக்கமும் இதழ்பருகலும் கூறினார். அவன் காட்ட அவள் காண்டலின் அவற்கு என அவன்மேல் ஏற்றினார். ( 81 )

1493. சந்தனச் சேற்றிடைத் தாம வார்குழற்
பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின்
மைந்தன தார்குலைந் துடைய வாய்திறந்
தஞ்சிலம் பணியல்குற் கலையொ டார்த்தவே.

பொருள் : மைந்தன தார் சந்தனச் சேற்றிடைக் குழைந்து உடைய - சீவகனுடைய தார் அவன் மார்பிலே சந்தனச் சேற்றின் இடையே குழைந்து உடையும்படி; தாமவார்குழல் பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின் - மலர்மாலையணிந்த நெடிய கூந்தலையும் பசிய தொடியையும் உடைய கேமசரியின் தளராத முலைகள் முழுகுமாறு பாய்தலால்; வாய்திறந்து அம்சிலம்பு அல்குல் அணி கலையொடு ஆர்த்த - வாய்விட்டு அழகிய சிலம்பும், அல்குலில் அணிந்த மேகலையும் ஆர்த்தன.
 
விளக்கம் : இச்செய்யுள் கேமசரியின் முயக்கங் கூறிற்று. தார் குழைந்துடைய என்பதற்குத் தூசிப்படை உடைய என்றும் ஒரு பொருள் தோன்றிற்று; யானை பாய்தலின் தூசிப்படை சேற்றிலே உடைந்தது என்றும், அதற்குச் சிலர் ஆர்த்தனரென்னும் ஒரு பொருள் தோன்றிற்று என்றும் நச்சினார்க்கினியர் நுண்ணிதிற் கூறினர். காமக்கடல், அழகிய உடையாகிய அலைமோதவும், கேமசரியின் முலையாகிய மலையிற் சீவகன் தோள்களாகிய பாம்புக் கயிறு பூட்டியிழுத்துக் கடையும்போது அவனுக்கு இன்பமாகிய அமுதத்தைக் கொடுத்தது என்க.  தார் - தூசிப்படை. ( 82 )

வேறு
 
1494. கோதையுங் குழலும் பொங்கக்
குவிமுலைக் குழங்கன் மாலைப்
போதுகப் பொருது பூணும்
பொருகடன் முத்து மூழ்கக்
காதலுங் களிப்பு மிக்குக்
கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பு மில்லாத்
தன்மைபெற் றவர்க ளொத்தார்.

பொருள் : கோதையும் குழலும் பொங்க - அவள் தன்னுடைய மலர் மாலையும் கூந்தலும் பொங்க; குவிமுலைக் குழங்கல் மாலைப்போது உக - குவிந்த முலைமேல் அணிந்த மணமுறு மாலையிற் பூக்கள் சிந்த; பூணும் பொருகடல் முத்தும் பொருது மூழ்க - அணிகலனும் கடல் முத்தும் பிணங்கி ஒன்றில் ஒன்று மூழ்கப் (புணர்தலின்), காதலும் களிப்பும் மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார் - காதலையும் களிப்பையும் மிகக்கொண்டு இரவும் பகலும் பிரியாராய்; சாதலும் பிறப்பும் இல்லாத் தன்மை பெற்றவர்கள் ஒத்தார் - இறப்பும் பிறப்பும் அற்ற தன்மையுடையவானவரைப் போன்றனர்.
 
விளக்கம் : முன்னர் (80) அக்கடல் அமுதம் ஈந்ததென்றார் ஈண்டும் அவ்வமுதினை நுகர்ந்து மூவாமையுஞ் சாவாமையும் பெற்ற அத்தேவர்களை ஒத்தார் என்றமை உணர்க.  குழங்கல் : மணம். ( 83 )

1495. புனைமலர்த் தாரி னானும் போதணி கொம்ப னாளு
நனைமலர்க் காவு மந்தண் வாலியு நல்ல வாடிச்
சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டி
வினைநல நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்க நீரார்.

பொருள் : விதியினால் மிக்க நீரார் - ஊழினால் அன்பு மிக்காராகிய ; புனை மலர்த் தாரினானும் போது அணி கொம்பு அனாளும் - ஒப்பனை செய்த மலர்மாலையானும் மலரணிந்த கொம்பு போன்றவளும்; நல்ல நனை மலர்க்காவும் அம் தண்வாவியும் ஆடி - அழகிய குளிர்ந்த மலர்ப்பொழிலிலும் அழகிய குளிர்ந்த குளத்திலும் ஆடி; சுனைமலர்க் குவளை குற்று - சுனையிலுள்ள குவளை மலர்களைப் பறித்து; சூழ் மலர்க் கண்ணி சூட்டி - மலர் சூழ்ந்த கண்ணி புனைந்து; வினைநலம் நுகர்ந்து செல்வார் - புணர்ச்சித் தொழிலின் அழகை நுகர்ந்து போந்தனர்.

விளக்கம் : தாரினானும் கொம்பனாளும் ஆடியும் குற்றும் சூட்டியும் நுகர்ந்து செல்வார் என உம்மை விரித்தோதுக. இங்ஙனம் மாந்தர் நுகர்தற்குக்காரணம் முற்பிறப்பிலே செய்தநல் வினையே என்பார் விதியினான் மிக்கார் என்றும் வினைநலம் நுகர்ந்து செல்வார் என்றும் விதந்தோதினார். ( 84 )

1496. பொழிந்துகு காதல் பூண்டு
புல்லுகை விடாது செல்லக்
கழிந்தன விரண்டு திங்கள்
காளையு மற்றோர் நாளாற்
பிழிந்துகொள் வனைய பெண்மைப்
பெய்வளைத் தோளி தன்னோ
டழிந்துவீ ழருவிக் குன்றி
லாய்மலர்க் காவு புக்கான்.

பொருள் : பொழிந்து உகு காதல் பூண்டு - நிறைந்து புறந்தோன்றுகின்ற காதலைப் பூண்டு; புல்லுகை விடாது செல்ல - இவ்வாறு முயங்கலைக் கைவிடாது போதர; இரண்டு திங்கள் கழிந்தன - இரண்டு திங்கள் கடந்தன; மற்றோர் நாளால் - பிறிதொரு நாளிலே; பிழிந்து கொள்வு அனைய பெண்மைப் பெய்வளைத்தோளி தன்னோடு காளையும் - வடித்துக்கொண்டாற் போலும் பெண்மையினையுடைய, வளையலணிந்த தோளியுடன் சீவகனும்; அழிந்து வீழ் அருவிக் குன்றில் ஆய் மலர்க் காவு புக்கான் - பெருகி வீழ்கின்ற அருவியையுடைய அழகிய மலர் நிறைந்த பொழிலிற் புகுந்தான்.
 
விளக்கம் : உவகை அகத்தே நிரம்பியவழி மெய்ப்பாடாகப் புறத்தார்க்கம் புலப்படுதலுண்மையின் பொழிந்துகு காதல் என்றார். பூண்டு - மேற்கொண்டு. புல்லுகை - தழுவுதல். நாளால் - நாளில். சிறந்த பெண்மை நலத்தினும் பிழிந்தெடுத்துக்கொண்ட பெண்மை நலத்தையுடையாள் என்க. தோளி : கேமசரி. ( 85 )

1497. காஞ்சனக் கமுகு காய்பொற்
கனிக்குலை வாழை சூழ்ந்து
பூஞ்சினை நாகந் தீம்பூ
மரக்கருப் பூரச் சோலை
மாஞ்சினை மயில்க ளாடச்
சண்பக மலர்கள் சிந்துந்
தீஞ்சுனை யருவிக் குன்றஞ்
சீர்பெற வேறி னானே.

பொருள் : காஞ்சனக் காய்க் கமுகு - பொன்னிறக் காய்களையுடைய கமுகும்; பொன் கனிக்குலை வாழை - பொன் போலும் கனிகளையுடைய குலை பொருந்திய வாழையும்; சூழ்ந்து - சூழப்பெற்று; பூஞ்சினை நாகம் தீம்பூ மரம் கருப்பூரச் சோலை - தன்னிடத்தே மலர்க் கிளைகளையுடைய சுர புன்னை மரமும் தீம்பூ மரமும் பொருந்திய கருப்பூரச் சோலையிலே; மாஞ்சினை மயில்கள் ஆட - மாமரக் கிளைகளிலே மயில்கள் ஆட; சண்பக மலர்கள் சிந்தும் - சண்பகப் பூக்கள் சிந்துகின்ற; தீஞ்சுனை அருவிக் குன்றம் - இனிய சுனையையுடைய குன்றிலே; சீர்பெற ஏறினான் - சிறப்புற ஏறினான்.
 
விளக்கம் : காஞ்சனம் - பொன்; கமுகங்காய்க்கு நிறம் பற்றி வந்தது. பொன்கனி - பொன்போலும் நிறமுடைய பழம். தீம்பூ மரம் : ஒருவகை மரம் (சீவக. 1267, 1901). ( 86 )

1498. தினைவிளை சாரற் செவ்வாய்ச்
சிறுகிளி மாத ரோப்பப்
புனைவளைத் தோளி சொல்லைக்
கிளியெனக் கிள்ளை போகா
நனைவினை கோதை நாணிப்
பொன்னரி மாலை யோச்சக்
கனைகழற் குருசி னண்ணிக்
கவர்கிளி யோப்பி னானே.

பொருள் : தினைவிளை சாரல் - (அம்மலையில்) தினை விளைந்த புனத்திலே; செவ்வாய்ச் சிறு கிளி மாதர் ஒப்ப - சிவந்த வாயையுடைய சிறிய கிள்ளைகளைக் கேமசரி ஓட்ட; புனை வளைத்தோளி சொல்லைக் கிளியெனக் கிள்ளை போகா - அழகிய வளைத்தோளியின் மொழியைக் கிளிமொழியென உட்கொண்டு கிள்ளை போகாவாக; நனைவிளை கோதை நாணிப் பொன்னரிமாலை ஓச்ச - (அதற்கு) தேன்விளையும் கோதையாள் நாணுற்றுப் பொன்னரி மாலையால் துரப்பப் (பின்னும் போகாவாக); கனைகழற் குருசில் நண்ணிக் கவர்கிளி ஓப்பினான் - (அவள் கருத்தை முடித்தற்கு) ஒலிக்குங் கழலணிந்த சீவகன் சென்று தினையைக் கவரும் அக்கிளிகளை ஓட்டினான்.

விளக்கம் : அப்புனைவளைத் தோளியின் சொல்லை என்க. கோதை : கேமசரி. குரிசில் : சீவகன். கவர்கிளி : வினைத்தொகை; தினைக் கதிரைக் கவர்கின்ற கிளி என்க. ஒப்புதல் - ஒட்டுதல். கேமசரி சொற்கேட்டுக் கிளி போகாதது கண்டு சீவகனே அக் கிளிகளை யோட்டினான் என்பது. ( 87 )

1499. கொந்தழல் வேற்க ணாலென்
னாவிகூட் டுண்ட கொம்பே
செந்தழை யலங்க லேந்திச்
சீறடி பரவ வந்தே
னுய்ந்தினிப் பணிசெய் வேனோ
வுடம் பொழித் தேகு வேனோ
பைந்தழை யல்குற் பாவாய்
பணியெனப் பரவி னானே.

பொருள் : கொந்து அழல்வேற்கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே - எரியும் அழலையுடைய வேலனைய கண்களினால் என் உயிரைக் கொள்ளை கொண்ட மலர்க்கொம்பே!; செந்தழை அலங்கல் ஏந்திச் சீறடி பரவ வந்தேன்- செவ்விய தழையையும் மாலையையும் ஏந்தி நின் சிற்றடிகளை வணங்க வந்தேன்; இனி உய்ந்து பணிசெய்வேனோ - இனி உயிருடன் இருந்து நின் ஏவல் செய்யக்கடவேனோ?; உடம்பு ஒழித்து ஏகுவேனோ - இறந்து படக் கடவேனோ?; பைந்தழை அல்குல் பாவாய் - பசிய தழைகளை யுடுத்த அல்குலையுடைய பாவையே!; பணியெனப் பரவினான் - (இரண்டில் ஒன்றினை) அருளிச்செய்க என்று புகழ்ந்தான்.
 
விளக்கம் : துகிலும் மேகலையுஞ் சீர்பெறப் புனையுங் காலத்தும் பைந்தழை புனைதல் பழைமையின் குறப்புப்போலும். சீவகன் கிளியை ஒட்டப் பிரிந்தானாக, அவள் அப்பிரிவைப் பொறாது ஊடினாள். எனவே, புலவி தீர்க்கவேண்டியதாயிற்று. கொம்பு : ஆகுபெயர்; விளியேற்றது. நின்னுடைய வாயுடைய தென்னுடைய வாழ்வென்பான் பணி என்றான். ( 88 )

1500. வீணையுஞ் குழலும் பாலு
மமுதமுங் கரும்புந் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற
பைங்கிளி மழலைத் தீஞ்சொல்
வாணிக மகளிர் தாமே
வாணிகம் வல்ல ரென்னாப்
பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப்
புனைநலம் பருகி னானே.

பொருள் : வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்புந்தேனும் பாணி யாழ் கனியும் வென்ற - வீணை குழல் யாழ் பால் அமுதம் கரும்பு தேன் இசையுறும் யாழ் கனி ஆகிய இவற்றையெலாம் வென்ற; பைங்கிளி மழலைத் தீஞ்சொல் - கிளியின் மழலையனைய இன்மொழியுடைய; வாணிக மகளிர் தாம் வாணிகம் வல்லர் என்னா - வணிகப் பெண்கள் முதல் கெட ஊதியஞ் செய்யார் என்று வியந்து; பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகினான் - அவளுடைய பூணணிந்த முலைகள் விம்மத் தழுவிப் புனைவுற்ற அழகினைப் பருகினான்.
 
விளக்கம் : இவன் இறந்து படுவேனோ என்றதனைக் கேட்டுக் குறுமுறுவல்கொண்டு ஒரு மொழி கொடுப்பவே. ஊடல் நீங்கியதாகலின், அச் சொல்லை மழலைத் தீஞ்சொல் என்று மகிழ்ந்தான். அம் மொழி கூறலாகாமையின் ஆசிரியர் கூறிற்றிலர் என்ப. முதல் - தன் உயிர். ஊதியம் - ஊடல்.  வீணையும் யாழும் என வேறு கொண்டுரைப்பதும் உண்டு என்பதைக், குழலும் வீணையும் யாழுமென்றினையன குழைய (கம்ப. ஊர் தேடு.6) என்பதனாலும் அறிக. ( 89 )

1501. திங்களங் குழவி செவ்வா
னிடைக்கிடந் திமைப்ப தேபோற்
குங்கும மார்பிற் பூண்ட
மங்கையோ டிருந்த போழ்தோர்
வாளொளித் தடங்க ணீலம்
மணிவண்டு கண்டு சொன்னான்
கங்குறா னீங்க லுற்றுக்
கமழ்மல ரணிந்த தாரான்.

பொருள் : திங்கள் அம் குழவி செவ்வானிடைக் கிடந்து இமைப்பதே போல் - பிறைத் திங்கள் செவ்வானிலே கிடந்து விளங்குவதுபோல; குங்குமம் மார்பில் பூண்ட குளிர்கதிர் ஆரம்மின்ன - தனது குங்குமம் அணிந்த மார்பிலே பூண்ட தண்ணிய கதிர் வீசும் முத்துமாலை மின்னும்படி; மங்கையோடு இருந்த போழ்து - தனித்துக் கேமசரியுடன் இருந்த பொழுதில்; கமழ் மலர் அணிந்த தாரான் - மணமலர் புனைந்த தொடையினான்; ஓர் மணி வண்டு கண்டு - ஒரு கரிய வண்டைப் பார்த்து; கங்குல் தான் நீங்கல் உற்று - இரவு பிரியக் கருதி; சொன்னான் - ஒரு மொழி கூறினான்.

விளக்கம் : இதன்கண் சீவகன் கேமசரிக்குத் தான் பிரியக் கருதியிருப்பதனைக் குறிப்பால் உணர்த்துகின்றான். ( 90 )

1502. மணிவண்டிம் மாதர் கோதை
மதுவுண வந்த போழ்தங்
கிணைவண்டங் கிறந்து பாடின்
றிருக்குமே யிரங்க லின்றாய்த்
துணைவண்டு துஞ்சி னீயுந்
துஞ்சுவை யென்று நின்கட்
பணிகொண்ட தின்மை யாற்றான்
பரிவொடு மிருக்கு மன்றே.

பொருள் : மணி வண்டு - கரிய வண்டே!; இம் மாதர் கோதை மதுஉண வந்த போழ்து - நீ இம் மாதரின் மலர்மாலையிலே தேனைப் பருக வந்தபோது; அங்கு இணை வண்டு அங்கு இறந்துபாடு இன்று இரங்கல் இன்றாய் இருக்குமே - அங்குள்ள நின் பெடை வண்டு அங்கேயே இறவாமலும் வருத்தம் இன்றியும் இருக்குமோ?; துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று - நின் பெடை இறப்பின் நீயும் இறந்துபடுவாயென்று உட்கொண்டு; நின்கண் பணிகொண்டது இன்மையால் தான் - உன்னிடத்து உரியதொரு தொழிலை முதலிலேயே தன்னிடத்துக் கொள்ளாமையால்; பரிவொடும் தான் இருக்கும் அன்றே - இறந்துபடாமல் அன்புடனே தான் ஆற்றியிருக்கும் அல்லவோ? (என்றான்)
 
விளக்கம் : துணைவண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்று என்றது என் பொருட்டே நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்னும் குறிப்புடையது. மணிவண்டு : அண்மைவிளி. இருக்குமே : ஏ : வினா. பணி யென்றது, மகளிர் இருந்து இல்லறத்தை நிகழ்த்துதற்கு வேண்டுவன தேடிவருதல் ஆடவர்க்குப் பணியாதலை.( 91 )
 
1503. குழவியாய்ப் பிறந்து வெய்யோன்
குமரனாய் குறுகி யிப்பால்
விழைவுதீர் கிழவ னாகி
விழுக்கதி ருலந்து வீழ
மழலைவண் டுழல நக்க
மல்லிகை யலங்கல் சூட்டிக்
குழல்புரை கிளவி யோடுங்
கொழும்புகை யமளி சேர்ந்தான்.

பொருள் : வெய்யோன் குழவியாய்ப் பிறந்து - கதிரவன் காலையிற் குழவியாகத் தோன்றி; குமரனாய் முறுகி - நண்பகலிற் குமரனாகிய வெம்மை மிகுந்து; இப்பால் விழைவு தீர் கிழவன் ஆகி - மாலையில் ஆசை நீங்கிய முதியவனாகி; விழுக்கதிர் உலந்து வீழ - சிறந்த கதிர்கள் கெட்டு மேற்றிசையிலே விழுதலின்; மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி - (சீவகன்) முரலும் வண்டு உழலும்படி அலர்ந்த மல்லிகை மாலையைச் சூட்டி; குழல் புரை கிளவியோடு கொழும் புகை அமளி சேர்ந்தான் - குழலிசை போன்ற மொழியாளோடு வளவிய அகிற்புகை யூட்டப்பட்ட அமளியை அடைந்தான்.
 
விளக்கம் : மேலைச் செய்யுளில் இன்பநிலையாமையைக்கண்ட திருத்தக்கமுனிவர் இனம்பற்றித் தம் மனத்தே முகிழ்த்த யாக்கை நிலையாமையினை ஞாயிற்றின்பால் வைத்து உலகோர்க்கு நுண்ணிதின் உணர்த்துதல் உணர்க. கிளவியோடும் : உம் இசை நிறை.
( 92 )
 
1504. திருத்துயில் பெற்ற மார்பன்
றிருந்துதா ருழக்க வின்ப
வருத்தமுற் றசைந்த கோதை
வாளொளித் தடங்க ணீலம்
பொருத்தலும் பொன்ன னாளைப்
புறக்கணித் தெழுந்து போகிப்
பருச்சுடர்ப் பவழ நோன்றாழ்ப்
பன்மணிக் கதவு சேர்ந்தான்.

பொருள் : திருத் துயில் பெற்ற மார்பன் - திருமகள் துஞ்சும் மார்பனான சீவகனது; திருந்து தார் உழக்க - அழகிய தார் கலக்குதலாலே; இன்ப வருத்தம் உற்று அசைந்த கோதை - இன்பத்தாற் பிறந்த வருத்தத்தை உற்று இளைத்த கோதையாள்; வாள் ஒளித் தடங்கண் நீலம் பொருத்தலும் - சிறந்த ஒளியுறும் பெருங்கண்களாகிய நீலத்தைக் குவித்த அளவிலே; பொன்னனாளைப் புறக்கணித்து எழுந்துபோகி - அவன் திருவனையாளை நீங்கக் கருதி எழுந்து சென்று ; பருச் சுடர்ப் பவழம் நோன் தாழ் - பேரொளி யுறும் பவழத்தாலாகிய வலிய தாழையுடைய; பல் மணிக் கதவு சேர்ந்தான் - பலவகை மணிகளிழைத்த கதவை அடைந்தான்.
 
விளக்கம் : திருமகள் எப்பொழுதும் தங்கும் மார்பன் என்பார் திருத்துயில் மார்பன் என்றார். நிலம் பொருத்தல் என்றது இமை கூடுதலை. பொன் : திருமகள். ( 93 )

1505. அல்லியுட் பாவை யன்னா ளறிவுறா வகையி னொற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட் டிலங்கு பைம்பூட்
கொல்சின மடங்க லன்னான் கொழுநிதி மாட நீந்திப்
பல்கதிர்ப் பரிதி போலப் பாயிரு ளேகி னானே.

பொருள் : அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி - தாமரை மலரில் திருவைப் போன்றவள் தான் கதவைத்திறப்பதை அறியா வகையிலே கதவைத் தள்ளி; மெல்லவே திறந்து நீக்கி - மெல்லத் தாழ் திறந்து பின்னர் முற்றுந் திறந்து; கொழுநிதி மாடம் நீந்தி - வளமிகு செல்வமுடைய மாடத்தைக் கடந்து; பல்கதிர்ப் பரிதிபோல - பல கதிர்களையுடைய ஞாயிறு போல; மின்னுவிட்டு இலங்கு பைம்பூண் கொல் சின மடங்கல் அன்னான் - ஒளிவீசி விளங்கும் புத்தணியையுடைய கொல்லும் சீற்றமுறும் சிங்கம் போன்றவனான சீவகன்; பாய் இருள் ஏகினான் - பரவிய இருளிலே சென்றான்.

விளக்கம் : அல்லியுட்பாவை : திருமகள். அல்லி : தாமரை மலர்க்கு ஆகுபெயர். ஒற்றுதல் - தள்ளுதல். ( 94 )

1506. தாளுடைத் தடங்கொள் செவ்வித்
தாமரைப் போது போலும்
வாளுடை முகத்தி னாடன்
வருமுலைத் தடத்தின் வைகி
நாளினும் பெருகு கின்ற
நகைமதி யனைய காதற்
கேள்வனைக் கனவிற் காணாள்
கிளர்மணிப் பூணி னாளே.

பொருள் : கிளர்மணிப் பூணினாள் - விளங்கும் மணிகள் இழைத்த கலனணிந்தவளாகிய; தடம்கொள் செவ்வித் தாளுடைத் தாமரைப் போது போலும் வாளுடை முகத்தினாள் - குளத்திலே தங்கிய செவ்வியுடைய, தண்டையுடைய தாமரை மலர்போல விளங்கும் முகத்தினாள்; தன் வருமுலைத் தடத்தின் வைகி - தன் வளரும் முலைகளின்மேல் தங்கி; நாளினும் பெருகுகின்ற நகைமதி அனைய காதல் கேள்வனை - நாடோறும் வளர்கின்ற பிறைமதி போன்ற காதலையுடைய கணவனை; கனவில் காணாள் - கனவிலே காணாதவளானாள்.

விளக்கம் : இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் கனாக் காண்கின்றவள் அவன் போகக் கண்டாள் என்று கூறியுள்ள குறிப்பு நன்கு விளங்கவில்லை. துயில்கின்றபொழுது நாள்தோறுங் கனவிலே தன்றோள் மேல் கேள்வனைக் காணுமியல்புடைய கேமசரி அன்று கனவின் கண் அவ்வாறு காணாதவளாயினள் என்பது நூலாசிரியர் கருத்தாதல் கூடும் என்று தோன்றுகின்றது. அவ்வாறு காணாதவள் எனவே கனவில் அவன் போகக் கண்டாள் என்பது குறிப்பாகும் என்று நச்சினார்க்கினியர் கொண்டனர் போலும். நகை - ஒளி. மதி - சந்திரன். மதி என்பது ஈண்டுப் பிறையையுணர்த்திற்று, பிறையானது நாளுக்குநாள் வளர்வது போல வளர்கின்ற காதல் என உவமைக்குப் பொருத்தம் கூறவேண்டியிருப்பதால். ( 95 )

1507. அரந்தினப் பிறந்த பைம்பொ
னரும்பிய முலையி னாளைக்
கரந்தவன் கங்கு னீங்கக்
கதிர்வளை யணங்கு மென்றோள்
வரந்தரு தெய்வ மன்னாள்
வைகிரு ளனந்த றேறிப்
பரந்தெலாத் திசையு நோக்கிப்
பையவே பரிவு கொண்டாள்.

பொருள் : அரம் தினப் பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை - அரத்தால் அராவுதலால் உண்டான புதிய பொன்னெனச் சுணங்கு பொருந்திய முலையாளை; கரந்தவன் கங்குல் நீங்க - நீங்கிய சீவகன் அங்ஙனம் இருளிலே போகாநிற்க; கதிர்வளை அணங்கும் மென்தோள் வரம்தரு தெய்வம் அன்னாள் - ஒளிரும் வளையணிவதால் மெலியும் மென்மையான தோளையுடைய, வரமளிக்குந் தெய்வத்தைப் போன்றவள்; வைகு இருள் அனந்தல் தேறி - தங்கிய இருளிலே தான் கண்ட கனவாலே துயில் மயக்கம் நீங்கி விழித்து; பரந்து எலாத்திசையும் நோக்கி - எல்லாத் திசையினும் பரவிப் பார்த்து; பையவே பரிவு கொண்டாள் - முறைபட வருத்தம் கொண்டாள்.

விளக்கம் : ஈண்டும் தன்கேள்வனைக் கனவினும் காணப் பெறாமையானே விழித்து என்னலும் பொருந்தும். பொன் என்றது அராவப்பட்ட பொற்சுண்ணத்தை; இது தேமலுக்கு உவமை. கணவற்கு நினைத்தன கொடுத்தலின் வரந்தரு தெய்வம். ( 96 )

1508. திருமணி குயின்ற செம்பொற்
றிருந்துபூங் கொம்ப னாடன்
கருமணிப் பாவை யன்னான்
கரந்துழிக் காண்டல் செல்லா
ளெரிமணி விளக்க மாடத்
திருளறு காறு மோடி
யருமணி யிழந்தோர் நாக
மலமரு கின்ற தொத்தாள்.

பொருள் : திருமணி குயின்ற செம்பொன் திருந்து பூங்கொம்பனாள் - அழகிய மணிகளைப் பதித்த திருந்திய பொற்பூங்கொம்பு போன்றவள்; தன் கருமணிப் பாவை அன்னான் - தன் விழியிலுள்ள கருமணியின் பாவைபோன்ற கணவன்; கரந்துழிக் காண்டல் செல்லாள் - மறைந்த இடத்தைக் காணாளாய்; எரிமணிவிளக்கம் மாடத்து இருள் அறுகாறும் ஓடி - எரியும் மணி விளக்கின் ஒளி மாடத்தில் உள்ளவரையில் ஓடி; அருமணியிழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள் - ஒரு நாகப்பாம்பு தன் படத்திலுள்ள கண்ணாகிய அரிய மணியை இழந்து வருந்துவதனை ஒத்தாள்.

விளக்கம் : விளக்கத்தால் மாடத்தில் இருள் அற்ற இடமளவும் என்க. எனவே ஒளிபரவிய அளவில் என்பதாயிற்று. ஓடி என்றது, அவள் மனநிலையைக் காட்டுகின்றது. மணி சீவகனுக்கு உவமை. அலமருதல் - மனச்சுழற்றி எய்துதல். ( 97 )

வேறு

1509. யாண்டை யாயைய வஞ்சினெ னாருயி
ரீண்டு டம்பொழித் தேக வலிக்குமா
னீண்ட தோளவ னேநிறை யானிலேன்
றீண்டு வந்தெனத் தேனின் மிழற்றினாள்.

பொருள் : ஐய - ஐயனே!; யாண்டையாய் - நீ எங்கு இருக்கின்றாய்?; அஞ்சினென் - யான் தனித்திருக்க அஞ்சுகிறேன்; நீண்ட தோளவனே - நீண்ட தோள்களையுடையவனே!; ஈண்டு உடம்பு ஒழித்து ஆருயிர் ஏக வலிக்கும் - இப்போதே உடம்பைவிட்டுச் சிறந்த உயிர் நீங்கத் துணிகின்றது; யான் நிறை இலேன் - (ஆதலின்) நிறையழிந்தேன்; தீண்டு வந்து என - (இனி) தீண்டுக வந்து என்று; தேனின் மிழற்றினாள் - தேனைப் போல மிழற்றினாள்.

விளக்கம் : முன்பும் ஒளிந்து விளையாடும் வழக்கமிருத்தலின், இப்போது அதுவாக எண்ணி, யாண்டையாய் என்றும், அஞ்சினேன் என்றும் கூறினாள். நீண்டதோள் : உத்தம இலக்கணம். தீண்டு வந்து என்பது , கண்டேன் சீதையை என்பதுபோல நின்றது. (98)

1510. கனிகொள் காமங் கலந்துயி ரொன்றலி
னினியர் மங்கைய ரென்பது கூறுவாய்
பனிகொண் மாமதி போற்பசப் பூரயான்
றனிய ளாவது தக்கது வோசொலாய்.

பொருள் : கனிகொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின் - கனிவுடைய காமம் தம்மிற் பொருந்தி உயிர் ஒன்றுபடும்போது; மங்கையர் இனியர் என்பது கூறுவாய் - மங்கையர் இனியராயிருப்பர் (அல்லாத இடத்து இனியரல்லர்) என்று முன்னர் நீ கூறுவாய்; பனிகொள் மாமதிபோல் யான் பசப்பு ஊர - பனி மூடிய முழுமதிபோல யான் பசப்புமிகும்படி; தனியள் ஆவதுதக்கதுவோ சொலாய் - (நாம் ஒன்றி வாழும் இந்நாளிலே) தனியளாவது நினக்குத் தகுதியோ? கூறுவாய்.

விளக்கம் : கனிகொள் காமம் - முதிர்ந்த காமம். எம்மியல்பினை நன்கு அறிந்துவைத்தும் இங்ஙனம் எம்மைத் தனிக்க விடுவது நினக்குத்தகுமோ என்றவாறு. ( 99 )

1511. கழலு நெஞ்சொடு கைவளை சோருமாற்
சுழலுங் கண்களுஞ் சூடுறு பொன்னென
வழலு மேனியு மாற்றலெ னையவோ
நிழலி னீப்பருங் காதலு நீத்தியோ.

பொருள் : ஐயவோ - ஐயனே!; கழலும் நெஞ்சொடு கைவளை சோரும் - போகின்ற நெஞ்சுடன் கைவளையும் போகா நின்றது; கண்களும் சுழலும் - கண்களும் பரவிப் பரவி நோக்கும்; சூடு உறு பொன் என மேனியும் அழலும் - உருகும் பொன்போல மெய்யும் அழல்கின்றது; ஆற்றலென் - ஆதலின் ஆற்றகில்லேன்; நிழலின் நீப்பருங் காதலும் நீத்தியோ - நிழலைப்போல நீத்தற்கரிய காதலையும் நீத்தனையோ?

விளக்கம் : ஐயவோ : ஓ : இரக்கம். நீத்தியோ : ஓ : வினா. ( 100 )

1512. திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான்
புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடை
வருந்து மான்மட வாயெனும் வஞ்சநீ
கரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ.

பொருள் : திருந்தும் மல்லிகைத் தேம்கமழ் மாலை யான் புரிந்து சூடினும் - திருந்திய மல்லிகை மலர்களாலாகிய மணங்கமழும் மாலையை நான் விரும்பியணிந்தாலும்; மடவாய் பூங்கொடி நுண் இடை வருந்தும் எனும் வஞ்ச - பேதையே! மலர்க்கொடி யனைய நின் மெல்லிடை வருந்தும் என்கிற வஞ்சனே!; யான் கரிந்து நையக் காண்டலும் வல்லையோ - யான் கருகி வருந்தக் கண்டிருத்தற்கும் நீ வல்லையோ?

விளக்கம் : வல்லையோ : ஓ : வினா. யான் கரிந்து நைதற்கு ஏதுவாகிற செயலைச் செய்யத் துணிந்த நீ முன்னர் மடவாய் நுண்ணிடை வருந்தும் என்றது வஞ்சகமொழியே என்பது அறிந்தேன் என்றவாறு. வல்லையோ - வன்மையுடையையோ. ( 101 )

1513. தொண்டை வாயிவ டொய்யில் வனமுலை
கண்டு தேவர் கனிபவென் றேத்துவாய்
வண்டு கூறிய வண்ண மறிந்திலேன்
விண்டு தேன்றுளிக் கும்விரைத் தாரினாய்.

பொருள் : தேன்விண்டு துளிக்கும் விரைத் தாரினாய் - தேன் பிதிர்வுற்றுத் துளிக்கும் மணமாலையாய்!; இவள் தொண்டைவாய் தொய்யில் வனமுலை கண்டு - இவளுடைய தொண்டைவாயையும் தொய்யில் எழுதிய அழகிய முலையையும் கண்டு; தேவர் கனிப என்று ஏத்துவாய் - வானவரும் உளம் நெகிழ்வர் என்று முன்னிலைப் புறமொழியாகப் புகழ்மொழி கூறுகின்றவனே!; வண்டு கூறியவண்ணம் அறிந்திலேன் - நீ வண்டைப் பார்த்துக் கூறிய தன்மையை யான் அறிகிலேன்; (அறிந்திருந்தால் நின்னைப் பிரியவிடேன்.)

விளக்கம் : தேவர் என்பதற்கு அயனார் என்றும், அவர், உலகைப் படைக்கும் நாமே உலகை அழிக்கும் ஓருருவையும் படைத்தோமே என்று வருந்துவர் என்றும், தேவர் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி என்றும், தெய்வமகளிர் என்று கொண்டு வாயையும் முலையையுங்கண்டு அவர்கள் வருந்துவார் எனினும் ஆம் என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். தேவர் என்புழி, சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. வண்டு - வண்டிற்கு. பெண்ணாகலின் என்பேதைமையால் அதனையான் அறிந்திலேன் என்றிரங்கியவாறு. வண்டு கூறியவண்ணம் என்றது வண்டிற்குக் கூறுமாற்றால் குறிப்பாகப் பிரிவுணர்த்தியதனை. அறிந்திலேன் என்றது அறிவனேல் நின்னைப் பிரியவிட்டிரேன் என்பதுபட நின்றது. ( 102 )

வேறு

1514. முலைவைத் ததடத் திடைமுள் கலுறிற்
றலைவைத் துநிலத் தடிதை வருவாய்
சிலைவித் தகனே தெருளே னருளா
யுலைவித் தனையென் னுயிர்கா வலனே.

பொருள் : சிலை வித்தகனே - வில் வல்லோனே!; உயிர் காவலனே - என் உயிருக்குக் காவலனே!; முலைவைத்த தடத்திடை முள்கலுறின் - என் முலைகளிடையே நீ ஊடல் தீர்த்துக் கூட நினைப்பின்; நிலத்துத் தலைவைத்து அடி தைவருவாய் - நிலத்திலே நின் தலையைப் பொருத்தி என் அடிகளைத் தடவுவாய்; உலைவித்தனை என் தெருளேன் - இப்போது சலிப்பித்தனை ஏனோ? காரணம் தெளிகின்றிலேன்; அருளாய் - தெளியக் கூறுவாய்.

விளக்கம் : வேலியே பயிரை மேய்ந்தாற் போன்று உயிர்காவலனாகிய நீயே உலைவித்தனை என்னும் நயம் உணர்க. வைத்த நிலம் என்பது பாடமாயின் காலை வாங்கினால் அந் நிலத்தில் அடிச்சுவட்டைத் தடவுவாய் என்க. முள்கல் - முயங்குதல்.  முலை வைத்த தடம் : யாம் பிறந்த இடமும் சிறிது கிடக்கவேண்டுமென்று முலைதான் அருள் பண்ணிவைத்த தடம். இது சீவகன் கூறிய கூற்றை இவள்கொண்டு கூறியது. எஞ்சுற்றம் என்றிரங்கா தாகமெல்லாங் கவர்ந்திருந்து (சீவக. 2502) என்பர் மேலும். இருவரும் முன்னர் உறாதிருத்தல் இன்மையின், உறின் எனவே முன்பு ஊடல் தீர்த்துக் கூடநினைக்கின் என்பது பெற்றாம். நின் வணக்கம் எல்லாம் வில்வணக்கம் போலத் தீங்கு தருவன வாயிற்றென்பது தோன்ற சிலைவித்தகனே என்றாள். எவன் என்னும் வினா என் என நின்றது. ( 103 )

1515. கடனித் திலம்வைத் தகதிர்ம் முலையி
னிடனெத் துணையத் துணையும் மெழுதி
யுடனொத் துறைவா னுழைவா ரலனேன்
மடனொத் துளதென் னுயிர்வாழ் வதுவே.

பொருள் : கடல் நித்திலம் வைத்த கதிர்ம் முலையின் - கடல் முத்துமாலை புனைந்த ஒளிரும் முலைகளினாலே; இடன் எத்துணை அத்துணையும் எழுதி -தன் மார்பின் இடம் எவ்வளவு உண்டோ அவ்வளவும் யான் எழுத; உடன் ஒத்து உறைவான் உழைவாரலனேல் - என்னுடன் ஒத்து உறைகின்றவன் இனி என்னிடத்திலே வாரானாயின்; என் உயிர் வாழ்வது மடன் ஒத்து உளது - என் உயிர் வாழும் நிலைமை முற்பட்ட அறியாமையை ஒக்கும்

விளக்கம் : எழுதி - எழுத. இனி, முலையெங்கும் தொய்யில் எழுதி உறைவான் என்றுமாம். முற்பட்ட அறியாமை - வண்டிற்குக் கூறியதை அறியாதிருந்தமை. ஒத்துளது: ஒரு சொல். கதிர்ம்முலை; விரிக்கும் வழி விரித்தல். இடன், மடன், என்பவற்றில் மகரத்திற்கு னகரம் போலி. ( 104 )

1516. பெறுமன் பினளென் பதுபே சினலா
லறுமன் பினளென் றறைவா ரிலையா
லிறுமென் பொடினைந் துநைவேற் கருளி
நறுமென் கமழ்தா ரவனே நணுகாய்.

பொருள் : நறு மென்கமழ் தாரவனே - நறிய மெல்லிய மணங்கமழும் தாரினனே!; பெறும் அன்பினள் என்பது பேசின் அலால் -(நீ என்னுடன் உறைந்த நிலைகண்டு) இவள் நாடோறும் பெறும் அன்புடையாள் என்று (என் சுற்றத்தார்) பேசினதன்றி; அறும் அன்பினள் என்று அறைவார் இலை - தேயும் அன்பினள் என்று செப்பினாரில்லை; இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி நணுகாய் - உருகும் என்போடு வருந்தி நையும் எனக்கு இன்னும் அருளி வருவாய்.

விளக்கம் : பெறும் அன்பினள் அறும் அன்பினள் இத்தொடர்களை அன்பு பெற்றவள், அன்பு அற்றவள் என்று விகுதி பிரித்துக்கூட்டுக. நைவேன் + கு = நைவேற்கு இது தன்மையொருமை வினையாலணையும் பெயர். கு உருபு ஏற்றது. ( 105 )

1517. நுனசீ றடிநோ வநடந் துசெலே
லெனதா வியகத் துறைவா யெனுநீ
புனைதா ரவனே பொயுரைத் தனையால்
வினையே னொழியத் தனியே கினையே.

பொருள் : புனை தாரவனே - அணிந்த மாலையாய்!; வினையேன் ஒழியத் தனி ஏகினை - தீவினையேன் இங்கிருப்ப நீ தனியே ஏகினாய் (ஆதலின); நுன சீறடி நோவ நடந்து செலேல் - நின்னுடைய சிற்றடி நோவ நடந்து செல்லாதே; எனது ஆவி அகத்து உறைவாய் - என்னுடைய உயிரகத்தே வாழ்வாய்!; எனும் நீ பொய் உரைத்தனை - என்று கூறும் நீ பொய்யுரைத்தனை.

விளக்கம் : அடிநோவப் பொறாத நீ யான் இவ்வளவும் நோதலைப் பொறுப்பாயோ. பொறாயன்றே; எனவே, நீ கூறியது பொய்யே என்பது கருத்து. ( 106 )

1518. பருமுத் துறையும் பணைவெம் முலைநின்
றிருமுத் தகலந் திளையா தமையா
வெரிமொய்த் தனலு மிகல்வே லெரிபுண்
மருமத் தனலும் வகைசெய் தனையே.

பொருள் : பருமுத்து உறையும் பணை வெம்முலை - (ஐய, முன்னர் நீ இவை பரிய முத்துவடம் தங்குதற்கு இடமான பருத்தமுலை என்று பாராட்டினை அன்றோ) அம்முலைகளே இப்போதும் பரிய முத்துக்களை ஒத்த கண்ணீர்த் துளிகள் உறைதற் கிடமான வெப்பமுடையன ஆயின கண்டாய்; நின் திருமுத்து அகலம் திளையாது அமையா - இனி அவைதானும் அழகிய முத்தணிந்த நினது மார்பிடத்தில் முயங்கினால் உய்வனவல்லது முயங்காவிடின் உய்யா; எரிமொய்த்து அனலும் இகல் வேல் - இவ்வாற்றால் நீ தீ மொய்த்ததனால் காய்ந்ததொரு வேல்; எரிபுண் மருமத்து அனலும் வகை செய்தனை - தீப்பட்ட பழம் புண்ணையுடைய மார்பிலே புகுந்து சுடுவதனை ஒத்த ஒரு துன்பத்தினை உண்டாக்கிவிட்டனை.

விளக்கம் : பருமுத்து உறையும் பணைவெம்முலை என அவன் முன் கூறியதை அவள் இப்போது கொண்டு கூறுகிறாள். முத்து - முத்துவடம்: கண்ணீர், பணை - பருமை; வெம்மை - விருப்பம்; காமத்தீயால் வெதும்புதல். முன்னர் முயங்கிப் பிரிந்த பிரிவு புண்ணிற்கும், இப்போது முன்னின்று முயக்கங்கொடாத நிலை வேலிற்கும் உவமை. இத்துணையும் எதிர்பெய்து பரிதல் உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் (தொல். பொருளியல்- 9) என்னும் சூத்திர விதியால் முலையை இங்ஙனம் கூறினாள். ( 107 )

1519. புனமா மயிலே பொழிலே புனலே
வனமார் வழையே வரையே திரையே
யினமா மணிசூ ழெரிபூ ணவனைத்
துனயான் பெறுகோ தொழுதே னுரையீர்.

பொருள் : புன மாமயிலே - தினைப்புனத்தில் வாழும் மயிலே!; பொழிலே - காவே!; புனலே - நீர் நிலையே!; வனம் ஆர் வழையே - அழகு பொருந்திய சுரபுன்னையே!; வரையே - மலையே! திரையே - கடலே!; தொழுதேன் - யான் நும்மை வணங்கினேன்; இன மாமணி சூழ் எரி பூணவனை யான் துனப் பெறுகோ - பலவகை மணிகள் சூழ்ந்த ஒளிவிடும் பூணவனான என் கணவனை யான் சேரப் பெறுவேனோ? உரையீர் - (பெறுவேனெனில்) அவனிருக்குமிடத்தைக் கூறுவீராக.

விளக்கம் : மயில் ஆயிரங் கண்ணுடைத்துப் பொழில் நிழலுடைத்து புனல் தண்மையுடைத்து வழை நிழலுடைத்து வரை தன்மையுடைத்து திரை தண்மையுடைத்து ஆதலால் அருட்பண்புடையீர் தொழு தேன் உரையீர் என்றாள் என்க. துன - துன்ன. (108)

1520. கொடுவெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய்
நடுநா ளிரவின் னவைதான் மிகுமா
னெடுவெண் ணிலவின் னிமிர்தேர் பரியா
தடுமால் வழிநின் றறனே யருளாய்.

பொருள் : கொடு வெஞ்சிலை வாய்க் கணையிற் கொடிதாய் - வளைந்த கொடிய வில்லிலிருந்து வரும் அம்பினுங் கொடியதாய்; இரவின் நடுநாள் நவைதான் மிகும் - நள்ளிரவு செய்யும் வருத்தந்தான் மிகா நின்றது; நெடு வெண்ணிலவின் நிமிர்தேர் பரியாது அடும் -நெடிய வெள்ளிய நிலவினையுடைய திங்கள் இரங்காமல் வருத்தும்; அறனே வழிநின்று அருளாய் - அறக்கடவுளே! இத்துணைத் துன்பத்திற்கும் எனக்குத் துணையாக நின்று அருள்வாயாக.

விளக்கம் : நிலவின் நிமிர்தேர் என்றார், வட்டத்தால் தேருருள்போலிருத்தலின். இரவின் நவை கணையின் நவையினுங் கொடிதாய் மிகும் என்க. தேர் : ஆகுபெயர். தேர்உருள்; இது திங்கள் வட்டத்திற்கு உவம ஆகுபெயர். திங்கள் உருவங் குளிர்ந்திருந்தும் உள்ளத்தில் அருளின்றி அடும் என்றவாறு.  இனி இவ்வாறு அடுதல் அறனோ என்றும் இவ்வழி நின்று தலைவனே நீயும் அருள்கின்றிலை என்றும் கூறினள் எனினுமாம். ( 109 )

1521. கயலா லிவையென் றுகவிழ்ந் துகிடந்
தயலே னறியா மையுரைத் ததெலா
மியலா ததுவோ வினியேற் கினியீ
ருயலா வதுகண் மலர்கா ளுரையீர்.

பொருள் : கண் மலர்காள் - கண்மலர்களே!; இவை கயல் என்று - (அவன்) இக்கண்கள் கயலாயிருந்தன என்று நும்மைப் புகழும்போது; கவிழ்ந்து கிடந்து - (அதற்கு நீர்) அன்புற்றுக்கிடக்க; அயலேன் அறியாமை உரைத்ததெலாம் இயலாததுவோ - அயலேனாகிய நான் அறியாமல் நுமக்கு அவன் கூறியதெல்லாம் பிரிவையோ?; இனியேற்கு இனியீர் - இனியேனாகிய எனக்கு இனியராயிருந்தீர்!; உயலாவது உரையீர் - இனி உய்யலாம் வழியை உரைப்பீராக!

விளக்கம் : கிடந்து - கிடக்க : எச்சத்திரிபு; மெய்ம்மறக்கச் செய்து தன்னுடன் கூடியிராமையின், அயலேன் என்றாள். உரைத்ததனை அவன் செய்த தொழில் என்று கொள்க; பொன்னுரைத்தது என்றாற்போல. அது சொல்லிற்றெல்லாம் என்றாற் போலவும் நின்றது. இனியீர் இகழ்ச்சிக் குறிப்பு. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யென்று நும்மிடம் நான் இனியேனாக இருந்தேன் என்னுங்கருத்துடன், இனியேற்கு என்றாள். நும்மை அவன் புலால் நாறுகின்ற கய லெனப் புகழப் போக்கு உடன்பட்டீர், யான், கண்மலர்காள்! எனப் புகழாநின்றேன். உய்யும்வழி உரைப்பீர் என்னுங் கருத்துடன், கண்மலர்காள்! என்றாள். ( 110 )

1522. நெறிநீர் வளையு நிழனித் திலமும்
பொறிநீ ரபுனைந் தெழுதிப் புகழும்
வெறிதா ரவனெவ் வழியே கினனீ
ரறிவீ ருரையீ ரமர்தோ ளிணைகாள்.

பொருள் : அமர் தோளிணைகாள் - அவன் நினைவை அமர்ந்த தோளிணைகளே!; நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும் - கடற் சங்கவளையையும் ஒளியையுடைய முத்துக்களையும்; பொறிநீரபுனைந்து - பொறித்தாற்போலும் தன்மையவாகப் புனைந்து; எழுதி - தோளிற் கரும்பையும் முலைகளில் தொய்யிற்கொடி முதலியவற்றையும் வரைந்து; புகழும் வெறிதாரவன் எவ்வழியேகினன் - நும்மைப் புகழ்ந்துரைக்கும் மணங்கமழ் மாலையான் எவ்வழிச் சென்றனன்?; நீர் அறிவீர் உரையீர் - (முயக்கத்தை நெகிழ்ந்து போகவிட்ட) நீர் அவன் போன இடமும் அறிவீர்; நும்மை யின்னும் யான் புகழ்தற்கு அவ் வழியைக் கூறுவீராக.

விளக்கம் : என்னிடத்தினுங் காட்டில் நும்பாற் பேரன்புடையன் என்பாள் எழுதிப் புகழும் தாரவன் என்றும், அங்ஙனமாகலின் அவன் நுமக்குணர்த்தாமல் பிரியான் ஆதலின் நீர் அறிவீர் என்றும் கூறினள் என்க. ( 111 )

1523. இழுதார் சுடர்வே லிளையா னகலத்
துழுதீ ருடன்வெம் முலைகாள் வயிரத்
தொழுவாய் விடையைத் தொடர்கிற் றிலிரென்
றழுதா டடமா கவணங் கிழையே.

பொருள் : வெம் முலைகாள் - கொடிய கொங்கைகளே!; இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து உழுதீர் - நெய்பூசிய ஒளி வேலவன் மார்பிலே உழுத நீர்; உடன் வயிரத் தொழுவாய் விடையைத் தொடர்கிற்றிலிர் என்று - அவ் வுழவின் பயனை முற்றப்பெற்று விடுமளவும் போகாதபடி அவனை வயிரத் தொழுவாய்ப் பிணித்திலீர், (நுமக்கும் அஃது அரிதாயிற்று; இனியான் செய்வது என்) என்று; அணங்கு இழை தடமாக அழுதாள் - அழகிய அணியாள் கண்ணீர் ஒரு குளமாகும்படி அழுதாள்.

விளக்கம் : உழுதீர் விடையைத் தொடர்கிற்றிலீர் என்றும் ஒருபொருள் தோன்றிற்று. விடை, காளை : சீவகன்; உவம ஆகுபெயர். விடை - விடுதல் (என்று ஒரு பொருள்,) தொழு - மாட்டுக்கொட்டில். கண்ணீர் தடமாக என ஒருசொல் பெய்க. அணங்கிழை : அன்மொழி; கேமசரி. ஓரிடத்தும் பற்றின்றி யிருத்தலின் விடை; முறித்தற்காகாமையின் வயிரத்தொழு என்றாள். ( 112 )

1524. தகைவா டியதன் னிழல்கண் ணுகுநீர்
வகைவா டிவருந் தியழு வதுகண்
டகையே லமர்தோ ழியழே லவரோ
பகையா பவரென் றனள்பான் மொழியே.

பொருள் : பால்மொழி - இனிய மொழியாளாகிய கேமசரி; கண் உகுநீர் தகைவாடிய தன் நிழல் - தான் அழுத கண்ணீரிலே தோற்றிய தன் அழகு கெட்ட நிழல்; வகை வாடி வருந்தி அழுவது கண்டு - வகை வாடி வருந்தி அழுவதனைப் பார்த்து; அமர் தோழி அகையேல் அழேல் - எனக்கு அன்பமர்ந்த தோழியே! நீ வருந்தாதே! அழுவதுஞ் செய்யாதே!; அவர் பகையாபவரோ என்றனள் - அவர் இறுதியில் நமக்குப் பகை யாவரோ? என்று ஆற்றிவித்தனள்.

விளக்கம் : அவரோ : ஓ : எதிர்மறை. நிழல், பளிங்கிற்றோன்றிய நிழலென்றலுமாம். பான்மொழி : அன்மொழி; கேமசரி. தகை - அழகு, வகை - தான் வருந்துமாறு. அகைதல் - வருந்துதல். ( 113 )

1525. வெறிமா லைகள்வீழ்ந் துநிலம் புதையப்
பொறிமா லைபுனை நிழல்கா ணலளாய்
நெறிநா டியபோ யினணீ டினள்கண்
டெறிவால் வளைகொண் டுவரும் மினியே.

பொருள் : வெறிமாலைகள் வீழ்ந்து நிலம் புதைய - தன் முடியில் அணிந்த மணமுறும் மாலைகள் வீழ்ந்து கண்ணீரையுடைய நிலம் மறைதலின்; பொறி மாலைபுனை நிழல் காணலளாய் - ஊழை இயல்பாகவுடைய கேமசரி, அந் நிழலாகிய தோழியைக் காணதவளாய், எறி வால் வளை - ஒளிவீசும் வெள்வளையாள்; நெறி நாடிய போயினள் நீடினள் - அவன் போனவழியைத் தேடுதற்குப் போயினாள், நீட்டிக்கவுஞ் செய்தாள்; இனி கொண்டுவரும் - இனி அவனைக் கண்டு அழைத்து வருவாள்.

விளக்கம் : எறி வால் வளை என்பதற்கு அறுக்கப்படும் வெள்வளை என்றும் உரைக்கலாம். அவள் அவனைக் கண்டு வளை கொண்டுவருவாள் என்றும் எனவே அவனைத்தான் கொண்டு வரும் என்றாளாம் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். ( 114 )

1526. மடமா மயிலே குயிலே மழலை
நடைமா ணனமே நலமார் கிளியே
யுடனா டுமெனை யனையென் றுருகாத்
தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே.

பொருள் : தொடை யாழ் மழலை மொழி - இனிய நரம்பினையுடைய யாழ்போலும் மழலைமொழியான்; மடமா மயிலே - இளமை பொருந்திய மயிலே!; குயிலே - குயிலே!; மழலை நடை மாண் அனமே - இளமைபொருந்திய நடையினால் மேம்பட்ட அன்னமே!; நலம் ஆர் கிளியே - அழகு பொருந்திய கிளியே!; உடன் ஆடும் என் ஐயனை என்று - என்னுடன் விளையாடும் என் தலைவனை என்றுரைத்து, (அவ்வளவிலே); உருகாச் சோர்ந்தனள் - உருகி அவற்றிற்குக் கூறுங் காரியத்தை மறந்தாள்.

விளக்கம் : ஐயனை என்பதற்குத் தேடுமின் என்னும் வினை வருவிக்க என்பர் நச்சினார்க்கினியர். மயில் சாயலானும் குயில் இசையானும் அன்னம் நடையானும் கிளி சொல்லானும் தன்னோடு உறவுடையனவாதலால் ஐயனை உடனே சென்று தேடுமின் என்று கூறிச் சோர்ந்தாள் எனினுமாம். இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை மாறுபட்டது எனினும் மிகவும் இனிமையுடையதாம். முதலடியில் மழலை என்பது இளமையை யுணர்த்தியது. கடையடியில் உள்ள மழலை என்பது திருந்தாத என்னும் பொருளையுணர்த்திற்று. உருகா என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உருகி என்று பொருள்படும். தொடை -தொடுக்கப்பட்டது நரம்பு. ( 115 )

வேறு

1527. மல்லுறை யலங்கன் மார்பன்
பிரிவெனு மெரியுள் வீழ்ந்து
கல்லுறை நாகு வேய்த்தோட்
கதிர்மணி முறுவற் செவ்வாய்
வில்லுறை புருவ மாதர்
வெந்தனள் கிடப்ப மின்றோ
யில்லுறை தெய்வ நோக்கி
யிரங்கிநின் றுரைக்கு மன்றே.

பொருள் : கல்உறை நாகு வேய்த்தோள் - மலையிடத்தே நின்ற இளைய வேய்போலும் தோளையும்; கதிர்மணி முறுவல் செவ்வாய் - ஒளிபொருந்திய முத்தனைய பற்களையுடைய செவ்வாயையும்; வில்உறை புருவம் மாதர் - வில்லைப்போன்ற புருவத்தையும் உடைய கேமசரி; மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து - மற்றொழில் பொருந்திய, மாலையணிந்த சீவகனுடைய பிரிவாகிய தீயில் வீழ்ந்து; வெந்தனள் கிடப்ப - வெந்து கிடக்கும்போது; மின் தோய் இல் உறை தெய்வம் நோக்கி - ஒளிபொருந்திய அவ் வீட்டில் வாழும் தெய்வம் பார்த்து; இரங்கி நின்று உரைக்கும் - இரக்கத்துடன் நின்று கூறும்.

விளக்கம் : இதுமுதல் மூன்று செய்யுள் இல்லுறை தெய்வங் கூறிய இரக்க மொழிகள். மல் - ஒருவகைப் போர்த்தொழில். இஃது அத்தொழில் வன்மையைக் குறித்து நின்றது. நாகுவேய் - இளமையுடைய மூங்கில். கதிர் மணி என்றது ஈண்டு முத்தினை. வெந்தனள் : முற்றெச்சம். ( 116 )

1528. புண்ணவாம் புலவு வாட்கைப்
பொலன்கழற் புனைந்த பைந்தார்
கண்ணவாம் வனப்பி னானைக்
காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப்
படாமுலைப் பரவை யல்குற்
பெண்ணவா நிற்கு மென்றாற்
பிணையனாட் குய்த லுண்டோ.

பொருள் : புண் அவாம் புலவு வாள் கை - புண்ணை விரும்பும் புலால் கமழும் வாளேந்திய கையையும்; பொலன் கழல் - பொற்கழலையும்; புனைந்த பைந்தார் - தொடுத்த புதிய மாலையையும் உடைய; கண் அவாம் வனப்பினானை - கண் விரும்பும் அழகுடையானை; காமனே கண்ட போழ்தும் - காமனே பார்த்திட்டாலும் அக்காமனுக்கு; பண் அவாம் பவளச் செவ்வாய் - பண் விரும்பும் மொழியையுடைய பவளம் அனைய செவ்வாயையும்; படாமுலை - தளராத முலையையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும் உடைய; பெண் அவா நிற்கும் என்றால் - பெண்மையை அடைய விரும்பும் ஆசை உள்ளத்துலே நிற்கும் என்றால்; பிணை அனாட்கு உய்தல் உண்டோ - இவட்கும் பிழைத்தலுளதோ?

விளக்கம் : பெண்ணவாய் என்பதூஉம் பாடம். காமனே : ஏ : பிரிநிலை. அக்காமன் பெண்மைத்தன்மை எய்தி இவனை நுகர்தற்கு விரும்புவன்; அத்தகைய பேரழகினோனை எய்திய இவள் பிரிவினை எங்ஙனம் ஆற்றுவள் என்று இரங்கியபடியாம். ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய் என்பது கம்பராமாயணம்: (தாடகை - 24). ( 117 )

1529. கடத்திடைக் கவளந் தேனெய்
கனியைத்தோய்த் தினிய துற்றத்
தடக்கையாற் கொடுத்துப் புல்லுந்
தவழ்மதக் களிறு நீங்கின்
மடப்பிடிக் குய்த லுண்டோ
வாலடிக் குஞ்சி சூட்டுங்
கொடைக்கையான் பிரிந்த பின்றைக்
கோதையாட் குய்த லுண்டோ.

பொருள் : தேன் நெய் கனியைத் தோய்த்து இனிய கவளம் துற்ற - தேனாகிய நெய்யைக் கனியில் தோய்த்தலாலே இனியவாகிய கவளத்தைத் தின்னும்படி; தடக்கையால் கொடுத்துப் புல்லும் தவழ் மதக் களிறு நீங்கின் - பெரிய கையினால் ஊட்டித் தழுவும் மதம் பொருந்திய களிறு நீங்கினால்; கடத்திடை மடப்பிடிக்கு உய்தல் உண்டோ - காட்டிலே இளம்பிடிக்கு வாழ்வு உண்டோ?; (அதுபோல) வாலடிக் குஞ்சி சூட்டும் கொடைக் கையான் பிரிந்த பின்றை - இவளுடைய தூய அடியிலே தன் முடியை வைத்து ஊடல் தீர்த்துக் கூடும் வண்கையான் நீங்கின பிறகு; கோதையாட்கு உய்தல் உண்டோ - கோதையை உடைய இவளுக்கு வாழும் இயல்பு உண்டோ?

விளக்கம் : கடம் - காடு. தேனெய் - பண்புத் தொகை. இனிய, பல வறிசொல். துற்றல் - உண்ணல். மதந்தவழ் களிறு என மாறுக. குஞ்சி - குடுமி, தலைமயிர். ஊடலை நீக்குவதற்குக் கணவன் மனைவியின் காலில் வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது இலக்கிய மரபு. ( 118 )

1530. முயங்கினான் சொன்ன வண்டாய்
முகிழ்முலைத் தெய்வஞ் சேர
வுயங்குவா ளுணர்ந்து கேள்வற்
கூனமும் பிரிவு மஞ்சி
யியங்குவா னின்ற வாவி
தாங்கின ளென்ப போலும்
வயங்குபொன் னீன்ற நீல
மாமணி முலையி னாளே.

பொருள் : முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ்முலைத் தெய்வம் சேர - (தன்னைத் தழுவிய) கணவன் கூறிய வண்டின் வடிவாய் முகிழ்த்த முலையை உடைய இல்லுறை தெய்வம் அவள் எதிரில் வந்த அளவிலே; உயங்குவாள் - வருந்திக்கொண்டிருந்த; வயங்கு பொன் ஈன்ற நீல மாமணி முலையினாள் - விளங்கு பொன் அனைய தேமலையுடைய, நீலநிற மணிக் கண்களையுடைய முலையினாள்; உணர்ந்து - (வண்டை நோக்கித் தன் கணவன் கூறியதை) உணர்ந்து; கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி - தன் கணவனுக்குப் பழியும் இறந்துபடுதலும் நேரும் என அஞ்சி; இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் - போதற்கு ஒருப்பட்டு நின்ற உயிரைப் போகாமல் தாங்கினாள்.

விளக்கம் : என்ப, போலும் : அசைகள். அவன், துணைவண்டு துஞ்சில் நீயும் துஞ்சுவை என்றதனை நினைத்து ஆற்றினாள். அவள் நிலைகண்டு இரங்கிய தெய்வம், நின் இறந்துபாடு நின் கேள்வதற்கு ஊனமும் பிரிவுமாமென்று கூறுவதுபோல வண்டாய் வந்து தன் தெய்வத்தன்மையால் அவன் கூறியதை நினைப்பித்தது. ( 119 )

1531. வங்சவாய்க் காமன் சொன்ன
மணிநிற வண்டு காணீர்
துஞ்சுவேன் றுயரந் தீரத்
தொழுதகு தெய்வ மாவீர்
மஞ்சுதோய் செம்பொன் மாடத்
தென்மனை தன்னு ளென்றாள்
பஞ்சிமேன் மிதிக்கும் போதும்
பனிக்குஞ்சீ றடியி னாளே.

பொருள் : பஞ்சிமேல் மிதிக்கும்போதும் பனிக்கும் சீறடியினாள் - பஞ்சியின்மேல் மிதித்தாலும் வருந்துகின்ற சிற்றடியாள்; வஞ்சவாய்க் காமன் சொன்ன மணிநிற வண்டுகாள் - வஞ்சிக்கும் வாயையுடைய காமன் கூறிய நீலநிற வண்டுகளே! -நீர் - நீவிர்; துஞ்சுவேன் துயரம் தீர - இறந்துபடுவேனது துயரம். நீங்கும்படி; மஞ்சு தோய் செம் பொன் மாடத்து - முகில் படியும் பொன்மாடத்திலே; என் மனை தன்னுள்; - என் மனையிலே; தொழுதகு தெய்வம் ஆவீர் - தொழத்தகுந்த தெய்வமாவீர்கள்.

விளக்கம் : துணை வண்டையும் கருத்துட் கொண்டு, வண்டுகாள் என்றாள். நும்மால் இறந்துபாடு நீங்கினேன். இனி, இரங்காத நும்மைக் கண்டு, இரக்கமுந் தீரும்படி இல்லுறை தெய்வமாய் இருப்பீர் என்றாள்; இருக்குமே யிரங்கலின்றாய் (சீவக. 1502) என்றானாதலின், இது தெய்வத்தன்மையாற் கூறுவித்தது தெய்வம். ( 120 )

1532. நொந்தெடுக் கலாது வீங்கும்
வனமுலை நுசுப்பிற் றேய்ந்தோர்
பந்தெடுக் கலாத நங்கை
பால்கடை வெண்ணெய்ப் பாவை
வெந்துடன் வெயிலுற் றாங்கு
மெலிந்துக விளங்கும் வெள்ளி
வந்துவா னிட்ட சுட்டி
வனப்பொடு முளைத்த தன்றே.

பொருள் : வீங்கும் வனமுலை எடுக்கலாது நொந்து தேய்ந்த நுசுப்பின் - பருக்கும் தன் அழகிய முலையைச் சுமக்கமுடியாமல் வருந்தித் தேய்ந்த இடையினாலே; ஓர் பந்து எடுக்கலாத நங்கை - ஒரு பந்தையும் ஏந்தமுடியாத கேமசரி; பால் கடை வெண்ணெய்ப் பாவை வெயில் உற்று உடன் வெந்தாங்கு - பால் கடைந்தெடுத்த வெண்ணெயால் ஆன பாவை வெயிலில் உற்று உடனே வெந்தாற்போல; மெலிந்து உக - மெலிந்து கெடாநிற்க; வான் இட்ட சுட்டி வனப்பொடு - வானுக்கு இட்ட சுட்டி போன்ற அழகுடன்; வெள்ளி வந்து முளைத்தது - வெள்ளி வந்து தோன்றியது.

விளக்கம் : இனி, நுசுப்புப்போல் தேய்ந்து என்றுமாம். தேய்ந்த நுசுப்பாற் பந்தெடுக்கலாத நங்கையென அவளியல்பு கூறினார். தேய்ந்த ஓர் : தேய்ந்தோர் : தொகுத்தல் விகாரம். இனி தேய்ந்து எனப் பிரித்து, வருந்தும் என ஒரு சொல் வருவித்து முடிப்பர் நச்சினார்க்கினியர்,  இறந்துபாடு நீங்கி வருந்தினாள் என்க. ( 121 )

1533. எரிநுதி யுற்ற மாவி னிளந்தளிர் போன்று மாழ்கிப்
புரிநரம் பிசையிற் றள்ளிப் புன்கணுற் றழுத லாலே
யரிகுரற் கொண்ட பூச லகத்தவர்க் கிசைப்ப வீண்டித்
திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்.

பொருள் : எரி நுதி உற்ற மாவின் இளந்தளிர் போன்று மாழ்கி - எரியின் நுனியிற் பொருந்திய மாவின் இளந்தளிர்போல மயங்கி; புரிநரம்பு இசையின் தள்ளிப் புன்கண் உற்று அழுதலாலே - தன் மிடற்றை முறுக்கிய நரம்போசையினின்றும் நீக்கி வருத்தம் உற்று அழுததனால்; அரிகுரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப - அரித்தெழும் குரல் கொண்ட ஓசை இல்லிலுள்ளார்க்கு அறிவிக்க; ஈண்டி - அவர்கள் திரண்டு வந்தபோது; திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள் - அழகு மலர்ந்த மாலையையுடைய கேமசரியின் நற்றாயான நிப்புதி ஆங்கு வந்து கூறினாள்.

விளக்கம் : யாழ் நரம்பிசை போன்று அவட்கியல்பாக அமைந்துள்ள குரல் துன்பத்தால் மாறி அரிகுரல் ஆயிற்றென்பது கருத்து. அரிகுரல் - அரித்தெழும் குரல். அரிக்கூ டின்னியம் என்றார் மதுரைக் காஞ்சியினும், (612)  ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. ( 122 )

1534. விழுத்திணைப் பிறந்து வெய்ய
வேட்கைவே ரரிந்து மெய்ந்நின்
றிழுக்கமொன் றானு மின்றி
யெய்திய தவத்தின் வந்து
வழுக்குத லின்றி விண்ணோன்
வச்சிர நுதியி னிட்ட
வெழுத்தனான் றந்த வின்ப
மின்னுநீ பெறுதி யென்றாள்.

பொருள் : விழுத்திணைப் பிறந்து - உயர்ந்த குடியிலே பிறந்து; வெய்ய வேட்கை வேர் அரிந்து - கொடிய பிறப்பின் வேரை அறுத்து; மெய்ந் நின்று - உண்மை நெறியிலே நின்று; இழுக்கம் ஒன்றானும் இன்றி - தவறு எவ்வாற்றானும் இல்லாமல்; எய்திய தவத்தின் வந்து - நமக்குக் கிடைத்த தவப்பயனாக வந்து; விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட எழுத்தனான் - அயன் வச்சிரத்தின் நுனியாலே இட்ட எழுத்தைப் போன்றவன்; தந்த இன்பம் - நினக் களித்த இன்பத்தை; வழுக்குதல் இன்றி நீ இன்னும் பெறுதி என்றாள் - தவறுதல் இல்லாமல் நீ மேலும் எய்துவை என்றாள்.

விளக்கம் : விழுத்திணை - உயர்ந்த குடி. வேட்கை, ஈண்டு ஆகுபெயராற் பிறப்பினை உணர்த்தி நின்றது. வச்சிரத்தின் நுனியிற் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாமை பற்றி வச்சிர நுதியின் இட்ட எழுத்தன்னான் என்றாள் எனினுமாம். முன்னும் தவப்பயனாக வே இவனை எய்தினை; அத் தவப்பயன் கெடா வியல்பிற்றாகலின் மீண்டும் நீ அவனை எய்துல் ஒருதலை என்பது கருத்து. (123 )

1535. பிறங்கின கெடுங்கள் யாவும்
புணர்ந்தவர் பிரிவர் பேசி
னிறங்கின வீழு மேலா
யோங்கிய வெண்ணில் யோனிப்
பிறந்தவர் சாவர் செத்தார்
பிறப்பவே யென்ன நோக்கிக்
கறங்கிசை வண்டு பாடுங்
கோதைநீ கவல லென்றாள்.

பொருள் : கறங்கு இசை வண்டுபாடும் கோதை - ஒலிக்கும் இசையுடன் வண்டுகள் முரலும் மலர் மாலையாய்!; பிறங்கினகள் யாவும் கெடும் - மிக்க வனப்புக்கள் யாவும் ஒருகாற் கெடும்; புணர்ந்தவர் பிரிவர் - கூடியவர் பிரிவர்; பேசின் - ஆராய்ந்தால்; மேலாய் ஓங்கிய இறங்கிய வீழும் - மேலாக வளர்ந்தன தாழ்ந்து வீழும்; எண்ணில் யோனிப் பிறந்தவர் சாவர் - கணக்கற்ற பிறவிகளிற் பிறந்தவர் இறப்பர்; செத்தார் பிறப்பவே என்ன நோக்கி - இறந்தவர் பிறப்பர் என்று இன்பமுந் துன்பமும் மாறிமாறி வருமென ஆராய்ந்து; நீ கவலல் என்றாள் - நீ கவலைப்படுவதை விடுக என்றுரைத்தாள்.

விளக்கம் : புணர்ந்தவர் பிரிவர் என்பதைப் பிரிந்தவர் புணர்வர் என மாற்றி இறுதியில் தந்து, அங்ஙனங் கெட்டாலும், பிரிந்தவர்கள் எல்லோரும் புணர்வரே யென்று பார்த்து நீ கவலாதே என்று முடிப்பர் நச்சினார்க்கினியர். மேலும் நீ இவ்வுலகியற்கையினை உணர்ந்து ஆற்றியிருத்தலும் வேண்டும் என்றிதனால் ஆற்றுவிக்கின்றனள் என்க. பிறங்கினகள் யாவும் என இயைக்க. கள் : விகுதிமேல் விகுதி. ( 124 )

1536. எரிதலைக் கொண்ட காமத்
தின்பநீர்ப் புள்ளி யற்றாற்
பிரிவின்கட் பிறந்த துன்பம்
பெருங்கட லனைய தொன்றா
லுருகிநைந் துடம்பு நீங்கி
னிம்மயோ டும்மை யின்றி
யிருதலைப் பயனு மெய்தா
ரென்றுயாங் கேட்டு மன்றே.

பொருள் : எரிதலைக்கொண்ட காமத்து இன்பம் நீர்ப்புள்ளி அற்று - தீயைத் தன்னிடத்தே கொண்ட காமத்திலே புணர்ச்சி யாற்பெறும் இன்பம் நீர்த் துளியை ஒத்திருக்கும்; பிரிவின்கண் பிறந்த துன்பம் பெருங்கடல் அனையது ஒன்று - பிரிவாற் பிறந்த துன்பம் பெரிய கடலை ஒப்பதொன்றாகும்; உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி இருதலைப் பயனும் எய்தார் - (ஆதலின்) இப் பிரிவாலே உருகி வருந்தி உடம்பு நீங்குமாயின் இம்மையினும் மறுமையினும் செய்து கொள்ளும் நன்மையும் இல்லாமல் இரண்டிடத்தும் பெறும் பயனையும் பெறார்; என்று யாம் கேட்டும் அன்றே - என்று உணர்ந்தார் கூறக்கேட்டிருப்போம் அல்லவோ? (ஆதலின் பிரிவால் வருந்தாதே.)

விளக்கம் : நீர்ப்புள்ளி இன்பத்தின் சிறுமைக்கும் பெருங்கடல் துன்பத்தின் பெருமைக்கும் உவமையாகக் கூறப்பட்டன.  உருகு நைதல் காரணமாக இறந்துபடின் என்றவாறு. இருதலை - அவ்விம்மை மறுமையாகிய ஈரிடத்தும். கேட்டும் : தன்மைப் பன்மை வினைமுற்று. ஆதலின் வருந்தாதேகொள் என்பது குறிப்பு. ( 125 )

1537. மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்ப
மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு
மின்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லா
யன்னதால் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள்.

பொருள் : இன் இசை இரங்கும் நல்யாழ் இளியினும் இனிய சொல்லாய் - இனிய இசையொலிக்கு நல்ல யாழினது இளியென்னும் நரம்பினும் இனிய மொழியினாய்!; மானிடர் இளமை மன்னும் நீர் மொக்குள் ஒக்கும் - மக்களின் இளமை மிகவும் நீர்க்குமிழியை ஒக்கும்; இன்பம் மின்னின் ஒத்து இறக்கும் - அவர் இன்பமோ மின்னைப்போன்று தோன்றி நீங்கும்; செல்வம் வெயிலுறு பனியின் நீங்கும் - அவர்களுடைய செல்வமும் வெயிலைக் கண்ட பனிபோல் அழியும்.; வினையின் ஆக்கம் அன்னது - (ஆதலின்) தீவினையின் ஆக்கம் அவ்வாறு வலியுடைத்து; அழுங்குவது என்னை என்றாள் - இதற்கு வருந்திப் பெறுவது என்னை யென்று ஆற்றுவித்தாள்.

விளக்கம் : மன்னும் - மிகவும் என்பர் நச்சினார்க்கினியர். நீர் மன்னும் மொக்குள் என மாறி நீரிடத்தே நிலைபெற்ற மொக்குள் எனினுமாம். அன்னது - அத்தகைய வன்மையுடையது. நிப்புதி தன் முதுமைக்கேற்றன கூறி ஆற்றுவித்தல் அறிந்தின்புறுக. இளி - யாழிடத்து ஒரு நரம்பு. ( 126 )

1538. பஞ்சிறை கொண்ட பைம்பொற்
கலைபுறஞ் சூழ்ந்து வைத்து
நஞ்சிறை கொண்ட நாகப்
படம்பழித் தகன்ற வல்குல்
வெஞ்சிறைப் பள்ளி யாக
விழுமுலைத் தடத்து வைகத்
தஞ்சிறைப் படுக்க லாதார்
தம்பரி வொழிக வென்றாள்.

பொருள் : பஞ்சு இறைகொண்ட பைம்பொன்கலை புறம் சூழ்ந்து வைத்து - துகில் தங்கிய புதிய பொன்மேகலையைப் புறத்தே சூழவைத்து; நஞ்சு இறைகொண்ட நாகப் படம் பழித்து அகன்ற அல்குல் - நஞ்சு தங்கிய அரவின் படத்தைப் பழித்துப் பரந்த அல்குலை; வெஞ்சிறைப் பள்ளியாக - வெவ்விய சிறையிடமாகக் கொண்டு; விழுமுலைத் தடத்துவைக - சிறந்த முலைத்தடத்திலே தங்குமாறு; தம் சிறைப்படுக்கலாதார் - தம் சிறையிலே கணவரை அகப்படுக்க அறியாத மகளிர்; தம் பரிவு ஒழிக என்றாள் - பிரிவின்கண் தாம் வருந்துவதை விடுக என்றாள்.

விளக்கம் : இது கேமசரி தன்னிலே கூறி ஆற்றியது. தாய்க் கூற்றென்பாரு முளர். பஞ்சு : ஆகுபெயர்; ஆடை என்க. கலை - மேகலை என்னுமோரணி கலன். இறைகொண்ட - தங்கிய. இதனைக் கேமசரி கூற்றாகக் கொள்ளலே சிறப்பு. ( 127 )

1539. வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்
பாசத்தா லாக்கப் பட்ட வாவிய ளல்ல தெல்லாம்
பேசினார் பிணையன் மாலை பிசைந்திடப் பட்ட தொத்தா
டூசுலாம் பரவை யல்குற் றூமணிப் பாவை யன்னாள்.

பொருள் : தூசு உலாம் பரவை அல்குல் தூமணிப் பாவை அன்னாள் - ஆடை தங்கிய பரவிய அல்குலையுடைய தூ மணிப் பாவையைப் போன்றவள்; வாசம் மிக்குடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்றப் பாசத்தால் - மணம் மிகவுடைய மாலையான் வண்டுக்குக் கூறிய மொழியாகிய கயிற்றாலே; ஆக்கப்பட்ட ஆவியள் - கட்டுண்ட உயிரொன்றையுமே உடையாள்; அல்லது எல்லாம் பேசின ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள் - அவ்வுயிரொழிய உடம்பு முழுவதும் நாம் சொல்லிற்பிசைந்து போகட்டதொரு கட்டு தலையுடைய மாலையை ஓத்தாள்.

விளக்கம் : வண்டினுக்குரைத்த மாற்றம் என்றது, துணை வண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்றதனை (91). பாசம் - கயிறு. பாசம் என்றதற்கேற்ப, ஆக்கப்பட்ட ஆவி என்றதற்குக் கட்டப்பட்ட உயிர் என்னலே சிறப்பு. தூ - தூய. ( 128 )

1540. பையர விழுங்கப் பட்ட
பசுங்கதிர் மதிய மொத்து
மெய்யெரி துயரின் மூழ்க
விதிர்விதிர்த் துருகி நையு
மையிருங் குழலி னாடன்
மைந்தனை வலையிற் சூழ்ந்து
கையரிக் கொண்டுங் காணாள்
காளையுங் காலிற் சென்றான்.

பொருள் : பையர விழுங்கப்பட்ட பசுங்கதிர் மதியம் ஒத்து - படத்தையுடைய பாம்பினால் விழுங்கப்பட்ட பைங்கதிரையுடைய திங்களைப்போன்று பசந்து; மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும் - உடம்பு எரியுந் துயரத்திலே மூழ்கும்படி நடுநடுங்கி நெஞ்சுருகி வருந்துகின்ற; மை இருங் குழலினாள் தன் மைந்தனை - கரிய நீண்ட குழலாள் தன் கணவனை; வலையின் சூழ்ந்து கையரிக் கொண்டும் காணாள் - வலைபோலே சூழ்ந்துகொண்டு அரித்தல் கொண்டு தேடியும் கண்டிலள்; காளையும் காலின் சென்றான் - அவனும் காலாலே நடந்து போனான்.

விளக்கம் : குழலினாள் : கேமசரி. தன் மைந்தனை என்றது தன் கணவனை என்றவாறு. நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம் என மணிமேகலையில் (21 : 29) கணவனை மகன் எனலுங் காண்க. அரா : அர என ஆனத விகாரம். காலின் - காற்றுப்போ லென்றுமாம். ( 129 )

1541. காழகச் சேற்றுட் டீம்பால்
கதிர்மணிக் குடத்தி னேந்தி
வீழ்தரச் சொரிவ தேபோல்
விளங்கொளித் திங்கட் புத்தேள்
சூழிருட் டொழுதி மூழ்கத்
தீங்கதிர் சொரிந்து நல்லார்
மாழைகொண் முகத்திற் றோன்றி
வளைகடன் முளைத்த தன்றே.

பொருள் : காழகச் சேற்றுள் வீழ்தர - கருஞ்சேற்றிலே விழும்படி; கதிர்மணிக் குடத்தின் தீ பால் ஏந்திச் சொரிவதே போல் - ஒளிவிடும் மணிக்குடத்திலே இனிய பாலை ஏந்திச் சொரிவதைப்போல; விளங்கும் ஒளித்திங்கள் புத்தேள் - விளங்கும் ஒளியுறும் திங்களாகிய தெய்வம்; தீ கதிர் சூழ் இருள் தொழுதி மூழ்கச் சொரிந்து - இனிய கதிரைச் சூழ்ந்த இருள் திரளிலே முழுகும்படி பெய்து; நல்லார் மாழைகொள் முகத்தின் தோன்றி - மகளிருடைய பசத்தல்கொண்ட முகம்போலே தோன்றி; வளைகடல் முளைத்தது - வளைந்த கடலிலே தோன்றியது.

விளக்கம் : காழகம் - கருமை. கருஞ்சேறு : இருளிற்கும் பால் நிலவிற்கும் உவமை. ஒளி வீழ்தலேயன்றி இருள் அகலாமையின் சேற்றிற் பெய்த பால் என உவமை கூறினர். புத்தேள் - கடவுள். தொழுதி - திரள். வளைகடல் : வினைத்தொகை. மாழை - பொன். விடியற் காலத்தெழுந்த நிலவு இருளைக்கெடுத்தல் ஆகாமையின் இங்ஙனம் கூறினார். ( 130 )

1542. ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு
வீறுயர் மதியந் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறிலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த வாங்க
ணாறுசெ லொருவற் கண்ண லணிகல மருள லுற்றான்.

பொருள் : ஏறனாற்கு இருளை நீங்கக் கைவிளக்கேந்தி யாங்கு - சீவகனுக்கு இருளை ஓட்ட ஏந்திய கை விளக்குப்போல; வீறு உயர் மதியம் தோன்ற - சிறப்புற உயர்ந்த திங்கள் முளைத்தலாலே; விரைவொடு போய பின்றை - சீவகன் சிறிது தூரம் விரைந்து நீங்கிய பிறகு; மாறு இலாப் பரிதிவட்டம் வருதிரை முளைத்த ஆங்கண் - மாறுபடாத ஞாயிறு, மோதும் அலையுறு கடலிலே முளைத்த அளவிலே; ஆறு செல் ஒருவற்கு - அவ்வழியே செல்லும் ஒருவனுக்கு; அண்ணல் அணிகலன் அருளல் உற்றான் - சீவகன் தன் அணிகலன்களைக் கொடுக்கவிரும்பினான்.

விளக்கம் : ஏறனான் : ஆண் சிங்கத்தை ஒத்த சீவகன். சீவகன் இருளில் செல்லக் கண்டிரங்கிய விண்ணோர் ஒரு கை விளக்கேந்தினாற்போன்றென்க. வீறு : வேறொன்றற் கில்லாத அழகு. திங்கள்போலத் தேய்தலும் வளர்தலும் மறைதலும் இல்லாமையின் மாறிலாப் பரிதிவட்டம் என்றார். பரிதி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். வருதிரை : கடல். வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஏறு + அனான் = ஏறனான். அன்னான் என்பது அனான் எனத் தொகுத்தல் விகாரம் ஆயிற்று. இல்லா என்பது இலா என நின்றதும் அது. ( 131 )

வேறு

1543. எவ்வூரீர் ரெப்பதிக்குப் போந்தீர்நும்
மனைவியர்தா மெனைவர் மக்க
ளொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற்
றெனைவர்நீ ருரைமி னென்றாற்
கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென்
மனைவியரு நால்வர் மக்க
ளொவ்வாதார் தாமில்லை யொப்பா
னொருவனென வுரைத்தான் சான்றோன்.

பொருள் : எவ்வூரீர் - நீர் எவ்வூரிலே யிருப்பீர்?; எப்பதிக்குப் போந்தீர் - எவ்வூர்க்கு வந்தீர்?; நும் மனைவியர் தாம் எனைவர் - நும் மனைவியர் எத்துணைவர்?; மக்கள் ஒவ்வாதார் தாம் எனைவர் - மக்களில் ஒழுக்கமில்லாதார் எத்துணைவர்?; மற்று ஒப்பார் எனைவர் - ஒழுக்கமுடையார் எத்துணைவர்?; உரைமின் என்றாற்கு - கூறுமின் என வினவினாற்கு; இவ்வூரேன் - இப்போது இவ்வுடம்பினிடத்தேன்; இப்பதிக்குப் போந்தேன் - இவ்வுடம்பெடுத்தற்குப் போந்தேன்; என் மனைவியரும் நால்வர் - எனக்கு மனைவியர் நான்கு பேர்; மக்கள் ஒவ்வாதார் தாம் இல்லை - மக்களில் ஒழுக்கமிலாதார் இல்லை; ஒப்பான் ஒருவன் - ஒழுக்கமுடையான் ஒருவன்உளன்; என சான்றோன் உரைத்தான் - என்று உணர்வுடையோன் கூறினான்.

விளக்கம் : எனைவர் - எத்தனைபேர். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலே ஒழுக்கமாதலின், ஒழுக்கமுடைமையை ஒப்பு என்று அஃதில்லாமையை ஒவ்வாமை என்றும் கூறினார். இவ்வூரேன் இப்பதிக்குப் போந்தேன் என்புழி ஊர் பதி என்பன உடல் என்னும் பொருளில் கூறப்பட்டன. உணர்வு என்றது தத்துவ உணர்ச்சியினை. இஃது அணிகலன்களைப் பெறுவோன் பெறுமுன் வினவியது.
( 132 )

1544. ஒப்பா னொருமகனே நால்வ
ரொருவயிற்றுட் பிறந்தா னென்ன
நக்கான் பெருஞ்சான்றோ னம்பிபோல்
யாருலகி லினியா ரென்ன
மிக்கா னுரைப்பதுவு மிக்கதே
போலுமால் வினவிக் கேட்பேன்
றக்காய் குறித்த துரையென்றான்
றானுரைப்பக் கேட்கின் றானே.

பொருள் : ஒப்பான் ஒரு மகனே - ஒழுக்கமுடைய அவ்வொரு மகனே; நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன - நான்கு தாய்மாரது ஒரு வயிற்றிலே பிறந்தான் என்ற கூறினானாக; நம்பிபோல் உலகில் இனியார் யார் என்னப் பெருஞ்சான்றோன் நக்கான் - இந்த நம்பியைப்போல் உலகினில் இனியார் யாவரென்று கூறி அறிவில்லாதவன் நகைத்தான்; மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவிக் கேட்பேன் - (நகைத்தவன் பிறகு) அறிவு மிக்கவன் கூறிய மொழியும் மிக்கது போலே யிராநின்றது, யான் வினவிக்கேட்பேன் (என்று கருதி); தக்காய் குறித்தது உரை என்றான் - நல்லோனே! நீ கூறியதன் கருத்தை விளக்குக என்று வினவினான்; உரைப்பத் தான் கேட்கின்றான் - அவனுரைப்பத் தான் கேளாநின்றான்.

விளக்கம் : பிறந்தான் - என்ன பிறந்தான் என்று கூறினானாகக் கருதி நக்கான் என்க. பெருஞ்சான்றோன் என்றது குறிப்புமொழி - அறிவிலாதான் என்றவாறு. வினவிக் கேட்பேன் : ஒரு சொல். குறித்தது : நின் கூற்றாற் குறிக்கப்பட்ட பொருள். ( 133 )

1545. நற்றானஞ் சீல நடுங்காத்
தவமறிவர் சிறப்பிந் நான்கு
மற்றாங்குச் சொன்ன மனைவியரிந்
நால்வரவர் வயிற்றுட் டோன்றி
யுற்றா னொருமகனே மேற்கதிக்குக்
கொண்டுபோ முரவோன் றன்னைப்
பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார்
பிறர்மக்கள் பிறரே கண்டீர்.

பொருள் : நல் தானம் சீலம் நடுங்காத் தவம் அறிவர் சிறப்பு இந்நான்கும் - நல்ல தானமும் ஒழுக்கமும் அசைவில்லாத தவமும் இறைவர் வழிபாடும் ஆகிய இந்த நான்கும்; ஆங்குச் சொன்ன மனைவியர் - முன் கூறிய மனைவியர்; இந்நால்வரவர் வயிற்றுள் தோன்றி - இந்நால்வர் வயிற்றினும் பிறந்து; உற்றான் ஒரு மகனே மேற்கதிக்குக் கொண்டு போம் உரவோன் - பயன் தருவானாகிய நல்வினை யென்கின்ற அவ்வொரு மகனே உயர்கதிக்குக் கொண்டு போவானாகிய உரவோன்; தன்னைப் பெற்றார் மகப்பெற்றார்- அவனைப் பெற்றவரே மகவைப்பெற்றவராவார்; அல்லாதார் பிறர் - மற்றோர் மகப்பெறார் ஆவர்; மக்கள் பிறரே கண்டீர் - பெற்ற மக்களும் அவர் மக்களல்லர் கண்டீர்.

விளக்கம் : நால்வரவர் என்புழி அவர் என்பது வாளா பகுதிப் பொருளாய் நின்றது. மேற் கதிக்குக் கொண்டுபோம் உரவோம் என்றமையால் அது நல்வினை என்பது பெற்றாம். உரவோன் - அறிவுடையோன்; ஆற்றலுடையோனுமாம். அல்லாதார் - அவ்வுரவோனைப் பெற மாட்டாதார். பிறர் : மகப்பெறாதார். மக்களும் பிறரே எனற்பால் உம்மை தொக்கது. ( 134 )

1546. படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து
கண்டவர்மெய் பனிப்ப நோற்றிட்
டுடனாக வைம்பொறியும் வென்றார்க்
குவந்தீத றான மாகுந்
திடனாகத் தீந்தேனுந் தெண்மட்டு
முயிர்க்குழா மீண்டி நிற்றற்
கிடனாகு மூனுமிவை துறத்தலே
சீலமென் றுரைத்தார் மிக்கோர்.
 
பொருள் : படநாகம் தோல் உரித்தாற்போல் துறந்து - படத்தையுடைய நாகம் தோல் உரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து; கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு - பார்த்தோர் உடல் நடுங்கும்படி நோற்று; உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு - தம் வயத்தனவாக ஐம்பொறிகளையும் வென்றவர்கட்கு; உவந்து ஈதல் தானமாகும் - விரும்பிக் கொடுத்தல் தானம் ஆகும்; தீம் தேனும் தெள் மட்டும் உயிர்க்குழாம் ஈண்டி நிற்றற்கு இடன் ஆகும் ஊனும் இவை - இனிய தேனும் தெளிந்த கள்ளும் உயிர்த்திரள் கூடி நிற்பதற்கு இடமாகிய ஊனும் ஆகிய இவற்றை; திடன் ஆக துறத்தலே சீலம் என்று மிக்கோர் உரைத்தார் - உறுதியுற நீக்குதலே ஒழுக்கம் என்று பெரியோர் கூறினர்.

விளக்கம் : நாகம் தோலுரிக்கும்போது தன் அகத்துள்ள நஞ்சினையும் உமிழ்ந்துவிடும் என்பது பற்றி நச்சினார்க்கினியர், படநாகந்தோலுரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து, என நுண்ணிதின் உரை விரித்தனர். வாளரவு தோலும் விடமு நீத்தென்ன (12 : 98) என்றார் சூளாமணியாரும். ( 135 )

1547. ஓவா திரண்டுவவு மட்டமியும்
பட்டினிவிட் டொழுக்கங் காத்த
றாவாத் தவமென்றார் தண்மதிபோன்
முக்குடைக்கீழ்த் தாதை பாதம்
பூவே புகைசாந்தஞ் சுண்ணம்
விளக்கிவற்றாற் புனைத னாளு
மேவா விவைபிறவும் பூசனையென்
றீண்டியநூல் கரைகண் டாரே.

பொருள் :  ஈண்டிய நூல் கரை கண்டார் - அறம் பொருந்திய நூல்களைக் கற்றுத் துறைபோய துறவோர்; ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத்தவம் என்றார் - இரண்டு உவாவிலும் அட்டமியிலும் பட்டினியிருந்து ஒழிவின்றி ஒழுக்கங் காத்தலைக் கெடாத தவம் என்றனர்; தண்மதிபோல் முக்குடைக்கீழ்த் தாதை பாதம் - குளிர்ந்த மதியைப்போன்ற முக்குடையின்கீழ் எழுந்தருளிய இறைவன் அடியை; பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றாற் புனைதல் - பூவும் நறுமணப் புகையும் சந்தனமும் சுண்ணப்பொடியும் விளக்கும் என்ற இவற்றாற் புனைதலையும்; இவை பிறவும் பூசனையென்று ஏவா - இவைபோன்றவற்றையும் பூசனை எனக் கூறினர்.

விளக்கம் : இரண்டுவவு - அமாவாசையும், பூரணியும். அட்டமி - எட்டா நாள். உவவு - பதினான்கா நாள் என்பாருமுளர். உவா : குறியதன்கீழ் ஆகாரம் குறுகி உகரமேற்று உவவு என்றாயிற்று. கண்டார் பூசனை என்று ஏவா, தவம் என்றார் என இயைக்க. ( 136 )

1548. இந்நால்வர் துணைவியராக் காதன்
மகனிவனா வுடையார் போகிப்
பொன்னார மார்பிற் புரந்தரராய்ப்
பூமி முழுது மாண்டு
மன்னாகி முக்குடைக்கீழ் வாமன்
சிறப்பியற்றி வரம்பி லின்பம்
பின்னா விளைவித்துப் பிறவா
வுலகெய்தல் பேச லாமே.

பொருள் : இந்நால்வர் துணைவியர் ஆ - இந்த நான்கு பேரும் மனைவியராக; இவன் காதல் மகன் ஆ - இவனே அன்புறும் மகனாக; உடையார் போகி - உடையவர் துறக்கத்தே சென்று; பொன் ஆர மார்பின் புரந்தரராய் - பொன் மாலை பினையுடைய இந்திரராய் அத்துறக்கத்தை யாண்டு; மன் ஆகி பூமி முழுதும் ஆண்டு - பின்னர்ப் பேரரசராய் நிலமுழுதும் ஆண்டு; முக்குடைக்கீழ் வாமன் சிறப்பு இயற்றி - முக்குடைக்கீழ் இறைவனுக்கு வழிபாடு முதலிய சிறப்புக்களைச் செய்து; வரம்புஇல் இன்பம் பின்னா விளைவித்து - அதீதாவத்தை என்னும் வரம்பிலா இன்பத்தைப் பிறகு விளைவித்து; பிறவா உலகு எய்தல் பேசல் ஆம் - பிறவாப் பேரின்ப உலகாகிய வீட்டைப் பெறுதல் உண்மையென்றே உரைக்கலாம்.

விளக்கம் : வாமன் - அருக்கடவுள். வரம்பிலின்பம் : இஃது அதீதாவத்தை என்றும் அருகந்தாவத்தை என்றும் வழங்கப்படும். துணைவியரா, மகனிவனா, பின்னா என்னும் மூன்றிடத்தும் ஈற்றுக் ககரமெய்யும் அகரவுயிருங் கெட்டன. ( 137 )

1549. மட்டார்பூம் பிண்டி வளங்கெழு
முக்குடைக்கீழ் மாலே கண்டீர்
முட்டாத வின்பப் புதாத்திறக்குந்
தாளுடைய மூர்த்தி பாத
மெட்டானும் பத்தானு மில்லாதார்க்
கிவ்வுலகி லின்ப மேபோ
லொட்டாவே கண்டீர் வினையவனைத்
தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே.

பொருள் : மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழும் முக்குடைக்கீழ் மாலே - தேன் பொருந்திய மலர்ப் பிண்டியின் அடியில் முக்குடைக்கீழ் எழுந்தருளிய அருகப் பெருமானே; முட்டாத இன்பப் புதாத் திறக்கும் தாள் உடைய மூர்த்தி கண்டீர் - தடையற்ற இன்ப வுலகிற் கதவைத் திறக்குந்தாழாகிய திருவடியை உடைய தலைவன் என்று அறிவீர்களாக; எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இவ்வுலகில் இன்பமே போல் - எட்டேனும் பத்தேனும் இல்லாதவர்கட்கு இவ்வுலகிலே இன்பம் இல்லாததைப் போல்; அவனைத் தேறாதார்க்கு வினை ஒட்டா கண்டீர் - அவனைத் தெளியாதார்க்கு நல்வினைகள் ஒட்டா என்று அறிவீர்; உணர்ந்தீர் அன்றே - இத்தன்மையை உணர்ந்தீர் அல்லவோ?

விளக்கம் : பிண்டி - அசோகு. மால் - அருகன். முட்டாத - தடையில்லாத. புதா - கதவு. தாள் - தாழ்ப்பாள். புதாத்திறக்கும் தாளாகிய பாதமுடைய மூர்த்தி மாலே என்க. எட்டானும் பத்தானும் என்றது சிறிதேனும் என்னும் பொருள்பட நின்றது. இவற்றின் உள்ள ஆனும் உம்மும் அசைகள் என்பர் நச்சினார்க்கினியர். ( 138 )

1550. வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே
செல்லினும் வெகுண்டீர் போல
வாற்றுணாக் கொள்ளா தடிபுறத்து
வைப்பீரே யல்லிர் போலுங்
கூற்றங்கொண் டோடத் தமியே
கொடுநெறிக்கட் செல்லும் போழ்தி
னாற்றுணாக் கொள்ளீ ரழகலா
லறிவொன்று மிலிரே போலும்.

பொருள் : வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் - அயலார் இல்லாத நும் உறவினர் ஊருக்கே சென்றாலும்; வெகுண்டீர் போல ஆற்று உணாக்கொள்ளாது அடிபுறத்து வைப்பீரே அல்லிர் போலும் - அவருடனே சினந்து ஆண்டுச் செல்லாதீர் போலப் பொதிசோறு கைக்கொள்ளாமற் புறத்தே ஓர் அடியிட்டிடீர் (இத்தன்மையரான நீவிர்); கூற்றம் கொண்டு ஓடத்தமியே கொடுநெறிக்கண் செல்லும் போழ்தின் - கூற்றுவன் நும்மைக் கட்டிக்கொண்டு ஓடத் தனியே கொடிய நெறியிலே செல்லும்போது; ஆற்று உணாக் கொள்ளீர் - (உண்ணும் ஊணுக்குப்) பொதிசோறு இப்போதே தேரடிக்கொள்கின்றிலீர் (ஆதலின்); அழகலால் அறிவு ஒன்றும் இலிரே போலும் - அழகன்றி அறிவு சிறிதும் உடையீர் அல்லீர் போலும்!

விளக்கம் : வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே என்றதனால் நுமரில்லா வேற்றுவர் ஊர்க்கே கூற்றங்கொண்டோட எனவும், கொடு நெறிக்கண் என்றதனால், நுமரூர்க்கு நன்னெறிக்கண் செல்லினும் எனவும் விரித்தோதுக. அறிவொன்றும் என்புழி ஒன்றும் என்பது சிறிதும் என்பதுபட நின்றது. வைப்பீரே யல்லீர், இலிரே என வினைமுடிவு செய்க : இன், ஏழனுருபாதல் புறனடையாற் கொள்க. ஏ : அசை. போலும் : உரை யசை. ( 139 )

1551. அளைவது காம மடுநறவு
நெய்யொழுகு மூனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீ
ரிவைமூன்றும் விடுமி னென்றாற்
றளையவிழ் கோதையார் தாமஞ்சேர்
வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்
துறைய வுறுதி யுரைப்பாரை
யோஒபாவ முணரா ரேகாண்.

பொருள் : அளைவது காமம் அடுநறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னே - தோய்வதாகிய காமத்தானும் துன்புறுத்தும் கள்ளானும் நெய்ஒழுகும் ஊனானும் பின்னர்; விளைவது தீ வினையே கண்டீர் - உண்டாகும் பயன் தீவினையே என்றறிவீர்; இவை மூன்றும் விடுமின் என்றால் - இவை மூன்றையும் விடுங்கோள் என்று பிறர்க்குக் கூறினால்; தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்து - முறுக் கவிழ்ந்த மலர் மாலையாரின் வெவ்விய முலைபோற் பொருமிக் கண்சிவக்கச் சினந்து; உளைய உறுதி உரைப்பாரை உணரார்காண் - தாம் வருந்த நன்மை கூறுவோரை அறியாராயினார்காண்!; ஓ! பாவம் - ஓ! இஃதொரு பாவம் இருந்தபடி என்!

விளக்கம் : அளைவது - நுகர்வது. அடுநறவு - காய்ச்சுகின்ற கள்ளுமாம். பின்னாக என்பதன் ஈறுகெட்டது. ( 140 )

1552. இழுதன்ன வெண்ணிணத்த செந்தடிக்கே
யேட்டைப்பட் டிரும்பிற் போர்த்த
பழுதெண்ணும் வன்மனத்தா ரோட்டைமரச்
செவியர் கேளார் பால்போன்
றறொழுகியமு தூறுநல் லறத்தை
யோர்கிலரூன் செய்கோட் டக்குக்
கழுகுண்ண வள்ளூர மேசுமந்து
புள்ளிற்கே புறஞ்செய் கின்றார்.

பொருள் : ஊன்செய் கோட்டக்கு - ஊனாற் செய்த உடம்பிற்கு; கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார் - கழுகு உண்ணுமாறு அவ்வூனையே சுமந்து அக்கழுகிற்கே புறம் செய்வோராவர்; இழுது அன்ன வெள்நிணத்த செந்தடிக்கே ஏட்டைப்பட்டு - நெய்யனைய வெண்மையான நிணமுடைய செவ்வூனைப் பெறவேண்டுமென்றே இளைத்து; இரும்பிற் போர்த்த பழுது எண்ணும் வன்மனத்தார் - இரும்பினாலே போர்த்த குற்றத்தை எண்ணும் வலிய மனத்தராய்; ஓட்டை மரச் செவியர் கேளார் - ஓட்டையான மரச் செவியராய் அறத்தைக் கேளார்; பால் போன்று ஒழுகி அமுதூறும் நல்லறத்தை ஓர்கிலர் - பால் போலப் பெருகி அமுது ஊறும் நல்லறத்தை அறிகிலர்

விளக்கம் : இழுது - நெய். இது நிணத்திற்குவமை. செந்தடி - சிவந்த தசை. ஏட்டைப்படுதல் - இளைத்தல்; எண்மை என்னும் பண்படியாகப் பிறந்த சொல். பழுது - குற்றம். பழுதெண்ணும் மந்திரியின் (குறள். 639) ஊனாற் செய்த உடம்பிற்கு ஊனையே சுமந்து கழுகுக்கே புறத்தைச் செய்கின்றவர் வன்மனத்தராய்ச் செவியராய்க் கேளார்; தாமே அறிவதுஞ் செய்யார் என்க. செய்கின்றவர் தாமே அறிவதுஞ் செய்யார்; கேளார் என மாற்றினும் நன்றே. கோட்டக்குப் புறஞ்செய்கின்றார், புள்ளிற்கே புறஞ்செய்கின்றார் என இரண்டிடத்துங் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ஓட்டையென்றார் உட்கொளாமையின். வள்ளூரம் - ஊன். ( 141 )

1553. கையாற் பொதித்துணையே காட்டக்
கயற்கண்ணா ளதனைக் காட்டா
ளையா விளாம்பழமே யென்கின்றீ
ராங்கதற்குப் பருவ மன்றென்
செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்
கட்டுரையாற் குறித்தவெல்லாம்
பொய்யே பொருளுரையா முன்னே
கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்.

பொருள் : கையால் பொதித் துணையே காட்ட - (இறக்கும் நிலையிலுள்ள ஒருவன்) மொழியின்றிக் கையாலே பொருள் திரளின் அளவைக் காட்டினானாக; கயல் கண்ணாள் அதனைக் காட்டாள் - கயல்போலும் கண்ணாளாகிய மனைவி அதனைக் கட்டாளாய்; ஐயா விளாம்பழமே என்கின்றீர் - ஐயனே! விளாம்பழமே வேண்டும் என்கின்றீர்; ஆங்கு அதற்குப் பருவம் அன்று - அது தருதற்கு விக்குள் வந்து அடுத்திருப்பதாற் பருவம் ஆகாது; என் செய்கோ என - என் செய்வேன் என்று; சிறந்தாள் போல் சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம் - சிறந்தவளைப்போல நடித்துச் சிறவாத கட்டுரையினாலே, அவன் குறித்த பிறவற்றிற் கெல்லாமும்; பொய்யே பொருளுரையா முன்னே - பொய்ப் பொருள் கூறாமுன்னமே; கொடுத்து உண்டல் புரிமின் - கொடுத்து உண்பதை விரும்புங்கோள்.

விளக்கம் : உரையாடாவண்ணம் நாச்செற்று விக்குள்மேல் வந்தமையின் பொதித்துணையைக் கையாற் கார்ட்டினன் என்பது கருத்து. அதனை - அப்பொற்பொதியினை. பருவம் - உண்ணுதற்கேற்ற செவ்வி. சிறந்தாள் போல் என்றது சிறவாதவளாயிருந்தும் என்பது பட நின்றது. செய்கு : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. இவ்வாறு நீயிர் ஈட்டியவற்றைக் கொன்னே இழப்பதன் முன்னே கொடுத்துண்மின் என்றவாறு. ( 142 )

வேறு

1554. பனிமதி யின்கதிர் பருகு மாம்பல்போன்
முனிமதி முகத்தியர் முறுவ னம்பினார்
துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங்
கனியநின் றாடுவர் கடையில் காலமே.

பொருள் : பனிமதி கதிர் பருகும் ஆம்பல்போல் - குளிர்ந்த திங்களின் கதிரை விரும்பிப் பருகும் அல்லிபோன்று; மதிமுனி முகத்தியர் முறுவல் நம்பினோர் - திங்களை மாறுபடும் முகமுடைய மங்கையரின் முறுவலுடைய வாயை விரும்பினோர்; துனிவளர்கதிகளுள் தோன்றி - துன்பந்தரும் தீய கதிகளிலே தோன்றி; கடைஇல் காலம் நாடகம் கனிய நின்று ஆடுவர் - அளவில்லாத காலமாக, வெவ்வேறுடம்பெடுத்து முற்றத்திரிவர்.

விளக்கம் : மதிமுனி முகத்தியர் என மாறுக. ஆம்பல் : ஒரு நீர்ப்பூ; இது நிலவில் மலருமியல்புடையதாகலின் மதியின் கதிர் பருகும் ஆம்பல் என்றார். முறுவல் என்றது மகளிர் இன்பத்திற்கு ஆகுபெயர். துனி - துன்பம். கதி - நகரகதி முதலியன. வெவ்வேறு யாக்கைகொண்டுழலுதலால் நாடகம் என்றார். மதியின் கதிரை விரும்பும் ஆம்பல்போல் முகத்தியர் முறுவலை விரும்பினோர் எனக் கோடலே நூலாசிரியர் கருத்தோடியையும் எனல் அடுத்த செய்யுளாலும் உணரலாம். ( 143 )

1555. நிழனிமிர் நெடுமதி நிகரி றீங்கதிர்ப்
பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோற்
குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார்
தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே.

பொருள் : நிழல் நிமிர் நெடுமதி நிகர் இல் தீம்கதிர் - ஒளிமிக்க பெரிய திங்களின் ஒப்பற்ற இனிய கதிருக்கு; பழனம் வெண் தாமரை பனிக்கும் ஆறுபோல் - வயலில் உள்ள தாமரை வருந்தும் தன்மைபோல; குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார் - குழலிசையினும் மிக்க இனிய மொழியாரின் ஒப்பனைக்கு அஞ்சினோர்; தொழ நிமிர்ந்து அமரராய்த் துறக்கம் ஆள்வர் - பலரும் தொழுமாறு மிக்கு வானவராய்த் துறக்கத்தை ஆள்வர்.

விளக்கம் : நிழல் - ஒளி. பழனம் - கழனி. பனித்தல் - வருந்துதல். கோலம் அஞ்சினார் என்றது, அவர் இயல்பாகவே விரும்புதற்குரியரல்லர், அவர் தம் கோலமே விரும்பச்செய்வது, அதனை அஞ்சினோர் என்பதுபட நின்றது. ( 144 )

வேறு

1556. இன்னவா றுறுதி கூறி
யெரிமணி வயிர மார்ந்த
பொன்னவிர் கலங்க ளெல்லாம்
பொலிவொடு புகன்று நீட்டிச்
சென்மினீ ரென்று கூற
வலங்கொண்டு தொழுது சென்றான்
வின்மரீஇ நீண்ட தோளான்
வெயிற்கட நீந்த லுற்றான்.

பொருள் : இன்ன ஆறு உறுதி கூறி - இங்ஙனம் நன்மையைக் கூறி; எரிமணி வயிரம் ஆர்ந்த பொன் அவிர் கலங்கள் எல்லாம் - ஒளிவிடும் மணியும் வயிரமும் பொருந்திய பொன்விளங்குங் கலன்களையெல்லாம்; பொலிவொடு புகன்று நீட்டி - அழகுற விரும்பிக்கொடுத்து; நீர் சென்மின் என்று கூற - நீர் போமின் என்று கூற; வலம்கொண்டு தொழுது சென்றான் - அவன் வலம் வந்து வணங்கிப் போயினான்; வில் மெரீஇ நீண்ட தேளான் வெயில் கடம் நீந்தல் உற்றான் - வில் பயின்று நீண்ட தோள்களை உடையவன் வெம்மையுறும் காட்டுவழியே செல்லத் தொடங்கினான்.

விளக்கம் : இன்னவாறு - இவ்வாறு. உறுதி : உறுதிப்பொருள். தனக்கு ஞானாசிரியனாகிவிட்டபடியால் வலங்கொண்டு தொழுது சென்றான் என்பது கருத்து. கடம் - காடு ( 145 )

கேமசரியார் இலம்பகம் முற்றிற்று.

 
மேலும் சீவக சிந்தாமணி »
temple news
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக ... மேலும்
 

கடவுள் வாழ்த்து நவம்பர் 14,2011

சித்தர் வணக்கம் 1. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்திஓவாது நின்ற ... மேலும்
 
கதைச் சுருக்கம்: இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. ... மேலும்
 
கதைச்சுருக்கம்: சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; ... மேலும்
 
கதைச் சுருக்கம்: சீவகன் முதலியோர் இராசமாபுரத்தின்கண் இவ்வாறு இனிது உறைந்தனராக; அந்நகரத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar