பதிவு செய்த நாள்
03
அக்
2012
10:10
செங்கல்பட்டு: குடிநீராய் பயன்படுத்தி வந்த, ஒழலூர் கோகிலம்மாள் கோவில் குளத்தை தூர் வார வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ளது ஒழலூர் கிராமம். இப்பகுதியில், மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, கோகிலம்மாள் கோவில் அருகே, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன், கிணறு ஒன்று தோண்டப்பட்டது.
வற்றாத குளம்: பின், இக்கிணற்றை சுற்றி, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய குளம் உருவாக்கப்பட்டது. கோடையிலும் இக்குளம் வற்றுவதில்லை.
பருவ மழைக் காலங்களில் குளம் நிரம்பும். குளத்து நீரை, அப்பகுதி மக்கள், குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அனைத்து பகுதிகளுக்கும், குடிநீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்பட்டதால், பொது மக்கள் குளத்தின் நீரை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டனர். கால்நடைகள் மட்டுமே குளத்து நீரை அருந்துகின்றன.
தூர் வார வேண்டும்: கடந்த 30 ஆண்டுகளாக குளம் வற்றாமல் இருக்கிறது. இதனால், தூர் வார முடியாத நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், இக்குளத்தின் நீர் மாசடைந்து பச்சை நிறமாக மாறியுள்ளது. ஒரு சில ஆண்டுகளில், மழை பொய்க்கும் போது, கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில், குளத்து நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, ஒழலூர் கோகிலம்மாள் கோவில் குளத்தை தூர் வாரி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, ஊராட்சித் துணை தலைவர் முருகன் கூறும்போது, ""நீர் வற்றாத குளம் என்று அழைப்படும் இக்குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.