பதிவு செய்த நாள்
04
அக்
2012
10:10
திருத்தணி: முருகன் மலை கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க, கோவில் நிதியில் இருந்து, 92 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்காக, 4 கி.மீ., தூரத்திற்கு தார் சாலை கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்த சாலையில், தார் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி விட்டது. இருசக்கர வாகனங்களில் செல்லும் பக்தர்கள், பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயத்துடன் திரும்புகின்றனர். இதே போல், பஸ், வேன், கார்களில் செல்லும் பக்தர்களும், கடும் அவதிப்பட்டனர். பழுதடைந்த மலைக் கோவில் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கோவில் நிதியில் இருந்து, தார் சாலையை சீரமைக்க, 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கவிதா கூறுகையில், ""மலைக் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க, 92 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கான "டெண்டர், கடந்த 29ம் தேதி விடப்பட்டு உள்ளது. சீரமைக்கும் பணி, இம்மாதம் இரண்டாவது வாரம் துவக்கப்பட்டு, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும், என்றார்.