பதிவு செய்த நாள்
04
அக்
2012
10:10
சென்னை: சுயநலமாக இருப்பது எல்லாருக்கும் விருப்பமானது: ஆனால் பணம், புகழ், பதவி அடைவது மட்டும் அல்ல வாழ்க்கை. மாறாக, மனிதப்பிறவியின் பயன் எது என்று உணர்ந்து அதை அடைய முயற்சிக்க வேண்டும் , என்று சிருங்கேரி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அருளுரையாற்றினார். சென்னை, மயிலை "சுதர்மா வில் ஸ்ரீ வித்யா தீர்த்த பவுண்டேஷன் சார்பில் சென்னை பெருநகர மக்கள் பங்கேற்கும் குருவந்தனம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 4 மாதங்களாக இங்கு தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்து, தர்மநெறியை வலியுறுத்தி வரும் சுவாமிகளுக்கு சிறப்பு வணக்கம் தெரிவிக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. இவ்விழாவில், சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் விமுர்த்தானந்தர், நீதியரசர்கள் வி.ராமசுப்பிரமணியம், பி.ராமநாதன், உள்துறை முன்னாள் செயலர் கோபால்சாமி, தேர்தல் கமிஷன் முன்னாள் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
சங்கரநேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் , பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் , இசைக் கலைஞர்கள் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், திருச்சூர் ராமச்சந்திரன் உட்பட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் அளித்த, "குருவந்தனம் என்ற, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்குப் பின். சிருங்கேரி மடத்தின் தலைமை நிர்வாகி கவுரி சங்கர் பேசியதாவது: ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்தர், நமக்கு மாபெரும் சன்னியாசியான இவரை, நமக்கு குருவாகத் தேர்வு செய்து தந்திருக்கிறார். பொதுவாக அரசியல், மடங்கள், மற்ற பெரிய நிறுவனங்களில் அடுத்த தலைமையைத் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால், அவர் வழியைப் பின்பற்றும் அன்னை சாரதையின் வடிவில் இவர் குருவாக கிடைத்திருக்கிறார். இந்த பவுண்டேஷன் சார்பில் இந்த நிகழ்ச்சி நடப்பதில் நமக்கு பெருமை . இவ்வாறு அவர் பேசினார்.
குருவந்தன நிகழ்ச்சி நிறைவில் தன் அருளுரையாக, ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் கூறியதாவது: இப்போது எல்லாரும் சுயநலமாக இருக்கின்றனர். எல்லாம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். "சுயநலம் என்பதை, "ஸ்வார்த்தம் என்று ஆதிசங்கரர் கூறுகிறார். நல்ல ஸ்வார்த்தம் இருக்கட்டும். அந்த வார்த்தையை ஆங்கிலத்தில், "செல்பிஷ் என்கின்றனர். உங்களுக்கு அது புரியும். தனக்கு என்ன கிடைக்கும், அதற்காக என்ன செய்யலாம் என்பது சுயநலம். பணம், புகழ், பெயர் ஆகியவை கிடைத்தால் போதுமா? இது எதுவும் சாஸ்வதமானது இல்லை என்கிறார் சங்கரர். மனிதப் பிறவி கிடைத்தற்கு அரியது. நல்ல காரியங்களை புண்ணியங்களை செய்ய ஏற்பட்டது இப்பிறவி கிடைத்திருக்கிறது. மிருகங்களை போல வாழ அல்ல. ஒரு கஞ்சமான மனிதன் தன் தேவைக்கு கூட செலவு செய்யாது, கிழிசலைக் கட்டிக் கொண்டு சேர்த்து வைத்த பணத்தை, அவனுக்கு பின் வேறு எவரோ எடுத்து செல்வர். அதில் என்ன பயன்? சாஸ்திரத்தில் சொன்னதின் படி நடக்க வேண்டும். அதற்கு கடவுள் நம்பிக்கை அவசியம். அது ஆஸ்திகம் ஆகும். நாஸ்திகம் பேசுவோரின் முன்னோர்கள் யார் ? அவர்கள் வந்த பரம்பரை கடவுளை வழிபட்டவர்களாக இருப்பர். ஆகவே, அவர்கள் ஏற்படுத்தி கொண்ட புதிய நம்பிக்கை நிலையற்றது.
முதலில் வாழ்வில் திருப்தி தேவை. எது கிடைத்தாலும் சந்தோஷம் தேவை. கடவுள் கிருபை இல்லாமல் எதுவும் நடக்காது. அதன் மூலம் எல்லாவற்றையும் அடையலாம். இப்பிறவியில் நல்லவர்கள் யாரென கண்டறிந்து அவர்களுக்கு, தர்மமாக பணம் தந்தால் அது அடுத்த பிறவியில் வரும். நல்லவர்கள் யாரென்பதையும், அவர்கள் தர்ம வழியையும் அறிந்து உதவ வேண்டும். இன்றைய கால கட்டத்தில், வங்கிகளில் பணத்தை சேமித்து விட்டு, அதைத் தேவைப்படும் போது, "ஏடிஎம்களில் எடுத்துக் கொள்வதைப் போல அடுத்த பிறவியில் அது உதவும். பந்தத்ததை அதிகரிக்கும்ஆசை சரியல்ல. யாருக்கும் தொந்தரவு செய்யாத, பிறருக்கு நன்மை செய்யும் சுபாவம் தான் நல்லவழிகாட்டும் " சுயநலம் ஆகும் . ஆகவே, சாஸ்வதம் எது என்பதை உணர்ந்து, நமது தர்ம வழியை மேற்கொள்ள முயற்சியை தொடங்க வேண்டும். அது தான் வாழ்வை உயர்த்தும். மோட்சம் அடைய உடனடியான வழி என்னிடம் கேட்டால், பதிலாக இல்லை என்பேன்.
சென்னை மாநகர பெருமக்கள் பக்தி சிரத்தையுடன் இருப்பதைக் கண்டு எனக்கு சந்தோஷம். இதற்கு முன், என் குருநாதர் 1960ல் இங்கு தங்கி, அனுக்கிரகம் செய்திருக்கிறார். அதற்கு முன் வாழ்ந்த குரு நரசிம்ம பாரதி சுவாமிகள், இங்கு 1870ல் வந்த போது ஆரம்பிக்கப்பட்டது ஜார்ஜ் டவுன் சங்கர மடம். ஆகவே, அந்த வழியில் நானும் இங்கே வந்து தங்கி உங்களை சந்தித்து அனுக்கிரகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் பேசினார். முன்னதாக, "எல்லாம் வல்ல இறைவன் - ஸ்ரீ கிருஷ்ணன் என்ற தலைப்பில், வெளியான, "டிவிடியை, சிருங்கேரி மடத்தின் நிர்வாகி கவுரி சங்கர் வெளியிட , அதை விஜய யாத்திரை குழுத் தலைவர் ஏ. கிருஷ்ண மூர்த்தி பெற்றுக் கொண்டார். விழாவில், ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த பவுண்டேஷன் செயலர் கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.