பதிவு செய்த நாள்
04
அக்
2012
10:10
திருப்பூர்: மழை வேண்டி, வீடு வீடாகச் சென்று மழைச்சோறு வாங்கி வந்து, கோவிலில் வைத்து பெண்கள் சாப்பிட்டனர்; பாட்டியின் மண் பொம்மையை, புதைத்து, ஒப்பாரி பாடி அழுதனர். மழை வேண்டி பல்வேறு வினோத வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றுவது வழக்கம். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையத்தில், ஒரு பாட்டியின் மண் உருவ பொம்மையை புதைத்து, பெண்கள், ஒப்பாரி பாடி அழுதனர். இவ்வாறு செய்தால், மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
முருகம்பாளையம் பெண்கள் கூறியதாவது: மழை பெய்து பல மாதங்கள் ஆவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது; தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், வீடு வீடாகச் சென்று பழைய சாதத்தை தர்மமாக பெற்று, விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்தோம். அதை, பெரிய பாத்திரத்தில் கொட்டி, பெண்களுக்கு பகிர்ந்தளித்தோம். அவர்கள் அதை சாப்பிட்டனர். மூன்று கன்னிப்பெண்களை விரதம் இருக்க வைத்து, மழைச்சொம்பு, படைச்சொம்பு, பஞ்ச சொம்பு கொடுத்து பூஜை செய்தோம். பயன்படுத்தாத பழைய கூடையில், அவற்றை போட்டு, சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றோம். அங்கு, மர கிளையில் கட்டி வைத்துவிட்டு, அமத்தா பாட்டி என்ற மண் உருவம் செய்து, அதைச்சுற்றி பெண்கள் ஒப்பாரி பாடினோம். சிறிது நேரத்துக்கு பிறகு, அந்த உருவபொம்மையை புதைத்து விட்டு வீடு திரும்பினோம். இவ்வாறு செய்தால், மழை வரும் என்பது ஐதீகம். கட்டாயம் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.