புதுச்சேரி: குருசுக்குப்பம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்தில், 153ம் ஆண்டு பெருவிழாவையொட்டி நேற்றிரவு அலங்கார தேர்பவனி நடந்தது.இந்த ஆலயத்தில், ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினம் திருப்பலி செய்து சிறிய தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. முக்கிய விழாவான பெருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. காலை 7 மணிக்கு பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கலந்து கொண்டு சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார். மாலை 5.30 மணிக்கு ரெட்டியார்பாளையம் பங்குத் தந்தை அந்தோணிசாமி திருப்பலி வாசித்தார். 6.30 மணிக்கு அலங்கார தேர்பவனி நடந்தது.விழாவில் பங்குத் தந்தை தாமஸ் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி செய்து கொடியிறக்கம் நடந்தது.