பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு யானை வழங்குவதற்கு இந்து அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் அதிகளவில் கோயில் நிலங்கள் உள்ள கோயில்களில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். இங்கு முருகன், வள்ளி, தெய்வானையுடனும், மற்றும் பல அவாதரங்களில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். சூரியபகவான், சந்திரபகவான், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பைரவர் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்கள் உள்ளன.உத்திரப்பிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற்போல், இங்கு ஆற்றின் இரு புறங்களிலும் ஆண்மருதமரம் மற்றும் பெண்மருத மரம் இணைந்திருப்பது அபூர்வமாகும் பங்குனி உத்திர விழா, பிரதோஷ வழிபாடு உட்பட பல விழாக்கள் நடக்கும். முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகின்றன. திருவிழாக்களின் முக்கிய விழாவான பங்குனி மாதம் தேர்த்திருவிழாவின் போது இரண்டு தேர்கள் வீதி உலா வரும். இதனை காண்பதற்கு மாவட்டத்தில் பல ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவர். தேர்த்திருவிழா மற்றும் கோயில் விழாக்களில் யானை புறப்பாடு இருந்தால் விசேஷமாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு யானை வழங்குவதற்கு இந்து அறநிலையத்துறை நிர்வாகம் முன் வரவேண்டும்.