பதிவு செய்த நாள்
09
அக்
2012
10:10
கடையநல்லூர்: தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னதான திட்டத்தினை சிறப்பிக்க செய்யும் வகையில் அன்னதான நன்கொடையாளர்களுக்கு வைரஅட்டை வழங்கும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அன்னதான திட்டம் கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதிய உணவு வழங்கும் வகையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்திற்கான அன்னதான உண்டியலும் அமைக்கப்பட்டுள்ளது. மதியந்தோறும் வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தினை மேலும் சிறப்பிக்கும் வகையில் நித்திய அன்னதான திட்டம் தமிழகத்தில் உள்ள திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சில கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் மேலும் சில முக்கிய கோயில்களில் நித்திய அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான பூர்வாங்க பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையில் அன்னதான திட்டத்திற்கான நன்கொடையாளர்களை அதிகளவில் கவரும் வகையிலும் திட்டத்தினை மேலும் சிறப்பிக்க செய்யும் வகையில் வைரஅட்டை வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கோயில் அன்னதான நன்கொடையாளர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்காக இந்த வைர அட்டை வழங்கப்படுகிறது. தொன்மையும், வரலாற்று சிறப்பும் மிக்க தமிழக கோயில்களில் "உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே என்ற முதுமொழிக்கு இணங்க தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில் ஒன்றான அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவோருக்கு முதல்வரின் கரங்களால் வைர அட்டை வழங்கப்படும் என இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக வைரஅட்டை பெறுவோர் தமது குடும்பத்தார் 7 நபர்களுடன் இருபது ஆண்டுகளுக்கு சிறப்பு தரிசன முன்னுரிமை வசதி வழங்கப்படும். வைர அட்டையின் மூலம் கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கும், அர்ச்சனைக்கும், ஒரே நாளில் இரண்டு கால பூஜைகளில் கலந்து கொள்ளலாம். கோயில் சிறப்பு தரிசனம் முன்னுரிமை என்பது அந்தந்த கோயில்களின் ஆண்டு திருவிழாக்களுக்கு பொருந்தாது. வைர சிறப்பு அனுமதி அடையாள அட்டை மாற்றத்தக்கதல்ல. பரம்பரை உரிமை கோரத்தக்கதல்ல என்பது போன்ற சிறப்பம்சங்களுடன் அறநிலையத்துறை மூலம் வைர அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பொறுத்தவரை தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், இறையன்பர்கள், மேலும் கோயில்களில் தொடர்ந்து திருப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் பெற்றவர்கள் போன்றவர்களுக்கு வைர அட்டை தொடர்பான அறநிலையத்துறையின் உத்தரவினை கோயில்கள் மூலமாக தெரியப்படுத்திடவும் அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுலா ஸ்தலங்களாக விளங்கக்கூடிய பகுதிகளில் பிரசித்தி பெற்று விளங்கும் கோயில்களில் வைர அட்டை வழங்கும் திட்டத்தினை முனைபோடு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குற்றாலம், பண்பொழி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் போன்ற பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரக்கூடிய கோயில்களில் வைர அட்டை வழங்கும் திட்டம் குறித்த பிளக்ஸ் போர்டுகள் அமைத்திடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து பல்வேறு கோயில்களில் வைர அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.