பதிவு செய்த நாள்
09
அக்
2012
10:10
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு, அதிக பாக்கி வைத்திருப்போர் பெயர்கள், கோவில் வளாகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. இவற்றில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலும் அடங்கும். மிகவும் பழமையான இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம் என, பல மாநிலங்களில், நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. இந்த சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டு, கோவிலை நிர்வகித்து வந்தனர். நாளடைவில் கோவில் நிலத்தையும், கட்டடத்தையும், மனைகளையும் குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக கோவிலுக்கு வாடகை செலுத்தவில்லை. வருமானம் குறைந்துவிட்டது. கோவில் நிர்வாகம், வாடகையை (குத்தகையை) வசூலிக்க முயற்சித்தும் பலன் இல்லை. இதில் ஒரு சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
அபகரிக்க திட்டம்: கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கு செலுத்த வேண்டிய, குத்தகை செலுத்தாமலும், நிலங்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமலும் காலம் கடத்தி வருகின்றனர். குத்தகைதாரர், கோவில் நிர்வாகத்திடம் அனுமதியில்லாமல், மேல் வாடகை விட்டு வருகின்றனர். இதில் சிலர் அனுபவித்து வரும் நிலங்களை வேறு நபருக்கு, பல லட்சம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 285 ஏக்கர் நிலங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் காலி மனைகள் உள்ளன. இவர்களிடமிருந்து வாடகை வசூலிக்க அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய ரூபாய் குறித்த விவரம், பெரிய அளவு போர்டு, எழுதி கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர். இந்த போர்டில், 11 பேர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் சென்னை, மலையப்பன் தெருவைச் சேர்ந்த வீராசாமி அண்ட் சன்ஸ், 20.04 லட்சமும், தேவராஜ முதலி தெரு சுமீர் பாஷா என்பவர், 11.46 லட்சமும், பாலகிருஷ்ண செட்டி அண்ட் சன்ஸ், 7.74 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். மனை பாக்கி செலுத்த வேண்டிய, ஸ்ரீபெரும்புதூர் எல்லப்ப நாயக்கர், 49,970 ரூபாய், வீரராகவன், 31,680 ரூபாய், கணேசன், 27,436 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.