Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » துளிகள்
இறைவன் எப்போது அழுகிறார்?
அக்டோபர் 11,2012
அ-
+
Temple images

ஒரு குழந்தை எப்போது சிரிக்கும், எப்போது அழும்? என்றே கூற முடியாத போது, கடவுள் சிரிப்பாரா, அழுவாரா என்பதை எப்படிக் கூறுவது? இறைவன் பரபிரம்மசொரூபியாக இருக்கும்போது, குணாதீதனாக- ஆனந்த சொரூபியாகத் திகழ்கிறார். அதே இறைவன் லீலையில், மனிதனாக அவதரிக்கும்போது அவருக்குச் சிரிப்பும் அழுகையும் சகஜமே. பரபிரம்ம ஸ்வரூபி ஸ்ரீராமர், மனிதனாக வந்து சீதையைக் காட்டில் பிரிந்தபோது துன்பத்தில் அழுதார். மாய வலையில் சிக்கி பரபிரம்மமே அழுதது... ஆம், ஆண்டவன் சிரிக்கிறார்; அழுகிறார்- அதுவும் மனிதர்களைப் பார்த்து! மேலும் இறைவனை மனிதன் சிரிக்கவும் வைக்கிறான், அழவும் வைக்கிறான். இறைவனின் சிரிப்பு இரு விதம். 1. பரிகாசச் சிரிப்பு, 2. பிரசன்ன சிரிப்பு.

சிவபெருமானின் கண்ணீரும் சிரிப்பும்: தாரகாசுரனின் மூன்று மகன்களும் சிவபக்தர்களாக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அகங்காரம் பிடித்து, தாங்களே கடவுள் என்று எண்ணித் தாறுமாறாக வாழ ஆரம்பித்தனர். எவ்வளவு அருமையான பக்தர்கள் இப்படி ஆகிவிட்டார்களே என்று வருந்திக் கண்ணீர் வடித்தார் சிவபெருமான். சிவனின் - ருத்திரனின் அக்ஷத்திலிருந்து (கண்கள்) திவலையாகக் கண்ணீர் வடிந்தது. அதுவே ருத்ராக்ஷமானது! அந்த மூவரும் கட்டுக்கடங்காமல் போகவே, தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த அசுரர்களுடன் போர் புரிய ஒரு தேரை உருவாக்கினார்கள். ஒவ்வொருவரும் போருக்கான ஆயுதமாகவும், தேரின் பாகங்களாகவும் உருமாறினார்கள். சிவனின் பராக்கிரமத்தை மறந்து தேவர்கள் ரதத்தைச் செலுத்தும்படி அவரிடம் வேண்டினார்கள். ஈசன் ரதத்தில் ஒரு காலை வைத்தார். உடனே ரதம் நொறுங்கியது. இவ்வளவு சக்திமிக்க சிவபெருமானைப் புரிந்து கொள்ளவில்லையே என தேவர்களுக்கு ஆச்சரியம். இதைக் கண்டு இறைவன் சிரித்தார்; சிரித்தபடி அசுரர்களின் மூன்று பலமான கோட்டைகளைப் பார்க்க, மூன்றும் அக்கணமே சாம்பலாயின. அழிந்தவை, அசுரரின் அகங்காரக் கோட்டை மட்டுமல்ல, தேவர்களின் அறியாமைக் கோட்டையும்தான்! இப்படி சிவன் அழுதார், ருத்திராக்ஷத்தைப் படைத்தார்; சிவன் சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்.

கண்ணீருடன் பெருமாள்: திருக்கோட்டியூர் நம்பி என்ற வைஷ்ணவ அடியார் எழுதிய வார்த்தா மாலை என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல் பெரும் உண்மைகளைக் கூறும். கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக? அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.

இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார்:

விருத்தி சோறோடே போகும்
சோறு உடம்போடே போகும்
உடம்பு மண்ணோடே போகும்
உயிர் கர்மத்தோடே போகும்
ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்.

உலகியலில் உழன்று லவுகிக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்பவர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.