பதிவு செய்த நாள்
12
அக்
2012
10:10
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வரும் 15ம் தேதி துவங்குகிறது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி திருவிழா வரும் 24ம் தேதி அம்பாள் கொலுமண்டபத்தில் எழுந்தருளலும், 8 மணிக்கு கன்னியா பூஜையும், 9மணிக்கு பஜனையும், 10மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7.30க்கு பக்தி இன்னிசை, 8.30க்கு பக்திமெல்லிசை, 9க்கு தேவி வெள்ளி கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதலும் நடக்கிறது. இரண்டாம் நாள் திருவிழாவான 16ம் தேதி முதல் ஒன்பதாம் நாள் திருவிழாவான 23ம் தேதி வரை தினமும் காலை 5 மணிக்கும், 10 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சிகள், இரவு ஒன்பது மணிக்கு அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருக்கோயில் வலம் வருதலும் நடக்கிறது. பரிவேட்டை: நவராத்திரி திருவிழாவின் 10ம் நாளான 24ம் தேதி பரிவேட்டை நடக்கிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 4.30க்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு தேவி அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்தலும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் வேட்டைக்கு புறப்படுதல் நடக்கிறது. தேவி வேட்டைக்கு புறப்படும் போது, ஸ்ரீதேவி கன்னியாகுமரி பக்தர்கள் சங்கம் சார்பில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடைஊர்வலம், நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், செண்டைமேளம், பொம்மலாட்டம், பஜனை மற்றும் கேரள புகழ் தையல் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் அம்பாள், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், ஒற்றைபுளி, பாலசுப்ரமணியபுரம், மகாதானபுரம், வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து மாலை 6 மணியளவில் பரிவேட்டை மண்டபம் அருகே அம்பாள் அம்பு எய்து கலிவேட்டையாடுகிறார். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக கோயில் திரும்புகிறார். முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுக்கு பின்னர் கோயில் வருகிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில், தேவசம் போர்டு கண்காணிப்பாளர் ஸ்ரீமூல வெங்கடேசன், கோயில் மேலாளர் சோணாச்சலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.