பதிவு செய்த நாள்
12
அக்
2012
10:10
சென்னை: ஏழு மாவட்டங்களில் உள்ள, கோவில்களின் சொத்து விவரங்களை, ஒரு மாதத்தில், ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, வருவாய் துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சொசைட்டியின் தலைவர், சுவாமி கோவிந்த ராமானுஜதாசா, தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறை கோவில்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை தொகுப்பது குறித்து, 2009ம் ஆண்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இதை அமல்படுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:சென்னை, திருச்சி, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட, 23 மாவட்டங்களில் உள்ள, கோவில்களின் சொத்துக்கள் அடங்கிய விவரங்கள், இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரிடம், வழங்கப்பட்டுள்ளது, என, கூடுதல் அரசு பிளீடர் தாக்கல் செய்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது. ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலூர் ஆகிய ஏழு மாவட்டங்களைப் பொறுத்தவரை, அறிக்கைக்காக காத்திருப்பதாக, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த ஏழு மாவட்டங்களிலும், ஆய்வை முடித்து, இந்து சமய அறநிலையத் துறையின் கமிஷனருக்கு, ஒரு மாதத்தில், அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.