பதிவு செய்த நாள்
12
அக்
2012
10:10
கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில், நவராத்திரியை முன்னிட்டு, "தங்க மருந்து பிரசாதம் வழங்கப்பட உள்ளது. நம்பூதிரிகளால் நிர்வகிக்கப்படும், கேரளாவின், மிகப்பழமையான இக்கோயிலில் பக்தர்களுக்கு, பிரசாதமாக "நோய் தீர்க்கும் மருந்து வழங்கப்படுவது வழக்கம். பழங்கால ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டவாறு, பல்வேறு மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படும் மருந்து பிரசாதம், அம்மன் முன்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவே இக்கோயிலின் தனிச்சிறப்பு. இங்கு எழுந்தருளியுள்ள அம்மனை, "நோய் தீர்க்கும் கடவுள் என பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். ஆண்டுதோறும் நவராத்திரி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது விசேஷமாக, தங்கம் கலந்து, நெய் வடிவில் மருந்து பிரசாதம் வழங்கப்படும். அக்.,16 ம் தேதி முதல், 24 ம் தேதி வரை, காலை 6முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் பிரசாதம் வழங்கப்படும். நிர்வாகிகள் என்.பி.நாராயணன் நம்பூதிரி,என்.பி.பி.நம்பூதிரி கூறுகையில், "" அறிவு, ஆரோக்கியம் பெற நவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜை, வழிபாடு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கும். காலை முதல் இரவு வரை, பகவதி அம்மன் முன்பு, பக்தர்கள் இசை, பாட்டு, நடன நிகழ்ச்சிகளை, அரங்கேற்றத்தை நடத்துவர். பக்தர்கள் நடத்தும் நிகழ்ச்சி, அம்மனுக்கு செய்யும் "இசை வழிபாடு என்று கருதப்படுகிறது. பூஜை விபரங்களுக்கு, 094478 75067 ல் தொடர்பு கொள்ளலாம், என்றனர்.