பதிவு செய்த நாள்
13
அக்
2012
02:10
ஆண்டுதோறும் திருவிழா நடக்கும் கோயில்களில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. ஆவணி மாதத் திருவிழா முடிந்த நிலையில், அக்.,16 நவராத்திரி விழா துவங்குகிறது. இதற்காக, ரூ.15 லட்சம் செலவில், கொலு கண்காட்சிக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பகலிலும் இக்கண்காட்சியை காணலாம். கொலு மண்டபம், அம்மன் சன்னதி பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. இச்சன்னதிக்கு செல்லும் வாயில் கோபுரத்தை கி.பி. 1227ல், வேம்பத்தூர் ஆனந்த தாண்டவநம்பி கட்டினார். இதனாலேயே இக்கோபுரம் வேம்பத்தூரர் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. வாயிலில் இருந்து, இடது புறம் பிரகாரத்தில் வலம் வந்தால், திருமலைநாயக்கர் தன் மனைவி யருடன் இருக்கும் சிலைகளை காணலாம். அருகிலேயே அவரது கட்டளை அறையும் உண்டு. சன்னதியின் ஆறுகால் பீடத்தில்தான், சித்திரை மாதத்தில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாயக்கர் மன்னர்கள், திருச்சியை தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த சமயத்திலும், இந்த ஆறுகால் பீடத்தில்தான் செங்கோல் பெற்று ஆட்சிபுரிந்தனர்.
சன்னதி வாசலில், செப்பினாலான இருதுவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன. இவை திருமலை நாயக்கர் செய்து கொடுத்தது. சிலைகளின் பின் புறத்தில் சுவரில், மீனாட்சி பிள்ளைத்தமிழின் சில பாடல்கள் பொறிக்க பட்டுள்ளன. அம்மன் மகாமண்டபத்தில், முழுவதும் கல்லால் ஆன சிறுமணி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. பள்ளியறைக்கு கிழக்கே, இரண்டாம் பிரகாரத்திற்கு செல்ல, புதிய வாசல் திறக்க 1960-63 திருப்பணியின்போது முடிவு செய்யப்பட்டது. இதற்கு சிற்பிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால், அப்போதைய திருப்பணிக்குழுத் தலைவர் பி.டி.ராஜன், மீனாட்சி அம்மனிடம் அனுமதி கேட்க முடிவு செய்தார். பூக்கட்டி போட்டு பார்த்ததில், அம்மனின் சம்மதம் கிடைத்தது. இதன் பிறகே, அந்த வாசல் உருவாக்கப்பட்டது. அம்மனை தரிசித்துவிட்டு, இவ்வாசல் வழியாகத்தான், முக்குறுணி விநாயகரை தரிசிக்க செல்ல வேண்டும்.