பதிவு செய்த நாள்
15
அக்
2012
10:10
ராமேஸ்வரம்: கர்ணனைப்போல் தேவையறிந்து கொடுத்தால், சமுதாயத்தில் இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள், என, திருச்சி கல்யாணராமன் கூறினார். ராமேஸ்வரம் சிருங்கேரி சங்கரமடத்தில், வில்லி பாரத தொடர் சொற்பொழிவில் தர்மர் பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:மகாபாரத யுத்தம் நடந்தது. 17ம் நாளன்று கர்ணன் தளபதியானான். அர்ச்சுணனால், கர்ணனை கொல்ல முடியவில்லை. காரணம், இதுவரை அவன் செய்த தானத்தின் பலன், அவனை காத்தது. தர்ம தேவதையாக இருக்கிற கிருஷ்ண பரமாத்மா, அந்தணர் வடிவம் கொண்டு, கர்ணனிடம் புண்ணியத்தை தானமாக கேட்டார். அவன், "நான் இதுவரை செய்த புண்ணியம், செய்கின்ற புண்ணியம், செய்யும் புண்ணியம் அனைத்தையும் கொடுத்தேன் என்றான். எல்லாவற்றையும் பெற்ற கிருஷ்ண பரமாத்மா, "உனக்கு என்ன வேண்டும் என்றார். "எத்தனை பிறவி எடுத்தாலும், இல்லை என்று வருவோருக்கு, இல்லை, என்று சொல்லாத இதயத்தை கொடு என்றான். கிருஷ்ணர் கண்ணீர் வடித்து, அவன் கேட்டதை கொடுத்தார். வாழ்வில் எண்ணற்ற குற்றங்கள் செய்தாலும், கொடை என்ற பக்தி, கர்ணனை உயர்த்தி, நாம் என்றும் கொண்டாடுகிறோம். இதனால், கர்ணனைப்போல் யார்? யாருக்கு என்ன தேவையோ, அதை கொடுத்தால், சமுதாயத்தில் இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள். மறுநாள், துரியோதனை வதம் செய்து தர்மபுத்திரருக்கு கிருஷ்ணர் கிரீடம் சூட்டினார். பாரதத்தில் இருந்து தர்மத்தை தெரிந்து கொண்டு, நாமும் அதன்படி வாழ்ந்தால் உயர்வோம், என்றார்.