பதிவு செய்த நாள்
15
அக்
2012
10:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா, நாளை (அக்.,16) துவங்கி, அக்.,24 வரை நடக்கிறது.இதற்காக ரூ.15 லட்சம் செலவில், கொலு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக, 108 சிவதாண்டவ சிலைகள் இடம்பெறுகின்றன. மதுரையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், "தச தத்துவம் விளக்கும் பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டை போல, இம்முறையும் பகல் நேரத்தில் கொலு கண்காட்சியை பக்தர்கள் காணலாம். தினமும், கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடக்கின்றன.நவராத்திரி உற்சவ நாட்களிலும், சாந்தாபிஷேகம் நடக்கும். அக்.,29 அன்றும், கோயிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா நடக்காது. உற்சவ நாட்களில், மாலை 6 மணி முதல், அம்மன் மூலஸ்தான சன்னதியில், திரைபோட்டு அபிஷேகம், அலங்காரமாகி, கல்பூஜை, சகஸ்ரநாம பூஜை உள்ளிட்டவை, இரவு 8.30 மணி வரை நடக்கிறது. பூஜை காலங்களில், தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள், மூலஸ்தான அம்மனுக்கு செய்யப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனை செய்யப்படும். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் செய்துள்ளார்.