பதிவு செய்த நாள்
17
அக்
2012
10:10
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த ஆயுஷ்ய ஹோமத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா பங்கேற்றார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருக்கடையூரில், அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுவாமி, மார்கண்டேயருக்காக எமனை வதம் செய்த தலமாகும்.இதனால் இக்கோவிலில், 60, 70, 75, 80, 100 வயது பூர்த்தியடைந்தோர் மணி விழா, பீமரத சாந்தி, விஜயரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பூர்ணாபிஷேகம் ஹோமங்கள் செய்து சுவாமி தரிசனம் செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம். திருக்கடையூர் கோவிலுக்கு, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று வந்தார். நாகை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ஆசியாமரியம் மற்றும் தருமபுர ஆதீன கட்டளை மாணிக்கவாசக தம்பிரான் வரவேற்றனர்.கவர்னர் ரோசய்யா, கோ, கஜ பூஜைகள் செய்தார். தொடர்ந்து, நந்தி மண்டபத்தில், 16 கலசங்கள் வைக்கப்பட்டு, கவர்னர் ரோசய்யாவுக்கு ஆயுஷ்ய ஹோமம் நடத்தப்பட்டது. கவர்னருடன், அவரது மனைவி சிவலட்சுமி, பேரன் அர்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.கவர்னர் வருகையையொட்டி முன்னதாக, கோவிலில் இருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து காலை, 10.30 மணிக்கு, கவர்னர் கோவிலுக்கு வந்தார். மதியம் 1.30 மணிக்கு திரும்பிச் செல்லும் வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில் மண்டபம், வெறிச்சோடி காணப்பட்டது.