நகரி: திருமலையில் கருடசேவை இன்று (அக்.19ல்) நடக்கவுள்ளதையடுத்து, நடை சாத்தப்படுகிறது. திருமலை திருப்பதி நவராத்திரி பிரமோற்ஸவம் கோலாகலமாக நடந்து வருகிறது. நவராத்திரி பிரமோற்ஸவத்தின் 5ம் நாளான இன்று (அக்.19ல்) இரவு 8 மணி முதல் 11 மணி வரை கருடசேவை நடக்கிறது. இக்கால கட்டத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி மாட வீதிகளில் கருட வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். உற்சவர் வலம் வருகையில், மூலவரை தரிசனம் செய்யும் முறை வைணவத்தில் இல்லை என்பதால், இன்று மாலை 7 மணி முதல் திருமலை கோயில் நடை சாத்தப்படுகிறது. இந்நிலையில், கருடசேவையை காண 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். கருடசேவையை அடுத்து, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மலைப்பாதை போக்குவரத்துக்கு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.