குர்பானி கொடுக்கும் பிராணியின் இறைச்சியை மூன்று பங்குகளாக்க வேண்டும். ஒன்றை தனக்கும், இரண்டாவது பங்கை தனது உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும். குர்பானி கொடுப்பதால் அல்லாஹ்விடம் அந்த பிராணியின் இறைச்சியோ, ரத்தமோ வந்தடைவதில்லை. குர்பானி செய்பவர் அல்லாஹ்வின் மீது கொண்ட "உள்ளச்சம் எனும் "பயபக்தி தான் அல்லாஹ்வைச் சென்றடைகிறது. இதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறியிருக்கிறார்.
பிராணிகளின் தகுதி: குர்பானி கொடுக்கும் பிராணிகள் நன்கு கொழுத்ததாக இருக்கவேண்டும். நோய் உள்ளதாக இருக்கக்கூடாது., காது முழுவதும் அல்லது சிலபகுதி வெட்டப்பட்டிருப்பது போன்ற குறைகள் கூடாது. குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் பிறை 1லிருந்து குர்பானி கொடுக்கும் வரை, தன் உடலிலிருந்து உரோமங்களைக் களைவதும், நகம் வெட்டுவதும் கூடாது. குர்பானி கொடுப்பவரே அறுப்பது நல்லது. இயலாதவர்கள் வேறு ஒருவரை நியமித்து "நிய்யத் (உறுதிமொழி) செய்து கொள்வதில் தவறில்லை. அரபி தெரியாதவர்கள் பிராணியை அறுத்தால்.... "ஆண்டவனே! இந்த குர்பானியை இன்னாருக்காக ஏற்றுக் கொள்வாயாக, உனது கலீல் இப்ராஹிம்(அலை), கபீப் முகம்மது (ஸல்) இருவரிலிருந்து ஏற்றுக் கொண்டது போல என்று கூற வேண்டும். குர்பானியின் தோலையோ, கறியையோ கூலியாக ஒருபோதும் கொடுக்கக் கூடாது. குர்பானியின் தோலை விற்றால், அதை "சதக்கா(தர்மம்) செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவரது குர்பானியையும் ஏற்றுக் கொள்வானாக.!