பதிவு செய்த நாள்
25
அக்
2012
12:10
புனித குர்ஆன், மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. அது இறைவனால் இறக்கப்பட்ட வேதம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. வசனம் 21:30ல் வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாக பிளந்தோம் என்று கூறப் பட்டுள்ளது. பூமி இப்போதிருக்கும் வடிவத்தை அடைவதற்கு முன்பு தூசு படலமாக இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுபற்றி குர்ஆன் கூறும்போது அப்போது அது வெறும் புகையாய் இருந்தது என்கிறது. மேலும், தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகில் எல்லா உயிர்களும் தோன்றின என அறிவியல் சொல்கிறது. திருக்குர்ஆனும் இதை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரில் இருந்து நாம் படைத்தோம் என்று அது சொல்கிறது. குர்ஆன் இறைவனால் இறக்கி வைக்கப்பட்ட காலத்தில் இந்த உண்மைகள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, குர்ஆன் மனித நூல் இல்லை என்பதும், இறைவனால் உலகிற்கு தரப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
பெற்றோருக்கு சேவை: மார்க்கத்தைக் காக்கும் ஜிகாத் என்னும் புனிதப்போரில் ஈடுபட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். நாயகம் அவர்கள் அவரிடம், உமது பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். பெற்றோர் இருக்கிறார்கள் என்று அவர் சொல்லவே, அப்படியானால், நீர் உம் பெற்றோரிடம் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து வாரும், என்றார்கள். பெற்றவர்களுக்கு செய்யும் சேவை மிக உயர்ந்தது என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் நாயகம்(ஸல்) அவர்கள் உலகுக்கு
எடுத்துரைத்துள்ளார்கள்.
படிப்பு மிகவும் அவசியம்: இன்றைய நாகரீகத்திற்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் கல்வி அவசியம். படித்தவர்கள் சமுதாயத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். ஆகவே, எவ்வளவு கஷ்டப்பட்டேனும் படிக்க வேண்டும். கல்வியின் மகத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள். சில நாட்களில் அப்பொருள் தொலைந்து விடுகிறது. அதை தேடி பல இடங்களிலும் அலைகிறீர்கள். சில நாட்கள் கழித்து அப்பொருள் ஓரிடத்தில் இருப்பதாக உங்களுக்கு தெரிகிறது. அப்போது நீங்கள் அப்பொருளை திரும்ப பெறுவதற்கு எவ்வளவு விரைவாக செயல்படுவீர்களோ, அதைப்போலவே எங்கு கல்வி போதிக்கப்படுகிறதோ, அங்கு விரைந்து சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது இஸ்லாம்.