பதிவு செய்த நாள்
19
நவ
2012
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இதையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள், சுவாமி சன்னிதியில் உள்ள, 72 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தின் முன் எழுந்தருளினர். தியாகராஜ குருக்கள், ஹாலசிநாத குருக்கள் தலைமையில் ரமேஷ் குருக்கள் உள்ளிட்டோர் வேத மந்திரம் முழங்க, ஓதுவார்கள் தேவராம் பாட, மங்கள இசையுடன், காலை, 6:45 மணியளவில், விருச்சிக லக்னத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பி, அண்ணாமலையாரை வழிபட்டனர்.