பதிவு செய்த நாள்
19
நவ
2012
10:11
திருப்பூர்: கோவில்கள் குறித்த, தல வரலாறு சிறப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய, மாவட்ட கையேடு அச்சடித்தல் மற்றும் பஸ் நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கோவில்கள் குறித்த, வழிகாட்டி பலகைகள் வைக்க, இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, தயாரிக்கப்படும் மாவட்ட கையேட்டில், கோவில்களின் தல வரலாறு, சிறப்புகள், பாடல் பெற்ற தலமாக இருந்தால் அதற்கான திருமுறை பாடல், சிறப்பான தினங்கள், பூஜைகள், வழித்தடம், வழிபாட்டு முறைகள், பரிகார பூஜைகள், ஆண்டு திருவிழா உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன், சம்பந்தப்பட்ட கோவில்களின் போட்டோவும் இடம் பெறுகிறது. அவை தவிர, தினமும் நடக்கும் முக்கிய பூஜைகள், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, அதிகாரிகளின் போன் எண்கள் என, அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். அதனடிப்படையில், தற்போது, திருப்பூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, 30 கோவில்கள் குறித்த முழு தகவல்கள், போட்டோக்கள் சேகரிக்கப்பட்டு, கையேடு அச்சிடும் பணிகள் நடந்து வருகின்றன.அதே போல், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட, அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.