பதிவு செய்த நாள்
20
நவ
2012
11:11
மேட்டுப்பாளையம்: யானைகள் நல வாழ்வு புத்துணர்வு முகாம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் வரும், 26ல் துவங்கி, ஜன., 12ம் தேதி வரை, 48 நாட்கள் நடக்கிறது; 40 யானைகள் பங்கேற்கின்றன.மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில் அருகில், பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில், தமிழக கோவில் யானைகளுக்கான நல வாழ்வு புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் தனபால், முகாம் நடக்கும் இடத்தை நேற்று பார்வையிட்டார். யானைகள் மற்றும் பாகன்கள், அலுவலக ஊழியர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம், இப்பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பில் நடத்தப்படுகிறது. கடந்தாண்டுகளில் முதுமலை தெப்பக்காட்டில் நடந்த முகாம்களில், யானைகளை லாரிகளில் கொண்டு செல்லவும், ஏற்றி இறக்குவதில் உள்ள சிரமம் மற்றும் சட்டப் பிரச்னைகள் காரணமாகவும், இவ்வாண்டு, தேக்கம்பட்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணி நடக்கிறது.
இம்முகாமில், 33 கோவில்களில் இருந்து 35 யானைகளும், ஐந்து திருமடங்களில் இருந்து 10 யானைகளுமாக, 45 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், வர மறுக்கும் யானைகள், நோய் தாக்குதலுக்குள்ளான யானைகள் தவிர்த்து, 40 யானைகள் முகாமில் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம்.யானைகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும் விதத்தில் இப்பகுதியில் தட்பவெப்ப நிலை நிலவுகிறது. பவானி ஆற்றின் கரையோரத்தில் இந்த இடம் அமைந்துள்ளதால், தண்ணீர் பிரச்னை இல்லை. ஆற்றில் யானைகள் குளிக்க, ஐந்து இடங்களும், பாகன்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குளிக்க, ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது; போதுமான பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 26ம் தேதி முதல், ஜன., 12ம் தேதி வரை, 48 நாட்கள் நடக்கும் இம்முகாமுக்கு, 75 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்குகிறது. முகாமில் பங்கேற்கும் யானை ஒன்றுக்கு, தீவனம், மருந்து, மாத்திரைகள் உட்பட 1.66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உதவியாக, வனத் துறை, பொதுப்பணித் துறை, கால்நடைத் துறை, மருத்துவத் துறையினர் செயல்படுவர். இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் (கோவை) புகழேந்திரன், இம்முகாமின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.இவ்வாறு தனபால் தெரிவித்தார்.