கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த ஜெகதேவியில், மொஹரம் பண்டிகையையொட்டி ஷியா பிரிவு முஸ்லிம்கள் கத்தியால் உடலில் காயம் ஏற்படுத்தி துக்க தினத்தை வெளிபடுத்தினர். முகமதி நபியின் பேரனான இமாம் உசேனை அதே இனத்தை சேர்ந்த யஜீர் என்பவர் துன்புறுத்தி கொலை செய்துள்ளார். மேலும், இமாம் உசேனை சேர்ந்தோரை கூண்டில் அடைத்து தண்ணீர் கொடுக்காமல் துன்புறுத்தி கொலை செய்துள்ளார். இந்த நாளை ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொஹரம் நாளில் துக்க தினமாக கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் ஷியா பிரிவு முஸ்லிம் சிறுவர்கள் உள்ளிட்ட ஆண்கள் கறுப்பு ஆடை அணிந்து தங்கள் உடலில் கத்தியாலும், பிளேடாலும் கீறிக்கொண்டு ரத்தத்தை வரவழைத்து துக்கத்தை வெளிப்படுத்துவர். கிருஷ்ணகிரியை அடுத்த ஜெகதேவியில் நேற்று மாலை கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஷியா பிரிவு முஸ்லிம்கள் கலந்து கொண்டு தங்கள் உடலில் ரத்தகாயத்தை ஏற்படுத்திக்கொண்டு ஜெகதேவியில் ஊர்வலமாக வந்தனர். கர்நாடகா, ஆந்திரா மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.