பதிவு செய்த நாள்
24
நவ
2012
10:11
நகரி: திருமலையில், இரு நாட்களாக பலத்த மழை பெய்தது. கோவில் எதிரே, ஒரு அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நின்றது. பலத்த மழையால், சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.திருமலையில், 21ம் தேதி மாலை, லேசான தூறலுடன் துவங்கிய மழை, 22ம் தேதி நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று, அதிகாலை முதல், மதியம், 1:00 மணி வரையும் அடிக்கடி மழை பெய்தது. இதனால், சாமி தரிசனத்திற்காக, வரிசையில் நின்ற பக்தர்கள் அவதிக்குள்ளாக நேரிட்டது.விடுதியில் தங்கியவர்களும், மழையில் நனைந்தபடி கோவிலுக்கு சென்று பின், விடுதிகளுக்கு திரும்பினர். குளிர் காற்று வீசியதால், வயது முதிர்ந்த பக்தர்கள், போர்வையுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டது. திருப்பதி - திருமலை இடையே மலைப்பாதை வழியில், மலையிலிருந்து அருவி போன்று வெள்ளம் பாய்ந்ததால், பேருந்துகள் உட்பட இதர வாகனங்களும் மெதுவாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டன. தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள், மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருமலை கோவிலில், 22, 23 ஆகிய இரு நாட்களில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.